எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, May 20, 2013

ஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! மட்டையடித் திருவிழா--ப்ரணய கலஹம், முடிவுப்பகுதி!


மட்டையடித் திருவிழாவில் நம்மாழ்வாரின் எந்தப் பாசுரத்தைப் பாடுவாங்கனு தெரியலை.  யாரையானும் கேட்கணும்.  இன்னும் யாரும் வசமா மாட்டிக்கலை. :))) இரண்டு நாட்கள் முன்னர் கோயிலுக்குப் போனப்போ நம்பெருமாளைப் பார்த்தேன்.  ஊர்சுத்தப் போகாமல் மூல'ஸ்தானத்திலேயே உபய நாச்சியார்களுடன் வீற்றிருந்ததோடு நின்று முழுசாய் ஒரு நிமிடம் பார்க்கவும் முடிந்தது.  போங்க, போங்கனு விரட்டலை. பட்டாசாரியார் யாரோ ஷிஃப்ட் மாறும் வேளை போல!  அதில் கவனமாய் இருந்தாங்க.


கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்
தாமரைக் கண் என்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்
இருநிலம் கைதுழாவிருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்
இவள்திறத்து என் செய்கின்றாயே


என் செய்கின்றாய் என் தாமரைக்கண்ணா
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என்செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்
என்னும் வெவ்வுயிர்த்துயிர்த்து உருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா தகுவதோ என்னும்
முன்செய்திவ்வுலகம் உண்டுமிழ்ந்தளந்தாய்
என்கொலோ முடிகின்றது இவட்கே

நாச்சியார் காது கொடுத்துக் கேட்டுவிட்டு மனம் மகிழ்கிறாள்.  உடன் பெருமாளைப் பார்த்துச் சொல்கிறாள்.

"தாம் வருஷாவருஷம் அடமாயெழுந்தருளி தமக்குச் சரிப்போனபடி நடந்து போட்டுப் பின்னும் இங்கே வந்து நாமொன்றும் அறியோமென்றும், ப்ரமாணம் பண்ணித் தருகிறோமென்றும் பரிஹாசங்களைப் பண்ணி, இப்படிப்பட்டிருக்கிற அக்ருத்யங்களைப் பண்ணிக் கொண்டு வருகிறீர்.  நாமானால் பொறுக்கிறதில்லை.  நம்முடைய ஐயா நம்மாழ்வார் வந்து மங்களமாகச் சொன்ன வாய்மொழியாலே பொறுத்தோம். உள்ளே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

"ஐயா, நீர் ஒவ்வொரு வருடமும் இவ்வாறே அடம் பண்ணிக் கொண்டு வருகிறீர்.  உமக்கு எது சரியெனத் தோன்றுகிறதோ அதைத் தான் செய்து வருகிறீர்.  இப்படி எல்லாம் நடந்த பின்னர் இங்கே வந்து எனக்கு எதுவுமே தெரியாது என அப்பாவி போல் வேஷம் போடுகிறீர்.  அதற்காகப் பொய்யாய்ப் பல சத்தியங்களைப் பண்ணுகிறோமென்று சொல்கிறீர்/  என்னைப் பரிஹாசம் பண்ணுகிறீர்.  நீர் செய்வது அனைத்தும் அக்கிரமங்கள்.  எனக்குப் பொறுக்கவே இல்லையே!  ஆனாலும் அதோ, நம் நம்மாழ்வான் இப்போது இங்கே வந்து மங்களமாய்ச் சில வார்த்தைகளைச் சொல்லுகிறான்.  அவனெதிரில் நம் சண்டையைப் போட்டுக் கொள்ள வேண்டாம்.  அவனுக்காக நாம் உம்மைப் பொறுத்தோம்.  உள்ளே எழுந்தருளிக்கொள்ளும்!"

ப்ரணய கலஹம் முடிந்து நம்பெருமாள் ரங்கநாயகியோடு ஒரே சிம்ஹாசனத்தில் எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிக்கிறார்.




வாழித்திருநாமங்கள்

திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே
செய்யவிடத் தாய்மகனார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில் வீற்றிருக்கு மீமையவர் கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலையெய்தினான் வாழியே
அரியதயரதன் மகனாயவதரித்தான் வாழியே
அந்தரியா மித்துவமு மாயினான் வாழியே
பெருகி வரும் பொன்னி நடுப்பின் துயின்றான் வாழியே
பெரியபெருமாளெங்கள் பிரானடிகள் வாழியே


பெரிய பிராட்டியார்

பங்கயப்பூ விற்பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்தரநாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்களெழிற்சேனை மன்னர்க்கிதமுரைத்தாள் வாழியே
இருபத்தஞ் சுட்பொருள் மாலியம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே!

Tuesday, May 14, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! மட்டையடித் திருவிழா, ப்ரணய கலஹம், தொடர்ச்சி!


உறையூரா?? அது எங்கே இருக்கு?  பெருமாள் கேட்கிறார். :)))

பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம்

நாம் உத்ஸ்வார்த்தமாகப் புறப்பட்டருளி, திருவீதிகள் எல்லாம் வலம் வந்து, தேவதைகள் புஷ்ப வர்ஷம் வர்ஷிக்க, ப்ராஹ்மணர்கள் எல்லோரும் ஸ்தோத்ரம் பண்ண, இப்படிப் பெரிய மநோரதத்தோடே தங்களிடத்தில் வந்தால் தாங்கள் எப்போதும் போல ஆதரியாமற்படிக்கு அபராதங்களைப் பண்ணினோமென்கிறீர்கள்; நாமானால் உறையூரைக் கண்ணாலே கண்டதுமில்லை;  காதாலே கேட்டதும் இல்லை என்று சொன்னோம்.  அத்தை அப்ரமாணமாக நினைத்தீர்கள்.  ஆனால் ப்ரமாணம் பண்ணித் தருகிறோமென்று சொன்னோம்.  அத்தைப் பரிஹாசப் ப்ரமாணமென்று சொன்னீர்கள்.  இப்படி நாம் எத்தனை சொன்னபோதிலும் அத்தனையும் அந்யதாவாகக் கொண்டு, சற்றும் திருவுள்ளத்தில் இரக்கம் வராமல் கோபத்தாலே திருவுள்ளங் கலங்கித் திருமுக மண்டலங் கறுத்துத் திருக்கண்கள் சிவந்து இப்படி எழுந்தருளி இருந்தால் நமக்கென்ன கதி இருக்கிறது?  அழகிய மணவாளப் பெருமாள் ஸ்ரீ ரங்க நாச்சியார் சந்நிதி வாசலிலே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறாரென்கிற அவமானம் உங்களுக்கேயொழிய நமக்குத் தேவையில்லை.  ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக் கொண்டு நம்மையும் உள்ளேயழைக்கச் சொல்லிப் பெருமாளருளிச் செய்த ப்ராகாரம்.

"அடி ரங்கா, இது என்ன? இவ்வளவு கோபமாக இருக்கின்றாயே?  நான் உற்சவத்திற்காகவன்றோ கிளம்பிப் போனேன்.  இங்கே திருவீதிகளில் வலம் வந்தேன்.  தேவதைகள் புஷ்பங்களை வர்ஷித்தனர்.  என்னைக் கண்டதும் ப்ராஹ்மணர்கள் எல்லோரும் ஸ்தோத்ரம் பண்ண ஆரம்பித்துவிட்டனர்.  அவற்றை எல்லாம் கண்டு மகிழ்ந்து போய் உன்னை நேரில் கண்டு இவை எல்லாவற்றையும் குறித்துச் சொல்ல வேண்டும் என்ற பெரிய மனோரதத்துடனே உன்னைக் காண வந்தேன்.  எவ்வளவு ஆவலுடன் வந்தேன் தெரியுமா?  ஆனால் நீயோ என்னை உள்ளே அழைக்காமல், எப்போதும் போல் என்னை அழைத்து உன் சேவார்த்திகளைச் செய்து மகிழாமல், நான் ஏதோ தவறுகள் செய்துவிட்டேன் என்கின்றாயே!  இது நியாயமா?  அடி, ரங்கா, உறையூரா?  அது எங்கே இருக்கிறது?  நான் அந்த ஊரைக் கண்ணாலே கண்டதுமில்லை. அந்தப் பெயரைக் காதாலே கேட்டதுமில்லை."

ஆனால் நான் சொன்னதை நீ எங்கே நம்பினாய்?? சத்தியம் இல்லை என நினைக்கிறாய். நினைத்தாய்! சரி, சத்தியம் செய்து தருகிறேன் என்று சொன்னால் அதைப் பரிஹாசம் என்கிறாயடி. இப்படி நான் எத்தனை சமாதானம் சொன்னாலும் காதில் கேட்டுக் கொள்ளாமல் உன் மனமும் இரங்காமல், இத்தனை கோபம் ஏதுக்கடி ரங்கா?  கோபத்தாலே உன் திருவுள்ளம் மட்டுமா கலங்கி உள்ளது? உன் அழகான திருமுகம் எவ்வளவு கறுத்துவிட்டது தெரியுமா?  அழகிய நீலோத்பலத்தை ஒத்த உன் திருக்கண்கள் செவ்வரியோடு சிவந்து காணப்படுகின்றதே. இப்படி நீயும் கோவித்துக் கொண்டாயானால் நான் யாரிடம் போவேன்?  அடி ரங்கா?  எனக்கு வேறு கதியும் உண்டோ? சரி, சரி, நீ இருக்கிறபடி இருந்து கொள்ளடி ரங்கா! அழகிய மணவாளன் என்ற பெயர் பெற்ற நான் இங்கே ஶ்ரீரங்க நாச்சியார் சந்நிதி வாசலிலே உள்ளே அழைக்கப்படாமல், வெளியே தள்ளப்பட்டுக்கொண்டிருந்தால் அதனால் எனக்கு ஒன்றுமில்லை.  அந்த அவமானம் உனக்குத் தான். எனக்கு என்ன வந்தது? அடி ரங்கா ஆனாலும் என் மனம் கேட்கவில்லையே! இதோ, இந்தப் புஷ்பங்களை வாங்கிக் கொள், சற்றே நகர்ந்து கொள், என்னை உள்ளே அழைப்பாய்!"

இப்போது யாரோ போற்றிப் பாடும் குரல் கேட்கிறது.  ரங்கநாயகி உற்றுக் கேட்கிறாள்/  யாரது பாடுவது?  ஓ, சடகோபன் என்னும் நம்மாழ்வானா? என்ன பாடுகிறான்??

Saturday, May 11, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! மட்டையடித் திருவிழா! ப்ரணய கலஹம்!


நாச்சியார் அருளிச் செய்த ப்ராகாரம்:


ஒருவருக்கொருவர் ஸம்சயப்பட்டால் அந்த ஸம்சயம் ஒரு ப்ரகாரத்தாலும் தீராமற்போனால் ப்ரமாணத்தாலே தீர்த்துக்கொள்ளுவார்கள்.  லோகத்திலே ப்ராஹ்மணனுக்கும் ப்ராஹ்மணனுக்கும் வாக்குவாதம் வந்தால் ப்ராஹ்மணன் ப்ராஹ்மணனைத் தாண்டிக் கொடுப்பான்.  தாம் தேவாதி தேவனானபடியினாலே தேவதைகளைத் தாண்டிக் கொடுக்கிறோமென்று சொல்ல வந்தாரே!  அந்த தேவதைகள் தம்முடைய திருவடிகளை எப்போ காணப்போகிறோம்! எப்போ காணப்போகிறோம்! என்று சதா பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறவர்களை வலுவிலே தாண்டித் தருகிறோமென்றால் வேண்டாமென்பார்களா?  ஸமுத்ரத்திலே மூழ்குகிறோமென்று சொல்ல வந்தாரே! ப்ரளய காலத்திலே ஸகல லோகங்களையும் திருவயிற்றிலே வைத்து ரக்ஷித்து ஒரு ஆலிலைத் தளிரிலே கண் வளர்ந்த தமக்கு ஸமுத்ரத்திலே முழுகுகிறது அருமையா!  அக்னி ப்ரவேசம் பண்ணுகிறோம் என்று சொல்ல வந்தாரே! ப்ரஹ்மாவுக்காக உத்தரவேதியில் ஆவிர்ப்பவித்த தமக்கு அக்னியில் மூழ்குகிறோம் என்றால் அக்னி சுடுமா?  பாம்புக் குடத்திலே கை இட்டுத்தருகிறோமென்று சொல்ல வந்தாரே!  "சென்றாற்குடையாம், இருந்தாற் சிங்காசனமாம்" என்று ஸதாஸர்வ காலமும் திருவனந்தாழ்வான் மேலே திருக்கண் வளர்ந்திருக்கிற தமக்குப்பாம்புக் குடத்திலே கைவிட்டால் பாம்பு கடிக்குமா?  மழுவேந்துகிறோம் என்று சொல்ல வந்தாரே!  கோடி ஸூர்யப்ரகாசமான திருவாழியாழ்வானை ஸதா திருக்கையிலே தரித்துக் கொண்டிருக்கிற தமக்கு அப்ரயோஜகமான இரும்பு மழுவேந்துகிறது அருமையா?  நெய்க்குடத்திலே கையிடுகிறோமென்று சொல்ல வந்தாரே! க்ருஷ்ணாவதாரத்திலே பஞ்ச லக்ஷம் குடியிலுள்ள நெய்யுண்ட தமக்கு நெய்க்குடத்தில் கையிடுவது அருமையா?  இப்படிப் பட்டிருக்கிற பரிஹாஸ ப்ரமாணங்களையெல்லாம் தமக்குச் சரிப்போன இடத்திலே தானே பண்ணிக் கொண்டு இன்றைக்கும் அங்கேதானே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.


நாச்சியார் சொல்கிறாள்:

ஒருத்தர் மேல் ஒருத்தர் சந்தேகப்பட்டால் அந்த சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ப்ரமாணங்கள், சத்தியங்கள் ஆகியவற்றால் தீர்த்துக் கொள்ளத் தான்செய்வார்கள்.  மேலும் ஏமாற்றாமல் இருக்க வேண்டும் அல்லவா?  ஒரு பிராம்மணன் இன்னொரு பிராம்மணன் மேலே சந்தேகப்பட்டால் ப்ராம்மணனைத் தாண்டிச் சத்தியம் செய்து கொடுப்பான். ஆனால் தாமோ தேவாதி தேவனல்லவா? ஆகவே தேவதைகளைத் தாண்டிக் கொடுக்கிறதாய்ச் சொன்னீரோ!  அந்த தேவதைகளோ எப்போது உம்முடைய திருவடி தரிசனம் கிடைக்கும் எனக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  அவர்கள்  நோக்கமே உமது திருவடி தரிசனத்தைக் காண்பது தான். அவர்களிடத்திலே நீர் போய் வலுவிலே உங்களை எல்லாம் தாண்டிக் கொடுக்கிறேன் என்று சொன்னால் வேண்டாமென்பார்களா?  ஆஹா,அப்படியானும் நமக்குத் திருவடி தரிசனம் கிடைக்கலாச்சு என ஆனந்தம் தான் அடைவார்கள்.

ஐயா, உம்முடைய கள்ளத் தனம் எனக்குத் தெரியாததா?  சமுத்திரத்திலா மூழ்குகிறீர்?  சமுத்திரத்தில்?? ஆஹா, நன்றாக மூழ்குமேன்!  ஏன் ஐயா,இந்த ஸமுத்திரத்திலே தானே தாங்கள் ப்ரளய காலத்திலே சகல லோகங்களையும் தம்முடைய திருவயிற்றிலே வைத்து ரக்ஷிக்கின்றீர்?  அதுவும் ஒரு ஆலிலைத் தளிரிலே கண் வளர்ந்த வண்ணம் சகல லோகங்களையும் தாங்கிக் கொண்டு  சமுத்திரத்திலே மிதக்கும் தமக்கு சமுத்திரம் ஒரு அருமையா?  அதில் மூழ்குவது தான் அருமையா!  நல்ல வேடிக்கைதான் ஐயா! அடுத்து என்ன சொன்னீர்?? அக்னி ப்ரவேசமா?  ஆஹா, தங்களால் இயலாததா அதுவும்! யாரிடம் ஐயா சொல்கிறீர்?  உத்தரவேதியில் பிரம்மன் யாகம் செய்கையில் அவனிடம் கோபம் கொண்ட சரஸ்வதி இவ்வுலகையே இருட்டாக்கினாளே.  அப்போது விளக்காக ஒளிர்ந்தது யார்?  நீரன்றோ!  உமக்கு அக்னியில் ப்ரவேசம் பண்ணுவது கஷ்டமானதா? அக்னி உமக்குச் சுடுமா?  அடுத்து என்ன சொல்கிறீர்? பாம்புக் குடத்திலே கைவிட்டுத் தருகிறீரா? இதை விட நகைச்சுவையான விஷயம் வேறில்லை ஐயா!  நீர் சென்றால் குடை பிடிப்பது அனந்தாழ்வான்!  படுத்தால் படுக்கையாவது அனந்தாழ்வான்!  இருந்தால் சிம்மாசனம் ஆவதும் அனந்தாழ்வான்!  நீர் பாம்புக் குடத்தில் கை விடுகிறீரா?  உம்மை எந்தப் பாம்பு என்ன செய்ய முடியும்?

அடுத்து மழுவேந்துகிறீரா?  ஆஹா, நன்றாக ஏந்துங்கள்.  ஆனால் உம் கைகளில் எப்போதும் நீர் ஏந்தி இருக்கும் திரு ஆழி ஆழ்வான் என்னும் சக்கரத்தாழ்வானின் கோடி சூர்யப் ப்ரகாசத்திற்கு முன்னால் அந்த மழுவால் நிற்க முடியுமா என யோசியும்!  திருவாழியாழ்வானையே ஏந்தியுள்ள தமக்கு மழுவேந்துகிறது பெரிய விஷயமா?  நெய்க்குடத்திலே கை விடுகிறீரா?  ஐயா, நீர் கிருஷ்ணாவதாரம் செய்த போது கோகுலத்தில் பஞ்ச லக்ஷம் குடியிலுள்ள அனைவரின் வீட்டிலிருந்தும் நெய்யுண்ட தமக்கு நெய்க்குடத்தில் கைவிடுவது ஒன்றும் புதிதல்லவே!  இப்படி எல்லாம் என்னைப் பார்த்துக் கேலி செய்யும்படியான ப்ரமாணங்களைச் செய்யாதீர்.  உமக்கு எந்த இடத்தில் இருந்தால் சரியாக இருக்குமோ அங்கேயே போய் இரும்!  இன்றைக்கும் நேற்றைக்கு எழுந்தருளினவிடத்திலே தானே போய் எழுந்தருளிக்கொள்ளும். இங்கே வர வேண்டாம்."

நாச்சியார் மீண்டும் கதவடைக்கிறாள்.  மலர்மாலைகள், பூச்செண்டுகள், பழங்கள் வீசி எறியப்பட்டு பெருமாளின் பல்லக்கு வேகமாகப்பின் வாங்குகிறது.  பெருமாள் நிஜம்ம்மாவே பயந்துட்டார் போல! :)


ஆச்சு இன்னும் ஓரிரு பதிவிலே மட்டையடி முடிஞ்சுடும், அடுத்து சித்திரைத் தேர் குறித்த ஒரு சின்ன குறிப்புக்கு அப்புறம் மீண்டும் வரலாற்றைத் தொடரலாம்.  அதுக்குள்ளே அடுத்த திருநாள் வந்துடும். :))))

Tuesday, May 07, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ப்ரணய கலஹம், மட்டையடித் திருவிழா தொடர்ச்சி!


போன பதிவில் நாச்சியார் சொன்ன பதில்களின் ப்ரகாரம் கீழே

நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்

முந்தாநாள் அழகிய மணவாளப் பெருமாள் வேட்டையாடி, வேர்த்து, விடாய்த்து எழுந்தருளினார் என்று அடியோங்கள் அதிப்ரீதியுடனே எதிரே விடைகொண்டு திருக்கை கொடுத்து உள்ளே எழுந்தருளப் பண்ணிக் கொண்டுபஓய் திவ்ய சிம்ஹாசனத்தில் ஏறியருளப்பண்ணி, திருவடி விளக்கி, திருவொத்துவாடை சாத்தி, திருவாலவட்டம் பரிமாறினோம்.  அப்போது அதிக ச்ரமத்தோடேயே எழுந்தருளியிருந்தார்.  ஆனால் இளைப்போ என்ரு வெந்நீர்த் திருமஞ்சனம் சேர்த்து ஸமர்ப்பித்தோம்.  அதை நீராடினது பாதியும், நீராடாதது பாதியுமாக எழுந்தருளியிருந்தார்.  ஆனால் இளைப்போ என்று திருவரைக்குத் தகுதியான திவ்ய பீதாம்பரம் கொண்டு வந்து ஸமர்ப்பித்தோம்.  அதையும் எப்போதும்போல சாத்திக் கொள்ளாமல் ஏதோ ஒருவிதமாகச் சாத்தியருளினார்.  ஆனால் இளைப்போ என்று கஸ்தூரித்திருமண்காப்பு சேர்த்து ஸமர்ப்பித்தோம். அதையும் எப்போதும்போ சாத்திக்கொள்ளாமல் திருவேங்கடமுடையான் திருமண்காப்புப் போல கோணாமாணாவென்று சாத்தியருளினார்.  ஆனால் இளைப்போ என்று தங்கப் பள்ளயத்தில் அப்பங்கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து வர்க்க வகைகளை முதலானதுகளைச் சேர்த்து ஸமர்ப்பித்தோம்.  அதையும் அமுது செய்தது பாதியும், அமுது செய்யாதது பாதியுமாக எழுந்தருளியிருந்தார்.  ஆனால் இளைப்போ என்று சுருளமுது திருத்தி ஸமர்ப்பித்தோம்.  அதையும் அமுது செய்யாதபடிதானே எழுந்தருளியிருந்தார்.  ஆனால் இளைப்போ என்று திருவனந்தவாழ்வானைத் திருப்படுக்கையாக விரித்து அதன் மேலே திருக்கண் வளரப் பண்ணி அடியோங்கள் திருவடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தோம்.  தாம் வஞ்சகக் கள்வரானபடியினாலே எங்களுக்கு ஒரு மாயா நித்ரையை உண்டாக்கி, எங்கள் கருவூலம் திறந்து எங்கள் ஸ்த்ரீதனங்களான அம்மானக் பந்து கழஞ்சு பீதாம்பரங்களையும்  கைக்கொண்டு இன்னவிடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று சொல்லாதபடி எழுந்தருளினார்.  அந்த உத்தர க்ஷணமே அடியோங்கள் அச்சமுடன் திடுக்கிட்டு எழுந்திருந்து திருப்படுக்கையைப் பார்க்குமிடத்தில் பெருமாளைக் காணாமையாலே கை நெரித்து வாயடித்து அணுகவிடும் வாசற்காப்பாளரை அழைத்துக் கேட்கும் அளவில் அவர்கள் வந்து அம்மானை பத்து கழஞ்சு பீதாம்பரமான ஸ்த்ரீ தனத்தையும் கைக்கொண்டு இன்னவிடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று சொல்லாதபடி எழுந்தருளினார் என்று சொல்ல வந்தார்கள்.  அந்த உத்தர க்ஷணமே அந்தரங்க பரிஜனங்களாய் இருக்கிற திருச்சேவடிமார்களை அழைப்பு விடுத்தோம்.  அவர்கள் வந்து அடிபிடித்து அடிமிதித்துக் கொண்டு போனவிடத்தில் உறையூரிலே கொண்டு போய் விட்டது.  அங்கே மச்சினி என்றொருத்திக்கு முறைமை சொல்லி மற்றொருத்தியை மடியைப் பிடித்ததும், கச்சணி பொன்முலை கண்ணால் அழைத்ததும், கனிவாய் கொடுத்ததும், கையில் நகக்குறி மெய்யாக ஆனதும், கார்மேனியெங்கும் பசு மஞ்சல் பூத்ததும், கரும்புத் தோட்டத்திலே யானை ஸஞ்சரிக்கிறாப்போலே தேவரீர் ஸஞ்சரிக்கிறீரென்று நாங்கள் உசிதமாகப் போகவிட்ட தூதியோடி வந்து அங்க அடையாளம் உள்ளபடி வந்து சொன்னாள்.  உம்மாலே எமது மனது உலை மெழுகாய் இருக்கிறது.  ஒன்றும் சொல்லாதே போம்போமென்று நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

இதற்குப் பெருமாளின் பதில் கீழ்க்கண்டவாறு.

ஒருவருக்கொருவர் ஸ்ம்சயப்பட்டால் அந்த ஸாம்சயம் ஒரு ப்ரகாரத்தாலும் தீராமற்போனால் ப்ரமாணத்தாலே தீர்த்துக் கொள்வார்கள்.  அந்தப்படி ப்ரமாணம் பண்ணித் தருகிறோம்!  நாம் தேவாதிதேவனானபடியினாலே தேவதைகளைத் தாண்டித் தருகிறோம்.! ஸமுத்ரத்திலே முழுகுகிறோம்!. அக்னி ப்ரவேசம் பண்ணுகிறோம்!. பாம்புக்குடத்திலே கை விடுகிறோம்!  மழுவேந்துகிறோம்!  நெய்க்குடத்திலே கையிடுகிறோம்!  இப்படிப்பட்ட ப்ரமாணங்களையானாலும் வாங்கிக் கொண்டு நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிச் சூட்டிக் கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லிப் பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம்.

பெருமாள் சொல்கிறார்!

அடி ரங்கா! என் ரங்கா!  நீ என் மேல் சந்தேகப் படலாமா?  பதிலுக்கு நானும் உன் மேல் சந்தேகப்படுவேனா!  இப்படி ஒருவருக்கொருவர் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தால் என்ன சொன்னாலும் மனம் திருப்தி அடையாது. ஆகவே நான் ஆணையிட்டுச் சொல்கிறேன்.  நீ எதன்மேல் ஆணையிடச் சொன்னாலும் அந்தப்படி ஆணையிடுகிறேனடி ரங்கா!  தேவாதி தேவனான நான் இதற்காக தேவதைகளைத் தாண்டி ஆணையிடுவது உனக்குச் சம்மதம் எனில் அவ்வாறு ஆணையிடுகிறேன்.  அல்லது  என்னை சமுத்திரத்திலே முழுகு என்கிறாயா?  சரி அம்மா, அப்படியே முழுகுகிறேன்.  அது வேண்டாம், அக்னி ப்ரவேசம் பண்ணணுமா?  அதுவும் செய்கிறேன். கொடிய விஷப் பாம்புகளைக் குடத்தில் இட்டு அந்தக் குடத்திலே கையை விடச் சொன்னாலும் பயமில்லாமல் விடுகிறேனடி.  மழுவைக் கையில் ஏந்த வேண்டுமா?  இதோ வெறும் கைகளாலேயே ஏந்துகிறேன்.  கொதிக்கும் நெய்க்குடத்தில் கைவிட வேண்டுமா? சொல், செய்கிறேன்.  என்னுடைய இத்தகைய ப்ரமாணங்களை வாங்கிக் கொள் ரங்கா. வாங்கிக் கொண்டு நான் உனக்காகக் கொண்டு வந்திருக்கும் புஷ்பங்களையும் வாங்கிக் கொண்டு என்னையும் உள்ளே அழைப்பாயாக!