எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, May 29, 2011

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! சங்கர நாராயணர்!

தமிழ்நாட்டின் சங்கரன் கோயிலைத் தவிர கர்நாடகாவிலும் ஸ்ரீசங்கரநாராயணர் கோயில் ஒன்று உண்டு. கர்நாடகா மாநிலம் தாவன்கெரே மாவட்டத்தில் ஹோஸ்பெட் அருகே துங்கபத்ரா நதிக்கரையில் உள்ளது ஹரிஹர் என்னும் ஸ்தலம். பெங்களூரில் இருந்து சுமார் 300கி.மீட்டர் தூரத்திலுள்ள இத்தலத்தில் மூலவர் ஸ்ரீசங்கரநாராயணராய்க் காட்சி அளிக்கிறார். சிவன் காட்சி தரும் வலப்பக்கம் உமை அன்னையும், திருமால் காட்சி அளிக்கும் இடப்பக்கம் ஸ்ரீலக்ஷ்மி தேவியும் இடம் பெற்றுள்ளனர். இந்தக் கோயில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னர்களால் கட்டப்பட்டது. இதைக் கூஹாரண்யம் என அழைத்ததாய்க் கேள்விப் படுகிறோம். இதைக் குறித்த ஒரு தலபுராணக் கதை கீழே.


கூஹாசுரன் கடும் தவத்தால் எவராலும் வெல்ல முடியாத வரங்களைப் பெற்று அனைவரையும் துன்புறுத்த ஆரம்பித்தான். இவனை சம்ஹாரம் செய்ய வேண்டி விஷ்ணுவோடு இணைந்த வடிவாக தோன்றி அசுரனை அழித்தாராம் ஈசன். ஆகவே இந்த ஊருக்கே ஹரிஹர் என்ற பெயர் ஏற்பட்டதாய்ச் சொல்கின்றனர். தக்ஷிண கைலாயம் எனப் பெயர் பெற்றிருக்கிறது இந்த ஊர். அதோடு சிவமோகா எனப்படும்ஷிமோகாவுக்கு அருகிலுள்ள கூடலி என்னும் ஊரில் துங்காவும் பத்ராவும் சங்கமம் ஆவதையும் துங்கை திருமாலின் அம்சம் எனவும் பத்ரா ஈசனின் அம்சம் எனவும் கூறுகின்றனர். சங்கரநாராயண அம்சமாகத் தோன்றும் திருமேனியில் வலப்பக்கம் சிவனாய்க் காட்சி அளிக்கும் பாகத்தில் முகம் நெற்றிக்கண்ணில் பாதியைக் கொண்டு உக்கிரமாயும், இடப்பக்கம் உள்ள திருமாலின் முகம் அதிசுந்தரமாக சாந்தமாகவும் காட்சி அளிக்கும். வலக்கரமோ மழுவைத் தாங்கியும், இடக்கரம் சங்கு, சக்கரத்தோடும் திகழும், அதே நேரம் சிவ பாகம் புலித்தோலை உடுத்து வெண்ணிறமாகவும், விஷ்ணு பாகம் கருநீல நிறத்தோடு மஞ்சள் பட்டாடை உடுத்தியும் காணப்படும்.

முன்னைப் பழம்பொருளுக்கும், மூத்த பழம்பொருளான பரம்பொருளுக்கு ஒரே திருமேனியில் இரண்டு உருவம் இருக்கின்றன. ஈசனிடமிருந்து அவரது அருளாய் வெளிப்படும் சக்தியின் புருஷாகார வடிவையே திருமால் என்கிறோம். ஆகவே சங்கரநாராயணர் உருவின் சிறப்பே ஹரியும், சிவனும் ஒன்று என்பதைக் குறிப்பது தான். இந்தத் திருவடிவின் வலப்பக்கம் வாகனமாய் ரிஷபமும், இடப்பக்கம் கருடனும் காணப்படும். இந்தச் சங்கரநாராயணர் திருக்கோலத்தைத் திருஞான சம்பந்தர் , “பாதியா உடல் கொண்டது மாலையே! மாலும் ஓர் பாகம் உடையார்” என்றெல்லாம் போற்றிப்பாட, அப்பரோ, “திருமாலும் ஓர் பாகத்தின் குடமாடி இடமாகக் கொண்டார்” எனப் போற்றுகிறார். ஆழ்வார்களின் திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பொய்கையாழ்வார் போன்றோர் இந்த அரிய திருக்கோலத்தைப் போற்றிப் பாடி மகிழ்ந்திருக்கின்றனர்.


திருமங்கையாழ்வார், “பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து”, என ஆரம்பித்தும், மலைமங்கை தன் பங்கனை பங்கில் வைத்துகந்தான்”, என்றும் பாட, பேயாழ்வாரோ, திருவேங்கடத்தின் பெருமானைச் சங்கரநாராயணராய்க் கண்டு மகிழ்ந்திருக்கிறார்.

“தாழ் சடையும் நீள்முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால்-சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து.”

என்று கூறுகிறார் பேயாழ்வார்.

Wednesday, May 11, 2011

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! சங்கரநாராயணர்!

உமா மகேசருக்கு அடுத்து சங்கரநாராயணரைப் பார்க்கலாம். அரியும், சிவனும் ஒண்ணு, அறியாதார் வாயிலே மண்ணு என்பது ஒரு வழக்கு. அது போல் சிவன், விஷ்ணு என்பதெல்லாம் நம் செளகரியத்திற்காகத் தான். ஒரே அம்மாவே எத்தனை அவதாரங்கள் எடுக்கிறாள்? அவள் தாய், தந்தையருக்கு மகள், சகோதர, சகோதரிகளுக்கு சகோதரி, மாமியார், மாமனாருக்கு மருமகள், கணவனுக்கு மனைவி, குழந்தைகளுக்குத் தாய் என எத்தனை பெயர் அவளுக்கு? அப்படி எல்லாம் வல்ல பரம்பொருளும் ஒவ்வொரு சமயங்களில் ஒவ்வொரு பெயருடன் காணப்படுகிறது. என்றாலும் இதிலும் பேதங்கள் பார்க்கிறவர்கள், கற்பிக்கின்றவர்கள் உண்டே! அப்படித் தான் சங்கனுக்கும், பதுமனுக்கும் தோன்றியதாம். இவ்வுலகத்துப் பிரஜைகளுக்கெல்லாம் பிரஜாபதியான காச்யபரின் நாக வம்சத்துப் பிள்ளைகளான வாசுகி, ஆதிசேஷன் இருவரும் முறையே சிவனின் ஆபரணமாகவும், விஷ்ணுவின் படுக்கையாகவும் ஆகும் பேறைப் பெற்றனர். இவர்களின் வழியே வந்த அஷ்டமாநாகங்களில் இருவரான சங்கனுக்கும், பதுமனுக்கும் சகல சாஸ்திரங்களிலும் பாண்டித்தியமும், பரிச்சயமும் இருந்தாலும், சங்கனுக்கு சிவனிடமும், பதுமனுக்கு விஷ்ணுவிடமும் ஈடுபாடு அதிகம் இருந்தது. அதற்கேற்ப வாசுகி மூலம் சிவதீக்ஷை பெற்றான் சங்கன், ஆதிசேஷன் மூலம், நாராயண மந்திர உபதேசம் பெற்றான் பதுமன்.

ஆனாலும் இருவரும் தங்கள் தெய்வம் தான் உயர்ந்தது என்ற எண்ணத்திலேயே இருந்து வந்தார்கள். இது குறித்துப் பலரிடமும் கருத்துக் கேட்டனர். யாராலும் தெள்ளத் தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை. ஒருவர் சிவனைப் பரம்பொருள் என்றால் அதை பதுமன் ஒத்துக்கொள்ள மாட்டான், ஒருவர் விஷ்ணுவைப் பரம்பொருள் என்றால் அதை சங்கன் ஏற்க மறுத்தான். ஆகவே இருவரும் தேவர்கள் தலைவன் ஆன இந்திரனிடம் போய்த் தங்கள் வழக்கை முன் வைத்தனர். இந்திரனுக்கும் இந்த வழக்கைத் தீர்க்க முடியாமல் தங்கள் குருவை நாட, அவர் கூறினார்: இருவரும் ஒருவரே. ஈசன் தன் மேனியின் இடப்பாகத்தில் விஷ்ணுவுக்கும் இடம் அளித்துள்ளார்; இந்த வடிவைக் குறித்த விளக்கத்தை உமாதேவிக்கும் கூறி அருளினார். இது ஞானம், செல்வம் இரண்டையும் தரும் வடிவம் எனக் கூறி உள்ளார். அன்னையானவள் அந்த வடிவைக் காண விரும்ப, கடும் தவம் இருந்தாலொழிய இத்தகையதொரு அற்புதக் காட்சியைக் காண முடியாது என ஈசன் கூறினார். அன்னையும் பூலோகத்தின் தென்பாகத்தில் பொதியமலைச்சாரலில் உள்ள புன்னை வனம் ஒன்றுக்குச் சென்று தவம் இருக்கலானாள். அங்கே தேவர்கள் அனைவரும் மரங்களாக மாறி வந்து அன்னையின் வழிபாட்டுக்கும், தவத்துக்கும் தேவையான பூக்கள், பழங்கள், தேன் போன்றவற்றைக் கொடுக்க தேவலோகத்து மாந்தர்களோ பசுக்களாக மாறிப் பாலைச் சொரிந்தனர். அக்னி விளக்காக மாற, வாயு தன் இனிமையான காற்றினால் அந்த இடத்தைச் சுத்தம் செய்து கொடுத்தான்.

கடும் தவத்தின் பின்னர் அன்னைக்கு ஒரு ஆடிமாதப் பெளர்ணமி நன்னாளில் ஈசன் சங்கரநாராயணராகக் காட்சி அளித்தார். நீங்களும் அத்தகைய தவம் இருந்தால் அந்தக் காட்சியைக் காணலாம். என்று தேவகுரு சங்கனுக்கும், பதுமனுக்கும் எடுத்துக் கூறினார். இருவரும் புன்னைவனம் வந்து தவம் இருந்தனர். தவம் இருந்த அவர்களுக்கு ஈசன் சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார். வலப்பாகம் முழுதும் சிவவடிவிலே தலையிலே கங்கையும் சந்திரனும் காட்சி அளிக்க, காதில் நாகாபரணத்தோடும், நெற்றியின் ஒரு பாதியில் திருநீறும், கையில் மழுவை ஏந்திய வண்ணம், கொன்றைமலர் சூடிக்கொண்டு, பொன்னாலாகிய பூணூல் தரித்துக்கொண்டு, அரையில் புலிக்கச்சையுடன், காலில் நாகாபரணமான வீரக் கழலோடும்

இடப்பாகத்தில் நெற்றியில் நீலமணிக் கஸ்தூரிப் பொட்டும், சிரசில் ரத்தினக் கிரீடத்துடனும், காதில் அழகின மீன்வடிவ மகரகுண்டலத்தோடும், கையில் சங்கை ஏந்திக்கொண்டும், துளசிதளங்களால் ஆன மாலை தரித்துக்கொண்டும், இடுப்பில் அழகிய மஞ்சள் வண்ணப் பட்டுப் பீதாம்பரத்தோடும், காலின் பொன்னால் ஆன வீரக் கழலோடும் அழகிய கோலத்தில் இளமுறுவல் ததும்பக் காட்சி அளிக்கிறார்.

Sunday, May 01, 2011

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! உமா மகேசர், சீர்காழி தொடர்ச்சி!

 
Posted by Picasa
இந்தச் சிற்பம் பிரபலமான திருப்பனந்தாள் காசிமடத்தின் தூணில் காணப்பட்டது. இதிலே ஈசன், அம்பிகையோடு ரிஷபத்தில் அமர்ந்து தரிசனம் கொடுக்கும் காட்சி அற்புதமான சித்திரமாய்க் காண முடிகின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக சீர்காழியின் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் உள்ள கட்டுமலையின் நடுப்பகுதியில் தோணியப்பராகக் காட்சி தருபவரும் உமாமகேசரே என்கின்றனர். சீர்காழிக்குப் போய்விட்டு வந்து பல மாதங்கள் ஆகியும் அந்தக் கோயில் குறித்த விபரங்களை இன்னமும் பகிர்ந்து கொள்ளவில்லை. இப்போது இந்தச் சந்தர்ப்பத்தில் கூறுகிறேன். சீர்காழி என்ற உடனே நம் அனைவருக்கும் திருஞானசம்பந்தர் தான் நினைவில் வருவார் இல்லையா?? இங்கே தான் ஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் கொடுத்த நிகழ்வு நடந்தது. வியாசரின் மகன் சுகப்பிரம்மம் எப்படிப் பிறவி ஞானியோ அவ்வாறே ஞானசம்பந்தரும் பிறவி ஞானி ஆவார். மேலும் இவரைக் குமரக் கடவுளின் திரு அவதாரம் என்றும் கூறுவார்கள். இப்போ முதலில் பிரம்மபுரீஸ்வரரைப் பார்ப்போம். சீர்காழி மிகப் பழமையான ஊராகும். இங்கே ஈசன் கட்டுமலையில் காட்சி அளிக்கிறான். கீழே ஒரு சந்நிதி, கட்டுமலையில் முதலில் ஒரு சந்நிதி, அதன் மேலே இன்னொரு சந்நிதி. கீழே இருக்கும் சந்நிதியில் ஈசன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி அளிக்கின்றார். கட்டுமலையின் நடுவே தோணியப்பர், உமாசகிதராகக் காட்சி அளிக்கிறார். மேலே சென்றால் சட்டைநாதராகக் காட்சி அளிக்கிறார். இந்தச் சட்டைநாதர் வரலாறும் ஆச்சரியமான ஒன்று.

நீதி நெறி வழுவாமல் மஹாபலிச் சக்கரவர்த்தி ஆண்டபோது அவன் இந்திரபதவி அடைந்துவிட்டால் சரியாக இருக்காது என்ற எண்ணத்திலும், மஹாபலிக்கு இருந்த அளவு கடந்த ஆணவத்தை அழிக்கவும், விஷ்ணு வாமனனாக அவதரித்துத் திரிவிக்கிரமனாக மாறி அவனைப் பாதாளத்தில் தள்ளிய வரலாறு அறிவோம். மஹாபலிக்குச் சிரஞ்சீவிப் பட்டம் கொடுத்தாலும், விஷ்ணுவிற்கு இந்த மாதிரியான ஒரு பக்தனைப் பாதாளத்தில் தள்ளியது வருத்தத்தைக் கொடுத்தது. அதன் தோஷமும் அவரைப் பீடித்தது. விஷ்ணுவின் தோலைச் சட்டையாக அணிந்தார் ஈசன். அதுவும் பைரவக் கோலத்தில் இருக்கையில். அஷ்டபைரவர்களின் சக்தியும் சேர்ந்த ஒரே பைரவராகச் சட்டைநாதராகக் காட்சி அளித்தார். ஸ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மியோ மஹாவிஷ்ணு எங்கேயோ காணாமல் போய்விட்டாரோ எனக் கவலை கொண்டு ஆபரணங்கள் பூணாமல், தலைவாரிப் பூச்சூடாமல் விஷ்ணுவையே எண்ணி, எண்ணி வருந்தினாள். அவளிடம் தான் வேறு, விஷ்ணு வேறல்ல எனக் காட்டினாராம் ஈசன். இங்கே அம்பிகையே மஹாலக்ஷ்மி சொரூபமாக சக்தி பீடத்தில் அமர்ந்திருப்பதாய் ஐதீகம்.

கோயிலினுள் சென்றதும் ஆஸ்தான மண்டபத்தைக் கடந்ததும் கீழே பிரம்ம புரீஸ்வரர் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கி திருக்குளத்தின் அருகே காண முடியும். வலப்பக்கம் கையில் கிண்ணம் ஏந்தி திருஞானசம்பந்தர் குழந்தை வடிவில் காட்சி கொடுப்பார். கோயிலின் வடப்பக்கம் அமைந்திருக்கும் திருநிலைநாயகி அம்பிகை சந்நிதிக்கு அருகே காணப்படும் பிரம்ம தீர்த்தத்தில் தான் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்த நிகழ்வு நடைபெற்றது. கோயிலைச் சுற்றி வருகையில் வெளிப் பிரகாரத்தில் கோயிலின் அறநிலையத் துறை ஊழியரின் அலுவலகம் எதிரே கட்டுமலை காணப்படும். இந்தக் கட்டுமலையின் காரணமும் சீர்காழியின் வரலாறும் அடுத்துக் காணலாம்.

கட்டுமலை உருவான வரலாறு: ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தங்கள் இருவரில் யாருக்கு வலிமை அதிகம் என்ற போட்டி ஏற்பட ஆதிசேஷன் தன் முழு உருவால் கைலையை மூட, வாயுவால் அதைத் துளிக்கூட அசைக்க முடியவில்லை. பெரும்பிரயத்தனம் செய்தும் அசைக்க முடியாத வாயு, தேவர்களை வேண்ட, அவர்களும் ஆதிசேஷனிடம் தலையைச் சற்றே தூக்குமாறு கூற, ஒரு தலையை மட்டும் ஆதிசேஷன் தூக்க, அந்த இடத்தை மட்டும் வாயு தன் ஆற்றலால் பெயர்த்தெடுத்தான். அந்தப் பெயர்த்தெடுத்த மலைப்பாகத்தை 20 பறவைகள் தூக்கி வந்தனவாம். அவை தான் இங்கே கட்டுமலையாக உருப்பெற்றது என்று தலவரலாறு கூறுகிறது. உரோமச முனிவரும் ஈசனை வேண்டிக்கொண்டாராம். தென் திசை மக்கள் மகிழ்வுற அம்பிகையோடு திருக்கயிலையில் தரிசனம் கிடைப்பது போல் எழுந்தருளவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாராம். ஆகவே இங்கே ஈசன், அம்பிகை மட்டுமல்லாது, விஷ்ணு, மஹாலக்ஷ்மி, பிரம்மா, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவரோடும் இங்கே ஒன்று சேரக் காட்சி அளிக்கின்றார். இத்தகையதொரு அபூர்வ தரிசனம் மற்றெந்தக் கோயில்களிலும் கிட்டாத ஒன்று.
அதோடு பைரவர்களும் அஷ்டபைரவர்களாக இங்கே எழுந்தருளி இருக்கின்றனர். அசிதாங்க பைரவர், ருரு பைரவர், க்ரோத பைரவர், சண்ட பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர்,பீஷ்ண பைரவர், அகால பைரவர் என எட்டு பைரவர்களும் இங்கே உள்ளனர். தேய்பிறை அஷ்டமி திதியில் சிறப்பு வழிபாடும் உண்டு. இந்த பைரவர்கள் சந்நிதியில் ஆண்கள் சட்டை அணிந்து செல்லக் கூடாது. கீழிருக்கும் சிவன் கோயில் பிரஹாரத்தில் ஓர் இடத்தில் இருந்து பார்த்தால் உயரே கட்டுமலை மேலே குடியிருக்கும் சட்டை நாதர் தெரிகிறார். பிரஹாரத்தில் அந்த இடத்தில் சட்டை முனியின் ஜீவசமாதி இருப்பதாகவும், இதன் பீடத்தின் மேலிருந்தே சட்டைநாதரும் தெரிகிறார் என்றும் சொல்கின்றனர். இந்தச் சட்டைநாதரைத் தரிசனம் செய்வது அவ்வளவு எளிதல்ல. இரவு பனிரண்டு மணிக்குத் தான் தரிசனம் நடைபெறும் எனக் கூறுகின்றனர். இரவு பத்து மணி அளவில் கீழிருக்கும் ஜீவசமாதியின் பீடத்திற்கு அபிஷேஹம் முடித்துப் பின்னர் மேலிருக்கும் சட்டைநாதருக்கு இரவு பனிரண்டு மணிக்குப் புனுகு சாத்தி நெய்வடை மாலையும், பாசிப்பருப்புப் பாயாசமும் நிவேதனம் செய்கின்றனர்.

இதன் வேறு பெயர்கள்: பிரம்மபுரம், கழுமல வளநகர், வேணுபுரம், புகலி, தோணிபுரம், வெங்குரு, சிரபுரம், பூந்தராய், புறவம், சண்பை, ஸ்ரீகாளிபுரம் என்ற பெயர்களாலும் அழைக்கப் படுகிறது. பிரம்மன் பூஜித்ததால் பிரம்மபுரம், மூங்கில் வடிவமாய் ஈசன் தோன்றியதால் வேணுபுரம், தேவர்களுக்குப் புகலிடம் கொடுத்தமையால் புகலி, தோணியில் ஈசன் வந்ததால் தோணிபுரம், வியாழபகவான் வழிபட்டதால் வெங்குரு, காளியும், காளிங்கனும் வழிபட்டதால் ஸ்ரீகாளிபுரம், வராஹ மூர்த்தி வழிபட்டதால் பூந்தராய், ராகு வழிபட்டதால் சிரபுரம், சிபிச்சக்கரவர்த்தி வழிபட்டதால், புறவம், கண்ணன் வழிபட்டதால் சண்பை எனவும் பெயர்க்காரணங்கள் ஆகும்.