எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, July 28, 2014

துலுக்க நாச்சியார் யார்?

நம்ம ஊர் சுத்தி நம்பெருமாள் ஊர் சுத்தப் போறதுக்கு முன்னாடி ஒருதரம் அவரை முகமதியப் படைகள் தூக்கிக் கொண்டு டெல்லிக்கே போயிட்டாங்க.  இன்னும் சிலர் மாலிக்காஃபூர் படை எடுப்பின் முதல் முறை நடந்ததாகவும் சொல்கின்றனர்.  கி.பி 1311 ஆம் ஆண்டு இது நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்போ நம்பெருமாளின் பெயர் அழகிய மணவாளர் என்று தான் இருந்திருக்கிறது.  உண்மையிலேயே அவ்வளவு அழகு தான் இவர். ஒவ்வொருத்தரையும் தனித்தனியாகப் பார்த்துக் கண்ணன் சிரித்தான்; கண்ணன் ஒவ்வொருத்தரையும் விசாரித்தான் என்று கண்ணன் கதையில் எழுதும்போதெல்லாம் இவர் தான் நினைவில் வருவார்.  அப்படித் தான் இவரும்.  வீதி வலம் வந்தால் கூட நம்மைத் தனியாப் பார்த்துப் பேசறாப்போல் இருக்கும். கண்ணில் தண்ணீர் வந்துடும்.  அதிலும் அந்தச் சிரிப்பு அதில் மயங்காதவர் யார் இருக்காங்க?

அப்படித் தான் மயங்கிட்டா சுல்தானின் பெண்ணும்.  சுரதாணி/சுரதானி என்னும் பெயர் கொண்ட அந்தப் பெண் அரங்கனைத் தினமும் குளிப்பாட்டி, ஆடை, அலங்காரங்கள் செய்து தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருந்தாள். விக்ரஹத்தின் உண்மையான மதிப்பு அவளுக்குத் தெரியாவிட்டாலும் அதன் மேல் மிகுந்த பாசம் கொண்டிருந்தாள்.  ஒரு கணமும் தன்னை விட்டுப்பிரியாத வண்ணம் எப்போதும் அதனோடு இருந்து வந்தாள். இங்கே அரங்கன் இல்லாமல் தவித்த மக்கள் செய்வது என்னவெனத் தெரியாமல் திகைத்து இருந்தனர்.  அரங்கன் இல்லாததால் விழாக்கள் நடைபெறவில்லை.  ஊரே வெறிச்சோடி இருந்தது.

அருகிலுள்ள பிக்ஷாண்டார் கோயிலில் நம்பெருமாளிடம் பக்தி பூண்ட அடியாள் ஒருத்தி இருந்தாள்.  அவள் தினம் தினம் அரங்கன் முன்னிலையில் ஆடிப் பாடி மகிழ்வித்து வந்தாள்.  இப்போது அரங்கனைக் காணாமல் அவளுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது.  மாலிக்காஃபூரின் படைகள் சென்ற வழியை விசாரித்துக் கொண்டு சென்றவள் டெல்லியை அடைந்தாள். அங்கே சுல்தானின் மகள் சுரதானியிடம் விக்ரஹம் இருப்பதையும், அவள் அதை ஒருகணமும் பிரியாமல் இருப்பதையும் தெரிந்து கொண்டாள்.  சுல்தானிடம் நேரடியாகப் போய்க் கேட்காமல் அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்து சுல்தானுக்கு ஆடல், பாடல் கேளிக்கைகளில் விருப்பம் அதிகம் எனப் புரிந்து கொண்டாள்.

திரும்பவும் ஶ்ரீரங்கம் வந்து கோயில் மேலாளர்களுடன் கலந்து ஆலோசித்து ஒரு நாட்டியக் குழுவைத் தயார் செய்தாள்.  கிட்டத்தட்ட 60 பேர்கள் இருந்த அந்தக் குழுவும் டெல்லியை அடைந்தது.  அங்கே சுல்தானைக் கண்டு ஆடல், பாடல்களால் மகிழ்வித்தது.  இந்த ஆட்டத்தை "ஜக்கிந்தி" என்று சொல்கின்றனர். பாதுஷா அவர்களுக்குப் பரிசில்கள் பலவும் அளிக்க, நாட்டியக் குழுவினரோ எங்கள் அரங்கன் தான் எங்களுக்கு வேண்டும் என்று சொல்ல.  விசாரித்த சுல்தான் தன் மகளிடம் இருப்பதை அறிந்து கொண்டான்.  மகள் அதை விட்டுப் பிரிய மாட்டாள் என்றும், அவளுக்குத் தெரியாமல் அதை எடுத்துச் செல்லும்படியாகவும் கூறினான். அவள் தூங்குகையில் அதை எடுத்து வந்தார்கள் என்றும், அவளை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு எடுத்தார்கள் என்றும் இருவிதமான கூற்றுகள் நிலவுகின்றன.  எப்படியோ அரங்கன் ஶ்ரீரங்கத்துக்குக் கிளம்பி விட்டார்.

ஆனால் சுரதானி மயக்கம் தெளிந்து எழுந்தவள் அரங்கனைக் காணாமல் பித்துப் பிடித்தவள் போல் புலம்ப ஆரம்பித்தாள்.  நாளுக்கு நாள் மோசம் ஆகும் மகளின் நிலை கண்டு வருந்திய சுல்தான் அரங்கனைத் திரும்பக் கொண்டு வரும்படி ஒரு படையை அனுப்பினான்.  படை வீரர்கள் செல்வதைத் தெரிந்து கொண்ட சுரதாணி தானும் அவர்களுடன் சென்றாள்.  படை வீரர்கள் தொடர்வதைத் தெரிந்து கொண்ட நாட்டியக் குழுவினர் மூன்றாகப் பிரிந்து ஒரு குழுவினர் அரங்கனைத் திருமலைக் காட்டில் ஒளித்து வைத்ததாகவும் சொல்கின்றனர்.  ஶ்ரீரங்கம் வந்த சுரதானி அங்கே அரங்கன் இல்லாமையால் மனம் வருந்தி மயங்கி விழுந்தவள் அங்கேயே உயிரை விட்டு விட்டாள்.  அவள் உடலில் இருந்து கிளம்பிய ஜோதியை அரங்கன் விஸ்வரூபமாக காட்சி கொடுத்து அவளைத் தன்னுடன் ஐக்கியம் ஆக்கிக் கொண்டான்.


பின்னர் ஒரு சோழமன்னன் கனவில் தோன்றிய அரங்கன் சுரதானிக்கு ஒரு சந்நிதி அமைக்கும்படி சொன்னான்.  அதன்படியே கருவறைக்கு வடகிழக்கு மூலையில் அர்ஜுன மண்டபத்தில் ஒரு சித்திரம் எழுதி வைத்து சந்நிதியை ஏற்படுத்தினான்.  தினமும் முகலாயர் வழக்கப்படி அரங்கனுக்குக் கைலி உடுத்தப்பட்டு, ரொட்டி, வெண்ணை, காய்ச்சாத பால் போன்றவற்றை நிவேதனம் செய்கின்றனர்.  அகில், சந்தனம் தூவி புகை போடப்படும். வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தில் அர்ஜுன மண்டபத்தில் அரங்கன் எழுந்தருளுகையில் சுரதானிக்கு நன்கு தெரியும்படி, "படியேற்ற சேவை"  என்னும் சேவை தோளுக்கு இனியானை நன்கு தூக்கிப் பிடித்து சுரதானிக்குக் காட்டிப் பின்னரே அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளச் செய்கின்றனர். 

Saturday, July 26, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

அரங்கனைக் கவனித்துப் பல மாதங்கள் ஆகிவிட்டன.  கோயிலுக்குப் போயும் பல மாதங்கள் ஆகிவிட்டன. :( கடைசியாய்ப்போனது  மார்ச் மாதத்தில் என நினைக்கிறேன். ஆனாலும் அரங்கன் குறித்த சிறு குறிப்புக் கிடைத்தாலும் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.  சமீபத்தில் அப்படிக் கிடைத்த சில தகவல்களின் தொகுப்புக்களை இங்கே வழங்குகிறேன்.  அரங்கன் பயணமும் பாதியில் நிற்கிறது.  அரங்கன் செல்லும் வழியில் துளசிதளங்களைப் போட்டுச் சென்றார்கள் என்று படித்தோம்.  அதை விரைவில் தொடர்கிறேன். இப்போது சில ஶ்ரீரங்க அதிசயங்கள் குறித்துப் பார்க்கலாம்.  கோயிலில் ரங்கா கோபுரம் வழியாக நுழைபவர்கள் முதலில் காண்பது ஒரு பெரிய மண்டபம்.  அதை ரங்க விலாச மண்டபம் என்பார்கள்.  அதன் நடுவேயே ஒரு சின்ன மண்டபமும் உண்டு.  அதற்கு மேற்கே உள் ஆண்டாள் சந்நிதி உள்ளது.  இந்த உள் ஆண்டாள் மிகவும் சக்தி வாய்ந்தவள் என்றும், இவளிடம் வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்டால் கேட்டது கிடைக்கும் என்றும் சொல்கின்றனர்.

இதைத் தவிர வெளி ஆண்டாள் சந்நிதியும் உண்டு.  இது "தோப்பு ராமன் சந்நிதி" என்னும் பெயரில் முன்னர் இருந்ததாகச் சொல்கின்றனர். இந்த வெளி ஆண்டாள் சந்நிதியில் நம்பெருமாள் ஆடிப்பெருக்கன்று காவிரிக்குச் சீர் கொடுத்துத் திரும்பும்போதும், பங்குனி உற்சவத்தில் உறையூர் சோழகுலவல்லியை மணமுடித்துக் கோயிலுக்குத் திரும்புகையிலும் ஶ்ரீரங்கநாதர் மாலை மாற்றிக் கொண்டே உள்ளே செல்லுவார்.  உள் ஆண்டாள் சந்நிதியில் ஆடிப்பூரம் சமயம் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் முடிந்ததும். உள் ஆண்டாள் சந்நிதி முன் நின்று மாலை மாற்றிக் கொள்வார்.  இந்தச் சிறப்பு ஆடிப்புரத்தின் ஏழாம் திருநாளான திருக்கல்யாணம், யானை ஏற்றம் அன்றும் ஆறாம் உற்சவத்தின் முதல் நாட்களிலும் நடைபெற்று வருகிறது. வெளி ஆண்டாள் சந்நிதி  பல வருடங்கள் முன்னர் காவிரிக்கரைக்கு அருகே இருந்ததாகவும், (அல்லது காவிரி இதுவரை ஓடி இருக்கிறது.) காலப்போக்கில் திருட்டு பயம் காரணமாக இங்கிருந்த உற்சவ விக்ரஹம் மட்டும் ரங்கவிலாச மண்டபத்தில் இருக்கும் ராமர் சந்நிதிக்கு மாற்றப்பட்டு இப்போது உள் ஆண்டாள் சந்நிதி என அழைக்கப்படுகிறது.




இதைத் தவிர தாயார் சந்நிதிக்கு அருகே கோதண்டராமர் சந்நிதிக்குப் பக்கத்தில் கண்ணாடி அறை ஆண்டாள் சந்நிதி இருக்கிறது.  சில முக்கிய உற்சவங்களின் போது நம்பெருமாள் வீதிவலம் முடிந்தோ அல்லது சந்தனு மண்டபம் அல்லது அர்ஜுன மண்டபத்தில் காட்சி கொடுத்த பின்னரோ  இங்கே வந்து தங்குவார்.  இங்கே இருந்தே மறுநாள் உற்சவத்திற்குக் கிளம்புவார்.  திரு ஆடிப் பூரத்தின் போது தினமும் இங்கே ஒவ்வொரு அலங்காரமாகச் செய்திருப்பார்கள்.  பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.  ஒரே ஒரு முறை சென்று பார்த்தோம்.  மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவைக் காட்சிகளைக் காண முடியும்.



கிழக்கே வெள்ளைக்கோபுரம் என அழைக்கப்படும் கோபுரம் காணப்படுகிறது.  இதை வெள்ளைக் கோபுரம் என அழைப்பதாலோ என்னமோ இதிலே வெள்ளை மட்டும் அடித்திருப்பார்கள்.  ஆனால் உண்மைக்காரணம் என்னவெனில் கோயிலை ஆக்கிரமிக்க வந்த துலுக்கப் படைகளில் ஒரு தளபதி மிகவும் மோசமாக நடக்க ஆரம்பித்தான்.  கோயிலையே அழித்துவிடுவானோ என அனைவரும் அஞ்சி இருந்தனர்.  அப்போது வெள்ளையம்மாள் என்னும் நாட்டிய மங்கை அவனை மயக்கி அவனுடன் அன்பாக இருப்பது போல் நடித்து அவனை ஏமாற்றி கோபுரத்தின் மேல் பகுதிக்கு அழைத்துச் சென்றாள்.  அங்கிருந்து அவனைக் கீழே தள்ளிவிட்டுக் கொன்றாள்.  பின்னர் தானும் கீழே விழுந்து உயிர் நீத்தாள்.  இவள் நினைவாகவே வெள்ளைக்கோபுரம் என்று அழைக்கப்படுவதாகச் சொல்கின்றனர்.




முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் (கி.பி 1250) ஆம் ஆண்டு அவன் அரங்கனைச் சேவிக்க வந்தான்.  அரங்கனின் திருவாராதனம் கண்டு வணங்கிக் கொண்டிருந்த அவனுக்கு அரங்கனின் வழிபாட்டில் பயன்படுத்தப்படும் நீரைத் தனியாக ஒரு பாத்திரத்தில் பெய்து வைப்பதற்கான திருப்படிக்கத்தை பட்டாசாரியார்கள் கொண்டு வராமல் மறந்தது தெரிந்தது.  உடனே தன் ராஜக் கிரீடத்தைக் கழற்றி அந்தப் புண்ணிய நீரை ஏந்தினான் மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.  அனைத்து மக்களும் பட்டாசாரியார்களும் மிகவும் மனம் நெகிழ்ந்து அரசனின் பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காக இன்றளவும் அவ்வாறு திருப்படிக்கத்தில் வழிபாட்டு நீரை ஏந்தும்போது, "சுந்தரபாண்டியம் பிடித்தேல்" என்றே அருளப்பாடு நடைபெற்று வருகிறது. இன்னும் இந்த மன்னன் கோயிலில் பல கட்டிடங்களையும் எழுப்பி பல்வேறு விதமான அலங்காரங்களையும் செய்து கொடுத்திருக்கிறான்.  அரங்கன் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, நரசிம்மர் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளி ஆகியவற்றை இவன் தான் கட்டிக் கொடுத்தான்.  ஒரிசாவில் கடக் பிரதேசத்து மன்னனை எதிர்த்துப் போரில் வென்று கொண்டு வந்த பொருட்களை எல்லாம் அரங்கனுக்கு மரகதமாலையாகவும், பொற்கிரீடமாகவும், முத்தாரங்களாகவும், முத்து விதானமாகவும், பொற்பாத்திரங்களாகவும் வழங்கினான்.

எல்லாவற்றையும் விட மேலாக அரங்கனின் தெப்போற்சவத்திற்காகத் தங்கத்திலேயே படகு கட்டிக் கொடுத்தான்.  அதில் தனது பட்டத்து யானையை இறக்கித் தான் ஏறி அமர்ந்த வண்ணம் அருகே இன்னொரு படகை நிறுத்தி இரு படகும் சமமான நீர்மட்டத்துக்கு வரும் வரையில் பொற்காசுகளை நிரப்பிக் கோயிலுக்கு தானமாக வழங்கினான்.


படங்களுக்கு நன்றி கூகிளார்.