Tuesday, February 28, 2012

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! தாண்டவ விளக்கங்கள்!

நடராஜத் தத்துவத்தை ஆழ்ந்து கவனிக்குங்கால் பேரொளியான ஈசன் ஒரு தீச்சக்கரம் சுழல்வது போலத் தன் கைகளை வீசிக்கொண்டு, நிலம் , நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்துக்கும் தானே ஒரு சாட்சியாய்த் தோன்றுவதை உணரலாம். வீசும் கைகளின் புயல்வேக அசைவு காற்றையும், (சிலர் சுவாசம் என்றும் சொல்வார்கள்) சூரிய, சந்திர, நெற்றிக் கண்கள் அக்னி ரூபமாகவும், உடலே நிலமாகவும், தலையில் இருக்கும் கங்கையே நீராகவும், செவிகள் ஆகாயமாகவும் குறிப்பிடப் படும். மேற்சொன்ன பஞ்ச பூதங்களில் நாட்டியம் இல்லாத எதுவுமே இல்லை. காற்று தென்றலாகவும், சுழற்காற்றாகவும் நடை போட்டால், தீச்சுடரோ பலவேறு விதங்களிலும், வண்ணங்களிலும் நெளிந்து நடனமாடும். பூமியோ எல்லாவற்றிற்கும் மேல் வெடிப்போசையின் மூலம் தன் நடனத்தை நிகழ்த்துகிறது. நீரோ கடல் அலைகளால் தன் நாட்டியத்தைக் காட்டினால் விண்ணோ, அதிரும் இடியோசையிலும், கொட்டும் மழையிலும், வீசும் காற்றிலும், சூரிய, சந்திர, நக்ஷத்திரங்கள் மூலமும் தன் அளப்பரிய சக்தியைக் காட்டுகிறது.

இவ்வாறு இறைத் தத்துவம் பல்வேறு விதங்களில் தன் இருப்பை நமக்குக் காட்டி வருகிறது. அனைத்துமே ஒழுங்கான ஒரு இயக்கமாக இருப்பது எங்கனம்? நினைக்க நினைக்க ஆச்சரியமாய் இருக்கிறது அல்லவா? ஈசனின் பல்வேறு நாட்டியக் கோலங்களையே இதற்குக் காரணமாகச் சொல்லுவார்கள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு உள்ளர்த்தமும் உள்ளது. ஊர்த்துவ தாண்டவம் என்பது யோகநிலையில் மேல்படியைச் சுட்டிக் காட்டுவது என்பதைப் போல ஒவ்வொரு தாண்டவத்திற்கும் ஒவ்வொரு தத்துவம் இருக்கிறது. இவற்றில் சிதம்பரத்தில் இருக்கும் ஆனந்த நடராஜரை ஆத்ம ஸ்வரூபி என்றால் மற்ற இடங்களில் காணப்படும் ஒவ்வொரு கோலத்துக்கும் ஒவ்வொரு தத்துவப் பொருள் உண்டு. இதில் ஏற்கெனவே திரிபுர சம்ஹாரத்தில் ஆணவம்,, கன்மம், மாயை என்னும் மும்மலத்தின் தாக்கத்தால் தன் நிலை மறந்த அரக்கர்களைக் குறித்துப் பார்த்தோம். திரிபுர தாண்டவம் என்னும் அந்தத் தாண்டவத்தில் திரிபுரத்தை ஈசன் எரித்தான் என்பதை உண்மையாகவே ஒரு நகரத்தை எரித்தான்; அசுரர்களைக் கொன்றான் என்ற நேரடிப் பொருள் கொண்டால் அது முழுத் தவறு. இங்கே கொல்லப்படுவது ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றும். எரிக்கப்படுவது இவை மூன்றுமே. இங்கே அக்னியாகச் சுட்டப்படுவது நம்முடைய தவமாகிய அக்னி. இந்த யோகநெறியுடன் கூடிய தவாக்னியில் மும்மலங்களும் சுட்டுப் பொசுக்கப் படுகின்றன என்பதே உள்ளார்ந்த பொருளாகும்.

அடுத்தது பிரம்மாவின் தலையைக் கொய்தல். இதற்கும் உள்ளார்ந்த அர்த்தம் உண்டு. மூலாதாரத்தில் தோன்றும் மூலாக்னியை மேலெழுப்பி சஹஸ்ராரத்துக்குக் கொண்டு போகவேண்டும். அதற்குத் தடையாக இருப்பதோ பிரம்மா அதிபதியான சக்கரமாக இருக்கும் சுவாதிஷ்டானச் சக்கரம். இங்கேயே சிருஷ்டித் தொழில் நடைபெறவேண்டி பிரம்மா துணை புரிகிறார். ஜீவனுக்கு இதிலேயே மனம் ஆழ்ந்து போகாமல் காத்துத் தடுக்க வேண்டும். மேலும் பிரம்மாவுக்குத் துணையாக இருப்பவரும் மாயன் எனப்படும் விஷ்ணு. அவரோ மணிபூரகத்தில் இருந்து உலக மாயைகளில் மனதைச் சிக்க வைப்பார். இவர்கள் இருவரிலிருந்தும் சீவனை விடுவித்து சஹஸ்ராரத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பதே பிரம்மாவின் சிரச்சேதமாகச் சொல்வதுண்டு. இதற்கு மனம் மிகவும் பக்குவப் பட வேண்டும். அத்தகைய பக்குவப்பட்ட ஆன்மாக்களை இந்த சிருஷ்டி மோகத்திலிருந்து தடுத்து மேலே கொண்டு போவதே பிரம்ம சிரச்சேதம் ஆகும்.

நிஜமாகவே பிரம்மாவின் தலையை வெட்டிவிட்டார் என அர்த்தம் பண்ணிக் கொள்ளக்கூடாது.

Friday, February 17, 2012

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சந்த்யாநிருத்த மூர்த்தி!

அடுத்ததாய் நாம் பார்க்கப் போவது சந்தியா ந்ருத்த மூர்த்தி. பிரதோஷக் காலத்தில் நடனமாடியதால் ஈசனுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இதன் கதையும் நாம் அனைவரும் அறிந்ததே. தேவர்கள் அம்ருதம் வேண்டிப் பாற்கடலைக் கடைகின்றனர். ஆனால் அதன் முன்னர் ஈசனின் அனுமதியை வேண்டவில்லை என்பதோடு அவருக்குத் தெரிவிக்கவும் இல்லை. மந்தரமலையை மத்தாகக் கொண்டு கடைகின்றனர். வாசுகி தான் மத்தின் கயிறாகப் பயன்பட்டது. வாய்ப்பாகத்தை அசுரர்களும், வால் பாகத்தை தேவர்களும் பிடித்துக்கொண்டு வெகு வேகமாய் இழுத்துக் கடைந்தனர. அந்த வேகத்தில் வாசுகி விஷத்தைக் கக்கக் கூடவே பாற்கடலில் இருந்தும் ஹாலாஹால விஷம் வெளியே வரத் தொடங்கியது. தேவர்களும், அசுரர்களும் மட்டுமல்லாமல் விஷ்ணுவும் விஷத்தின் கடுமையால் உடல் கருகினார். அனைவரும் செய்வதறியாது தவிக்க, விஷ்ணுவின் ஆலோசனையின் பேரில் கைலை சென்று ஈசனிடம் முறையிட்டனர்.

ஈசனும் அந்த விஷத்தை ஒரு உருண்டையாகத் திரட்டி எடுத்துவரச் சொல்லி ஆலால சுந்தரரை அனுப்பி விஷத்தை எடுத்துவரச் செய்தார் என்று ஒரு கூற்று உண்டு. அதே விஷத்தை நந்தி தேவரைத் திரட்டிக் கொண்டு வருமாறு ஈசன் பணித்ததாகவும் கூறுவார்கள். நந்தி தேவர் விஷத்தைத் திரட்டி ஒரு பெரிய உருண்டையாகக் கொண்டு வந்து ஈசனிடம் கொடுக்க, அந்த விஷத்தை ஈசன் விழுங்கினாலும் அபாயம், விழுங்காமல் விஷம் வெளியே இருந்தாலும் அபாயம் என்பதால் அதை ஈசன் அப்படியே தொண்டையில் நிறுத்திக்கொண்டார். விஷத்தைக் கண்டு பயந்தே ஈசன் தம் தொண்டையில் நிறுத்திக்கொண்டதாய் நினைத்த நந்தி தேவர் கேலியாக ஒரு ஹூம்காரம் செய்து சிரித்தார். அதைக் கண்ட ஈசன் நந்தியின்கர்வத்தைப் போக்க எண்ணி விஷமுண்ட தம் கையை நந்தியின் மூக்கெதிரே வைத்து முகரச் செய்ய முகர்ந்த நந்தி மயங்கியதோடல்லாமல் விழித்து எழுந்தும் பித்துப் பிடித்தவர் போலானார்.

அனைவரையும் தம் அருமைக்குழந்தைகளாய் நினைக்கும் அன்னை மனம் வருந்தி நந்தியைத் தண்டிக்கலாமா என ஈசனிடம் கேட்க, தண்டனை இல்லை என்றும் நந்திக்கு கர்வம் அடங்கவே தாம் இவ்வாறு செய்ததாகவும் ஈசன் கூறிவிட்டு, அரிசியை நீரில் நனைத்து வெல்லம் சேர்த்துக் காப்பரிசியாக நந்திக்கு உண்ணக் கொடுக்குமாறும் கூறினார். அவ்வாறே செய்ய நந்திக்குச் சுய நினைவும் மீண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதன் பின்னர் ஈசனின் திருவடியில் விழுந்து தம்மை மன்னிக்கும்படி நந்தி ஈசனை வேண்ட, ஈசனும் அவ்வாறே மன்னித்ததாய்க் கூறிவிட்டு, நந்தியின் இருகொம்புகளுக்கிடையே நின்ற வண்ணம் சூலம், உடுக்கை ஏந்திக் கொண்டு ஒரு ஜாம காலம் நிருத்தியம் செய்தார். அவரின் ஆடலைக் கண்ட தேவர்களும், பிரம்மா, விஷ்ணுவும் மனம் மகிழ்ந்து வாத்தியங்கள் வாசித்து நடனத்துக்கு மெருகூட்டினார்கள். இது மாலை நேரத்தில் நடந்ததால் அந்த நேரத்தைப் பிரதோஷக் காலம் என்பார்கள்.

விஷமுண்ட ஈசனே மயங்கினாற்போல் படுத்துவிட்டதாகவும், அப்படிப் படுத்த நாள் ஏகாதசி எனவும் ஒரு கூற்று உண்டு. ஈசனே படுத்ததைக் கண்ட தேவர்கள் ஊண், உறக்கமின்றித் தாமும் உபவாசம் இருந்து நாள் முழுதும் விழித்திருந்து சிவனைத் துதித்தனர். மறுநாள் துவாதசி அன்றும் பாராயணத்தைத் தொடர, அதன் மறுநாள் திரயோதசி அன்று ஈசன் மனமிரங்கித் திருநடனம் செய்தருளினார். இந்தப் பிரதோஷ காலத்தில் தான் விஷம் துரத்தி தேவர்கள் ஓடி வந்ததைக் குறிக்கும் வண்ணம், சோமசூக்தப் பிரதக்ஷிணம் என்னும் முறையில் பிரதக்ஷிணம் செய்வதுண்டு. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலஹால விஷத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அனைவரும் ஈசனை நாடிக் கைலை நோக்கி ஓட, அங்கேயும் விஷம் அப்பிரதக்ஷிணமாய் வந்து அவர்கள் எதிரே தோன்றி விரட்ட, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓட, விஷம் மீண்டும் எதிரே வந்து விரட்ட, இப்படியே இடம், வலமாக அவர்கள் வலம் வந்த முறையே சோமசூக்தப் பிரதக்ஷிண முறை எனக் கடைப்பிடிக்கப் படுகிறது. முக்கியமாய் பிரதோஷ காலத்தில் செய்யவேண்டிய பிரதக்ஷிண முறை இதுவாகும்.

நந்தியின் இரு கொம்பிற்கிடையே ஈசனை வழிபட்டுவிட்டு அப்பிரதக்ஷிணமாக சண்டேஸ்வரர் வரை சென்று திரும்பிப் பின் மீண்டும் நந்தியைத் தரிசித்துப் பிரதக்ஷிணமாக வரவேண்டும். இந்தப் பிரதக்ஷிணம் கோமுகம் எனப்படும் அபிஷேஹ நீர் வரும் துவாரம் வரையில் தான் செய்யவேண்டும். பின்னர் மீண்டும் திரும்பி வந்து நந்தி தரிசனம், மீண்டும் அப்பிரதக்ஷிணம் சண்டேஸ்வரர் வரை என்று செய்தல் நலம். ஆனால் இப்போதெல்லாம் பிரதோஷம் என்றால் சின்னஞ்சிறிய கோயில்களிலேயே கூடும் கூட்டத்தைப் பார்த்தால் கொஞ்சம் கஷ்டம் தான். மதுரை வெள்ளியம்பலத்தில் சந்த்யாந்ருத்ய மூர்த்தியாக நடராஜரைக் காணலாம். பாண்டியனுக்காகக் கால் மாறி ஆடிய கோலமும் இதுவே. சதாசிவ மூர்த்தியின் உச்சியில் அமைந்துள்ள ஈசான முகத்திலிருந்தே நடராஜ வடிவம் தோன்றியதாய்க் கூறுவார்கள். நடராஜவடிவம் காணக் காணத் திகட்டாத அழகு வாய்ந்த ஒன்றாகும். இவ்வடிவின் வெவ்வேறு கோலங்களே பல்வேறு விதமான நிருத்த மூர்த்திகளாக அமைந்துள்ளன.

Thursday, December 29, 2011

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சண்டேச அனுகிரஹமூர்த்தி!


சோழநாட்டில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள ஊர் திருச்சேய்ஞலூர் ஆகும். சூரனை வதம் செய்யச் சென்ற முருகப் பெருமான் இந்தத்தலத்தில் ஈசனை வணங்கி உருத்திர பாசுபதப் படையைப் பெற்றார். சர்வசங்காரப் படை என்றும் கூறுவர். சேய் வழிபட்ட ஊராகையால் சேய் நல் ஊர் என்பது மருவி திருச்சேய்ஞலூர் என்றாகித் தற்காலத்தில் சேங்கலூர் என வழங்கப் படுகிறது. காவிரியின் கிளைநதியாகிய மண்ணியாற்றங்கரையில் அமைந்துள்ள இந்தத் தலத்திற்கு மண்ணியாறே தீர்த்தமாகவும் அமைந்துள்ளது. இவ்வூரில் யக்ஞதத்தன் என்னும் பெயர் கொண்ட அந்தணன் ஒருவனுக்கும் பத்திரை என்னும் அவன் மனைவிக்கும் ஒரு ஆண்மகவு பிறந்தது. அந்தக் குழந்தைக்கு விசாரசருமன் என்னும் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள். பிறக்கையிலேயே தெளிந்த அறிவோடு பிறந்த அந்தக் குழந்தைக்கு யாரிடமும் பயிலாமலேயே தானே அனைத்தையும் உணரும் அறிவு இருந்தது. வேதங்களை நன்கு உணர்ந்திருந்தான். உரிய வயதிலே தகப்பனால் உபநயனமும் செய்விக்கப்பட்டான்.

வேத ஆகமங்களின் வழி நடந்த அந்த இளைஞன் ஈசன் ஒருவனே நம்மை வழிநடத்த வல்லான் என்ற பேரறிவை மிகச் சிறு வயதிலேயே பெற்றிருந்தான். அன்றாடம் சிவ வழிபாடு செய்து வந்தான். அவனுடைய நண்பன் ஒருவன் பசுக்களை மேய்க்கையில் ஒரு பசு கூட்டத்தை விட்டு விலகிச் சென்றது கண்டு அதை அடித்தான். இதைக் கண்ட விசாரசருமனுக்கு மனம் துடித்தது. வாயில்லாப் பிராணியான பசுவை அடிக்கக் கூடாது என நினைத்துத் தானே அன்று முதல் பசுக்களை மேய்க்கும் பணியை வலிந்து ஏற்றான். பசுக்களை தெய்வமாய்க் கண்டதால் அவற்றைச் சிறப்பான முறையில் பராமரித்து வந்ததோடு, வழிபாடுகளும் செய்து வந்தான். பசுக்களை மேய்க்கையிலேயே நேரத்தை வீணாக்காமல் அந்த மண்ணியாற்றங்கரையிலேயே அங்குள்ள அத்திமரத்தின் கீழே மணலால் சிவலிங்கம் அமைத்து, கருவறை, மண்டபம், சுற்றுச்சுவர்கள், கருவறை விமானம், கோபுரங்கள் போன்றவை அமைத்துக் கோயில் போலக் கட்டி வழிபாடுசெய்தான். பசுக்கள் விசாரசருமனின் பராமரிப்பில் செழித்துக் காணப்பட்டதோடு பாலையும் தாராளமாய்ச் சொரிந்தது.

பசுக்களின் பாலைக் கறந்து தான் கட்டிய மண்ணாலான கோயிலின் வழிபாட்டிற்கும், அபிஷேஹத்துக்கும் அந்தப் பாலைப் பயன்படுத்திக்கொண்டான் விசாரசருமன். நாளாவட்டத்தில் இது அன்றாட நடவடிக்கையானது. பசுக்களின் சொந்தக்காரர் பொறுத்துப் பார்த்தும் முடியாமல் விசாரசருமனின் தந்தையிடம் புகார் செய்தார். அவர் அனைத்தையும் கேட்டுவிட்டுத் தன் மகனைத் தாம் கண்டிப்பதாய்க் கூறினார். அதன் பேரில் மறுநாள் பசுக்களை மேய்ச்சலுக்கு விசாரசருமன் அழைத்துச் சென்றதும் தந்தையார் பின் தொடர்ந்தார். என்ன நடக்கிறது என்று பார்க்கையில் மணலால் கோயில் கட்டி மகன் வழிபாடுகள் செய்வதையும், கறக்கும் பாலெல்லாம் அதற்கே செலவாவதையும் கண்டார். மகனைக் கண்டித்தார். ஆனால் தன் வழிபாட்டில் ஆழமாக ஒருமித்த நினைப்போடு மூழ்கி இருந்த விசார சருமனுக்குத் தந்தையின் குரல் காதில் விழவில்லை. தந்தை அவர் முதுகில் ஓங்கி அடித்தார். அப்போதும் விசாரசருமனின் ஒருமித்த வழிபாடு கலையவில்லை. தந்தையார் கோபத்துடன் பால்குடங்களை எட்டி உதைத்தார். எல்லாப் பாலும் மணலில் கொட்டிக் கவிழ்ந்தது.

திரும்பிப் பார்த்த விசார சருமர் கோபத்துடன் கீழே கிடந்த ஒரு கம்பை எடுத்துத் தந்தையை ஓங்கி அடித்தார். என்ன ஆச்சரியம்! அவர் கையில் எடுத்த கம்பு மழுவாக மாறி விசாரசருமரின் தந்தையாரின் காலை வெட்டிவிட்டது. துடித்துப் போனார்கள் இருவரும். தந்தை அப்போதே இறந்தார் என்றும் கூறுவார்கள். அப்போது அங்கே அன்னையோடு காட்சி கொடுத்த ஐயன் தன் சடாமுடியில் சூடிக்கொண்டிருந்த கொன்றை மாலையை விசாரசருமருக்கு அணிவித்து, தம் அமுதம், மலர்கள், பரிவட்டம் என அனைத்தையும் அவருக்குக் கொடுத்து, “விசாரசருமா! உம் தொண்டை நாம் மெச்சினோம். இன்று முதல் உன் தந்தை நாமே! எம் அடியார்களுக்கெல்லாம் இன்று முதல் நீ தலைவனாக இருப்பாய். எம்மைத் தரிசிக்க எவர் வந்தாலும் உன்னையும் தரிசித்து உன்னிடம் தாங்கள் எம்மைத் தரிசித்ததைச் சொல்லிவிட்டுப் போவார்கள். இன்று முதல் நீ சண்டேசன் என்ற பதவியைப் பெறுவாய்!” எனக் கூறித் தம் திருக்கரங்களால் சண்டேசருக்கு அனுகிரஹம் செய்தார். தம் திருக்கரங்களால் பரிவட்டத்தையும் சூட்டிக் கொன்றை மாலையையும் சூட்டினார்.


படம் நன்றி விஜய்

இவரே சண்டேச அனுகிரஹ மூர்த்தி என்பார்கள். சண்டேசருக்குப் பரிவட்டத்தைச் சூட்டும் கோலத்தில் காணப்படுவார். சேங்கனூர் என்னும் திருச்சேய்ஞலூரில் சண்டேசர் பிறை, சடை, குண்டலம் போன்றவற்றோடு காணப்படுவார் என்கிறார்கள். திருஞானசம்பந்த ஸ்வாமிகளின் திருச்சேய்ஞலூர் தேவாரத்தில் கீழ்க்கண்ட பாடல் ஈசனின் இந்தத் திருவிளையாடலைப் பாடுகிறது

பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே. 521

கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயிலான இது கட்டுமலை மேல் உள்ளது. கர்பகிரஹத்தைச் சுற்றிக் கட்டுமலை மேல் ஒரு பிராகாரமும், கீழே ஒரு பிராஹாரமும் உள்ளன. இறைவன் இஙே சத்யகிரீஸ்வரர் என்ற பெயரோடும், அன்னை சகிதேவியம்மை என்ற பெயரோடும் அருள் பாலிக்கின்றனர். சண்டேசர் அன்று முதல் இறைவனின் மகனாக ஆனதால் இறைவனது நிர்மாலியத் தொட்டிக்கும் சண்டேசரின் கோயிலுக்கும் குறுக்கே எவரும் செல்லமாட்டார்கள். தஞ்சைப் பெரிய கோயில் சண்டேச சிற்பம், கங்கை கொண்ட சோழபுரம் சண்டேச சிற்பம் ஆகியன அவற்றின் எழில் அமைப்பால் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.


என்னோட குறிப்புகள் அனைத்தும் சென்னையில் இருப்பதால் இணையத்தில் இருந்தும், விக்கிபீடியா, சைவம் ஆர்க் தளங்களில் இருந்தும் தகவல்கள் திரட்டி எழுதி உள்ளேன்.

Monday, December 12, 2011

பெரிய பாளையம் பவானி அம்மன் ! வேப்பிலை ஆடை அணியும் பக்தர்கள்!

சென்னையில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பெரியபாளையம். அங்கே உள்ள பவானி அம்மன் கோயில் மிகவும் பிரபலம் ஆனது. அந்த அம்மனுக்குச் சிறப்பு வழிபாடாக வேப்பிலையால் ஆடை அணிந்து கொண்டு நிறைவேற்றுவார்கள். ஆகவே நாங்கள் சுருட்டப்பள்ளி சென்ற போது அங்கேயும் செல்ல நினைத்துச் சென்றோம். நாங்கள் போனபோது சாயங்காலம் தீப ஆராதனை நடந்து கொண்டு இருந்தது. ஆகவே தரிசனத்தை நிறுத்தி வைத்திருந்தார்கள். தர்ம தரிசனம் கூட்டம் ஜாஸ்தி இருந்த காரணத்தால் நாங்கள் 5ரூ டிக்கெட் வாங்கிக் கொண்டோம். அதற்கு மேல் இல்லை. 5ரூக்கும் கூட்டம் தான். சற்று நேரத்திற்கு எல்லாம் திரை விலகித் தீப ஆராதனை நடந்தது. நாங்கள் நின்று இருந்த இடத்தில் இருந்து பார்க்க முடியவில்லை. சற்றுக் கூட்டம் குறைந்ததும் நாங்கள் பார்க்க வழி கிடைத்தது. பூசாரிகள் விரட்டுகிறார்கள். அதற்குள் அம்மனைப் பார்க்க வேண்டும். அம்மன் மார்பளவு தான் இருக்கிறாள். கீழே உற்சவ அம்மனும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவளும் மார்பளவுதான். எனக்குத் தெரிந்து ரேணுகா தேவிதான் மார்பளவு இருப்பாள். பரசுராமரின் தாய். தாயின் தலையைத் தந்தை சொல் கேட்டு வெட்டும் பரசுராமருக்குத் தந்தை வேண்டும் வரம் கேட்கச் சொல்கிறார். அவர் கேட்பது தன் தாய் உயிர் பெற்று எழ வேண்டும் என்ற வரம் தான். அப்படியே ஆகட்டும் என்று அவர் தந்தை கூற பரசு ராமர் அவசரத்தில் வேறு ஒரு பெண்ணின் தலையைப் பொருத்தி விடுகிறார். தலையுடன் உள்ள ரேணுகா தேவியோ அதனுடன் காட்டில் வாழும் வேடர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் உடலில்லாமல் இருக்கும் ஒரு தெய்வப் பெண்ணாக ஏற்றுக் கொண்டு வேண்டிய பணிவிடை செய்ததாகவும் அதுமுதல் ரேணுகா தேவி காவல் தெய்வமாக ஆனதாகவும் கூறுவார்கள். இன்னும் சிலர் வெட்டுப்பட்டுக் கிடந்த தன் தலையைக் கைகளில் தாங்கி ரேணுகா தேவிக் காயங்களுடன் வேட்டுவர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் காப்பாற்றிக் குணப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். பரசுராமர் தன் தாயின் தலையைச் சேர்க்கையில் அவசரத்தில் பொருத்திய பெண்ணின் உடல்தான் மாரியம்மன் எனவும் ஒரு கூற்று உண்டு. அம்மன் கையில் சக்கரமும் உள்ளது; கபாலமும் உள்ளது. அந்தக் கபாலத்தில் முப்பெரும் தேவியர் அடக்கம் எனப் படுகிறது. அம்மன் அவ்வளவு சக்தி வாய்ந்தவள் என்கின்றனர்.


இங்கே கோயில் கொண்டிருப்பது பவானி அம்மனா? ரேணுகா தேவியா?? சந்தேகம் துளைத்தது. ஆகவே கோயில் தல வரலாற்றைக் கேட்டோம். தல வரலாற்றின் மூலம் ரேணுகா தேவியே இங்கே பவானி அம்மன் என்ற பெயரில் வீற்றிருப்பதாய்த் தெரிய வந்தது. தலவரலாறு வருமாறு: ஆந்திராவில் இருந்து குறிப்பிட்ட நாயுடு வம்சத்தினர் வளையல் வியாபாரம் செய்வார்கள். அவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வளையல் மூட்டைகளைத் தூக்கி வந்தும் வியாபாரம் செய்து வந்திருக்கின்றனர். தற்காலங்களில் காண முடியாவிட்டாலும் முப்பது வருடங்கள் முன்னர் வரையிலும் வளையல் செட்டி என்று மதுரைப்பக்கம் எல்லாம் உண்டு. வளையல் செட்டிதான் வளைகாப்பு, கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு வளையல் அடுக்குவார். அவங்க வளையல் அடுக்க வந்ததும், அடுக்கி விட்டு உடனே குங்குமம், மஞ்சள் கொடுப்பார்கள். தாங்கள் வளையல் அடுக்கிய பெண்ணும், அவள் குலமும் சீரோடும், சிறப்போடும் வாழவேண்டி வாழ்த்தி அளிப்பார்கள். அத்தகைய வளையல் செட்டி ஒருவர் சுமார் முந்நூறு ஆண்டுகள் முன்னர் வளையல் விற்கத் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு வியாபாரம் முடித்துக்கொண்டு ஆந்திரா திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆரணி ஆற்றங்கரையில் பெரியபாளையம் பகுதி வந்ததும் மதிய உணவு உண்டதும் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டார்.

பின்னர் எழுந்து அங்கிருந்து கிளம்ப யத்தனித்தபோது அருகிலிருந்த வளையல் மூட்டையைக் காணோம். அதிர்ச்சி அடைந்த அவர் சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கிருந்த ஒரு பெரிய பாம்புப் புற்று அவர் கண்களில் பட்டது. கொஞ்சம் சந்தேகத்தோடு அந்தப் புற்றை எட்டிப் பார்த்தால் வளையல் மூட்டை அதற்குள் கிடந்தது. ஒரு கம்பை எடுத்து அதை எடுக்க முயற்சித்தார். முடியாமல் போகவே அங்கேயே அதை விட்டுவிட்டு ஊர் திரும்பினார். இரவில் அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் அம்மன் தோன்றி, “நான் ரேணுகா தேவி. நீ பார்த்த அந்தப்புற்றில் பவானி அம்மனாக வந்து குடி கொண்டிருக்கிறேன். சுயம்புவாக அங்கே நான் கோயில் கொண்டுள்ளேன். நீ உடனே அங்கே வந்து எனக்குக் கோயில் எழுப்பி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்.” என்றாள். வளையல்காரர் மறுநாளே தன் வளையல் மூட்டை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு புறப்பட்டார். பெரியபாளையம் வந்ததும், புற்றை அதே இடத்தில் கண்டார். ஊர்மக்களிடம் தன் கனவைக் குறித்துக் கூறினார். உடனே அனைவரும் அந்தப்புற்றைத் தோண்ட ஆரம்பித்தனர். ஒரு இடத்தில் புற்றுமண்ணாக இல்லாமல் கல்லில் மோதுவது போல் சப்தம் கேட்டதோடு அல்லாமல் ரத்தமும் பீறிடத் தொடங்கியது. மண்வெட்டியால் தோண்டுவதை நிறுத்திவிட்டுக் கைகளால் பார்த்தபோது சுயம்புவான அம்மன் விக்கிரஹம் அகப்பட்டது. அதன் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டு இருந்தது. செய்வதறியாது மக்கள் திகைக்க வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சள், குங்குமத்தை நீர் விட்டுக் குழைத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து அழுத்த ரத்தம் நின்று போனது. அம்மனை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டது. சுயம்புவான அம்மனுக்கு வெள்ளியில் கவசம் செய்து சார்த்தி இருக்கிறார்கள். அந்தக் கவசத்தின் தலைப்பகுதியை அகற்றிவிட்டுப் பார்த்தால் கடப்பாரையால் போட்ட வெட்டு தெரியும் என்று சொல்கின்றனர்.

ஆக ரேணுகா தேவியே இங்கே பவானி என்ற பெயரில் பவனின் சக்தியாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாள் என்று சொல்கின்றனர். கோயில் பல வருடங்கள் வரையிலும் மூலஸ்தானமும், ஒரே ஒரு மண்டபத்துடனும் தான் இருந்திருக்கிறது. நாளாவட்டத்தில் அம்மனின் சக்தி பரவப் பரவ கோயிலும் வளர்ச்சி அடைந்து இன்று பெரிய அளவில் காணப்படுகிறது. கோயிலின் இருபுறமும் இருக்கும் கடைகளைக் கடந்து உள்ளே நுழைந்தால் விநாயகரை வழிபட்டுப் பின்னால் சென்றால் மாதங்கி அம்மன் தரிசனம் கிடைக்கும். அங்கிருந்து நேரே அம்மன் வீற்றிருக்கும் பிராஹார மண்டபத்தை அடையலாம். அம்மனின் தரிசனம் முடித்ததும், வெளிச்சுற்றில் வைத்திருக்கும் உற்சவரைக் காணலாம். வெளிப் பிரஹாரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், மற்றும் பரசுராமருக்கு ஒரு சந்நிதியும் காணப்படுகிறது. பரசுராமர் இங்கே வந்திருப்பதன் காரணம் இவள் ரேணுகா தேவி என்பதால் இருக்கலாம். நீருக்கான மூர்த்தியாக வழிபடப்படும் பவர் என்ற ஜலமூர்த்தியின் தேவியாகவும் வணங்கப்படுகிறாள். மழை பொழியவும், கோடைக்காலங்களில் காலரா, வைசூரி போன்ற நோய்கள் தாக்காமல் இருக்கவும் அம்மனுக்கு நேர்ந்து கொள்கின்றனர். இங்குள்ள முக்கியமான பிரார்த்தனை வேப்பிலைகளால் செய்யப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்வது தான்.

Sunday, December 11, 2011

ஆகாச மாரியம்மனைத் தெரியுமா?


கும்பகோணத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் வழியில் உள்ள நாச்சியார் கோயிலில் உள்ள ஆகாச மாரியம்மன் கோயில் இது. இங்கே எந்நாளும் இப்படி தீபம் மட்டுமே எரியும் கருவறை இருக்கிறது. இங்கே அம்மனுக்கெனத் தனியாக சுதைச் சிற்பமோ, விக்கிரஹமோ, பஞ்சலோகச் சிலையோ கிடையாது. ஏனெனில் வளையல் வியாபாரியான ஒரு மாரியம்மன் பக்தன் வருடா வருடம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். ஒரு சமயம் அவனால் சமயபுரம் வரை செல்ல முடியவில்லை. மனம் வருந்திய அவன் அம்மனைப் பார்க்க முடியவில்லையே என வருந்த அவனுக்காக ஆகாய மார்க்கமாய் அம்பிகை சமயபுரத்தில் இருந்து கிளம்பி இங்கே வந்து காட்சி கொடுத்ததாயும், அது முதல் அவன் வேண்டுகோளின்படி ஒவ்வொரு வருடமும் சமயபுரத்தில் இருந்து ஆகாய மார்க்கமாய் இங்கே வந்து காட்சி கொடுக்கச் சம்மதித்ததாகவும் கோயிலின் தல வரலாறு கூறுகிறது. இது அறுநூறு ஆண்டுகள் முன்னர் நடந்ததாகவும் சொல்லப் படுகிறது.

இந்நிகழ்வு நடந்தது வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமை என்று சொல்லப் படுகிறது. ஆகவே ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் முதல்வெள்ளிக்கிழமை அம்மன் வருகையை ஒட்டி உற்சவம் ஆரம்பித்துப் பத்து நாட்கள் நடக்கின்றது. ஊரே கூடி நடத்தும் விழா கடைசிநாளன்று அம்மனுக்கு விடையாற்றிக் கண்ணீரோடு வழி அனுப்புவதோடு முடிகின்றது. அம்மனை தர்ப்பையால் ஒவ்வொரு வருடமும் உருவாக்குகின்றனர். பத்து நாட்களும் செப்புக்குடத்தில் கலசம் வைக்கப்பட்டு விழா எடுக்கப்படுகின்றது. கலச நீரும் அம்மனுக்குச் சார்த்தப்படும் எலுமிச்சை மாலையின் எலுமிச்சம்பழமும் பிரசாதமாய் பக்தர்களுக்குத் தரப்படும். தர்ப்பையால் உருவாக்கப்பட்ட அம்மனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காண முடியும்.

ஆதி அந்தமில்லாப் பெரும் ஜோதியான அம்பிகை சிறிய உருவத்துடன் உருவாக்கப்பட்டுக் கடைசியில் பத்தாம் நாளன்று வளர்ந்து இராஜராஜேஸ்வரியாய்க் காட்சி அளிப்பாள். அதன் பின்னர் அம்பாளுக்குப்பிரார்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு பக்தர்களால் காவடிகள் எடுக்கப் பட்டு சமயபுரத்துக்கு அம்பாளை எழுந்தருளச் செய்கின்றனர். நாச்சியார் கோயிலில் வேறு கிராமத் தெய்வங்களோ, காவல் தெய்வங்களோ கிடையாது. இந்தக்கோயில் ஒன்று தான் உள்ளது. இந்த வைகாசி மாதம் திருவிழா சமயம் தவிர மற்ற நாட்களில் இங்கு ஜோதி வடிவில் அம்பாள் காட்சி கொடுத்து அருள் பாலிக்கிறாள். திருவிழா சமயத்தில் ஊருக்குச் சென்றிருந்தேன் என்றாலும் தர்ப்பையால் உருவாக்கப்பட்ட அம்மனின் புனிதத் தன்மை கருதிப் படம் எடுக்க அனுமதி கிட்டவில்லை. இப்போது சமீபத்தில் சென்ற போது ஜோதி வடிவில் காட்சி அளித்த அம்பிகையைப் படம் எடுத்துக் கொண்டேன்.

Wednesday, November 30, 2011

பேச்சியம்மா! பேச்சியம்மா!


பேச்சி அம்மன் வரலாறு ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி சொல்லப்படுகிறது. இங்கே பேச்சி அம்மன் மன்னனையும், ராணியையும் காப்பாற்றிவிடுகிறாள் என்கின்றனர். எங்க ஊர் மாரியம்மன் கோயிலின் நுழை வாசலில் பல வருடங்களாய் மாரியம்மனுக்குத் துணை இருக்கும் பேச்சி அம்மன் இவள். இவளைப் பற்றிய கதை பல விதங்களில் சொல்லப் படுகிறது. அதில் ஒன்று பெரியாச்சியும், பேச்சியும் ஒருவரே என்பது. இதைப் பலரும் நிரூபித்திருக்கின்றனர். முக்கியமாய்த் தஞ்சை மாவட்டத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூரில் குடியேறிய பலருக்கும் பெரியாச்சி என்ற பேச்சியம்மனே குலதெய்வமாக இருந்து வருவதை திரு நா. கணேசன் சுட்டுகிறார்.

அவர் கொடுத்த சுட்டியின்படி வல்லாளன் என்ற பாண்டிய அரசன் கொடுங்கோலனாக இருந்ததாயும், அவன் மனைவி கர்ப்பவதியாய் இருந்த சமயம், அந்தக் குழந்தை பிறந்தால் கொடுங்கோலனின் குழந்தையும் தன் கொடூரத்தால் இவ்வுலகையே அழிக்கும் என மக்கள் பயந்ததாகவும் கூறப் பட்டுள்ளது. ராணிக்குப் பிரசவ வலி எடுக்க, தக்க மருத்துவம் செய்யவேண்டி அரசன் மருத்துவச்சியின் உதவியை நாடுகிறான். மன்னன் தன் வீரர்களை அனுப்புகின்றான் மருத்துவச்சியைக் கூட்டி வரச் சொல்லி. ஆனால் எல்லாருமே பயப்படுகின்றனர் என்பதோடு வரவும் மறுக்கின்றனர். கோபம் கொண்ட மன்னன் தானே தக்க மருத்துவச்சியை அழைத்துவரச் செல்லுகையில் அவன் எதிரே கடுமையான முகத்தோற்றத்தோடு கூடிய ஓரு பெண்மணி தென்பட்டாள். அவள் தன் பெயரைப் பெரியாச்சி என்று கூறினாள். மன்னன் தேடும் மருத்துவச்சி அவள் தான் என்றாள். ஆனால் உண்மையில் அவள் அசுரர்களுக்கும், துர்தேவதைகளுக்குமான தலைமைக் கடவுள். ஆனால் மன்னனுக்கு இந்த உண்மை தெரியாது. பிரம்மா அசுரர்களையும், தேவர்களையும், மனிதர்களையும் படைத்தபோது தேவர்களும், மனிதர்களும் ஒரே கடவுளரை வணங்கி வர, அசுரர்களும், துர் தேவதைகளும் தங்களுக்கெனத் தனியான கடவுளை வணங்கினார்கள். அத்தகையதொரு பெண் தேவதையே பெரியாச்சி அம்மன் ஆவாள். இதை அறியாத மன்னனும் தன் மனைவியின் பிரசவத்திற்காக அவளை அரண்மனைக்கு அழைத்து வருகிறான்.

பிரசவம் நல்லபடியாக நடக்கிறது. ராணியின் வேதனையைப் பெருமளவு குறைக்கிறாள் பெரியாச்சி. அதோடு குழந்தையைப் பூமியில் பிறக்கும்படியாகவும் விடவில்லை அவள். அதற்குப் பதிலாகக் குழந்தையைத் தன் கரங்களில் ஏந்துகிறாள். பிரசவம் ஆனதும் மன்னனிடம் பிரசவம் பார்த்ததற்குத் தனக்குப் பரிசுகள் தருமாறு கேட்கிறாள் பெரியாச்சி. ஆனால் மன்னனோ, ஒரு சாதாரண மருத்துவச்சியான அவள் ஒரு பேரரசனிடம் பணமும், பரிசும் கேட்டதற்குப் பெரியாச்சியை இகழ்ந்து பேசுகிறான். தர மறுக்கிறான். வைத்தியத்திற்கான செலவையும் கொடுக்க மறுக்கிறான். பெரியாச்சியைத் தன்னுடைய அடிமை என்றும், தான் சொல்வதைக் கேட்டு நடப்பது அவள் கடமை என்றும் உறுதியாகக் கூறுகிறான். கோபம் கொண்ட பெரியாச்சி தன் சுய உருவைக் காட்டுகிறாள். எண்ணற்ற கரங்களோடும், நீண்ட நாக்குடனும், பயங்கரத் தோற்றத்தோடு காட்சி அளித்த பெரியாச்சி மன்னனைக் கீழே தள்ளி அவனைத் தன் கால்களால் மிதித்துக்கொண்டு ராணியைத் தூக்கித் தன் மடியில் போட்டுக்கொண்டு அவள் குடல்களைத் தன் கரங்களால் வெளியே எடுக்கிறாள்.

குடலைத் தன் கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொள்கிறாள். அதைக் கண்ட மன்னன் தன் அன்பு மனைவி பெரியாச்சியின் கரங்களில் சின்னாபின்னமானதைக் கண்டு வருந்துகிறான். ஆனால் பெரியாச்சியோ மன்னனையும் கொன்று விடுகிறாள். அவன் குழந்தையும் இந்த பூமியில் காலை வைக்கா வண்ணம் தன் கரங்களிலேயே ஏந்திக்கொண்டு தடுத்துவிடுகிறாள். கொடுங்கோல் ஆட்சி புரிந்த மன்னனுக்கும், அவனுக்குப் பல விதங்களிலும் துணை போன அவன் மனைவிக்கும், பிறக்கையிலேயே அசுரனாகப் பிறக்கவிருந்த அவன் குழந்தைக்கும் இவ்விதம் பெரியாச்சியின் மூலம் முடிவு கிடைக்க, மக்களுக்கு நன்மை விளைகிறது. இந்தப் பெரியாச்சி வேறு யாரும் இல்லை என்றும் மஹாகாளியின் இன்னொரு அவதாரமே என்றும் கூறுகின்றனர். ஏனெனில் அசுரர்களின் தேவதை என்று கூறப்பட்ட இவள் நாட்டு மக்களுக்காக வேண்டி நன்மையை விளைவித்ததாலும், தன்னுடைய சக்தியை ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்தியதாலும், இவள் அனைவராலும் அன்றிலிருந்து குலதெய்வமாக வணங்கப்பட்டாள் என்றும், குழந்தைப் பேறு அடையவும், குழந்தைப் பேறு அடைந்தவர்களின் குழந்தையைக் காக்கவும், சுகப் பிரசவம் நடக்கவும் இவளைப் பிரார்த்தித்துக்கொள்வது மக்களின் வழக்கமாயிற்று என்கின்றனர்.

ஆனால் தஞ்சையில், கும்பகோணத்தில் வழங்கும் கதை சற்றே மாறுபட்டது. அதை நாளைக் கேட்போம்.

காப்புரிமை: ரமேஷ்குமார்

படத்தில் காணப்படுவது எங்கள் குலதெய்வமான மாரியம்மன் கோயிலில் மாரியம்மனுக்குத் துணையாக வீற்றிருக்கும் பேச்சி அம்மன் சிலை.

Wednesday, November 16, 2011

மாரியம்மா, மாரியம்மா!


மேலே காண்பது எங்கள் பூர்வீக ஊரான பரவாக்கரையில் உள்ள எங்கள் குலதெய்வமான மாரியம்மன். இவளுக்குத் துணையாகப் பேச்சியம்மன் இருக்கிறாள். அவளைப் பற்றிப் பின்னால் பார்க்கலாம்.


மஹாமாரியம்மனைப் பற்றி இப்போது பார்க்கலாமா?? கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன்
கோயிலில் அம்மன் வரலாற்றைப் பற்றிக் கேட்டேன். யாருக்கும் சரியாய்த்
தெரியவில்லை. படங்கள் எடுக்கவும் அநுமதி கொடுக்கவில்லை. திருவிழா வேறு நடந்து
கொண்டிருந்தது. அங்கே தான் பச்சைக்காளி, பவளக்காளியாக படைவெட்டி மாரியம்மனின்
தோழிகளாக இருவரும் வீற்றிருக்கின்றனர். பச்சைக்காளிக்கும், பவளக்காளிக்கும்
காளியாட்டத்தின் போது போட்டியும் வருமாம். கூட்டம் தாங்காது என்றார்கள். அங்கே
தெரிந்தவர்கள் எவரும் இல்லை. மேலும் மறுநாள் எங்க ஊர்க் கோயிலில்
கும்பாபிஷேஹத்தின் யாகம் ஆரம்பம். ஆகவே அதற்குப்போயாக வேண்டும். மாரியம்மன்
வரலாற்றைத் தேட ஆரம்பித்தேன். கடைசியில் இரு விதங்களில் கிடைத்தன.


ஒன்று மஹாமாறன் என்னும் அசுரன் தான் பெற்ற தவங்களால் உலகத்து மக்களை எல்லாம்
பல வகையிலும் துன்புறுத்தி வந்தான். பல்வேறு விதமான நோய்களையும்
உண்டாக்கினான். அதில் ஒன்றே வைசூரி என்னும் அம்மை நோய். இந்த நோய் வந்தவர்களை
எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியவில்லை. உடல் முழுதும் கொப்புளங்கள்
உண்டாகிக் கண்பார்வையும் மறைக்கப் பட்டுத் துடிதுடித்த மக்களைக் காக்கவேண்டி
அம்பிகை தன்னிலிருந்து உருவாக்கியவளே மஹாமாரி ஆவாள். இந்த மஹாமாரி
அவதரித்ததுமே மஹாமாறனைக் கொன்றாள். அவனால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை
எல்லாம் தன்னருகில் அம்பிகை அனுப்பி வைத்த கண்டா கர்ணன் என்னும் தேவதையின்
உதவியோடு தீர்த்து வைத்தாள். அன்று முதல் மக்களின் ஆரோக்கியத்திற்கு அன்னையாக
விளங்கி வருகிறாள்.


இன்னொரு விதத்தில் கூறுவது என்ன வெனில் தேவாசுர யுத்தத்தில் ஜெயித்த
தேவர்களைப் பழிவாங்க எண்ணிய அசுரர்கள் குல குருவான சுக்கிராசாரியார் மூலம்
அவர்கள் உடலில் அம்மைக் கொப்புளங்களை உருவாக்கினார்கள். தாங்க முடியாத
வலியாலும், துன்பத்தாலும் துடித்த தேவர்கள் ஈசனை நாடி அவன் பாதங்களைப் பணிந்து
வேண்ட, ஈசன் தன் ஜடாமுடியிலிருந்து அன்னை மாரியைத் தோற்றுவித்தார். தலையின்
கங்கை இருக்கும் இடத்திலிருந்து தோன்றிய இவளை சீதளா என அழைத்தனர். அல்லல்
பட்டுத் துன்புற்ற மக்களைத் தன் தண்மையான பார்வையாலும், கருணையாலும் காப்பாற்றி
நோயை நீக்கிப் பூரண ஆரோக்கியத்தை அளித்தாள் மஹாமாரி. உடனே தேவர்கள் அனைவரும் தங்களைக் கடுந்துயரிலிருந்து காத்த அன்னை இதே கோலத்தில் அனைத்து எல்லைகளிலும் குடி கொண்டு மக்களைக் கொடும் நோயிலிருந்து காத்தருள வேண்டும் என வேண்ட அவ்விதமே ஆகட்டும் என ஆசியளித்த அன்னை அவ்விதமே இன்றளவும் காத்து வருகிறாள்.


மூன்று கண்களுடனும், நான்கு கைகளுடனும், தீ ஜ்வாலை போல் மேல் நோக்கிய
கூந்தலுடனும், காட்சி அளிக்கும் அன்னை, கறுப்பு ஆடையில் தோளில் கால சர்ப்பங்களை
ஆபரணமாகப் பூண்டு, வலக்காதில் ஸ்ரீசக்ர வடிவான தாடங்கமும், இடக்காதில் தோடும்
அணிந்து திருமேனியிலும் ஆபரணங்களைத் தரித்துக்கொண்டு, ஒரு காலை
மடித்துக்கொண்டும், மறுகாலைத் தொங்க விட்டுக்கொண்டும், வட்ட வடிவான ஜோதியின்
நடுவே தோன்றினாள். இந்தக் கோலத்திலேயே இவள் எல்லாக் கோயில்களிலும் பிரதிஷ்டை
செய்யப் படுகிறாள்.