எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, February 25, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்- அஹோபிலம் 2

திருமங்கை ஆழ்வார் காலத்திலே இருந்தே இந்தச் சிங்கவேள் குன்றம் என்னும் அஹோபிலம் செல்ல முடியாத ஓர் இடமாகவே இருந்து வந்துள்ளது.

அங்கண்ஞாலமஞ்ச அங்கோரளரியாய் அவுணன்
பொங்க வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்
பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச்
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே.

அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர்க்களரியாய், அவுணன்
கொலைக்கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனிடம்
மலைத்த செல் சாத்தறிந்த பூசல் வன்துடிவாய் கடுப்ப,
சிலைக்கை வேடர்த்தெழிப்பறாத சிங்கவேள் குன்றமே.


இப்போதும் கரடி, சிறுத்தைகள், புலி போன்ற துஷ்ட மிருகங்கள் காட்டினுள் மறைந்து இருப்பதாகவே சொல்கின்றனர். காட்டினுள் செல்ல வழிகாட்டி இல்லாமல் செல்ல முடியாது. நாம் செல்லும் பயண அமைப்பாளர்களே வழிகாட்டிகளையும் ஏற்பாடு செய்து தருகின்றனர். தனியாகச் செல்லுவது அவ்வளவு உசிதம் அன்று. அஹோபிலம் மடமே வழிகாட்டிகளையும் ஏற்பாடு செய்து தருகின்றது. அதற்கு முந்நூறு ரூபாயில் இருந்து செலவு ஆகும். அஹோபிலம் மடத்தின் தொலை பேசி எண்கள்: 08519- 252025, 252045. குமரன் சாப்பிட்டுட்டாக் குளிச்சீங்கனு கேட்டிருக்கார். ஹிஹிஹி, தட்டச்சுப் பிழை அது. குளிச்சுட்டுத் தான் சாப்பிட்டோம். :))))))) எழுதினதைத் திருப்பி ஒருமுறை சரி பார்க்கும் வழக்கமே இல்லை பள்ளி நாட்களில் இருந்து. அப்படி எல்லாம் செஞ்சிருந்தா எங்கேயோ போயிருக்க மாட்டோமா? :)))))))))). இங்கேயும் எழுதிட்டு preview பண்ணறதே இல்லை, கலர் அடித்தால் ஒழிய! :))))))))) இனிமேல் எல்லாப் பதிவுகளிலேயும் கடைசியா E&OE போட்டுடலாமானு யோசிக்கிறேன். :P

ஒன்பது நரசிம்மர்களில் முதலாவது ஜ்வாலா நரசிம்மர் எனச் சொல்கின்றனர். ஆனால் பயண வசதிக்காக நாங்கள் முதல் நாள் பயணத்தில் ஜீப் என்று பெயரளவில் சொல்லப் படும் வாகனம் செல்லுமிடத்தில் உள்ள நரசிம்மர்களையே தரிசித்தோம். டிராக்டர் போன்ற வாகனங்கள் மட்டுமே செல்லக் கூடிய கரடு, முரடான மலைப்பாதை. பாதைனு சும்மாச் சொல்றேன். உண்மையில் அந்த வண்டிகள் சென்று, சென்று ஏற்பட்டதொரு அடையாளமே அவை. அவற்றில் தான் செல்லவேண்டும். என்றாலும் இந்தப் பாதை கொஞ்சம் பரவாயில்லை எனலாம். இதுக்கு அப்புறம் வரும் பாருங்க ஒரு பாதை. உடம்பையே உலுக்கி எடுக்கும். தூசி பறக்கும். வட மாநிலங்களில் வரும் புழுதிய்புயல் தான் ஏற்பட்டுவிட்டதோ என்ற ஐயம் வரும். இத்தகையதொரு கடினமான பயணங்களிலே முதலில் நாம் தரிசிப்பது சத்ரவடநரசிம்மர் ஆகும். இந்த ஒன்பது நரசிம்மர்களிலேயே மிக மிக அழகானவர் இவரே. குடையைப் போலக் கவிந்த ஆலமரத்தடியில் வீற்றிருப்பதால் இவர் சத்ரவட நரசிம்மர் எனப்படுகின்றார். சுந்தர புருஷனாக, ஆடை, அலங்காரங்கள், ஆபரணங்கள் தரித்து நரசிம்மர் நம்மைப் பார்த்து "எங்கே வந்தே?" என்று கேட்கும் நம் தாத்தாவைப் போல் சிரித்துக் கொண்டு காட்சி அளிக்கின்றார். தேவ சபையில் உள்ள ஆஹா, ஊஹூ என்னும் இரு கந்தர்வர்களும் கோபத்தினால் கொந்தளித்துக் கொண்டிருந்த நரசிம்மத்தின் கோபத்தைத் தம் இசையால் போக்கியதாகவும், அவர்கள் இசையைக் கேட்டு மகிழ்ந்த வண்ணம் இவர் காட்சி அளிப்பதாகவும் ஐதீகம். சங்கு, சக்கரங்களைத் தரித்துக் கொண்டு. வலதுகீழ்க்கரம் அபய முத்திரையும், இடது கீழ்க்கரம் தொடையில் பதிந்து தாளம் போட்டுக் கொண்டிருக்கும் வண்ணமாகவும் காட்சி அளிக்கின்றது. ஆலயத்தின் நுழைவாயிலில் ஆஹா, ஊஹூ இருவரின் உருவங்களும் அமையப் பெற்றிருக்கின்றன.

பட்டாசாரியார் அனைவருக்கும் தீர்த்தம், சடாரி போன்றவை சாதிக்கின்றார். இந்தச் சத்ரவட நரசிம்மர் சூரியனால் ஏற்படும் சகல தோஷங்களையும் போக்கும் வல்லமை கொண்டவர் எனச் சொல்கின்றார்கள். நாட்டின் தலைமைப் பதவி, மற்றவர்களுக்கு ஆணையிடும் அதிகாரம், நீதிபரிபாலனம் போன்றவற்றைத் தவறாமல் செய்யும் வல்லமை போன்ற சிறப்புகளை வழங்கும் பெருமை கொண்டவர். பத்மாசனக் கோலத்துடனேயே பேரழகுக் கோலத்தோடு, இதழ்களில் சிரிப்போடு காட்சி தருகின்றார். அடுத்ததாய்த் தான் மிக, மிகக் கஷ்டமான பயணம் என்னதான் ஜீப்பிலே சென்றாலும் பயணம் மிகக் கடினம்.

ஒரு ஜீப்பிற்கு ஒன்பது பேர் என ஐந்து ஜீப்புகளில் சென்றோம். அவை எப்படி அந்தத் தடங்களில் ஓடுகின்றன என்பதே ஒரு ஆச்சரியம் தான். ஒரு இடத்தில் மேட்டிலிருந்து பள்ளத்தில் குதிக்கும் ஜீப் மற்றொரு இடத்தில் முன் பக்கத்துச் சக்கரங்கள் இரண்டின் உதவியோடு மட்டுமே செல்லுகின்றது. அனைவரும் முன்னால் வளைகின்றோம். பின்னர் செங்குத்தான மேடு வருகின்றது. ஜீப் இப்போது மேட்டில் ஏறுகின்றது. அனைவரும் பின்னால் சரிகின்றோம். இன்னும் ஒரு இடத்தில் இடது பக்கச் சக்கரங்கள் உதவியோடு மட்டுமே செல்லவேண்டி உள்ளது. இந்த அழகில் இரு பக்கமும் காடாக வளர்ந்திருக்கும் மரங்களின் கிளைகள், இலைகள் போன்றவை உரசி ஜன்னல் பக்கம் உட்கார்ந்திருக்கும் நபர்களுக்குச் சிரமத்தை உண்டாக்குகின்றது. ஜீப்பில் ஏறும்போது டிரைவர் பக்கத்து சீட்டோ, அல்லது நடுவிலோ இடம் கிடைக்கவில்லை எங்களுக்கு. பின்னால் நாலு பேர் அமரும் சீட்டில் தான் கிடைத்தது. கொஞ்சம் வருத்தமாய் இருந்தது. ஆனால் அது எவ்வளவு வசதியாப் போச்சு என்று பிரயாணத்தின் போதே புரிந்தது.

ஜீப் துள்ளித் துள்ளிக் குதிக்கும்போதெல்லாம் நல்லவேளை நான் உட்பக்கமாய் உட்கார்ந்து கொண்டேன் என நினைத்துக் கொண்டேன். என் பக்கத்தில் அமர்ந்த ம.பா.வுக்கும் சரி, எதிரே அமர்ந்திருந்த ஒரு தாத்தாவுக்கும் சரி, சமாளிக்கவே முடியலை. பக்கத்தில் இருந்த அவங்க பையர் இடம் மாறி உட்கார முயற்சித்தாலும் நடக்கவில்லை. எப்படியோ இருவரும் சமாளித்தார்கள். கீழே விழுந்துவிடுவோமோ என்ற எண்ணம் பலமுறை தோன்றியது. கொஞ்ச தூரம் போனதும் ஜீப் நின்றது. டிரைவர் அனைவரையும் இறங்கச் சொன்னார். கூட வந்த ஜீப்களும் நின்று அனைவரும் இறங்கினார்கள். ஆனால் கோயில் என்னமோ வரலை.

டிஸ்கி: பொருத்தமான பாசுரங்கள்னு பார்த்துப் போடலை. திருமங்கை ஆழ்வார் சிங்கவேள் குன்றத்தைப் பற்றிப் பாடியது என்ற கோணத்தில் மட்டுமே போடுகின்றேன். நன்றி.

Wednesday, February 04, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்! அஹோபிலம் 1

நாங்க எப்போவும்போல் தனி அறைக்கு முன்கூட்டியே சொல்லி வைத்திருந்தோம். அஹோபிலம் மடத்திலும் அறைகள் கிடைக்கும். திருப்பதி தேவஸ்தானமும் அறைகள் வாடகைக்குக் கொடுக்கின்றன. எதிலே தங்குவதாய் இருந்தாலும் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். இல்லை எனில் ரொம்பக் கஷ்டம் அறைகள் கிடைப்பது. அறையை ஜன்னல் கதவில் இருந்து எல்லாவற்றையும் திறக்காமல் இருத்தல் நலம். முன்னோர்கள் சர்வ சகஜமாய் வருவார்கள். அஹோபிலம் ஊர்க்காரர்கள், "எங்க வானரங்கள் ரொம்பவே சாதுவாக்கும்! உங்க ஷோலிங்கர் வானரங்களைப் போல கிடையாது!" என்று பெருமை அடித்துக் கொண்டாலும், நமக்குப் பயமாகவே இருக்கின்றது. எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது ISCON அமைப்பாளர்கள் கட்டியுள்ள தங்கும் விடுதியில். அறை வாடகை 250 யில் இருந்து 300 -க்குள் இருக்கலாம். அஹோபிலம் மடம் அவ்வளவுதான் வாங்குகின்றனர். என்றாலும் இங்கே கொஞ்சம் அதிகம். 400ரூ. கொடுத்தோம். அறைகள் நன்கு பராமரிக்கப் படுகின்றன. இது தவிர சாப்பிடும் உணவு விடுதிகள் எதுவும் இல்லை. ஆகவே தனியாய்ப் போனால் சாப்பாடு ஒரு பிரச்னை தான். மடத்தில் அன்னதானம் இரு வேளை நடக்கின்றது. அதைத் தெரிந்து வைத்துக் கொண்டு போகலாம்.

எங்களுக்கு நாங்கள் கொடுத்த பணத்திலேயே காலை காபி, காலை உணவு, மதியம் சாப்பாடு, சாயங்காலம் காபி அல்லது டீ, இரவு உணவு அடங்கியது. மடத்தில் இருந்து சமைத்து எடுத்து வந்தார்கள். ஆகவே செல்லும்போது உங்களுக்கு ஏற்ற பயணத்திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போ காலை ஆகாரம் முடிச்சுக் குளிச்சுக் கிளம்பியாச்சு நரசிம்மர் தரிசனத்துக்கு. அங்கேயும் மின் தடை ஆற்காட்டாருக்குத் தம்பி தான் அங்கே மின்சார அமைச்சர் போல. காலை 6 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும் மின்சாரம் வராது. குளிக்க வெந்நீர் முதல் நாள் கொடுக்க முடியலை. மறுநாள் காலை சீக்கிரமே எழுப்பிக் கொடுத்துவிட்டார்கள். இனி முதலில் அஹோபிலம் கோயில் வரலாற்றைப் பார்ப்போம். பின்னர் பயண அனுபவமும் நடு நடுவே வரும்.
************************************************************************************

நம் நாட்டில் ஒவ்வொரு மலைக்கும், ஒவ்வொரு நதிக்கும் புனிதம் உண்டு. வடக்கே இமயத்தில் ஆரம்பித்தால் தெற்கே கன்னியாகுமரி வரையிலும் ஒரே மாதிரியான கதைகள், காவியங்கள், புராணங்கள். அதிலும் தென்னாடு இதில் தனித்துவம் வாய்ந்தது என்றே சொல்லலாம். மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகு கண்ணையும், கருத்தையும் கவர்ந்து கொள்ளும் திருமணம் ஆகப் போகும் இளம்பெண்ணைப் போல் அழகு கொஞ்சினால், கிழக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைகள், பக்குவமடைந்த, மனமுதிர்ச்சி அடைந்த பெண்ணைப் போல் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர்கள் ஆன்மீகத்துடன் நெருங்கிய சம்பந்தம் கொண்டது. இயற்கையின் சுந்தரம் மட்டுமின்றி, ஆன்மீகத்தின் புனிதமும் சேர்ந்தது கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர். இந்தக் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களையே மஹா சர்ப்பம் ஆன ஆதிசேஷன் சுருண்டு படுத்திருப்பதாய்ச் சொல்லுகின்றனர். அவரின் தலைப்பகுதி திருப்பதியும், மத்திய உடல் பகுதி அஹோபிலம் என்றும், நீண்டு சுருட்டி வைக்கப் பட்ட வால்பகுதி ஸ்ரீசைலம் எனவும் சொல்லுவார்கள்.

திருப்பதிக்கு மலை எறித் தரிசிக்க குறைந்தது 4 மணி நேரம் ஆகும்.மலை ஏறி விடலாம். ஸ்ரீசைலம் சென்று தரிசிக்கும்படியாகவே இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். ஆனால் அஹோபிலம் அப்படி இல்லை. மிகுந்த மன உறுதியும், உடல் உறுதியும், உள்ளார்ந்த பக்தியும் இருந்தாலே செல்லமுடியும் எனச் சொல்கின்றனர். ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மற்ற அவதாரங்களில் இருந்தும் மாறுபட்டது நரசிம்ம அவதாரம். கண நேரத்தில் பக்தனின் வேண்டுகோளுக்காகத் தோன்றி, குறைவான நேரமே இருந்து தான் எதற்காக வந்தோமோ அதை முடித்துக் கொண்டது இந்த அவதாரம் மட்டுமே. மற்ற அவதாரங்களில் உலகத்து மக்களுக்காகவும் தேவர்களின் அபயக் குரலுக்காகவுமே எடுக்கப் பட்டு வந்தது. ஆனால் நரசிம்ம அவதாரமோ ஒரு சிறு பையனின் உண்மையான பக்திக்காகவும், வேண்டுகோளுக்காகவும், உண்மையை நிலை நாட்டுவதற்கு எடுக்கப் பட்டது. உக்கிர ஸ்வரூபமாய் எடுக்கப் பட்ட நரசிம்மரைப் பார்க்கும்போதே ஹிரண்யகசிபு அச்சம் கொண்டான். ஆனால் பிரஹலாதனுக்கோ பெருங்கருணையே நரசிம்ம வடிவெடுத்து வந்திருப்பதாய்த் தோற்றம் அளித்தது. சற்றும் அஞ்சாமல் வணங்கி நின்றான். இப்பேர்ப்பட்ட அவதார புருஷனைத் தரிசிக்கும் எண்ணத்துடன் கருட பகவான் முன்னொரு காலத்தில் இம்மலைப் பிராந்தியத்தில் தவம் இருந்தார். கருடனின் தவத்துக்குப் பரிசாக நரசிம்மர் இங்கே காட்சி அளித்தார் ஒரு மலைக்குகையில். இனி ஒவ்வொரு மலைக் குகையாகச் சென்று பார்க்கலாமா??

Tuesday, February 03, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்!


ஆரம்பம் இங்கேஆந்திரப் பிரதேசத்தில் அஹோபிலம் உள்ளது. கர்னல் மாவட்டம், நந்தியால் தாலுகாவைச் சேர்ந்த இந்த அஹோபிலத்திற்குச் செல்ல நேரடி ரெயில் வழி இல்லை. அருகே இருக்கின்றது என்று சொல்லப் படும் இரு ரயில் நிலையங்கள், மும்பை-சென்னை வழியில் உள்ள கடப்பாவும், பங்களூர்-விசாகப் பட்டினம் வழியில் வரும் நந்தியால் நிலையமும் ஆகும். சென்னையில் இருந்து செல்வதென்றால் கடப்பா வரையில் ரெயிலில் சென்று அங்கிருந்து கிட்டத் தட்ட 110 கி.மீ. உள்ள அஹோபிலத்துக்குப் பேருந்துகளில் தான் செல்ல வேண்டும். சென்னையில் இருந்து நேரடியாகப் பேருந்துகள் இருப்பதாய்த் தெரியவில்லை. எங்கிருந்து சென்றாலும் அல்லகட்டா என்னும் ஊரைக் கடந்து அங்கிருந்தே 24 கி.மீ. தூரத்தில் உள்ள அஹோபிலத்தை அடைய வேண்டும். அல்லகட்டாவில் இருந்து அஹோபிலம் செல்ல பேருந்துகள், வேன்கள் கிடைக்கின்றன.

நாங்கள் சுற்றுலாத் திட்டத்தின் மூலம் சென்றோம். ஓம் ட்ராவல்ஸ் என்ற பயண அமைப்பாளர்கள் ஏற்பாடுகள் செய்யும் சுற்றுலாத் திட்டத்தின் மூலம் சென்றோம். இவர்கள் இந்தியாவின் பல சுற்றுலாத் தலங்களுக்கும் அழைத்துச் செல்கின்றனர். நாங்கள் முதன்முதலாய் அஹோபிலத்துக்குச் செல்லவே இவர்களை அணுகினோம். தன்னந்தனியாகவோ, அல்லது இருவராகவோ சென்றால் கொஞ்சம் கஷ்டம் தான். முழுக்க முழுக்கக் காட்டுப் பயணம். காட்டில் சிங்கங்கள் இல்லை என்கின்றனர். ஆனாலும், சிறுத்தைகளும், கரடிகளும் மிகுதியாக இருப்பதாய்க் கூறுகின்றனர். ஆகவே குழுவாகப் பயணம் செல்வதே சிறந்தது. 23 அக்டோபர் 2008 ஏற்பாடு செய்யப் பட்ட பயணத்திட்டத்தில் செல்ல நினைத்து முன்பணம் கட்டி இருந்தோம். ஆனால் அதற்குச் சரியாகப் பத்து நாட்கள் முன்னதாய் எனக்குக் கையில் அடிபட்டுக் கைக்கட்டுப் போட்டு 21 நாட்கள் எடுக்கக் கூடாது என்று சொல்லி இருந்ததால் போக முடியவில்லை. பயண அமைப்பாளர்கள் முன்பணம் எவ்வளவு கட்டினாலும் திரும்பத் தரமாட்டோம் என்று எழுதியே கொடுத்துவிடுகின்றனர். ஆகவே பணம் கிடைக்காது என்று தெரிந்தாலும், வேறே யாராவது உறவினர்கள் செல்லட்டும் எனக் கேட்டுப் பார்த்தோம். யாரும் தயாராக இல்லை. ஆகவே பயண அமைப்பாளரிடமே யோசனை கேட்டதில் ஜனவரி 23-ம் தேதி மீண்டும் ஒரு குழு செல்ல இருப்பதாயும், எங்கள் பணத்தை அதற்கு முன்பதிவு செய்து கொள்ளுவதாயும் கூறினார். கொஞ்சம் ஆறுதல் அடைந்தோம்.

மெல்ல மெல்ல ஜனவரியும் வந்தது. கிளம்பும் நாளும் வந்தது. என்னோட அண்ணா(பெரியப்பா பையர்) வுக்கு ஜனவரி 23 அன்று தான் சஷ்டி அப்தபூர்த்தி திருக்கடையூரில். அங்கே சென்றால் திரும்பி வந்து கிளம்பமுடியாது என்று முன்னரே தெரிந்து கொண்டு அவர்களிடம் மன்னிப்பு மிக வேண்டிக் கேட்டுக் கொண்டு, அன்று கிளம்பினோம். அசோக் நகரில் வந்து பேருந்தில் ஏறிக் கொள்ளச் சொல்லி இருந்தார். ஆகவே அசோக் நகர் சென்றோம். பேருந்தைக் கண்டு பிடித்தோம். நாங்க தான் முதல் ஆட்களாய் போயிருக்கின்றோம் எனப் புரிந்தது. பேருந்து கும்பகோணம் "ரதிமீனா" நிர்வாகத்தைச் சேர்ந்தது. சரி, கொஞ்சம் வசதியாய் இருக்கும் என ஆறுதல் அடைந்தோம். எவ்வளவு தப்புனு போகும்போது தான் புரிந்தது. ஒவ்வொருவராய் வந்ததும் பேருந்தில் ஏறிக் கொண்டோம். பயண அமைப்பாளர் இப்போத் தான் உட்காருமிடம் ஒவ்வொருத்தருக்காகச் சொல்ல ஆரம்பித்தார். அநேகமாய் அனைவருமே முன்னம் பக்கம் கேட்க அவரோ எதுவுமே பேசாமல் அவர் இஷ்டத்துக்கு உட்கார வைத்தார். இதிலே ரொம்ப வயசானவங்க எல்லாம் பின்னால் போய் உட்காரும்படியும் சின்னவங்க எல்லாம் முன்னாலே உட்காரும்படியும் ஆகியும் அவர் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு பக்கத்து இடம் பூராவும் சைதாப்பேட்டையில் ஏறுகிறவங்களுக்கு என்று ஒதுக்கி விட்டார்.

என்னோட கையைக் காரணம் ஏற்கெனவே காட்டி இருந்தாலும் கடைசி சீட்டே கொடுத்தார். நான் பிடிவாதமாய்ப் போக மறுத்து முன்னால் இருந்த மூவர் அமரும் சீட் ஒன்றில் அமர்ந்துவிட்டேன். கொஞ்சம் சொல்லிப் பார்த்துவிட்டு பேருந்தில் அனைவரும் ஆட்சேபிக்கவே பேசாமல் இருந்துவிட்டார். ஆனாலும் பேருந்தில் இடநெருக்கடி அதிகம். யாருக்குமே முன்னாலோ, பின்னாலோ உட்கார வசதியாகவே இல்லை. கைப்பிடிகள் கிடையாது. உடைந்து கிடந்தன. அவற்றைச் சரிசெய்யவே இல்லை. பேருந்து திரும்பும்போதெல்லாம் ஓரத்தில் உட்கார்ந்திருந்த நானும், என்னைப் போன்ற மற்றவர்களும் பிடிக்க ஆதாரமில்லாமல் ரொம்பவே கஷ்டப் பட்டோம். என்றாலும் ஓட்டுநர் மிகத் திறமைசாலி. கிட்டத் தட்டப் பத்துமணி நேரம் ஆகும் பிரயாணத்தை அவர் எட்டு மணி நேரத்துக்குள் கொண்டு வரப் பார்த்து ஓரளவு வெற்றியும் பெற்றார். காலை 6-30 மணி அளவில் அஹோபிலம் ஊர் போய்ச் சேர்ந்தோம். அங்கே போய் இறங்கிக் கொண்டு எங்களுக்கென ஏற்பாடு செய்திருக்கும் அறைகளுக்குக் காத்திருந்தோம்.

சிதம்பர ரகசியம் - முடிவுரை!

சிதம்பரம் கோயில் பற்றிய பல விஷயங்களையும், பல்வேறு விதமான தகவல்களையும் பரிமாறிக் கொண்டோம், இத்தனை மாதங்களாய். இங்கே பூஜை முறைகள் வைதீக முறைப்படியே நடைபெறுகின்றன என்பதையும் பார்த்தோம். ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறும் கோயில்களில் வழிபடுபவர் திருமணம் ஆகாதவராய் இருந்தாலும் வழிபாடுகளைத் தொடர்ந்து செய்யமுடியும். ஆனால் சிதம்பரம் கோயிலில் வழிபாடுகள் செய்யவும், நடராஜரின் கருவறைக்குள் நுழையவும் திருமணம் ஆனால் மட்டுமே தகுதி பெறுகின்றனர். மனைவி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. மேலும் சில ஹோமங்கள், யக்ஞங்கள் முறைப்படி செய்து, அதன் மூலம் குருவின் அனுமதி பெற்றே கருவறையில் வழிபாடுகள் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். ஹோமங்களும், யக்ஞங்களும் மனைவி அருகில் இல்லாமல் செய்யமுடியாது. ஆகவே அநேகமாய் தீட்சிதர்கள் அனைவருமே சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்ளுகின்றனர். அவர்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டாலும் கோத்திரம் பார்ப்பது, பொருத்தங்கள் பார்ப்பது என்ற சம்பிரதாயங்களும் உள்ளன. திருமணத்தில் மணமகனுக்குச் சாதாரணமாய்க் கொடுக்கப் படும் வரதட்சணையோ, இல்லை நகைகளோ அல்லது விலை உயர்ந்த பாத்திர பண்டங்களோ பெரியதாய்க் கருதிக் கொடுப்பதில்லை. அவர்கள் சக்திக்கு உட்பட்டுக் கொடுக்கவும் கொடுக்கலாம், கொடுக்காமலும் இருக்கலாம். இதை ஒரு பெரிய விஷயமாய்க் கருதுவதில்லை. பெண் எடுப்பதும், பெண் கொடுப்பதுமே முக்கியமாய்க் கருதப் படுவதோடு வைதீக சம்பிரதாயங்களுமே முக்கியமாய்க் கடைப்பிடிக்கப் படுகின்றது. திருமணம் முடிந்ததுமே பெண் மணமகன் வீட்டிற்கு வாழ வந்துவிடுவதில்லை. தற்காலங்களில் பள்ளிப் படிப்பு முடிந்ததுமே பெரும்பாலான திருமணங்கள் நடந்தாலும், பின்னர் மேலே படிக்க விரும்பினாலும் அங்கேயே உள்ளூர் கல்லூரிகளிலேயோ, பல்கலைக் கழகத்திலேயோ படிக்க அனுமதிக்கப் படுகின்றனர். பல தீட்சிதர்களின் பையன்களும், பெண்களும் பல்கலைக் கழகப் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு, முனைவர் பட்டங்கள் என்று சர்வ சாதாரணமாய்ப் பெற்று இருக்கின்றதையும் கண்கூடாய்க் காணமுடியும்.

சிதம்பரம் கோயில் சிவனுக்கு என்று இருக்கும் கோயில்கள் அனைத்திலும் மிகவும் முக்கியமானதாய்ச் சொல்லப் படுவதன் காரணமே அது இதயப் பகுதியில் இருப்பதால் தான். ஈசனே அங்கே ஆடும் நடனம் ப்ராணாயாம நடனம் என்று தஹரவித்யா கூறுகின்றது. நடராஜரின் ஊன்றிய பாதம் ப்ராணப்ரதிஷ்டையைக் குறிப்பதாயும் சொல்லுகின்றனர். ப்ரணவ சொரூபத்தில் ஆடும் நடராஜரின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு குறிப்பும் இந்த உலகத்தின் ஒவ்வொரு இயக்கத்தைக் குறிப்பதாய்ச் சொல்லுகின்றனர். ஏற்கெனவே ஐந்தொழில்களையும் புரிகின்றார் எனப் பார்த்தோம். டமருகம் பொருந்திய கரம் சிருஷ்டியையும், அபயம் அமைந்த கரம் ஸ்திதியையும், அக்னி ஏந்திய கை ஸ்ம்ஹாரத்தையும், முயலகன் முதுகில் ஊன்றிய வலத்திருப்பாதம் திரேதானம் என்னும் மறைத்தலையும், குஞ்சித பாதம் என்னும் இடத்திருப்பாதம் அனுக்ரஹத்ட்தையும் செய்கின்றது என்பதையும் பார்த்தோம்.

அவரின் டமருகத்தின் ஓசையில் இருந்து ப்ராணிகளின் அழைப்பும், அபயஹஸ்தம் காத்தலையும், அக்னி ஹஸ்தம் ஸத்யப்ரமாணத்தையும், தொங்கவிட்டிருக்கும் மற்றொரு கரம் சுட்டிக் காட்டுதலையும், குஞ்சிதபாதம் அபேதானந்த முக்தியையும் சுட்டிக் காட்டுகின்றது. அபயஹஸ்தம் ஆசார்ய பாவம், ஸ்வரூபத்தையும், டமருக் ஒலி மஹா வாக்ய உபதேசத்தையும், அக்னி ஹஸ்தம் அஞ்ஞான நிவர்த்தியையும் குஞ்சிதபாதம் நித்யானந்தப்ராப்தியையும் கொடுப்பதாய் ஆனந்த தாண்ட உண்மை கூறுகின்றது. ஈசனின் சர்வ அவய ஸ்வரூபம் ஓங்காரத்தைச் சுட்டிக் காட்டுகின்றது என்பதையும் கண்டோம். அக்னி ஹஸ்தம் "ந" காரத்தையும், பாதாம்புஜங்கள் "ம" காரத்தையும், லம்ப ஹஸ்தம்(தொங்கவிடப்பட்டிருக்கும் கரம்) "சி" காரத்தையும், டமருக ஹஸ்தம் "வா" காரத்தையும், அபய ஹஸ்தம் "ய" காரத்தையும் தோற்றுவிக்கின்றது. இவ்வாறு ஈசன் பல்வேறு தொழில்களையும் புரிந்து கொண்டு இடைவிடாது சந்திரனின் சம்பந்தம் பெற்ற இடாநாடியின் உதவியைக் கொண்டு இடது நாசியில் மூச்சுக் காற்றை உள்ளிழுத்துக் கொண்டும், சூர்ய சம்பந்தம் பெற்ற வலது நாசியால் மூச்சை வெளிவிட்டுக் கொண்டும் அந்த மூச்சை உள்ளிழுத்து கும்பகம் செய்து ப்ராணப்ரதிஷ்டா காலத்தில் வலக்கால் கட்டைவிரலால் ப்ராணபிரதிஷ்டை செய்து கொண்டும், தன் ஆனந்தத் தாண்டவத்தை ஆடி வருகின்றார். இந்த உலகம் இயங்குகின்றது. நாமும் இயங்குகின்றோம். அனைத்தும் அவனே. எல்லா உயிர்களிலும் நிறைந்து நின்று மூச்சுக் காற்றாக நின்றும், வெளி வந்தும், உள்ளிழுத்தும் அனைவரையும் இயக்கும் அந்த ஆட வல்லான் திருவடிப் பாதங்களுக்குச் சரணம் செய்து இதை முடிக்கின்றேன்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
*************************************************************************************

இந்தத் தொடரை எழுத எனக்குப் பெருமளவு துணையாக இருந்து அவ்வப்போது வேண்டிய தகவல்களையும், சிதம்பரம் பற்றிய நினைவுகளையும், கோயில் பற்றிய தகவல்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட என் கணவருக்குத் தான் இது சொந்தம். மற்றும் எனக்கு வேண்டிய தகவல்களை நான் தேடி எடுத்துக் கொள்ள முக்கிய காரணமாய் இருந்த எங்கள் குருவும் சிதம்பரம் கோயிலின் தீட்சிதரும் ஆன திரு ராமலிங்க தீட்சிதர் அவர்களுக்கும் என் பணிவார்ந்த வணக்கங்களைச் சமர்ப்பித்துக் கொண்டு இந்த எழுத்தை அவருக்கே காணிக்கை ஆக்குகின்றேன்.

துணைப் புத்தகங்கள்: A Study of Chidambaram and its Shrine, by T.Ramalinga Dikshithar M.A.Litt.,

Swamy Sivananda's Website: www.sivananda.org
Yoga details taken from : B.K.S. Iyengar's Books and சுந்தர யோக சிகிச்சை, யோசார்யா சுந்தரம், பெங்களூர்.
சிதம்பர வைபவச் சுருக்கம்: நடராஜ ரத்ன தீட்சிதர், ஸோமஸேது தீட்சிதர், T.ராமலிங்க தீட்சிதர்.(புத்தகம் வெளிவந்த வருஷம் தெரியலை, மிகப் பழைய புத்தகம்,)
வைதிக சம்வர்த்தனி: ஸ்ரீவத்ஸ சோமதேவ சர்மாவால் போடப் பட்டது. அதிலே உள்ள சிதம்பர புராணம் ஸோமஸேது தீட்சிதரால் எழுதப் பட்டது.
தில்லைக் கோயில் வரலாறு: கலைமாமணி, பேராசிரியர் அமரர் திரு க.வெள்ளைவாரணனார், தில்லைத் தமிழ் மன்றம் வெளியீடு.
தில்லைச் சிற்றம்பலப் பெருங்கோயிலின் பழமையும் திருச்சித்திரகூட அமைப்பும்: ஆக்கியோர் தமிழ்ப்பெரும்புலவர், சித்தாந்தப் பேராசிரியர் திருவாளர் சபா. சிவப்ரகாசம் பிள்ளை அவர்கள், தில்லை. வெளியிட்டோர் தில்லைத் திருமுறைக் கழத்தோர்.
திருச்சிற்றம்பலமும், திருச்சித்ரகூடமும்: டாக்டர் ந. ராமசுப்ரமணியன், சட்ட நிர்வாக ஆலோசகர், பிருந்தாவன் அவென்யு, சென்னை -45.

இவற்றைத் தவிர, திரு சிவசிவா என்னும் திரு வி.சுப்ரமணியன் அவர்கள் பலவிதத் தகவல்களையும், முக்கியமாய் பேராசிரியரும் தொல்லியல் ஆராய்ச்சியாளருமான திரு நாகசாமியின் சில குறிப்புகளைக் கொடுத்து உதவினார்கள். திரு ஆகிராவும் ஒரு சில சுட்டிகள் கொடுத்து உதவினார். திரு திவா தி.வாசுதேவன் அவர்கள் சிதம்பரம் பற்றிய இரு புத்தகங்கள் கொடுத்து உதவினார். சரித்திரத் தகவல்களும் அவ்வப்போது நூலகத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்து வந்து பார்க்கப் பட்டது. சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் ராமலிங்க தீட்சிதரின் மகன் தங்க தீட்சிதர், தெற்குத் தெரு நடராஜ தீட்சிதர் ஆகியோரை நேரில் சந்தித்தும் , நெய்வேலி நடராஜ ஸ்வாமி தீட்சிதர், தொலைபேசி உரையாடல் மூலமும், ராஜா தீட்சிதர் அவர்கள் எழுதிய திருவாதிரை பற்றிய குறிப்புகள் அனைத்தின் உதவியாலுமே இதை எழுத முடிந்தது. அனைவருக்கும் நன்றி சொல்லி வணங்குகின்றேன்.