எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, November 25, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - நவ கைலாயம் நிறைவு!


அடுத்ததாய் ராகுவுக்கான கோயில். இந்த நவகைலாயக் கோயில்களும் முக்கியமான ஊர்களில் இருக்கும் ஒரு சில கோயில்களைத் தவிர மற்றவை பராமரிப்பின்றி காணப்படுகின்றன. அதற்கு முந்தைய பதிவில் திரு குப்பன் யாஹூ கூறியதும் ஒரு காரணமாக இருக்கலாம். கோயில்களையும், கோயில் சார்ந்த நிலங்களையும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசு இம்மாதிரி நலிந்த கோயில்களை மீண்டும் புனருத்தாரணம் செய்து வழிபடப் பயனுள்ளதாக மாற்றவேண்டும். இந்த நிலைமை மாறவேண்டும். திருநெல்வேலியிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்திலே குன்றுகள் சூழ்ந்த பகுதியான குன்றத்தூர் என்னும் ஊரிலே தான் ராகுவுக்கான கோயில் உள்ளது. ரோமசமுனிவர் தாமிரபரணியில் விட்ட தாமரை மலர்களில் ஒன்று ஒதுங்கிய இடமும் இதுவாகும். இந்த ஊர்க்கோயிலைப் பார்க்கும் முன்பு இந்தக் கோயில் பற்றிய வரலாற்றைப் பார்ப்போமா???

அநேகமாய்ப் பள்ளிப் பாடங்களில் இந்தக் கதையை நாம் படித்திருப்போம். அதே கதைதான். என்றாலும் திரும்ப ஒரு முறை சொல்லுகிறேன். திருநெல்வேலிக்கு அருகே உள்ள இந்தப் பகுதியில் ஒரு அதிசய மாமரம் இருந்தது. அந்த மாமரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரே ஒரு பழம் தான் பழுக்கும். அந்தப் பழத்தை வேறு யாரும் உண்ணமுடியாது. மன்னன் மட்டுமே உண்ணுவான். ஒரு வருஷம் இப்படிப் பழுத்திருந்த பழம் மன்னன் பறிப்பதற்காகக் காத்திருந்தது. அப்போது தாமிரபரணியில் நீர் எடுத்துச் செல்ல ஓர் இளம்பெண் வந்தாள். அவள் நீர் எடுக்கும்போது பழுத்துக் கனிந்திருந்த அந்தப் பழம் நீரில் விழுந்து,நீரோடு குடத்தினுள் சென்றுவிட்டது. அதை அந்தப் பெண் அறியமாட்டாள். அவள் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். மன்னன் பழத்தைப் பறிக்க வந்தான். பழம் மரத்தில் இல்லை. யார் எடுத்துச் சென்றிருப்பார்கள் என யோசித்த மன்னன் அன்று நதிக்கரைக்கு வந்தவர்கள் வீட்டையும், நதியில் நீராடி, நீர் எடுத்துச் சென்றவர்கள் வீட்டையும் கேட்டறிந்து பரிசோதனை செய்யச் சொன்னான்.

அப்போது நீர் எடுத்துச் சென்ற பெண்ணின் வீட்டில் சோதிக்கும்போது நீர்ப்பானைக்குள் பழம் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. மன்னன் பெண்ணென்றும் பாராமல் அவளை விசாரித்தும் அறிந்துகொள்ள முயலாமல் அவளுக்கு மரணதண்டனை கொடுத்தான். அப்பாவியும், ஏழையும் ஆன அந்தப் பெண் இறக்கும் தருவாயில் மன்னனுக்கு சாபம் கொடுத்தாள். மன்னனின் ஆணையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த அந்தப் பகுதி மக்களுக்கும் சாபம் கொடுத்தாள். அவள் சாபத்தின்படி அந்தப் பகுதியில் பசுக்கள் தவிர அனைத்தும் பாம்புகளால் அழியத் தொடங்கியது. நாளாக, நாளாகப் பாம்புகள் பெருகின. அந்த ஊரில் எஞ்சி இருந்த பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. திருமணத்திற்குக் காத்திருந்த பெண்களை மணக்கவும் யாரும் முன்வரவில்லை. அனைவரும் யோசித்து ஈசனை நினைத்துப் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்ய, ஈசனும் அவர்களுக்காக அந்தப் பாம்புகளைப் பிடித்துத் தன் கழுத்தில் ஆபரணங்களாகப் போட்டுக் கொண்டார். மன்னன் தவறு செய்தால் அதற்கு மக்கள் தான் பொறுப்பாளிகள் எனவும், மன்னனைத் திருத்தி நல்லாட்சி செய்யச் செய்திருக்கவேண்டிய மக்கள் அவ்விதம் நடந்து கொள்ளாததையும் சுட்டிக் காட்டி திருத்திக் கொண்டு நல்ல அரசனைத் தேர்ந்தெடுத்து வாழ அருள் புரிந்தார்.

பாம்புகளைச் சூடிக் கொண்டதால் இவ்வூரின் மூலவரான லிங்கத்தின் மேலேயே நாகங்கள் சூழ்ந்து கொண்டு காணப்படுவதைத் தரிசிக்கமுடியும். ராகு ஸ்தலமான இந்த ஊர் மூலவரின் பெயர் கோதபரமேஸ்வரர் ஆகும். அம்பாள் சிவகாமி அம்மை. லிங்கத்திற்கு நீல வஸ்திரம் சார்த்தி வழிபாடுகள் நடத்தினால் ராகுதோஷம் நீங்கும் என்கிறார்கள். ராகுகாலத்திலும் ஈசனுக்கு விசேஷ வழிபாடுகள் உண்டு. இங்கு லிங்கத்தில் மட்டுமில்லாமல் பைரவரின் இடுப்பு, மார்பு, மற்றும் தக்ஷிணாமூர்த்தியின் மீதும் பாம்பு காணப்படுகிறது. ஆறுமுக நயினார் என்னும் நாகசுப்ரமணியர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர் என்பதோடு அவரின் சிலையில் இருந்து சப்த ஸ்வரங்களும் எழும் விதமாய் வடிக்கப் பட்டுள்ளது. அருகிலேயே தென் திருப்பதி என அழைக்கப் படும் திருவேங்கடநாத ஸ்வாமி கோயிலும் உள்ளது. பேருந்துகள் திருவேங்கடநாதபுரம் செல்கின்றன. அந்தப் பேருந்துகளில் சென்றாலே இந்த்க் கோயிலுக்கும் சென்று வரமுடியும்.

அடுத்தது மிகவும் மனதை வருத்தும் ஒரு செய்தியாகும். இந்தக் கோயிலுக்கு நாங்கள் செல்லவில்லை. கேதுவுக்கான இந்தத் தலம் இப்போது அழியும் நிலைமையில் உள்ளதாம். தூத்துக்குடிக்கு அருகே ராஜபதி கைலாசநாதர் கோயில் என அழைக்கப் படும் இந்தத் தலத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு லிங்கம் இருப்பதாய்ச் சொல்கின்றனர். லிங்கத்தின் நாலு பக்கங்களிலும் நான்கு சக்கரங்கள் உள்ளதாகவும், லிங்கத்திற்குக் கீழே தோண்டினால் பழைய கோயில் கிடைக்கலாம் என்றும் சொல்கின்ற்னர். இந்தத் தலம் பற்றி மிகவும் நன்கு தெரிந்த பக்தர்களே இங்கு செல்கின்றனர். பக்தர்கள் இந்த லிங்கத்திற்குப் பலவர்ண வஸ்திரம் சார்த்தி, அங்கே இருக்கும் மண்ணையே பிரசாதமாய் எடுத்து வருகின்றனர். திருச்செந்தூர் செல்லும் வழியில் தென் திருப்பேரையில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் ரோட்டோரத்திலேயே கேட்பாரற்று இந்த லிங்கம் உள்ளது. பேருந்து வசதி இல்லை. தீரவிசாரித்துத் தெரிந்துகொண்டு தென் திருப்பேரையில் இருந்து ஆட்டோ அல்லது கார் ஏற்பாட்டில் சென்றால் காரிலோ இந்த இடத்தைக் கேட்டுக் கொண்டு அடையவேண்டும். அறநிலையத் துறைஎப்போது மனசு வைக்குமோ அப்போது இந்தக் கோயில் எழும்பும் என்று எதிர்பார்ப்போம்.


இத்துடன் நவகைலாய யாத்திரை முடிவடைந்தது. அடுத்தது தென்காசிக் கோயில், திருக்குற்றாலம், திருநெல்வேலி நெல்லையப்பர் தரிசனம், சங்கரன்கோயில் கோமதி அம்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் போன்றவர்கள் தரிசனத்துடன் திருநெல்வேலி யாத்திரை நிறையும்.

Tuesday, November 24, 2009

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள்! நவ கைலாயம் 7


அடுத்த க்ஷேத்திரம் சனிக்கானது. இந்த க்ஷேத்திரம் ஏற்கெனவே நாம் நவதிருப்பதியில் பார்த்தது தான். ஸ்ரீவைகுண்டம் க்ஷேத்திரம் இப்போ நாம்போக வேண்டியது. போகிற வழியெல்லாம் முன்னாடியே பார்த்துட்டோம் இல்லையா? இந்தக் கோயில் காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கப் படுகிறது. இந்தக் கோயிலில் தான் நவ கைலாயக் கோயில்கள் உருவாக காரணமாய் இருந்த உரோமச முனிவருக்குச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளதாய்த் தெரிய வருகிறது. (சிற்பத்தைப் பார்க்கவில்லை) மேலும் எல்லாக் கோயில்களிலும் இருப்பது போல் நடராஜர், வீரபத்திரர் போன்றோரின் சிற்பங்களும் உள்ளன. காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி அம்மனும் காட்சி கொடுக்கிறார். இந்தக் கோயிலின் கொடிமரம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்டதாய்ச் சொல்லுகின்றனர். நடராஜர் இங்கே சந்தன சபாபதி என்ற பெயரில் அழைக்கப் படுகிறார்.

மூலவர் காசிவிஸ்வநாதர், சிவகாமி அம்மனுடன் உள்ளார். இந்தக் கோயிலில் சனீஸ்வரருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. சனி தோஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் கைலாசநாதருக்கும், சனிக்கும் விசேஷ வழிபாடு செய்கின்றனர். தடைப்பட்ட திருமணங்கள், இழந்த சொத்துக்களைத் திரும்பப் பெறுதல் போன்றவற்றிற்கு இங்கே பரிகாரம் செய்து கொள்ளுதல் நலம் எனச் சொல்லப் படுகிறது. ஸ்ரீயும், வைகுண்ட வாசனும் இந்தத் தலத்தில் தங்கி இருப்பதாலேயே இது ஸ்ரீவைகுண்டம் என அழைக்கப் படுவதாயும், நவதிருப்பதிகளிலும், 108 திவ்ய தேசங்களிலும் ஒன்றான கள்ளர்பிரான் கோயிலான நவதிருப்பதிக் கோயிலும் இங்கேயே அமைந்துள்ளதும் விசேஷமாய்ச் சிறப்பித்துச் சொல்லப் படுகிறது. நவதிருப்பதிகளில் சூரியனுக்குரிய தலமாகவும், நவ கைலாயத்தின் சனிக்குரிய தலமாகவும் இருப்பதும் தனிச்சிறப்பு எனச் சொல்லப் படுகிறது. எல்லாவற்றையும் விட மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று என்னவெனில் குமரகுருபர ஸ்வாமிகளின் அவதாரத் திருத்தலம் இது. அன்னை மீனாக்ஷியின் அருளைப் பெற்றவரும், வடநாடான காசிக்குச் சென்று திரும்பி வந்து காசிமடத்தைத் திருப்பனந்தாளில் ஸ்தாபித்தவரும் , சகலகலாவல்லி மாலையைப் பாடி மொழித்திறனைப் பெற்றவரும் ஆன குமரகுருபரரின் அவதாரத் தலம் ஸ்ரீவைகுண்டம் ஆகும்.

இந்தக் கோயிலின் நந்தியைச் சுற்றிலும் `108 விளக்குகள் ஏற்ற அமைக்கப் பட்டுள்ளது. இவற்றில் விளக்கு ஏற்றிப் பிரார்த்தித்துக் கொண்டால் ஐஸ்வர்யம் பெருகும் எனச் சொல்லுகின்றனர். இங்கே காவல் காப்பது பூதநாதர் ஆகும். பூதநாதருக்குத் தனிச் சிறப்புடன் சித்திரைத் திருநாளில் முதல் மரியாதை செய்யப் படுகிறது. சாஸ்தாவின் அம்சமான பூதநாதருக்கு அபிஷேகம் கிடையாது. சந்தனத் தைலம் மட்டுமே தடவி வடைமாலை சார்த்துவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. மற்றக் கோயில்களில் பைரவர் சந்நிதியில் கோயிலின் சாவியை வைப்பது போல் இங்கே பூதநாதர் சந்நிதியில் கோயிலைப் பூட்டிச் சாவியை வைத்து வந்ததாகவும், பூதநாதரை மிஞ்சி எவரும் உள்ளே நுழைய முடியாது என்ற நம்பிக்கை இருந்ததாகவும் தெரியவருகிறது. சித்திரை, ஐப்பசியில் பிரம்மோற்சவமும், ஆறாட்டுவிழாவும் நடக்கிறது. ஐப்பசியில் திருக்கல்யாண உற்சவம், கந்த சஷ்டி, சிவராத்திரி போன்றவையும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. ஸ்ரீவைகுண்டம் கொஞ்சம் பெரிய ஊராக இருப்பதால் இரவு ஒன்பது மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

Wednesday, November 18, 2009

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள்! நவ கைலாயம் - 6

அடுத்ததாக நாம் பார்க்கப் போவது சுக்கிரனுக்கான தலம் ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து ஆத்தூர் என்னும் ஊருக்குச் சென்று அங்கிருந்து புன்னைக்காயல் என்னும் ஊர் செல்லும் பேருந்தில் சென்றால் நடுவில் இரண்டு அல்லது மூன்றாம் கிலோமீட்டரில் சேர்ந்தபூமங்கலம் என்னும் பெயருடைய இந்த ஊர் வரும். இந்த ஊரில் தான் ஆறாம் நவ கைலாயம் உள்ளது. தூத்துக்குடியில் இருந்து வந்தால் திருச்செந்தூர் செல்லும் வழியில் ஆத்தூரை அடைந்தும் இங்கே செல்லலாம். வழியை நன்கு தெரிந்தவர்கள் துணையோடு சென்றால் ஒரே நாளில் நவ திருப்பதிகளிலேயே அமைந்துள்ள நவ கைலாயங்களையும், நவதிருப்பதி/நவ கைலாயம் செல்லும் வழியில் உள்ள திருப்பதி/கைலாய தரிசனங்களையும் இரண்டு நாட்களில் தரிசிக்க முடியும். சிற்ப விநோதங்களையும் மற்ற இயற்கைக் காட்சிகளையும் காணவேண்டுமானால் நவ திருப்பதி இரு நாட்கள், நவ கைலாயம் தனியாக இரு நாட்கள் என வைத்துக் கொள்ளலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம் என்னும் ஊரின் சிற்ப விநோதங்களே பெருமளவு பேசப்படக் கூடியதாகவும், சிற்பக் கலை வல்லுநர்களுக்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தும்படியாகவும் அமைந்துள்ளதாய்க் கூறுவார்கள். நாங்க கிருஷ்ணாபுரம் போகவில்லை. இன்னொரு முறைதான் போகணும்.

இப்போ சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதரைத் தரிசிக்கலாமா? இங்கே குபேரனுக்கு மூலவரின் கருவறை விமானத்தின் மேல் சிலை உள்ளது. இரு தேவியருடன் காட்சி அளிக்கின்றான் குபேரன். யானை வாகனத்தில் நடுவில் குபேரனும், இருபக்கமும் இரு தேவியரும் காட்சி அளிக்கின்றனர். இது தவிர சதுரமான பீடம் கொண்ட ஒரே லிங்கமும், தன்னுடன் ஒரு பக்கம் அம்பிகையும் இருவருக்கும் நடுவே விநாயகரும் இருக்கக் காட்சி கொடுக்கும் அற்புதமும் காணலாம். மூலவரின் பெயர் கைலாச நாதர். ரோமசமுனிவர் ஸ்தாபித்த கோயில்களுள் ஆறாவது கோயில் இது. இங்கே மூலவரே சுக்கிர அம்சத்தோடு காட்சி கொடுக்கிறார் என்பது ஐதீகம். அம்பாள் பெயர் அழகிய பொன்னம்மை தெற்கு நோக்கிக் காட்சி கொடுக்கிறாள். கைலாசநாதரை கருவறையில் வணங்கிய பின்னர் விமானத்தில் தரிசனம் கொடுக்கும் குபேரனையும் வணங்குவது மிகவும் சிறப்பித்துச் சொல்லப் படுகின்றது. சுக்கிரனின் தோஷம் உள்ளவர்களும், செல்வம் வேண்டும் என நினைப்பவர்களும் இங்கே வந்து சுக்கிரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சார்த்தி, மொச்சைப் பொடிசேர்த்த சாதமும், தயிர்சாதமும் நிவேதனம் பண்ணுகின்றனர். வெண்தாமரை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள் சுக்கிர ஹோரை இருக்கும் நேரம் வழிபடவேண்டும் என்றும் சொல்கின்றனர்.

இரண்டு வாசல்களுடன் கூடிய இந்தக் கோயிலின் தல விருக்ஷம் வில்வம். இங்கே உள்ள பிரகாரத்தில் சொக்கநாதர், மீனாக்ஷி அம்மையுடனும், சனீஸ்வரர், பைரவர் போன்றோரும் பரிவார தேவதைகளாக இடம் பெற்றிருக்கின்றனர். முருகன் மட்டும் தன்னைத் தனியாய்க் கவனிக்கவேண்டுமென்றோ என்னமோ, ஒரு பக்கமாய்த் திரும்பி மயில் வாகனத்தில் நின்று கொண்டிருக்கிறார். வள்ளி, தெய்வானை கூட இருந்தாலும் மயில் வலப்புறம் திரும்பி இருப்பதன் காரணம் தெரியவில்லை. கந்தனுக்குரிய சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. இந்தக் கோயில் பிற்காலப் பாண்டியர்களால் கட்டப் பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. மதுரைச் சொக்கநாதரும், மீனாக்ஷி அம்மையும் இடம் பெற்றிருப்பதால் பாண்டிய காலத்துக் கோயிலாக இருக்கலாமென்றே நம்பவேண்டி உள்ளது. தாமிரபரணிதான் இங்கே தீர்த்தம். மேலும் சிறப்பு என்னவென்றால் பொதிகை மலையில் உற்பத்தி ஆகும் தாமிரபரணி பாபநாசத்தில் தரை இறங்கி வந்து எல்லா ஊர்களையும் கடந்து இந்த ஊர் அருகே உள்ள புன்னைக்காயலில் தான் கடலில் சங்கமம் ஆகின்றாள். திருச்செந்தூருக்குப் பாதயாத்திரை செல்லும் முருகபக்தர்கள் இந்தப் புன்னைக்காயலின் தாமிரபரணியில் நீராடிச் சென்ற பின்னரே திருச்செந்தூரில் கடலாடுவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றார்கள். இங்கேயும் மார்கழியில் திருவாதிரைத் திருநாளும், சித்திரை மாசம் பிரம்மோற்சவமும் சிறப்பாய்க் கொண்டாடப் படுகிறது. இந்தக் கோயிலும் குறிப்பிட்ட நேரமே திறந்திருக்குமென்பதால் காலை ஏழு மணியில் இருந்து பத்து மணிக்குள்ளாகவும், மாலை ஐந்தரை மணியிலிருந்து எட்டு மணிக்குள்ளாகவும் சென்று தரிசிப்பது நல்லது.

Sunday, November 15, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! நவகைலாயம் 5

அடுத்ததாக நாம் காணப் போவது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு கைலாசநாதர் கோயிலாகும். நவ கைலாயங்களில் இது ஐந்தாவது கோயில். குருபகவானுக்கான க்ஷேத்திரம் எனச் சொல்லப் படுகிறது. மற்ற நவகைலாயக் கோயில்களுக்கு நடுவே இது அமைந்திருப்பதால் இதை நடுக்கைலாயம் என்றும் அழைக்கின்றனர். மேலும் தாமிரபரணி நதி இங்கே வடக்கே இருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. அதனாலும் இது சிறப்பாகக் கூடப் படுகிறது. இந்த இடத்தில் தாமிரபரணி நதியை தக்ஷிண கங்கை என்ற பெயரில் அழைக்கின்றனர். நதிகளிலேயே மூத்த நதியான தாமிரபரணி நதியின் இந்தக் கரையில் தீர்த்த யாத்திரை செய்வது மிகவும் புனிதமாய்க் கருதப் படுகிறது. இந்த ஊரின் இந்தக் கோயிலைக் கட்டியது வல்லாள மஹாராஜா எனச் சொல்லப் படுகிறது. ஆனால் சோழ மன்னன் ஒருவனே கட்டியதாகவும் தலவரலாறு கூறுகிறது. எது எப்படி எனச் சரியாக யாருக்கும் தெரியவில்லை என்றாலும் பின்வரும் தலவரலாறே கூறப்படுகிறது.

சோழமன்னன் ஒருவனுக்குப் பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தையின் முகம் குதிரை முகமாக இருந்தது. பெண்குழந்தைக்குக் குதிரை முகமா என வருந்திய மன்னன், முகம் மாறவேண்டி சிவனை எண்ணிப் பிரார்த்தித்தான். சிவபெருமான் மன்னன் கனவில் தோன்றி தாமிரபரணியின் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் நீராடி வழிபாடுகள் செய்யச் சொல்ல, மன்னனும் அவ்வாறே செய்து வந்தான். நாளா வட்டத்தில் குழந்தையின் முகமும் மனித முகமாக மாறியது. தான் வழிபட்ட உரோமச லிங்கரால் ஸ்தாபிக்கப் பட்ட லிங்கம் இருந்த இடத்தில் மன்னன் ஒரு கோயிலைக்கட்டியதாகவும், அதுவே இந்தக் கோயில் எனவும் கூறுகின்றனர். ஆச்சரியமான செய்தி என்னவெனில் இங்கே உள்ள நந்தியெம்பருமானுக்கும் குதிரை முகமாய் இருக்கிறது.

அதற்குக் காரணம் முன் பிறவியில் செய்த பாவத்தால் குதிரை முகத்தோடு பிறந்த மன்னன் மகளின் பாவத்தை ஈசன் நந்தியை ஏற்க வைத்ததாகவும், அதன் காரணமாகவே நந்திக்குக் குதிரை முகம் என்றும் சொல்லுகின்றனர். இந்தக் கோயிலின் காவலுக்கு இரு பைரவர்கள் இருக்கின்றனர். கால பைரவர் வழக்கமான நாய் வாகனத்தோடும், வீர பைரவர் வாகனம் இல்லாமலும் காட்சி அளிக்கின்றனர். கைலாய நாதர் இங்கே குரு அம்சமாக வழிபடப் படுகின்றார். அதனால் அவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை நிவேதனம் செய்யப் படும் வழக்கம் இருக்கிறது. அம்பாள் பெயர் சிவகாமி அம்மை. அம்பாளுக்குத் தனிச் சந்நிதி உண்டு. மற்றப் பரிவார தேவதைகளில், இரட்டை விநாயகர்கள், சூரியன், அதிகார நந்தி, சப்தகன்னிமார், பஞ்ச லிங்கம், நாயன்மார்கள் வள்ளி, தெய்வானையோடு சுப்ரமணியர் போன்றவர்களும் உள்ளனர். சனீஸ்வரரும் தனியாக இருக்கிறார். இந்த ஊரில் தான் சூரனின் கொடுமை தாங்கமுடியாமல் ரிஷி முனிவர்கள் ஈசனிடம் முறையிட்டதாகவும் அதனாலேயே இந்த ஊருக்கு முறப்பநாடு எனப் பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லப் படுகிறது.

இந்த ஊர் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து 20 கிமீட்டருக்குள் இருக்கும். பேருந்துகளில் சென்றால் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிமீட்டருக்கு மேல் நடந்து தான் செல்லவேண்டும். காலை ஏழு மணிக்கு மேல் தான் கோயில் திறக்கப் படுகிறது. பனிரண்டு மணிக்கு நடை சாத்தினால் மாலை ஐந்து மணி அளவில் கோயில் திறந்து ஏழு மணிக்கெல்லாம் நடை சாத்துகிறார்கள். ஆகவே நேரத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டு சென்றால் தான் தரிசனம் செய்ய முடியும்.

Wednesday, November 04, 2009

மன்னிப்பு

தவிர்க்கமுடியாத காரணங்களினால் பதிவுகள் தாமதம் ஆவதற்கு மன்னிக்கவும்.