Sunday, February 07, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம் 7 சிக்கல் சிங்காரவேலர்!

வலி இருந்தாலும் பயணத்தைத் தொடரலாம் என்று என் கணவர் சொன்னதால் அரை மனதோடு சிக்கலுக்குப் பயணத்தைத் தொடர்ந்தோம். திரும்பிவிடலாம் என்ற எண்ணம் இருந்தாலும், அவர் தோள்பட்டையில் வலி மட்டும் தான் வேறே ஒண்ணும் இல்லைனு சொன்னார். சரினு நம்பிட்டேன். ஆனால் நேரமாக நேரமாக வலி ஜாஸ்தியாகி இருக்கிறது. வண்டி போய்க்கொண்டிருந்தது. சிக்கலில் வலி நிவாரணிகளை வாங்கிக்கொண்டு போகலாம் என்ற முடிவு எடுத்தோம். மாத்திரைகள் எதுவும் சாப்பிடமுடியாது. ஆகையால் வலிக்கான தைலமோ, அல்லது லோஷனோ, ஆயிண்ட்மெண்டோ வாங்கிக்க முடிவு செய்துகொண்டு சிக்கலுக்கு வந்து சேர்ந்தோம். கோச்செங்கணான் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. சிக்கல் சிங்காரவேலன் என்றே கேள்விப்பட்டுச் சென்ற எனக்கு அங்கே மூலவர் ஈசன் என்பதும், அம்பிகையும் இருக்கிறாள், சிங்காரவேலர் வேலை மட்டும் வாங்கிக்கொள்ள இங்கே வந்தார், என்பதும் புதிய விஷயமாய் இருந்தது. மூலவரே சிங்காரவேலர் என நினைத்திருந்தேன். என்றாலும் குமரன் இருப்பதாலோ என்னமோ மலை போன்ற உயரமான அமைப்பிலேயே கோயில் இருந்தது. ராஜகோபுரம் உள்ளது. நுழைந்ததுமே கல்யாணமண்டபம், கார்த்திகை மண்டபம் என மண்டபங்கள் காணப்படுகின்றன. இந்தக் கோயிலும் சுத்தமான பராமரிப்பில் காணப்பட்டது. இங்கேயும் சனைசரர் தனியாகவும், நவகிரஹ சந்நிதியும் காணப்பட்டது. இவை கீழேயே இருந்தன. வசதியாகப் போய்ச் சுற்றி இருக்கலாம். நேரம் இப்படி இருக்கையில் யாரை என்ன சொல்ல முடியும்?? இனி சிக்கல் தலவரலாற்றைப் பார்ப்போமா??

மல்லிகை தான் இங்கே தலவிருக்ஷம் என்றார்கள். ஒரு காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இடமாம். ஆயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையான கோயில். வசிஷ்டர் ஆசிரமம் இருந்த இடம் என்று தலவரலாறு சொல்கிறது. ஈசனைத் தினமும் வழிபட்டு வந்தாராம் வசிஷ்டர். அப்போது காமதேனு ஒரு சாபத்தின் காரணமாக பூமிக்கு வந்து இந்தத் தலத்திற்கு வந்தது. இங்கே இருந்த தீர்த்தத்தில் நீராடியது. நீராடும்போது காமதேனு பாலைச் சொரிய, அந்தப் பால் பெருகிக் குளமே பாற்குளமாக மாறியது. க்ஷீரபுஷ்கரணி என அழைக்கின்றனர். பெருகி வந்த பாலில் இருந்து உருண்டு, திரண்டு வந்த வெண்ணெயை எடுத்து வசிஷ்டர் சிவலிங்கமாக்கி வழிபட்டார். வழிபாடு முடிந்ததும், வெண்ணெய் லிங்கத்தை எடுக்க முனைந்தார். அது அவரால் முடியாமல் வெண்ணெய் லிங்கம் அவர் கையிலேயே சிக்கிக் கொண்டது. சிக்கிக்கொண்ட இடமாதலால் சிக்கல் எனப் பெயர் பெற்றது என்று சொல்கின்றனர். ஈசனின் திருமேனி வெண்ணெய்த் திருமேனி என்றும் நவநீதேஸ்வரர், திருவெண்ணெய்நாதர் என்ற பெயர்களில் அழைக்கப் படுகிறார்.

அன்னையின் பெயர் வேல்நெடுங்கண்ணி. இங்கே தான் சூரபத்மனை வதம் செய்வதற்காக வந்த சிங்காரவேலனுக்கு அன்னை வேல் கொடுத்து ஆசிகள் வழங்குகிறாள். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சஷ்டித் திருவிழா நடைபெறும்போது வேல்வாங்கும் விழாவில் தாயிடம் வேல் வாங்கிக் கொண்டு முருகப் பெருமான் தன் கோயிலுக்கு வந்து அமர்ந்த பின்னால், வேலின் வீரியம் தாங்காமல் சிங்காரவேலருக்கு வியர்வை வெள்ளமாய்ப் பெருகும் காட்சி இன்றளவும் நடைபெறுகிறது. பட்டுத் துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை பெருக்கெடுக்கும் என்று சொல்கின்றார்கள். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்ற வழக்குச் சொல்லும் இருக்கிறது என்றனர்.

இதைக் கட்டுமலைக்கோயில் என அழைக்கின்றனர். கோயிலின் மையத்தில் உள்ள சில படிகள் மூலம் மேலே ஏறிச் சென்று திருவெண்ணெய் நாதரைத் தரிசனம் செய்யவேண்டும். அப்பாவிற்கு அருகேயே பிள்ளையின் சந்நிதியும் காணப்படுகிறது. சிக்கல் சிங்காரவேலர் மிக மிக அழகர். பார்க்கக் கண் கோடி வேண்டும். பார்த்துக்கொண்டே இருக்கலாம். உற்சவ விக்கிரஹம். சில்பா சிற்பி செய்த சிலை ஷண்முகர் வடிவம் வெளிப்பிரஹாரத்தில் பரிவார தேவதைகளில் ஒன்றாய் இருப்பதாய்ச் சொன்னார்கள். இந்தக் கட்டுமலையின் கீழேயே அன்னை வேல்நெடுங்கண்ணியின் சந்நிதி உள்ளது. அன்னை பிள்ளைக்கு வேல் தருவது போன்றதொரு சிற்பம் சந்நிதியின் மேல் பாகம் காணப்படுகிறது. பெருமாள் தனிச் சந்நிதி கொண்டு கோலவாமனப் பெருமாள் என்ற பெயரில் காணப்படுகிறார்.

இம்மாதிரியாக ஈசனும், திருமாலும் ஒரே கூரையின் கீழ் குடிகொண்டு அருள் பாலிக்கும் கோயில்கள் பத்தோ, பனிரண்டோ தான் இருப்பதாயும், சிக்கல் அதில் மிக மிக முக்கியமான ஒன்று எனவும் கூறினார்கள். இரு தேவியருடனும் காட்சி தருகின்றார் பெருமாள். ஆஞ்சநேயருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. வாமன அவதாரம் எடுத்தபோது பெருமாள் இந்தத் தலம் வந்து ஈசனை வழிபட்டு மஹாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாய்க் கூறப்படுகிறது. இங்கே திருமாலைத் தவிர, விஸ்வாமித்திரர் பெண்ணிடம் சபலம் கொண்டு இழந்த தவவலிமையைத் திரும்பப் பெற்றிருக்கிறார் எனச் சொல்கின்றனர். மேலும் முசுகுந்தச் சக்கரவர்த்தியின் பிரம்மஹத்தி தோஷமும், இங்கே தான் நீங்கியது எனச் சொல்கின்றனர். அகத்தியரும் வந்து வழிபட்டதாய்க் கூறுகின்றனர். இந்தத் தலத்தில் ஈசன் மட்டுமில்லாமல், முருகன், திருமால், அநுமன் என நால்வருமே பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை இங்கேதான் மிகவும் சிறப்பு வாய்ந்தது எனச் சொல்லப் படுகிறது. அம்மனின் சக்தியே வேலாக மாறி முருகனுக்குக் கொடுக்கப் பட்டதால் இந்த அர்ச்சனையை இங்கே சஷ்டி விழா நடக்கும்போது மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். அன்னைக்கும் இங்கே முக்கியத்துவம் உண்டு. சக்தி பீடங்களில் இதுவும் மிக முக்கியமானதாய்ச் சொல்லப் படுகிறது. முருகனுக்கு வேல் வழங்கும் முன் அன்னை தவமிருந்ததாகவும், அப்போது அஞ்சு வட்டத்து அம்மன் என்ற பெயரில் வழங்கப்பட்டாள் எனவும், அந்த அஞ்சு வட்டத்து அம்மன் கோயில் அருகிலுள்ள கீவளூர் எனப்படும் கீழ்வேளூரில் இருக்கிறது எனவும் தெரிய வருகிறது. அந்தக் கோயிலுக்குப் போகமுடியவில்லை. இங்கேயே அவரால் நடக்கமுடியலை. ஆகவே நேரே திருவாரூர் போனோம்.

திருவாரூர் கோயிலைப் பற்றி எழுதும் முன்னர் கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் பற்றிய சிறு குறிப்பு. திருவாரூர் கோயில் இப்போது இருக்கும் நிலைமையைப் பார்த்ததும் சிறு வயதிலிருந்து அங்கே அடிக்கடி சென்று வந்த என் கணவருக்குக் கண்ணீரே வந்துவிட்டது. ஒரு பதிவில் எழுதி முடிக்கவேண்டிய விஷயமும் இல்லை. திருவாரூர் பத்தி சிதம்பரம் அளவுக்கு எழுத உதவிகள் கிட்டவில்லை எனினும் தெரிந்த விஷயங்களே நாலைந்து பதிவுக்கு மேல் வரும். ஆகவே கடைசியில் திருவாரூர். அடுத்து கும்பகோணம் சார்ங்கபாணி கோயில். இதுவும் ஒரு மாடக்கோயிலே. நாளை பார்ப்போம்.

Friday, February 05, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம் 6 எட்டுக்குடி!


மறுநாள் காலையில் சீக்கிரமே கிளம்பிவிட்டோம். ஆறேகால் மணிக்கெல்லாம் வண்டி ஓட்டுநர் வந்துவிட்டார். எட்டுக்குடி, சிக்கல் ஆகிய இடங்கள் கொஞ்சம் தொலைவில் இருப்பதால் காரே வசதி என ஒருநாள் வாடகைக்குப் பேசிக்கொண்டிருந்தோம். வண்டி திருவாரூர் நோக்கிச் சென்றது. குடவாசல் வரைக்கும் சாலை மோசம். குடவாசல் தாண்டியதும் கண்ணாடிப் பளபளப்பில் சாலை. அருமையாக இருந்தது. வளைந்து வளைந்து செல்லும் தஞ்சை மாவட்டச் சாலைகளில் பிரயாணம் செய்வதே தனி அநுபவம் என்றால் சாலையும் அற்புதமாக அமைந்துவிட்டால் கேட்கவா வேண்டும்?? பயணத்தின் அலுப்பே தெரியவில்லை. இந்தச் சாலையை தேசீய நெடுஞ்சாலையில் சேர்த்திருப்பாங்க என என் கணவர் சொல்ல, வண்டியின் சாளரம் வழியே வெளியே உள்ள அறிவிப்புப் பலகைகளைப் பார்த்துக்கொண்டே செல்லும் வழக்கமுள்ள நான் ஒரு இடத்தில் இது மாநில அரசின் சாலைதான் என்பதைச் சுட்டிக் காட்டினேன். அப்புறம் ஓட்டுநர் சொன்னார். திருக்குவளை வரையிலும் சாலை நன்றாக இருக்குமென்று. ஒரு மணிநேரம் ஆகுமெனச் சொன்ன திருவாரூருக்கு நாற்பத்தைந்து நிமிடத்தில் நெருங்கிவிட்டோம். போகும் வழியிலேயே எண்கண். சாலை பிரிந்து சென்றது. நாங்கள் அங்கே முதலில் செல்ல ஆசைப்பட, ஓட்டுநரோ அங்கே கோயில் திறந்திருக்குமா சந்தேகம் என்று சொன்னார். சில சமயங்களில் இம்மாதிரியான இடங்களில் ஓட்டுநர்கள் சொல்வதே சரியாகவும் இருக்கும்.

ஆகவே திருவாரூர் சென்று பசியாறிவிட்டு மேற்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். திருக்குவளையும் தாண்டிச் செல்லவேண்டும் எட்டுக்குடிக்கு. இந்த எட்டுக்குடி முருகன், எண்கண் முருகன், சிக்கல் சிங்காரவேலன் ஆகியோரை ஒரே சிற்பி செதுக்கிய கதையை நான் எழுதி உள்ளேன். நீங்களும் படித்திருப்பீர்கள். படிக்காதவங்களுக்குச் சுட்டி இதோ இங்கே!

முதலாவது


இரண்டாவது


மூன்றாவது


நான்காவது


ஆகவே இந்தச் சிற்பங்களைப் பார்க்கவேண்டும் என இயல்பாகவே ஆசை மிகுந்திருந்தது. எட்டுக்குடியும் வந்தது. உள்ளே சென்றோம். கோயில் சுத்தமாய்ப் பராமரிக்கப் படுகிறது. காலை வேளையாகையால் அதிகமாய்க் கூட்டம் இல்லை. சொல்லப் போனால் சந்நிதியில் நாங்கள் மட்டுமே. சந்நிதிக்கு எதிரே மக்கள் தரிசனம் செய்யக் கம்பிக்கிராதியால் தடுப்புப் போட்டிருந்தது. தடுப்பு ஒரு மேடையில் இருக்க, அந்த மேடை நாலாபக்கமும் சறுக்கினாற்போல் கீழே இறங்கி இருந்தது. புதிதாக வருபவர்கள் அத்தனை உயர மேடையில் ஏறும்போது கொஞ்சம் தடுமாறித்தான் போகணும்.

வழவழவென்ற கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. நான் தடுமாறுவேன் என நினைத்த அவர் கொஞ்சம் தடுமாறிவிட்டார். ஏறும்போது சறுக்கிவிடுகிறது. எனக்கும் கொஞ்சம் சறுக்கத் தான் செய்தது. அத்தனை உயர மேடையில் ஏறும் இடம் சறுக்கலாய்ப் போட்டிருக்கவேண்டாமோ?? அங்கேயே விழுந்திருக்கவேண்டியது. தூண் எதிலாவது மோதி இருக்கணும். எதிரே கம்பிக்கிராதியைப் பிடித்துக்கொண்டு சமாளித்துக்கொண்டுவிட்டார். முருகனுக்கு அலங்காரம் நடந்துகொண்டிருந்தது. எப்படி நினைத்துக்கொண்டு பார்க்கிறோமோ அப்படிக் காட்சி அளிப்பானாம் எட்டுக்குடி முருகன். அன்றைக்கு எங்களுக்கு ஆசிகள் தரும் முதியவராகவே எனக்குத் தோன்றினார். கந்த சஷ்டி கவசம் சொல்லணும்னு கூடத் தோணலை. முருகனைப் பார்த்த கண் எடுக்கமுடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தோம். தீப ஆராதனை காட்டி விபூதிப் பிரசாதம் பெற்றுக்கொண்டும், முருகனைப் பார்த்துக்கொண்டே இருக்கணும்போல் இருந்தது. ஒருவழியாய் தரிசனம் முடித்துக்கொண்டு பிரஹாரம் சுற்றிக்கொண்டே வந்தோம்.

இந்தக் கோயில் ஆயிரம் வருடங்கள் பழமையானது என்று சொல்கின்றனர். வான்மீகர் என்னும் சித்தர் இங்கே சமாதியானதாகவும், கோயிலின் தல விருக்ஷமான வன்னிமரத்தடியில் இவர் சமாதி இருக்கிறது என்றும் காட்டினார்கள். முருகனின் ஆறுமுகங்களுக்கும் அபிஷேஹம், அலங்காரம், நைவேத்தியம் செய்யப் படுகிறது. சத்ரு சம்ஹார திரிசதை என்னும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. எதிரிகளால் துன்பம் நீங்க இந்த வழிபாடுகள் பிரார்த்தித்துக்கொண்டு பிரார்த்தனை செய்பவர்களால் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கிக் கோயிலில் நடத்துகின்றனர். எதிரிகளால் ஏற்படும் நியாயமான துன்பங்களுக்கு மட்டுமே பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும் என்றும் எதிரி அழியப் பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தால் பலன்கள் எதிர் விளைவை உண்டாக்குகிறது என்றும் சொன்னார்கள். தேய்பிறை சஷ்டி விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது.

ஒவ்வொரு வருஷமும் சித்திரா பெளர்ணமியில் முதல்நாள் திறக்கும் நடை மறுநாள் முடியும் வரை அடைக்கப் படாமல் இடைவிடாமல் பாலபிஷேஹம் நடக்கும் எனச் சொல்லுகின்றனர். பெளர்ணமிக்கு முதல்நாள் தேரோட்டம் நடக்கும். சித்திரா பெளர்ணமிக்கு முதல் நாளில் ஆரம்பிக்கும் பாலபிஷேஹத்திற்கும், மறுநாள் பாலபிஷேஹத்திற்கும் குறைந்தது முப்பதாயிரம் பால்காவடிகளாவது வருமென்று சொன்னார்கள். கந்த சஷ்டி விழாவும், வைகாசி விசாகமும் நடக்கும். மகனுக்கு இவ்வளவு திருவிழா நடக்கும்போது தந்தையைச் சும்மா விட முடியுமா? மார்கழி திருவாதிரையில் ஈசனுக்கு விழா எடுக்கப் படும்.

இங்கே பிராஹாரம் சுற்றிக்கொண்டு வரும்போது ஆங்காங்கே பரிவார தேவதைகளைப் பார்த்துக்கொண்டே வந்தோம். கோபுர வாயில், கொடிமரத்துக்குக் கிட்டே வரும்போது சுற்றிலும் இடப்பக்கம் உள்ள பெரிய திண்ணையில் பரிவார தேவதைகளின் சந்நிதிகள் இருந்தன. கோபுர வாயிலுக்கருகே நவகிரஹ சந்நிதியும், அதை ஒட்டியே சனைசரர் சந்நிதி தனியாகவும் இருந்தது. மேடை நல்ல உயரமாக இருந்தது. கீழே இருந்து இரண்டு படிகள் ஏறவேண்டும். படிகள் என்னமோ இரண்டு தான் என்றாலும் நல்ல உயரம். ஒவ்வொரு படியும் இரண்டடி உயரத்திற்குக் குறையாது. மேடையில் சுற்றிலும் இரும்புக்கிராதி போட்டுத் தடுத்திருந்தது. சனைசரருக்கு நேரே கம்பிக்கதவு. அப்போது தான் திறந்து அபிஷேஹங்கள் முடிந்து அலங்காரங்கள் செய்திருக்கின்றனர். கீழே விளக்குகள் விற்கும் கோயில் ஊழியர் பெண்மணி தைரியமாய் மேலே ஏறுங்க, சாக்குப் போட்டிருக்கிறேன் என என்னை வற்புறுத்த நான் என்னமோ மூளையில் பளிச்சென்று எச்சரிக்கை கொடுக்கத் தயங்கி நின்றேன். என் கணவரும் முதலில் பார்த்துவிட்டு இத்தனை உயரமா வேண்டாம் இங்கே இருந்தே பார்க்கலாம், வா என்று தான் சொன்னார். அந்தப் பெண்மணியோ விடாமல் விளக்குப் போடுங்க ஐயா எனத் திரும்பத் திரும்பச் சொல்ல என்னதோன்றியதோ ஒரு விளக்கை வாங்கிக்கொண்டு, வழுக்கும் படியில் கம்பிக்கதவைப் பிடித்துக்கொண்டு மிக மிகக் கவனமாக ஏறிச் சென்று சனைசரருக்கு விளக்கை ஏற்றி வைத்தார். நவகிரஹங்களைச் சுற்றி வந்தார். அங்கேயே வழுக்கி இருக்கிறது. சமாளித்துக்கொண்டிருக்கிறார். சுற்றி முடித்துக் கீழே இறங்குகையில் நல்லவேளை நீ வரலை, ரொம்பவே வழுக்கல் என்று சொல்லிக்கொண்டே முதல்படியில் இரு கால்களையும் வைத்துக்கொண்டு ஒரு விநாடி நின்றார். கை என்னமோ கம்பிக்கதவைப் பிடித்துக்கொண்டு தானிருந்தது. அடுத்த நிமிடம் என்ன ஆச்சென்று எவராலும் சொல்லமுடியவில்லை, சறுக்கியவண்ணம் கீழே விழுந்தார். நல்லவேளையாகப் படியில் மண்டை அடிபடவில்லை. சாய்ந்தாற்போல் விழுந்தார். நான் கத்தின கத்தலில் அனைவரும் கூடி அவரை மெல்ல எழுப்பினார்கள். முதுகில் கம்பிக்கதவு பட்டுத் தோல் வழன்று போயிருந்தது. தோள்பட்டையில் கதவு மோதியதில் நல்ல வலி. ஏற்கெனவே கழுத்து பிரச்னை. இப்போ இதுவும் சேர்ந்துகொள்ள கழுத்தை அசைக்கவே முடியவில்லை. அங்கே வந்த அறநிலையத் துறை ஊழியரிடம் படிகளின் கல்தளங்களை மாற்றிவிட்டு இப்படி வழுக்கும் கிரானைட் கற்களைப் போட்டிருக்கிறீர்களே, இதுவே ஒரு கர்ப்பிணிப் பெண் என்றாலோ அல்லது சிறு குழந்தை என்றாலோ பிழைத்திருப்பதே பெரிய விஷயம் என்று புகார் கொடுத்தேன். அவரால் என்ன பதில் சொல்லமுடியும்??? உண்மையில் குப்புற விழுந்திருந்தால் எதிரே உள்ள பீடத்தில் அடிபட்டிருக்கும். மல்லாந்து விழுந்திருந்தால் படியில் தலை மோதி இருக்கும். அங்கே அக்கம்பக்கம் மருத்துவமனைகளும் இல்லை. ரொம்பவே அத்துவானமான ஒரு இடம். இம்மாதிரியான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும் அளவுக்கு வசதிகள் எதுவுமே இல்லை. மனம் வேதனைப்பட்டாலும் இந்த அளவுக்கு எழுந்து நடந்து வண்டிக்கு வரும் அளவு உடல்நிலை இருக்கிறதே என நினைத்துக்கொண்டு கடவுளுக்கு நன்றி சொன்னோம். வண்டி கிளம்பியது.

Thursday, February 04, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம்! 5 திருப்புறம்பயம்!

பொன்னியின் செல்வனில் திருப்புறம்பயம் பள்ளிப்படைக்கோயிலில் தான் ஆழ்வார்க்கடியான் முதன் முதல் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளின் சதியைப் பற்றித் தெரிந்துகொள்வான். அது படிச்சதில் இருந்தே திருப்புறம்பயம் என்றாலே ஏதோ ஒரு சதிக்கூடம் என்ற நினைவே வரும். அடர்ந்த காடு, காட்டுக்கு நடுவிலே கோயில் என்றெல்லாம் கற்பனைக் குதிரை இஷ்டத்துக்குப் போகும். ஆனால் இங்கே இப்போ உண்மையில் அடர்ந்த காடுகள் எதுவும் இல்லை. ஆனால் நெல் வயல்கள். சுற்றிலும் சூழக் கோயில், பெரிய கோயில் என்றே சொல்லலாம். கோயிலுக்குள் நுழையக் கொஞ்சம் பயமாய்த் தான் இருந்தது. கோயிலின் நிலைமை மிகப் பரிதாபகரமாய் இருந்தது. ஆனாலும் வழிபாடுகள் ஏதோ நடந்து வருகிறது என்றுதான் சொல்லவேண்டும். மதுரை ஆதீனத்தின் கீழ் வருகிறது இந்தக் கோயில். மதுரை ஆதீனத்தைச் சார்ந்த கோயில்கள் இது தவிரவும், தஞ்சை மாவட்டத்தில் இன்னும் மூன்று இருக்கிறதாயும் சொன்னார்கள்.

மதுரை ஆதீனம் மிக மிகப் பழமையான ஆதீனமாச்சே?? அதன் கோயிலுக்குச் சொத்து இருக்கணுமே?? குருக்களைக் கேட்டதில் இருக்கிறது என்றார். நாற்பது வேலி நிலம் இருக்கிறதாம் கோயிலுக்கு. நிலத்திலிருந்து வருமானமும் வருகிறது. ஆனால் கோயிலுக்குக் கொடுப்பது என்னமோ ரேஷன் முறையில் தான். குருக்கள் சம்பளம் முன்னர் இன்னாம்பூரில் சொன்ன அதே ஐந்நூறு ரூபாய்களே. மிகக் கஷ்டத்தோடே இருப்பதாகவும், பரம்பரை குருக்கள் என்றும் ஈசனின் தொண்டை விட மனம் வரவில்லை என்றும் வருந்தினார். இப்படிப் போகுமிடமெல்லாம் மனம் வருந்தும் செய்திகளே அதிகம் காண முடிந்தது. எல்லாவற்றையும் தூக்கி அடித்துவிட்டது திருவாரூர்க் கோயிலின் நிலைமை. என் கணவர் அழுதே விட்டார் கோயிலைப்பார்த்துவிட்டு. ஆயிரம் வேலி நிலத்துக்குச் சொந்தக்காரர் திருவாரூர் தியாகேசர். எங்கே போச்சு எல்லாம்???

புறம்பயம் என்றால் பக்கத்திலே தண்ணீரை உடையது என்ற பொருளில் வருமெனச் சொல்கின்றனர். அதற்கேற்பக் கோயிலின் மேற்கே மதிலை ஒட்டி நீர்நிலை இன்றும் இருப்பதாயும் காட்டினார்கள். இந்த ஊரின் விநாயகருக்குப் பிரளயம் காத்த விநாயகர் என்ற பெயர் உண்டு. பிரளயம் ஏற்பட்டு அனைத்து ஊர்களும் அழிந்த காலத்தில் இந்த ஊர் மட்டும் அழியவில்லை என்றும் சுற்றிலும் உள்ள நீரை ஊருக்குள்ளே புக விடாமல் விநாயகர் தடுத்துப் புறத்தே நிறுத்தியமையால் இவ்வூரின் பெயர் திருப்புறம்பயம் என்றும் விநாயகருக்குப் பிரளயம்காத்த விநாயகர் என்றும் பெயர் ஏற்பட்டதாய்ச் சொன்னார்கள். விநாயகரின் திருமேனி கடல்பொருட்களான சிப்பி, சங்கு இவற்றால் ஆனது என்கின்றனர். ஒவ்வொரு பிள்ளையார் சதுர்த்தி அன்றும் விமரிசையாக விநாயகருக்கு அபிஷேஹ ஆராதனைகள் செய்கின்றனர். தேன் அபிஷேஹம் செய்யும்போது விநாயகருக்குச் செய்யப் படும் தேன் அபிஷேஹம் எல்லாம் அப்படியே உறிஞ்சப் படுவதாய்க் கூறுகின்றனர். அன்று கூட்டமும் அதிகம் காணப்படும் என்கின்றனர்.

கும்பகோணத்திற்கு வடமேற்கே மண்ணியாற்றின் கரையில் உள்ள இந்த ஊருக்கு இன்னாம்பூர் வழியாகவே வரவேண்டும். திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும், பின்னர் சுந்தரரும் முறையே ஓர் பதிகம் இந்த ஊர் ஈசன் மேல் பாடி இருக்கின்றனர். தல விருக்ஷம் புன்னை என்றாலும் இங்கே உள்ள வன்னிமரம் சாட்சி சொல்ல மதுரைக்குப் போயிருக்கு. அது தனியா எழுதறேன். திருவிளையாடல் புராணத்தில் வரும் அந்தக் கதை. இந்தச் சாட்சி சொல்லுவதில் திருஞானசம்பந்தரும் சம்பந்தப் பட்டிருப்பார். காவிரியின் வடகரைத் தலங்களில் இதுவும் ஒன்று.

ஈசன் பெயர் சாட்சி நாதர் என்பதாகும். சாட்சி சொல்ல மதுரை சென்றதால் சாட்சி நாதர் ஆனார். அம்பாள் பெயர் கரும்பொடு படு சொல்லம்மை அல்லது சாட்சி நாதேஸ்வரர், இலட்சுவாணி என்பதாகும். இரு தீர்த்தங்கள் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். இந்தத் தீர்த்தங்களில் பிரளயத்தின் ஏழு கடல்களும் வந்து அடங்கியதாகவும் ஐதீகம். குளக்கரையில் இருக்கும் தக்ஷிணாமூர்த்தி சந்நிதிக்கு மேலே இங்கேயும் சட்டைநாதர் காணப்படுகிறார். சுவாமி கிழக்கே பார்த்துக் காட்சி கொடுக்கிறார். அகஸ்தியர், புலஸ்தியர், சனகர், சநந்தனர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்டுப் பேறுபெற்றதாயும் சொல்கின்றனர்.

சாட்சி சொன்ன கதை:
காவிரிப்பட்டினத்து வணிகன் ஒருவன் மதுரையைச் சேர்ந்த பெண்ணொருத்தியைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே வாழ்ந்து வந்தான். அப்போது காவிரிப்பூம்பட்டினத்தில் அவன் தங்கை இறந்துவிட்டதாய்ச் செய்தி வர, காவிரிப்பூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட வணிகன் திரும்பி வருகையில் தன் தங்கையின் மகளையும் உடன் அழைத்து வர நேருகிறது. வரும் வழியில் இந்தத் தலத்தில் சற்றுத் தங்கினான். அப்போது பாம்பு கடித்து இறந்து போக, அவ்வழியே சென்ற திருஞான சம்பந்தரால் உயிர்ப்பிக்கப் பெற்று, அவர் அந்தப் பெண்ணை அவனுக்கே திருமணம் செய்விக்கிறார். திருமணத்தின் போது அங்கே ஒரு வன்னிமரமும், கிணறும் மட்டுமே சிவலிங்கத்தோடு இருந்தன. இவற்றைச் சாட்சியாகக் கொண்டே திருமணம் நடக்கிறது.

பின்னர் மதுரை சென்ற அந்தப் பெண்ணையும் அவள் கணவனையும் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி, நிஜமாகவே திருமணம் நடந்ததா என சந்தேகம் கொண்டு வழக்குத் தொடுக்க வழக்கும் மன்னன் சபைக்கு வந்தது. மன்னனோ திருமணம் நடந்ததற்கு சாட்சி கேட்கிறான். சாட்சியாக மனிதர்கள் யாருமே இல்லையே என மனம் வருந்திய அந்தப் பெண், அங்கே இருந்த சிவலிங்கமும், வன்னி மரமும், கிணறும் தான் சாட்சி என்று வருந்தினாள். அவை வந்து சாட்சி சொல்லுமா என மூத்தவள் இளையவளைக் கேலி செய்ய, நம்பிக்கையோடு ஈசனைத் தொழுதாள் இளையவள். என்ன ஆச்சரியம் மூன்றும் வந்து சாட்சி சொல்லிச் சென்றன. இன்றும் மதுரையில் ஸ்வாமி சந்நிதி வெளிப்பிரஹாரத்தில் வன்னி,கிணறு, லிங்கம் காணலாம். இவ்வாறு சாட்சி சொன்ன காரணத்தால் சாட்சிநாதர் என்ற பெயரை ஈசன் பெற்றார்.

துரோணர் இங்கே வந்து ஈசனை வழிபட்டே அஸ்வத்தாமாவைப் பெற்றெடுத்ததாகவும் சொல்கின்றனர். இந்தத் தலத்திற்கு எனத் தலபுராணம் இருக்கிறது என்றும் இன்றளவும் அச்சேறவில்லை என்றும் சொல்கின்றார்கள். இந்தத் திருக்கோயிலைப் பற்றிய உலாவில் சில கண்ணிகளே கிடைத்திருப்பதாகவும், புறம்பயமாலை என்னும் நூலில் பத்துப்பாடல்களே கிடைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். கிடைத்தவற்றைத் திருவையாறு வை.சுந்தரேச வாண்டையார் என்பவர் அச்சிட்டுள்ளதாய்த் தெரியவருகிறது. ஆனால் கோயிலில் எங்கும் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்பது வருந்தத் தக்கது. கோயிலில் கிட்டத்தட்ட பதினோரு கல்வெட்டுகள் இருப்பதாகவும் சொல்கின்றனர்.


ராஜகேசரி வர்மன் முதல் குலோத்துங்கன் வரையிலும் கோயிலுக்குக் கொடுத்த நிலதானங்கள், விளக்குகளுக்குக் கொடுத்த நிவந்தங்கள், பசுதானம், ஆடுதானம் போன்றவைகள் சொல்லப் பட்டிருக்கின்றன. ஆலய விளக்குகளுக்குச் செய்த பொன் தானம், வெள்ளி தானம் போன்றவையும் சொல்லப் படுவதோடு ஒரு கல்வெட்டில் ஈசன் பெயர் ஆதித்தேசுவரர் என்று இருப்பதால் கோயில் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப் பட்டிருக்கலாம் என்றும் சொல்கின்றார்கள்.

பொன்னியின் செல்வனால் பிரசித்தி பெற்ற கங்க மன்னன் ப்ருதிவீபதி இங்கே நடந்த மண்ணியாற்றுச் சண்டையில் உயிர் நீத்த செய்தியும் குறிக்கப் பட்ட கல்வெட்டும் உண்டு. முதலாம் பராந்தகன் காலம் முதல் மூன்றாம் ராஜேந்திரன் வரை உள்ள அரசர்கள் காலங்களில் செய்யப் பட்ட திருப்பணிகளைக்குறிக்கும் கல்வெட்டுகளும் கிடைத்திருக்கின்றன. திருவிசைப்பாப் பாடிய கண்டராதித்த சோழரின் மனைவியான செம்பியன் மாதேவியார் புறம்பயத்து ஈசனுக்கு நீராட்டத்துக்குக் கொடுத்த வெள்ளிக் கலசம் பற்றியும் குறிப்புகள் சொல்கின்றன. இது தவிர, விஜயநகர வேந்தர்கள் காலத்திலும் மக விழா பற்றிய கல்வெட்டு ஒன்று எடுத்திருக்கின்றனர். பெருமாள் கோயிலை தாமோதர விண்ணகரம் என்ற பெயரில் அழைத்திருப்பதாயும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பெருமாள் கோயிலுக்குப் போகமுடியவில்லை.

Tuesday, February 02, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம் 4 இன்னாம்பூர்!


மாயவரம் சென்று வந்ததும் மறுநாள் குலதெய்வம் கோயில் சென்றதும், பெருமாள் கோயில் பற்றிய செய்திகளும் தனியாக வரும். மின் தமிழில் சந்திரா இன்னாம்பூர் நடராஜர் ஸ்வாமிமலையில் தான் இருக்கிறார் என ஒரு ஆருத்ரா தரிசனம் போது குறிப்பிட்டதில் இருந்தே இன்னாம்பூர் போகணும்னு ஆசைதான். அதுவும் ஸ்வாமிமலைக்கு எத்தனை முறை போயிருக்கோம்?? இப்படி ஒரு விஷயம் கேள்விப்பட்டதே இல்லை. சந்திராவுக்கே தற்செயலாத் தான் தெரிஞ்சிருக்குனு நினைக்கிறேன். இம்முறை ஊர்ப்பக்கம் சென்றபோது வெள்ளியன்று 22-1-10 மாலை இன்னாம்பூருக்கும், திருப்புறம்பயத்துக்கும் சென்றோம். ஆட்டோக்காரர் ரொம்பக் கிட்டத்தான் என்று சொன்னாலும் கொஞ்சம் தூரம் போகத் தான் வேண்டி இருக்கு. காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. ஸ்வாமிமலை செல்லும் வழியில் அங்கிருந்து சற்றே வடகிழக்கே அமைந்துள்ளது. காவேரியின் வடகரைக்கோயில்களில் 45-வது கோயில். தேவாரப் பாடல் பெற்ற தலம் ஆகும். இந்த ஊரிலேயே பெருமாள் கோயிலும் ஒன்று உள்ளது.

சிறிது நேரத்தில் ஊரின் சிவன் கோயில் வாயிலில் கொண்டு விட்டுவிட்டார் ஓட்டுநர். கோயில் மிகப் பழமையான கோயில். திருப்பணி வேலைகள் நடைபெற வேண்டும். எப்போ நடக்கும்னு தெரியலை. இறைவன் பெயர் எழுத்தறிவித்த நாதர் என்று சொல்கின்றனர். இங்கே பேச்சு வராத குழந்தைகளுக்கும், பேச்சு வரும் வயதில் உள்ள சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும், நெல் முனையாலோ, கொஞ்சம் வயது சென்ற குழந்தையானால் செம்பருத்திப் பூவின் காம்பாலோ நாக்கில் எழுதுகின்றனர். நாங்கள் செல்லும்போது ஒரு பெற்றோர் தங்கள் பெண்குழந்தைக்கு (ஐந்து, ஆறு வயதிருக்கும்) நாக்கில் எழுதப் பிரார்த்தித்துக் கொண்டு வந்திருந்தனர்.

கோயிலில் அம்மன் நித்யகல்யாணியின் (கொத்தார் பூங்குழலி என்றும் பெயர்) சந்நிதி வாயிலில் கும்பகோணத்தில் இருந்து வந்திருந்த வைதீகர் ஒருவர் தன் குழந்தையோடு அமர்ந்து பாராயணம் செய்து கொண்டிருந்தார். முதலில் அவர்தான் குருக்கள் என நினைத்து அவரிடம் விபரங்கள் கேட்டோம். அவரும் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தச் சமயம் குருக்களே வந்துவிட்டார். கோயிலுக்கு என நிலங்கள் இருக்கின்றன என்றும், வருமானம் சரிவர வருவதில்லை என்றும் சொன்னார். இந்த ஊர் நடராஜர் ஏன் ஸ்வாமிமலை சென்றுவிட்டார் என்று கேட்டேன். பாதுகாப்புக் கருதி சென்றிருப்பதாகவும், இந்தக் கோயிலும் ஸ்வாமிமலை தேவஸ்தானத்தின் கீழ் வருவதாகவும், குருக்களுக்கு மாதச் சம்பளம் 550ரூ என்றும் சொன்னார். வரும் பக்தர்கள் போடும் பணத்தை வைத்து மற்றச் செலவுகளைச் சரிக்கட்ட வேண்டி இருப்பதாகவும் கூறினார். பல விண்ணப்பங்கள் கொடுத்தும் அன்றாட வழிபாட்டுக்குத் தேவையான பொருட்கள் சரிவரக் கிடைக்கவில்லை என்றும் வருத்தத்துடன் கூறினார். என்றாலும் கோயிலில் நித்திய வழிபாடுகளும், நாலு கால பூஜைகளும் ஊர்மக்கள் மற்றும் வந்து செல்லுபவ்ர்கள் ஒத்துழைப்புடன் நடந்து வருகின்றது. தஞ்சை மாவட்டத்தின் பல கோயில்களுக்கு இந்நிலைமைதான் இன்று என்பது மன வருத்தத்தைக் கொடுக்கிறது.

ஊர்மக்களும் கோயிலுக்கு வருகின்றார்கள். கோயிலின் வாயிலும் சரி, அர்த்தமண்டபத்தின் வாயிலும் சரி, கருவறையின் வாயிலும் சரி மிக மிகப் பெரியதாக இருந்தது. உள்ளே மிகப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆவுடையார், அதன் மீது லிங்க பாணம், தழும்புகள் பாணத்தில் இருப்பதை என் கணவர் சுட்டிக் காட்டினார். சுயம்பு லிங்கம். இவ்வளவு பெரிய ஆவுடையாருடன் கூடிய லிங்கம் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தான் பார்த்திருக்கிறேன். தஞ்சைக் கோயிலின் லிங்க பாணமும் பெரியது. இங்கே பாணம் அதைவிடச் சின்னது. அர்ச்சகரிடம் காரணம் கேட்டேன். வந்திருக்கும் குழந்தைக்குப் பிரார்த்தனை வழிபாட்டை முடித்துவிட்டுச் சொல்வதாய்க் கூறினார்.

இந்தக் கோயில் சூரியன் வழிபட்ட தலம் என்றும் சொன்னார்கள். அகத்தியருக்கு இங்கே தமிழ் இலக்கணம் இறைவனால் போதிக்கப் பட்டதாம். அதனாலும் எழுத்தறிவித்த நாதர் என்ற பெயர் ஏற்பட்டதாய்க் கூறினார். மேலும் இந்திரனின் யானையான ஐராவதம் ஈசனைத் தினமும் வந்து வணங்க வேண்டி முயன்றபோது, கருவறை சிறியதாக இருந்ததால் அதனால் உள்ளே நுழையமுடியவில்லையாம். அது மனம் வருந்தி ஈசனை வேண்ட, ஈசனும் கருவறையைச் சற்றே நெம்பினாராம், கருவறை யானை நுழையும் அளவுக்குப் பெரிதாக ஆயிற்று. ஐராவதம் உள்ளே நுழைந்து வழிபட்டு வந்ததாம். இப்போது அவ்வண்ணமே யானை நுழையும் அளவுக்குப் பெரிய வாயிலோடு கூடிய கருவறையைக் கொண்டிருக்கிறது. மேலும் ஐராவதம் வணங்கியதை நினவூட்டும் வண்ணம் விமானமும் கஜப்ருஷ்ட விமானமாக இருக்கிறது. பிராஹாரம் சுற்றி வந்து சற்றே தள்ளி நின்று பார்த்தால் யானை முதுகைப் போன்ற விமானம் கண்குளிரக் காட்சி அளிக்கிறது.

சுதன்மன் என்னும் கணக்காளன் இந்தக் கோயில் கணக்கை நிர்வகித்து வந்தபோது, சோழ மன்னனுக்கு அவன் மீது சந்தேகம். சுதன்மன் என்னமோ கணக்குகளில் ஒழுங்காகத் தான் இருந்து வந்தான். ஆனாலும் மன்னனின் சந்தேகம் தீரவில்லை. கணக்குகளைச் சரிபார்க்கும்பொருட்டு சுதன்மனை சபைக்கு வரச் சொல்லி மன்னன் உத்திரவிட, ஈசனே சுதன்மன் போல் அங்கே போய்க் கணக்குகளைக் காட்டி, முறையாக விளக்கவும் மன்னன் சந்தேகம் தீருகின்றது. சுதன்மன் கனவில் ஈசன் வந்து தான் போய்க் கணக்கைத் தீர்த்துவிட்டதாய்க் கூற, சுதன்மன் நெக்குருகிப் போனான். உண்மை தெரிந்த மன்னன் எழுத்தறிவித்த நாதரையும், சுதன்மனையும் போற்றி வணங்கினான். இதுதான் இந்தக் கோயிலின் தலவரலாறு எனச் சொல்லப் படுகிறது.

பல கல்வெட்டுக்கள் இருந்தாலும் முக்கியமானதாய்ச் சொல்லப் படுவது சோழன் ராஜகேசரி வர்மனின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டும், விஜயநகர மன்னரின் காலத்து வீர கம்பண்ண உடையார் காலத்திலும் பொறிக்கப் பட்ட இரண்டே முக்கியமாய்ச் சொல்லப் படுகிறது. அந்நியர் படை எடுப்புக் காலத்தில் இந்தக் கோயில் பூட்டப் பட்டு நாற்பதாண்டுகளுக்கு மேல் வழிபாடுகளின்றி இருந்திருக்கிறது. அது குறித்த கல்வெட்டும் இருப்பதாய்க் கூறுகின்றனர்.

அடுத்தது நம்ம இன்னாம்பூராரின் குல தெய்வமும் இஷ்ட தெய்வமுமான பெருமாள் கோயில். அது ஊருக்குள் நுழையும் இடத்திலேயே முதலிலேயே திரும்பி இருக்கணும். எங்களுக்கு முதலில் தெரியவில்லை. சிவன் கோயிலுக்கு வந்திருந்த ஓர் அம்மாள் சொன்னார் தான் அழைத்துச் செல்வதாய். அதற்குள் ஆட்டோ ஓட்டுநர் திருப்புறம்பயம் போயிட்டுத் திரும்பி வரும்போது போகலாம் என்றும் திருப்புறம்பயத்தில் சீக்கிரம் நடை சார்த்திவிடுவார்கள் என்றும் கூற திருப்புறம்பயம் சென்றுவிட்டுத் திரும்பும்போது மீண்டும் இன்னாம்பூர் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். முதலில் கொஞ்சம் வழி புரியவில்லை. அப்புறமாய்க் கேட்டுக் கேட்டுக் கொண்டு போய்ச் சேர்ந்துவிட்டோம். வாயிலிலேயே பெரிய இரண்டு சக்கர வண்டி இருக்க, பட்டாசாரியார் உள்ளே தான் இருக்கிறார் என்ற நிம்மதி வந்தது. என் கணவர் உடனே வேகமாய் உள்ளே போக சந்நிதியை மூடிவிட்டு பட்டாசாரியார் வந்து கொண்டிருந்தார். முதலில் இப்போ முடியாது என்று சொல்லிவிட்டார். அப்புறம் என்ன நினைச்சாரோ, மீண்டும் போய் சந்நிதியைத் திறந்தார்.

திரு இன்னாம்பூராரைப் பற்றியும், ஹிந்து பத்திரிகைக் காரங்க செய்யும் கைங்கரியம் பற்றியும் கேட்டேன். இன்னாம்பூரார் பற்றித் தெரியவில்லை என்றாலும் ஹிந்து பத்திரிகைக்காரர்கள் கைங்கரியம் பற்றிச் சொன்னார். பட்டாசாரியார் பாபுராஜபுரத்தில் இருந்து தினமும் வந்து போகிறாராம். ஆகவே அவசரத்தில் வேறே இருந்தார். என்றாலும் பெருமாளைத் திவ்ய தரிசனம் செய்து வைத்தார். பெருமாள் விக்ரஹம் நாவலப்பாக்கம் என்னும் இடத்தில் சில வருடங்கள் இருந்ததாகவும், இந்தப் பெருமாள் ஆதியில் திருமலையில் இருந்து வந்ததாகவும் கூறினார்.

பாஸ்கர க்ஷேத்திரம் என இது அழைக்கப் படுவதாயும் கூறினார். கருவறைக்கு முன்னால் சூரியன் இருப்பது இங்கே தான் என்றும் காட்டினார். அதனாலேயே இந்த ஊருக்கு இன்னாம்பூர் என்ற பெயர் வந்ததாகவும் சொன்னார். விஜயநகரப் பேரரசின் காலத்தில் அவர்களின் உறவினர்களில் ஒருவரான வீராவலி கிருஷ்ணமாசாரியார் என்பவர் இந்த விக்ரஹத்தைத் திருமலையில் இருந்து எடுத்துக் கொண்டு இந்த ஊருக்கு வந்ததாகவும், இங்கே பிரதிஷ்டை செய்யும் முன்னர் சில காலம் நாவலப் பாக்கத்தில் இருந்ததாகவும் கூறுகின்றனர். வேறு சிலர் அந்நியப் படை எடுப்பின்போது அங்கே ஒளித்து வைக்கப் பட்டதாகவும் சொல்கின்றனர். வீராவலி கிருஷ்ணமாசாரியாருக்கு உதவிய ராகவன் ஐயங்கார் தான் ஹிந்து பத்திரிகைக் குடும்பத்தினரின் மூதாதையர்கள் என்றும் கேள்விப்பட்டேன். மூலவரும் திருப்பதிப் பெருமாள் போலவே காட்சி கொடுக்கிறார். பட்டாசாரியாருக்கு ஊருக்குத் திரும்பவேண்டும் என்பதால் பிராஹாரங்கள் சுற்ற முடியலை. தரிசனம் முடிச்சுட்டுத் திரும்பிட்டோம். இன்னொரு முறை சென்றால் காலை வேளையில் சென்று கொஞ்சம் நிதானமாய்ப் பார்த்துக் கொண்டு வர ஆசை.


படங்கள் உதவி: கூகிளார், நன்றி.

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம் 3 மயூரநாதர் கோயில்!


ஒப்பிலியப்பன் கோயிலில் இருந்து மறுபடி சத்திரம்போய்க் கல்யாணம் முடிந்து சாப்பிட்டுவிட்டு, மாயவரம் போனோம். ஏற்கெனவே அபி அப்பாவுக்குத் தகவல் தெரிவித்திருந்தோம். அவங்க வீட்டுக்குப் போயிட்டு, பின்னர் அங்கிருந்து மயூரநாதர் கோயிலுக்குப் போனோம். கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் வருகிறது என்ற செய்தியே அங்கே போய்த் தான் தெரியும். மூலவர் மயூரநாதரை வள்ளலார் என்றும் அழைக்கின்றனர். அபயாம்பிகையை அம் சொல் நாயகி என அழைக்கின்றனர். காலப்போக்கில் அது அஞ்சலாள், அஞ்சலை என்றெல்லாம் மாறி இருக்கிறது.

நாவுக்கரசர் பதிகம் ஒன்று பாடி இருக்கிறார். ஞானசம்பந்தரும் பாடியுள்ளார். ஆனாலும் கோயில் அவர்கள் இருவருக்கும் முற்பட்ட காலத்தது எனச் சொல்கின்றனர். அருணகிரியாரும் மயிலாடுதுறை பற்றிப் பாடி உள்ளார். காவிரியின் தென்கரையில் உள்ள சிவாலயங்களில் இது 39-வது தலமாக வருகிறது எனக் குறிப்புகள் சொல்கின்றன. லிங்கம் சுயம்புமூர்த்தி. மாயவரத்திற்கு ரயில் நிலையம் இருந்தாலும் சென்னையிலிருந்து செல்பவர்கள் பேருந்தைத் தான் நம்பவேண்டி இருக்கிறது. ரயில் பாதை கிட்டத்தட்ட ஏழு, எட்டு வருடங்களாகச் சீரமைக்க ஆரம்பித்தது இன்னும் முடியவில்லை. ஆகையால் பேருந்திலே செல்லவேண்டுமானால் சென்னையிலிருந்து நேரடியாகப் பேருந்து உள்ளது.

மூலவருக்கு மேலே உள்ள விமானத்தைத் திரிதள விமானம் என்று சொல்கின்றார்கள். ராஜகோபுரத்திற்கு ஒன்பது நிலைகள் இருக்கின்றன. மாயவரம் காவிரியாற்றில் துலா ஸ்நாந கட்டத்தில் ஐப்பசி மாதம் ஸ்நாநம் செய்வது மிகச் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா என இந்தத் தலத்தைச் சிறப்பித்துச் சொல்லப் படுவது உண்டு.

தக்ஷ யாகத்தில் சிவனுக்குரிய அவிர்பாகத்தைக் கொடுக்காததோடு அல்லாமல், சிவனை யாகத்துக்கு அழைக்கவும் இல்லை தக்ஷன். அம்பாள் தன் தகப்பன் ஆன தக்ஷனிடம் சென்று நியாயம் கேட்க, அவளையும் தன் மகள் என்று கூடப் பார்க்காமல் நிந்தித்து அனுப்புகிறான் தக்ஷன். ஈசனிடம் சென்று முறையிட்ட அம்பாள், தனக்கு தக்ஷனின் மகள் என்ற இந்த உடல் தேவையில்லை என்று எண்ணி அக்னியில் விழுந்து விட, கோபம் கொண்ட ஈசன், தக்ஷனைச் சம்ஹரிக்க, வீரபத்திரரை அனுப்ப, அவர் யாகத்தையும், யாகத்துக்கு வந்தவர்களையும் அழித்து, தக்ஷனின் தலையை வெட்டி ஆட்டுத் தலையைப் பொருத்துகிறார். தக்ஷன் ஆணவம் ஒழிந்தாலும் அன்னை இல்லாமல் ஈசன் கோபம் அடங்கவில்லை.

அம்மையோ, யாகத்தில் இருந்த ஓர் மயிலின் வடிவில் தன் சக்தியைச் செலுத்தித் தானும் மயிலாக மாறி இந்தத் தலத்திற்கு வந்தாள். மாஞ்சோலையாக இருந்த இந்த இடத்தில் மயில் வடிவில் தவமிருந்து ஈசனை வழிபடுகிறாள். மயில் வடிவிலேயே ஆடிப் பாடி ஈசனை வழிபட்டாள் அன்னை. ஈசனும் அவள் மேல் கருணை கொண்டு அருள் பாலிக்கிறார். அவரும் ஓர் ஆண் மயிலாகவே வ்ந்து அன்னையோடு சேர்ந்து ஆடுகிறார். ஈசனின் இந்தத் தாண்டவம் மயூர தாண்டவம் அல்லது கெளரி தாண்டவம் எனப்படும். மயிலாக வந்து அருளியதாலும் அன்னைக்குத் தன்னையே தந்ததாலும் மயூரநாதர் என்றும், வள்ளலார் என்றும் பெயர் பெற்றார்.

இந்தக் கோயிலுக்கு ஐந்து பிராஹாரங்கள் இருப்பதாய்த் தெரிகிறது. நேரப்பற்றாக்குறையால் எல்லாப் பிராஹாரங்களுக்கும் செல்லமுடியவில்லை. எனினும் அபி அப்பா முக்கியமான இடங்களைக் காட்டிச் சொல்லிக் கொண்டு வந்தார். இங்கே உள்ள விநாயகர் முதலில் பார்ப்பவர் அகத்திய விநாயகர் என்று அழைக்கப் படுகிறார். இவர் தவிர வெளிப்பிரஹாரத்தில் சந்தன விநாயகர் என்றொருவர் இருக்கிறார். அந்த இடத்திலே தான் குதம்பைச் சித்தர் ஜீவசமாதி ஆன இடம் என்று அறிவிப்புப் பலகைகள் வைத்திருக்கின்றனர். சந்நிதியில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தாவின் சிலை வைக்கப் பட்டுள்ளது.

மூலஸ்தானத்தில் ஸ்வாமி லிங்கமாக இருக்க அருகில் மயில் வடிவில் அம்பாள் அவரை வழிபட்ட கோலத்தில் காணப்படுகிறாள். ஆதிமாயூர நாதருக்குத் தனியாகவும் சந்நிதி உள்ளது. முருகன் இங்கே ஸ்வாமியிடம் வேல் வாங்குவாராம். அருணகிரியார் திருப்புகழில் இது பற்றிக்குறிப்பு இருப்பதாய்ச் சொல்கின்றனர். ஈசனின் கெளரிதாண்டவம் ஆடும் நடராஜர் தனி சந்நிதியில் இருக்கிறார். தினமும் மாலையில் நடராஜருக்கு முதல் வழிபாடு. நடராஜருக்கு நேரே மயிலம்மனுக்குத் தனி சந்நிதி. கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்துக்கு அருகே ஜுரதேவர் இருப்பதை அபி அப்பா சுட்டிக் காட்டினார். நாங்க பதிலுக்கு துர்கை மஹிஷாசுர மர்த்தினியாக இருப்பதைச் சுட்டிக்காட்டினோம். அபி ஆச்சரியத்தோடு பார்த்தாள். மஹிஷனுக்கு இருபுறமும் அசுரர்களும் காணப்பட்டார்கள். ஜுரதேவருக்கு அருகே ஆலிங்கன மூர்த்தி என்று சொன்னார்கள். இவர்கள் இங்கே காணப்படுவதின் சிறப்பம்சம் என்னவென்று புரியவில்லை.

அம்பாள் பத்து வயதுப் பெண் போல் காணப்பட்டாள். அருமையான வடிவோடு வடிக்கப் பட்ட அற்புதமான விக்கிரஹம். பார்க்கப் பார்க்க அருமை. முதலில் திரை போட்டிருந்தது. அங்கேயே அமர்ந்து காத்திருந்தோம். பார்த்தால் ஒரு சின்னப் பெண் எதிரே வந்து நின்று பேசுவது போல் அம்பாள். வலக்கையில் கிளியோடு காணப்படுகிறாள். அம்பாள் சந்நிதிக்கு வலப்பக்கம் அநவித்யாம்பிகை என ஒரு சந்நிதி காணப்பட்டது. ஆனால் அங்கே ஒரு லிங்கம் தான் இருந்தது. இந்த லிங்கத்திற்குப் புடவைதான் சார்த்துவதாயும், அதுவும் சிவப்பு நிறப் புடவைதான் என்றும் சொன்னார்கள். நாதசர்மா என்ற அந்தணர் தன் மனைவியான அநவித்யாம்பிகையோடு ஐப்பசி மாசக் கடைமுழுக்குக்கு இந்த ஊருக்கு வந்தனர். அவர்கள் வரும்போது கடைமுழுக்கு முடிந்துவிடுகிறது. மன வருத்தத்தோடு இருந்த அவர்களுக்காக ஈசன் நாதசர்மாவின் கனவில் தோன்றி மறுநாள் அதிகாலை உதயத்திற்கு முன் நீராடினால் துலா ஸ்நாநம் செய்த புண்ணியம் கிடைக்கும் எனத் திருவாய் மலர்ந்தருளினார். அவ்வாறே செய்த தம்பதியர் ஈசனின் திருவுருவிலேயே ஐக்கியம் ஆகின்றனர்.

நாதசர்மா ஐக்கியமான லிங்கம் நாதசர்மாவின் பெயரிலேயே காணப்படுகிறது. அநவித்யாம்பிகை ஐக்கியமான லிங்கம் அம்பாள் சந்நிதிக்கு வலப்பக்கம் அநவித்யாம்பிகை பெயரிலே காணப்படுகிறது. இந்த லிங்கத்திற்கே புடைவை சார்த்துகின்றனர். தக்ஷிணாமூர்த்தி இடப்பக்கமாய்ச் சாய்ந்து காணப்படுகிறார். நவகிரஹ சந்நிதியில் இரண்டு சனைசரர்கள். ஒருவர் தலையில் அக்னியோடும், இன்னொருவர் காகத்தின் மீதும் காணப்படுகிறார். காகத்தின் மீது அமர்ந்திருப்பவர் சிவ வழிபாடு செய்வதால் இவரைத் தரிசிப்பது விசேஷம் என்கின்றார்கள். இதே போல் சண்டேஸ்வரரும் இருவர் காணப்படுகின்றார்கள். அஷ்டலக்ஷ்மி சந்நிதிக்கு மேலே ஒரு சந்நிதி தெரிந்தது. அங்கே சட்டைநாதர் இருப்பதாய்ச் சொன்ன அபி அப்பா, அங்கே செல்லும் வழியையும் காட்டினார். திறந்திருக்க மாட்டார்கள் என்றும் சொன்னார். இன்னொருமுறை வந்து சாவகாசமாய்ப் பார்க்கவேண்டிய கோயில் என நினைத்துக்கொண்டேன். மஹாவிஷ்ணுவும் ஈசனை வழிபடும் கோலத்தில் சிற்பமாய்க் காணப்படுகிறார்.

இந்தத் தலத்தில் தான் ஈசன் நந்தி தேவரின் கர்வத்தை அடக்கியதாய்ச் சொல்லப் படுகிறது. இந்த நந்தி காவிரியின் நடுவில் காணப்படுகிறது. பிராஹாரத்தில் ஓர் இடத்தில் நல்ல மழைக்காலத்தில் காவிரி நீர் கீழே இருந்து குபுகுபுவென வந்து நிறைத்துவிடும் என்று காட்டினார் அபி அப்பா.திருக்கோயில் குளத்தின் நடுவில் நந்தியையும் காட்டினார். நந்தி முழ்கி முதுகு மட்டும் தெரிந்தது. கங்கையும் இங்கே வந்து துலாமாசம் நீராடித் தன் பாவங்களைப் போக்கிக் கொண்டதாயும் ஐப்பசி மாசம் அமாவாசை அன்று இது நடந்ததாகவும் சொல்கின்றனர். அடுத்து அன்றே கும்பகோணம் வந்துவிட்டோம்.

அன்று மாலை சுவாமிமலைக்கு அருகே இருக்கும் இன்னாம்பூர் என்னும் ஊர் சென்றிருந்தோம். அது திருப்புறம்பயம் செல்லும் வழியில் உள்ளது. அதுபற்றிய விபரங்கள் நாளை. மறுநாள் காலை எங்கள் ஊரான பரவாக்கரை சென்றோம். அங்கே காலையில் குலதெய்வம் கோயிலில் அபிஷேஹம், மாவிளக்கு முடித்துவிட்டுப் பெருமாள் கோயிலில் பாலாலயம் எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். மதியம் இரண்டு மணிக்கு மேல் கும்பகோணம் போய்ச் சேர்ந்தோம். போகும்போதே சனிக்கிழமை இரவு ரதிமீனாவில் முன்பதிவு செய்துகொண்டோம். சனிக்கிழமை காலை சீக்கிரமே கிளம்பி எண்கண், திருவாரூர், எட்டுக்குடி, சிக்கல், திருக்கண்ணமங்கை, திருச்சேறை போன்ற தலங்களைப் பார்த்துக்கொண்டு வருவதாய்த் திட்டம்.

Friday, January 29, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம்-2 ஒப்பில் அப்பன் கோயில்


முதல் நாள் ராமசாமி கோயிலுக்குச் சென்றுவிட்டு மறுநாள் காலை ஒப்பிலியப்பன் கோயிலில் ஒரு திருமணத்திற்குச் செல்வதற்காகப் போனோம். அங்கே சத்திரத்தில் இருந்து கிட்டே பெருமாள் கோயில் இருந்ததால் அங்கேயும் சென்றோம். ஏற்கெனவே பலமுறை பார்த்திருக்கும் கோயிலே என்றாலும் கோயில்கள் பற்றி எழுத ஆரம்பிச்ச இத்தனை நாட்களில் இப்போத் தான் போகிறேன். கோயில் ஆயிரம் வருஷங்களுக்கும் மேல் பழமையானது. திருப்பதி வெங்கடாசலபதிக்கு ஈடாக இவரைச் சொல்லுவார்கள். இவருக்கும் வெங்கடாசலபதி சுப்ரபாதம் போல் தனியாக ஒப்பிலியப்பன் சுப்ரபாதம் உண்டு. 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. இந்தக் கோயிலை பொய்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாஸனம் செய்திருக்கின்றனர்.

இதன் பழைய பெயர் திருவிண்ணகரம் ஆகும். இந்தக் கோயிலுக்கு அருகேயே திருநாகேஸ்வரம், நாகநாத ஸ்வாமி கோயிலும் அமைந்துள்ளது. வைகானஸ முறைப்படி வழிபாடுகள் நடக்கும் இந்தக் கோயிலின் நிவேதனத்தில் உப்புச் சேர்ப்பதில்லை என்று சொல்லுவார்கள். அதற்குக் காரணமும் உண்டு. பின் வருமாறு:

மார்க்கண்டேய ரிஷி மகள் வேண்டித் தவம் இருக்கும் வேளையில் பூதேவியோ ஸ்ரீதேவியை மட்டும் மார்பில் தாங்கும் விஷ்ணு நம்மையும் தாங்க மாட்டாரா என எண்ணினாள். அவள் எண்ணம் புரிந்த விஷ்ணு அவளைத் துளசிச் செடியின் அருகே திருத்துழாய் என்னும் திருநாமத்துடன் கூடிய பெண்ணாகப் பிறந்து வளர்ந்து வருமாறும், தாமே அவளைத் திருமணம் செய்து கொள்வோம் எனவும் திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி துளசிச்செடிக்கு அருகே ஸ்ரீயின் அம்சமான பூதேவி குழந்தை வடிவில் கிடக்க, மார்க்கண்டேயர் குழந்தையைத் திருத்துழாய், துளசி எனப் பெயரிட்டு அருமையோடும், பெருமையோடும் வளர்த்துவருகிறார்.

உரிய வயது வந்தது. பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும். அப்போது ஓர் வயதான அந்தணர் அங்கே வந்தார். அவர் மார்க்கண்டேய ரிஷியின் பெண்ணைத் தாம் மணக்க விரும்புவதாய்க் கூற, வெகுண்ட ரிஷியானவர், "என் மகள் மிகச் சிறியவள், அவளுக்கு சாப்பாட்டில் உப்புச் சேர்க்கும் அளவு கூடத் தெரியாது. உப்பே சேர்க்காமல் அவள் சமைக்கும் சாப்பாட்டை நான் சாப்பிடுகிறேன், உங்களால் முடியாது" எனக் கூற, முதியவர் விடவில்லை.


முதியவராக வந்த பெருமாள் கேட்கவில்லை. அடம் பிடிக்கிறார். உங்கள் பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று. பெண்ணிடம் கேட்க, அனைத்தும் அறிந்த அவளோ, முதியவரை நான் எங்கனம் திருமணம் செய்வது என மறுக்கிறாள். திகைத்த மார்க்கண்டேயர், தவத்தில் ஆழ, அவருக்கு வந்திருப்பது எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளே எனப் புரிகிறது. பின்னர் திருமணம் கோலாகலமாக நடக்க, மாமனார் வீட்டோடு மாப்பிள்ளையாக அங்கேயே தங்கி இருக்கும்படி மாமனார் வேண்ட பெருமாளும் சம்மதித்துத் தங்குகிறார். துளசிச் செடி மாலையாக மாறி நிரந்தரமாய்ப் பெருமாளின் மார்பை அலங்கரிக்கிறது. இவ்விதம் துளசிக்கும் பெருமாள் முக்கியத்துவம் கொடுத்தார். அப்போது முதல் விஷ்ணு வழிபாட்டில் துளசிக்கு நிரந்தரமான இடமும் ஏற்பட்டது. தன் பெண்ணுக்கு உப்பிட்டுச் சமைக்கத் தெரியாது என முனிவர் கூறியதற்கு ஏற்ப பெருமாளும் தனக்கு உப்புடன் கூடிய உணவு வேண்டாம் என்று சொன்னதாகவும், அதனாலேயே இந்தக் கோயிலில் இன்றளவும் பெருமாளுக்கு உப்பில்லா நிவேதனமே செய்யப் படுகிறது.

இங்கே பெருமாள் ஐந்து கோலங்களில் காட்சி கொடுத்தருளியிருக்கிறார். மூலவர் திருவிண்ணகரப்பன் என்றும், உற்சவர் பொன்னப்பன் என்ற பெயரிலும், மணியப்பன், என்னப்பன், முத்தப்பன் என்று பிராகார சந்நிதிகளிலும் பெருமாள் காட்சி கொடுத்ததாகச் சொல்கின்றனர். இவர்களில் முத்தப்பன் சந்நிதி காலப்போக்கில் மறைந்துவிட்டது என்கின்றனர். மூலவரான திருவிண்ணகரப்பன் பாதம் நோக்கித் தம் வலக்கையைக் காட்டிய வண்ணம் அருள் பாலிக்கிறார். அந்த வலக்கையில் "மாம் ஏகம் சரணம் விரஜ" என எழுதப் பட்டிருப்பதாய்ச் சொல்லுகின்றனர்.( எனக்குக் கண்ணாடி போட்டாலே எழுத்துத் தெரியாது, இது சுத்தமாய்த் தெரியலை, சொல்லிக் கேள்வி) அதாவது ஆண்டவனைச் சரணடைபவர்களை நான் காப்பேன் என்று பொருள்படும் வண்ணம், "என்னைச் சரண் என அடைபவர்களைக் காப்பேன்" என எழுதி இருப்பதாகக் கூறுகின்றனர். நம்மாழ்வாரே இவரை யாருக்கும் நிகரில்லா தன்னிகரில்லா, ஒப்பில்லா அப்பன் என அழைத்தவர். அது முதலே இவர் ஒப்பில் அப்பன் என அழைக்கப் பட்டு ஒப்பிலியப்பனாகி இந்தக் கோயில் நிவேதனங்களின் காரணமாக உப்பிலியப்பன் என்ற பெயருக்கு மாறிவிட்டிருக்கிறார்.

அஹோராத்ர புஷ்கரணி என்னும் இந்தக் கோயில் திருக்குளத்தில் பகல், இரவு எந்நேரமானாலும் ஸ்நாநம் செய்யலாம் என்பதும் மரபு. அந்தணன் ஒருவனுக்கு மஹாவிஷ்ணு இந்தப் புஷ்கரணியில் நீராடியதும் பாவம் போக்கியது நள்ளிரவு நேரத்தில் என்றும், அது முதல் இந்தப்புஷ்கரணியில் நீராடுவதற்கு நேரமோ, காலமோ இல்லை என்றும் சொல்கின்றனர். மார்க்கண்டேயர் வழிபட்ட தலமாகையால் இங்கேயும் சஷ்டி அப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேஹம் போன்றவை செய்து கொள்ளுவது சிறப்பாகக் கருதப் படுகிறது. இந்தக் கோயில் பெருமாளுக்குத் திருக்கல்யாண உற்சவமும் பண்ணி வைப்பதாய் பக்தர்கள் பிரார்த்தித்து நிறைவேற்றுகின்றனர். நாங்க போன அன்றும் ஒரு கல்யாண உற்சவம் நடந்து கொண்டிருந்தது. கூட்டமான கூட்டம். ஆனால் சந்நிதியில் தரிசனம் நன்றாகப் பண்ண முடிந்தது. படங்கள் எடுக்க விடவில்லை. வெளியே வெறும் கோபுரத்தை மட்டும்தான் எடுக்கணும்னு அதுவும் எடுக்கவில்லை. :( அநேகமாய் அறநிலையத் துறையின் முன் அநுமதி இருந்தால் மட்டுமே வெளிப்பிரஹாரங்களில் படம் எடுக்க முடியும் என்றார்கள். இனிமேல் முன் கூட்டிக் கேட்டுப் பார்க்கணும்.

Thursday, January 28, 2010

நடந்தாய் வாழி காவேரி! - காவேரி ஓரம் 1 குடந்தை ராமசாமி கோயில்

கும்பகோணத்துக்குப் போய் இறங்கிய அன்றே ராமசாமி கோயிலுக்குப் போனோம். ஒவ்வொரு முறை அங்கே செல்லும்போதெல்லாம் கோயில் வாசலோடு போனாலும் உள்ளே செல்ல முடிந்ததில்லை. அங்கே உள்ள சிற்ப, சித்திரங்கள் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். வெறுமனே பார்த்துட்டு வந்தால் போதுமா? இம்முறை காமிராவும் கையுமாப் போனோம். வழக்கம்போல் சிற்பங்களைப் படம் எடுக்க முடியவில்லை. கூட்டம் இல்லாத நேரம்னு கிடைக்கவே இல்லை. அதென்னமோ எங்க ராசியோ என்னமோ தெரியலை, நாங்க எங்கேயானும் போனால் போதும், கூட்டமே இல்லாமலிருக்கும் அந்த இடம் மக்கள் கூட்டத்தால் வழிய ஆரம்பிக்கும். இங்கும் அதே! ஒருத்தருக்கும் தெரியாமல் எப்படி எடுக்கிறது? போறாக்குறைக்கு ஒரு சுற்றுலாக் கூட்டம் வேறே.

இந்தக் கோயில் கிட்டத் தட்ட ஐநூறு வருடங்கள் பழமையானது என்று சொல்கின்றனர். அயோத்தியில் இருக்கும் ராமர் போல் இங்கே தான் காணமுடியும் என்றும் சொல்கின்றனர். ராமர் தன் குடும்பத்தோடு காட்சி அளிக்கும் ஒரே கோயில் தமிழ்நாட்டிலே இது மட்டுமே என்கின்றனர். நல்ல ஆஜாநுபாகுவாக ராமரும், அவர் அருகே அழகே வடிவான சீதா தேவியும், மற்ற மூன்று சகோதரர்களும் காட்சி அளிக்க அநுமனோ கையில் வீணையுடன் காட்சி கொடுக்கிறார். ராமருக்கு என பல தனிக்கோயில் நம் நாட்டில் இருந்தாலும் பரதனுக்கு என ஒரு கோயில் கேரளாவில் இருக்கிறதாய்ச் சொல்கின்றனர். இம்மாதிரி சகோதரர்கள் நால்வரும் சேர்ந்து காட்சி அளிப்பது அயோத்தி தவிர இங்கே தான் என்று பட்டாசாரியார்கள் கூறினார்கள்.

இது தவிர ஒரு பெருமாள் சந்நிதியும் உள்ளது. விநாயகர், விநாயகராகவே நாமங்கள் இல்லாமல் சுற்றுச் சுவரில் காட்சி அளிக்கின்றார். சந்நிதிக்கு வெளியே பிராஹாரத்தில் ராமாயணம் மொத்தமும் அழகான சித்திரங்களால் வரையப் பட்டுள்ளது. மூலிகை வண்ணங்களால் வரையப்பட்டுள்ள அந்தச் சித்திரங்கள் நாயக்கர் காலத்தவை எனச் சொல்கின்றனர். யாருக்கும் அது பற்றிச் சொல்லத் தெரியவில்லை. குறிப்பு ஏதானும் இருக்குமானு தேடினேன், சரியாத் தெரியலை. இன்னொரு முறை பகலில் போய்ப் பார்க்கணும்.

இங்கே ராமரும், சீதையும் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்திருப்பதால் இது ராமரின் திருமணக்காட்சி என்றும் கூறுகின்றனர். அநுமன் ராமாயணத்தைப்பாடிய வண்ணம் காட்சி அளிப்பதாகவும் கூறுகின்றனர். ஸ்ரீ ராமன் மஹாவிஷ்ணுவின் அவதாரமாக பூமியில் பிறந்தபோது அவருடைய படுக்கையான ஆதிசேஷன் லக்ஷ்மணனாகவும், சக்கரம் பரதனாகவும், சங்கு சத்ருக்கனனாகவும் பிறந்ததாகச் சொல்லுவார்கள் ஆன்மீகப் பெரியோர்கள். சகோதரர்கள் நால்வரும் ஒற்றுமையாக இருந்ததும் ஒரு மிகப் பெரிய எடுத்துக்காட்டு. அதே போல் நால்வரும் ஒரே குடும்பத்து சகோதரிகளையும் மணந்தனர். ராமருடைய பட்டாபிஷேஹக் காட்சிகளைத் தென்னக மக்கள் பார்த்து இன்புற முடியவில்லை என்றே இந்தக் கோயில் இம்மாதிரி வடிவமைக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர். படங்களை இங்கே காணலாம்.

யாருக்கும் தெரியாதபடி கொஞ்சம் கஷ்டப் பட்டுத் தான் படங்கள் எடுக்க முடிந்தது. நான் தேர்ந்த திறமைவாய்ந்த போட்டோகிராபரும் இல்லை. ஓரளவு சுமாரான படங்களைக் காணலாம். ராமசாமி கோயில் சித்திரங்கள்