எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, September 12, 2012

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 11


இந்த கோபுரம் தாக்குதல் நடந்த காலத்தில் இல்லை; இது குறித்துப் பின்னர் வரும்.  கோயில் அடையாளத்துக்காகச் சேர்த்துள்ளேன்.


அரங்கனின் பல்லக்கும், பரிவாரங்களும் அக்கரையை அடையும்வரை பொறுத்திருந்து பார்த்த சிலர் மீண்டும் திருவரங்கம் நகருக்குள் திரும்பினார்கள்.  கணுக்கால் ஆழத்துக்கும் மேல், முட்டளவு ஆழத்துக்கும் மேல் இடுப்பளவு ஆழமாக இருந்த இடங்களையும் தாண்டி அரங்கன் சென்று கொண்டிருந்தான் ஒரே ஒரு தீவர்த்தியின் உதவியோடு ஒளிந்து மறைந்து திருடனைப் போல் சென்று கொண்டிருந்தான்.கோலாகலமாகச் செல்ல வேண்டியவன், அரசனைப் போல் செல்ல வேண்டியவன்.  இக்கரையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மக்கள் குவித்த கரங்களைப் பிரிக்கவில்லை.  கண்ணீர் தாரை தாரையாக வழியப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.   அரங்கன் பத்திரமாய் மறுகரையை அடைய வேண்டுமே என்பதே அவர்கள் கவலையாக இருந்தது.  அரங்கன் அக்கரையை அடைந்துவிட்டான்.  இவர்களும் திரும்பினார்கள்.  இதில் அரங்கனோடு அரங்கன் சென்ற பாதையிலேயே செல்ல விரும்பினவர்களும் அப்பாதையிலேயே செல்ல ஆரம்பிக்க, திருவரங்கத்தின் மூலவரைக் காக்கும் எண்ணத்தோடு மற்றவர்கள் நகருக்குள் திரும்பினார்கள்.

விரைவில் ஒரு போர் இருக்கிறது என்ற எண்ணமும் அவர்களிடையே எழுந்தது.  கோயிலில் அரங்கன் கிடைக்கவில்லை என்றதும், கோயிலின் சொத்துக்கள், நகைகள், ரத்தினங்கள் கிடைக்கவில்லை என்றதும் வரப் போகும் கொடியவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள்.  சென்ற முறைத் தாக்குதலின் போது அருகிலுள்ள ஆதிநாயகன் கோயிலின் மூலவரான ரங்கநாதரைக் கைகளை உடைத்துச் சேதப் படுத்தி, சேஷன் மடியிலிருந்து கீழே இறக்கிப் போட்டு என்ன என்ன என்னமோ செய்து விட்டனர்.  அப்போது எப்படியோ இங்கே ரங்கநாதரைக் காப்பாற்றி விட்டார்கள்.  ஆனால் இம்முறை அவர்கள் முக்கியக் குறியே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தான்.  ஆகவே மூலவர் காக்கப்பட வேண்டும்.

கோயிலின் ஆர்யபடாள் வாயில் கதவைத் திறந்தால் உள்ளே நிலைவாயில் அருகே கற்சுவர் ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார்கள் சிலர்.  அவர்களோடு நின்று வேலையை மேற்பார்வை மட்டுமில்லாமல் கூட நின்று தானும் வேலை செய்து கொண்டிருந்தார் பெரியவர்  அவர் பெயர் வேதாந்த தேசிகர்.  முக்கியமான ஜனங்கள் ஊரை விட்டு வெளியே போய்விட்டாலும் கோயிலைச் சார்ந்த முக்கியமான பணியாளர்களில் பலருக்கும் மூலவரான பெரிய பெருமாளை விட்டுப் பிரிய மனமில்லை.  அவர்களைப் பொறுத்தவரை மூலவர் பெரிய பெருமாள் வெறும் சுதையால் ஆன விக்ரஹம் இல்லை.  சாந்நித்தியம் நிரம்பிய உயிர்ச் சக்தி ததும்பிய சொரூபமே அவர் தான்.  அவர்களை எல்லாம் அவர் தான் இத்தனை நாட்களாகக் காத்து வந்திருக்கிறார் என்பது உண்மை தான்.  ஆனால் இப்போது அவர்களை எல்லாம் வெட்டிக் கொன்றுவிட்டு அவரையும் துண்டு துண்டாக உடைக்க ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறது.  அந்தக் கூட்டத்தினின்று பெரிய பெருமாளை எப்பாடு பட்டேனும் காக்க வேண்டும். அதற்கு நம் உயிர் போனாலும் லட்சியம் இல்லை.

அப்படிப்பட்ட மக்கள் அனைவரும் அன்று கோயிலுக்குள் கூடி அரங்கனை மறைக்கும் திருப்பணியைச் செய்து வந்தனர்.  முதலில் ஆர்யபடாள் வாயிலுக்கருகே கல்சுவர் எழுப்பிக் கோயிலைக் கோட்டை போல் மாற்றிவிட்டால் உள்ளே இருப்பவர்களுக்கு ஆபத்து வராது எனப் பூரணமாக நம்பினார்கள்.  அதே போல் எம்பெருமான் அடியார்களான பல பெண்களும் அங்கேயே தங்கி இருந்தனர்.  அவர்கள் அரங்கனுக்கு முன்னால் மட்டுமே ஆடிப் பாடுவார்கள்.  அரங்கனைத் தவிர மற்றவர்களுக்கு அவர்களின் இனிமையான சங்கீதமோ, ஒயிலான நாட்டியமோ காணக் கிடைக்காது.  அரங்கன் இங்கே இருக்க நாங்கள் வெளியே செல்வதா?  பின் வேறு யார் முன்னிலையில் எங்கள் கலையை நாங்கள் காட்டி ஆனந்திப்பது?  திட்டவட்டமாக மறுத்தனர் அந்தப் பெண்களும்.  இதைத் தவிர வயது முதிர்ந்த பல பெரியவர்களும் கோயிலையே கதி என நம்பி வந்தவர்களும் அங்கே இருந்தனர்.  அனைவரையும் காக்கவேண்டி நகரப்  படையினர் அனைவரும் மும்முரமாக இருந்தனர்.

அழகிய மணவாளர் காவிரியைக் கடந்து தெற்கே சென்று கொண்டிருக்கிறார் என்ற செய்தி கிடைத்ததும், திருவரங்க நாச்சியாரின் உற்சவ விக்ரஹத்தையும் ஒரு பல்லக்கில் வைத்து அணிமணி ஆபரணங்களைப் பெட்டியில் வைத்து சில ஆட்கள் காவிரிக்கரை வழியாக மேற்கு நோக்கிப் பயணப்பட்டனர்.  அரங்கன் தெற்கே சென்று கொண்டிருக்க, நாச்சியாரோ, மேற்கே.  இனி இருவரும் சேர்வது எப்போது?  யாருக்குத் தெரியும்! :(  அடுத்ததாக அவர்கள் செய்த முக்கியக் காரியம் கோயிலின் தானியக் களஞ்சியத்தைக் காப்பது.  அதையும் செய்து முடித்தார்கள்.  ஆயுதங்களைத் தயார் செய்து வரப் போகும் எதிரியைத் தாக்குவதற்கு ஆயத்தம் செய்து கொண்டார்கள்.  எல்லாம் சரி,  பெரிய பெருமாள்??  ஆஹா, இதோ, அவரையும் பாதுகாக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.  ஆனால்.........ஆனால்........ இது என்ன, சந்நிதியை மறைத்துச் சுவர் ஒன்று!  ஆம், அரங்கன் சந்நிதியை மறைத்துக் குலசேகரன் படியின் மேலேயே கல்சுவர் ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கொத்து வேலையில் முக்கியமாக வேதாந்த தேசிகரும் ஈடுபட்டு முழு முனைப்போடு செய்து கொண்டிருந்தார்.  ஒவ்வொரு கல்லாக வைக்க, வைக்க பாம்பணையில் துயிலும் அரங்கன் சிறிது சிறிதாக மறைய ஆரம்பித்தான்.

இதோ அவன் திருவடி, அனைவரும் நன்றாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள், பின்னால் எப்போது பார்ப்போமோ!   பார்க்கையில் எத்தனை பேர் உயிரோடு இருப்போமோ, தெரியாது!  இதோ அவன் திருமுகம்.  தெற்கே நோக்கிய வண்ணம் இருக்கும் அந்த  அருள் விழிகளை இதோ இந்தக் கல்சுவர் மறைக்கப் போகிறது.  அனைவரும் பாருங்கள்;  நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.  அரங்கனின் அருளை உங்கள் மனதில் நிரப்பிக் கொள்ளுங்கள்.  இந்த அருளின் பலத்திலேயே வரக்கூடிய கடுமையான சோதனை நாட்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்.  அத்தகைய சக்தியை இதோ அரங்கன்  நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறான்.  ஆகவே உங்கள் கண் நிறைய, மனம் நிறைய அரங்கனை நிரப்பிக் கொள்ளுங்கள்.  அவன் அருள் பிரவாகத்தில் மூழ்குங்கள்.

அனைவரும் கண்ணீர்  வடிய வடிய வேலை செய்தார்கள்.  ஒரு சமயம் அரங்கனைப் பாரத்த வண்ணம்.  மறு சமயம் முகத்தைத் திருப்பிக் கொண்டு அழுத வண்ணம்.  அவர்கள் பார்வையிலிருந்து மெல்ல மெல்ல அரங்கன் மறைந்தான்.  தினம் தினம் வழிபாட்டில் சிறிது நேரம் போடப்படும் திரையையே எப்போது தூக்குவார்கள், எப்போது அவனைக் காணுவோம் எனத் துடிக்கும் அந்த மக்கள் இப்போது போடப்பட்டிருக்கும் இந்தக் கல்திரையைக் கண்டு உடலும், மனமும் பதறத் துடிதுடித்து அழுதார்கள்.


உதவி செய்த நூல்கள்:  ஸ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா, மற்றும் வைணவஸ்ரீ, Ulugh Khan’s expedition and the sack of Srirangam temple.

படங்கள் உதவி:  தற்சமயம் கூகிளார் தான்.  படங்கள் எடுக்கணும்.  கொஞ்சம் வெயில் கடுமை.  போகமுடியலை.  மாலை வேளைகளில் கூட்டம். :)))))

Saturday, September 08, 2012

ஸ்ரீராமுக்கு ஒரு சின்ன(:D) பதில்


ஸ்ரீராம் முக்கியமான கேள்வி ஒன்றைக்கேட்டிருக்கிறார். அரங்கன் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள சக்தியற்றவனா என அப்போது யாருமே கேள்வி எழுப்பவில்லையா எனக் கேட்டுள்ளார்.  அனைவருக்கும் தோன்றும் கேள்வி இது.  ஏன் நம் நாட்டு நாத்திகவாதிகள் கூட தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள வக்கில்லாத உங்கள் கடவுள் உங்களைக் காப்பாற்றுவார் என எப்படி நம்புகிறீர்கள் எனக் கேட்டது உண்டு தான்.  இங்கே அரங்கனுக்கு அந்த சக்தி இருந்தாலும், இப்போது அவனை நம் மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.  மேலும் படை எடுத்து வந்திருப்பது யார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

படை எடுத்து வந்திருப்பதோ மாற்று மதத்தினர்.  விக்ரஹ ஆராதனையே கூடாது என்பவர்கள்.  விக்ரஹங்களை நொறுக்கித் தள்ளுபவர்கள்.  அப்படிப்பட்டவர்கள் கைகளில் இந்த அரிய பொக்கிஷங்கள் கிடைத்தால் என்ன ஆகும்னு சொல்ல வேண்டியதில்லை.  கை, வேறு கால் வேறாக இப்போதும் பல சிற்பங்களைக் காண்கின்றோம்.  பல சிற்பங்கள், விக்ரஹங்கள் பூமிக்கடியிலிருந்து தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருக்கின்றன.  இவை எல்லாம் புதைக்கப்பட்ட காலம் எப்போது எனச் சொல்ல வேண்டியதில்லை.  நம் நாட்டுச் செல்வங்களைக் காக்க வேண்டியே மக்கள் இம்மாதிரியான ஒரு நடவடிக்கையை எடுத்தனர்.  மேலும் இது இயற்கைச் சீற்றங்களினால் விளைந்த ஆபத்து இல்லை.  மனிதரால் நேர்வது.  மனித மன வக்கிரங்கள் எப்படி நடந்து கொள்ளும் என்பதைச் சொல்ல முடியாது.  விக்ரஹத்தைப் பாதுகாக்கவில்லை எனில் கோயில் சொத்துக்களுக்கும் ஆபத்து நேரிடும் என்பதோடு, மூலவருக்கும் ஆபத்து நேரிடலாம்.  கோயிலும் பாதுகாக்கப்பட வேண்டும், அரங்கனின் சொத்துக்களும் பாதுகாக்கப் படவேண்டும், அரங்கனும் பத்திரமாக இருக்க வேண்டும்.  அதற்கு அரங்கனை அங்கிருந்து அகற்றுவதே சரி.  அழகிய மணவாளர் இல்லை எனில் அவர்கள் கோபம் வேறு விதத்தில் திரும்பும் என்பதை அறிந்திருந்தார்கள்.  எனினும் அப்போது இந்த முடிவே சரியெனப் பட்டது.  தொலைதூரம் கொண்டு போய்விட்டால் நல்லது என நினைத்தனர்.  விக்ரஹங்களில் இறைவனைக் காணும் அவர்கள் இப்போது தங்கள் சொந்தக் குழந்தையை எப்படிப் பாதுகாத்து ஒளித்து மறைத்து வைப்பார்களோ அவ்வாறே வேற்றிடம் தேடிச் சென்று மறைத்தும் வைத்தனர்.  இது ஒரு காரணம்.

இன்னொன்று ஸ்ரீரங்கத்து மக்கள் இயல்பாகவே ரங்கனிடம் பாசம் மிகுந்தவர்கள்.  அரங்கன் அவர்களின் உயிர்; நம்பிக்கை.  அவனை நினையாமல், அவனைப் பாராமல் அவர்களுக்கு அன்றாட வேலைகள் நடவாது.  நெல் படியளக்கையில் கூட முதல் அளவை ரங்கனுக்குத் தான்.  ரங்கா எனச் சொல்லி அளந்து போட்ட பின்னரே கணக்குத் தொடரும். இன்றும் இது நடக்கிறது. எனில் இந்த நிகழ்வு நடந்த கால கட்டத்தில் கேட்கவே வேண்டாம்.  அவர்களின் உயிரே அந்த அரங்கனிடம் தான் இருந்தது.  உயிருக்கு உயிரான அரங்கனைத் தன்னந்தனியே அந்நியர் கைகளில் மாட்ட விட்டு விட்டு அவர்கள் மட்டும் பாதுகாப்பான இடம் தேடிச் செல்வார்களா?  அப்படி விட்டு விட்டுப் போனால் மீண்டும் அரங்கனைக் காண முடியுமோ, முடியாதோ!  அதோடு தினம் தினம் அரங்கனைக் காணாமல் அவன் ஆராதனைகளைப் பாராமல் அவர்கள் ஒரு கவளம் அன்னம் கூட உண்ண மாட்டார்கள்.  அரங்கன் எங்கே இருப்பானோ அங்கே அவர்கள் இருப்பார்கள்.  அப்படிப் பட்ட மக்களிடமிருந்து அரங்கனைப் பிரிக்க முடியவில்லை.  தப்பிச் செல்லுங்கள்;  ஆபத்து காத்திருக்கிறது என்றாலும் கேளாமல் அரங்கனே இருக்கையில் நாங்கள் எப்படிச் செல்வோம் என அரங்கனைப் பாதுகாக்க நினைக்கும் மக்கள்.  இம்மக்களையும் காக்க வேண்டும்.  இவை எல்லாவற்றையும் யோசித்து  கோயில் நிர்வாகத்தினர் அரங்கனை நகரை விட்டு வெளியே கொண்டு போகத் தீர்மானித்தனர். அப்போது அரங்கனுக்காக அங்கிருந்த மக்கள் அவனோடு சென்று விடுவார்கள் என நம்பினார்கள்.  ஓரளவு அப்படியே நடந்தது.

மூலவரையும் கோயிலையும் பாதுகாக்கவேண்டியும் இருந்தவர்களும் மற்றும்  திருவரங்கத்தை விட்டுச் செல்ல மனமில்லாத மக்களையும் தவிரப் பெரும்பாலோர் அரங்கனின் உலாவைப் பின் தொடர்ந்து சென்று விட்டனர்.  இதன் மூலம் அரங்கன் ஏதேனும் செய்தி சொல்கிறான் எனில் அது மக்களிடம் ஒற்றுமையை வலியுறுத்துவதும், அதற்கு ஏற்ற மன உறுதியைப் பெறுவதும் தான்.  மக்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டதால் தானே இந்நிலைமை.  ஒரு வேளை அன்னை பரமேஸ்வரி சநாதன தர்மத்துக்கு இப்போது கஷ்டகாலம் என வித்யாரண்யரிடம் சொன்னதை உண்மையாக்கவும் நடந்திருக்கலாம்.     வித்யாரண்யரின் சீடர்களின் அவசரத்தினால் வெறும் 200 ஆண்டுகளோடு இந்து சாம்ராஜ்யம் முடிவடைந்தது. :((( அதெல்லாம் இங்கே வராது.  என்றாலும் ஒன்றைத் தொட்டு மற்றவை நினைவில் வந்தன.  வித்யாரண்யர் இந்தக் கால கட்டத்தில் வாழ்ந்தவர் இல்லையா! அதான்.


Wednesday, September 05, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 10


மாலிக்காபூரின் படையெடுப்புக்குப் பின்னர் பத்துப் பனிரண்டு வருடங்கள்வரையிலும் ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகங்களில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் நடைபெற்று வந்தது.   நடுவில் ஒரு சிறிய முஸ்லீம் படையெடுப்பு இருந்தாலும் அதில் இருந்து ஸ்ரீரங்கமும், மக்களும் தப்பினார்கள்.  திருவிழாக்கள் கொண்டாடப் பட்டன.  மக்கள் அரங்கன் திருவுரு முன்னர் ஆடிப் பாடிக் களித்தனர்.  அழகிய மணவாளன் வீதி உலா வந்தான்.  எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது.  அப்போது ஓர் நாள் அந்த மோசமான செய்தி வந்தடைந்தது.   ஸ்ரீரங்கம் கோயிலில் பவித்ரோத்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அழகிய மணவாளர் அருகிலுள்ள ஆதிநாயகன் கோயிலுக்கு எழுந்தருளி இருந்தார்.  அடியார்கள் பலரும் அழகிய மணவாளரோடு சென்றிருந்தனர்.  இங்கே ஸ்ரீரங்கத்தில் சிலர் மட்டுமே இருந்தனர்.  இன்னும் சிறிது நேரத்தில் அழகிய மணவாளர் திரும்ப வரப் போகிறார் என்பதால்  பவித்ரோத்சவ மண்டபத்தில் அவரை எழுந்தருளப் பண்ண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.  ஊர் தனக்கு நேரிடப் போகும் கலவரத்தை உணராமல் கோலாகலத்திலும், கொண்டாட்டத்திலும் ஆழ்ந்து போயிருந்தது.  பாண்டியர்களின் நிலை இன்னதெனப் புரிபடாமல் சிறந்ததொரு தலைவன் இன்றித் தான் நாடுஇருந்தது.  என்றாலும் கோயிலின் அன்றாட நிர்வாகம் ஸ்தம்பிக்கவில்லை. 

அப்போது தான் வடநாட்டுப் படையெடுப்பைக் குறித்த தகவல்கள் வந்து சேர்ந்தன.  ஹொய்சள மன்னன் எதிர்த்து நின்றதாகவும், அவனை மதம் மாறக் கட்டாயப் படுத்தியதாகவும், அவன் தன் நாடு, குடிபடைகள், கஜானா என அனைத்தையும் சமர்ப்பித்துவிட்டுத் தன் மதத்தைக் காப்பாற்றிக் கொண்டதாகவும் செய்தி வந்தது. எதிரிகள் சமயபுரத்தை நெருங்கி விட்டதாகவும் கேள்விப் பட்டனர்.  கோயிலில் அப்போது நிர்வாகியாக இருந்தவர் ஸ்ரீரங்கராஜநாத வாதூல தேசிகர் என்பார், யோசிக்க நேரமில்லை, உடனடியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார்.  ஊர்ப் பெரியோர் சிலரோடு  அப்போது அங்கிருந்த வேதாந்த தேசிகரின் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.  அவர்களைக் காக்கவேண்டிய பாண்டியர்களோ ஐந்து கூறுகளாகப் பிரிந்து தனித்தனியே சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.  ஹொய்சள மன்னர் வீர வல்லாளருக்கோ எதிர்த்து நிற்க முடியவில்லை.  என்ன செய்வது!  நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தார்கள்.   அங்கேயே இருந்து மூலவரைக் காக்க வேண்டிய ஏற்பாடுகளையும் அரங்கனோடு செல்ல வேண்டியவர்களையும் அவர்கள் முடிவு செய்தனர்.  அதன்படி பிள்ளை லோகாசார்யர் தலைமையில் அரங்கனை ஸ்ரீரங்கத்தை விட்டுத் தென் திசைக்குக் கொண்டு செல்வது என முடிவு செய்யப் பட்டது. 

அங்கிருந்த பலருக்கும் அரங்கனைப் பார்க்காமல், அவன் ஆராதனைகளைக் காணாமல் அன்றைய நாள் கழியாது.  அரங்கனைப் பார்த்துவிட்டே அன்றாட உணவை அருந்தும் வழக்கம் உள்ளவர்கள்.  இப்படிப் பட்டவர்களிடம் தாங்கள் எடுத்திருக்கும் முடிவை எப்படிச் சொல்வது?  ஆனாலும் வேறு வழியில்லை.  மக்கள் கூட்டத்தினரிடம் முகலாயப் படையெடுப்பைக் குறித்தும், கண்ணனூர் அருகே நெருங்கி விட்டதாகவும் இப்போது செய்ய வேண்டியது அரங்கனை எவ்வாறேனும் காப்பது தான் என்றும் விவரிக்கப் பட்டது.  விழாக் காணச் சென்றிருந்த அரங்கனை அவசரம் அவசரமாகக் கோயிலில் உள்ள அணிமா மண்டபத்துக்கு எடுத்து வந்தார்கள்.  அரங்கனின் அலங்காரங்கள் களையப்பட்டன.  ஒரே ஒரு பூமாலையுடன் தோளுக்கு இனியானில் மீண்டும் அமர்த்தப்பட்டார் அழகிய மணவாளர்.  அரங்கனை ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்லும் ஏற்பாடுகள் துவங்கின. 

மக்கள் கூட்டம் கூடி இருந்தாலும் யாரும் அரங்கனை விட்டுப் பிரிய மறுத்தனர்.  அனைவரின் உயிருக்கு உயிரான அரங்கனை விட்டுப் பிரிந்து நம் உயிரைக் காத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்றே நினைத்தனர்.  அவர்களிடம் அரங்கனை ஊரை விட்டு வெளியே எடுத்துச் செல்லப் போகும் செய்தியைத் தெரிவிக்கவும், அவசரம் அவசரமாக அரங்கனோடு செல்லத் தயாரானார்கள்.  அவர்களின் லக்ஷியம், வாழ்க்கையின் நம்பிக்கை, உயிர் அந்த அரங்கனிடம் தான் உள்ளது.  தோளுக்கு இனியான் என்னும் பல்லக்கில் அமர்ந்து கொண்டு நடப்பவை அனைத்தையும் வேடிக்கை பார்க்கிறார் அவர்.  சிறிது நேரத்துக்குள்ளாக அழகிய மணவாளரும், உபய நாச்சிமார்களும் பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிய கோயில் நிர்வாக அதிகாரிகள்வேத்திர பாணிகள் என்னும் கூட்டத்தை ஒழுங்கு செய்வோர் மூலம் கூட்டத்தைக் கட்டுப் படுத்திய வண்ணம் அரங்கன் பல்லக்கைக் கோயிலை விட்டு நகர்த்தினார்கள்.  பல்லக்கு மெல்ல நகர்ந்தது.

“ஓ”வென்ற இரைச்சல்.  மக்கள் விசும்பி விசும்பி அழுதனர்.  திருச்சின்னங்கள் ஊத, வேதியர்கள் மறை ஓத, பிரபந்தங்கள் பாடப்பட, மங்கள வாத்தியங்கள் முழங்க, அதிர்வேட்டு சப்திக்க, யானை முன்னால் அசைந்து சென்று அரங்கன் வரவைத் தெரிவிக்க, ஊர்வலம் எழுந்தருளும் அரங்கன் இன்று எந்தவிதமான சப்தமும் இல்லாமல், அணிமணிகள் பூணாமல், பட்டாடைகள் தரியாமல், வண்ண மலர்மாலைகள் பூணாமல், எந்தவிதமான அலங்காரங்களும் இல்லாமல் ஓர் ஏழை, எளியவனைப் போல் மறைந்து, ஒளிந்து இரவோடிரவாகத் திருட்டுத் தனமாகக் காவிரியைக் கடந்து தெற்கே செல்லப் போகிறார்.  அதைக் காணச் சகியாமல் கூடி இருந்த கூட்டம் ஓவென அழுது ஆர்ப்பரிக்க, அரங்கனைத் தொடர்ந்து சென்றார் பலர்;  அங்கேயே மயங்கி விழுந்தார் சிலர்.  மார்பில் அடித்துக் கொண்டு அழுதார் பலர்.  அரசனைக் காண வந்தோமே, இப்படி ஆண்டியைப் போலச் செல்கிறீரே எனக் கதறிய வண்ணம் மக்கள் கூட்டம் அரங்கன் பல்லக்கைப் பின் தொடர்ந்தது.  (இதை எழுதும்போது எனக்கும் கண்ணீர்)

அன்று ஸ்ரீராமன் நாடு விட்டுக் காடு ஏகியபோது அயோத்தியில் நிகழ்ந்த அனைத்தும் இன்று ஸ்ரீரங்கத்தில் நடந்தது.  அரங்கன் உலாக் கிளம்பியது.

அரங்கனோடு நம் உலாவும் தொடரும்.



Sunday, September 02, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 9


சுரதானிக்கு அந்த அழகிய விக்ரஹம் மிகவும் பிடித்துப்போய்விடவே, அதனுடனேயே தூங்கி, விளையாடி, உணவு உண்டு என ஒரு நிமிடமும் அதை விட்டு அகலாமலே இருந்து வந்தாள்.  இங்கே கரம்பனூரில் இருந்த நம் நாட்டியப் பெண்மணிக்கோ அரங்கனைத் தொடர்ந்து சென்றதில் அவன் எங்கே போயிருக்கிறான் என்பதைக்கண்டு பிடிக்க முடிந்தது.   கடும் முயற்சிகள் எடுத்து அந்தப் புரத்துக்குள் நுழைந்து அரங்கனைச் சீராட்டிப் பாராட்டும் சுரதானியையும் பார்த்துவிட்டாள்.  அவளிடமிருந்து அரங்கனை எப்படி மீட்பது?  ஆனால் அவன் திரும்ப அரங்கம் வரும் வழியென்ன?? எதுவும் புரியவில்லை அவளுக்கு.  திரும்ப ஸ்ரீரங்கம் சென்றால் தவிர எதுவும் இயலாது எனப் புரிந்தது அவளுக்கு.  ஆகவே மீண்டும் எப்படியோ அந்தப்புரத்திலிருந்து வெளி வந்து ஸ்ரீரங்கத்தை அடைந்து விட்டாள்.  “பின் சென்ற வல்லி”  என்னும் பெயரால் அழைக்கப்படும் அவள், கோயிலில் சம்பந்தப் பட்டவர்களுக்கு அரங்கனின் இருப்பிடத்தைத் தெரிவித்தாள்.

அனைவரும் கலந்து ஆலோசித்தனர்.  அரங்கனை எவ்வாறேனும் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.  சும்மாப் போய்க் கேட்டால் சுல்தான் கொடுக்க மாட்டான்.  ஆகவே அவனை எவ்வாறேனும் கவர்ந்து அவன் மனதை மாற்ற வேண்டும்.  அதனால்  நன்றாய் ஆடிப் பாடக் கூடியவர்களாக சுமார் அறுபது பேரைத் தேர்ந்தெடுத்தனர்.  அவர்களுக்குப் “பின் சென்ற வல்லி “வழிகாட்ட அனைவரும் தில்லி போய்ச் சேர்ந்தனர்.  பெரிய கோஷ்டியாக வாத்திய முழக்கங்களுடன் தெற்கே இருந்து ஒரு நடனகோஷ்டி வந்திருப்பதை அறிந்த சுல்தான் தன் அவைக்கு அவர்களை வரவழைத்தான்.  அவர்கள் எதிர்பார்த்ததும் இது தானே!  மன்னன் சபையில் ஆடிப் பாடி அவன் மனம் மகிழும் வண்ணம் அவன் கண்களுக்கும், மனதுக்கும் விருந்து படைத்தனர்.  மன்னன் உண்மையாகவே அவர்கள் திறமையில் மனம் மகிழ்ந்தான்.  ஆகவே அவர்களுக்கு வேண்டிய பரிசில்களைக் கொடுப்பதாக மனப்பூர்வமாக அறிவித்தான்.  ஆஹா, இது, இது தானே அவர்கள் எதிர்பார்த்ததும்.  அவர்கள் தங்களுக்கு வேறெதுவும் வேண்டாம் எனவும், அழகிய மணவாளரைத் திரும்பக் கொடுத்தால் போதும் எனவும் தெரிவித்தனர்.  சுல்தான் அவர் இங்கிருந்தால் தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள் எனக் கூற, அவர்களோ அந்தப்புரத்தில் இளவரசியோடு இருப்பதைக் கூறினார்கள்.

அனைவரையும் விசாரித்த சுல்தான், தன் மகளிடமிருந்து அந்த விக்ரஹத்தைப் பிரிப்பது கஷ்டம் என உணர்ந்தவனாக அவளைத் தூங்க வைத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு கூறிவிட்டான்.  அவளோ விஷயம் ஒரு மாதிரியாகப் புரிந்து கொண்டு தூங்க மறுத்தாள்.  இந்த நடன கோஷ்டியே பல்வேறுவிதமான தாலாட்டுக்களையும் பாடி அவளைத் தூங்க வைத்தது.  அவள் நன்றாய்த் தூங்கியதும் அழகிய மணவாளரைத் தூக்கிக் கொண்டு ஸ்ரீரங்கம் நோக்கிப் பறந்தனர்.  ஆனால் சுரதானியோ!  மிகவும் மோசமான நிலையில் ஆழ்ந்தாள்.  மறுநாள் காலை எழுந்து பார்த்தால் அவள் நேசித்த அழகிய மணவாளரைக் காணவில்லை.  மனம் வருந்தி எழுந்து குளிக்காமல், உணவு உண்ணாமல், உடைமாற்றாமல் அழுது கொண்டே இருந்தாள்.  சுல்தானுக்கு மகளின் மோசமான நிலை தெரிவிக்கப் பட்டது.  தன் மகளைப் பல விதங்களிலும் தேற்றிப் பார்த்தான்.  அவளோ மனம் மாறுவதாக இல்லை.  அந்த அழகிய மணவாளரையே தான் மணந்து கொள்ளப் போவதாக வேறு சொல்லிவிட்டாள்.  தன்னையும் அவரோடு அனுப்பி வைக்குமாறு வேண்டினாள்.  அவளின் அவல நிலையைப் பொறுக்க முடியாத சுல்தான், சில வீரர்களின் பாதுகாப்போடு தன் மகளையும் அழகிய மணவாளரைப்பின் தொடர்ந்து செல்லும்படி ஆணையிட்டான்.  முன்னால் சென்று கொண்டிருந்தவர்களுக்குத் தங்களை சுல்தானின் ஆட்கள் பின் தொடர்வது தெரிந்து போய்விட்டது.  ஒரு சிலர் விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு வழியிலேயே மறைந்தனர்.  மற்றவர் ஸ்ரீரங்கம் அடைந்தனர்.  சுரதானியும் பின் தொடர்ந்தாள்.

ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்த சுரதானியோ அங்கே கோயில் கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்ணுற்றாள்.  அவளுடன் வந்த வீரர்கள் தாங்கள் சென்று விசாரித்து வருவதாகக் கூறிச் செல்லக் கோயில் வாசலிலேயே காத்திருந்தாள் சுரதானி.  அங்கே அழகிய மணவாளர் இல்லை என்னும் செய்தியைக் கொண்டு வந்தனர் வீரர்கள்.  அவ்வளவு தான்.  அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்த சுரதானியின் உயிரும் அக்கணமே பிரிந்தது.  அவளுடைய உடல் மட்டும் அங்கே கிடந்ததே தவிர உயிர் அரங்கனுடன் இரண்டறக்கலந்தது.  அவளையும் ஒரு நாச்சியாராக அன்று முதல் மக்கள் வழிபட ஆரம்பித்தனர்.  முஸ்லீம்கள் உருவ வழிபாடு செய்வதில்லை என்பதால் துலுக்க நாச்சியார் சந்நிதியில் விக்ரஹங்கள் எதுவும் இருக்காது.  ஒரு ஓவியம் மட்டுமே இருக்கும்.  தினம் காலை துலுக்க நாச்சியாருக்காக அரங்கன் லுங்கி கட்டிக் கொண்டு ரொட்டி சாப்பிடுகிறார்.  இப்போ அரங்கன் கதி என்னனு பார்ப்போம்.

வழியிலே மறைந்தவர்கள் அரங்கன் விக்ரஹத்தைத் திருப்பதியிலே மறைத்து வைத்ததாகவும், பின்னால் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியில் திரும்ப ஸ்ரீரங்கம் வந்ததாகவும் பாரதீய வித்யாபவன் வெளியீடான புத்தகங்கள் இரண்டிலும் காணப் படுகிறது.  இந்தச் சமயத்திலே தான் அரங்கனைத் திருப்பதியில் மறைத்து வைத்ததாகச் சிலர் சொல்கின்றனர்.  அப்படி மறைத்து வைக்கப்பட்ட அரங்கனைத் தான் அறுபது ஆண்டுகள் கழித்து மீட்டதாகவும் சொல்கின்றனர்.  ஆனால் ஆதாரபூர்வமான தகவல்களோ மாலிக்காபூருடன் சென்ற அரங்கன் திரும்பி  வந்து விட்டதாகவும், அதன் பின்னர் வந்த உல்லூகான் படையெடுப்புச் சமயத்திலே தான் அரங்கன் பல ஊர்களுக்கும் சென்று  ஒளிந்திருந்ததாகவும், அதன் பின்னர் கடைசியில் திருப்பதியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றனர்.  வேதாந்த தேசிகர் ஆலோசனையின் பேரில் பிள்ளை உலகாரியர் தென்னாட்டுக்கு எடுத்துச் சென்றதாய்க் கூறுகின்றனர்.  இதற்கான கல்வெட்டுக்கள் ஸ்ரீரங்கம் கோயிலில் இருப்பதாகவும், அவை மறைக்கப்பட்டு வேறு சில அறிவிப்புப் பலகைகள் வைக்கப் பட்டிருப்பதாகவும் அறிகிறோம்.  இது கோயிலொழுகிலும் இப்படியே சொல்லப்பட்டிருக்கிறது.  நாம் இப்போதைக்கு மாலிக்காபூரைப் பார்த்துக் கொண்டோம்.  மற்ற விஷயங்களுக்கு ஒவ்வொன்றாய் வரப் போகிறோம்.  அதுக்கு முதலில் நாம் ஆதிநாயகப் பெருமான் கோயிலுக்குப் போகவேண்டும். 

மேற்கண்ட தகவல்கள் உதவி:  திரு ஹரிகி ஸ்கான் செய்து அளித்த பாரதீய வித்யாபவன் வெளியீடான ஸ்ரீரங்கம் கோயில் பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகம் திரு தாஸ் அவர்களால் எழுதப் பட்டது   மற்றும் திரு தவே அவர்களால் எழுதப் பட்ட புத்தகத்தின் ஸ்கான் செய்யப் பட்ட பக்கங்கள்.