எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, August 20, 2013

அரங்கனின் பாண்டியன் கொண்டை வந்த வரலாறு




அரங்கனின் ஆபரணங்களில் முக்கியமானது பாண்டியன் கொண்டை.  முக்கியத் திருவிழாக்களில் அரங்கன் பாண்டியன் கொண்டை அணிந்தே வெளிவருவார்.  இந்தப் பாண்டியன் கொண்டை என்பது சுந்தரபாண்டியனால் அளிக்கப் பட்டது என்பார்கள்.  ஆனால் அது பழுதாகி விட்டதாம்.  அப்போது அரங்கனே தன் பக்தர்களில் ஒருவரைக் கொண்டு இந்தப் பாண்டியன் கொண்டை என்னும் ரத்தினக் கிரீடத்தைச் செய்யச் சொன்னாராம். அவரோ பரம ஏழை.  உஞ்சவ்ருத்தி எடுத்துப் பணம் சேர்த்து இந்தப்பாண்டியன் கொண்டையைச் செய்து கொடுத்தாராம். அவர் யாருனு பார்ப்போமா?

நம்ம தமிழ் நாட்டில் சங்கீத மும்மூர்த்திகளாக தியாகராஜ சுவாமிகளையும், முத்துசாமி தீக்ஷிதர், ச்யாமா சாஸ்திரிகள் ஆகியோரைச் சொல்கிறோம்.  தமிழிசையில் மூவராக அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை, முத்துத் தாண்டவர் ஆகியோரையும் சொல்கிறோம்.  இவர்கள் மூவரும் தியாகராஜர், ச்யாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீக்ஷிதர் ஆகியோரை விடவும் காலத்தால் மூத்தவர்கள்.  அப்படித் தெலுங்கிலும் மும்மூர்த்திகள் உண்டு. ஆந்திர நாட்டில் இப்படிச் சொல்லப்படுபவர்கள் தலப்பாக்கம் அன்னமாசார்யா, பத்ராசலம் ராமதாசர், அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி ஆகியோர்.  

கிருஷ்ணா நதி பாயும் மாவட்டத்தில் அல்லூரு என்னும் ஊரில் வசித்து வந்த ஶ்ரீவெங்கையாவுக்கும், ஶ்ரீமதி வெங்கம்மாவுக்கும் மகனாகப் பிறந்தார் வேங்கடாத்ரி. 1806- ஆம் வருடம் தமிழ் அக்ஷய வருடத்தில் பங்குனி மாசம் பெளர்ணமி திதியில் பாரத்வாஜ கோத்திரத்தில் உத்தர பால்குனி நக்ஷத்திரத்தில் அவதரித்தார் வேங்கடாத்ரி சுவாமிகள்.  அவர் தாயின் கர்பத்தில் இருக்கையிலேயே இறை அருளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்.  மிகச் சிறு வயதிலேயே சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் முறையான கல்வி பெறும் முன்னரே கற்றார்.  பெற்றோருக்கு மகனின் சிறப்பும், தனித்தன்மையும் நன்கு புரிந்து மனம் சந்தோஷம் அடைந்தனர்.  ஆனால் அவர் பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்ய முயல அவரோ பார்த்த பெண்ணையே சீதாப் பிராட்டியாக எண்ணிக் காலில் விழுந்து வணங்கித் துதிக்கப் பெற்றோர் பின்னர் வற்புறுத்தவில்லை. அந்த ஊரின் நரசிம்ம சுவாமியை வணங்கி சேவை செய்து வந்த வேங்கடாத்ரிக்கு மனதுக்குள்ளே தேடல் மிகுந்தது.  தன் தேடலுக்கு ஒரு குரு தேவை என்பதைப் புரிந்து கொண்ட அவர் தக்க குருவுக்குக் காத்திருந்தார். அப்போது அவருக்குக் கிடைத்தவர் தான் துமு நரசிம்ம தாசா என்பவர்.  இந்த நரசிம்ம தாசர் ஶ்ரீபத்ராசலம் ராமதாசரின் சீடர் என்று சொல்கின்றனர்.  

வேங்கடாத்ரிக்குத் தாரக மந்திர உபதேசம் செய்த நரசிம்ம தாசர் அவருக்குத் தம் சலங்கைகளைக் கொடுத்து, தம்புரா, தாளம் போன்றவையும் கொடுத்து, தம் ஆசிகள் என்றென்றும் தொடரும் என ஆசீர்வதித்தார். வேங்கடாத்ரி சுவாமியும் ஒரு கோடி ராமநாமம் எழுதிச் சமர்ப்பித்து ராமன் திருவுருவையே நினைந்து நினைந்து மனம் உருகித் துதித்துக் கொண்டிருந்தார். விரைவில் அவருக்கு ஶ்ரீராமன், சீதாபிராட்டியின் தரிசனமும் கிடைக்கப் பெற்றது. பின்னர் அவர் அங்கிருந்து திருமலை சென்று திருமலையப்பன் சேவையிலே ஈடுபட்டுப் பாமாலைகளாலும் பூமாலைகளாலும் துதித்து வந்தார். பின்னர் அவர் காஞ்சிக்கு வரதராஜப் பெருமாளிடம் ஈடுபாடு கொண்டு அங்கேயே நித்ய வாசம் செய்ய எண்ணினார்.  தினமும் உஞ்சவ்ருத்தி மேற்கொண்டு அதில் கிடைக்கும் பொருட்களை, தான்யங்களைப் பணமாக மாற்றி அதன் மூலம் வரதராஜப்பெருமாளின் சந்நிதிக்குக்ப் பல கைங்கரியங்களைச் செய்து வந்தார். காஞ்சி வரதனுக்கு மாலை கட்டிக் கொடுத்து, சந்தனம் அரைத்துக் கொடுத்து, அமுது சமர்ப்பித்து எனப் பல்வேறு கைங்கரியங்களையும் செய்து வந்தார். இதைத் தவிரவும் பல வேத பாடசாலைகளையும் திறந்து வைத்தார். காஞ்சி மாநகரில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்கும் திருப்பணிகள் செய்தார். தன்னால் இயன்ற பொருளைச் சேர்த்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் மாமண்டூரில் நிலம் வாங்கி வைத்தார்.  நந்தவனத்தில் கைங்கரியம் செய்து வந்த வேங்கடாத்ரி சுவாமியைப் பாம்பு தீண்டியது.. அவர் சற்றும் அஞ்சாமல் பெருந்தேவித் தாயார் சந்நிதிக்குச் சென்று பல கீர்த்தனைகளைப் பாடி அங்கேயே மயங்கி விழுந்தார்.  பின்னர் தூங்கி எழுந்திருப்பவர் போல் எழுந்து பெருமாள் சந்நிதிக்கும் சென்று பிரசாதங்கள் வாங்கிக் கொண்டார். கொடிய பாம்பின் விஷமும் அவரை ஒன்றும் செய்யவில்லை என்பதை அனைவரும் கண்டு வியந்தனர்.


படம் உதவி: ஶ்ரீரங்க பங்கஜம்.

தகவல்கள் உதவி:  விக்கி பீடியா


Saturday, August 10, 2013

அரங்கனின் தேரோட்டம்!

அரங்கனை ஊர் சுத்த விட்டுட்டு அப்புறமாத் தொடர முடியாதபடிக்கு வைகுண்ட ஏகாதசித் திருநாள், அடுத்து தெப்பம், மட்டையடித்திருவிழா, சித்திரைத் திருவிழா என முக்கியமான நாட்களைக் குறித்து எழுதும்படி ஆகிவிட்டது.  இதுவே சித்திரைத் திருவிழாவுக்கு ரொம்ப தாமதமாகப் பதிவு போடறேன். இதுக்கப்புறமா ஆனி கேட்டையில் ஜேஷ்டாபிஷேஹம், பவித்ராபிஷேஹம் எல்லாம் ஆகி, பெருமாளுக்குக் காப்பு நீக்கித் திருவடி தரிசனம் ஆரம்பிச்சு ஆடிப்பெருக்கும் கொண்டாடிட்டார்.  அரங்கனைக் கூடிய சீக்கிரம் தொடர்ந்து செல்வோம். அதான் துளசி தளங்களை வழி கண்டுபிடிக்கப்போட்டுட்டுப் போறாங்க இல்ல, அதனால் ஒண்ணும் பிரச்னை இல்லை. இப்போ சித்திரைத் திருவிழாவை ஒரு அவசரப் பார்வை பார்த்துடுவோம்.


மட்டையடித் திருவிழாவுக்குப் பின்னர் பெரிய திருவிழா என்பது ஶ்ரீரங்கத்தில் சித்திரைத் திருவிழா.  பனிரண்டு மாசங்களும் அரங்கன் திருவிழாக் கண்டாலும் இந்த முக்கியமான திருவிழாக்களில் தேரோட்டமும் உண்டு. இதை விருப்பன் திருநாள் என்றும் அழைக்கின்றனர். நம்ம ஊர் சுத்தி நம்பெருமாள் ஊரெல்லாம் சுத்திட்டுத் திரும்ப அரங்கம் வந்தப்போ கோயில் பாழடைந்து கிடந்தது.  கர்பகிரஹமும் மற்ற மண்டபங்களும் பாழாகக் கிடந்ததைக் கண்ட விஜயநகரப் பேரரசின் சங்கமகுல மன்னன் இரண்டாம் ஹரிஹரனின் புதல்வன் விருப்பன்ன உடையார் துலாபாரம் ஏறினார்.  இது நடந்தது கிட்டத்தட்ட கி.பி. 1377 ஆம் ஆண்டில் என்கின்றனர். துலாபாரம் ஏறிக் கிடைத்த பதினேழாயிரம் பொற்காசுகளைக் கொண்டு கோயில் மண்டபங்கள் சீரமைக்கப்பட்டன.  பின்னர் அறுபது ஆண்டுகள் வெளியே  இருந்த அரங்கனுக்கு உற்சவம் கண்டருள வேண்டும் எனவிருப்பன்ன உடையார் நினைத்தார்.  ஆகவே 1383 ஆம் ஆண்டில் உற்சவம் கண்டருளினார் நம்பெருமாள். இது பல்லாண்டுகளுக்குப் பின்னர் ஶ்ரீரங்கத்தில் நடந்தது என்பதால் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் மிகவும் விருப்பத்தோடு இந்த விழாவில் கலந்து கொண்டனர்.  இதைச் சித்திரை பிரம்மோத்சவம் என்றே சொல்கின்றனர்.

இந்தத் திருவிழாவில் அரங்கன் தேரில் வீதிவலம் வருவது முக்கிய நிகழ்ச்சியாகும். இந்தத் திருவிழாவை எடுப்பித்த விருப்பன்ன உடையார் அரங்கனுக்கு அருகில் உள்ள அழகிய மணவாளம் என்னும் ஊரைத் தானமாகச் சாசனம் செய்து கொடுத்தார்.  அரங்கன் ஊர் திரும்பும் முன்னர் சில நாட்கள் அந்த கிராமத்தில் தங்கி இருந்தார் என்பதாலும் ஊர் மக்கள் மிக மகிழ்வோடு கிராமத்தை நம்பெருமாளுக்கு சாசனமாக எழுதிக் கொடுக்கச் சம்மதித்தனர். தினந்தோறும் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் வீதிவலம் வந்தருளுவார்.  ஶ்ரீரங்கம் ரங்கராஜன் அனைத்துக் கோயில்களின் அரசர் என்பதால் குதிரை வாகனம் ஏறிபவனி வருவதைப் பல்வேறு புலவர்கள் வாழ்த்திப் பாடியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.  கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் அரங்கன் மக்களை நலம் விசாரித்துச் செல்கிறாராம்.  அதோடு தேரையும் பார்வை இடுவாராம்.  இவை யாவுமே ஒரு மாபெரும் அரசன் அரச வீதி உலாவருவது போலவே இருக்கும் என்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நம்பெருமாள் பின்னர் நான்முகன் கோபுர வாயிலில் வந்து அமுது படைக்கப்படுவார்.  பின்னர் விஜயநகர அரசனான சொக்கநாத நாயக்கனால் நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில் நம்பெருமாளுக்கு திருஷ்டி கழிக்கப்படும்  பின்னர் வாகன மண்டபத்தில் படி களைந்து நம்பெருமாள் முன்னர் கார்த்திகை கோபுர வாசலில் திவ்யப்ரபந்தங்கள் சாற்றுமுறை ஆகும்.  நம்மாழ்வார் சந்நிதியிலும் இயற்பா சாற்றுமுறை ஆகும்.  பின்னர் நம்பெருமாள் ரக்ஷாபந்தனம் செய்து கொள்வார்.  அதன் பின்னர் இந்தச் சித்திரைத் திருவிழா முடிந்து தீர்த்தவாரி நடைபெறும் வரையிலும் நம்பெருமாள் கண்ணாடி அறையில் எழுந்தருளுவார்.  அவர்  திருமேனியில் வெயில்படாவண்ணம் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள்.  அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.  விருப்பன் திருநாள் ஏழாம் திருநாளன்று அரங்கன் நெல் அளவை கண்டருளுவார்.  அன்று கோயில் முறைகாரர் நெல் அளப்பார்.  தங்க மரக்காலால் திருவரங்கம் ஒன்று, பெரிய கோயில் இரண்டு எனக் கணக்குப் பண்ணி நெல் அளக்கப்படும்.  நெல் அளவையைச் சரிபார்த்துக் கொள்வார் நம்பெருமாள்.

தேர் அன்றோ அக்கம்பக்கத்துப் பாமர மக்கள் தங்கள் தங்கள் வயல்களில் விளைந்தவற்றையும் பசுமாடுகள், கன்றுகள் என நம்பெருமாளுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிப்பார்கள்.  வெளி ஊர்களில் இருந்தெல்லாம் வண்டி கட்டிக் கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்தத் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் திருவிழா ஶ்ரீரங்கத்தில் நடந்து வருகிறது.  இந்தச் சமயம் அரங்கனுக்காகச் சிறப்பானதொரு பாத ரக்ஷை தைக்கப்படும் என்றும் அதன் வலக்கால் அளவிற்கு ஒரு குடும்பமும், இடக்கால் அளவிற்கு இன்னொரு குடும்பமும் தைத்துத் தனித்தனியாக எடுத்து வருவார்கள் எனவும், அரங்கனின் எந்தவிதமான அளவுமே இல்லாமல் அவர்கள் தைப்பது சரியாகப்பொருந்தும் எனவும், எந்தக் குடும்பம் எந்தக் காலுக்குத் தயார் செய்கிறது என்ற விபரம் எவருக்குமே தெரியாது என்றும் சொல்கின்றனர்.  இது குறித்து மேலும் விபரங்கள் திரட்டுகிறேன்.

முதல் இரண்டு படங்கள் எங்கிருந்து சுட்டேன் எனச் சொல்ல வேண்டாம் என எண்ணுகிறேன். :))) தெரியாதவங்களுக்கு வெங்கட் நாகராஜின் வலைப்பக்கத்தில் இருந்து சுட்டேன்.

கடைசிப்படம் தினமலர்.காம்.