எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, October 30, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நீலகண்டர்!


வாசுகி கக்கிய விஷத்தோடு சேர்ந்து பாற்கடலில் இருந்து வந்த ஹாலாஹாலமும் சேர்ந்து எங்கும் விஷப்புகை. தேவர்களும், அசுரர்களும் மயங்கி விழுந்தனர். என்ன செய்வதெனத் தவித்த தேவர்தலைவன், ஈசனை நாட, அவர் தம்முடைய அவதார ரூபியான ஆலாலசுந்தரரை அவ்விடத்தை இவ்விடம் கொண்டு வா எனப் பணிக்க ஆலாலசுந்தரரும் சென்று அந்த விடத்தை எடுத்துச் சென்று நாவல்பழம்போல் உருட்டி ஈசனிடம் கொடுக்க அவரும் அதை அப்படியே வாயில் போட்டுக் கொண்டு விட்டார். ஆஹா! இது என்ன! அனைத்துக்கும் ஆதிப்பரம்பொருளான ஈசன் உள்ளே விஷம் போனால் அனைத்து உயிர்களுக்கும் அது தாக்காதோ? அருகே இருந்த அன்னைக்குக் கவலை பிறக்கத் தன் செந்தளிர்க்கரங்களால் ஈசனின் தொண்டையை மென்மையாகத் தடவிக் கொடுக்க விஷம் உள்ளே செல்லாமல் அங்கேயே நின்றது. இதனால் ஈசனின் கண்டம் என்றென்றைக்கும் நீலமாகிவிட நீலகண்டர் என்னும் திருநாமத்தைப் பெற்றார் ஈசன்.

இந்த விடமுண்ட கண்டரைத் தரிசிக்கவேண்டுமானால் சென்னைக்கருகே உள்ள அரக்கோணம் பக்கத்தில் சுருட்டப்பள்ளி என்னும் ஊரில் பள்ளி கொண்ட கோலத்தில் காணலாம். விஷமுண்ட கண்டரைத் தன் மடியில் போட்டுக்கொண்டு விஷத்தைத் தொண்டையிலேயே நிறுத்திவிட்டு அமுதத்தை தேவர்களுக்குக் கிடைக்கச் செய்த அமுதாம்பிகையாக அன்னை இங்கே காட்சி அளிப்பாள். இதைத் தவிரவும், நேபாளத்தில் காட்மாண்டுவில் பூடா நீல்கண்ட் என்னும் கோயிலிலும் கைலை செல்லும் வழியில் விஷம் உண்ட மயக்கத்தில் ஈசன் படுத்து இருப்பதைக் காணலாம். இவரை ஒரு கோணத்தில் பார்த்தால் விஷ்ணுவாகவும் காட்சி அளிப்பார். ஈசன் விஷத்தை உண்டுவிட்டுக் கைலை சென்றதாகவும் வழியில் மயக்கம் வரவே படுத்து இளைப்பாறியதாகவும் அங்கே கோயிலின் பூசாரிகள் கூறுவார்கள்.


அபிராமி அந்தாதியில் "பொருந்திய முப்புரை செப்புரைசெய்யும் புணர்முலையால் வருத்திய மருங்குல் மனோன்மணி வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே" என்று அபிராமி பட்டர் இதைத் தான் கூறுகிறார்.