எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, September 23, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நீல கண்டர்

அடுத்து நாம் காணப் போவது நீலகண்டர். விடமுண்ட கண்டன். விஷத்தை உண்பது என்பது எளிதல்ல. ஆனால் மகேச்வரன் அதையும் உண்டான். உலக மக்கள் உய்யுமாறு அவர்கள் நலனுக்கெனத் தான் விஷத்தை உண்டான். நம்மிடம் எப்போதுமே மரண பயம் உண்டு. அதைத் தவிர மற்ற சில பயங்களும், கவலைகளும் உண்டு. எதற்கேனும் கவலைப்படுவோம். இது இல்லையே அது இல்லையே என ஏங்குவோம். இவை அனைத்தையும் வென்றாலேயே நாம் சுகித்திருக்க முடியும். ஆனால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை நம்மால். சாதாரணமான பயங்களையும், கவலைகளையும், ஏக்கங்களையும், விருப்பங்களையும் விட நம் அனைவரையும் ஆட்டிப்படைப்பது மரணபயமே. பிறந்த குழந்தை கூடப்பாதுகாப்பை நாடும். உயிரின் இயல்பு அதுவே. இந்த மரணத்தை வெல்லவே யோகியர்களும், சித்தர்களும், ஞானிகளும் சாதனைகள் செய்து வருகின்றனர். பலதரப்பட்ட தெய்வீக மூலிகைகளின் மூலம் சித்தர்கள் தங்கள் உடலை வஜ்ரம் போல் செய்துகொண்டால், யோகியர்களோ யோக சாதனைகள் மூலம் அவற்றை அடைகின்றனர்.

ஆனால் தேவர்களோ அமுதம் உண்டதன் மூலம் அமரத்துவம் பெற்றனர் என்பதைப் படித்திருக்கிறோம். தேவர்களுக்கும் ஆசாபாசங்கள் உண்டு. நம்மைப்போலவே அவர்களும் என்றாலும் அமரத்துவம் அவர்களை நம்மிலிருந்து வேறுபடுத்திக்காட்டும். இத்தகைய நிலையை அவர்கள் எவ்வாறு அடைந்தார்கள் என்பதைப்பார்ப்போமா! பிரஜாபதியான காச்யபரின் குழந்தைகளே தேவர்களும், அசுரர்களும். இவ்வுலக நியதிக்கேற்ப சகோதரச் சண்டை எப்போதும், எந்நேரமும். தேவர்கள் அசுரர்களுடனான சண்டையில் ஒரு சமயம் ஜெயித்தாலும் தோல்வியும் வாட்டியது. மேலும் எப்படிப்பட்ட ஆயுதங்களைப் பிரயோகித்தாலும் சிதையாத உறுதியான தேகம், இறவாப் பெருநிலை அடையவேண்டும் என யோசித்தனர்.

பிரஜாபதிக்கெல்லாம் மூலகர்த்தாவான பிரம்மனிடம் சென்று தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர். அவரோ மஹாவிஷ்ணுவைப்பிரார்த்திக்கச் சொன்னார். அவரது திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க வேண்டும் என்றார். அதற்கு மஹாவிஷ்ணுவின் உதவி இல்லாமல் இயலாது என்றார். அமிர்தம் கிடைத்ததோ அளவற்ற வலிமையும், இறவா நிலையும் பெறலாம் என ஆலோசனை கூறினார். தேவர்கள் அனைவரும் மஹாவிஷ்ணுவிடம் சென்று பாற்கடலைக்கடைய வேண்டும் என உதவி கேட்டு நின்றனர். மஹாவிஷ்ணுவோ பாற்கடலைத் தேவர்களால் மட்டும் தனியாய்க் கடையமுடியாது என்றும், அசுரர்களையும் உதவிக்கு அழைக்குமாறு கூறினார். அசுரர்களும் தேவர்களுக்குக் கிடைக்கப்போகும் அமிர்தத்தில் பங்கு கொடுக்குமாறு ஆகிவிடுமே என தேவர்கள் பயந்தனர். மஹாவிஷ்ணுவோ தைரியமாய் அழைக்குமாறும், அசுரர்கள் அமிர்தம் உண்ணாமல் இருப்பது தம் பொறுப்பு எனவும் உறுதி கொடுத்தார்.

அதன் மேல் அசுரர்களையும் அழைத்தனர். இருவரும் சேர்ந்து பாற்கடலைக் கடைய முடிவு செய்தனர். மத்து வேண்டுமே. மந்திரமலை மத்தானது. ஆனால் மந்திரமலையைப் பெயர்க்க முடியவில்லை. மீண்டும் மஹாவிஷ்ணு உதவிக்கு வந்தார். கருடன் மூலம் மந்திரமலை பாற்கடலுக்கு வந்து சேர்ந்தது. மத்தைச் சுற்றக் கயிற்றுக்கு எங்கே போவது?? இவ்வளவு பெரிய மலைக்குச் சாதாரணக் கயிறு போதாதே? யோசித்துவிட்டு தங்கள் சகோதர முறையாகும் அஷ்டமா நாகங்களின் ஒன்றான வாசுகியைப் போய்க் கேட்டனர். வாசுகியும் கயிறாக இருக்கச் சம்மதம் கொடுத்தது. வாசுகியை மந்தரமலையைச் சுற்றிக் கட்டித் தலைப்பக்கம் தேவர்களும், வால் பக்கம் அசுரர்களும் நிற்க அசுரர்களோ பெரும் வீரர்களும் தேவர்களை வென்றவர்களும் ஆன தாங்கள் வால்பக்கம் நிற்பது தங்கள் வீரத்துக்கு இழுக்கு எனக் கருத, மாற்றி நின்று கொண்டனர். கடைய ஆரம்பித்தனர். ஆனால் என்ன இது??

மந்தரமலை உள்ளே அழுந்தியது. அசையவே இல்லை. சுற்றிச் சுற்றி வரவேண்டாமோ? மாறாக தேவர்களுக்கும், அசுரர்களுக்குமே தலை சுற்ற ஆரம்பித்தது. யோசித்தனர். அடியில் ஏதேனும் வைத்து மலையைத் தாங்கிப் பிடித்தால் மலை உள்ளே அழுந்திக்கொள்ளாது என்ற யோசனை உருவாக என்ன செய்யலாம் என மீண்டும் யோசனை! இவ்வளவு பெரிய மலையை யார் தாங்குவார்கள்?? மஹாவிஷ்ணுவே சரணம்! பலத்த யோசனைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் பின்னர் ஆமை உருவில் மந்தரமலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு மஹாவிஷ்ணு பாற்கடலுக்கு அடியே செல்ல மீண்டும் கடைய ஆரம்பித்தனர். நாட்கள் சென்றன.

ஆனால் பாற்கடலில் இருந்து எதுவும் வரவில்லை. பாற்கடலோ பொங்கித் ததும்ப ஆரம்பித்தது. வாசுகிக்கோ வலி பொறுக்க முடியவில்லை. தனது ஆயிரம் வாய்களாலும் விஷத்தைக் கக்கப் பாற்கடலில் இருந்தும் விஷம் பொங்கிப் பிரவாஹித்தது.