எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, August 30, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!

அரங்கனுக்கு அன்றைய நிவேதனப் பொருட்களைத் தேடிக் கொண்டு வந்து கொடுத்தான் கள்வர் தலைவன். ஊர்வலம் மேலே செல்ல வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தான். அந்தக் காட்டின் எல்லை வரை கூடவே வந்து செல்லும் வழியில் உள்ள பல்வேறு கள்வர் பற்றுக்களிலிருந்தும் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொண்டு செல்லும்படியாக அறிவுரை கூறினான். 
*********************************************************************************

இங்கே ஶ்ரீரங்கத்தில்  உயிரற்ற சடலங்களுக்கு அடியில் மறைந்திருந்த வேதாந்த தேசிகர் வெகு நேரம் அப்படியே கிடந்தார். இரவு வந்து வெகுநேரம் ஆனபின்னர் மெல்ல மெல்ல எழுந்து அமர்ந்தார். இதைக் குறித்த பதிவு 

சுதர்சன ஆசிரியரின் குழந்தைகளையும் எழுப்பினார்.  மண்ணுக்கு அடியில் புதைத்து வைத்திருந்த சுருதப்பிரகாசிகையையும் எடுத்துக் கொண்டார்.  மெல்ல மெல்ல சப்தம் செய்யாமல் கோபுர வாயிலுக்கு வந்தார். யாரும் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொண்டு வெளியேறித் தென் காவேரிக்குச் சென்றார். காவேரிக்கரையில் மேற்குப் பார்த்து மறைந்து மறைந்து நடந்தார். வெகுதூரம் போய் உறையூருக்கு அப்பால் கரையேறினார். ஒரு வயலில் இரு குழந்தைகளோடு படுத்து இரவைக் கழித்தார். காலையில் அருகிலிருந்த கிராமத்தை அடைந்தபோது அங்கிருந்த கிராமவாசிகள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களில் ஶ்ரீரங்கத்திலிருந்து தப்பி வந்தவர்களும் இருந்தனர். அரங்கத்தில் நடந்ததை எல்லாம் அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். அனைவரும் கண்ணீர் பெருக்கினார்கள். அரங்கனோடு தாங்களும் போக தேசிகர் தங்களை அனுமதித்திருக்கலாம் என அவர்களில் சிலர் கூற, கூட்டமாக அரங்கனோடு  செல்வது ஆபத்து என்றார் தேசிகர். 

அரங்கமாநகரே பாழாகிவிட்டதாகவும், தமிழ் பேசும் மக்கள் வாழும் இந்த நாடே இருள் சூழ்ந்து இருப்பதாகவும் அனைவரும் க்ஷேமமாக இருக்க அரங்கனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார். அனைவரும் ஓவென்று அலறித்துடித்து அழுதனர் அந்த சோகத்தைக் கண்ட தேசிகர் வாயிலிருந்து அப்போது ஒரு ஸ்லோகம் வந்தது. "அபீதிஸ்தவம்" எனும் பெயரில் தற்போது வழங்கப்படும் அந்த ஸ்லோகம் 28 பாக்களால் ஆனது என்றும், இப்போதும் கிடைப்பதாகவும், கஷ்டங்கள் நீங்கவும் மனோபயம் அகலவும் மக்கள் இதைப் பாராயணம் செய்வார்கள் என்றும் தெரியவருகிறது. இந்தப் பாடலிலேயே யவனர்கள் என வெள்ளையரையும் தேசிகர் குறிப்பிட்டிருப்பதால் பின்னாட்களில் ஆங்கிலேய ஆட்சி ஏற்படப் போவதை தீர்க்கதரிசனமாகச் சொல்லிவிட்டார் என்பவர்கள் உண்டு.

அன்று முழுதும் அங்கே பிரார்த்தனைகள் செய்த வண்ணம் உபவாசமாக இருந்த தேசிகர் மறுநாள் அந்த இரு இளம்பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கிழக்கே தொண்டைமான் காட்டுக்கு வந்து சேர்ந்தார். அங்கே வழி நெடுகக்காணக்கிடைத்த துளசிதளங்களை வைத்து வழி கண்டு பிடித்து மேலே நடந்தார். சிறிது தூரம் வரை காணப்பட்ட துளசிதளங்கள் அதன் பின்னர் அங்குமிங்கும்  சிதறிக் காணப்பட்டது. அதற்கப்புறம் சிறிது தூரத்தில் துளசி தளங்களையே காணமுடியவில்லை. தேசிகர் தாமாக ஒரு வழியைக் குறி வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார். நேரம் ஆக ஆக காட்டின் அடர்த்தி அதிகம் ஆகி வந்தது. இருட்டு அப்பிக் கொண்டது. போகும் வழி புரியவில்லை. காட்டையே சுற்றிச் சுற்றி வருவது போல் இருந்தது அவருக்கு. வந்த வழி கூடத் தெரியவில்லை. அதனால் திரும்பிப் போகவும் முடியவில்லை. மேலும் சற்றுத் தூரம் நட்ந்தவர் ஒரு மரத்தடியில் கிடந்த  முழு மனித எலும்புக்கூடுகளைக் கண்டு திகைத்தார்.

அதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள மரங்களின் தாழ்ந்த கிளைகளில் புடலங்காய் காய்த்துத் தொங்குவதைப் போல் பாம்புகள் தொங்கிக் கொண்டிருந்தன. பின்னர் செய்வதறியாமல் வேறு திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். செல்லும்போதே ஜீயரை அழைத்துக் கொண்டு சென்றார். அவரது சீடரான பிரம்மதந்திர சுதந்திர ஜீயரை அழைத்தால் குரலை அடையாளம் கண்டு கொண்டு பதில் கொடுப்பார் என நம்பினார். அவரது குரல் தான் எதிரொலித்ததே தவிர பதில் ஏதும் கிட்டவில்லை. அந்த மாபெரும் பள்ளத்தாக்கில் விழுந்து விடுவோமோ எனப் பயந்து அங்கேயே நின்றார். இருள் சுற்றுவட்டாரத்தை விழுங்கிக் கொண்டு வந்து அவர் இருக்கும் இடத்தையும் விழுங்கியது.

3 comments:

ஸ்ரீராம். said...

தேசிகர் பின்னாலேயே வருகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அரங்கா உனக்காக சிரமம் ஏற்ற தேசிகருக்கு நமஸ்காரம். அபிதீஸ்தவம் நாங்கள் விரும்பிக் கற்ற
ஸ்லோகம்.. திகிலும் அழகும் சேர அரங்கன் நடக்கிறான்.

”தளிர் சுரேஷ்” said...

வியக்க வைக்கிறது அரங்கன் வரலாறு! தொடர்கிறேன்!