எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, October 30, 2006

45. ஓம் நமச்சிவாயா-16

பிரம்மாவின் புத்திரரான மரீசி மஹரிஷி ஒரு முறைக் கைலையில் பரமேஸ்வரனைக் குறித்துத் தவம் செய்ய முற்பட்டார். அங்கே உள்ள ரிஷி, முனிவர்கள் உதவியுடனும், அன்னையான சர்வேஸ்வரியின் துணையுடனும், 12 ஆண்டுகள் தாந்திரீக முறைப்படி சிவனை ஆராதிக்கத் திட்டம் இட்டார். தாந்திரீக முறையில் நீராடிய உடனே ஈர உடைகளோடுதான் வழிபாடு தொடங்க வேண்டும் என்று நியதி. கோடை முடிந்து குளிர்காலம் வந்து கைலையில் உள்ள நீர் முழுதும் பனிக்கட்டியாக மாறி விட்டது. நீராடவோ, மற்ற பூஜா முறைகளுக்கோ ஒரு சொட்டு நீர் கூட இல்லை. எல்லாரும் தண்ணீருக்கு என்ன செய்வது என யோசிக்க மரீசி மஹரிஷி தன் தந்தையான நான்முகனை வேண்ட நான்முகனும் அவர் முன் தோன்றினார். நான்முகனோ கைலைநாதனை வேண்ட அங்கிருந்த பனிக்கட்டிகள் உருகி, ஆறாகப் பெருகி, ஏற்கெனவே தாட்சாயணியின் அங்கம் வீழ்ந்து ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து நிரம்பியது. இது ஓர் அழகிய ஏரியாக உருவெடுத்தது. பிரம்மாவின் கருணையால் உருவான இந்த ஏரி அவருடைய மனதே கருணை பொருந்தியது என நிரூபிக்கும் வண்ணம் "மானசரோவர்" என்று பெயர் பெற்றது. "மான" என்றால் மனதைக் குறிக்கும் சொல். சரோவர் என்றால் பெரிய நீர் நிலை என்று பொருள். இமவான் இதை அறிந்த தத்தாத்ரேயர் அங்கேயே ஒரு குகை ஒன்றில் தவம் செய்துவிட்டு, இமயமலையில் உள்ள மற்ற புண்ணிய ஸ்தலங்களைத் தரிசனம் செய்து விட்டு அங்கேயே தங்கி விட்டதாகவும், இன்றைய நாளில் கூட அவரது தரிசனம் காடுகளில் சிலருக்குக் கிடைக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

மானசரோவர் ஏரியானது உலகிலேயே மிக உயரத்தில் அமைந்தது. சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தின் மேற்குப் பகுதில் அமைந்துள்ளது. திபெத் என்றால் சம்ஸ்க்ருதத்தில் "த்ரிவிஷ்டம்" என்று பொருள் என்றும் அதற்கு "ஸ்வர்க்கம்" என்று அர்த்தம் என்றும் கூறுகிறார்கள். தன்னுடைய கடைசிக்காலத்தில் தன் தவம் முடிந்து அர்ஜுனன் இங்கேதான் இந்திரன் அனுப்பிய ரதத்தில் சென்றதாகக் கூறுகிறார்கள். மானசரோவர் இரு பெரும் மலைகளுக்கு இடையே குன்றுகளால் சூழப்பட்ட பிரதேசத்தில் உள்ளது. இதன் வடக்கே தான் நாம் அடுத்துத் தரிசிக்கப் போகும் திருக்கைலாய மலை. தெற்கே ரகுவம்சத்தில் உதித்த மாந்தாதா என்னும் மன்னன் தவம் இருந்த மாந்தாதா மலை 5 சிகரங்களுடன் காட்சி அளிக்கிறது. இந்த அரசன் ராமருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் ரகுவம்சத்தில் உதித்தவன். கடல் போன்ற இந்தப் பெரிய ஏரியானது 88 கி.மீ சுற்றளவுடன் 24 கி.மீ அகலம் கொண்டது. இதன் பரப்பு 320 சதுர கி.மீ. ஆழம் 90 மீட்டர்கள். இதை ஒரு முறைப் பிரதட்சிணம் செய்ய வண்டியிலேயே எங்களுக்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை ஆனது. சுற்றி வர 120 மைல்கள். நடந்து சுற்றி வர சுமார் 2 நாட்கள் நமக்குத் தேவைப்படும். ஆனால் திபெத்தியர்கள் ஒரே நாளில் முடிக்கின்றனர். இது போன்பாஸ்" எனப்படும் திபெத்தியருக்கு மட்டும் இல்லாமல் இந்துக்கள், பெளத்தரகள், ஜைனர்கள் எல்லாருக்கும் புனிதமானதாக இருந்து வருகிறது. மானசரோவரின் ஒவ்வொரு பக்கத்துக் கரையும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. ஒரு பக்கம் கற்களால் சூழப்பட்ட கரை. ஒரு பக்கம் கடற்கரை போன்ற நீண்ட கரை. இன்னொரு பக்கம் மலைகளால் சூழப்பட்டது. இப்படி ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. கரையில் அலைகள் வந்து மோதுகின்றன. நடுவில் அமைதியாகத் தோற்றம் அளிக்கிறது. ஏரி நீரில் அன்னப் பறவைகள் நீந்துகின்றன. முதலில் நாங்களும் வாத்துக்கள் என்றுதான் நினைத்தோம்.ஆனால் அவை இல்லை. பல பறவைகள் வந்து அங்கே விளையாடிச் செல்கின்றன. கரையில் சில இடங்களில் பல வண்ணங்களில் கற்கள் கிடைக்கின்றன. சிவலிங்க சொரூபமாகக் கருதப்பட்டு பக்தர்களால் அவை கொண்டு வரப்படுகின்றன.

மானசரோவர் இருக்கும் பிராந்தியத்தில் தான் நான்கு முக்கிய நதிகளின் மூலஸ்தானங்கள் இருக்கின்றன. இந்த ஏரிக்குத் தென்கிழக்கே 99 கி.மீ. தொலைவில் "செமாயாங்டுங்" எனும் பனி மூடிய சிகரத்தில் இருந்து "பிரம்ம புத்ரா"வும், வடகிழக்கில் 99 கி.மீ. தூரத்தில் "செஞ்ச்காம்பாப்" என்னும் இடத்தில் இருந்து "சிந்து" நதியும், கிழக்கே 48 கி.மீ. தொலைவில் "டால்ச்சு கோபா" வுக்கு அருகில் இருந்து "சட்லெஜ்" நதியும், தென் கிழக்கே 48 கி.மீ.தூரத்தில் "மாப்சா கங்கோ" என்னும் இடத்தில் இருந்து கர்னாலி நதியும் உற்பத்தி ஆகின்றன. மானசரோவர் சக்தி பீடம் என்று ஏற்கெனவே பார்த்தோம். அங்கே தினமும் பிரம்ம முஹூர்த்தம் என்று சொல்லப்படும் 3-00 மணி முதல் 4-00 மணி அளவில் வடக்கே கைலை மலையில் இருந்து ஒரு ஜோதி வந்து ஏரியில் ஐக்கியம் ஆவதாயும்,அது "சிவசக்தி சொரூபம்" என்றும் தினமும் அது நிகழ்வதாகவும் எங்களுக்கு முன்னால் போய்த் திரும்பியவர்கள் சொன்னார்கள். சிலர் தினமும் தேவர்கள் தீப ஒளி போல தீபத்தை ஏற்றி வந்துப் பூஜை செய்வதாயும், கரையில் இருந்து பல விளக்குகள் போல ஒளி தெரிந்து நடு மையத்தில் மறைவதாயும் சொன்னார்கள்.

நாங்கள் ஒரு வழியாக மானசரோவர், கைலை முதல் தரிசனம் செய்யும் இடம் வந்து சேர்ந்தோம். திபெத்திய வழக்கப்படி தோரணங்கள் கட்டப்பட்ட ஒரு கூடார வடிவிலான இடத்தை எல்லா வண்டிகளும் மும்முறை சுற்றி வந்து மானசரோவரின் கரையில் நின்றன. எங்களுக்கு நேர் எதிரே மானசரோவர், வலது பக்கம் கைலை மலை. மானசரோவரில் இருந்து சுமார் 40 கி.மீ தூரத்தில் இருக்கிறது என்றார்கள். இதன் நிழல் எப்படி மானசரோவரில் விழும்? எனக்குப் புரியவில்லை. முன்னால் இத்தனை மலைகள் இருக்கின்றனவே, கைலையின் சிகரம் மட்டும் தான் தெரிகிறது, என்று யோசித்தவாறே இருந்தேன். வண்டி ஓட்டிகள் எல்லாரும் கீழே இறங்கி மானசரோவரின் பக்கமும்,கைலையின் பக்கமும் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தனர். ஒரு முறை இல்லை மூன்று முறை. சிலர் ஏதோ கணக்கு வைத்துக் கொண்டும் செய்தனர். பின்னர் நாங்கள் அனைவரும் வண்டிகளில் ஏறி மானசரோவரின் "பரிக்ரமா" என்று சொல்லப்படும் பிரதட்சிணத்திற்குத் தயார் ஆனோம். எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் குறைவு என்பதாலும், கைலை பரிக்ரமா வேறு இருப்பதாலும் மானசரோவரின் பரிக்ரமாவை நாங்கள் வண்டிகளிலேயே உட்கார்ந்த வண்ணம் செய்தோம். இதிலும் எங்கள் டிரைவர் எல்லாரும் போகும்வழியில் போகாமல் தனிவழியில் சென்றார். ஒரு இடத்தில் மலைப்பாங்கான பாறைகளில் பாதையே இல்லாமல் கிட்டத்தட்ட ஏரிக்குள் சற்றுத் தூரம் காரைச் செலுத்தும்படி ஆயிற்று. பின் நாங்கள் தங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். "சன்ஸ்கார்" சானலில் தினமும் "கங்கா தீபம்" ஏற்றிப்பாடும் "பரமார்த்த நிகேதனின்" ஸ்வாமிஜி "சிதானந்தாவின்" முயற்சியால் சிலவெளிநாட்டு குஜராத்தியர்களின் பண உதவியால் கட்டப்பட்ட ஆசிரமம், மற்றும் தங்கும் விடுதி. அறைகள், பஜனைக்கூடம், சாப்பிடும் இடம்,சமையல் அறை எல்லாம் நன்றாக இருக்கிறது, கழிப்பிடத்தைத் தவிர. இதில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்று புரியவில்லை. நாங்கள் அங்கு போய் அறைகளுக்குப் போனதும் இரவு 8-00 மணி அளவில் கூட்டுப் பிரார்த்தனை, பஜனை மற்றும் மீட்டிங் என்று அறிவிப்புச் செய்தார்கள்.

Sunday, October 29, 2006

44.ஓம் நமச்சிவாயா-15

சாகாவில் இருந்து நாங்கள் "பர்யாங்க்" என்னும் ஒரு இடத்தில் போய்த் தங்கினோம். வழக்கம் போல வழியில் சில வண்டிகள் நின்று போய்த் தொந்திரவு கொடுத்தது. எங்கள் டிரைவர் உடனே போய் உதவுவார். பொதுவாகவே ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டாலும் இவர் எல்லாருக்கும் உதவுவதில் முன்னால் நிற்பார். எல்லா வண்டிகளும் சரியாகக் கிளம்புகிறதா என்று பார்த்துவிட்டுக் கிளம்பி அந்த மலைப்பாதையில் வண்டியோடு உண்மையிலேயே குதித்துக் கீழே இறங்கி எங்கள் வயிற்றைக் கலக்கிவிட்டு முன்னால் போய் நின்று நான் ஜெயிச்சுட்டேன் என்பது போல கட்டை விரலை உயர்த்திக் காட்டிச் சிரிப்பார் நாங்கள் அவரை ஜாக்கி சான் என்றும் (பார்க்க அந்த ஜாடையில் இருப்பார்) திபெத்திய ரஜினி என்றும் குறிப்பிடுவோம். எப்பவும் அவர் வழி தனி வழிதான். அதனால் அப்படி. வழியில் சீன RTO அலுவலகத்தில் மானசரோவர் நெருங்கும் சமயம் என்பதால் எல்லா வண்டி ஓட்டிகளின் லைசென்ஸ், அடையாள அட்டை முதலியனவற்றைப் பரிசோதித்து அனுப்புகிறார்கள். அநேகமாய் இந்தியாவிலேயே தமிழ் நாட்டைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள், கால் டாக்ஸி ஓட்டுநர்கள், வாடகை வண்டி ஓட்டுநர்களுக்கு அடையாள அட்டை இருக்கிறது. மேலும் லைசென்ஸ் எதுவரை இருக்கிறது, அடுத்து எப்போது புதுப்பிக்க வேண்டும் என்பதெல்லாம் புகைப்படப் பதிவு மூலம் வண்டியின் உள்ளேயே ஒட்டி விடுகிறார்கள். தமிழ்நாட்டில் இம்முறை எப்போ வருமோ தெரியலை..

பர்யாங்கில் குறிப்பிடும்படி எதுவும் நடக்கவில்லை. .குளிர் அதிகம் என்பது தவிர. திருமதி நர்மதாவின் உடல் நிலை அப்படியே இருந்தது. அதோடு அவர் மறுநாள் மானசரோவர் பிரயாணத்திற்கும் தயார் ஆனார். பர்யாங்கை விட மானசரோவர் சில அடிகள் மட்டும் குறைந்த உயரம் என்று சிலரும் இல்லை மானசரோவர்தான் உயரம் என்று சிலரும் சொல்கிறார்கள். கடல் மட்டத்திற்கு மேல் 14,950 அடி உயரத்தில் உள்ளது. உலகில் எங்கும் இத்தகைய அபூர்வமான ஏரி இத்தனை உயரத்தில் கிடையாது. இனி மானசரோவர் பிறந்த விதம் பற்றிய ஒரு நிகழ்வு.
**********************

தட்சனின் மகளான தாட்சாயணி தன்னைத் தானே மாய்த்துக் கொண்டதும், தன் மனைவியான சக்தி இல்லாமல் இயங்க முடியாத சர்வேஸ்வரன் அவள் உடலைத் தோள் மேல் போட்டுக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடியதும் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அப்போது அவர் கோபத்தைத் தணிக்க வேண்டியும், அன்னையின் சக்தி பாரதமெங்கும் பரவி அவள் அருளாட்சி எங்கும் திகழ வேண்டியும், மஹாவிஷ்ணுவானவர் தன் சுதர்ஸன சக்கரத்தால் அன்னையின் உடலைத் துண்டு துண்டுகளாக்குகிறார். ஒவ்வொரு துண்டும் வீழ்ந்த இடம் ஒரு "மஹா சக்தி பீடம்" ஆகிறது. அப்படி அன்னையின் வலது முன் கை வீழ்ந்த இடமே மானசரோவர் ஆகும். அன்னையின் வலது முன்கை வீழ்ந்த போது படுவேகமாக ஆகாயத்தில் இருந்து பாய்ந்து வந்து விழுந்தது. அப்போது இமயமே அதிர்ந்தது. அண்டசராசரங்கள் கிடுகிடுத்தன. அந்தப் பிரதேசம் தாழ்வடைந்தது. மேலும் வலது முன்கை வீழ்ந்த இடம் ஒரு அகண்ட பெரிய பள்ளம் ஆனது. புல், பூண்டு, நீர் என ஒன்றுமே இல்லாத அந்தப் பிரதேசத்தில் அந்தப் பள்ளம் வேதகாலத்தில் மஹாசக்தி பீடமாக வணங்கப் பட்டிருக்கிறது. பற்பல யுகங்களுக்குப் பிறகு பிரம்மாவின் நல்வரவால் அந்தப் பிரதேசத்தில் நீர் நிரம்பி இருக்கிறது. இதுவே பின்னால் மானசரோவர் என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்திபீடத்தை அலங்கரிக்கும் தேவி "தாட்சாயணி"யே ஆவாள். இப்போது மானசரோவரின் பெருமைகளைத் தெரிந்து கொள்ளும் முன் அது வந்த விதம் பற்றி அறிவோமா?

அத்திரி மஹரிஷியின் தவத்தால் மகிழ்ச்சி அடைந்த மஹாவிஷ்ணு அவர் முன் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்க ஸ்ரீமந்நாராயணனின் அம்சத்தோடு ஒரு பிள்ளை கேட்கிறார் மஹரிஷி. தன் அம்சத்தோடு ஈசன், பிரம்மாவின் அம்சங்களையும் கலந்து ஒரு பிள்ளையைத் தானே சிருஷ்டி செய்து அத்திரி மஹரிஷியிடம் அளிக்கிறார். அந்தக் குழந்தையை முறைப்படி ரிஷிக்குத் தத்தம் செய்கிறார். (இதுவே அனசூயையின் கற்பைச் சோதிக்க வந்த மும்மூர்த்திகளையும் குழந்தை வடிவில் அனசூயை மாற்றியதாகவும், மும்மூர்த்திகள் திரும்பிச் செல்லும்போது தங்கள் அம்சமான அந்தக் குழந்தையை விட்டுச் சென்றதாகவும், அந்தக் குழந்தையே "தத்தாத்ரேயர்" எனவும் செவிவழிக் கதைகள் கூறுகின்றன.) ஆனால் இது இப்போது நான் எழுதுவது ஸ்காந்த புராணத்தில் இருப்பதாகவும் அதில் "மானஸ்காந்தம்" என்ற பகுதியில் இது வருவதாகவும் புராணங்களைப் பற்றிய தொகுப்பில் படித்திருக்கிறேன். இதில் கைதேர்ந்த "குமரனோ, சிவமுருகனோ அல்லது (ரவி)கண்ணபிரானோ" தான் இதை விளக்க வேண்டும். மஹாவிஷ்ணு தத்தம் செய்ததால் தத்தாத்ரேயர் என்ற பெயர் பெற்ற அந்தக் குழந்தை சதுர்வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களயும் நன்கு கற்றுப் பெரும் முனிவராக விளங்கினார். ஒரு முறை தத்தாத்ரேயர் இமயத்தைக் கடந்து செல்ல முயன்றபோது இமவான் அவர் முன் தோன்றி மலையைக் கடந்து ஏன் செல்ல வேண்டும் எனக் கேட்க, இமயத்தை விட பிரம்மாண்டத்திலும், உயரத்திலும் மற்ற எல்லாவற்றிலும் குறைவான மந்தரம், விந்தியம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம் போன்ற மலைகளை நாடிப் பக்தர்கள் கூட்டம் செல்வதாகவும் அதன் காரணம் தெய்வங்கள் உறையும் இடமாக அது இருப்பதால்தான் எனவும் கூறுகிறார். மேலும் இமவானைப் பார்த்து உன்னிடம் மறைந்துள்ள அரிய தலங்களை வெளி உலகுக்குக் காட்டு. உன் பொக்கிஷங்கள் இந்தப் பூலோக மக்களுக்கும் பயன்படட்டும். அந்தத் தெய்வீக ஸ்தலங்களுக்கு முதலில் என்னை அழைத்துச் செல்வாயாக என வேண்ட இமவானும் அவர் வேண்டுகோளை ஏற்றுத் திருக்கைலை அழைத்துச் சென்று கைலைநாதனைத் தரிசனம் செய்விக்கிறான். பின் இருவரும் மானசரோவர் ஏரிக்கரைக்கு வந்து அங்கு நீராடுகிறார்கள். அப்போது இந்த ஏரி அங்கேவந்த காரணத்தை இமவான் தத்தாத்ரேயரிடம் கூற ஆரம்பிக்கிறான்.
(தொடரும்.)

Sunday, October 22, 2006

43. ஓம் நமச்சிவாயா-14

திரு தி.ரா.ச. அவர்களுக்கு நான் ரொம்ப பயமுறுத்துகிறேன் என்று அபிப்பிராயம். பயமுறுத்தவெல்லாம் இல்லை. நடந்த நிகழ்வுகளை எனக்குத் தெரிந்த வரை அப்படியே கொடுக்கிறேன். இதிலே என்னோட மனநிலையும், என் கணவரோட மனநிலையும் தான் சொல்லி வருகிறேன்னு நினைக்கிறேன். எங்களோட தனிப் பட்ட அபிப்பிராயத்தினால் யாரும் பாதிக்கப் படாமல் இனிமேல் எழுதலாம்னாலும் சில நிகழ்வுகளைக் கட்டாயமாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. முத்தமிழ்க் குழுமத்தில் சிவசங்கருக்கு எல்லாருமேவா உடல்நலமில்லாமல் போனார்கள்? உங்கள் குழுவில் ஆரோக்கியமாய் யாருமே இல்லையா? என்று கேள்வி. ரொம்பவே உடல் நலமில்லாமல் போனது டாக்டர் திருமதி நர்மதாவும், திரு கோபாலகிருஷ்ணனும் தான். திரு கோபாலகிருஷ்ணனைத் திரும்ப அனுப்பி விட்டார்கள். துணைக்கு ஆளோடு, அவர் வீட்டுக்கும் தகவல் கொடுத்து விட்டார்கள். திருமதி நர்மதா கைலை வரை வந்தார். மற்றவர்களுக்கு அங்கங்கே சில சில சின்னச் சின்னப் பிரச்னைகளும், உடல்நலக் குறைவும் ஏற்படத் தான் செய்தது. இதை மறைப்பதற்கோ மறுப்பதற்கோ இல்லை. முழு ஆரோக்கியத்துடன் இருந்தவர்களில் பதிவு 13-ல் எழுதிய மூன்று பெண்மணிகளைத் தவிர மதுரையில் இருந்து வந்த அலமேலு என்பவர், மைலாப்பூரில் இருந்து வந்த லலிதா, திருச்சியில் இருந்து வந்த தம்பதியர், திரு மனோஹர், எங்கள் குழுத் தலைவரான திரு மனோஹர் 9-வது முறையாகக் கைலை வருகிறார். இவர் குளிருக்கான ஆடைகள் கூட அணியவில்லை. பாண்டிச்சேரியில் இருந்து வந்த பெரியவர், டாக்டரின் கணவர்,(இவர் 73 வயது ஆனவர்), பங்களூரில் இருந்து வந்த பெரியவர் சங்கரன், இன்னும் சிலர் இருந்தார்கள். ஆனால் குளிர் எல்லாரையும் வாட்டியது என்பதே உண்மை. சிலர் சாப்பாடு பிடிக்காமல் அவதிப் பட்டார்கள். வட இந்திய உணவுமுறை பழக்கம் இல்லாமல் சிலருக்குப் பிடிக்கவில்லை. இதையும் மறுக்க முடியாது.

முத்தமிழ்க்குழுமத்தில் திரு ரமணன் இறைவனின் நினைவுக்கு முன்னால் எல்லாம் துச்சம் என்றும் தான் கைலை சென்றபோது அதிகம் சிரமப் படவில்லை என்றும் உடல் என்பதே நினைவில் இல்லை என்றும் கூறுகிறார். அத்தகைய நிலை எங்களில் யாருக்கும் இல்லை என்பது நிஜம். மற்றபடி பக்தியில் யாரும் பின்வாங்கவில்லை. எப்படியாவது போய்க் கைலையைத் தரிசனம் செய்யவேண்டும் என்ற பேராவலுடன் தான் எல்லாரும் எதையும் வாய்விட்டுச் சொல்லாமல் பயணத்தைத் தொடர்ந்தார்கள். இப்போது இந்த 2006-ல் போவதற்கே இவ்வளவு சிரமம் என்றால் முன்னாளில் எல்லாம் எப்படிப் போயிருப்பார்கள்? நினக்கவே முன்னோர்களைக் கை எடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது.

இப்போது சிவசங்கரின் வேண்டுகோளுக்கு இணங்க பிரம்மபுத்திராவைப் பற்றிச் சிலவரிகள். பாரத நாட்டில் நதிகளைப் பெண் உருவில்தான் வணங்கி வருகிறார்கள். பிரம்மபுத்ராவும், சோன் நதியும் விலக்கு. சிலர் மஹாநதியும் ஆண்நதி என்கிறார்கள். அது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. இந்த பிரம்மபுத்ராவைக் கடந்து தான் நாங்கள் சாகாவுக்கு வந்திருந்தோம். பாலம் இருந்தது. இருந்தாலும் குறிப்பிட்ட இடங்களில் சற்றுத் தண்ணீரும் இருந்தது. ஆனால் 2004 வரை இந்தப் பாலம் கூடக் கிடையாதாம். பெரிய படகு அல்லது கட்டுமரங்களில் முன்னாலேயே தயார் செய்து வைத்திருப்பார்களாம். அதில் வரும் வண்டிகளைச் சங்கிலிகளால் கட்டி விட்டுப் பின் அக்கரையில் இருந்து இழுப்பார்களாம். அப்படித் தான் போய் வந்திருக்கிறார்கள். அப்படிப்பார்க்கும்போது நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்லவேண்டும்.

பிரம்மாவின் புதல்வன் என்பதால் "பிரம்மபுத்ரா" என்று பெயர் என்று சொல்கிறார்கள். ஆனால் திபெத்தியர்கள் இதை அழைப்பது "சான்போ" என்ற பெயரிலோ "சம்போ" என்ற பெயரிலோ தான். இங்கே நதியின் அகலம் குறைவுதான் என்றாலும் ஆழம் மிகவும் அதிகம். 400 அடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். அஸ்ஸாமில் எப்படி இருக்கும் என்று சிவசங்கர்தான் சொல்லவேண்டும். வங்காளத்தின் துயரம் என்று அழைக்கப் படும் இந்த நதி இங்கே சற்று அடங்கித் தான் ஓடுகிறது என்றே சொல்ல வேண்டும். கடல் மட்டத்துக்கு மேல் 8,000 மீட்டர் உயரத்தில் இருக்கும் சாகாவுக்கு முன்னால் சிலப் பனிமலைச் சிகரங்கள் பாதுக்காக்கப் பட்ட பகுதி என்று சொல்கிறார்கள். இங்கே ராணுவம் அந்தப் பகுதியைப் பாதுகாக்கிறது என்கிறார்கள். உறைபனி ஏரிகள் அங்கே இருக்கின்றனவாம். சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும் சொல்கிறார்கள். சாகாவுக்குச் சற்று முன்னால் கிழக்கே பிரியும் சாலை திபெத்தின் தலைநகரான "லாஸா"வுக்குப் போவதாகவும் அடுத்த ட்ரெக்கிங் இதை முடித்து விட்டு அக்டோபரில் லாசாவுக்குப் போவதுதான் என்றும் ட்ராவல்ஸ்காரர்கள் மூலம் அறிந்து கொண்டோம்.

பொதுவாக திபெத்திய மக்கள் ஏழையாகவும் அறியாமையிலும் இருக்கிறார்கள். இவை தேவை இல்லை என்றே எழுதாமல் விட்டேன். என்றாலும் சிலர் பார்த்தது, கேட்டது என்று எழுதச் சொல்வதினால் எழுதுகிறேன். தினசரி வாழ்வுக்கே அவர்கள் நம்பி இருப்பது காட்டெருமைகளைத்தான். செம்மறி ஆடுகளையும், காட்டெருமைகளையும் தேவைப்படும்போது விற்றுக் கிடைக்கும் பணத்தில்தான் வாழ்க்கை ஆதாரமே இருக்கிறது.காட்டெருமைகள் தானே போய் மேய்ந்துவிட்டு வீடு திரும்புகின்றன. சுமை தூக்குவதும் அவற்றின் வேலை. இது மாதிரிச் சுற்றுலாப் பயணிகள் வரும் நேரம் அவர்களுக்கு சுமை தூக்க வாடகைக்குக் காட்டெருமைகள், குதிரைகளைக் கொடுத்துவிட்டுப் பணம் சம்பாதிக்கிறார்கள். வழிபாட்டுக்கு இருக்கவே இருக்கிறார் கைலாசபதி. காணும் கற்களில் எல்லாம் கைலை நாதனைக் காணும் திபெத்தியர்கள் அவற்றைக் கோபுரம்போல அடுக்கிக் கைலைநாதனாக வழிபடுகிறார்கள்.கொம்புகளுடன் கூடியக் காட்டெருமை முகத்தையும் வழிபடுகிறார்கள். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போவது என்றால் ட்ராக்டர் போன்ற ஒரு வாகனம், குடும்பமே அதில் எல்லா சாமான், செட்டுக்களுடனும் போகிறது. செய்திப் பரிமாற்றம் குதிரைகள் மூலம்தான். நாட்டுப் பகுதியில் இருந்து வரும் ஊழியர்கள் குதிரைக் காரர்களிடம் கொடுக்கும் செய்தியை அவர்கள் அங்கே இந்த மாதிரி மலைக்காடுகளில் வசிக்கும் கொஞ்சநஞ்சக் குடிமக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள். முன்னேற்றம் என்பதே எந்த விதத்திலும் இல்லை. குழந்தைகளுக்குப் படிப்பு என்பதே கிடையாது. எதிர்காலம்? இந்தக்காட்டில்தான். குதிரைகள், காட்டெருமைகள் மூலம் என்ன கிடைக்கிறதோ அதுதான். மின்சாரம் அறவே கிடையாது. ஒரு குறிப்பிட்ட இடங்களில் அதுவும் அங்கே அரசு அலுவலகம் இருந்தால் ஜெனெரேட்டர் மூலம் மின்சாரம் இருக்கும். பகலில் அதுவும் கிடையாது. ஆனால் இந்த மலைமக்கள் நடக்கும் வேகம் இருக்கிறதே? வியக்கவைக்கிறது. சாகாவுக்கு முன்னால் எங்கள் வண்டி ஒரு இடத்தைக் கடக்கும்போது ஒரு குடும்பம் முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தது. நாங்கள் சாகா போய்த் தங்குமிடம் போகும்போது அந்தக் குடும்பம் ஊருக்குள் நுழைந்து விட்டது. அவ்வளவு வேகம் நடையில். பெண்கள் ஜிப்ஸி போல உடை அலங்காரம் செய்து கொள்கிறார்கள். இவர்களின் நிலை எப்போது உயரும்? இவர்கள் நம்மிடம் பிச்சை கேட்டு வாங்கும் பொருட்கள் எத்தனை நாளுக்குத் தாங்கும்? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

Friday, October 20, 2006

42.ஓம் நமச்சிவாயா-13

எங்களுடன் வந்தவர்களில் திரு கோபாலகிருஷ்ணன் என்பவர் மூன்றாம் முறையாகக் கைலை யாத்திரை வருகிறார் என்று ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். நியாலத்திலேயே உடல் நிலை முடியாமல் போனது இங்கே வரும்போது நிலைமை மிகவும் மோசம் அடைந்திருக்கிறது. அவரை எங்கள் அறைக்குக் கூட்டி வந்து படுக்க வைத்து ஆக்ஸிஜன் கொடுக்க முயன்றார்கள். அவர் தனக்கு ஒன்றும் இல்லை என மறுக்கப் பின் அவரோடு வந்தவர்களில் ஒருவர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கே அவருக்குச் சிகிச்சை தரப்பட்டு மேலே பயணம் தொடர வேண்டாம் என வற்புறுத்தப்பட்டார். சாகாவில் தான் மருத்துவ உதவி கிடைக்கும். மேலே போகப்போக மருத்துவ உதவி கிடைக்காது. சாகா கிட்டத்தட்ட ராணுவக் கண்டோன்மெண்ட் மாதிரி ராணுவ வீரர்கள் நிறைந்த ஊராக இருந்தது. ஆகவே அங்கே மருத்துவ உதவியும் கிடைத்தது. சீன மொழி தெரிந்த ஸ்ரீமதி ஸ்ரீலட்சுமி என்பவர் கூடப் போய் பேசும்போது மொழி பெயர்த்து உதவினார். இவர் ஹைதரபாத்தைச் சேர்ந்தவர். தெலுங்கு மொழியில் பிரபல எழுத்தாளர் என்றார்கள். இவர் தன்னுடைய சம்மந்தி ஸ்ரீமதி செளமினி மற்றும் அவர் தோழி ஸ்ரீமதி கண்ணம்மா என்பவருடனும் வந்திருந்தார். குழுவிலேயே இவர்களுக்கு தனிக் கவனிப்பு இருந்து வந்தது. மூவரும் பலவிதப் பயிற்சிகளை மேற்கொண்டு இதற்கெனத் தயார் செய்து கொண்டு வந்திருந்தனர். பஜனை,கூட்டுப் பிரார்த்தனை முதலியன இவர்கள் இல்லாமல் நடைபெறாது. இதை நான் இங்கே குறிப்பிடக் காரணம் உண்டு. பின்னால் வரும்.

திரு கோபாலகிருஷ்ணன் வரப்போவது இல்லை என்பது நிச்சயம் ஆகி விட்டது. திருமதி நர்மதாவும் உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்தாலும் திரு கோபாலகிருஷ்ணன் அளவுக்கு இல்லை என்பதால் அவர் பயணத்தைத் தொடர்ந்தார். சாப்பாடு நல்ல சாப்பாடாகக் கொடுத்து வந்தாலும் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் பலராலும், அநேகமாக எல்லாராலும் சாப்பிட முடியவில்லை. 1/2 வயித்துக்கு ஏதோ கொறிப்போம். கூடியவரை நீர் ஆகாரம் மட்டும் சாப்பிட்டு வந்தோம். காபி,டீ அவர்கள் கொடுக்கும் பெரிய கப்பில் குடிக்க முடியாது என்பதால் அதற்குப் பதில் ஹார்லிக்ஸ், சாக்லேட் ட்ரிங்க் என்று குடித்து வந்தோம். காலை உணவாக ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வகைக் கஞ்சி, பாதாம், பிஸ்தா போட்டது, பான் கேக், தோசை, பூரி என்று கொடுத்தார்கள். எதுவும் தொடப் பிடிக்காது. வெறும் ஹார்லிக்ஸ் மட்டும் சாப்பிடுவோம். மத்தியானம் வண்டியை டிரைவர்கள் எங்கே சாப்பிட ஏற்பாடு செய்துள்ளதோ அங்கே நிறுத்துவார்கள். சிலசமயம் ரொம்ப சீக்கிரமாக இருந்தால் வேறு எங்காவது நிறுத்துவார்கள். வெறும் சாதம், கலந்த சாதம் ஒன்று, சப்ஜி(சாம்பார் என்ற பெயரில்) மோர் அல்லது தயிர், பதப்படுத்தப்பட்ட பழங்கள், ஜூஸ் இருக்கும். சாதமும் தயிரும் சாப்பிட்டு விட்டுப் பின் ஜூஸை வாங்கிக் கொண்டு வந்து விடுவோம். வெட்ட வெளியில்தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது திடீரெனக் காற்று வீசும், அல்லது பனிமழை பெய்யும். ஜவ்வரிசிகள் போல ஐஸ்கட்டிகள் விழும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை என்பதே கிடையாது. இது கிட்டத் தட்ட 800 கி.மீட்டருக்கு நீடிக்கிறது. தண்ணீருக்குக் குறைவு இல்லை. ஆனால் எல்லாத் தண்ணீரும் பனி உருகி ஓடி வருவதால் வரும் தண்ணீர் என்பதாலும் அந்தப் பனிக்குப் பசுமை இருக்க முடியாது என்பதாலும் மரங்களே இல்லை. சில இடங்களில் ஒருவகைப் புல் இருக்கிறது. அந்த மாதிரி இடங்களில் சில வீடுகள் இருக்கும். சில இடங்களில் கட்டுகிறார்கள். கட்டினாலும்மொத்தம் 10 வீடுகளுக்குள் தான் இருக்கும். எல்லாம் களிமண்ணால் கட்டப்பட்ட வீடுகள். குறுகிய வாயிலைக் கொண்டது. ஒரே ஒரு ஜன்னல் போன்ற அமைப்பைக் கொண்டது. வீடுகள் இருக்கும் இடங்களில் "யாக்" என்று சொல்லப்படும் காட்டெருமைகளைப் பழக்கி வைத்துக் கொள்கிறார்கள். எல்லாரிடமும் ஒரு நாய் கட்டாயம் இருக்கிறது. இந்தக் காட்டெருமைகள்,ஆடுகள், குதிரைகள் மேயும்போது காவல் போலக் கூடப் போகிறது.

அன்று இரவு எங்களுடன் திரு கிருஷ்ணா என்ற எங்கள் பயணக் கண்காணிப்பாளர் மட்டும் தங்கினார். மறுநாள் காலை வெளியே வந்து பல் தேய்த்து, முகம் கழுவ முடியவில்லை. குளிர். ஒரு பெரிய ட்ரம் நிறைய வெந்நீர் போட்டு வைத்திருந்தார்கள். எல்லாம் எடுக்கும்போது சூடாக இருந்தது. கையில் விடும்போது ஆறி விடுகிறது. கையை எல்லாம் இழுக்க ஆரம்பித்தது. தேள் கொட்டினால் கடுக்குமே அதுமாதிரிக் கையெல்லாம் கடுக்க ஆரம்பித்தது. எனக்கு ராஜஸ்தான், குஜராத்தில் இருக்கும்போது குளிர் நாட்களில் கை, காலில் ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் அரிப்பு ஏற்படும். சில சமயம் கை, கால் விரல்கள் எல்லாம் சிவந்து வீங்கி விடும். அதனால் கொஞ்சம் பயமாக இருந்தது,என்ன ஆகப் போகிறதோ என்று. நல்லவேளையாக காலில் உல்லன் சாக்ஸ் போட்டிருந்த காரணத்தாலும், தண்ணீர் தொட்டு வேலை செய்யும் நிர்ப்பந்தம் இல்லாத காரணத்தாலும் காலில் ஏற்பட்ட அரிப்பு ஒன்றையும், மூக்கில் இருந்து தொடர்ந்து வந்த ரத்தத்தையும் தவிர வேறு பயந்த மாதிரி மூச்சு விடுவதில் தொந்திரவு எதுவும் வரவில்லை. என்னுடன் நான் தினசரி சாப்பிடும் மாத்திரைகள் தவிர INHALER -ம் அதில் போடும் காப்ஸ்யூலும் நிறைய எடுத்துப் போயிருந்தேன். கொஞ்சம் திணறினாலும் உடனேயே எடுத்துக் கொள்ள வசதியாகக் கையிலேயே இருந்தது. ஒண்ணும் இல்லாட்டியே நான் தினமும் இருமுறை Inhale செய்துக்கணும். இப்போ கேட்கவே வேண்டாம். இங்கே எனக்குப் பதினைந்து நாள் வருவது அங்கே 1 வாரம் கூட வரவில்லை. நல்லபடியாகப்போய் விட்டுத் திரும்ப வேண்டுமே என்ற கவலை வந்தது.

"பர்யாங்க்" கிளம்பினோம். மீண்டும் சிறிது பள்ளத்தாக்குப் பயணம். மலை ஏறுதல், கீழே இறங்குதல், பள்ளத்தாக்கில் பயணம். இப்படிப் போனது பயணம். வழியில் ஒரு இடத்தில் சீனப் போலீஸின் செக்போஸ்ட். அங்கே நாங்கள் யாத்திரிகர்கள் என்பதைத் தெரிவித்தபின் மீண்டும் பயணம்.வழியில் கூட வந்த சிலரின் வண்டிகள் பங்க்சர் அல்லது டயர் தொந்திரவு என்று மாற்றி மாற்றி வந்தது. உடனேயே எல்லா வண்டிகளும் நிற்கும். எந்த வண்டி சரி இல்லையோ அது சரி செய்தபின் தான் கிளம்பும். எங்கள் டிரைவர் எல்லா வண்டிகளின் ரிப்பேர் வேலைக்கும் உடனேயே போய் விடுவார். அது முடிந்து எல்லா வண்டிகளும் கிளம்பிப் போனபின் தான் அவர் வண்டியை எடுப்பார். இப்படி எல்லா இடத்திலும் கடைசியாக வண்டியைக் கிளப்பினாலும் எல்லாருக்கும் முன்னால் குறுக்கு வழியாகப் போய் முன்னால் நிற்பார். அவர் போகும் வழியைப் பார்த்தால் நிஜமான கைலாசம் போகப் போகிறோம் என்றே தோன்றும். மலையில் இருந்து குதிப்பார் வண்டியில் எங்களையும் வைத்துக் கொண்டு. பாதையோ படு மோசமான பாதை. பத்ரிநாத், கேதாரநாத் பாதைகளோடெல்லாம் ஒப்பிடவே முடியாது. அதை பாதை என்றே சொல்ல முடியாது. மலையை வெட்டி வழி உண்டு பண்ணி இருக்கிறார்கள். வண்டி ஜன்னலைத் திறந்தால் புழுதி பறக்கும். கதவை மூடினால் ஜன்னல் வழியாகச் சூரிய வெளிச்சம் பட்டு சூடாக இருக்கு. ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து ஓட்டினால் உடனேயே டிரைவர்கள் எல்லாம் ஒரு இடத்தில் தங்கி ஓய்வு எடுத்துக் கொள்வதோடு அல்லாமல் வண்டியில் உள்ள சில சில்லறைப் பழுதுகளையும் சரி பார்த்துக் கொள்கிறார்கள். மலைப்பாதையில் போனால் எத்தனை மலை வருகிறதோ அத்தனையும் முடிந்தால் தான் வண்டி நிற்கும். வண்டியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு நின்றால் கூடப் பின்னால் வரும் வண்டிகள் முன்னால் கடந்து வர முடியாது. அவ்வளவு குறுகலான பாதைகள். ஆகையால் மலைகள் கடக்கும் முன்பே அதற்குத் தயார் செய்து கொள்கிறார்கள். மதிய உணவு முடிந்து ஓய்வும் எடுத்துக் கொண்டு அன்று சாயங்காலம் 6-00 மணிக்குள் "பர்யாங்க்" வந்து சேர வேண்டும் என்று வந்து கொண்டிருந்தோம்.

டாக்டர் நர்மதாவின் உடல் நிலை சற்றுக் கவலை அளிக்கக் கூடியதாக இருந்தது. அவருடன் வண்டியில் கூட வந்த ஸ்ரீநிவாசனும், அவர் மனைவியும்தான் எல்லாத் தங்கும் இடங்களிலும் கூட இருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெற்ற மகள் போல கல்பனா ஸ்ரீநிவாசன் திருமதி நர்மதாவிற்குப் பணிவிடை செய்து வந்தார். மாலை "பர்யாங்க்' வந்தது. இங்கே முதல் முதலில் நாங்கள் "Mud House" எனப்படும் களிமண்ணால் கட்டப் பட்ட வீடுகளில் தங்க வைக்கப் பட்டோம். எங்கள் அறையில் 5 பேர் தங்கலாம். எங்களுடன் திரு தாரகராமன் என்பவர் தன் மனைவியுடனும், திருமதி லலிதா என்ற பெண்மணி மைலாப்பூரில் இருந்து தனியாக வந்திருந்தார். தங்கி இருந்தார்கள். திருமதி தாரகராமனும் உடல் நிலை மோசமாக இருந்தார். சர்க்கரை நோய் வேறே வாட்டிக் கொண்டிருந்தது. தினமும் ஊசி போட்டுக் கொள்வார். அன்று போடமுடியவில்லையாம். அதனால் ரொம்பவே முடியாமல் இருந்தார். நான் அவர்களை நினைத்துக் கவலைப்பட்டேன், எனக்கு வரப்போவதைப் பற்றி உணராமல். நாளைப் பயணத்தின் முடிவில் "மானசரோவரை" அடையலாம்.. "திருக்கைலை"யின் முதல் தரிசனமும் கிடைக்கும். இதுதான் நினைப்பாக இருந்தது. என் கணவருக்கு இன்னும் மூச்சு விட முடியாமல் போனது. அதோடு விடாத இருமல் வேறே இருந்தது. கேட்டதில் சிலருக்கு இப்படி இருக்கும் என்றும் இது ஒன்றும் பயப்படும்படி இல்லை என்றும் சொன்னார்கள். ஆனால் செந்தில் என்ற இளைஞர் கஷ்டப்பட்டதைப் பார்க்கும்போது எங்களுக்கும் அப்படித்தான் தோன்றியது.

Saturday, October 14, 2006

41.ஓம் நமச்சிவாயா-12

நியாலம் வந்ததில் இருந்தே என் கணவருக்கு மூச்சு இரைக்க ஆரம்பித்தது. கொஞ்சம் நடந்தாலே மூச்சு இரைத்தது. அதுவும் அங்கே படி ஏறி இறங்க ரொம்பச் சிரமப்பட்டார். தெருக்கள் வேறு ஏறி ஏறி இறங்க வேண்டும். ரொம்ப உயரமாக இருக்கும்,. திடீரெனக் கீழே இறங்க வேண்டும். எனக்குப் பருவ நிலையின் மாற்றம் எப்போதுமே ஒத்துக் கொள்ளாது. மூக்கில் இருந்து ரத்தம் வர ஆரம்பிக்கும். இப்போது வர ஆரம்பித்தது. எங்கள் குழுவில் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லக் கூடியவர்கள் ஒரு பத்து பேரும், பூரண ஆரோக்கியத்துடன் திரு மனோஹரைத் தவிர ஒரு 4,5 பேரும் தான் இருந்தார்கள். இந்நிலையில் சாகா பிரயாணம் துவங்கியது. எங்கள் குழுவில் திரு கோபாலகிருஷ்ணன் என்பவர் மூன்றாம் முறையாகக் கைலை யாத்திரைக்கு வருகிறார். அவர் தலைமையில் சிலர் வந்தார்கள். ஆனால் இந்தக் கோபாலகிருஷ்ணனுக்கு நியாலம் வந்ததில் இருந்து உடல் நிலை சரியில்லாமல் போனது. அதோடு சாகாவுக்கும் கிளம்பி வந்தார். ஏற்கெனவே டாக்டர் நர்மதாவின் உடல் நிலையிலும் பிரச்னை இருந்தது.

வழியில் ஒரு சிறிய நதிக்கரையில் பகல் 2 மணி சுமாருக்கு வண்டிகள் நின்று எல்லாரும் மதிய உணவு எடுத்துக் கொண்டோம். டிரைவர்கள் எல்லாருக்கும் நாங்கள் சாப்பிடும் சைவ உணவு ஏற்காது என்பதால் அவர்களுக்கு என்று இந்த மாதிரிச் சில இடங்களில் திபெத்தியர் உனவு விடுதிகள் இருக்கின்றன. அவை வந்ததும் வண்டிகள் நிறுத்தப்பட்டு டிரைவர்கள் அங்கே போய்ச் சமைத்துத் தரச் சொல்லிச் சாப்பிடுவார்கள், எங்களுக்குப் பூண்டு, வெங்காயம், மசாலா சேர்க்காத உணவு.

வழி எல்லாம் நிறைய நதிகள், ஓடைகள், சிற்றோடைகள் கடக்க வேண்டி இருந்தன. மனித நடமாட்டம் என்பதே இல்லை. நியாலத்தில் வியாபாரம் செய்யும் நபர்கள் கூட சீனர்கள் தான். சீன் அரசு கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மக்களை அங்கே குடியேற்றிக் கொண்டு இருக்கிறது. எல்லாவற்றிலும் அவர்கள் ஆதிக்கம்தான். உள்ளூர் மக்கள் நம்மிடம் வந்து காசு கேட்கிறார்கள். சாப்பிடக் கேட்கிறார்கள். மிகவும் வறுமையுடனும், இழிந்த நிலையிலும் இருக்கிறார்கள். பெண்கள் வந்து சூழ்ந்து கொண்டு பொட்டு, துணி, வளையல், மணிமாலை முதலியன கேட்கிறார்கள். என்னிடம் இருந்த வளையல்களை எல்லாம் கொடுத்தும் ஒரு கூட்டம் சூழ்ந்து கொள்ளவே எல்லாரும் சேர்ந்து என்னை வண்டியில் ஏறிக் கதவை மூடிக் கொள்ளச் சொன்னார்கள். அப்படியும் ஜன்னல் கதவை வந்து தட்டித் தட்டிக் கேட்டார்கள். பிஸ்கட், சாக்லட்,தின்பண்டங்கள் என்று யாரிடம் என்ன இருந்ததோ அதைக் கொடுத்தோம். எங்களுடன் வண்டியில் கூடவரும் பெரியவர் சங்கரன் தன் கைப்பையில் இருந்து பிரசாதங்கள் விபூதி, குங்குமம் என்று குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்து குழந்தைகளுடன் ஒரு குழந்தையாக விளையாடினார்.

மலைகளின் தோற்றம் விசித்திரம் விசித்திரமாக இருந்தது. ஒரு இடத்தில் பாறைகளாய்த் தோற்றம் அளிக்கும். ஒரு இடத்தில் நீலமலைகளாகக் காட்சி அளிக்கும். ஒரு இடத்தில் மஞ்சள் நிறமாக இருக்கும். அதே போல் மலைகளின் மேலிருந்து விழும் தண்ணீரும். வெள்ளியை உருக்கி ஊற்றியது போலப் பனி உருகி ஓடி வந்து கொண்டிருக்கும். தண்ணீர் சில இடங்களில் நிறமற்று இருக்கும். சில இடங்களில் பளபளக்கும் பச்சை நிறத்துடன் நடுவே வெள்ளி ஜரிகை போட்டது போல வெள்ளி நிறத்துடனும் இருக்கும். ஒரு ஏரி முழுக்கமுழுக்க நீல மலைகளின் ஒளி விழுந்து பிரதிபலிக்கிறது. தூரத்தில் இருந்தே ஒரு ஏரி முழுக்க பலவிதமான நீலக் கலர்களில் எத்தனை ரகம் உண்டோ அத்தனை ரகத்திலும் காட்சி அளிக்கிறது. கிட்டே போனால் அப்பாடி,எவ்வளவு பெரிய ஏரி? என்ற வியப்பு ஏற்படுகிறது.

இத்தனை இருந்தும் மருந்துக்குக்கூட புல், பூண்டு கிடையாது. ஏதோ ஒரு வகையான செடிகள் தான். மரங்களே பல மைல்களுக்குக் கிடையாது. அங்கங்கே "யாக்" எனப்படும் காட்டு எருமைகள், செம்மறி ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. சில இடங்களில் காட்டுக் குதிரைகளும் தென்பட்டன. காட்டு எலி ஒரு முயல் அத்தனை பெரிசாக இருக்கிறது. அதை முயல் என்றே முதலில் நினைத்தோம். அப்புறம்தான் தெரிந்தது காட்டு எலி என்று. திபெத்தியன் நாய்களும் கூட மிகப் பெரிதாக இருந்தன. நாங்கள் ஏற்கெனவே இந்த நாய்களிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டிருந்தோம். ஆகவே தனியாக எங்கேயும் போகமாட்டோம். அன்று மாலை சுமார் 6-00 மணி அளவில் நாங்கள் பிரம்மபுத்திரா நதி ஆரம்பித்து ஓடி வரும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம். நதியைக் கடந்தால் "சாகா" என்னும் தங்கும் இடம். குளிர் தெரிய ஆரம்பித்தது. Altitude மாற்றத்தினால் யாருக்கு என்ன தொந்திரவு இனிமேல் தான் தெரியும். எல்லாரும் தலைக்குத் தொப்பி, கழுத்தைச் சுற்றி மஃப்ளர், ஸ்வெட்டர், கோட் என்னும் ஜெர்கின் எல்லாம் போட்டுக் கொண்டு இருந்தோம். பிரம்மபுத்திரா நதியைக் கடந்து, கடக்கும் இடத்தில் பாலம் சற்றுச் சிறியதாக இருக்கிறது. இருந்தாலும் எல்லா இடங்களிலும் இம்மாதிரி பாலங்களைக் கடந்து ரோடுக்கு வரும் இடம் நடுவில் சற்று இரும்புத் தண்டவாளங்களைப் போட்டு இருப்பதால் அதை வண்டி கடக்கும் போது "திக், திக்" என்று அடித்துக் கொள்ளும். மலைப் பாதையில் உயரத்தில் இருந்து இறங்கினால் சரிவாக எல்லாம் இறங்க முடியாது. கிட்டத் தட்ட 10 அடி அல்லது 15 அடிக்குமேல் உயர்த்தில் இருந்து வண்டி குதிக்கும். அப்படியே செங்குத்த்த்த்த்த்த்தாகக் கீழே இறங்கும். எல்லாருடைய உயிரும் ஒரு முறைக் கைலை போய் விட்டு மீண்டு வரும். இம்மாதிரி இன்னும் 2 நாள் போயாக வேண்டும். "சாகா" வந்ததும் அங்கு ஏற்பாடு செய்திருந்த தங்கும் இடம் சென்றதும், நாங்கள் நாங்களாகவே ஒரு சுமாரான அறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு உள்ளே போய்ச் சாமானை வைத்தோம்.

சாமான்கள் ஏற்றிய ட்ரக் இன்னும் வராததால் காபி, டீக்கு நேரம் ஆகும் என்று சொன்னார்கள்.ஆகவே போய் ஃபோன் செய்து விட்டு வரலாம் என்று நினைத்தோம். நான் கழட்டி வைத்த தொப்பியைப் போட்டுக் கொள்ளப் போனபோது காதில் போட்டிருந்த கம்மல் கழன்று இருப்பது தெரிந்தது. ஏற்கெனவே நேபாளில் லாக்கரில் வைக்கிறேன் என்றதற்கு என் கணவர் கம்மல் இல்லாவிட்டால் முகம் நல்லா இல்லை, (இல்லாவிட்டாலும் இருக்கிறது தானே இருக்கும்) அவருக்குப் பயமாக இருந்திருக்கு. என்று சொல்லி விட்டார். கழன்ற கம்மலைப் போட நினைத்துக் காதில் கை வைத்தால் கம்மல் மட்டும் வந்தது. திருகு காணோம். நல்ல வேளையாக மாட்டல் கம்மலிலேயே இருந்தது. திருகைத் தேடினோம். கிடைக்க வில்லை. கம்மலைக் கழற்றிக் கைப்பையில் வைத்துக் கொண்டு ஃபோன் செய்யப் போனால் அங்கே அவங்க காட்டிய தொகை சீனப் பணத்தில் 48 யுவான் என்றிருந்தது. சற்று நேரம் பேசிப் பார்த்து விட்டு (கால்குலேட்டரிலேயே தான்) வந்துவிட்டோம். மனதில் கம்மல் திருகு தொலைந்ததற்கும் இப்போது பேச முடியாமல் போனதற்கும் முடிச்சுப் போட்டு நினைவுகள். அறையில் வந்து ஜெர்கினைக் கழற்றினால் கீழே ஏதோ விழுந்த சத்தம். உடனேயே லைட்டைப் போட்டுப் பார்க்கலாம் என்றால் அங்கே ஜெனரேட்டர் போட்டால்தான் மின்சாரம் வரும். மின்சாரமெல்லாம் கிடையாது. தடவித் தடவிப் பார்த்தபோது கம்மலின் திருகு கிடைத்தது ஒருவழியாக.

Tuesday, October 10, 2006

40.ஓம் நமச்சிவாயா-11

நியாலத்தில் அன்று இரவு மட்டும் இல்லாமல் மறுநாள் முழுதும் தங்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். மறுநாளில் இருந்து மேலே மேலே உயரத்தில் போக வேண்டியதற்கு வேண்டியிருக்கும், ஆதலால் இந்த ஓய்வு. மிக ஆபத்தான வளைவுகள் கொண்ட பாதை. கொஞ்ச தூரம் வரை வீடுகள், கடைகள், மக்கள் நடமாட்டம். எங்கு பார்த்தாலும் தெருமுனைகளிலும், சற்று உயரமான இடங்களிலும் தோரணங்கள் கலர் கலராகத் தொங்கின. சில வீட்டு வாயில்களிலும் கோலம் போன்ற அமைப்புத் தெரிகிறது. கூடாரம் போன்ற அமைப்புக்களில் தோரணங்கள் கட்டப் பட்ட இடத்தை வண்டிகள் கடக்க நேர்ந்தால் பிரதட்சிணமாகச் செல்லுகின்றன. புத்த மத வழிபாட்டு இடம் என்கிறார்கள். எல்லாரும் வந்து அங்கே பிரதட்சிணம் செய்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறார்கள். நல்ல வேளையாக வெயில் இருந்தது. ஆகவே வண்டிகள் போய்க் கொண்டிருந்தன. வழியில் அருவிகள் வழக்கம் போல் குறுக்கிட்டன. ஒரு இடத்தில் மலை மேலிருந்து விழும் அருவி ரோட்டில் நேராக விழுவதால் அதன் வேகத்தாலும் அதன் தாரையாலும் வண்டிகள் ஓட்ட முடியாது என கான்கிரீட்டில் தூண்கள் எழுப்பி மேலே ஒரு கான்கிரீட்டால் ஆன பலகை போட்டும் அதை மீறிக் கொண்டு தண்ணீர் மிக வேகமாக விழுந்து கொண்டு இருந்தது.

ரோடா அது எல்லாம். எல்லாம் வண்டிகள் போய்ப்போய்ப் பழக்கத்தில் ஏற்பட்டவையாக இருந்தனவே தவிர ஒழுங்காகப் போடப்பட்ட மாதிரி இல்லை. வண்டியும் குதித்துக் குதித்துப் போனது. எல்லாரும் மேலேயும் கீழேயும் குதிக்க வேண்டி வந்தது, வண்டிக்குள்ளேயே. புழுதி பறக்கிறது. வாயை மூட மாஸ்க் கொடுத்திருந்தார்கள். கண்டிப்பாக வாயை மூடிக் கொள்ள வேண்டும். என்னதான் வண்டியின் ஜன்னல்கள் மூடி இருந்தாலும் புழுதி கொஞ்சம் உள்ளே வரத் தான் செய்கிறது. இம்மாதிரியே மேலே ஏறிக் கீழே இறங்கிச் சில சமயம் கீழ் மலையிலேயே சுற்ற வேண்டும். பின் சமவெளி. மறுபடி ஒரு மலை. இமயமலை அடுக்குத் தொடர். அதில் ஒவ்வொரு அடுக்கும் ஏறி, இறங்கி அந்தச் சமவெளி அல்லது பள்ளத்தாக்கைக் கடந்து, மறுபடி இன்னொரு மலை ஏறி, இறங்கி இப்படியே போய் அன்றிரவு 8-30 மணி அளவில் "நியாலம் ஹோட்டல்" அடைந்தோம். ஹோட்டலில் மாடியில் அறைகள். சாப்பிடும் இடம் கீழே. கழிப்பறை வசதி இருந்தாலும் அத்தனை பேருக்குப் போதாது. சமாளித்தோம்.

அன்றிரவு எல்லாரும் கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைக்கப் பட்டு எல்லாருக்கும் மறுபடி பயணத்தின் சிரமங்கள் பற்றி எடுத்துச் சொல்லப் பட்டது. மேலே போகப் போக ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் இருப்பதற்கும் ட்ராவல்ஸ்காரர்களே "Diamox" என்னும் மாத்திரை இருவேளையும் கொடுக்கிறார்கள். நம் மருத்துவர்களும் இதை ஆதரிக்கிறார்கள். மேலும் திட உணவு இல்லாவிட்டாலும் திரவ உணவு அதிகம் எடுத்துக் கொள்ளும்படியும் வற்புறுத்துகிறார்கள். இதெல்லாம் கட்டாயம் இவ்வளவு உயரம் பயணம் செய்யும்போது தெரிந்து கொள்ள வேண்டியவை, என்பதால் எழுதுகிறேன். மேலும் காலை "ப்ளாக் டீ"யுடன் எழுப்புவார்கள். நமக்கு அவ்வளவாக "ப்ளாக் டீ" பழக்கம் கிடையாது என்றாலும் அங்கே கட்டாயம் சாப்பிட வேண்டும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் தேவை என்கிறார்கள்.

அன்றுக் கூட்டுப் பிரார்த்தனை முடிந்து இரவு எல்லாரும் படுத்தோம். எல்லாருக்கும் கட்டில், மெத்தை, தலையணை, ரஜாய் முதலியன இருந்தது. என்றாலும் மேலே போகப் போக எப்படியோ தெரியாது. மறுநாள் காலை நாங்கள் எல்லாரும் காலை உணவுக்குக் கூடியபோது மலை மேல் ஏறும்போது தேவைப்படும் பொருட்கள் இல்லை என்றால் அங்கே வாங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தப் பட்டோம். எல்லாருக்கும் "RED BULL" என்ற பானம் வாங்கிக் கொள்ளும்படியும் சொன்னார்கள். கைலை பரிக்ரமா செய்யும் போது அது தேவைப்படும் என்றார்கள்.

கடையில் பொருட்கள் வாங்கப் போனால் விலையை அவர்கள் கால்குலேட்டரில் போடுவார்கள். நாம் கேட்கும் விலையை அதில் போட வேண்டும். இப்படிப் பேரம் நடந்து சாமான்கள் வாங்கிக் கொண்டு சீன தொலைபேசித் துறை மூலம் நடத்தப் படும் தொலைபேசியில் ஒரு நிமிஷத்துக்கு 5 யுவான் கொடுத்து யு.எஸ்ஸில் உள்ள பெண்ணிடமும், பையனிடமும் பேசினோம்.. இந்தியாவுக்கு 6 யுவான். ஒரு யுவான் இந்தியப் பணத்தில் 6ரூ. ஆகிறது.

வெந்நீர் எல்லாம் ஒரு ப்ளாஸ்டிக் மக்கில் கொடுப்பார்கள். அதிலேயே எல்லாம் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதால் குளியல் எல்லாம் கிடையாது. அந்தக் குளிரில் தண்ணீரில் குளித்தால் விறைத்துத் தான் போகும். இருந்தாலும் சில துணிகளைத் துவைத்துக் கொண்டோம். மேலே போகப் போக எப்படியோ என்று. மதியச் சாப்பாடு தென்னிந்திய முறைப்படி சாம்பார், ரசம், சப்ஜி என்று இருந்தாலும் கூடவே ரொட்டியும் இருந்தது.

நியாலம் வருவதற்குள் சிலருக்கு ரொம்பவே முடியாமல் போய்விட்டது. அதில் எங்களுடன் வந்த டாக்டர் நர்மதாவும், SBI Retd. திரு தாரகராமன், திருமதி தாரகராமன் மற்றும் செந்தில் என்ற ஒரு இளைஞர் செவ்வாய் அன்று படுத்தவர்கள் எழுந்திருக்கவே இல்லை. சாப்பிடக் கூடவரவில்லை. பயணம் அவர்களை மிகவும் வாட்டி விட்டது. மேலும் இருவர் வந்த வண்டிகளும் ஒன்று டயர் பங்சர் ஆகித் தொந்தரவு கொடுத்தது. இன்னொருத்தருக்கு டயரே உருண்டு விட்டது. பின் எல்லாரும் நின்று சரி செய்து கொண்டு வந்தோம். மெக்கானிசமும் டிரைவர்கள் தெரிந்து வைத்திருப்பதால் வசதியாக இருக்கிறது. இல்லாவிட்டால் அந்த மலைக்காட்டில் என்ன செய்வது? மறுநாள் காலை "ப்ளாக் டீ"யுடன் எழுப்பினார்கள். டீ குடித்து ஓரளவு சுத்தம் செய்து கொண்டு தயார் ஆனோம்..இங்கே தான் கட்டிடம் போன்ற அமைப்பு உள்ள தங்கும் இடம். மற்ற இடங்களில் எல்லாம் (Mud House)களிமண்ணால் செய்யப் பட்ட சிறு அறைகள் தான். குளிர் தாங்கும் என்பதால் இந்த மாதிரியான அறைகள் தான் அங்கே பயணிகள் தங்கும் camp-ல் அதிகம் காணப்படுகிறது. காலை உணவு முடிந்து, மதியம் சாப்பாடும் அங்கேயே தயார் செய்து ஒரு வண்டியில் ஏற்றிப் பின் பாத்திரங்கள் சுத்தம் செய்து சமையல் அறை காலி செய்து பொருட்கள் ட்ரக்கில் ஏற்றப்பட்டு மறு நாள் பயணம் துவங்கியது. நியாலத்தில் இருந்து "சாகா" என்னும் ஊர் பிரம்மபுத்ரா நதிக்கரையில் உள்ளது அங்கே போய்த் தங்க வேண்டும். இங்கிருந்து தான் high altitude ஆரம்பிக்கிறது. எல்லாரும் மீண்டும் எச்சரிக்கப் பட்டோம். ஒரு விதமான எதிர்பார்ப்புடன் பயணம் துவங்கியது.

பி.கு: வேதாவுக்குச் சீக்கிரம் சீக்கிரம் எழுதுகிறேன் படிக்க முடியவில்லை எனக் குறை, திரு தி.ரா.ச. அவர்கள் பார்த்த இடங்கள் பற்றிச் சொல்லச் சொல்கிறார். இமயமலையின் இந்தப் பகுதி ஒன்று நீண்ட பள்ளத்தாக்காக வருகிறது. அல்லது அடுக்கடுக்கான மலைத் தொடர்களாக வருகிறது. ஆகவே பார்க்கும்படியான இடங்கள் எதுவும் இல்லை. சொன்னால் திபெத் மக்களின் வறுமை பற்றியும் மிகவும் பின் தங்கி இருப்பது பற்றியும் சொல்லலாம். . எனக்கு எழுத்துப் புதிது என்பதால் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியாமல் எல்லாவற்றையும் எழுதிப் போரடிக்கிறேன் என நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களைத் தாராளமாகச் சொல்லுங்கள். மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன்.

39.ஓம் நமச்சிவாயா-10

நாங்கள் முதலில் நுழைந்த கிராமத்தின் பெயர் "ஜாங்-மூ" என்பதாகும்.. வழி எல்லாம்

நிறையக் கடைகள். எல்லா இடங்களிலும் குளிருக்குப் பாதுகாப்பான ஆடைகளும்,

வெல்வெட் துணிகள், படுக்கை விரிப்புக்கள் முதலியன இருந்தன. நம் தமிழ்நாட்டில் அதுவும்

சென்னையில் சற்றும் உபயோகப் படாது. ஆகவே நாங்கள் மேலே நடந்தோம். மேலும் இருக்கும் பணமெல்லாம் செலவு செய்து விட்டால் மேலே போய்க் குதிரைக்கு, கூட வரும்

ஹெல்ப்பருக்கு என்று பணம் தேவைப் படும். திடீரென உடல் நிலை சரியில்லாது போனாலும்

பணம் தேவைப் படும். அதிகப்படியான சீனப் பணம் ட்ராவல்ஸ்காரர்களிடம் இருந்தது

என்றாலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது அல்லவா? சீன நேரத்திற்கும் நம்

நேரத்திற்கும் 2-1/2 மணி நேரம் வித்தியாசம்.அதாவது நம் நாட்டில் பகல் 12-00 மணி என்றால் சீனாவில் 2-30PM ஆகும். அதற்கேற்பக் கைக்கடிகாரங்களை எல்லாரும் மாற்றிக்

கொண்டார்கள். எல்லாருக்கும் தேவையான சீனப் பணம் அன்றிரவு நாங்கள் தங்கப் போகும் "நியாலம்" என்ற ஊரில் தரப் படும் என்று கூறப்பட்டது. சற்றுத் தூரம்

நடந்ததும் "எகோ ட்ரக்" கொடி ஏற்றப்பட்ட வண்டிகள் கண்ணுக்குத் தெரிந்தன. கிட்டத்

தட்ட 10, 12 வண்டிகள். எல்லாம் "டொயோட்டோ" கார் வகைகள்."Land Cruiser" வண்டிகள். ஒரு காரில் டிரைவரைத் தவிர்த்து 4 பேர் பிரயாணம் செய்யலாம். வலது பக்க டிரைவ். டிரைவரின் அருகில் ஒருத்தர். பின்னால் 3 பேர். அதற்கும் பின்னால் உள்ள இடத்தை சாமான்கள் வைக்கும் இடமாக வைத்திருந்தார்கள். எந்தக் காரில் ஏற வேண்டும் எனத்

தெரியவில்லை. நாங்களாக ஒரு காரில் ஏறிக் கொண்டோம். டிரைவர் உடனே பார்த்துவிட்டு

வந்து பின்னால் திறந்து சாமான்கள் வைக்க உதவினார். எல்லாம் சைகையில்தான். அவர்

சொல்வது நமக்குப் புரியாது. நாம் கேட்பது அவருக்குப் புரியாது. போக வேண்டிய ஊரின் பேரைச் சொல்லிக் கையால் எத்தனை மணி நேரம் ஆகும் எனக் கேட்டோம். 4

கைவிரல்களை விரித்துக் காட்டினார். அதற்குள் பங்களூரில் இருந்து வந்த முதியவர் திரு

சங்கரன் எங்கள் வண்டியில் வேறு யாரும் இல்லை என்றால் ஏறிக் கொள்ளலாமா? எனக்கேட்கவே நாங்கள் வரவேற்றோம். இன்னும் ஒருத்தர் இருக்கிறாரே என நினைத்த போது ஒரு ஃப்ரென்ச்காரர் வந்தார். எங்கள் குழுவில் இவரைத் தவிர 3 ரஷ்யர்கள், ஒரு ஜர்மானியப் பெண், இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த இரண்டு குஜராத்தைச் சேர்ந்த இந்தியர்கள், சென்னையில்

இருந்து மனோஹரனத் தவிர்த்து நாங்கள் 2 பேர், டாக்டர் நர்மதா, அவர் கணவர், மடிப்பாக்கத்தில் இருந்து, மைலாப்பூரைச் சேர்ந்த லலிதா என்ற பெண்மணி இருந்தனர். மற்றவர்கள் முறையே மதுரை, திருச்சி, நாகூர், பங்களூர், ஹைதராபாத், புனா, பாம்பே, குஜராத்தில் உள்ள புஜ் ஆகிய இடங்களைச் சேர்ந்த தமிழர்கள். கேரளாவில் இருந்து

ஒருவரும், பாண்டிச்சேரியில் இருந்து ஒருவரும் வந்திருந்தனர்.பாண்டிச்சேரிக்காரரை முதல் மந்திரி திருரங்கசாமி அவர்கள் தன் செலவில் அனுப்பி வைத்துள்ளார். இவர் தன்

பொறுப்பில் ஒரு சிவாலயம் எழுப்பிக் கைலாச நாதர் கோவில் என்ற பெயரில் பராமரித்து

வருகிறார். அதற்கு திருரங்கசாமி அவர்களும் உதவியதோடு அல்லாமல் ட்ரஸ்டியாகவும்

இருந்து உதவி இருக்கிறார். இது பற்றி ஒரு தனிப் பதிவு போடவேண்டும் என அந்தப்

பெரியவரிடம் கேட்டிருக்கிறேன். சம்மதம் வந்ததும் எழுதுகிறேன்.

எல்லாரும் காரில் ஏறிக் கொண்டார்கள் என்று தெரிந்ததும், சாமான்கள் ஏற்றிய இரண்டு

ட்ரக்குகள் உள்பட மொத்தம் 14 வண்டிகள் தன் நீண்ட நெடும் பயணத்தை மேற்கொண்டன.

கைலை யாத்திரையின் முதல் நாள் பயணம் துவங்கியது. இன்னும் 4 நாள் போக வேண்டும். எல்லாம் மலைகளின் மேலேயே. எல்லாரும் கடவுளை வேண்டிக் கொண்டு புறப்பட்டோம். மிகக் குறுகிய தெருக்கள். ஒரு வண்டி வந்தால் மேலே போக இடமே இல்லை.

அதில் மிகச் சாமர்த்தியமாக டிரைவர்கள் ஓட்டுகிறார்கள். மலைப்பாதைதான். சற்றுப்

பயமாகத் தான் இருக்கிறது. கிட்டத் தட்ட 2,300 மீட்டர் உயரத்தில் பயணம் செய்து

கொண்டிருந்தோம். தூரத்திலும் கிட்டத்திலும் அருவிகள் தெரிந்தன என்றாலும் நேபாளத்தில்

மிக் அருகே பார்த்த மாதிரி இல்லை. சற்றுத் தூரம் வரை பசுமை, மலைகளிலும் சுற்றுப்

புறங்களிலும். போகப் போகக் குறைந்து கொண்டே வருகிறது. கீழே சுழித்துக் கொண்டு ஓடும் ஆறு கூடவே வருகிறது. கொஞ்சம் தப்பினாலும் அவ்வளவு தான். இதிலே எதிரே நிறைய லாரிகள், ட்ரக்குகள் வருகின்றன. அவற்றுக்கு விட இடமே இல்லை என்றாலும் வண்டிகள் நம்மைக் கடந்து போனதும் ஒரு நிம்மதி. என்றாலும் சற்றுத் தூரம் வரை ஊர் வந்ததால் ஒன்றும் தெரியவில்லை. மேலும் ஒரு வண்டி நின்றால் எல்லா வண்டிகளும் நின்று விட்டு என்ன ஏது என்று தெரிந்து கொண்டுதான் கிளம்புகிறார்கள். மற்ற வண்டிகள் பிரச்னை என்றால் எல்லாரும் கூடிப் போய்ச் சரி செய்கிறார்கள். சுமார் 5 அல்லது 6 கி.மீ போனதும்

வண்டிகள்நின்றன. என்ன என்று பார்த்தால் சீனக் கஸ்டம்ஸ் அலுவலகம்.. இங்கேயும் எல்லாரும்

தனித்தனியாகத் தங்கள் பாஸ்போர்ட்டைக் காட்டி விட்டுச் செல்ல வேண்டும். மறுபடி வரிசை,

மறுபடி,எங்கள் ஏஜெண்ட் வந்து அறிமுகம் செய்ய ஒவ்வொருவராக வந்து எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வண்டியில் ஏறினோம்.அந்தத் தெரு தாண்டித் திரும்பலாம் என்று போன போது எதிரே ஒரு லாரி வந்தது. சற்று நின்றால் பின்னாலேயே லாரிகளின் அணிவகுப்பு. நாங்கள் நின்றபோது நேரம் சீன நேரப்படி மாலை 4-00. ஆகி இருந்தது. சற்று நேரத்தில்

சரியாகிவிடும் போகலாம் என்றால் எல்லா டிரைவர்களும் வண்டியை நிறுத்தி விட்டுப் போய் உட்கார்ந்து கொண்டு விட்டார்கள். எங்களுக்கு என்னவென்றே புரியவில்லை. எங்கள் குழுவில் ஒருத்தர் முன்னால் போய் விசாரித்து விட்டு ஏதோ பாதை சரியில்லையோ
எனத் தெரிவித்தார். எல்லாருக்கும் கவலையும்.. பயமும் ஏற்பட்டது.

முதல்நாள் பயணத்திலேயே தடங்கலா என. டிரைவரைக் கேட்டால் அவர், "மாச்சி,மாச்சி,"

என்று ஏதேதோ சொல்கிறார்.குழப்பத்துடன் உட்கார்ந்திருந்த போது ஒரு வண்டி ஹிந்தியில்

எழுதப் பட்டு வரவே அதன் டிரைவரிடம் கேட்டோம். அவர் நட்புப் பாலம் அருகாமையில்

இருப்பதால் அதை மாலை 6 மணிக்குள் கடக்க வேண்டும் எனவும் இல்லை எனில்

மலைப்பாதையில் ஒரு இரவு பூராக் கழிக்க வேண்டி வரும் எனவும் ஆகவே மாலை 4-00 மணி முதல் 6-00 மணி வரை நேபாளம் போகிற வண்டிகளை விடுவார்கள் எனவும் 6-00 மணிக்கு அப்புறம் நீங்கள் போக முடியும் எனவும் சொன்னார். ஒரே லாரிகளின்

அணிவகுப்பு. நூற்றுக் கணக்கான லாரிகள் சீனாவில் இருந்து வருகிறது, நேபாளத்தில் இருந்து

சீனா போய்விட்டும் திரும்புகிறது. எல்லாம் ஏதேதோ சாமான்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள். அந்த அணி வகுப்பு சரியாக 6 மணிக்கு முடிந்து நாங்கள் "நியாலம்" கிளம்பினோம். மலைப்பாதை,வளைந்து வளைந்து போகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,750 மீட்டர் உயரத்தில் உள்ள "நியாலம்' என்ற ஊரில் தான் நாங்கள் முதல் நாள் தங்க வேண்டும்.

Saturday, October 07, 2006

38. ஓம் நமச்சிவாயா-9

5-9-06 செவ்வாய்க்கிழமை காலையில் நாங்கள் எல்லாரும் இரு குழுவாகப் பிரிந்து இரண்டு பஸ்ஸில் ஏறிக் கொண்டு கைலை யாத்திரையின் முதல் நாள் பயணத்தைத் துவங்கினோம். காட்மாண்டுவின் மலைப்பகுதிகளில் பிரயாணம் தொடர்ந்தது. உயர்ந்த மலைச் சிகரங்கள்,. கீழே , கீழே, கீழே, இந்திராவதி நதி வேகமாகப் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. வெகு தூரத்துக்கு இது வருகிறது. காட்மாண்டு நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் வரை பாதை நன்றாக இருக்கிறது. இருந்தாலும் அப்படி ஒன்றும் பாதை அகலம் இல்லை. இத்தனை பெரிய பஸ் வளைவுகளில் திரும்பும்போது சற்றுப் பயமாகத் தான் இருக்கிறது. என்றாலும் போகும்போது போகிற சந்தோஷத்திலும், ஆசையிலும், எதிர்பார்ப்பிலும் யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. எல்லாரும் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் பயணத்தைத் தொடர்ந்தோம். சற்றுக் குளிர் கூடிக் கொண்டே வந்தது. மலைப் பகுதிகளில் பசுமை தெரிந்தது. நடு நடுவே உருக்கி ஊற்றிய வெள்ளி போல அருவிகள், மிக மிக உயரத்தில் இருந்து கீழேஏஏஏஏ விழுந்து கொண்டிருந்தன. ஒன்றா, இரண்டா? 10 அடிக்கு ஒன்று இருக்கும் என நினைக்கிறேன். அத்தனை உயரத்தில் இருந்து அருவி விழும் வேகத்தில் பாதை சரிந்து நிலச் சரிவு ஏற்பட்டிருந்ததும் தெரிய வந்தது. மலைச் சரிவுகளில் பல இடங்களில் நெற்பயிரும் கண்ணுக்குத் தெரிந்தது. ஆனால் அதிகம் தெரிந்தது சோளம் தான். சோள மணிகள் காய வைக்கப் பட்டிருந்தன. ரொம்பவே உயரமான பகுதி. குறுகலான பாதை. ஒரு வண்டி எதிரே வந்தால் அது கடக்கும் வரையோ, நம் வண்டி கடக்கும் வரையோ மனசு திக் திக் என்று அடித்துக் கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு மயிரிழை நகர்ந்தாலும் அதோகதிதான். டிரைவர் மிகச் சாமர்த்தியமாக வண்டி ஓட்டினார்.

சற்று தூரம் போனதும் சுமார் 8-30 மணி அளவில் ஒரு பள்ளத்தாக்கு ஊர் வந்ததும் காலை உணவு ஏற்கெனவே தயார் செய்து பெட்டியில் அடைக்கப் பட்டது கொடுக்கப் பட்டது. ஒரு டீக்கடையில் உட்கார்ந்து காலை உணவைச் சாப்பிட்டு விட்டு அங்கேயே டீயும் குடித்தோம். வரும் வழியில் தென்பட்ட "அன்னபூர்ணா மலைத் தொடர்ப் பகுதிகள்" பற்றியும், எவரெஸ்ட்டின் மறுபக்கச் சிகரம் தெரிந்தது பற்றியும் எல்லாரும் பேசிக் கொண்டோம். வழி எல்லாம் ராணுவ சோதனை. உள்நாட்டில் இன்னும் நிலைமை சீராகாத காரணத்தால் நேபாளம் எங்குமே இந்த சோதனை நடக்கிறது. நாங்கள் அரசு அனுமதி பெற்றிருப்பதால் அதிகம் சோதனை இல்லை. காட்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் பயணித்துப் பின் நேபாள எல்லையான கோடரி-தொட்டபாணி என்ற கிராமத்தை அடைந்தோம். அங்கே இந்த பஸ் நின்று விடும். அங்கிருந்து சீனாவிற்குள் அதாவது திபெத் பள்ளத்தாக்கில் நுழைய நடந்தே கடக்க வேண்டும்.. இது சுமார் 2 அல்லது 3 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும். அதே போல் சீன எல்லையில் இருந்தும் நேபாளத்திற்குள் நுழைய நடந்தே வருகிறார்கள். இந்த இடத்தில் எல்லாரும் இறங்கிக் கொண்டு கையில் கொண்டு வரும் சாமான்களைத் தவிர மற்றவை இருந்தால் ட்ராவல்ஸ்காரரிடம் ஒப்படைக்க வேண்டும். எல்லாரும் ஏற்கெனவே அதற்குத் தகுந்தாற்போல் பாக் செய்து வந்திருந்ததால் கைப்பையைத் தூக்கிக் கொண்டு நடந்தோம். அங்கிருந்து "ஹோட்டல் லாசா" என்ற இடத்துக்குப் போய் மதிய உணவை முடித்துக் கொண்டு அங்கே இருந்து எல்லாரும் நேபாள,சீன எல்லையில் இருக்கும் "நட்புப் பாலம்" (friendship bridge) போக வேண்டும். "லாசா" ஹோட்டலில் சாப்பாடு என்ற பெயரில் இரண்டு கருகிய ரொட்டி, ஒரு ஸ்பூன் சாதம், அதே மாதிரி ஒரு ஸ்பூன் தால், சப்ஜி என்ற பெயரில் இரண்டு உருளைக்கிழங்குத் துண்டங்கள் கொடுத்தார்கள். சிலருக்கு அது போதவே இல்லை. ரொம்பக் கேட்டதுக்கு அப்புறம் தயிர் என்ற பெயரில் ஒரு திரவம் வந்தது. சாப்பிட்டு விட்டு நட்புப் பாலத்தை நோக்கி நடந்தோம். வெயில் சுட்டெரித்தது. ஒரே வியர்த்துக் கொட்டியது. நட்புப் பாலம் வரை ஏராளமான வீடுகள், கடைத் தெருக்கள், சுமை தூக்குபவர்கள் சுமைகளைத் தூக்கிக் கொண்டு நேபாளத்தில் இருந்து சீன எல்லைக்குள் அவரவர் அனுமதிச் சீட்டைக் காட்டி விட்டு நுழைந்து கொண்டிருந்தார்கள். சுமை தூக்குபவர்களில் சிறு பையன்கள், பெண்கள், மற்றும் பெண்கள் தான் அதிகம் காணப்பட்டனர். எங்கள் ட்ரக்கில் இருந்து நாங்கள் உபயோகிக்கும் பொருட்கள் அடங்கிய சிவப்புப் பைகள், மற்றும் சாப்பாட்டுப் பொருட்கள், காஸ் சிலிண்டர்கள்,அடுப்புகள் முதலியன சுமை தூக்குபவர்களால் ஏற்றப்பட்டு சீன எல்லைக்குள் நுழைந்து கொண்டிருந்தன. நாங்கள் நட்புப் பாலத்தை அடந்தோம். நேபாள அரசின் பாஸ்போர்ட் அலுவலகத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை ட்ராவல்ஸ் காரர்களே செய்து வெளியே போகும் அனுமதி வாங்கி விட்டதால் நாங்கள் இனிமேல் சீன அரசின் அலுவலகத்திலே தான் தனித் தனியாக ஒவ்வொருவராக அனுமதி பெற வேண்டும்.

இந்த நட்புப் பாலம் "1985-ல் " கட்டப்பட்டிருக்கிறது. நட்புப்பாலத்தின் இருபக்கமும் இமயமலைத் தொடரின் ரம்மியமான காட்சிகள். மலை மேல் உயரத்தில் சில வீடுகள்,அதில் பயமில்லாமல் ஏறி விளையாடும் குழந்தைகள். பாலத்துக்குக் கீழே ஆர்ப்பரித்து ஓடும் நதி. "போடேகுயிச்சி" என்று சொல்கிறார்கள். மிக வேகம், சத்தமும் கூட. அதைப் படம் பிடிக்கலாம் என்று எங்களில் சிலர் முயலச் சீன அரசாங்கக் காவலாளியால் எச்சரிக்கப் பட்டோம். படம் எடுக்கக் கூடாதாம். விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து கையில் வைத்திருந்தோம்.எங்களுக்கு ட்ராவல்ஸ்காரரால் நம்பர்கள் அளிக்கப் பட்டிருந்தன. அதன்படி என் நம்பர் 12, என் கணவர் நம்பர் 13. எல்லாரும் நம்பர் படி வரிசையில் நின்று கொண்டோம். சீன அரசின் அலுவலருக்கு எங்களைப்பற்றி எடுத்துச் சொல்லி எங்களுக்கு உதவ வேண்டிய உதவியாளர் வந்ததும் தான் நாங்கள் போகமுடியும்.அது வரை காத்திருந்தோம். அவர் வந்து எங்கள் குழு விசாவைக் காட்டிக் கிட்டே நின்று கொண்டிருக்க ஒவ்வொரு நபராகப் போய் அனுமதி பெற்றுச் சீன ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத்தில் நுழைந்தோம்.

Thursday, October 05, 2006

37. ஓம் நமச்சிவாயா-8

கைலை யாத்திரையின்போது உடன் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களின் பட்டியல் கீழே கொடுத்திருக்கிறேன். பயணம் மூன்று நிலைகளில் அமையும். ஆகவே அதற்குத் தகுந்தவாறு சாப்பாடு, உடல் பயிற்சி மட்டும் இல்லாமல் கொண்டு போகும் பொருட்களும் இருக்க வேண்டும்.பயணத்தின் மூன்று நிலைகள் கீழ்வருமாறு:

முதல் நிலை: நமது இருப்பிடமான ஊரில் இருந்து காட்மாண்டு வரை செல்லுதல்.

2-ம் நிலை: காட்மாண்டுவில் இருந்து கைலை மலை அடிவாரம் ஆன தார்ச்சன் (பேஸ் கேம்ப்) வரை செல்லுதல்.

3. கைலை மலையைச் சுற்றி வரும்(பிரதட்சிணம்) "பரிக்ரமா" செல்லுதல்.
பின்னால் திரும்பி வரும்போது கொண்டு போகும் பொருட்களே உபயோகம் ஆகிவிடும் என்பதால் அதைச் சேர்க்க வேண்டாம்.
பயணத்தின் போது தேவைப்படும் பொருட்களின் விபரம்:

1. சூட்கேஸ்: சென்னை அல்லது நாம் இருக்கும் இடத்தில் இருந்து காட்மாண்டு வரை செல்லும் நாட்களுக்கும், பின் திரும்பி காட்மாண்டு வந்ததும் உபயோகிக்கவும் தேவையான உடைகள் இதில் இடம் பெறும். திருக்கைலை யாத்திரை போகும் சமயம் இந்தப் பெட்டியைப் பூட்டி ஹோட்டலில் கொடுத்துவிட்டால் அவர்கள் பாதுகாப்பு அறையில் இருக்கும். திரும்பி வந்ததும் அடையாளச் சீட்டைக் காட்டிப் பெற்றுக் கொள்ளலாம். இத்துடன் கொண்டு போகும் அதிகப் பணம், மற்றும் விலை உயர்ந்த நகைகள் போன்றவற்றை ஹோட்டலில் இருக்கும் லாக்கரில் வைத்துக் கொள்ளலாம். இதற்குக் கட்டணம் இல்லை.

2. முதல் பை:(பூஜைப் பொருட்கள்)
1.இதில் மானசரோவர் தீர்த்தம் எடுக்க இரண்டு 5 லிட்டர் கேன், 500-மில்லி பாட்டில்-1(கெளரி குண்டம்) தீர்த்தம் எடுக்க.மானசரோவரில் மணல் எடுக்க ஒரு பை, எம்.சீல்-1.
2.மானசரோவரில் மூர்த்தங்கள் சேகரிக்க ஒரு துணிப்பை-1
3. உலர் பழ வகைகள். மானசரோவரிலும், கைலையிலும் நைவேத்தியம் செய்ய(வீட்டிற்குக் கொண்டு வந்து விநியோகிக்கும் அளவுக்கு)
4. நன்கு காய வைத்த வில்வம் இலைகள் ஒரு பாலிதீன் பையில், கட்டி கற்பூரம், ஊதுபத்தி, நெய்த்திரி, மற்றும் மண் அகல் அல்லது வெங்கல விளக்குகள், மற்றும் நறுமணம் உள்ள பூஜைப் பொருட்கள்.

3. இரண்டாம் பை(யாத்திரைக்குத் தேவையான துணிகள் வைக்க)
பெண்கள், ஆண்கள் எல்லாருக்குமே உள்ளாடைகள் நிறையவே வேண்டும். ஒரு டஜன் கூட வைத்துக் கொள்ளலாம். அதைத் தவிர
1.தெர்மல் வேர் 1 செட் போதாது. 2செட் வைத்துக் கொள்ளவும்.
2.ஆண்களுக்கு ஹாஃப் ஸ்வெட்டர், பெண்களுக்கு உல்லன் ப்ளவுஸ்(டெல்லியில் கிடைக்கும்)
முழு ஸ்வெட்டர்,
உல்லன் க்ளவுஸ்,
தெர்மல் க்ளவுஸ்,
உல்லன் தொப்பி, மஃப்ளர், நைலான் மற்றும் உல்லன் சாக்ஸ், ரெயின் கோட்,
ப்ளாஸ்டிக் செருப்பு,
ஆக் ஷன் ட்ரெக்கிங் ஷூ
காட்மாண்டுவில் இருந்து மானசரோவர் வரை அணிய ட்ரெஸ் செட் (இதில் கூடிய வரை ஆண்கள் ஜீன்ஸ் பேண்ட்டும், பெண்கள் ட்ராக் சூட் அல்லது சல்வார், குர்த்தாவும் அணிவதுதான் நல்லது.
திரும்பி வரும்போது அணியவும் தேவையான உடைகள் மற்றும் டவல், கைக்குட்டை போன்றவைகள்.
சூரிய வெப்பத்தில் இருந்து தப்பிக்க Hat, Mask, Trek Bag போன்றவை ட்ராவல்ஸ்காரர்களால் அளிக்கப் படும். ட்ராவல்ஸ்காரர்கள் கொடுக்கும் இந்தச் சிவப்புப் பையில் தான் நம் துணிகளை வைத்துக் கொண்டு அவர்களிடம் கொடுத்து விட்டால் நம்முடனேயே வந்து கொண்டிருக்கும் ட்ரக்கில் வரும்.
ப்ளாஸ்டிக் பக்கெட் ஒரு 2 அல்லது 3 லிட்டர் பிடிக்கும் அளவு, ஒரு மக்.(மானசரோவரில் குளிக்க முடிந்தால் குளிக்கவும், மற்றும் ட்ராவல்ஸ்காரர்கள் அளிக்கும் வெந்நீர் வாங்கிக் கொள்ளவும் பயன்படும்.)

இதைத் தவிர சோல்டர் பேக் அல்லது backpack என்று சொல்லப்படும் ஒரு பையில் கீழ்க்கண்ட பொருட்களை வைத்துக் கொண்டு நாம் காரில் போகிறபோதும் சரி, கைலை பரிக்ரமா போதும் சரி கூடவே கொண்டு வர வேண்டும். அந்தப் பையில்

குளியல் சோப், துவைக்கும் சோப்
டூத் ப்ரஷ், டூத் பேஸ்ட்
நிவியா அல்லது பாண்ட்ஸ் கோல்ட் க்ரீம், மற்றும் சன் க்ரீம்
வாசிலின், சீப்பு, கண்ணாடி(முகம் பார்க்க)
கத்தரிக்கோல்(சின்னது) ஒரு டார்ச்
தலைக்குத் தேவையான க்ரீம்
டாய்லெட் டிஸ்ஸூ பேப்பர் ரோல்

பனியினால் ஏற்படும் கண்பார்வைக் குறைவையும் பனியில் சூரிய ஒளி படும்போது ஏற்படும் கூசுதலைத் தவிர்க்கவும் கறுப்புக் கண்ணாடி(இது முக்கியம்)
காமரா, அட்ரஸ் டைரி, பேனா

அவரவருக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள்
ஸ்டீல் ஃப்ளாஸ்க் பெரியது(2 பேரானால்)
தேவைப்பட்டால் கூலிங் ஃப்ளாஸ்க்.

இதைத் தவிரப் பரிக்ரமாவுக்குச் செல்லும்போது கீழ்க்கண்ட பொருட்கள் அடங்கிய 3 பாக்கெட்டுகள் தேவை. இவை நாம் சாப்பிட மட்டும். ஆகவே கையிலிருக்கும் சோல்டர் பையில் போடவேண்டும்.

முந்திரி,திராட்சை, பேரீச்சை, தேவையானால் பாதாம்,பிஸ்தா, எலக்ட்ரால், க்ளூக்கோஸ்,மில்க் சாக்லேட்,பிஸ்கட், கடலை, வாந்தி வந்தால் போட்டுக் கொள்ள ஆல்பக்கோடா பழம்,நாரத்தங்காய் ஊறுகாய் அல்ல்து உப்பு எலுமிச்சங்காய் ஊறுகாய்,ஆரஞ்சு மிட்டாய்கள்.

எல்லாவற்றையும் சென்னையில் இருந்தே எடுத்துப் போனதால் எல்லாவற்றையும் பாக் செய்து விட்டுப் படுத்தோம். காலை 4 மணிக்கே ஹோட்டல் ரிசப்ஷனில் இருந்து "waking call" வந்தது. இனி திருக்கைலை யாத்திரையின் முதல் நாள் துவக்கம். பிள்ளையாரை வேண்டிக் கொண்டு தயாரானோம்..கீழே சாப்பிடும் இடத்துக்கு வரச் சொன்னார்கள். அன்று காபி, டீ ஹோட்டல்காரர்களே கொடுத்தார்கள். இரண்டு பஸ்கள் வந்தன. அவரவர் பஸ்ஸில் ஏறிக் கொண்டோம். எல்லாரும் "ஓம் நமச்சிவாயா" சொல்ல அங்கே இருந்தவர்களில் வயதானவர் ஒருத்தர் கற்பூரம் ஏற்றிச் சுற்றிக் கொட்ட எல்லாரும் கடவுளைப் பிரார்த்தனை செய்து கொண்டே பிரயாணத்தைத் துவங்கினோம்.

பி.கு; மேலே குறிப்பிட்ட பொருட்களில் என்னுடைய அனுபவத்தின் படி யாரும் டூத் ப்ரஷ், பேஸ்ட் கொண்டு போக வேண்டாம். மவுத் வாஷ் வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் குளிரிலே அவர்கள் கொடுக்கும் ஒரு கப் வெந்நீரில் பல் எல்லாம் தேய்க்க முடியாது. பல் தந்தி அடிக்கும்.. ஊருக்குத் தகவல் கொடுக்கவும் முடியாது. ரொம்பக் கஷ்டம். மேலும் சோப்(குளியலுக்கோ, தோய்க்கவோ) தேவை இல்லை. மானசரோவரில் குளிக்க முடிந்தாலே பெரிய விஷயம். எங்கே துவைக்க? அவ்வளவுதான் உங்க கை உங்க கிட்டே இல்லை.லிக்விட் சோப் உடலுக்கு மட்டும் எடுத்துப் போங்கள். தினமும் முகம், கை, கால் கழுவ உபயோகப் படும். இது மாதிரி தேவைப் பட்ட சமயங்களில் என்னுடைய அபிப்பிராயத்தையும் சேர்த்துச் சொல்கிறேன்.

பெண்களுக்கு சாக்ஸ் வாங்கும்போது டெல்லியில் வாங்குவது நல்லது. அங்கே கால் கட்டை விரல் மட்டும் தனியாக மாட்டும்படிக் கிடைக்கும். செருப்புப் போட்டுக் கொள்ளும்போது வசதியாக இருக்கும். பொதுவாய் வடமாநிலங்களிலேயே பெண்கள் சாக்ஸ் என்றால் இப்படித்தான் தருவார்கள்.

Wednesday, October 04, 2006

36. ஓம் நமச்சிவாயா-7

நாங்க இரண்டு பேரும் குழந்தைகள், மாமியாருடன் போகும்போதோ அல்லது இப்போ நாங்க இரண்டு பேரும் தனியாகப் போகும்போதோ எந்த ஒரு ட்ராவல்ஸ் குழுவுடனும் சேர்ந்து போனது இல்லை. போனது எல்லாம் இந்தியாவுக்குள் என்பதாலும், மொழிப் பிரச்னை இல்லை என்பதாலும் நாங்களாகவே போய்விட்டு வந்திருக்கிறோம். ஆகவே இம்மாதிரிக் குழுவுடன் போவது இது தான் முதல்முறை என்பதால் இம்மாதிரி மீட்டிங் என்பது எங்களுக்குப் புதிசு. ஆனால் கைலை யாத்திரை போகிறவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதாலும், ஒருவேளை அவர்களால் முடியாது என்று தோன்றினால் உடனேயே விலகிக் கொள்ள வசதியாகவும் இந்த ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. நேபாளத்தின் வழியாகப் போகிறவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை கிடையாது. ஆனால் அவர்கள் வீட்டிலேயே "ட்ரெட் மில்" பயிற்சி எடுத்துக் கொண்டு வருவது நல்லது என்றும், யோகா, தியானம், நடைப் பயிற்சி முதலியன மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப் படுகிறது. இதிலே எனக்கு என்னோட மருத்துவர் இதுவரை எடுத்த எல்லா டெஸ்ட்களிலேயும் "ட்ரெட் மில்" மட்டும் வேண்டாம் என்று குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். நான் கைலை யாத்திரை போனதும், வந்ததும் இன்னும் அவருக்குத் தெரியாது. மருத்துவப் பரிசோதனை நம் குடும்ப டாக்டரிடம் மேற்கொண்டு வரச் சொல்கிறார்கள். யாருமே அப்படிச் செய்யவில்லை, நாங்கள் இரண்டு பேரும் உள்பட. சிலர் மட்டும் வீட்டிலேயே ட்ரெட் மில் பயிற்சி மேற்கொண்டிருந்தார்கள். நாங்கள் இருவரும் யோகா,நடைப் பயிற்சி முதலியன மேற்கொண்டிருந்தாலும் அது மட்டும் போதாது. மேலும் சர்க்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள் தங்கள் தங்கள் பொறுப்பிலேயே வருமாறு கூறப்பட்டனர். எங்களுடன் வந்த டாக்டர் திருமதி நர்மதா அவர்கள் ஒரு இருதய நோயாளி. திறந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டவர். மேலும் இரண்டு பேர் கணவன், மனைவி இருவரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். சில பேர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும் பொதுவாக ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பிரச்னை உடல் நலத்தில் இருந்து வந்தது. ரெயிலில் வந்தவர்களில் ஒருவர் கீழே விழுந்து காயம் பட்டிருந்தது.

இம்மாதிரியான ஒரு குழுவாகத் தான் நாங்கள் இருந்தோம். எங்களுடன் கைலை வரை வரப் போகிற "எகோ ட்ரக்" சிப்பந்திகள் அறிமுகம் செய்யப் பட்டனர். பின் பயணம் பற்றி விளக்கப் பட்டது. மறுநாள் செவ்வாய் அன்று காலை நாங்கள் எல்லாரும் கிளம்பி ஹோட்டலில் இருந்து இரண்டு பஸ்களில் சீன எல்லை வரைப் பிரயாணம் செய்ய வேண்டும். அது ஒரு 150 கிலோ மீட்டருக்குக் குறையாது. பின் அங்கிருந்து நட்புப் பாலம் வழியாகக் கால்நடையாக நேபாள, சீன எல்லையைக் கடக்கவேண்டும். பின் அங்கிருந்து குழுவில் 4, 4 பேராகப் பிரிந்து ஒரு வண்டிக்கு 4 பேர் என்று ஒரு டொயோட்டா காரில் திபெத்தில் உள்ள நியாலம் என்னும் ஊரை அடைய வேண்டும். அதுவே சிறிது உயரம் உள்ள ஊர். மறுநாள் போகவேண்டியது இன்னும் உயரம். கால நிலை மாறும். குளிர் அதிகமாகும். ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும். சிலருக்கு ஒத்துக் கொள்ளும். சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. மயக்கம், வாந்தி போன்றவை வரலாம். அல்லது சுவாசிக்க முடியாமல் போகலாம்.கூடவே எடுத்து வரும் ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் ஆக்ஸிஜன் கொடுத்தும் சரியாக வில்லை என்றால், gammao bag"-ல் படுக்க வைப்பார்கள். High altitude-ல் இருந்து சாதாரண நிலைக்குக் கொண்டு வரும்.ஆனால் அந்த நபர் திரும்ப மலை ஏற முடியாது. ஒரு முறை கீழே வரும் சிகிச்சை எடுத்துக் கொண்டவர் பின் கீழேதான் இறங்க வேண்டும். கூடவே சமையல் காரர்கள், பாத்திரம் தேய்ப்பவர்கள், மற்றும் சாப்பாடு பரிமாறுபவர்கள், போன்றவரும் அவர்களை மேற்பார்வை பார்க்க ஒரு ஆளும், எங்களுக்கு வேண்டியதைக் கவனிக்க ஒரு நம்பகமான ஆளும் நேபாள், சீன எல்லையில் மாறும்போது அங்கே இருக்கும் immigration office மற்றும் மேலே போகப் போகச் சீனமொழி, திபெத் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதால் ஒரு co-ordinator மற்றும் அன்னபூர்ணா ட்ராவல்ஸின் கைலை மனோஹர் போன்றவர்களும் வருவார்கள். எங்களுக்கு ஒரு சிவப்புப்பையும், தொப்பி ஒன்றும் ட்ராவல்ஸ் காரர்களால் அளிக்கப்படும். இரண்டும் அவர்கள் அன்பளிப்பு. அந்தப்பையில் இரவே கைலை யாத்திரைக்கு வேண்டிய துணிமணிகள் எடுத்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப் பட்டோம். அவரவர் கையில் மேலும் ஒரு சிறிய பையில் அவரவருக்குத் தேவையான மருந்துகள், மாத்திரைகள், வழியில் சாப்பிட ஏதாவது தின்பண்டங்கள் ஊரில் இருந்தே கொண்டு வரச் சொல்லி விடுகிறார்கள். அவை மற்றும் ஒரு ஸ்டீல் ஃப்ளாஸ்க்கில் வெந்நீர்(இது காலை உணவின் போது எல்லாருக்கும் கொடுக்கப்படும். மீண்டும் இரவு தருவார்கள்). அது தவிர எலக்ட்ரால் பவுடர், க்ளூகோஸ் பவுடர், வயிறு சரியில்லை என்றால் உதவ மாத்திரைகள் போன்றவை வைத்துக் கொள்ள வேண்டும். அது நம் கையிலே நாம் போகும் வண்டியில் வைத்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர ட்ராவல்ஸ் காரர்களால் குளிருக்குப் போட்டுக் கொள்ளும் ஜெர்கின் வாடகைக்கு அளிக்கப் படுகிறது. போகிற இடத்தில் படுக்கை இல்லை என்றால் என்ன செய்வது? அதற்கு ஒரு "ஸ்லீப்பிங் பாக்" இதுவும்வாடகைக்குத் தான் தரப்படும். இவை தொலைந்தால் கட்ட வேண்டிய பணம் ரூ3,000/-. வாடகை ஜெர்கினுக்கு ரூ500-ம், தூங்கும் பைக்கு ரூ, 250-ம் வாங்குகிறார்கள். நல்லவேளையாக எங்களிடம் சொந்தமாக ஜெர்கின் இருந்ததால் அது வாங்கிக் கொள்ள வில்லை. ஸ்லீப்பிங் பாக் இல்லாமல் முடியாது. ஒருவேளை தங்க "மட் ஹவுஸ்" கிடைக்காமல் கூடாரத்தில் தங்க நேர்ந்தால் என்ன செய்வது? ஆகவே அதை வாங்கிக் கொண்டோம். பணம் மேலே ரூமில் இருந்ததால் ஸ்லீப்பிங் பாக்கைக் கொடுக்கும்படியும், மேலே போய் எடுத்து வந்து யாராவது ஒருத்தர் கொண்டு தருகிறோம் என்று கேட்டதற்குக் கண்டிப்பாக மறுக்கப்பட்டுக் கையில் கொடுத்ததை வாங்கி வைத்து விட்டார்கள். ரொம்பவே கஷ்டமாக இருந்தது. இவர்களை நம்பி நாம் கிட்டத்தட்ட 55,000 ரூ கொடுத்துள்ளோம் ஒரு 250/-ரூக்கு நம்பவில்லை. அந்த ஹோட்டலை விட்டு நாங்கள் திடீரென எங்கே போய்விடுவோம். ஒருவிதமான கலக்கத்துடனேயே போய்ப் பணத்தை எடுத்து வந்து கொடுத்து விட்டு வாங்கிக் கொண்டோம். நாம் எடுத்து வைத்துக் கொண்ட பொருட்கள் தவிர மேலும் இருக்கும் துணிமணிகள், மற்ற சாமான்களை நாம் ஏற்கெனவே கொண்டு வந்த பையில் போட்டு வைத்துவிட்டால் ஹோட்டல்காரர்கள் ஒரு அடையாளச் சீட்டுக் கொடுத்துவிட்டுப் பாதுகாப்பாக வைக்கிறார்கள். லாக்கரும் இருப்பதால் தேவைப்பட்ட பணம் எடுத்துக் கொண்டு மிச்சப் பணம், மற்றும் விலை உயர்ந்த நகைகள் போட்டுக் கொண்டு போட்டிருந்தால் அவற்றையும் ஹோட்டலிலேயே லாக்கரில் வைக்கலாம். இரண்டு சாவி போட்டால் மட்டுமே திறக்க முடிந்த அதன் ஒரு சாவியை நாம் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாம் கேட்டுக் கொண்டு மீட்டிங் முடிந்து சாமான்களைப் பாக் செய்து அறைக்கு வெளியில் வைக்கச் சொன்னார்கள். கைலை யாத்திரைக்கு வேண்டிய பை(ட்ராவல்ஸ் காரர்கள் கொடுத்த சிவப்பு பை) அறைக்கு வெளியே வைத்தோம். இந்தப் பைகள் ஒரு ட்ரக்கில் மொத்தமாக ஏற்றப்பட்டு எங்கள் கூடவே அந்த ட்ரக் வரும். மற்றொரு ட்ரக்கில் சமையல் சாமான்கள், காஸ் அடுப்புக்கள், சிலிண்டர்கள், பழங்கள், காய்கறிகள், ஊறுகாய் வகைகள், பால் பதப்படுத்தப்பட்டது முதலியன வருகிறது. ஒவ்வொரு நாளும் சாயங்காலம் நாங்கள் தங்கும் கேம்ப் வந்ததும் பைகள் எங்களுக்குக் கொடுக்கப் படும். எல்லாம் முடித்து அன்றிரவு படுக்கும்போது இரவு கிட்டத் தட்ட ஒரு மணி ஆகிவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் எழுப்பி விடுவார்கள்.

Tuesday, October 03, 2006

35.ஓம் நமச்சிவாயா-6

பசுபதி நாதர் கோவில் மற்றும் பூடா நீல்கண்ட் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்புவதற்குள்ளேயே மணி 1 ஆகி விட்டது. கடைசியாக "ஸ்வயம்புநாத்" கோவில். இது புத்தர்களின் கோவில். கிட்டத்தட்ட ஒரு புத்த விஹாரம். கொஞ்சம் ஊரை விட்டுத் தள்ளி ஒரு சிறிய மலை மேல் இருக்கிறது. ஊரே ஒரே ஏஏஏஏற்றமும் இறக்கமும் உள்ளது. குறுகலான தெருக்கள். அதில் ட்ராஃபிக் ஜாம் வேறு. நம் ஊரில் என்றால் ஒரே டென்ஷன் ஆகிவிடுவார்கள். இங்கே அதைப் பற்றிக் கவலையே இல்லை. ஒரு வழியாக ஸ்வயம்புநாத்" கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். இங்கே உள்ள புத்தர் சிலை மிகப் பெரிது. அநேகமாக எல்லா ஹிந்திப் படத்திலும் நடித்த புத்தர் கோயில் இதுவாக இருக்கும். 4 பக்கமும் பார்க்குமாறு வடிவமைக்கப் பட்ட மிகப் பெரிய புத்தர் சிலை குன்றின் உச்சியில் இருக்கிறது. சில பல படிகள் மேலே ஏறிப் போய்த் தான் தரிசனம் செய்ய வேண்டும். சரி, கைலாஷ் மலையில் "பரிக்ரமா" செய்ய உதவி என்று எல்லாருமே ஏற முடியாமல் ஏறிப் போனோம். படிகள் இருக்கின்றன, என்றாலும் சில இடங்களில் செங்குத்தான அமைப்பாக இருப்பதால் ஏறச் சிரமம் தான் எல்லாருக்குமே. ஒரு வழியாக மேலே ஏறிப் போய்ப் பார்த்தோம். புத்தரின் 4 முக தரிசனமும் தெரியும் 4 பக்கமும் போய்ப் பார்த்தால் உயரே இருந்து காட்மாண்டு நகரம் பூராவும் தெரிகிறது. மிகப் பெரிய நகரமாக இருக்கிறது. கீழே "பாக்மதி" நதி வளைந்து வளைந்து ஓடுவது ஒரு வெள்ளிக் கோடாகத் தெரிகிறது. உயரே கோவிலில் சின்னச் சின்னச் சன்னதிகள், அதில் சில புத்தர் சிலைகள், நம் ஊர் அம்மன் மாதிரிச் சிலைகள், பிறகு வெளியே வந்தால் எல்லாரும் கையால் உருட்டி விடும் பித்தளை ட்ரம் போன்ற அமைப்பு சுவற்றைச் சுற்றி. என்ன காரணம் என்று தெரியாமலேயே நாங்களும் அதை ஒவ்வொன்றாக உருட்டி விட்டு வந்தோம். கோவிலுக்கு எதிரேயே ஒரு புத்த பிட்சுக்களின் மடாலயமும்,பள்ளியும் இருக்கிறது. பல இளம் பிட்சுக்கள் (இளம் என்றால் 7 முதல் 10 வயதுக்கு உட்பட்ட) காலில் செருப்புக் கூட இல்லாமல் மலை ஏறி வழிபட்டுச் செல்கிறார்கள். அவர்களுக்குத் துணையாக ஒரு 20 வயதுக்கு உட்பட்ட பிட்சு காவல் மாதிரி கூட வருகிறார் " ஸ்வயம்புநாத்" மலை ஏறும், இறங்கும் பாதை பூரா ருத்திராட்சம், ஸ்படிகம், பவளம், முத்து, கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகள். எல்லாரும் கடைகளைச் சூழ்ந்து கொள்ள நான் மட்டும் வண்டிக்குப் போய்விட்டேன். என்னை இந்த மாதிரி "ஷாப்பிங்" அவ்வளவாகக் கவர்ந்தது கிடையாது. முதலில் போகும் ஊரில் எல்லாம் சாமானாக வாங்கிக் குவித்தால் எங்கே வைத்துக் கொள்வது? அதை என்ன செய்வது? சற்றும் உபயோகம் ஆகாத பொருட்கள் என்று என்வரை அபிப்பிராயம். என் கணவரும் சில மணி, தட்டு, சிற்பங்கள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு விலையைக் கேட்டு மயக்கம் வந்து, வண்டிக்குத் திரும்பி விட்டார். பின் எல்லாரும் ஹோட்டல் அறைக்குப் போய்ச் சாப்பிடப் போனோம்.சாப்பாடு தயார் ஆகாத நிலையில் எல்லாரும் சூழ்ந்து கொண்டு அவசரப் படுத்தினர். எல்லாருக்கும் அவ்வளவு பசி. இதற்குள் மணி மூன்று ஆகிவிட்டது. சென்னையில் இருந்து ரெயில் மூலம் வருபவர்கள் ஒரு 22 பேர் வந்து சேர்ந்தார்கள். பின் எல்லாரும் அன்று இரவுச் சாப்பாட்டுக்குப் பின் கூடிப் பேசி மறுநாள் பிரயாணத்திற்குத் தயார் ஆகவேண்டியது பற்றி விவாதிக்க ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யப் பட்டது. அவ்வளவில் எல்லாரும் அவரவர் அறைக்குப் போனோம்.

மாலை நாங்கள் கணினி சேவை மையம் போய் ஒரு மெயில் கொடுத்தோம் யு.எஸ்ஸுக்கு. அதையே பையன், பெண் இரண்டு பேருக்கும் அனுப்பினோம். அதற்கே 20ரூ வாங்கி கொண்டான் அந்த சேவை மையம் நடத்தும் பையன். என்னோட மெயில் அக்கவுண்டைச் செக் செய்து விடலாம் என்ற என் ஆசையில் மண் விழுந்தது. என் கணவர் கிட்டத் தட்ட என்னை இழுத்துக் கொண்டு வந்துவிட்டார். சரி, டீயாவது சாப்பிடலாம் என்று அங்கிருந்த ஒரு லோக்கல் டீக்கடை என்று சொல்லப்பட்ட இடத்துக்குப் போனோம்.டீ தயாரித்துக் கொடுத்தாள் அந்தப் பெண்மணி. ரொம்பக் குறந்த அளவே உள்ள அந்தத் தேநீருக்குப் பதினைந்து ரூபாய் ஆனது. இந்தியாவின் மேல் பாசம் அதிகமாகப் பொங்கி வழிய ஆரம்பித்தது. இதுக்கே இப்படியா இன்னும் இருக்கு பார் என்றது எங்கள் விதி. அது கை கொட்டிச் சிரித்தது எங்கள் யார் காதிலும் விழவில்லை. ஹோட்டல் அறைக்குப் போனோம். சற்று நேரத்தில் இரவுச் சாப்பாடு மற்றும் மீட்டிங்கிற்கு அழைப்பு வந்தது. எங்கள் "அன்னபூர்ணா ட்ராவல்ஸ்" மனோஹர் எங்களுக்கு நேபாளத்தில் இருக்கும், எங்கள் எல்லாரையும் கைலை யாத்திரைக்கு அழைத்துப் போகப் போகிற "எகோ ட்ராவல்ஸ்"ஸின் முக்கிய நபர்களை அறிமுகம் செய்து வைத்தார். சாப்பாடு முடிந்து மீட்டிங் ஆரம்பம் ஆனது. உடனேயே எங்கள் குழுவில் இருந்தவர்களின் குறைகளும் ஆரம்பித்தன. கடவுள் வணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட மீட்டிங்கில் முதலில் எங்களுக்குப் பேச வாய்ப்புக் கொடுங்கள், பிறகு நீங்கள் சொல்வதைச் சொல்லுங்கள் என்று எங்கள் குழுவினர் சொல்ல ட்ராவல்ஸ்காரர்கள் முதலில் திகைத்தாலும் பின் சரி என்றார்கள். அன்று காலைக் காப்பி கொடுக்கவில்லை என்பதில் இருந்து ஆரம்பித்து பசுபதிநாதர் கோவிலில் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தரவில்லை என்பது வரை எல்லாரும் அவரவர் மனத்தில் உள்ள குறைகளைச் சொல்ல அவர்கள் கேட்டுக் கொண்டு திரும்பி வரும்போது மறுபடி தரிசனம் செய்து வைக்கிறோம் எனச் சொல்லி சமாதானம் செய்தார்கள். சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் சிலரின் குறை. ஆகவே அம்மாதிரிக் குறை சொன்னவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படும் என்றும் சொல்லப் பட்டது. ஓரளவு சமாதானம் ஆகி மீட்டிங் ஆரம்பம் ஆனது.