எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, April 28, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கமாநகருள்!

டில்லிப் பரிவாரங்களின் அட்டகாசம் அதிகமாகிக் கொண்டு வரவே வேதாந்த தேசிகர் அங்கே கிடந்த உடல்களுக்கு அடியில் தாமும் படுத்துக் கொண்டு அந்தக் குழந்தைகளையும் படுக்க வைத்து சப்தம் போடாமல் இருக்கச் சொன்னார். வீரர்களுடன் உல்லூக்கானும் ஆவேசத்துடன் வந்து கொண்டிருந்தான். கண்ணில் பட்ட ஶ்ரீரங்கத்து மனிதர்கள் எல்லாம் அவன் வீரர்களால் கொல்லப்பட்டும், அவன் திருப்தி அடைந்ததாய்த் தெரியவில்லை. கோயில் சிற்பங்களை  உடைக்கவும், பிராகாரங்களின் தளங்களைத் தோண்டிப் பார்க்கவும் கட்டளை இட்டான். பதுங்கி இருப்பவர்களை எல்லாம் வெட்டிச் சாய்க்க உத்தரவிட்டான். கோயிலின் அனைத்துப் பொன்னும், மணியும், ரத்தினங்களும் மற்றப் பொருட்களும் உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் பேராசை அவனுக்கு.

அப்போது கோயீலின் அடியார் கூட்டத்தில் ஒரு கூட்டமாக இருந்து வந்த நாட்டியம் ஆடும் காரிகைகள் இவர்களை எப்படியேனும் திசை திருப்ப வேண்டும் என்னும் எண்ணத்தோடு தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு ஆடல், பாடல்கள் எனப் பல்வேறு விதமான காரியங்களைச் செய்து கொண்டு அங்கே கூட்டமாக வந்தனர். அவர்கள் முகத்தின் காந்தியும், அவர்கள் வரும்போது முன்னே எழுந்த சந்தன மணமும், ஆடை , ஆபரணங்களின் நேர்த்தியும், பாடல்களுக்கும், தாளங்களுக்கும் ஏற்ப அனைவரும் தாமரை போன்ற தங்கள் பாதங்களைத் தரையில் வைத்துக் கைகளால் அபிநயம் பிடித்தவாறு வந்த நேர்த்தியும் அனைவர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது அவர்களின் வளையல்களிலிருந்து எழுந்த கிண்கிணிச் சப்தமும், காலின் சலங்கைகள் எழுப்பிய கலீர் கலீர் என்னும் ஒலியும் அந்தப் பிராந்தியத்தில் அதுவரை நிலவியிருந்த பேரமைதியைக் கலைத்தது.

அவர்களில் எவரும் இந்த முகமதியப் படைவீரர்களைக் கண்டு பயந்ததாகத் தெரியவில்லை மாறாக உல்லூக்கானுக்கு நேர் எதிரே அனைவரும் நின்று கொண்டு பாடல்கள் பாடுவோர் தேனினும் இனிய குரலில் பாடல்களைப் பாட ஆடத் தெரிந்தவர்கள் மிகவும் தைரியமாக ஆடவும் தொடங்கினார்கள். எப்படியேனும் இவர்களை மயக்கியே ஆகவேண்டும் என்னும் எண்ணத்தோடு ஒரு நாட்டிய நங்கை உல்லூக்கானைப் பார்த்துச் சிரித்த வண்ணம் தன் கைகளை நீட்டி அழைக்க உல்லூக்கானோ அந்தக் கரங்களை வெட்டும் நோக்கோடு வாளைப் பாய்ச்சினான். ஆனால் அந்தப் பெண் நல்லவேளையாக நகர்ந்து விட்டாள். இல்லை எனில் அவள் கரங்கள்  துண்டாடப்பட்டிருக்கும். என்றாலும் வாளின் நுனி பட்டு ஒரு கரத்தில் ஆழமான காயமும், வலியும் ஏற்பட்டு விட்டது அந்தப் பெண்ணுக்கு.  ரத்தம் கொட்டத் தொடங்கியது.

ஆனாலும் பாடுபவர்கள் பாடலை நிறுத்தவில்லை. ஆடிக் கொண்டிருந்த மற்றவர்களும் ஆட்டத்தை நிறுத்தவில்லை. வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங்களை துரித கதியில் வாசிக்கத் தொடங்க ஆடுபவர்களும் அந்த வேகத்துக்கு ஏற்ப ஆடத் தொடங்க. ரத்தம் கொட்டும் கையுடன்  அந்தப் பெண்ணும் ஆடத் தொடங்கினாள்.  அதைப் பார்த்த உல்லூக்கான் கோபத்துடன் ஆட்டத்தை நிறுத்தச் சொல்லிக் கட்டளை இட்டான். ஆட்டமும் நிற்க, காயம்பட்ட பெண்ணை மட்டும் உல்லூக்கான் தனியாக அழைத்தான். அந்தப் பெண் சிறிதும் கலங்காமல் உல்லூக்கானை நோக்கி வந்தாள். அருகில் வந்த அந்தப் பெண்ணை உல்லூக்கான் கடுமையாகக் கடிந்து கொள்ள, அதை ஹொய்சள வீரன் ஒருவன் அவளுக்கு மொழி பெயர்த்துச் சொன்னான். ஆனால் அந்தப் பெண் சிறிதும் கலங்காமல் உல்லூக்கானைப் புகழ்மாரி பொழிந்து பேசினாள்.


தகவல் உதவி: திருவரங்கன் உலா, ஶ்ரீவேணுகோபாலன், மற்றும் ஶ்ரீரங்க பங்கஜம்.

Sunday, April 26, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனின் பயணம்!

இங்கே வடக்கு வாயிலில் இறந்தவர்களில் அவர்களை வழி நடத்திய பஞ்சு கொண்டான் என்பவரைப் பாராட்டும் விதமாகப் பின்னாட்களில் கோயில் திறந்து வழிபாடுகள் நடைமுறைக்கு வந்ததும், பஞ்சுகொண்டான் என்பவரின் பெயரை அருளிப்பாடி மரியாதை செலுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது. அது நாளடைவில் மறைந்ததாய்த் தெரிய வருகிறது. வடக்கு வாயில் விழுந்து சுல்தானின் வீரர்கள் கோயிலுக்குள்ளே எளிதாக நுழையவும் விரைவில் அரங்க நகர்க் கோட்டை விழுந்தது. பிராகாரங்கள் அல்லோலகல்லோலப் பட, பரிசனங்கள் அங்குமிங்கும் செய்வதறியாது ஓட, கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டி வீழ்த்தினார்கள் சுல்தானின் வீரர்கள். பிரகாரங்கள் அனைத்தும் உடல்களால் மூடப்பட்டுக் கிடந்ததைப் பார்க்கையில் அரங்கனைக் காக்கும் பணியில் எத்தனை எத்தனை இன்னுயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பது புரிந்திருக்கும்.  இந்தக் குழுவில் தான் ஶ்ரீமத் வேதாந்த தேசிகப் பெருமானும் இருந்தார். அவரும் சுல்தான்களின் வீரர்களிடமிருந்து தப்பிக்க அங்குமிங்கும் ஓடினார்.

வேதாந்த தேசிகர் க்கான பட முடிவு


படத்துக்கு நன்றி தினமலர் கூகிள் வாயிலாக

கொத்துக் கொத்தாக உடல்களையும், தலைகளையும் பார்த்த தேசிகர் செய்வதறியாது மயங்கினார். அப்போது அங்கே சுதர்சன ஆசிரியர் என்பார் மார்பில் காயத்துடன் விழுந்து கிடந்தார். இவர் நடாதூர் அம்மாள் என்பவரின் சீடர். இந்த நடாதூர் அம்மாள் அரங்கனுக்கு வேண்டியவற்றை எல்லாம் ஒரு தாயின் பரிவோடு செய்வாராம். அரங்கனுக்கு நிவேதனமாக வேண்டிய பாலில் கூட சூடு அதிகம் இல்லாமல் விரல் பொறுக்கும் சூடு இருக்கும்படி பார்த்துக் கொண்டு வாயால் ஊதி ஊதிக் கொடுப்பாராம்.  ஆகையால் அவருக்கு நடாதூர் அம்மாள் என்னும் பெயர் ஏற்பட்டது. அத்தகையவரின் சீடரான சுதர்சன ஆசிரியர் தான் அப்போது இறக்கும் தருவாயில் இருந்தார். தன்னிரு மகன்களையும் சுல்தானின் வீரர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டி அங்கிருந்த ஒரு தூணுக்கு அப்பால் உள்ள படிக்கட்டில் கல்லோடு கல்லாகப் படுக்க வைத்திருந்தார்.

இப்போது வேதாந்த தேசிகரைக் கண்டதும் கண்களில் ஒளி பெற்றவராகத் தன் மகன்கள் இருவரையும் அழைத்தார். தம் மகன்கள் கைகளைப் பிடித்து தேசிகர் கைகளில் ஒப்படைத்தார். கூடவே தனக்கு அடியில் ஒளித்து வைத்துக் கொண்டிருந்த ஒரு ஓலைச்சுவடிக்கட்டை எடுத்துத் தம் இரு கரங்களாலும் அதை தேசிகரிடம் கொடுத்து, "ஐயா, உம்மைக் கண்டது அரங்கனையே கண்டது போல் இருக்கிறது. நான் பெற்ற செல்வங்கள் மூன்று. மூன்றையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். இதோ என் மகன்கள் இருவர் மற்றும் நடாதூர் அம்மாள் பக்கத்திலே இருந்து உபந்நியாசம் கேட்டுக் கேட்டு மனதில் தரித்துக் கொண்டு எழுத்தில் வடித்த சுருதப் பிரகாசிகை என்னும் நூல். இதனைப் பின் வரும் சந்ததிகள் படித்து உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் விருப்பம் எனக்கு இருக்கிறது. ஆகவே இதையும் தாங்கள் காப்பாற்றி வைத்துப் பின் வரும் சந்ததிகளுக்குக் கொடுக்க வேண்டும்." என்று சொல்லிச் சுவடிக்கட்டையும் தேசிகர் கரங்களில் ஒப்படைத்தார்.  தன் இரு குமாரர்களையும் தேசிகர் சொல்படி நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவ்வளவில் அவர் உயிர் பிரிந்தது. அப்போது அங்கே முகலாய வீரர்களின் ஆவேச முழக்கம் கேட்கவே தேசிகர் செய்வதறியாது திகைத்தார்.

பி.கு. இந்த சுருதப் பிரகாசிகை, ஶ்ரீமத் ராமானுஜர் அருளிச் செய்த ஶ்ரீ பாஷ்யத்தின் விளக்கவுரை எனவும் இன்றளவும் அது கிடைத்து வருவதாகவும் தெரிய வருகிறது.  மேற்படி சுருதப் பிரகாசிகை அந்நியர் கைகளில் சிக்காமல் காப்பாற்றப்பட்டதே இன்றளவும் அது கிடைப்பதன் காரணம் ஆகும். ஶ்ரீபாஷ்யம் என்பது பிரம்ம சூத்திரத்துக்கு ஶ்ரீமத் ராமானுஜர் எழுதிய  வடமொழி விளக்கவுரை. இந்த ஶ்ரீ பாஷ்யத்துக்கே விளக்கவுரையாக அமைந்தது தான் சுருதப் பிரகாசிகை(கேட்டபடியே எழுதப்பட்டது என்கிறார்கள் இதை.)

Friday, April 24, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனின் பயணம் தொடர்கிறது!

முன் கதை
ஆர்யபடாள் வாசல் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

 யானைகளின் ஆவேசத்திற்கு இலக்கானது வாயிற்கதவுகள். அரங்க வாசிகளில் டெல்லியிலிருந்து வந்திருக்கும் இத்தனை வீரர்களையும் எதிர்க்கும் அளவுக்குக் கட்டுக்கோப்பான படையோ, படை வீரர்களோ, படைத் தலைமையோ இல்லை. கதவு பிளந்து உள்நோக்கிச் சாய, அனைவரும் ரங்கா, ரங்கா, எனக் கூக்குரல் இட்டனர். ஆர்ய படாள் வடக்கு வாயில் கதவுகள் பிளக்கப்பட்டன. டெல்லி சுல்தான் படைகள் வெற்றி முழக்கம் இட்டனர். கோபுர நிலையில் இருந்தவர் வீரரே ஆனாலும் முறையான பயிற்சி இல்லாதவர். அவரும் அவருடன் மேலும் இரு வீரர்களும் தீரத்துடன் போராடினார்கள்.  வைக்கோலில் தீமுட்டிக் கதவின் மேல் போட்டு சுல்தான் படைகளுக்கும் தங்களுக்கும் இடையில் தீயினால் ஆன சுவர் ஒன்றை எழுப்பினார்கள்.

ஆர்யபடாள் வாயில் கதவு விழுந்தாலும் உள்ளே இருந்த கல்சுவர் நின்று கொண்டு இருந்தது. கோபுர வாயிலில் தீ வானுயரக் கொழுந்து விட்டு எரிய அந்தக் கல்சுவர் மேலே இருந்த பரண் ஒன்றின் மீது ஏறி மறாஇந்த வண்ணம் தாக்குதலைத் தொடர்ந்தனர் அரங்கத்து வீரர்கள். தீயின் வெம்மையினால் கோபுரமும், அதில் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்களும் கருமை அடைந்தன. வெம்மை தாங்க முடியாமல் சுல்தானின் படைகளும் கொஞ்சம் தாமதமாய் அங்கே நெருங்க நேர்ந்தது. தாமதம் கண்டு கோபம் வந்த உல்லூக்கான் தானே நேரில் அங்கே வந்தான்.  பல்லக்கில் வந்த உல்லூக்கான் அகளங்க வீதியில் இறங்கிக் கொண்டான். அவனுடன் வந்திருந்த மெய்க்காவல் படையினர் சூழ்ந்து கொள்ள போர் புரிந்து கொண்டிருந்த உப தளபதிகள் என்னவோ, ஏதோ என பயந்து கொண்டு ஓடோடி வந்தனர்.

அவர்களைப் பார்த்து உல்லூக்கான் கோபத்துடன் பிதாரையும் வாரங்கல்லையும் ப்டித்து வந்த வீராதி வீரர்களான உங்களுக்கு இந்த அற்பக் கோயிலைப் பிடிக்க முடியவில்லையா, வெட்கம், வெட்கம்! என்று கத்தினான். உப தளபதிகள் அதற்குப் போர்முறையில் மட்டும் மாறுதல் இல்லாமல் கோட்டை அமைப்பு முறையும் மாறி இருப்பதாயும் குறுகலான இடத்தில் போர் புரிய வேண்டி இருப்பதால் சிரமம் ஏற்படுவதாகவும் சொல்ல உல்லூக்கான் கோபம் அதிகம் ஆகிறது. உல்லூக்கான் அடைந்த கோபத்தால் அந்தப் பிரதேசமே நடுங்கியது.  பின்னர் உல்லூக்கான் டெல்லியின் சுல்தானிடமிருந்து தனக்குக் கடிதம் வந்திருப்பதாயும் கிளம்பி ஒரு வருஷம் ஆகியும் இன்னமுமா மாபாரைப் பிடிக்க முடியவில்லை உன்னால் என்று கேட்பதாகவும், தனக்கு அவமானமாக இருப்பதாகவும் சொல்கிறான். நடுப்பகலுக்குள் இந்த ஊரைப் பிடித்தாக வேண்டும் என்று திட்டவட்டமாகக் கட்டளை இட்டான்.

கோயில் வாசலில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைக் கூடை கூடையாக மணலைப் போட்டு அணைத்துவிட்டு சுல்தானின் வீரர்கள் அனைவரும் உள்ளே புகுந்து விட்டனர். கல்சுவரை உக்கிரத்துடன் தாக்க அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக அசைந்து கொடுக்க ஆரம்பித்து விட்டது.  லேசாகத் தெரிய ஆரம்பித்த இடைவெளியில்  பத்து வீரர்கள் யார் சொல்வதையும் மதிக்காமல் உள்ளே புகுந்தனர். உள்ளே புகுந்தவர்கள் அங்கே பரணில் ஒளிந்து கொண்டிருந்த வீரர்களைத் தாக்கிக் கொன்றனர். கோபுரத்தின் இடிபாடுகளுக்கும் இடிந்து விழ ஆரம்பித்திருந்த சுவரின் இடிபாடுகளுக்கும் இடையில் அவ்வீரர்களின் உயிரற்ற உடல்கள்  கிடந்தன. அதில் ஒருவர் இறக்கும்போதும், ரங்கா, ரங்கா, ரங்கா, உன்னைக் காப்பாற்ற வேண்டும். அரங்கனைக் காப்பாற்றுங்கள்! எனப் புலம்பிக் கொண்டே உயிரை விட்டார்.

Monday, April 06, 2015

(அழகிய மணவாளப் பெருமாள், அழகிய மணவாளம் ஊருக்கு வந்த கதை! ) ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!












உல்லுக்கான் படையெடுப்பின் போது ஶ்ரீரங்கத்தில் இருந்த மூலவரை கல் சுவர் ஒன்றைக் கட்டி மறைத்துவிட்டு உற்சவர் அழகிய மணவாளப் பெருமாளை உபய நாச்சியார்கள் சகிதம் ஊரை விட்டு வெளியே தென்னாட்டை நோக்கி எடுத்துச் சென்றனர். பிள்ளை லோகாரியருடன் கிளம்பிய அழகிய மணவாளர் அங்கிருந்து மதுரை ஆனைமலை யோகநரசிம்மர் கோயிலுக்கு அருகிலுள்ள ஜ்யோதிஷ்குடி குகையில் சில காலம் தங்கினார். பின்னர் திருமாலிருஞ்சோலையில் கிணற்றில் ஒளித்து வைக்கப்பட்டார். அதன் பின்னர்  பழனி, பாலக்காடு, கோழிக்கோடு என்னும் திருக்கண்ணனூரில் நம்மாழ்வாரோடு சில காலம் தங்கி விட்டு அங்கிருந்தும் கிளம்பி  முந்திரிக்காடு, திருக்கணாம்பி, திருநாராயணபுரம், திருமலைக்காடுகள் வழியாக திருமலை  திருக்கோயிலைச் சென்றடைந்தார். திருமலையிலேயே பல்லாண்டுகள் தங்கி இருந்து தம் அடியார்களில் ஒருவரால் விடாமல் வழிபாடுகள் கண்டருளிய அழகிய மணவாளரை செஞ்சியை ஆண்ட கோபண்ண ஆரியன் என்பான் செஞ்சிக்கு எடுத்துச் சென்றான்.

அப்போது விஜயநகர மன்னனான  வீர கம்பண்ண உடையாருக்குச் செய்தி தெரிய வந்து மீண்டும் அரங்கனை  திருவரங்கத்திலேயே கொண்டு சேர்க்கும் எண்ணத்தோடு மறுபடியும் தன் பிரயாணத்தைத் தொடர்ந்தான் அழகிய மணவாளன். அந்த ஶ்ரீராமன் பூஜித்த விக்ரஹம் என்பதாலோ என்னவோ அவன் காடு, மேடெல்லாம் சுற்றி அலைந்தாற்போல் இக்ஷ்வாகு குலதனமான இந்த அரங்கனும் காடு, மேடெல்லாம் சுற்றித் திரிந்தான்.  அரங்கம் வரும் வழியில் அப்போது கண்ணனூர் என அழைக்கப்ப்ட்ட சமயபுரத்தில் கடும்போர் நிகழ்ந்தது.  அப்போது அழகிய மணவாளப் பெருமாள் கோபுரப்பட்டி என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமத்தில் அங்கிருந்த ஆதிநாயகப் பெருமாள் கோயிலில் எழுந்தருளி இருந்தார். அதன் பின்னர் முகமதியர்களை வென்ற பின்னர் பரிதாபி வருடம் வைகாசி மாதம் 17 ஆம் நாள் ( கி.பி.1371 ஆம் வருடம்) அழகிய மணவாளம் கிராமத்திலிருந்து கிளம்பி உபய நாச்சியார்களுடன், ஶ்ரீரங்கம் திருக்கோயிலில் மூன்றாம் திருச்சுற்றில் பவித்ரோத்ஸவ மண்டபம் என்னும் சேரனை வென்றான் மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணினார்கள்.

அழகிய மணவாளர் ஶ்ரீரங்கத்தை விட்டுக் கிளம்பியதும் ஶ்ரீரங்கம் கோயிலில் வழிபாடுகள் நின்றுபோய்க் கருவறை திறக்கப்படாமல் சுமார் 60 ஆண்டுகள் இருந்ததாகத் தெரிகிறது.  ஆனால் கோயிலொழுகின்படி இது சுமார் 48 ஆண்டுகள் எனத் தெரிய வருகிறது.  இடைப்பட்ட காலத்தில் வழிபாட்டு முறைகள் மாற்றப்பட்டதோடு அல்லாமல், புதிதாக ஒரு அரங்கனையும் செய்வித்து அவரையும் எழுந்தருளப் பண்ணி இருந்தார்கள்.  ஏற்கெனவே இருந்த அழகிய மணவாளர் ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்ததும், ஒரு சில ஶ்ரீரங்கவாசிகளால் புதிய அரங்கனை விட்டு விட்டு இந்தப் பழைய அரங்கனை ஏற்கும் மனம் வரவில்லை.  அவர்கள் எங்களுக்கு இந்தப் புதிய ரங்கன் பழகி விட்டார்.  இவரே இருக்கட்டும் என்றனர்.  ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டுப் பல உயிர்த்தியாகங்கள் செய்து கொண்டு வரப்பட்ட அரங்கனைத் திருக்கோயிலில் சேர்க்கும் எண்ணமே முதியவர்கள் பலருக்கும் இருந்தது.

ஆகவே அவர்கள் எல்லோரும் சேர்ந்து இவர் தான் பழைய அரங்கர் என்பதை வயது முதிர்ந்தவர்களாலேயே, அதுவும் இவர் எடுத்துச் செல்லப்பட்ட சமயம் இவரை அருகில் இருந்து நெருங்கிப் பார்த்தவர்களாலேயே கண்டுபிடிக்க முடியும் என முடிவு கட்டி அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்கள், பழைய அரங்கனைப் பார்த்தவர்கள் முன் வந்து இரண்டு அரங்கனின் யார் கோயிலில் இருக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஶ்ரீராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதுக்கு ஒப்பாக இதை ஶ்ரீரங்க வாசிகள் பேசுகின்றனர்.

இந்தச் செய்தியை நகரெங்கும் முரசறைந்து தெரிவித்தும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரும் அகப்படவில்லை. கடைசியில் 90 வயது நிரம்பிய ஒரு வண்ணார் அகப்பட்டார். அவருக்கும் கண் பார்வை இல்லாமையால் அரங்கனைப் பார்க்க முடியவில்லை.  அனைவரும் திகைக்கையில் அந்த வண்ணாரே ஒரு முடிவைச் சொன்னார்.  அது தான் இரண்டு அரங்கர்களுக்கும் திருமஞ்சனம் செய்வித்து அந்த ஈர வஸ்திரத்தை அந்த வண்ணாரிடம் கொடுத்தால் அதைப் பிழிந்து கிடைக்கும் அபிஷேக நீரை உட்கொண்டால் பழைய அரங்கனின் பரிமள கஸ்தூரி வாசனையை வைத்துத் தான் கண்டு பிடிக்க முடியும் என்று சொல்கிறார். அப்படியே செய்யப்பட்டது. வண்ணாரும் அழகிய மணவாளத்திலிருந்து வந்த பழைய அழகிய மணவாளரையே நம்பெருமாள் என அடையாளம் காட்டுகிறார். அப்போது தொடங்கி இன்று வரை அழகிய மணவாளர் "நம்பெருமாள்" என்னும் பெயராலேயே அழைக்கப்படுகிறார்.

புதிதாகச் செய்த விக்ரஹத்தையும் ஒதுக்காமல் கருவறையிலேயே "யாக பேரர்" என்னும் பெயரில் பிரதிஷ்டை செய்தார்கள். இப்போதும் யாகங்களில் அவரையே எழுந்தருளச் செய்கின்றனர். அழகிய மணவாள கிராமத்து ஶ்ரீவைணவர்கள் பலரும் அரங்கனுக்காக உயிர்த்தியாகம் செய்தார்கள். ஆகவே கோபுரப்பட்டி என்னும் இந்தக் கிராமம் அழகிய மணவாளம் என்னும் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

தகவல் உதவி: இந்து அறநிலையத் துறை, ஶ்ரீரங்க பங்கஜம்
தொகுத்தது கீதா சாம்பசிவம்


ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

இம்முறை ஒரு மாறுதலுக்காக அரங்கன் ஊர் சுற்றிவிட்டுத் திரும்பி வந்த காலத்தில் தங்கிய ஊரைக் குறித்து நண்பர் திரு ஒரு அரிசோனன் என்பவர் எழுதியதும், அவர் எடுத்த படங்களும். இந்த ஊரைக் குறித்த மேல் அதிக விளக்கம் அடுத்த பதிவில் நான் எழுதி இருக்கிறேன்.  அதையும் சேர்த்து வெளியிடுகிறேன். படங்கள் இரண்டு பதிவுகளிலுமாக வருகின்றன. படங்கள் தெரியவில்லை எனில் சொல்லவும்.


















நான்  சில ஆண்டுகள் முன்பு திருவெள்ளறை சென்றிருந்தேன்.  அப்பொழுது சிறப்புக்கட்டணம் எதுவும் கேட்கவில்லை.  பட்டாச்சாரியார் தான் ஆண்டுமுழுவதும் மாதமாதம் அருச்சனை செய்கிறேன் என்று நன்கொடை கேட்டார்.  கொடுத்துவிட்டு வந்தேன்.  அதைச் சிறப்புக்கட்டணம் என்று சொல்லிவிட முடியாது.

திருச்சி துறையூர் அருகில் "அழகிய மணவாளம்" என்ற ஒரு சிற்றூர் உள்ளது.  அங்கு உயர்ந்து ஓங்கி எட்டடி உயர உருவமாக அழகிய மணவாளப் பெருமாள் (சுந்தரராஜன்)  திருமலைகள் நிலமகளுடன் நின்றகோலத்தில் தரிசனம் தருகிறார்.  கொள்ளை அழகு.  வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். கட்டணம் எதுவே இல்லை.

கோவில் கருவறை பத்தடிக்குப் பத்தடி மட்டுமே உள்ளது.  அர்த்த மண்டபம் பத்தடிக்குப் பதினைந்தடி இருக்கலாம்.  கூட்டம் அதிகமானால் [?!] நிழல்தரும் கொட்டகை உண்டு.  என் மாமியாரின் பாட்டனார் என்பது தொண்ணூறு ஆண்டுகளுக்குமுன் எழுப்பிய கொட்டகை அது.  இன்னும் அவர் பெயர்கொண்ட கொடை அறிவிப்பு தொங்குகிறது.

கோவில் வாசலில் கைகள் உடைக்கப்பட்ட நரசிம்மர் சிலை ஒன்று இருக்கிறது.  அமைதியான் சூழ்நிலை.  அங்கிருந்து பார்த்தால் திருவரங்க ராஜகோபுரம், திருச்சி மலைக்கோட்டை தெரிகின்றன.  அருகில் ஒரு பழமையான பாழடைந்த, கருவரைமட்டு உள்ள செங்கல் கோவில் தென்படுகிறது.  அருகில் செல்ல இயலாதவாறு முட்புதர்கள் வளர்ந்து கிடக்கின்றன.

கோவில் எப்பொழுதுமே பூட்டித்தான் இருக்கும்.  கோவில் முன்பு இருக்கும் தெருவில் குடியிருக்கும் பட்டாச்சாரியாரின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினால், அவர் கோவிலைத் திறந்து தரிசனம் செய்விக்கிறார்.  வயதில் முதியவரான அவர் பாதுகாப்புக் கருதியே கோவிலைப் பூட்டி வைத்திருப்பதாகச் சொல்கிறார்.  அவர்க்கு என் மனைவியாரின் மூதாதையாரைத் தெரிந்திருக்கிறது.  என் மாமியாரின் பெயரையும் அறிந்துவைத்திருப்பது வியப்பையே அளித்தது.

மின்தமிழ் உடன்பிறப்புகள் விரும்பினால் நான் எடுத்த படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

நான்

சிரமத்தைப் பாராது சென்று அழகிய மணவாளரின் அருமையான கோலத்தை நின்று நிதானமாகக் தரிசிக்க வேண்டிய கோவில் அது.

ஒரு அரிசோனன்


படங்களும், எழுத்தும்: திரு அரிசோனன் அவர்கள்

படங்கள் அடுத்த பதிவிலும் தொடர்கின்றன.