
தம்முள் பொங்கி வழியும் சிவஞானத்தைத் தம் மெளனத்தாலேயே நமக்குப் புரிய வைத்து வாரி வாரி வழங்கும் சிவஞான சொரூபமான தக்ஷிணாமூர்த்தி வடிவமே தத்துவ விளக்கமாகும். தக்ஷிணாமூர்த்தி வெண்ணிறமானவர். இப்போது அவர் வடிவின் ஒவ்வொரு ரூபத்தையும் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தையும் பார்க்கலாமா?
நடராஜத் திருமேனியின் ஒவ்வொரு ரூபமும் ஒவ்வொரு அர்த்தம் கொண்டாற்போலவே இந்த தக்ஷிணாமூர்த்தியும் ஒவ்வொரு அர்த்தம் கொண்டு விளங்குகிறார்.
திருமேனி பளிங்கு போன்ற வெண்ணிறம் கொண்டு தூய்மையை உணர்த்துகிறது.
தக்ஷிணாமூர்த்தியின் அமர்ந்த திருக்கோலத்தில் வலக்காலின் கீழே முயலகன் என்னும் அசுரனை மிதித்த வண்ணம் அமர்ந்திருப்பார். இந்த முயலகன் ஆணவத்தின் வடிவம். அறியாமையின் வடிவம். இந்த ஆணவத்தையும் அறியாமையையுமே தம் திருப்பாதத்தால் மிதித்து நீக்கி ஞானத்தை அருளுகிறார். இடக்கையில் ஒன்றில் சுவடிகள் தென்படும். சிவஞானபோதத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் தக்ஷிணாமூர்த்தியானவர் தம் கையிலுள்ள இந்தச் சுவடிகளின் மூலம் நமக்குப் போதிக்கிறார். சிவஞானபோதத்தை நூல் வடிவாக்கித் தம் கைகளில் ஏந்திக் கொண்டு நமக்குக் கற்பிக்கிறார்.
வலமேல்கரத்தில் உள்ள ருத்திராக்ஷமாலை தொண்ணூற்றாறு தத்துவங்களை உணர்த்துவதாய்ச் சொல்கின்றனர். பஞ்சாக்ஷரத்தை இந்த மாலையின் உதவியால் எண்ணி மேன்மேலும் உருவேற்றித் தியானிக்கவேண்டும். ஞானம் பெறுவதற்கான வழி அதுவே எனச் சொல்கின்றது. வலக்கீழ்க்கரம் சின் முத்திரை காட்டுகிறது. மிகவும் பிரபலமான சின் முத்திரை ஞானத்தின் அடையாளம். பெருவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டுவிரல் தொட்டுக் கொண்டு இருக்கும். மற்ற மூன்று விரல்கள் விலகித் தனியாய் இருக்கும். ஆணவம், கன்மம், மாயை என்னும் இந்த மூன்றையும் அகற்றிவிட்டுத் தன்னைச் சரணடைந்தால் ஒன்றாகலாம் என்பதைக் குறிக்கும் இந்தச் சின் முத்திரை என்பது சிலர் கருத்து.
இடக்கரத்தில் உள்ள அமிர்த கலசத்தால் அனைத்து உயிர்களையும் காத்துப் பேரின்பம் அளிப்பதையும், தீச்சுடர் உயிர்களது பிறவித் தளைகளை நீக்கி உய்யும்பொருட்டுச் செய்யும் சம்ஹாரத்தையும் குறிக்கும். கழுத்திலுள்ள பாம்பு குண்டலினியைக் குறிக்கும். குண்டலினி யோகத்தின் சின்னம் பாம்பு. பாம்பானது சுருண்டு இருப்பது போல் நம்முள்ளே குண்டலினி சக்தியும் சுருண்டு இருக்கிறது. மூலாதாரம் என்னும் சக்கரத்தில் சுருண்டு இருக்கும் அந்தக் குண்டலினியை விழிப்புறச் செய்து பின்னர் அதைச் செயல்படச் செய்து பேரின்பப் பெருவாழ்வு பெறவேண்டும் என்பதே தக்ஷிணாமூர்த்தியின் யோக நிலை குறிப்பதாகும்.
சில தக்ஷிணாமூர்த்தித் திருமேனி பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்திலும், சில தக்ஷிணாமூர்த்தித் திருமேனி ஆலமரத்தின் கீழ் இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்க விட்டு அமர்ந்த கோலத்திலும் காணமுடியும். பத்மாசனத்தில் இவ்விதம் அமர்ந்த கோலத்தில் இருப்பது யோகியர், ஞாநியர் இதயத்தாமரையில் ஈசன் வீற்றிருப்பதைக் குறிக்கும் என்று சொல்வதுண்டு.
நெற்றிக்கண் காமனை எரித்த கண். நாம் அதை நினைவில் கொண்டு வீடுபேறு அடையவேண்டுமெனில் நம் உள்ளத்தே புலன்களை அடக்கி ஐம்பொறிகளைக் கட்டுப் படுத்திப்பஞ்சாட்சரத்தை ஓதிக் கொண்டே இருத்தல் வேண்டும். ஆலமரத்தின் கீழ் இருப்பதும், அதன் நிழலும் இவ்வுலக வாழ்வு மாயை என்பதை குறிப்பவை. வடக்கு முகமாய்ச் சிவனை வழிபடுவதே சிறப்பு. தருமத்தைக் குறிக்கும் விடைவாகனனை, அனைத்து உயிர்களுக்கும் அவனே தலைவன் என்பதை உணர்த்தவே இந்த தக்ஷிணாமூர்த்தி வடிவம்.