எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, November 30, 2011

பேச்சியம்மா! பேச்சியம்மா!


பேச்சி அம்மன் வரலாறு ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி சொல்லப்படுகிறது. இங்கே பேச்சி அம்மன் மன்னனையும், ராணியையும் காப்பாற்றிவிடுகிறாள் என்கின்றனர். எங்க ஊர் மாரியம்மன் கோயிலின் நுழை வாசலில் பல வருடங்களாய் மாரியம்மனுக்குத் துணை இருக்கும் பேச்சி அம்மன் இவள். இவளைப் பற்றிய கதை பல விதங்களில் சொல்லப் படுகிறது. அதில் ஒன்று பெரியாச்சியும், பேச்சியும் ஒருவரே என்பது. இதைப் பலரும் நிரூபித்திருக்கின்றனர். முக்கியமாய்த் தஞ்சை மாவட்டத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூரில் குடியேறிய பலருக்கும் பெரியாச்சி என்ற பேச்சியம்மனே குலதெய்வமாக இருந்து வருவதை திரு நா. கணேசன் சுட்டுகிறார்.

அவர் கொடுத்த சுட்டியின்படி வல்லாளன் என்ற பாண்டிய அரசன் கொடுங்கோலனாக இருந்ததாயும், அவன் மனைவி கர்ப்பவதியாய் இருந்த சமயம், அந்தக் குழந்தை பிறந்தால் கொடுங்கோலனின் குழந்தையும் தன் கொடூரத்தால் இவ்வுலகையே அழிக்கும் என மக்கள் பயந்ததாகவும் கூறப் பட்டுள்ளது. ராணிக்குப் பிரசவ வலி எடுக்க, தக்க மருத்துவம் செய்யவேண்டி அரசன் மருத்துவச்சியின் உதவியை நாடுகிறான். மன்னன் தன் வீரர்களை அனுப்புகின்றான் மருத்துவச்சியைக் கூட்டி வரச் சொல்லி. ஆனால் எல்லாருமே பயப்படுகின்றனர் என்பதோடு வரவும் மறுக்கின்றனர். கோபம் கொண்ட மன்னன் தானே தக்க மருத்துவச்சியை அழைத்துவரச் செல்லுகையில் அவன் எதிரே கடுமையான முகத்தோற்றத்தோடு கூடிய ஓரு பெண்மணி தென்பட்டாள். அவள் தன் பெயரைப் பெரியாச்சி என்று கூறினாள். மன்னன் தேடும் மருத்துவச்சி அவள் தான் என்றாள். ஆனால் உண்மையில் அவள் அசுரர்களுக்கும், துர்தேவதைகளுக்குமான தலைமைக் கடவுள். ஆனால் மன்னனுக்கு இந்த உண்மை தெரியாது. பிரம்மா அசுரர்களையும், தேவர்களையும், மனிதர்களையும் படைத்தபோது தேவர்களும், மனிதர்களும் ஒரே கடவுளரை வணங்கி வர, அசுரர்களும், துர் தேவதைகளும் தங்களுக்கெனத் தனியான கடவுளை வணங்கினார்கள். அத்தகையதொரு பெண் தேவதையே பெரியாச்சி அம்மன் ஆவாள். இதை அறியாத மன்னனும் தன் மனைவியின் பிரசவத்திற்காக அவளை அரண்மனைக்கு அழைத்து வருகிறான்.

பிரசவம் நல்லபடியாக நடக்கிறது. ராணியின் வேதனையைப் பெருமளவு குறைக்கிறாள் பெரியாச்சி. அதோடு குழந்தையைப் பூமியில் பிறக்கும்படியாகவும் விடவில்லை அவள். அதற்குப் பதிலாகக் குழந்தையைத் தன் கரங்களில் ஏந்துகிறாள். பிரசவம் ஆனதும் மன்னனிடம் பிரசவம் பார்த்ததற்குத் தனக்குப் பரிசுகள் தருமாறு கேட்கிறாள் பெரியாச்சி. ஆனால் மன்னனோ, ஒரு சாதாரண மருத்துவச்சியான அவள் ஒரு பேரரசனிடம் பணமும், பரிசும் கேட்டதற்குப் பெரியாச்சியை இகழ்ந்து பேசுகிறான். தர மறுக்கிறான். வைத்தியத்திற்கான செலவையும் கொடுக்க மறுக்கிறான். பெரியாச்சியைத் தன்னுடைய அடிமை என்றும், தான் சொல்வதைக் கேட்டு நடப்பது அவள் கடமை என்றும் உறுதியாகக் கூறுகிறான். கோபம் கொண்ட பெரியாச்சி தன் சுய உருவைக் காட்டுகிறாள். எண்ணற்ற கரங்களோடும், நீண்ட நாக்குடனும், பயங்கரத் தோற்றத்தோடு காட்சி அளித்த பெரியாச்சி மன்னனைக் கீழே தள்ளி அவனைத் தன் கால்களால் மிதித்துக்கொண்டு ராணியைத் தூக்கித் தன் மடியில் போட்டுக்கொண்டு அவள் குடல்களைத் தன் கரங்களால் வெளியே எடுக்கிறாள்.

குடலைத் தன் கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொள்கிறாள். அதைக் கண்ட மன்னன் தன் அன்பு மனைவி பெரியாச்சியின் கரங்களில் சின்னாபின்னமானதைக் கண்டு வருந்துகிறான். ஆனால் பெரியாச்சியோ மன்னனையும் கொன்று விடுகிறாள். அவன் குழந்தையும் இந்த பூமியில் காலை வைக்கா வண்ணம் தன் கரங்களிலேயே ஏந்திக்கொண்டு தடுத்துவிடுகிறாள். கொடுங்கோல் ஆட்சி புரிந்த மன்னனுக்கும், அவனுக்குப் பல விதங்களிலும் துணை போன அவன் மனைவிக்கும், பிறக்கையிலேயே அசுரனாகப் பிறக்கவிருந்த அவன் குழந்தைக்கும் இவ்விதம் பெரியாச்சியின் மூலம் முடிவு கிடைக்க, மக்களுக்கு நன்மை விளைகிறது. இந்தப் பெரியாச்சி வேறு யாரும் இல்லை என்றும் மஹாகாளியின் இன்னொரு அவதாரமே என்றும் கூறுகின்றனர். ஏனெனில் அசுரர்களின் தேவதை என்று கூறப்பட்ட இவள் நாட்டு மக்களுக்காக வேண்டி நன்மையை விளைவித்ததாலும், தன்னுடைய சக்தியை ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்தியதாலும், இவள் அனைவராலும் அன்றிலிருந்து குலதெய்வமாக வணங்கப்பட்டாள் என்றும், குழந்தைப் பேறு அடையவும், குழந்தைப் பேறு அடைந்தவர்களின் குழந்தையைக் காக்கவும், சுகப் பிரசவம் நடக்கவும் இவளைப் பிரார்த்தித்துக்கொள்வது மக்களின் வழக்கமாயிற்று என்கின்றனர்.

ஆனால் தஞ்சையில், கும்பகோணத்தில் வழங்கும் கதை சற்றே மாறுபட்டது. அதை நாளைக் கேட்போம்.

காப்புரிமை: ரமேஷ்குமார்

படத்தில் காணப்படுவது எங்கள் குலதெய்வமான மாரியம்மன் கோயிலில் மாரியம்மனுக்குத் துணையாக வீற்றிருக்கும் பேச்சி அம்மன் சிலை.

Wednesday, November 16, 2011

மாரியம்மா, மாரியம்மா!


மேலே காண்பது எங்கள் பூர்வீக ஊரான பரவாக்கரையில் உள்ள எங்கள் குலதெய்வமான மாரியம்மன். இவளுக்குத் துணையாகப் பேச்சியம்மன் இருக்கிறாள். அவளைப் பற்றிப் பின்னால் பார்க்கலாம்.


மஹாமாரியம்மனைப் பற்றி இப்போது பார்க்கலாமா?? கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன்
கோயிலில் அம்மன் வரலாற்றைப் பற்றிக் கேட்டேன். யாருக்கும் சரியாய்த்
தெரியவில்லை. படங்கள் எடுக்கவும் அநுமதி கொடுக்கவில்லை. திருவிழா வேறு நடந்து
கொண்டிருந்தது. அங்கே தான் பச்சைக்காளி, பவளக்காளியாக படைவெட்டி மாரியம்மனின்
தோழிகளாக இருவரும் வீற்றிருக்கின்றனர். பச்சைக்காளிக்கும், பவளக்காளிக்கும்
காளியாட்டத்தின் போது போட்டியும் வருமாம். கூட்டம் தாங்காது என்றார்கள். அங்கே
தெரிந்தவர்கள் எவரும் இல்லை. மேலும் மறுநாள் எங்க ஊர்க் கோயிலில்
கும்பாபிஷேஹத்தின் யாகம் ஆரம்பம். ஆகவே அதற்குப்போயாக வேண்டும். மாரியம்மன்
வரலாற்றைத் தேட ஆரம்பித்தேன். கடைசியில் இரு விதங்களில் கிடைத்தன.


ஒன்று மஹாமாறன் என்னும் அசுரன் தான் பெற்ற தவங்களால் உலகத்து மக்களை எல்லாம்
பல வகையிலும் துன்புறுத்தி வந்தான். பல்வேறு விதமான நோய்களையும்
உண்டாக்கினான். அதில் ஒன்றே வைசூரி என்னும் அம்மை நோய். இந்த நோய் வந்தவர்களை
எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியவில்லை. உடல் முழுதும் கொப்புளங்கள்
உண்டாகிக் கண்பார்வையும் மறைக்கப் பட்டுத் துடிதுடித்த மக்களைக் காக்கவேண்டி
அம்பிகை தன்னிலிருந்து உருவாக்கியவளே மஹாமாரி ஆவாள். இந்த மஹாமாரி
அவதரித்ததுமே மஹாமாறனைக் கொன்றாள். அவனால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை
எல்லாம் தன்னருகில் அம்பிகை அனுப்பி வைத்த கண்டா கர்ணன் என்னும் தேவதையின்
உதவியோடு தீர்த்து வைத்தாள். அன்று முதல் மக்களின் ஆரோக்கியத்திற்கு அன்னையாக
விளங்கி வருகிறாள்.


இன்னொரு விதத்தில் கூறுவது என்ன வெனில் தேவாசுர யுத்தத்தில் ஜெயித்த
தேவர்களைப் பழிவாங்க எண்ணிய அசுரர்கள் குல குருவான சுக்கிராசாரியார் மூலம்
அவர்கள் உடலில் அம்மைக் கொப்புளங்களை உருவாக்கினார்கள். தாங்க முடியாத
வலியாலும், துன்பத்தாலும் துடித்த தேவர்கள் ஈசனை நாடி அவன் பாதங்களைப் பணிந்து
வேண்ட, ஈசன் தன் ஜடாமுடியிலிருந்து அன்னை மாரியைத் தோற்றுவித்தார். தலையின்
கங்கை இருக்கும் இடத்திலிருந்து தோன்றிய இவளை சீதளா என அழைத்தனர். அல்லல்
பட்டுத் துன்புற்ற மக்களைத் தன் தண்மையான பார்வையாலும், கருணையாலும் காப்பாற்றி
நோயை நீக்கிப் பூரண ஆரோக்கியத்தை அளித்தாள் மஹாமாரி. உடனே தேவர்கள் அனைவரும் தங்களைக் கடுந்துயரிலிருந்து காத்த அன்னை இதே கோலத்தில் அனைத்து எல்லைகளிலும் குடி கொண்டு மக்களைக் கொடும் நோயிலிருந்து காத்தருள வேண்டும் என வேண்ட அவ்விதமே ஆகட்டும் என ஆசியளித்த அன்னை அவ்விதமே இன்றளவும் காத்து வருகிறாள்.


மூன்று கண்களுடனும், நான்கு கைகளுடனும், தீ ஜ்வாலை போல் மேல் நோக்கிய
கூந்தலுடனும், காட்சி அளிக்கும் அன்னை, கறுப்பு ஆடையில் தோளில் கால சர்ப்பங்களை
ஆபரணமாகப் பூண்டு, வலக்காதில் ஸ்ரீசக்ர வடிவான தாடங்கமும், இடக்காதில் தோடும்
அணிந்து திருமேனியிலும் ஆபரணங்களைத் தரித்துக்கொண்டு, ஒரு காலை
மடித்துக்கொண்டும், மறுகாலைத் தொங்க விட்டுக்கொண்டும், வட்ட வடிவான ஜோதியின்
நடுவே தோன்றினாள். இந்தக் கோலத்திலேயே இவள் எல்லாக் கோயில்களிலும் பிரதிஷ்டை
செய்யப் படுகிறாள்.

Wednesday, November 09, 2011

பச்சைக்காளியும், பவளக்காளியும்

அடுத்துப் பார்க்கப் போவது பச்சைக்காளி, பவளக்காளி பற்றி. அநேகமாய் எல்லாப் பெண் தெய்வங்களுமே அம்பிகையின் அம்சம் என்றாலும் காளி அம்பிகையின் முக்கியமானதொரு அம்சம் ஆவாள். இங்கேயும் அசுரன் வருகிறான். காளி அழிக்கிறாள். ஆனால் ஒரே காளியே வெவ்வேறு உருவில் வருகிறாள். தஞ்சை நகருக்கு அப்போது அழகாபுரி எனப் பெயர் என்கின்றனர். அந்த அழகாபுரியில் ஆண்டு வந்தவன் தஞ்சன் என்பவன். இந்தத் தஞ்சன் நல்லரசனாக இல்லாமல் மக்களைத் துன்புறுத்திக் கொடுமை செய்யும் கொடுங்கோலனாக இருந்தான். ஆனாலும் சிவபக்தனாக இருந்தமையால் அவனை அழிக்க எவராலும் இயலவில்லை. ஆகவே ஈசனையே தஞ்சம் அடைந்தனர் அனைவரும். அவரும் தன்னில் ஒரு பாகமான அம்பிகையிடம் பொறுப்பை ஒப்படைக்க ஆனந்தவல்லியான அவளும் தஞ்சனை அழிக்க வேண்டி பச்சைக்காளியாக மாறினாள். அவள் எவ்வளவு முயன்றும் மீண்டும் மீண்டும் தஞ்சன் தோன்றிக்கொண்டிருந்தான். கோபம் கொண்ட பச்சைக்காளியின் முகம் சிவந்து போய்க் காணப்பட்டது. பவளத்தைப் போன்ற சிவந்த அந்த நிறத்தைக்கண்டு அனைவரும் அன்னையைப் பவளக்காளி என்றழைத்தனர்.

பவளக்காளியாக விஸ்வரூபமெடுத்து அன்னை தஞ்சனைக் கொன்றாள். அவன் ரத்தம் ஆறாக ஓட அந்த ரத்தச் சிவப்பில் அன்னையின் நிறமே சிவந்து காணப்பட, பவளக்காளி என்ற பெயரும் நிலைத்தது அவளுக்கு. தஞ்சன் கோடி முறை அவதாரம் எடுத்தமையால் அவனைக் கொன்ற அன்னைக்கு கோடியம்மன் என்ற பெயரும் ஏற்பட்டது. ஈசனின் பிரதிநிதியாக வந்து இங்கே அசுரனை அழித்ததால் அன்னை தன் தலையில் ஈசனையே சூடி இருப்பதாய் ஐதீகம். ஆகவே அம்மனுக்குப் பச்சைக்காளி, பவளக்காளியாக இருக்கையில் நந்தியே வாகனம் என்கின்றனர். தஞ்சையில் கோடியம்மன் கோயில் என்ற பெயரிலேயே கோயில் உள்ளது. மூலவர் கோடியம்மன் ஆவாள். உற்சவர் பச்சைக்காளி, பவளக்காளி இருவருமே.

மாசி அல்லது பங்குனி மாதம் பச்சைக்காளி, பவளக்காளி உற்சவம் நடக்கையில் பச்சைக்காளி, பவளக்காளியின் உருவச் சிலைகளைச் செய்து வீடு வீடாக எடுத்துச் செல்வார்கள். காளியாட்டமும் நடக்கும், சிலர் பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டம் ஆடுவதாய் நேர்த்திக்கடனும் செய்து கொள்கின்றனர். அப்படி நேர்ந்து கொள்பவர்கள் விரதம் இருத்தல் வேண்டும். காளியின் முகம் மட்டும் செய்யப் பட்டு அவர்கள் முகத்தின் மேலே பொருத்தப்படும். அப்படிப் பொருத்தப்பட்ட அறுவரைக் கும்பகோணத்தில் பார்த்தோம். ஆறுபேரும் பெண்கள். ஆனால் படம் எடுக்க அநுமதிக்கவில்லை. ஆறுபேரும் உணர்ச்சியின் உச்ச கட்டத்தில் இருந்தனர். ஆகவே படம் எடுத்தால் விபரீதமாய் முடியும் என எச்சரிக்கப் பட்டோம். அநேகமாய் ஆண்களே காளியாட்டம் ஆடுவார்கள் எனவும் , இங்கே இந்தப்பெண்கள் நேர்த்திக்கடனுக்காகக் காளியாட்டம் மேற்கொண்டிருப்பதாயும் கூறினார்கள்.


சிலருக்குக் காளிக்குக் கோரைப்பற்கள் இருப்பது போன்ற பற்கள் தானாகவே தோன்றும் என்றும் சொல்கின்றனர். இது குறித்த உண்மை நிலவரம் தெரியவில்லை.
ஆனால் கோயிலின் பூசாரியோ அல்லது பரம்பரையாகக் காளிவேடம் புனைந்து காளியாட்டம் ஆடுபவரோதான் காளியாக வேஷம் தரிக்கின்றனர் என்றாலும் நேர்த்திக்கடனுக்காக வேஷம் தரிப்பவர்களும் இருக்கின்றனர். காளியாட்டம் ஆடும் முன்னர் திருவிழாவுக்காகக் காப்புக் கட்டியதுமே காளியின் முகம் தயாராகி அதை எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் செல்லுகின்றனர். காளியே நேரில் வந்திருப்பதாக மக்கள் ஐதீகம். எனவே அனைத்து மரியாதைகளூம் செய்யப் படுகின்றன. அதன் பின்னரே திருவிழா முடிந்து காளியாட்டம் நடக்கிறது. இதிலே பச்சைக்காளிக்கும், பவளக்காளிக்கும் போட்டியும் உண்டு என்கின்றனர். இது குறித்துச் சரியான தகவல் யாருக்கும் சொல்லத் தெரியலை. மேற்கொண்டு விசாரிக்கவேண்டும்.

Saturday, November 05, 2011

பாவாடை ராயனைத் தான் பத்தினியே தானழையும்!

பாவாடை ராயனைப் பற்றி மாரியம்மன் தாலாட்டில் நாலைந்து இடங்களில் வருகின்றது.

"பாவாடைராயனைத் தான் பத்தினியே தானழையும்" என இரு இடங்களிலும், பாவாடைராயனும் தான் பக்கத்திலே கொலுவிருந்தார் என்றொரு இடத்திலும் பாவாடை ராயனும் பல தேவரும் வாழி என்றொரு இடத்திலும் வருகிறது. இந்தப் பாவாடை ராயன் யாருனு புரியாமல் யோசனையிலே இருந்தேன். அப்புறமாத் தான் காவல் தெய்வமாய் இருக்குமோ என ஒரு சந்தேகம். காவல் தெய்வங்கள் பற்றிய ஒரு புத்தகத்தில் தேடினப்போ கிடைச்சது பாவாடை ராயனும், அவரோட எஜமான் ஆன பருதேசியப்பரும்.

பருதேசினு ஊர் ஊராச் சுத்தறவங்களைச் சொல்றது உண்டு. இங்கேயும் அப்படிச் சுத்தின ஒருத்தரைத் தான் சொல்றாங்க. அவர் வேறே யாரும் இல்லை. நம்ம சிவனார் தான். அதுவும் சனி படுத்தின பாடாம் அது. எல்லாரையும் பிடிக்கவேண்டிய சனிஸ்வரனுக்கு அப்போ சிவனிடம் போகவேண்டிய நேரம். ஆனால் அவர் கிட்டே போனால் நெற்றிக்கண்ணைத் திறந்துடுவாரே? என்ன செய்யறது? நாரதர் இன்னும் கொஞ்ச நாட்களில் சிவனுக்கும், பார்வதிக்கும் கல்யாணம் நடக்கப் போறது. அப்போப் பிடிச்சுக்கலாம்னு சொல்லி வழி காட்டறார். சரினு எல்லாருமா கல்யாணத்துக்குப் போறாங்க. அங்கே பிரம்மாதான் கல்யாணம் நடத்தி வச்சுண்டு இருந்தார். கல்யாணம் முடிஞ்சதும் வழக்கப்படி புரோகிதம் பண்ணின பிரம்மாவுக்கு மரியாதை செய்யறாங்க சிவனும், பார்வதியும். அப்போ பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் ஈசன் மாதிரியே.

ஐந்து தலைகளுக்கும் தீபம் காட்டணும், நாலுக்குக் காட்டியாச்சு. ஐந்தாவது தலைக்கு எந்தத் திசையிலே காட்டறதுனு யோசிக்கும்போது, அந்தச் சமயம் நாரதர் சைகை காட்ட சனி ஈசனின் கையில் புகுந்து கொள்ள, அவர் கோபத்தோடு அந்த ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிய, பிரம்மாவுக்கும் கோபம் வந்து என்னோட இந்தத் தலை திருவோடாக உம் கையில் மாறி நீர் ஊர் ஊராகப் பித்தனைப் போல் பிச்சை எடுக்கவேண்டும்னு சாபம் கொடுக்கிறார். முன்னைப்பழம்பொருளுக்கும் முன்னைப்பழம்பொருள் ஒரு ஆண்டியைப் போல, பித்தனைப் போல பிச்சை எடுக்கிறார். பிக்ஷாடனராக ஒவ்வொரு ஊராக வந்து பிச்சை கேட்கிறார். எங்கேயும் பிரம்ம கபாலத்தில் அவர் வாங்கும் பிச்சையால் கபாலம் கையை விட்டுப் போகவில்லை. அப்போது....


தாம் செல்லும் இடங்களிலெல்லாம் அற்புதங்களை நடத்திய பருதேசியப்பரால் தன் கைக் கபாலத்தைக் கைகளிலிருந்து எடுக்க முடியாதா?? இறைவனுக்குத் தெரியாதா? எல்லாம் வல்லவனுக்கு இது ஒரு கஷ்டமான காரியமா? எனினும் எடுத்துக்கொண்ட விளையாடலை பூரணமாக விளையாடி முடிக்கவேண்டுமே. ஆகவே கடைசியாகக் கொள்ளிடக் கரையில் இருக்கும் வல்லம்படுகை வந்து சேர்கிறார் ஈசனாகிய பரதேசி. நமக்கெல்லாம் ஞானப் பிச்சை அளிக்கும் அவன் நம்மிடமிருந்து பிச்சையாக வாங்குவது நம்முடைய வினைப்பயன்களையும், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் அன்றோ. அவற்றை வாங்கிக்கொண்டு அவன் நமக்குத் திரும்பத் தருவதோ மாபெரும் செல்வம் அல்லவோ! ஆனால் இதை எத்தனை பேர் அறிவார்கள்? அப்படியே பாவாடை ராயனும் அறியவில்லை.

ஊர் அடங்கியவேளையிலே பரதேசிக் கோலத்தில் வந்து சேர்ந்த பருதேசியப்பரைக் கண்ட ஊர்க்காவல்காரனான பாவாடைராயன் இவ்வுலகத்து மாந்தருக்கெல்லாம் வேண்டியது தருபவர் ஆன அவர் மேல் சந்தேகம் கொண்டு அந்தப் பொன்னான அருள் தரும் அபயக்கரங்களுக்கு விலங்கிட்டுச் சிறையில் அடைக்கிறான். காலையில் விசாரணை செய்து கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பிச் சென்று இரவு முழுதும் ஓய்வு எடுத்துக்கொண்டு காலை திரும்பினான் பாவாடை ராயன். வந்து பார்த்தால்??

ஆஹா, இது என்ன அற்புதக் காக்ஷி, இந்தக் கண்கள் காண்பது கனவா? நனவா? தன் சுய உருவோடு நின்றிருந்த ஈசனைக் கண்ட பாவாடைராயன் நடுநடுங்கிப் போனான். "என் ஐயனே, உன்னையா சிறையிலடைத்தேன்!" என்று கதறி அழுதவண்ணம் ஈசன் காலடிகளில் விழுந்தான். தன்னை மன்னிக்கும்படியும், தான் அடியவனாய் இருந்து பணிவிடைகள் ஆற்ற விரும்புவதாயும், சாபம் தீரும்வரையிலும் ஈசன் அங்கே குடிகொள்ளவேண்டும் எனவும் வேண்ட, ஈசனும் சம்மதித்து அங்கே குடியேறுகிறார்.

இந்தப் பருதேசியப்பருக்குக் கையில் பிக்ஷாபாத்திரமாகக் கபாலத்தை மட்டுமே ஏந்திய இவருக்குக் காவல்காரனாம் பாவாடைராயன். இவர்கள் கோயில் கொண்டிருக்கும் இடம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள அழகிய கிராமம் ஆன வல்லம்படுகையில் உள்ளது. மூலவர் பருதேசியப்பர். இவருக்குக் காவலாக விநாயகர், முருகன், முத்தாலம்மன், பேச்சியம்மன், முனீஸ்வரர் ஆகியோர் பிராகாரங்களில் இடம் பெற்றிருக்க ஆலயத்தின் பின்னால் உள்ள கொட்டகையில் தன் இரு மனைவிமாரான முத்துநாச்சி, அரியநாச்சி ஆகியோருடன் பாவாடைராயன் காணப்படுகிறார்.

இந்தப் பருதேசியப்பர் கோயிலின் எதிரே சற்றுத் தள்ளி காணப்படும் ரயில் தண்டவாளத்தை 300 ஆண்டுகள் முன்னர் முதல்முதல் அமைக்கும்போது ஆங்கிலேயர்கள் கருவறையைத் தகர்த்துவிட்டு ரயில் பாதையை அமைக்கத் திட்டம் போட்டுக் கோயிலை இடிக்க முயன்றிருக்கிறார்கள். அதன் முன்னர் வரும் கோயிலின் அருகே உள்ள இடங்களில் தண்டவாளம் பதிக்கப்பட்டுவிட்டது. கோயிலை இடிக்க உத்தரவு கொடுத்துவிட்டுப் போனால் மறுநாள் ஏற்கெனவே பதிக்கப்பட்ட தண்டவாளங்கள் வேறு திசையில் தூக்கி வீசப்பட்டிருந்தன. அதிர்ந்த ஆங்கிலேய அதிகாரி மீண்டும் அதே இடத்தில் பதிக்க மீண்டும் தண்டவாளங்கள் தூக்கி வீசி எறியப்பட, மூன்றாம் முறை முயன்றபோது இஞ்சினியரின் கண்பார்வையே பறிபோனதாம். பின்னர் உள்ளூர் மக்கள், பெரியதனக்காரர்களின் வேண்டுகோளையும், பருதேசியப்பரின் சக்தியையும் கண்டு வியந்த ஆங்கிலேயர் கோயிலில் இருந்து சற்றுத் தள்ளி தண்டவாளங்களை அமைத்தனராம். அவர்களுக்குப் பரிகாரமாக மண்குதிரை செய்து வைக்கச் சொல்ல அப்படியே செய்தும் வைத்திருக்கின்றனர். இந்தப் பாவாடைராயன் கதையைப் படித்ததும், மாரியம்மன் தாலாட்டின் பொருள் நன்கு புரிய ஆரம்பித்துள்ளது.


பாவாடைராயனின் படம் கிடைக்கவில்லை. அந்தப் பக்கம் பயணம் போகையில் எடுக்க முயல்கிறேன்.

டிஸ்கி: மீள் பதிவு.

Tuesday, November 01, 2011

பச்சை வாழி அம்மன்!


அடுத்து நாம் பார்க்கப் போவது பச்சை அம்மன், பச்சை வாழி அம்மன் என்று அனைவராலும் கொன்டாடப் படும் தேவி குறித்து. இவளும் அன்னையின் அம்சமே ஆவாள். இதற்கான வரலாறு நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

திருக்கைலையில் அன்னையும், ஈசனும் ஏகாந்தமாக உரையாடிக் கொண்டிருக்கும் ஓர் வேளையில் அன்னைக்கு ஒரு சந்தேகம். ”சுவாமி, சூரிய சந்திரர்கள் உங்கள் கண்கள் என்கின்றனரே, அது உண்மையா”, என வினவினாள் அன்னை. அனைத்தும் அறிந்தவளுக்கு அனைவரையும் தன் சக்தியால் பரிமளிக்கச் செய்பவளுக்குத் தெரியாத ஒன்றா? புரியாத ஒன்றா? இல்லை; இதன் மூலம் அன்னை ஏதோ மனதில் திருவிளையாடல் செய்ய எண்ணி இருப்பதைப் புரிந்து கொண்டார் ஐயன். “ஆம் இருவரும் என் கண்களே” என்றார். உடனே அன்னை தன்னிரு தளிர்க்கைகளாலும் ஐயனின் கண்களைப் பொத்த அன்டசராசரங்களிலும் காரிருள் சூழ்ந்தது. அத்தனை ஜீவராசிகளும் திடீரென ஏற்பட்ட இந்தக் காரிருளைக் கண்டு நடுங்கித் தவித்தன. தேவாதிதேவர்கள் மஹாபிரளயமோ என அலறிக்கொண்டு ஈசனிடம் ஓடி வந்தனர். வந்ததும் தான் புரிந்தது அன்னையின் விளையாட்டு என்பது. அதற்குள் ஐயன் தன் நெற்றிக்கண்ணைச் சிறிதே திறக்க அனைத்து உலகும் ஒளியால் மீண்டும் பிரகாசிக்க ஆரம்பித்தது.

தன் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டால் நடுங்கிப் போன அண்டசராசரத்து மக்களையும் நினைத்து வருந்திய அன்னையவள், தான் மாபெரும் பாவம் செய்துவிட்டதை உணர்ந்தாள். ஐயனை விட்டுப் பிரிந்து சென்று கடும் தவம் செய்து இந்தப் பாவத்தைப் போக்கிக்கொள்ள விரும்பினாள். ஐயனிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, அன்னையின் நோக்கம் புரிந்த ஈசனும் காஞ்சிமாநகரில் கம்பா நதிக்கரையில் தவம் செய்யச் சொல்லிக் கட்டளை இட்டார். ஐயனின் கட்டளையைச் சிரமேற்றாங்கி அன்னையவளும் கம்பாநதிக்கரையில் சுற்றிலும் அக்னியை வளர்த்து பஞ்சாக்னிக்கும் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். அவள் கடுந்தவத்தைப் பார்த்த ஈசன் சற்றே சோதிக்க எண்ணிக் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். வெள்ளம் தான் பிரதிஷ்டை செய்திருக்கும் லிங்கத் திருமேனியை அடித்துச் சென்றுவிட்டால் என்ன செய்வது எனக் கலங்கிய அன்னை தன்னிரு கைகளாலும் லிங்கத்தைக் கட்டி அணைத்துக்கொண்டாள். அப்போது ரிஷபவாஹனராய்க் காட்சி தந்தார் ஈசன். அன்னை அவரை வணங்கி அவரில் தான் பாதியாக விரும்புவதைக் கூறினாள். அதற்கு அருளுமாறு கேட்டுக்கொள்ள, ஈசனோ அது அவ்வளவு சுலபம் இல்லை எனவும், இங்கே இருந்து தெற்கே ஜோதியே மலையாக மாறி இருக்கும் திருவண்ணாமலைக்குச் சென்று தவம் செய்ய வேண்டும் என்றும் அங்கே ஊசி முனையில் தவம் இருக்குமாறும் கூறி மறைந்தார்.

அதன்படியே திருவண்ணாமலைக்குப் பயணமானாள் அன்னை. செல்லும் வழியில் அவளால் இயன்ற வரையில் சிவ வழிபாடு செய்து கொண்டே சென்றாள். அதற்கு நீரும் வேண்டுமே என நினைத்த அன்னைக்கு, அவள் குமாரன் ஆன சிவகுமாரன் ஓரிடத்தில் மலையைக் குடைந்து நதி ஒன்றைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தான். (இன்று சேயாறு என அழைக்கப் படும் ஆறு அதுவே என்கின்றனர்.) அதே போல் கடும் தவம் செய்யும் அன்னைக்குக் குளிர்ச்சியாக இருக்க வேண்டி நதிக்கரையில் வாழைமரங்களால் ஆன பந்தல் ஒன்றையும் அமைத்தாராம் சிவகுமாரன். அன்னை அந்தச் சேயாற்றில் நீராடிவிட்டு வாழைப்பந்தலின் கீழ் அமர்ந்து தன் வழிபாட்டை முடித்துக்கொன்டு பயணத்தைத் தொடர்ந்தாள். வாழைப்பந்தல் அமைந்த இடம் இன்றும் வாழைப்பந்தல் என்னும் பெயரிலேயே விளங்குகிறது.



இந்த வாழைப்பந்தலில் அமர்ந்து தன் வழிபாட்டை முடித்துவிட்டுத் திருவண்ணாமலையை அடைந்தாள் தேவி. தேவியின் வருகையை எதிர்நோக்கி அங்கே கெளதம மஹரிஷி, சதாநந்தர், பிருகு போன்றோர் காத்திருந்தனர். அம்பிகையை வரவேற்று அவள் தவத்திற்கான சகல ஏற்பாடுகளையும் மனமுவந்து செய்து கொடுத்தனர். காலின் ஒற்றை விரலால் அதாவது கட்டைவிரல் நுனியில் நின்று கொண்டு கடுந்தவம் செய்ய ஆரம்பித்தாள் அன்னை. இந்தச் சமயம் தான் மஹிஷாசுரனின் அராஜகமும் அதிகம் ஆனது. தேவி ஒருத்தியால் தான் அவனை அடக்க முடியும். ஆனால் தேவியோ கடுந்தவத்தில் இருக்கிறாளே! என்ன செய்வது எனப் புரியாமல் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷி முனிவர்களும் திருவண்ணாமலையில் தவமிருந்த மற்றவரிடம் முறையிட அவர்களும் தவமிருந்த அன்னையைப் பிரார்த்தித்தனர். தவத்தில் இருந்த அன்னைக்குப் பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் தெரியவர, தன் தவ வலிமையால் துர்காபரமேஸ்வரியை உருவாக்கினாள் அன்னை. மஹிஷனை அழிக்க அவளை அனுப்பி வைத்தாள். அன்னையின் அம்சமான துர்கா படை, பரிவாரங்களோடு சென்றாள்.

மஹிஷாசுரன் பல்வேறு வடிவங்களும் எடுத்து அன்னையைத் தடுமாற வைக்கத் திட்டம் போட்டான். அன்னையின் அம்சமான துர்கையோ சற்று நேரம் பொறுமை காத்தாள். பின்னர் அவன் உண்மை உருவான மஹிஷ உருவில் அவன் வரும்போது அந்த மஹிஷத்தின் தலையை வெட்டி வீழ்த்தினாள் துர்கை. அப்போது அவன் கழுத்திலிருந்து ஒரு லிங்கம் கீழே விழுந்தது. ஆஹா, இது என்ன??

மஹிஷாசுரன் மன்னத முனிவர் என்பவர் சிவபூஜை செய்கையில் அவரையும் அவர் வழிபட்ட சிவலிங்கத்தையும் ஒரே விழுங்கில் விழுங்க, சிவலிங்கம் அவன் கண்டத்திலேயே தங்கி விட்டது. அந்த லிங்கம் தான் எருமைத் தலையை துர்கை வெட்டியதும் கீழே விழுந்ததாம். சிவலிங்கம் கீழே விழுந்துவிட்டால் அபசாரம் என நினைத்த துர்கை தன்னிரு கைகளால் அந்த லிங்கத்தை ஏந்தினாளாம். அவள் கையை விட்டு அந்த லிங்கம் அகலாமல் உள்ளங்கையிலேயே ஒட்டிக்கொண்டது. பதறிய துர்கை அன்னையை நாடி ஓடினாள். அன்னை பார்த்துவிட்டுச் சிரித்தாள். சிவபக்தனான மஹிஷனைக் கொன்றதால் அவனைக் கொன்ற பாவத்தினால் உன் கைகளை விட்டு இந்த லிங்கம் அகலவில்லை. உன் கையில் இருக்கும் கட்கம் என்னும் வாளால் தரையைக் கீறிக் கிளம்பும் தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டால் உனக்குக் கையிலிருக்கும் லிங்கம் அகன்று பாவ விமோசனமும் கிடைக்கும் என்று சொல்ல அப்படியே தனது கட்கம் என்னும் வாளால் துர்கை கீற அங்கே ஓர் தீர்த்தம் தோன்றியது. அதை இன்றும் கட்க தீர்த்தம் என்னும் பெயரிலேயே அழைக்கின்றனர். துர்கையின் கைகளில் இருந்த லிங்கமும் கீழே விழுந்தது.

அன்னை அதன் பிறகு ஈசனோடு இரண்டறக் கலந்து அர்த்த நாரீச்வரராக ஆனாள். ஆனால் அன்னை அடியெடுத்து வைத்த நாளில் இருந்து அந்தப் பிரதேசமே ஜோதி மயமாகவும், பசுமையாகவும் மாறியதால், மக்கள் அனைவரும் இந்த இடம் என்றும் இப்படியே ஜோதி வடிவாகவும், பசுமையாகவும் காட்சி அளிக்க வேண்டும் என வேண்டிக்கொள்ள அன்னையும் அவ்விதமே ஆகட்டும் என அருளிச் செய்தாள். அன்னையை அவர்கள் அன்று முதல் பச்சையம்மனாக வழிபட்டனர். பயிர், பச்சையை வாழச் செய்தமையால் பச்சை வாழி அம்மன் எனவும் அழைக்கப் பட்டாள்.

இன்னொரு வரலாற்றில் வாழைப்பந்தலில் பந்தலை அன்னையே அமைத்ததாகவும், மணலால் லிங்கம் பிடிக்க நீர் வேண்டி விநாயகனையும், குமரனையும் கேட்டதாயும், அவர்கள் வர நேரமானதால் அன்னையே நீரைத் தன் கைப்பிரம்பால் தட்டி உற்பத்தி செய்ததாகவும் பின்னர் விநாயகனும், முருகனும் கொண்டு வந்த நீரும் சேர்ந்து மூன்று நதிகளாக மாறியதாகவும் அதுதான் முக்கூட்டு என்னும் இடம் எனவும் கூறுகின்றனர். அப்போது அருகே இருந்த கதலிவனத்தில் அசுரன் ஒருவன் அன்னையின் தவத்துக்கும், வழிபாட்டுக்கும் இடையூறு செய்யும் நோக்கில் வந்ததாயும் அவனை ஈசனும், விஷ்ணுவும் சேர்ந்து வாழ்முனி, செம்முனி என்னும் உருவில் வதம் செய்து அன்னைக்கு உதவியதாகவும் கூறுகிறது. இவர்களோடு சேர்ந்து இன்னும் ஐவரும் அன்னைக்கு உதவியதாகவும் கூறுகின்றனர். அவர்கள் முறையே வாழ்முனி, செம்முனி, சடாமுனி, கருமுனி, வீர முனி, முத்து முனி, வேதமுனி ஆகியோர். செம்முனி கோபக்காரன் என்பதால் இவரைக் கட்டுப் படுத்தக் காலில் விலங்கு இருக்கும் என்கின்றனர். பச்சையம்மன் கோயில்களில் வெட்ட வெளியில் பிரம்மாண்டமாக இந்த ஏழு முனிவர்கள் சிலைகளையும் காணலாம். இவர்களைத் தவிர, கெளதமர் உள்ளிட்ட சப்தரிஷிகளின் உருவங்களும் சிறியதாய்ப் பின்னால் காணப்படும்.

பச்சையம்மன் கோயில்களில் கணபதிக்கும், முருகனுக்கும் இடம் உண்டு. பச்சை நிற ஆடையிலேயே காட்சி அளிக்கும் பச்சையம்மனுக்கு உகந்த நாட்களாய்த் திங்கட்கிழமைகளே சொல்லப் படுகின்றன. அம்மனுக்குப் படையலும் சைவப் படையல் தான். அம்மனுக்காக நேர்ந்து கொண்டு பெரிய யானை, குதிரைச் சிலைகள் வைக்கின்றனர். இரவில் குதிரையில் ஏறி அம்மன் நகர்வலம் வருவதாக ஐதீகம். ஆகவே குதிரைகள் அம்மன் குதிரை என்றே அழைக்கப் படுகின்றன. ஈசனும் இங்கே மன்னாதீஸ்வரர் என்ற பெயரில் தெற்குப் பார்த்து வீற்றிருப்பார். வட ஆற்காடு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல குடும்பங்களுக்கும் பச்சை அம்மன் எனப்படும் பச்சைவாழி அம்மனே குலதெய்வம் ஆவாள். எனினும் வாழைப்பந்தலில் முதல் முதல் அம்மன் குடிகொண்ட இடமே பச்சையம்மன் குடி கொண்ட முதல் இடமாகக் கருதப் படுகிறது.