எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, June 21, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!


தாமிரபரணியின் வடகரையில் வரகுணமங்கையில் இருந்து ஒரு மைல் தள்ளி அமைந்துள்ளது திருப்புளியங்குடி ஆகும். நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப் பட்டது. ஸ்ருதிஸாகரஸேகர விமானம் அல்லது வேதஸார விமானம் என அழைக்கப் படும் விமானத்தில் புஜங்க சயனக் கோலத்தில் கிழக்கே பார்த்தபடி எழுந்தருளி இருக்கின்றார் பெருமாள். தாயார் பெயர், மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார், புளியங்குடி வல்லி, ஆகியன. வருணன், நரன், தர்மராஜா ஆகியோருக்குப் பிரத்யக்ஷமாய்க் காக்ஷி அளித்தார். ஸ்ரீ எனப் படும் மகாலக்ஷ்மியோடு இந்த மலைகளின் அழகையும், அங்கே பூக்கும் மலர்களின் அழகையும் கண்டு பெருமாள் இந்த இடத்தில் தங்கி லக்ஷ்மியோடு மகிழ்ந்திருந்தார். அதைக் கண்ட பூமாதேவி சற்றே மனக்கிலேசங்கொண்டவளாய் மனம் வருந்த, அவள் மனவருத்தம் பூமியெங்கும் வறட்சியாக மாறியது. பூலோக மக்கள் துன்பம் அடையக் கண்ட ஈசனை அனைவரும் பிரார்த்தித்து வேண்ட அவரும் பாதாளம் சென்று மறைந்திருந்த பூதேவியை அழைத்து வந்து செல்வத் திருமகளோடு நட்புக் கொள்ளுமாறு வேண்ட இருவரும் மனம் உவந்து நட்புப் பாராட்டினார்கள்.

இருவருடனும் இந்தக் கோயிலில் பெருமாள், "காசினவேந்தன்" (காசினி=பூமி) பூமிபாலன் என்னும் பெயருடன் காக்ஷி கொடுக்கின்றார். இந்தத் தலத்தின் புராணம் சொல்லுவது:

"இந்திரன் இந்திராணியுடன் தாமரைத் தடாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கே ஒரு ரிஷி மாற்றுருவில் தன் மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தார். உண்மை தெரியாத இந்திரன் வஜ்ஜிராயுதத்தால் ரிஷியை அடிக்க அவர் சுய உருவில் துடிதுடித்து இறந்தார். பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்க இந்திரன் செய்வதறியாது தவித்தான். தேவகுருவான பிரஹஸ்பதி அவனை திருப்புளியங்குடிக்குச் சென்று பிரார்த்தித்துத் தவம் இயற்றிப் பூமிபாலரை வேண்டச் சொல்லி அனுப்பி வைக்கின்றார். இந்திரன் பாவங்கள் அனைத்தும் தொலைந்து இந்தத் தலம் ஒரு பிரசித்தி பெற்ற க்ஷேத்திரமாக மாறியது.

இந்திரன் தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் வேள்வி ஒன்று செய்ய நினைத்தான். அவ்விதம் வேள்விக்கு ஏற்பாடுகள் செய்ய அரக்கன் ஒருவனால் இடையூறு ஏற்பட்டது. பூமிபாலர் இந்திரனுக்கு உதவ வேண்டி அவனைக் கதையால் அடிக்க, என்ன ஆச்சரியம்?? அந்த அரக்கனுக்கு தெய்வீக விமானம் ஒன்று வந்து அவனை அழைத்துக் கொண்டு தெய்வலோகம் செல்ல ஆரம்பிக்க, வியந்த இந்திரன் இதற்கான காரணத்தைக் கேட்டான். வசிஷ்டமுனிவரின் பிள்ளைகளால் வேள்விக்கு ஏற்பாடு செய்த யக்ஞசர்மா என்னும் அந்தணன் ரிஷி குமாரர்களுக்கு உரிய தக்ஷிணை கொடுக்காமல் ஏமாற்ற நினைக்க, அவர்களால் அரக்கனாய் மாறும் வண்ணம் சபிக்கப் படுகின்றான். விமோசனம் வேண்டிய யக்ஞசர்மாவிடம் இந்திரன் செய்யும் வேள்வியில் பூமிபாலரால் கதையால் அடிக்கப் படுவாய். அப்போது விமோசனம் கிடைக்கும் என்று கேள்விப் பட்டு இத்தனை நாள் காத்திருந்ததாயும், இப்போது சாபவிமோசனமும் முக்தியும் பெற்றுச் செல்லுவதாயும் அந்த அந்தணன் கூறினான்.

இதிலே சொல்லும் வரிசையில் நாங்கள் செல்லவில்லை. எங்க வண்டியின் ஓட்டுநர் எந்த ஊர்கள் அடுத்தடுத்து வருகின்றன, ஒரே கரையில் வருகின்றன என்பதைப் பார்த்தே கூட்டிச் சென்றார். இதில் முதல்நாள் நாங்கள் சென்றபோது திருச்செந்தூரும் போனோம். அதுவும் நடுவில் வரும். ஆனால் சாப்பாடுக்குக் கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருந்தது. இத்தனை கோயில்களிலும் கோஷ்டி நடப்பது காலை பத்துமணிக்குப் பின்னரே. அதுக்கு அப்புறமே பிரசாதம் கிடைக்கும். நாங்கள் காலை வேளையிலேயே சென்றுவிட்டதால் சாப்பாடு கிடைக்காமல் கொஞ்சம் கஷ்டப் பட்டோம். எங்கே வேணாலும் சாப்பிடும்படிக்கு வயிறு ஒத்துழைக்கவில்லை என்பது வேறே. இப்போ அடுத்துச் செல்ல இருப்பது பெருங்குளம் அல்லது திருக்குளந்தை.

இந்த ஊருக்குச் செல்ல நிஜமாவே ஒரு பெரிய பெருங்குளத்தைச் சுற்றிக் கொண்டே போகவேண்டி இருக்கிறது. தாமிரபரணி ஜீவநதியே என்றாலும் நாங்கள் சென்றது தை மாதம் என்பதால் தண்ணீர் நிறையவே இருந்தது. அந்தக் கரும்பச்சை நிற நீர் நிலைகளும், சுற்றிலும் நீலநிற மலைத் தொடர்களும், வயல்களின் பச்சை நிறப் பயிர்களும், செம்மண்ணும், கரிசல் மண்ணும் கலந்த மண் வாசனையும் சேர்ந்து ஒரு சொர்க்கத்தையே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. பறவைகளின் சந்தோஷக் கூச்சல்கள் ஆங்காங்கே கண்ணுக்கும், மனதுக்கும் நிறைவாய் இருந்தது. பிரயாணமும் மிகவும் செளகரியமாயும், சுகமாயும் இருந்தது. குளத்துத் தண்ணீர் அசுத்தம் செய்யப் படவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.

Wednesday, June 17, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!

ஸ்ரீ வைகுண்டத்திற்குக் கிழக்கே, தூத்துக்குடி செல்லும் வழியில், ஒரு மைல் தொலைவுக்குள்ளாக தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள திருத்தலம் வரகுணமங்கை என்னும் நத்தம் ஆகும். பெருமாளின் பெயர் விஜயாசனர். தாயார் வரகுணவல்லி. விமானம் விஜயகோடி விமானம் என அழைக்கப் படுகின்றது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்ட இந்த ஊரில் அக்னி பிரத்யக்ஷம் என்று சொல்லப் படுகின்றது. இறைவன் கிழக்கே பார்த்துக்கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கின்றார். அக்னி பகவானுக்குப் பிரத்யக்ஷமாய்க் காக்ஷி அளித்ததைத் தவிர, உரோமச முனிவருக்கும், சத்யாவனுக்கும் காக்ஷி கொடுத்தார் எனச் சொல்லப் படுகின்றது.

இது கொஞ்சம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருப்பதால், முன்கூட்டியே கோயில் பட்டாசாரியாருக்குத் தகவல் தெரிவித்துவிட்டுச் செல்லுவது நல்லது. நாங்கள் காலை வேளையிலேயே சென்று விட்டதால் தரிசனம் கிடைத்தது. உள்ளூர் மக்கள் நத்தம் என்றே இந்த ஊரைச் சொல்லுவதால் நத்தம் என்றே கேட்கவேண்டும். இந்தக் கோயிலின் தல புராணம் முன் பிறவியில் செய்த கர்மவினை இப்பிறவியிலும் தொடர்ந்தாலும் ஒருவன் இந்த ஊரில் பிறந்த காரணத்தாலேயே நற்கதியும் அடைந்தான் என்று சொல்லுகின்றது. தலவரலாறு வருமாறு:

உரோமச முனிவர் இங்கே தவம் செய்து வந்தார். சத்தியவான் அவருடைய சிஷ்யன். குருவிற்குத் தொண்டு புரிந்து கொண்டும் , பாடங்கள் கற்றுக் கொண்டும் வந்தான். இங்கே இருந்த திருக்குளத்திற்கு அகநாச தீர்த்தம் என்ற பெயர் இருந்து வந்தது. அந்தத் தீர்த்தத்தில் நீராடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த சத்தியவானுக்கு ஒரு செம்படவன் வலை வீசி மீன்கள் பிடிப்பது தெரியவந்தது. ஏராளமான மீன்கள் பிடித்தும் ஆசை அடங்காமல் மேலும் மேலும் வலையை விரித்து வந்த செம்படவனை ஒரு நாகம் பின்னாலிருந்து தீண்டியதையும், தீண்டிய நாகம் மறைந்ததையும், செம்படவன் உடனே இறந்ததையும் கண்டான் சத்தியவான். ஆனால் என்ன ஆச்சரியம்????

அந்தச் செம்படவனை தேவலோகத்தில் இருந்து கந்தர்வர்கள் அலங்கரிக்கப் பட்ட அழகிய விமானத்தைக் கொண்டு வந்து சொர்க்கத்திற்குக் கூட்டிச் சென்றதையும் அவன் காண நேர்ந்தது. மீன்களைத் துன்புறுத்தி வந்த இந்தச் செம்படவனுக்கு இவ்வளவு நற்கதியா என யோசித்த வண்ணம் குருவிடம் சென்ற சத்தியவான், தான் கண்டதை அவரிடம் கூறி, செம்படவனுக்கு நற்கதி ஏற்பட்ட விதம் எவ்வாறு எனக் கேட்டான். உரோமச முனிவர் தன் சக்தியால் அந்தச் செம்படவன் முற்பிறவியில் விதர்ப்ப தேசத்து அரசகுமாரனாய் இருந்து தீவினை புரிந்து வந்து நரக வாசத்தை அனுபவித்ததாயும், எப்போதோ செய்த ஒரே ஒரு நற்செயலின் விளைவாக இந்தப் பூமியில் இந்த ஊரில் வந்து பிறந்திருக்கின்றான் எனவும் கூறினார். இந்த ஊரில் பிறந்த காரணத்தாலேயே அவன் கர்மவினை அழிந்து அவன் நற்கதி அடைந்திருக்கிறான் என்றும் சொன்னார்.



மேலும் உரோமசர் தன் சீடனிடம் சொன்னதாவது:
ரேவா நதிக்கரையில் புண்ணியகோசம் என்னும் ஊரில் "வேதவித்" என்ற அந்தணன், மாதா, பிதா, குரு மூவரையும் முறைப்படி வணங்கி வழிபட்டு வந்ததாகவும், பின்னர் பகவானை வழிபட வேண்டும் என எண்ணியபோது, பகவான் ஒரு பிராமணனாக அவன் முன் தோன்றி இம்மாதிரி தென்பாகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கிடையே உள்ள வரகுணமங்கை என்னும் ஊருக்குச் சென்று தவமியற்றுமாறும் கூறவே, அந்த பிராமணனும் வரகுண மங்கையை அடைந்து பிரம்மசாரியாகவே இருந்து தவம் செய்தான். ஈசன் மீண்டும் அவன் முன்னே தோன்ற விஜயாசனன் என்ற பெயரோடு இங்கேயே கோயில் கொள்ளவேண்டும் என்று அவன் கேட்டுக் கொள்ள ஈசனும் அவ்வாறே அருள் புரிந்தான்.

இந்தக் கோயிலின் ராஜ கோபுரத்தில் தசாவதார சிற்பங்கள், காளிங்க நர்த்தனம் சிற்பம், வசுதேவர் தன் தலையில் கூடையில் குழந்தைக் கிருஷ்ணனை வைத்துக் கொண்டு யமுனையைக் கடப்பது ஆகிய சிற்பங்கள் காணவேண்டிய ஒன்றாகும். முன்னேற்பாடுடன் செல்லாததால் அப்போது படமெல்லாம் எடுக்கவில்லை. :(((((((

அடுத்துத் திருப்புளியங்குடி செல்லப் போகின்றோம்!

Saturday, June 06, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்.

காலதூஷகன் என்னும் திருடன் ஒருவன் கொள்ளை அடித்து வாழ்ந்து வந்தான். அவன் தன்னோட கொள்ளைப் பணத்தில் பாதியை ஸ்ரீவைகுண்டத்துப் பெருமாளுக்குக் கொடுப்பதை வழக்கமாய் வைத்திருந்தான். ஒருமுறை கொள்ளை அடிக்கும்போது அரசனின் காவலர்களால் பிடிக்கப் பட்டான். கடவுளை நிந்தித்தான். கடவுளே, என்னோட கொள்ளையில் உனக்கும் பங்கு சரிபாதியாய்க் கொடுத்துட்டுத் தானே வரேன். என்னை இப்படிப் பிடிச்சுக் கொடுத்துட்டியேனு மனம் நொந்தான். சரி, போகட்டும், இப்போ என் கிட்டே இருக்கிற எல்லாமும் உனக்கே தான் கொடுத்துடறேன். என்னை எப்படியாவது இந்த ராஜ தண்டனையிலே இருந்து காப்பாத்துனு அவனைச் சரணடைந்தான். பார்த்தார் பெருமாள். இந்தத் திருடனுக்கு ஞானம் உதயம் ஆகும் நேரம் வந்தாச்சு. அரசனுக்கும் இவனைப் பத்திப் புரியணும், அதே சமயம், இவனையும் காக்கவேண்டும். திருடனுக்கு ஞானமும் வரவேண்டும் என எண்ணிய ஈசன் கள்ளனைப் போல வேடம் தரித்து மன்னனிடம் சென்றார்.

கோபியரிடம் வெண்ணெய் திருடி உண்டவனுக்குக் கள்ளன் வேஷம் தரிப்பதில் என்ன கஷ்டம்? அவன் இஷ்டப் படும் வேஷம் அல்லவோ அது?? கள்ளனைப் பார்த்த மன்னனுக்கு அவன் பேரில் கோபமே வரவில்லை. என்ன காரணமோ பரிவும், அன்பும், பாசமும், பக்தியுமே மேலிட்டது. திகைத்த மன்னன் கள்ளனைப் பார்த்து, "இது என்ன மாயம்? நீயோ கள்ளன், என்னால் தண்டிக்கப் படவேண்டியவன். ஆனால் எனக்கு உன்னிடம் அளவுகடந்த பக்தியும், பாசமும் மேலிடுகின்றதே?" எனக் கேட்டான். கள்ளன் அதற்குப் பதில் சொன்னான்.
"அரசே! பணத்திற்கு என இருக்கும் பங்காளிகள் நான்குவகைப்படுவர். முதலாவது தர்மம், இரண்டாவது, அக்னி, மூன்றாவது அரசன், நான்காவது திருடன். இதில் உன்னுடைய அரசால் சம்பாதிக்கப் படும், உரிய வகையில் செலவிடப் படவில்லை. தர்மத்தின் பாதையில் உன் அரசாங்க சம்பாத்தியம் செல்லவில்லை. அதை உனக்கு உணர்த்தவே நாம் இவ்விதம் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினோம்." என்று உரைத்துத் தம் சுயரூபத்தைக் காட்டினார்.

மன்னனுக்கு உண்மை புரிந்தது. அன்றிலிருந்து தன்னுடைய கஜானாவின் பணம் எல்லாம் உரிய நேர்மையான வழியில் செலவிடப் படுகின்றதா என்று கவனித்துச் செலவிட்டான். திருடனை மன்னித்துவிட்டான். அரசனும், திருடனும் இறை அருளால் ஞானம் பெற்றனர். பெருமானுக்கோ கள்ளருக்கெல்லம் பிரான் என்ற பட்டப் பெயர் நிலைத்து நின்றது. அன்றிலிருந்து கள்ளபிரான் என அழைக்கப் படுகின்றார் இவர்.

இந்த ஸ்ரீவைகுண்டத்தின் மற்றொரு சிறப்பு, நம்மாழ்வார் இங்கு நடக்கும் சித்திரைத் திருவிழா ஐந்தாம் நாள் ஆழ்வார் திருநகரியில் இருந்து வந்து கலந்து கொண்டு காலையில் மங்களாசாசனமும், திருமஞ்சனம், கோஷ்டி போன்றவற்றிலும் கலந்து கொண்டு, மாலையில் நம்மாழ்வாருக்குரிய அன்னவாகனத்திலும், பொலிந்து நின்ற எம்பிரான் கருட வாகனத்திலும் திருவீதி உலா வந்து மறுநாள் நம்மாழ்வார் மங்களாசாசனம் பெற்று விடைபெற்றுச் செல்லும் காட்சியும் கண்கொள்ளாக் காட்சி என்று சொல்லுகின்றனர். ஆனால் கூட்டத்தில் எப்படிப் பார்க்க முடியும்? புரியலை. சாதாரண நாட்களில் சென்றால் பெருமாளை திவ்ய தரிசனம் செய்யலாம்.

600 அடி நீளமான கோயிலின் உட்புறத்து கர்ப்பகிருஹத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமானை சூரியன் சித்திரை, ஐப்பசி மற்றும் பெளர்ணமி தினங்களில், தன்னுடைய கிரணங்கள் பகவான் காலடியில் படும்படி வந்து தரிசிப்பது சிறப்பாய்க் கருதப் படுகின்றது. மார்கழி மாசம் நடக்கும் திரு அத்யயன உற்சவம் பின் பத்து நாட்களில் பரமபத வாசல் திறப்பு, படியேற்றம், பத்தி உலா, கற்பூர சேவை போன்றவை காணக் கிடைக்காத காட்சி எனச் சொல்லப் படுகின்றது. சுவர்க்கத்திலிருந்து ஆஸ்தானம் புறப்பாடு வெள்ளித் தோளுக்கினியானில் பனிக்காக குல்லாய், வெல்வெட் போர்வையுடனே கிளம்பி பத்தி உலா நடக்கும். சிம்ம கதி, சர்ப கதியுடன், தாள வாத்தியங்கள் முக வீணை முழங்க படியேற்றமும் கற்பூர சேவையும் நடைபெறுகிறது. சாதாரணமாய் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பிடிக்கும் இந்த சேவை இங்கே ஒரு விநாடிக்குள் பெருமான் ஆஸ்தானத்தில் சேவை சாதிப்பதும், ஒரு நிமிஷத்திற்குள் கற்பூர சேவையும் நடந்து முடிகின்றது.

அடுத்து வரகுணமங்கை என்னும் நத்தம் செல்லுகின்றோம்.

Monday, June 01, 2009

தாமிரபரணிக்கரையிலே சிலநாட்கள்!

நவ திருப்பதிகள் ஒன்பது. பாண்டிய நாட்டுத் திவ்ய தேசங்களில் அவை அடங்கும். நவ திருப்பதிகள் கீழ்க்கண்டவை:


ஸ்ரீவைகுண்டம்,= வைகுண்டநாதர்
ஆழ்வார்திருநகரி,=ஆதிநாதர்
நாங்குநேரி, வானமாமலை,=தோதாத்ரிநாதர்
திருக்குறுங்குடி,=ஸ்ரீ நின்ற நம்பி
வரகுணமங்கை,(நத்தம்)=விஜயாசனப் பெருமாள்
திருப்புளியங்குடி=காசினிவேந்தன்
(இரட்டைத் திருப்பதி,=ஸ்ரீ ஸ்ரீநிவாசன் கோயில், ஸ்ரீஅரவிந்த லோசனன் கோயில்
திருத்தொலைவில்லி மங்கலம்)
பெருங்குளம் =ஸ்ரீ ஸ்ரீநிவாசன் கோயில்
தென் திருப்பேரை=மகர நெடுங்குழைக்காதர்

ஸ்ரீவைகுண்டத்திலே இருந்து ஆரம்பிக்கிறோம் நாம. ஆனால் நாங்க முதல்லே அங்கே போகலை. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போகும் வழியில் ஸ்ரீவைகுண்டம் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 35 கிமீ தூரத்திலும் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திற்கென ரயில் நிலையமும் இருக்கின்றது. சாலை வழியாகவும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடிக்குப் போக முடியும். தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள இந்த ஊருக்குப் பல முறை செல்லும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. கடைசியாய்ப் போனது 2007 பெப்ரவரியில். இங்கே உள்ள தீர்த்தம் பிருகு தீர்த்தம் என அழைக்கப் படுகின்றது. இது தவிர தாமிரபரணியில் நீராடுவதும் சிறப்பு.

இந்தக் கோயிலில் உள்ள பெருமாளுக்குக் கள்ளர்பிரான் என்ற பெயரே மிகவும் சிறப்பித்துச் சொல்லப் படுகின்றது. இது தவிரவும், பெருமாளுக்கு வைகுண்ட நாதன் என்ற பெயரும் தாயார் வைகுந்த வல்லி எனவும் அழைக்கப் படுகின்றாள். மற்றோர் தாயார் பூதேவி எனப்படுகின்றாள். இருவருக்கும் தனித்தனி சந்நதிகள் உள்ளன. விமானம் சந்திரவிமானம் என்று சொல்லப் படுகின்றது. நம்மாழ்வாரால் மங்களா சாஸனம் செய்யப் பட்டது இந்தக் கோயில். பெருமாள் கிழக்கே பார்த்துக் கொண்டு நின்று கொண்டு அருள் பாலிக்கின்றார். இந்திரனும் ப்ருதுவும் இந்தக் கோயில் பெருமாளை வழிபட்டதாய் ஐதீகம். ஸ்தலவிருக்ஷம் பவளமல்லி.



சோமுகன் என்ற அரக்கன் பிரம்மாவிடமிருந்த வேதங்களையும், பிரம்ம ஞானத்தையும் கவர்ந்து செல்லவே, படைக்கும் திறன் அற்றுப் போனார் பிரம்மா. இறைவனை வணங்கித் தன் கையில் இருந்த தண்டத்தை ஒரு பிரம்மசாரியாக மாற்றிய பிரம்மா, பூலோகத்தில் உள்ள அருமையா புண்ணிய ஸ்தலத்தைக் கண்டு வரச் சொல்லி அனுப்பினார். தாமிரபரணிக்கரைக்கு வந்து சேர்ந்த அந்த பிரம்மசாரி, அங்கே ஜயந்தபுரி என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். அசுரர்களால் உருவாக்கப் பட்ட பெண்கள் மோகினிகளாய் மாறி அந்த பிரம்மசாரியைக் கவர, அவன் தான் வந்த காரணத்தையும், தன் மஹிமையையும் மறந்திருந்தான்.

சென்றவன் திரும்பிவரக் காணாத பிரம்மா, தன் கைக்கமண்டலத்தைப் பெண்ணாக மாற்றி அந்தப் பெண்ணை அம்பாளே நதி உருவெடுத்து ஓடும் தாமிரபரணிக் கரையில் தவம் செய்ய ஏற்றதாய் உள்ள புண்ய ஸ்தலத்தைக் கண்டு வரும்படி அனுப்பி வைக்கின்றார். தாமிரபரணிக்கரைக்கு வந்த அந்தப் பெண்ணிற்கு ஸ்ரீவைகுண்டம் தலத்திற்கு வந்ததும், இதுவே மேன்மையானது என்று தோன்ற பிரம்மாவிடம் இதைத் தெரிவிக்கின்றாள். பிரம்மாவும் அங்கே சென்று தாமிரபரணி கலசத் தீர்த்தத்தில் நீராடிக் கடுந்தவம் புரிந்தார்.

தவத்தால் மகிழ்ந்த சர்வேஸ்வரன் அவர் முன் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்க இழந்ததைத் திரும்பப் பெறவேண்டும் என பிரம்மா கேட்டார். அவ்வாறே ஆகட்டும் என அருள் புரிந்தார் காக்கும் கடவுளான விஷ்ணு. பின்னர் பிரம்மா பூவுலகு மக்கள் அனைவரும் உய்யும் வண்ணம் அர்ச்சாவதாரமாய் இறைவனை அங்கே எழுந்தருளி அருள் பாலிக்குமாறு வேண்ட இறைவனும் அருள் புரிந்தான். ஆனால் பிரம்மனின் வேண்டுகோளின் படி எழுப்பப் பட்ட கோயிலும், இறைவனின் அர்ச்சாவதார மூர்த்தியும் காலப் போக்கில் மறைந்து பூமியில் புதைந்து போய்விட்டது.

பாண்டியர்கள் கொற்கையையும், மணவூரையும் தலைநகராய்க் கொண்டு ஆண்டு வந்த நேரம் அது. அரண்மனைத் தொழுவத்தின் பசுக்களை மேய்க்கும் மாட்டிடையர்கள் பசுக்களை ஒரு இடத்தில் மேய்த்து வந்தனர். அப்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஒரு பசு தன் பாலைத் தானாகவே சொரிந்து வந்தது தினமும். இடையர்கள் எவ்வளவோ தடுத்தும் பசு தன் பாலைச் சொரிவது நிற்கவே இல்லை. அங்கே ஒரு பிலத் துவாரம் இருப்பதையும் கண்டனர். இதற்குள் பாண்டியனுக்குச் செய்தி போயிற்று. அரண்மனைப் பசுக்களில் குறிப்பிட்ட பசு மட்டும் பால் தருவது இல்லை என அறிந்தான் மன்னன். பசுவை மேய்ப்பவனைக் கூப்பிட்டு என்னவென விசாரிக்க அவனும் நடந்ததைக் கொஞ்சம் பயத்துடனேயே மன்னனுக்குத் தெரிவித்தான்.

உடனேயே அந்த இடத்தில் ஏதோ அற்புத சக்தி இருக்கும் எனப் புரிந்து கொண்ட மன்னன் தன் பரிவாரங்களுடனும், அரச குருவுடனும் வந்து அங்கே பூமியைத் தோண்ட மெல்ல, மெல்ல மேலே வந்தார் வைகுண்ட வாசன். அரசனுக்கு மேனி சிலிர்த்தது. பெரியதொரு கோயில் கட்டுவித்து சந்நதியில் பெருமானைப் பிரதிஷ்டை செய்து தினந்தோறும் பால் திருமஞ்சனம் செய்து வைக்குமாறும் நிவந்தங்கள் அளித்துக் கட்டளையிட்டான். இந்தப் பால் திருமஞ்சனம் இன்றளவும் தினந்தோறும் பெருமானுக்குச் சிறப்பாய் நடந்து வருவது விசேஷமாய்க் கூறப் படுகின்றது. பெரும்பாலான விஷ்ணு கோயில்களில் தினமும் இவ்விதம் நடப்பது அரிது. பெருமான் நின்ற திருக்கோலத்தில் ஆதிசேஷன் குடையாய்க் கவிந்திருக்க சாலிகிராம மாலையுடனும், கையில் கதையுடனும் காட்சி அளிக்கின்றார். இவர் கள்ளபிரானானது எவ்வாறு? நாளை பார்க்கலாமா?