எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, March 28, 2009

கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்.

சங்காசுரனைக் கொன்று பாஞ்சஜன்யத்தைப் பெற்ற இடமான இந்த பேட் துவாரகாவில் தான் குசேலரும் கிருஷ்ணரை வந்து தரிசித்து ஸ்ரீயின் அருளைப் பெற்றதாயும் சொல்கின்றனர். மேலும் இன்னொரு அதிசயம் என்னவெனில் இங்கே அருந்தும் நீரும் சுவையாகவே இருக்கின்றது என்பது ஒரு அதிசயமே. கோமதி நதி இங்கேதான் கடலில் கலக்கின்றது என்றும் சொல்கின்றனர். ஆனாலும் நீர் சுவையாய் இருப்பது அதிசயமே. துவாரகை முக்கிய நகரத்தில் நீர் அருந்தவே முடியாது. ஆனால் கடலுக்குள் இருக்கும் சிறிய தீவான இங்கே நீர் அருந்தும்படி இருப்பது அதிசயமே! பேட் துவாரகாவுக்குப் படகில் ஏறும்போதும், பேட் துவாரகாவில் படகில் இருந்து இறங்கும் இடத்திலும் சரி, வரிசையாகப் பால், தயிர் விற்பனை நடக்கும். இதுபற்றி ஏற்கெனவே எழுதிட்டேன் என நினைக்கிறேன். பாலும், தயிரும், வெண்ணெயும் உண்மையாகவே ஆறாக ஓடுமிடமாய் இருக்கிறது.


ஸ்ரீகிருஷ்ண ஜன்ம பூமியான மதுராவிலும், கோகுலம், பிருந்தாவனம் போன்ற இடங்களிலும் இவ்வாறே நல்ல பசும்பால், தயிர், வெண்ணெய், திரட்டுப்பால், மற்றும் பசும்பாலில் செய்யப் பட்ட இனிப்பு வகைகள் கிடைக்கும். குஜராத்தின் துவாரகையில் உள்ள பசுக்கள் எல்லாமும் மதுராவை விட்டு யாதவர்கள் வெளியேறும்போது கொண்டுவந்தவை எனவும் சொல்கின்றனர். பொதுவாகவே பசுக்களை யாரும் துன்புறுத்துவதில்லை எனினும், இங்கே கோயில் பிரஹாரங்களிலும் ரொம்பவே ஸ்வாதீனமாய்ப் பசுக்கள் உலாவிக் கொண்டிருக்கிறதைக் காணமுடியும். துவாரகை முக்கியக் கோயில் கட்டிப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே இது கட்டப் பட்டிருக்கவேண்டும். இங்கே துவாரகாதீஷ் ஆன ஸ்ரீகிருஷ்ணன் சந்நிதிக்கு நேர் எதிரே பெற்றெடுத்த தாயான தேவகிக்கு சந்நிதி அமைந்துள்ளது. ஒரு பக்கம் ருக்மிணி லக்ஷ்மி என்ற பெயரிலும் மற்றொரு பக்கம் சத்யபாமாவிற்கான சந்நிதியும் உள்ளது. ஜாம்பவதிக்கும் இங்கே தனி சந்நிதி உள்ளது. ஒவ்வொரு ஏகாதசியிலும் இங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள கண்ணனின் உற்சவர் ஜலக்ரீடை செய்யச் செல்கின்றார்.

மேலும் இங்கே உள்ள மற்றொரு அதிசயம் என்னவெனில் இந்தக் கோயிலில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீஜி என அன்போடு அழைக்கப் படும் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அனைத்து சேவைகளும் அவனின் முக்கிய இரு பட்டமஹிஷிகள் ஆன ருக்மிணியாலும், சத்யபாமையாலும் செய்யப் பட்டதாய் ஐதீகம். ஆகவே இன்றளவும் இந்தக் கோயிலில் கண்ணனுக்கு வழிபாடு நடத்தும் பட்டாசாரியார்/அர்ச்சகர் ஒரு பிரம்மசாரியாய் இருப்பதோடல்லாமல், ஒரு நாள் ருக்மிணி போலும், மற்றொரு நாள் சத்யபாமா போலும் தன்னை நினைத்துக் கொண்டு, ஒரு பெண் போலப் புடவை அணிந்து, தலையில் புடவைத் தலைப்பை வட இந்தியப் பெண்கள் போல் போட்டுக் கொண்டு, சிந்தூரம் வைத்துக் கொண்டு வழிபாடுகள் நடத்துகின்றார். பலராமருக்கும் தனியான சந்நிதி உண்டு. வல்லபாசாரியாருக்கும் தனியான மரியாதைகள் உண்டு. குஜராத்தின் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஸ்வாமிநாராயணனைப் பின்பற்றுபவர்களும், வல்லபாசாரியாரைப் பின்பற்றுபவர்களும் அதிகமாய் இருப்பதாய்க் கேள்விப் படுகின்றோம்.

இங்கே ராதைக்குத் தனி சந்நிதி உண்டு. ஊஞ்சல் உற்சவங்களில் கண்ணனோடு ஊஞ்சலாடும் உரிமை ராதைக்கு மட்டுமே. இன்னும் இதன் வரலாறு இவ்விதமாயும் சொல்லப் படுகின்றது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் பேட் துவாரகாவில் ஒரு கோட்டை இருந்ததாயும், ஆங்கிலேயர் தங்கள் படைகளை அங்கே நிறுவ முயன்றதாயும் அப்போது ஆட்சி புரிந்த மன்னன் அதை எதிர்த்ததாயும் கூறுகின்றனர். மன்னன் கோட்டையில் ஒளிந்திருக்க, ஆங்கிலேயர் சுரங்கம் தோண்டி பேட் துவாரகாவுக்குள் நுழைந்து கோயிலைத் தங்கள் வசப்படுத்தியதாகவும் பதினோரு நாட்கள் கோயில் வளாகத்தில் தங்கி இருந்து கிட்டத் தட்ட பதினான்கு கோடி மதிப்புள்ள ஆபரணங்கள், கிரீடங்கள் போன்றவற்றைக் களவாடிச் சென்றதாயும், மிகுந்த கஷ்டத்துடன் சிலவற்றை மீட்க முடிந்ததாயும் கூறுகின்றனர். அப்போது விக்ரஹங்கள் மட்டும் ராஜாவால் ஒளித்து வைக்கப் பட்டன. பின்னர் இந்தக் கோயில் புனர் நிர்மாணம் செய்யப் பட்டிருக்கின்றது.

துர்வாசர் சாபத்தின் காரணத்தால் பனிரண்டு மாதங்கள்/வருஷங்கள்?? ருக்மிணி தன்னந்தனியே வசிக்க நேர்ந்ததாயும், அப்போது ஒரு கூழாங்கல்லிலேயே கிருஷ்ணன் உருவத்தை வைத்துப் பூஜித்ததாயும் கூறுகின்றனர். இங்கே வல்லபாசாரியாருக்கும் தனியாய் சந்நிதி உண்டு. கோயில் பிரஹாரத்தில் ஒரு தூண் சுற்றுச் சுவரை ஒட்டினாற்போல் அமைந்துள்ளது. சுவருக்கும், தூணுக்கும் இடையில் உள்ள சிறு இடைவெளியில் புகுந்து வெளியே வந்தால் பாவங்கள் தீரும் என்று நம்பிக்கை. இப்போ உடல்நிலை இருக்கும் நிலையை உத்தேசித்து இரண்டு பேருமே அதை முயன்று பார்க்கவில்லை. மேலும் இங்கே ஒரு புத்தகம் இருக்கிறது. அந்தப் புத்தகத்தைப் பராமரிப்போரிடம் நம் குடும்பப் பெயர், முன்னோர்களில் சிலர் பெயர் சொன்னோமானால் நம் குடும்பத்தில் நமக்கு முன்னால் முன்னோர்களில் யார், யார் துவாரகைக்கு வந்து சென்றிருக்கின்றார்கள், எந்த வருடம் போன்ற விபரங்கள் கிடைக்கும். ஆனால் இதற்கு குடும்பச் சங்கிலி தெரியவேண்டும். இப்போ அதைக் காணோம்.


அகழ்வாராய்ச்சியின் சில படங்கள் கூகிளாரின் உதவியோடு.

அடுத்து துவாரகை கிருஷ்ணன் கடத்தப் பட்டார்!

Thursday, March 26, 2009

கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள் தொடர்ச்சி - பேட் துவாரகா!

துவாரகையில் இருந்து ருக்மிணி கோயில் சென்றுவிட்டு அங்கிருந்து 35 கிமீட்டர் தூரமுள்ள ஓகாவை அடைகின்றோம். வழியில் பல்வேறுவிதமான தொழிற்கூடங்கள், டாடாவின் மித்னாபூர் தொழில் கூடம் தாண்டி, கடற்படையின் குடி இருப்புகளைத் தாண்டி ஓகா வந்தடைகின்றோம். முக்கியத் துறைமுக வாயிலுக்குச் செல்லாமல் படகுகள் நிற்கும் இடம் சென்று நிற்கின்றார் ஆட்டோ ஓட்டுநர். தான் இங்கேயே காத்திருப்பதாயும், நம்மைச் சென்று வருமாறும் கூறுகின்றார். இந்தப் படம் துவாரகையில் இருந்து ஓகா துறைமுகம் வந்ததும், நாம் படகு ஏறும் இடத்தில் இருந்து "பேட் துவாரகா" தீவு தெரியும் இடம். தீவு போன்ற இந்த இடத்தில் மாளிகைகளில் கண்ணனின் பத்தினிகளோடு இருந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. ஒரு தீவில் அமைந்த காரணத்தாலும் இது பேட் துவாரகா என அழைக்கப் படுகின்றது. பாரதம் நடைபெற்ற காலத்தில் ஸ்ரீகிருஷ்ணன் துவாரகையில் வாசம் செய்த காலகட்டத்தில் இங்குள்ள துறைமுகம் சங்குத் துறைமுகம் என அழைக்கப் பட்டிருக்கின்றது. இங்கு கிடைக்கும் சங்குகளின் நாதம் பற்றிய குறிப்புகள் பாரதத்திலும், பாகவதத்திலும் சொல்லி இருப்பதாய்ச் சொல்கின்றனர். நாம் அறிந்த வரையில் பிரபாஸ க்ஷேத்திரம் என அழைக்கப் பட்ட சோம்நாத்திற்கு அருகே உள்ள இந்தப் பகுதியில் தான் ஸ்ரீகிருஷ்ணர் தன் குருவான சாந்தீபனியின் குமாரனை நாகதேவதைகளிடமிருந்து மீட்டு வரச் சென்றார்.

இங்கே அவ்விதம் செல்லும்போது தான் புண்யாஜனா என்னும் அசுரக் குலத்து கடல்கொள்ளையன் ஆன பாஞ்சஜன்யனிடமிருந்து அவன் சங்கை அபகரிப்பதாய் நாம் இன்னும் சிலநாட்களில் பார்க்கப் போகின்றோம். அந்தச் சங்கே ஸ்ரீகிருஷ்ணன் கையில் "பாஞ்ச ஜன்யம்" என்ற பெயரில் இருந்ததையும் பார்ப்போம். இப்போது பேட் துவாரகா செல்வதற்காக இதோ காத்திருக்கும் விசைப் படகில் ஏறுகின்றோம். கூட்டம் அதிகம் தான். நவ பிருந்தாவன் அனுபவம் நெஞ்சில் அலை மோதுகின்றது. சென்ற வருஷம் ஜனவரியில் நவ பிருந்தாவன் சென்றபோது படகில் அளவுக்கதிகக் கூட்டத்தை ஏற்றிவிட்டு முதலை மடுவில் படகின் முக்கிய அச்சு மாட்டிக் கொண்டு வெளிவராமல் தவித்ததும், பின் ராகவேந்திரர் அருளால் மீண்டு வந்ததும் ஒரு க்ஷண நேரம் நெஞ்சில் வந்துசெல்கின்றது.
இங்கே காக்கும் கடவுளே அல்லவா காக்கப் போகின்றான். படகில் உட்கார இடம் கிடைக்கவில்லை. உள்பக்கம் போட்டிருக்கும் அமரும் இடங்கள் பூராவும் நிரம்பி வழிந்து, வெளியிலும் சுற்றி உட்கார்ந்து, ஏறும், இறங்கும் படிகள், பக்கச் சுவர்கள் என நிரம்பி வழியும் கூட்டம். படகுக்காரர்கள் வந்து ஒரு மாதிரி இடம் ஏற்படுத்திக் கொடுத்து அமரச் சொல்கின்றனர். அதுக்கு நிற்பதே பரவாயில்லை போல் இருக்கு. நல்ல வெயில் அப்போது பார்த்துச் "சுளீரென" அடிக்கிறது. பிரயாணிகளில் சிலர் தாங்கள் வாங்கி வந்திருந்த தின்பண்டங்களை வாரி இறைக்கின்றனர்.
நீர்க்காக்கைகள் அல்லது புறாக்கள்?? பெயர் தெரியவில்லை, ஆனால் கடல் பறவைகள், ஒருவேளை கடல்புறாவோ? இருக்கலாம். அவை கூட்டமாய் வந்து கொத்துகின்றன, பிஸ்கட், சாக்லேட், கடலை போன்றவற்றை. அனைவரும் ஆர்ப்பரிக்கின்றனர். படகும் மெல்ல, மெல்லக் கயிற்றிலிருந்து விடுபட்டு நகர ஆரம்பிக்கின்றது.இவை அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்ததாய்ச் சொல்லப் படுபவை. கண்ணன் இருந்த துவாரகையின் அழிந்த மிச்சங்கள்.பல்வேறு விதமான கட்டிட அமைப்புகளும், தெரு அமைப்புகளும் கிடைத்துள்ளன எனச் சொல்லுகின்றனர். கடலுக்கு அடியில் ஒரு காட்சிசாலை அமைக்கும் எண்ணமும் மத்திய அரசுக்கு இருந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. அப்படி அமைக்கப் பட்டால் உலகிலேயே(?) முதல் காட்சி சாலையாய் இருக்கக் கூடும்.எழுத்துக்கள் போல் தோற்றமளிக்கும் லிபிகள். இவை எல்லாம் இன்னமும் ஆய்வில் இருக்கின்றன. இதோ, தெரிகின்றதே, இது தான் பேட் துவாரகா மாளிகையின் ஒரு பக்கக் கதவு. முன்பு வந்தபோது இத்தனை இடிபாடுகள் இல்லை. இப்போது பூகம்பத்தினாலும் பல வருடங்கள் சென்றதாலுமோ என்னமோ? இடிபாடுகள் நிறையக் காண முடிகின்றது. முக்கிய மண்டபத்தில் உயரமான நாலுபக்கச் சுவர்களும் இடிந்து விழுந்து பெரிய கூடம் போன்ற அமைப்பு இப்போது நடுவில் திறந்த முற்றம் போல் மாறி இருக்கிறது. நாளை கண்ணனைக் காண்போம். அம்மா எதிரேயே இருந்து பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

Tuesday, March 24, 2009

கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்! தொடர்ச்சி!

திவா பேட் துவாரகானா என்னனு கேட்டிருக்கார். அதோட கண்ணனின் விக்கிரஹம் பத்தியும் கேட்டிருக்கார். தேவகியிடமிருந்து குழந்தை பிரிக்கப் பட்டதும், அந்தக் குழந்தை மாதிரியே ஒரு விக்கிரஹத்தை தேவகி வழிபட்டு வந்ததாய்ச் சிலரும், தேவகியே கண்ணன் திரும்பக் கிடைச்சதும், தன் மகனிடம், "உன் குழந்தைப் பருவத்தை நான் கண்ணால் கண்டு ஆனந்திக்கும் பேறு பெறவில்லை. எப்படி இருந்திருப்பாய் என மனம் எண்ணி, எண்ணித் துடிக்கின்றது." என்று வருந்தியதாகவும், அப்போது ஸ்ரீகிருஷ்ணரே விஸ்வகர்மாவிடம் சொல்லித் தன் குழந்தை வடிவத்தைச் சிற்பமாய் வடித்துத் தரச் சொன்னதாகவும் இருவேறு கூற்றுகள் நிலவுகின்றன. அந்தச் சிற்பத்தைத் தான் தன் தாய் இறந்ததும் ஸ்ரீகிருஷ்ணர் தானும் வழிபட்டு வந்ததாய்ச் சொல்கின்றனர். அந்த விக்கிரஹத்தையே தனக்கும், துவாரகைக்கும் முடிவு ஏற்படப் போகின்றது என்பதை அறிந்ததும், குரு பகவானையும், வாயு பகவானையும் அழைத்து, இந்தச் சிற்பம் சிதையாமல் ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்யுங்கள் என்று சொன்னதாயும், அவர்கள் பிரதிஷ்டை செய்த அந்தச் சிற்பமே இன்றளவும் குருவாயூரில் வழிபட்டுக் கொண்டிருப்பதாயும் சொல்கின்றனர். தேவகியின் சிற்பத்தையும், வழிபாட்டையும் பார்த்த ருக்மிணி கண்ணனிடம் தனக்கும் அம்மாதிரி ஒரு சிலை வேண்டுமெனக் கேட்க, இரண்டாம் முறையாகச் செய்யப் பட்ட சிற்பத்திற்கு ருக்மிணியால் வழிபாடுகள் நடந்து கொண்டிருக்க, அந்தச் சிலைதான் துவாரகையைக் கடல் கொண்டபோது பூமியில் புதைந்து போகின்றது. அது புதைந்த இடம் தான் கோபி தாலாப் என அழைக்கப் படுகின்றது.

இந்த கோபி தாலாப் என்னும் பெயர் எப்படி வந்ததென்றால் பிருந்தாவனத்தில் கண்ணன் விட்டு விட்டு வந்த கோபியர்கள் கண்ணனைக் காணும் ஆசையில் துவாரகை வந்ததாயும், அவர்கள் நீராடிய குளம் அது எனவும் சொல்கின்றனர். இந்த இடத்தில் இருந்து எடுக்கப் படும் மண்ணே கோபி சந்தனம் என்று ஸ்ரீவைணவர்களால் நெற்றியில் தரித்துக் கொள்ளப் படுகின்றது. சந்தன நிறத்திலேயே கிடைக்கின்றது. இந்த கோபி தாலாபில் புதைந்த கண்ணன் சிலை காலப் போக்கில் கடலில் முழுக, அந்தச் சிலை கோபிசந்தனங்களால் மூடியபடியே போர்ச்சுகீசியர்கள் கையில் கிடைக்க, அவர்கள் கப்பலில் உள்ள பொருட்களோடு சிலையையும் போட்டுவிட்டுக் கப்பலில் வரும்போது மேலைக்கடலில் திடீரென வந்த புயற்காற்றில் துன்பப் படும் வேளையில் ஸ்ரீமாத்வரால் கரைக்கு அழைக்கப் பட்டு புயலில் இருந்து காப்பாற்றப் படுகின்றனர். ஸ்ரீமாத்வர் கோபிசந்தனத்தோடு ஸ்ரீகிருஷ்ணர் வந்திருப்பதைத் தன் யோக சக்தியால் அறிந்து அந்தச் சிலையைக் கேட்டுப் பெறுகின்றார். அந்தச் சிலைதான் உடுப்பியில் வைத்திருக்கின்றனர். அப்பாடி, இப்போ சரியாப் போச்சா சிலைகளின் கதைகள்?? :)))))

கிருஷ்ணனுக்கு ஒரு நாளைக்குப் பதினேழு முறையாவது நிவேதனங்கள் செய்யப் படுகின்றன. எல்லாம் இனிப்பு, இனிப்புத் தான். இதைத் தவிர வித விதமான பழங்கள், தயிர், பால், வெண்ணெய் போன்றவை. துவாரகையில் பாலும், தயிரும் ஆறாய் ஓடுகின்றது நிஜமாவே. ஒரு பாவு தயிர் ( ஒரு பாவு என்பது கிட்டத் தட்ட 250 கிராம் இருக்கும்)5 ரூக்குக் கூவிக் கூவிக் கொடுக்கின்றனர். வழியெல்லாம் தயிர் விற்பவர்கள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். காலையில் முதன்முதல் செய்யப் படும் நிவேதனத்துக்கு முன்னால் தங்கத்தால் ஆன பிரஷ்?? பிரஷ் போன்ற ஒன்றால் கிருஷ்ணர் தினமும் பல் துலக்குகின்றாராம். ஆகவே இனிமே பல் தேய்க்காமல் இருக்கிறவங்க எல்லாம் தேய்க்க ஆரம்பிங்கப்பா! அதுக்கப்புறம் செய்யப்படும் நிவேதனம் முதலில் கண்ணனின் பட்ட மகிஷிகள், பலராமர், ரோகிணி, தேவகி, வசுதேவர், மற்ற ரிஷிகள், பரிவாரங்களுக்குக் கொடுத்தப்புறமே கண்ணனுக்கு. அதுவரைக்கும் கண்ணன் பொறுமையா இருக்கார். ஆகவே கவிநயா, கொஞ்சம் பொறுமையா இருங்க, நீங்களும்னு கண்ணன் சொல்றானே!

நாளைக்கு பேட் துவாரகா. எழுதியாச்சு, அப்லோட் பண்ணணும்.

Monday, March 23, 2009

கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள் -தொடர்ச்சி!

துவாரகையில் நாம் ஸ்ரீகிருஷ்ணனை மட்டுமல்லவா பார்த்தோம்?? இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உள்ளனவே? ஆகையால் பயணத்திலேயே அவற்றைப் பார்க்கலாம். அங்கே எண்ணங்களைத் தானே சொல்ல முடியும்? ஆகவே இனி நம் பயணங்கள் இங்கே தொடரும்! :)))))))))
***************************************************************************************
ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் வெண்ணைய் சாப்பிட்டுவிட்டு, திரும்பத் திரும்பக் கிருஷ்ணனைப் பார்த்ததோடு நம் பயணம் முடியவில்லை. அங்கே கோபி தாலாப் என்னும் இடம், ருக்மிணிக்கெனத் தனிக் கோயில், அது தவிர, துவாரகையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள ஓகா என்னும் துறைமுகத்தில் இருந்து நாம் நீராவிப் படகு, மோட்டார் படகு, அல்லது படகு எது கிடைக்குமோ அதில் ஏறி அங்கிருந்து அரை மணிப் பயணத்தில் உள்ள ஒரு சிறு தீவான பேட் துவாரகா செல்ல வேண்டும். அது கிட்டத் தட்ட நம் கண்ணனின் வசந்த மாளிகை ஆகும். அங்கே தான் சத்யபாமா, ஜாம்பவதி போன்றோர் இருந்ததாய்ச் சொல்கின்றனர்.

துவாரகை நகரும் சரி, அதன் கடைத் தெருக்களும் சரி சற்றும் மாறவே இல்லை. கோயிலில் இருந்து தங்குமிடம் வந்துவிட்டுச் சற்று நேரம் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் கிளம்புகின்றோம். தங்குமிடத்திலேயே தற்சமயம் ஓகாவுக்கு எப்படிப் போவது? எந்த எந்த மாதிரிப் போக்குவரத்து சாதனத்துக்கு எவ்வளவு கொடுக்கலாம் என்பதெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றோம். இதற்கு முன்னர் பதினைந்து வருஷம் முன்பு வந்தப்போ எல்லாம் அலுவலகத்தில் வண்டி ஏற்பாடு செய்து கொண்டு சென்றதால், இப்போதைய நிலவரம் எப்படினு தெரிஞ்சு கொண்டோம். போகவர, ஆட்டோவுக்கு 300 ரூயில் இருந்து 350 வரை கேட்பார்கள் எனவும், இண்டிகா என்றால் 400 ரூ என்றும் சொன்னார்கள். நாங்க இரண்டு பேர்தானே, ஆட்டோவே போதும் என முடிவெடுத்துக் கொண்டோம்.

வழியிலேயே ருக்மிணி கோயிலையும் பார்த்துக்கொண்டு செல்லவேண்டும் என ஆட்டோ ஓட்டுநரிடம் பேசிக் கொண்டதில் ருக்மிணி கோயிலுக்குச் செல்லுவதும் சேர்த்து ரூ. 350/- கேட்டார். போகும் வழிதான் என்றாலும் நம் சென்னையை நினைத்துப் பார்க்கும்போது இது ரொம்பவே கம்மி எனத் தோன்றியது. மேலும் ஓகாவில் குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆட்டோ காத்திருக்கவேண்டும், நாம் திரும்பி வருவதற்காக. ஓட்டுநரின் செல் நம்பர், பெயர் எல்லாம் கேட்டு வச்சாச்சு. ஆட்டோவில் ஏறி இப்போ ருக்மிணி கோயிலை நோக்கிப் பயணம்
தொடர்கின்றோம். இந்தக் கோயில் 12 அல்லது 13-ம் நூற்றாண்டுகளிலேயே கட்டப் பட்டதாய் அறிய வருகின்றோம். கோயிலும் புதியதாகவே இருக்கின்றது. துவாரகை மூலநாதர் கோயிலின் தொன்மை இதில் தெரியவில்லை. என்றாலும் மூலநாதரும் இப்போது மாறி விட்டார். அந்தக் கதை தனியாய் வரும். ஸ்ரீகிருஷ்ணரே இங்கு துவாரகையில் இருந்தபோது வழிபட்ட ஒரு விக்கிரஹம் தான் இன்றும் கேரளாவில் குருவாயூரில் குருவாயூரப்பன் எனக் காட்சி கொடுப்பதாய்ச் சொல்லுவார்கள். அந்த விக்கிரஹமே தேவகியால் வழிபட்டு வந்தது என்றும் சொல்கின்றனர். பின்னர் துவாரகையைக் கடல் கொண்டு போகப் போகின்றது எனத் தெரிந்ததும், தன் தாய் வழிபட்டு வந்த தன்னுடைய சிலையை குரு பகவானையும், வாயு பகவானையும் எடுத்துக் கொண்டு போய் வேறு இடத்தில் வைக்குமாறு ஸ்ரீகிருஷ்ணரே கேட்டுக் கொண்டதாயும் சொல்கின்றனர். தேவகி வழிபட்டு வந்த விக்கிரஹத்தைப் பார்த்து ருக்மிணியும் அதே போல் தனக்கும் வேண்டுமென்று கேட்க, ஸ்ரீகிருஷ்ணர் மீண்டும் விஸ்வகர்மாவைச் செய்யச் சொன்ன விக்கிரஹமே அங்கேயே கோபி தாலாபில் புதைந்து போய்ப் பின்னர் கடலில் வந்து சேர்ந்து, மிதந்து, போர்ச்சுகீசியர்கள் (??) கையில் கிடைத்து, அவர்கள் புயலில் மாட்டிக் கொண்டபோது கோபிசந்தனத்தோடு அந்த விக்கிரஹத்தையும் ஸ்ரீ மாத்வர் பெற்றுக் கொண்டு, உடுப்பியில் பிரதிஷ்டை செய்ததை ஏற்கெனவே உடுப்பி பற்றிய பதிவில் பார்த்தோம்.இந்த ருக்மிணி கோயில் இருக்குமிடத்தில் தான் ருக்மிணியை ஸ்ரீகிருஷ்ணர் திருமணம் செய்து கொண்டதாய்ச் சொல்கின்றனர். ருக்மிணியை ஸ்ரீ கிருஷ்ணர் ருக்மிணியின் வேண்டுகோளின்படி ரதத்தில் தூக்கிக் கொண்டு வருகின்றார். ருக்மிணியும் கிருஷ்ணரோடு வரச் சம்மதித்தே வருகின்றாள். பின்னர் துவாரகை வந்து கிருஷ்ணரின் பெற்றோர் சம்மதத்துடன் கிருஷ்ணர் ருக்மிணியை மணந்து கொள்கின்றார். மேலும் இந்த துவாரகையில் இருந்தே பாண்டவர்களுக்காக தூது செல்கின்றார். "நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே" என்னும் வகையில் நீள் நெடுமால் நீள நடந்து தூது சென்றதும், இங்கிருந்தே. சத்யபாமைக்காக தேவலோகத்துப் பாரிஜாதம் வந்ததும் இங்கே தான். ஆனால் இந்த ருக்மிணி தேவி செய்த ஒரு சிறு தவறாலேயே இன்று துவாரகையில் குடிநீர் கிடைக்கவில்லை என்றும் சொல்கின்றனர். இது எவ்வளவு தூரம் உண்மை எனத் தெரியாது. ஏனெனில் உள்ளூர் மக்கள் தான் வருடக் கணக்காய் இந்தக் கதைகளைச் சொல்லி வருவதாய்க் கேள்விப் பட்டோம். கதை வருமாறு:

"ஒரு முறை துர்வாசரைப் பல்லக்கில் வைத்து அழைத்து வந்த ஸ்ரீகிருஷ்ணர், ருக்மிணியோடு சென்று அழைத்து வருகின்றார். அப்போது ருக்மிணிக்குத் தாகம் எடுக்க, கிருஷ்ணர் தன் சக்தியால் நீர் வரவழைத்துப் பருகக் கொடுக்க, துர்வாசருக்குக் கோபம் வருகின்றது. ருக்மிணியைச் சபிப்பதாயும், அவள் ஆறு மாதம் தனியாய் இருக்கவேண்டும் எனவும், துவாரகையில் நீரே கிடைக்காமல் போகக்கடவது எனச் சாபம் கொடுததாயும் சொல்கின்றனர். ஆனால் ருக்மிணி நீர் தானம் செய்ததால் சாபத்தில் இருந்து விடுபட்டாள் எனவும் சொல்கின்றனர். அதே போல் இந்த ருக்மிணி கோயில் வளாகத்தில் மட்டுமே நல்ல குடிநீர் கிடைக்கும். மற்றபடி துவாரகை நகர் முழுதும் நீர் உப்பாய்த் தான் இருக்கும். கையில் கொண்டு போனால் பிழைத்தோம். இல்லாட்டிக் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் இப்போ அரசு குடிநீருக்காகப் பல ஏற்பாடுகள் செய்து வருகின்றது.

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் 13

கராஞ்ச நரசிம்மரைத் தரிசிப்பது மிகவும் எளிது. மேல் அஹோபிலம் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே வண்டிப் பாதையிலேயே சற்றே தள்ளி அமைந்துள்ளது. என்றாலும் செளகரியத்தை உத்தேசித்துக் கடைசியில் இங்கே தரிசனம் வைத்துக் கொள்ள முடிவு செய்யப் பட்டது. கருடாத்ரி மலையின் மேற்கே அமைந்துள்ளது கராஞ்ச நரசிம்மரின் ஆலயம். வாகனங்கள் வரும் சாலையில் அடர்ந்த மரங்களின் நிழலில் பார்த்தாலே ஒரு அருமையான சோலை போன்ற இடத்தில் அமைந்துள்ளது கராஞ்ச நரசிம்மரின் ஆலயம். ஆலயம் புதுசாய்த் தெரிகின்றது. விசாரித்ததில் அண்மையில் புதுப்பித்திருப்பதாய்ச் சொல்கின்றன. நுழைந்ததும் ஒரு மண்டபம் முகப்பிலேயே, சிற்ப வேலைப்பாடுகளுடன். மண்டபத்தைத் தாண்டினால் இடப்பக்கம் ஆஞ்சநேயர், கராஞ்ச நரசிம்மரைப் பார்த்தபடிக்குக் காட்சி அளிக்கின்றார். இரு கைகளையும் கூப்பியபடி காட்சி அளிக்கும் அஞ்சனை புத்திரன் சந்நிதிக்குச் சற்றுத் தள்ளி கராஞ்ச நரசிம்மர் சந்நிதி. நரசிம்மரை ஒரு கணம் பார்த்துவிட்டுத் திகைப்புடன் மீண்டும் பார்க்கின்றோம். என்ன இது? வில்லா? ஆம் வில்லே தான். கையில் வில் ஆயுதத்துடன் நரசிம்மரா? வியப்பிலும் வியப்பாய் உள்ளதே?

ஆம், வில் ஆயுதத்துடனேயே நரசிம்மர் காட்சி அளிக்கின்றார். யாருக்காக?தன் அருமைத் தோழனும், தொண்டனும் ஆன ஆஞ்சநேயனுக்காக. ஆஞ்சநேயருக்காக நரசிம்மர் ஏன் வில் தரிக்க வேண்டும்? ஆஞ்சநேயர் இந்த மலைக்கு வந்து கருங்காலி மரத்தின் கீழே ராமரை நோக்கித் தவம் இருந்தார். கருங்காலி மரம் தான் கராஞ்ச விருக்ஷம் எனப் படுகின்றது. ஸ்ரீமந்நாராயணன் தன் பக்தனோடு சற்றே விளையாட நினைத்தான். நரசிம்மன் அழகிய சிங்கராய்க் காட்சி அளித்தான், ஆஞ்சநேயர் முன்னே. ஆஞ்சநேயர் அசரவில்லை. “எனக்கு வேண்டியது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம். நீ யார் சிங்க முகத்துடன்?” என்று கேட்டார். நரசிம்மம் பதில் சொன்னது. “இது என்னுடைய இடம். நரசிம்ம க்ஷேத்திரம். இங்கே நீ நரசிம்மரைத் தான் காண முடியும். நானும், ராமனும் ஒன்றே! என்னில் ராமனைக் காண்பாயாக!” என்று சொல்கின்றார். ஆஞ்சநேயர் நம்மளைப் போல பிடிவாதக் காரர். (பிள்ளையார் தான் வரணும்னு நான் சொல்லி இருப்பேன்) ஒத்துக்கவே இல்லை.

“ஆஹா, நீ என்ன சிங்க முகத்தோடும், மனித உடலோடும் வந்து நீயும், ஸ்ரீராமனும் ஒன்றே என்கின்றாய்? யாரை ஏமாத்தப் பார்க்கிறாய்? என் ஸ்ரீராமன் எத்தனை அழகு? எவ்வளவு செளந்தரியம்? ,முகத்தில் என்ன சாந்தம்? கண்களின் கருணையைச் சொல்லவும் முடியுமோ? இது என்ன உன் கைகளில் இவ்வளவு நீண்ட நகங்கள்? இவை எல்லாம் என் ஸ்ரீராமனுக்கு இல்லவே இல்லையே? மேலும் தன் கைகளைப் போன்ற நீண்ட வில்லைத் தரித்துக் கொண்டு, என் ஸ்ரீராமன் இன்னமும் தனக்கு அழகு சேர்த்துக் கொண்டல்லவோ காண்பான்? வில்லில்லாமல் அவனைக் காணவும் முடியுமோ? என் ராமனையே நான் காண விரும்புகின்றேன்.” எனச் சொல்ல, நரசிம்மர், “ஆஞ்சநேயா, உன் பக்தியை நான் மெச்சுகின்றேன். நானே நாராயணன், நானே நரசிம்மன், நானே ஸ்ரீராமன், என்னை நன்றாய்ப் பார்ப்பாயாக! என்னில் ஸ்ரீராமனைக் காண்பாய் நீ!” என்று சொல்லவும், உடனேயே ஆஞ்சநேயர் கண்களில் வில்லும், அம்பும் ஏந்திய ஸ்ரீராமன் தென்பட்டான். ஆஞ்சநேயர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கே ஒரு கணம் ஆதிசேஷன் படமெடுத்துக் குடை பிடிக்க ஸ்ரீமந்நாராயணன், தோன்ற, உடனேயே அதே ஆதிசேஷன் படமெடுத்த குடைக்கீழேயே நரசிம்மர் வலக்கையில் சக்ரத்தோடும், இடக்கையில் வில்லோடும் காட்சி அளிக்கின்றார். ஆஞ்சநேயருக்கு உண்மை புரிந்தது.இந்த வித்தியாசத் திருக்கோலத்தோடேயே கராஞ்ச நரசிம்மர் காட்சி அளிக்கின்றார். கராஞ்ச நரசிம்மர் சந்நிதியிலும் ஆரத்தி முடிந்து பக்தர்கள் அனைவருக்கும் சடாரி, துளசி, தீர்த்தம் பிரசாதம் வழங்கப் படுகின்றது. மணியும் மூன்றுக்கு மேல் ஆகிவிட்டது. அனைவரும் காலை ஆகாரம் என்று பெயரளவில் சாப்பிட்டதே. இப்போது தான் எல்லாருக்கும் பசி, சாப்பாடு என்ற உணர்வே ஏற்பட்டது. கராஞ்ச நரசிம்மர் கோயில் இருந்து வரும் வழியில் தென்படும் நூற்றுக்கால் மண்டபம் மிகப் பழமை வாய்ந்ததாய்த் தென்படுகின்றது. ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னே இங்கே முதலாம் ஜீயர் ஸ்ரீமத் சடகோப யதீந்திர மஹாதேசிகர் பல்வேறு விதமான சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருப்பதாய்ச் சொல்கின்றனர்.

கராஞ்ச நரசிம்மர் கேதுவினால் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் வல்லமை கொண்டவர். இவர் ஞானம், வைராக்கியம், தீவிர பக்தி ஆகியவற்றை அருளுவார். ஞானிகள், மருத்துவ மாமேதைகள் உருவாவதற்கும் இவரின் கடாட்சம் தேவை என்று சொல்லப் படுகின்றது. கருடாத்திரி மலையின் மேற்குப் பகுதியில் கருங்காலி மரத்தினடியில் எழுந்தருளி இருக்கும் இவரைத் தரிசித்துவிட்டுப் பின்னர் விடுதிக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொண்டு, இரவு எட்டு மணிக்குப் பேருந்து அங்கிருந்து கிளம்பி சென்னை வந்தடைகின்றது. இத்துடன் அஹோபிலப் பயணம் முடிவடைந்தது.

Sunday, March 22, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் -அஹோபிலம் - 12

அடுத்து நாம் காணப் போவது பார்கவ நரசிம்மர். படிகள் ஏறவேண்டும். படிகள் என்றாலும் சாமானியமாய் இல்லை. மலை ஏற்றம் கூடப் பரவாயில்லை எனும்படிக்குப் படிகள். படிகள் என்னமோ 150க்குள் தான் சொல்கின்றனர். ஆனாலும் நமக்கு அவை 15,000 போல் தெரிகின்றன. வேதாத்திரி பர்வதத்திலே அமைந்துள்ளது இந்தக் கோயில். கீழ் அஹோபிலம் கோயிலில் இருந்து சுமார் இரண்டு கிமீட்டர் தொலைவில் உள்ளது. அடர்ந்த காடுகளில் நுழைந்தே செல்லவேண்டும். நடு நடுவில் சீர் செய்யப் படாத காட்டுப் பாதைகளும் குறுக்கிடும். ஏற்ற, இறக்கங்கள் நிறைந்தது. பல்வேறு விதமான பட்சிகளின் குரல்களில் இருந்து எழும்பும் இனிய இன்னிசைக் கீதங்கள். சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க ரம்மியமான இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது கோயில். இன்னும் சிலபடிகள் மேலே ஏறினால் கோயில் சொல்லிக் கொண்டே நம்மை அழைத்துச் செல்கின்றனர். கடைசியில் வரும் எனக்காகச் சற்று நின்று கவனித்துக் கூட்டி வரும் அமைப்பாளர் சுரேஷ். நான் நிற்கும்போதெல்லாம் அவரும் எனக்குப் பின்னாலேயே நின்று விடுகின்றார். ஆசுவாசம் செய்து கொண்டு கிளம்பினால் பின்னாலேயே பாதுகாப்பாய் வருகின்றார். மற்ற அனைவரும் முன்னால் சென்றிருக்க, நாங்கள் இருவர் மட்டும் மெல்ல மெல்ல மேலே ஏறுகின்றோம். இந்தப் படிகளுக்கு இவ்வளவு கஷ்டப் பட்டு வந்து யார் காவிப்பட்டையும், வெண்மைச் சுண்ணமும் அடிச்சாங்களோ தெரியலை. மனதில் ஈசன் குடி கொண்டால் எல்லாத்துக்கும் வேகம் வரும்போல.

அப்பாடி, இதோ நிஜமாவே வந்துட்டோமே! ஆனால் இது என்ன இங்கே ஒரு குளம் போல இருக்கே? ஆம், நிஜமாவே குளம் தான் இது. பார்கவ தீர்த்தம் எனப் பெயர் இதுக்கு. நீர் எந்தக் காலத்திலும் வற்றுவதே இல்லையாம். அக்ஷய தீர்த்தம் எனவும் சொல்லப் படுகின்றது. பார்கவர் இங்கே எங்கே வந்தார்? வந்திருக்கார். பார்கவ ராமர் ஆன பரசுராமர் இங்கே தீர்த்த யாத்திரை வந்திருக்கின்றார். நரசிம்மரைத் தரிசித்திருக்கின்றார். அவர் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீமந்நாராயணன் தசாவதாரத் திருக்கோலம் காட்டி மகிழ்வித்திருக்கின்றான். என்ன? அவதாரத்துக்கே அவதாரம் பூஜித்ததா? எனத் தோன்றுகின்றதா? என்றால் ஆம். என்ன இருந்தாலும் பரசுராமர் ஒரு மானிடனாய்த் தானே தோன்றினார். விஷ்ணுவின் அவதாரம் என எந்த இடத்திலும் சொல்லிக் கொள்ளவே இல்லை அல்லவா? ஆகவே அவர் இறை சக்தியாகவே தோன்றிய நரசிம்ம அவதார மூர்த்தியை வழிபட்டு இருக்கின்றார். இப்போ பார்கவ நரசிம்மரைப் பார்ப்போமா??

நரசிம்மர் இங்கே ஹிரண்யனை வதைக்கும் தோற்றத்தில்ல் தான் காட்சி அளிக்கின்றார். மடியில் ஹிரண்யன். இரு கரங்களால் அவன் வயிற்றைக் கிழித்துக் கொண்டிருக்கின்றார். சங்கு, சக்ர தாரியாய்க் காட்சி அளிக்கின்றார். ஆஹா, இது என்ன? ஹிரண்யன் வாளை உயர்த்திய வண்ணம் காட்சி அளிக்கின்றானே? ஆம், ஹிரண்யன் நரசிங்கத்தை வெட்டுவதற்கென உயர்த்திய வாள் உயர்த்திய வண்ணமே காட்சி அளிக்கின்றது. வியப்பில் உறைந்து போன முகத்தோடு ஹிரண்யன்! நரசிங்கம் தன்னை மடியில் கிடத்திக் குடலைக் கிழித்து எடுப்பதை உணர்ந்து, தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்பதையும் உணர்ந்ததால் மட்டும் அல்ல. வந்திருப்பது யார் என்பதைப் புரிந்து கொண்டுவிட்ட வியப்பு, சாட்சாத் பகவான் கையாலேயே தனக்கு மரணம் சம்பவிக்கிறதை எண்ணி வியப்பு! இந்த அசுரனுக்காக பகவானே தூணில் இருந்து கீழே இறங்கி வந்துவிட்டானே என்ற வியப்பு! இதை அறியாத நிர்மூடனாய் இருந்து விட்டோமே என்ற வியப்பு! அனைத்தும் ஒருசேரக் காட்சி அளிக்கின்றது ஹிரண்யன் முகத்தில். அருகே பக்த பிரஹலாதன் நடப்பது அனைத்தும் தனக்காவே என்ற எண்ணம் சிறிதுமின்றி அடியாரிலும் அடியாராகக் கை கூப்பித் தொழுத வண்ணம் நிற்கின்றான். இந்த அழகை மட்டும் கண்டு களித்தால் போதுமா? சிற்பத்தின் தோரணத்தில் சுற்றிலும் தசாவதாரங்களும் செதுக்கப் பட்டிருப்பதை பட்டாசாரியார் ஹாரத்தி காட்டி விளக்குகின்றார்.

இந்தக் காட்டில் தரிசனம் செய்யவே இவ்வளவு கஷ்டம் என நாம் நினைத்துக் கொண்டு அதையே ஒரு பெருமையாகவும் எண்ணிக்கிறோமே? இந்தச் சிற்பிகள் எவ்வளவு கஷ்டப் பட்டு இந்தக் குகைகளுக்குள்ளே வந்து சாப்பாடு, தண்ணீர் எது இருக்கோ அதை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு இத்தகைய தெய்வீகச் சிற்பங்களைச் செதுக்கி இருக்கின்றார்களே. அந்தக் காலத்தில் என்ன வசதி இருந்தது? சிற்பிகள் சிற்பங்களைச் செதுக்கும்போது ஒவ்வொரு காட்சிகளையும் கண்ணார, மனமாரக் கண்டு, கேட்டு, பேசி, அனுபவித்தே செய்திருக்க முடியும். அத்தனை அழகு ஒவ்வொன்றும். பரிபூரணமாய் உணராமல் இத்தகைய தெய்வீகம் வராது. சந்நிதிக்கு வெளியே மஹாவிஷ்ணுவின் விக்கிரஹம் ஒன்றையும் செதுக்கி இருக்கின்றனர்.

பார்கவ நரசிம்மரைத் தரிசித்தால் சந்திரனால் ஏற்படும் சகல தோஷங்களும் விலகும் என்று சொல்கின்றார்கள். பாவங்கள் தொலைந்து மனதில் நிம்மதி உண்டாகும். கற்பனைத் திறன், கதைகள் எழுதும் ஆற்றல், கவிதை எழுதும் ஆற்றல், குடும்பத்தில் மனமகிழ்ச்சி, கவலை இல்லா மனம், நோயற்ற வாழ்க்கை, வெளிநாடு செல்லும் சந்தர்ப்பம் போன்றவை கிட்டும் எனச் சொல்கின்றனர். அடுத்து நாம் காணப் போவது கடைசியான கராஞ்ச நரசிம்மர்.

Friday, March 20, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் -அஹோபிலம் 11

உக்ரஸ்தம்பத்தின் உச்சிக்குப் போய்வருவது என்பது பிரம்மப் பிரயத்தனம் எனவும், நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து இன்னும் மூன்று மணி நேரம் நடைப்பயணம் இருக்கின்றது எனவும் வழிகாட்டி சொன்னார். மேலும் இப்போதே மணி மதியம் பனிரண்டு ஆகி விட்டதால் ஜ்வாலா நரசிம்மரைப் பார்த்துவிட்டு மேலே ஏறிக் கீழே இறங்க குறைந்தது ஆறு மணி நேரத்தில் இருந்து ஆகும் எனவும் கூறினார். மேலும் பாதை மிகவும் செங்குத்தாக அமைந்திருப்பதோடல்லாமல் , காட்டு மிருகங்களும் நடமாடும் என்றும் சொல்லவே பெரும்பாலோருக்கு அங்கே செல்லத் தயக்கமாகவே இருந்தது. கிட்டத் தட்ட 5 கிமீ தூரம் இருந்தது. என்பதால் உக்ரஸ்தம்பம் ஓரளவுக்கு நன்றாகவே கண்ணுக்குத் தெரிந்தாலும் அங்கே ஆடி அசைந்த காவிக் கொடியைப் பார்த்தால் நம்மை வா, வா, என அழைப்பது போலவே இருக்கின்றது. ஆனால் ஒரு சிலரை மட்டும் அழைத்துச் செல்லமுடியாது எனத் திட்டவட்டமாய்க் கூறவே. அங்கிருந்தே பகுதி, பகுதியாக உக்ரஸ்தம்பம் தரிசனம் செய்தோம். எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான். இத்தனைக்கும் அவ்வளவு பேரும் எனக்கு முன்னாலேயே சென்று கொண்டிருந்தனர். எங்கள் குழுவிலேயே மிகவும் மெதுவாய்ச் சென்றது நான் மட்டுமே. அதனாலேயே எனக்குக் களைப்பும் ஏற்படவில்லை என நினைத்தேன். ஆனால் என் கணவரோ என்னைப் பார்த்துக் கொஞ்சம் பயந்து கொண்டே வந்தார். இமயமலையில் கயிலை யாத்திரையில் திணறிய அவர் இப்போது வேகமாய் நடக்க, அங்கே சமாளித்த நான் இங்கே திணறினேன் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.

சுயபுராணம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நம் பிரயாணம் தொடர்கின்றது. மலைப்பாறை இரண்டாய்ப் பிளந்து இரு வேறு பகுதிகளாய்க் காட்சி அளிக்கின்றது நன்றாய்க் கண்ணுக்குத் தெரிகிறது. பாறையில் நடுவில் பிளவும் தெரிகின்றது. உற்றுப் பார்த்தால் பிளவின் அமைப்பு சிங்க முகமாயும் தெரிய வருகின்றது. இந்தத் தூணைத் தான் இரண்டாய்ப் பிளந்து நரசிம்மர் வெளியே வந்தார் எனவும், அந்தச் சமயம் இந்தப் பிரதேசமே பூகம்பம் ஏற்பட்டாற்போல் குலுங்கி, நடுங்கி இருக்கும் எனவும் தோன்றுகின்றது. எங்களில் சிலரின் ஏமாற்றத்தைக் கவனித்த வழிகாட்டி, மிகச் சிலரால் மட்டுமே உக்ரஸ்தம்பம் வரை போக முடிந்திருக்கின்றது எனவும், காலை சீக்கிரமாய் மலை ஏற ஆரம்பித்தால் ஒழிய அங்கே சென்று திரும்ப முடியாது எனவும் எங்களைச் சமாதானப் படுத்தினார்.

எப்படியோ எங்கே போனாலும் நமக்கு ஒரு குறை மனதில் இருக்கணும் போல என நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் பெரும்பாலும் எல்லாருமே உக்ரஸ்தம்பம் பார்க்க ஏறாமல் ஜ்வாலா நரசிம்மரைப் பார்த்துவிட்டுத் திரும்பி கொண்டே இருந்தனர். அதையும் காண முடிந்தது. மனதை வேறு வழியில்லாமல் சமாதானம் செய்து கொள்ளவும் வேண்டி இருந்தது. அடுத்து இப்போது நாம் போய்க் கொண்டிருப்பது ஜ்வாலா நரசிம்மரின் சந்நிதி. தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிம்மர் எங்கே வைத்து இரண்யனை சம்ஹாரம் செய்தாரோ அந்தக் குகைக்கு இப்போது நாம் போகின்றோம். பயணம் கடினமானதே. இந்தப் பாதையிலே தொடர்கின்றோம். நாம் நம்முடைய பயணத்தை. கருடாத்திரி, வேங்கடாத்திரி இரு மலைகளுக்கும் இடையில் அமைந்திருக்கும் அசல சாயா மேரு என அழைக்கப் படும் மலைக்குன்றத்தில் அமைந்துள்ளது ஜ்வாலா நரசிம்மர் சந்நிதி. பாறைகளைத் தாண்டிக் கொண்டும், மலையின் மீதிருந்து பொழியும் நீர்வீழ்ச்சியான பவநாசினி ஆற்றின் நீரிலும் நனைந்து கொண்டே செல்லவேண்டும். இப்போது மழைக்காலம் இல்லை என்பதால் நீரின் வேகம் குறைந்தே உள்ளது. மழைக்காலத்தில் அருவி மேலிருந்து பொழியும் பவநாசினி ஆறு வேகம் தாங்காமல் செல்லுவது கஷ்டம் என்பதால் பாறையில் ஆங்காங்கே பெரிய பெரிய சங்கிலிகள் பதிக்கப் பட்டிருக்கின்றன. இப்போதும் அவற்றைப் பிடித்துக் கொண்டே செல்வதே பாதுகாப்பு. பவநாசினி ஆறு மேலிருந்து கீழே விழ, அனைவரும் கொண்டு வந்த தண்ணீர்க் குடுவைகளில் அவற்றைப் பிடித்துக் கொள்கின்றோம். சீக்கிரமாய் தரிசனம் செய்து கொண்டு வரும்படி வழிகாட்டி அவசரப் படுத்துகின்றார். அடுத்து இன்னும் இரு கோயில்களுக்கு நாங்கள் செல்லவேண்டும் என்பதோடு இவ்வளவு உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் பட்டாசாரியாரும் சீக்கிரமாய் வீடு திரும்பவேண்டும் என்பதாலும். தண்ணீரின் சுவை திரும்பத் திரும்பக் குடிக்கச் சொல்லுகின்றது. அரை மனதோடு நீரை விட்டுப் பிரிந்தோம் நரசிம்மரைத் தரிசிக்க. கீழே கிடு கிடு பள்ளம். அதில் விழாமல் செல்லவேண்டும் அவற்றில் முன்னால் தள்ளி அமைந்திருக்கும் ஒரு பாறையில் இயற்கையாய் ஏற்பட்டிருக்கும் ஒரு குகையில் கோயில். சந்நிதியில் முக்கியமாய் மூன்று விக்கிரஹங்கள். நடுவில் உக்ர நரசிம்மர். மஹா கோபத்துடன் இரண்ய கசிபுவை மடியில் கிடத்தித் தன் இரு கை நகங்களாலே கிழித்துக் கொண்டு இருக்கும் கோலம். இடக்காலை மடக்கி, வலக்காலைத் தொங்க விட்டுக் கொண்டு மடியில் இரண்ய கசிபு. இடக்கைகளில் ஒரு கை இரண்ய கசிபுவை அசைய விடாமல் பிடித்துக் கொண்டிருக்க, மற்ற இரு கரங்கள் குடலை வெளியே எடுக்கின்றன. குடல் மாலையாகச் சூட்டப் பட்டிருக்கின்றது. மற்ற இரு கரங்களில் சங்கு, சக்கரம்.

இரு கை கூப்பித் தொழுதவண்ணம் அருகே சற்றும் பயமின்றி பிரஹலாதன் காட்சி அளிக்கின்றான். குகை அந்த ஜனவரி மாசமும் நரசிம்மரின் உக்கிரத்தாலேயோ என்னமோ சூடாய் இருப்பதாய்த் தோன்றியது. உண்மையில் இந்த உக்கிரம் தாங்காமல் குகை வெகுகாலம் நெருப்பாய்க் கனன்று கொண்டிருந்ததாயும் பச்சைப் புல்லே பற்றிக் கொள்ளும் என்பதாகவும் சொல்கின்றனர். இந்தச் சிற்பங்களின் வலப்பக்கம் நரசிம்மர் தூணைப் பிளந்து கொண்டு வெளியே வரும் அவதாரத் தருணம் மிக அருமையாய்ச் செதுக்கப் பட்டிருக்கின்றது. ஒரே இருட்டு. கவனித்துப் பார்க்கவேண்டும். இடப்பக்கம் இருவரும் சண்டைஇடும் கோலம்.

திரும்பும்போது படிகள் இருந்தாலும் அவற்றின் கீழேயும் கிடுகிடு பள்ளம் இருப்பதால் படிகளில் கவனமாய்க் கால்வைத்து இறங்கவேண்டும். குகைக் கோயிலுக்குச் சற்றுத் தள்ளி நாம் வந்த வழியிலேயே நதி அருவியாய்ப் பொழியும் இடத்துக்கு அருகே ரக்த குண்டம் என்ற இடம் உள்ளது. இங்கே நரசிம்மர் ஹிரண்யனைக் கிழித்தபோது பெருகிய ரத்தம் ஆறாய் ஓடி அங்கே தேங்கியதாம். அங்கே தண்ணீர் இப்போது சிவந்த நிறத்திலேயே குண்டத்தில் காணப் படுகின்றது. கையில் எடுத்தால் தெளிவாய் உள்ளது. நரசிம்மர் குருதி தோய்ந்த தம் கரங்களை இங்கேதான் கழுவிக் கொண்டதாயும் ஐதீகம்.

மேல் அஹோபிலம் ஸ்வயம்பு நரசிம்மர் சுக்கிரதோஷத்தைப் போக்கும் வல்லமை கொண்டவர் என்கின்றனர். ஜ்வாலா நரசிம்மர் சனியினால் வரும் தோஷங்களைப் போக்கும் வல்லமை கொண்டவர் என்கின்றார்கள். ஸ்ரீமாதா ம்ருத்யுஞ்சயர் எனவும் இவரை அழைக்கின்றனர். தீராத கடன்கள், தீராத நோய்கள், பகைவர்களின் தொல்லைகளில் இருந்து காத்தருளும் இவர் தொழிலதிபர்களையும் உருவாக்குவதாய்ச் சொல்கின்றனர்.

Wednesday, March 18, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்! - அஹோபிலம் 10

நடந்து போகிறவங்க பெரும்பாலும் ஜ்வாலா நரசிம்மரிடம் இருந்தே ஆரம்பிக்கிறாங்க. அது தான் முதலில் தரிசனம் செய்யவேண்டியது என்றும் சொல்கின்றனர். ஆனால் நாம செளகரியத்துக்காக முதல்நாள்ஜீப்பில்/ ஜீப்பா அது? சும்ம்ம்ம்மா! போக வேண்டியவற்றுக்குப் போயிட்டு வந்துட்டோம். அங்கேயும் நடந்தே தான் போகிறவங்க இருக்காங்க என்றாலும் தூரம் அதிகம். நம்மளை மாதிரி சொகுசாப் பழகினவங்களுக்குக் கஷ்டம். இப்போ ஜ்வாலா நரசிம்மரைப் பார்ப்போம். கையில் கைத்தடியோடு அனைவருக்கும் பயணம் ஆரம்பிக்கிறது. கொஞ்ச தூரம் போகும் முன்னரே கூட வந்தவர்களில் ஒரு பெண்மணியின் கணவருக்கு மூச்சுத் தொந்தரவு அதிகம் ஆக அவங்க கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு வரோம்னு சொல்ல, மற்றவர்கள் நடக்க ஆரம்பித்தோம். வழிகாட்டியான சுப்பராயுடு முன்னேயும்,பின்னேயும் கவனித்து ஆட்களை ஒழுங்காய் வரச் செய்யப் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தார். துருத்திக் கொண்டிருக்கும் பாறைகள். செங்குத்தான மேடுகள். வழுக்கும் இடங்கள். எனப் பல்வேறு கடினமான இடங்களையும் கடந்து முழுக்க முழுக்க மலை ஏற்றம். செருப்பு வழுக்குகின்றது. நடு, நடுவே பவநாசினி நதி மலை மேலிருந்து கீழே இறங்கும் இடங்கள்.

மழைக்காலம் என்றால் நீரில் இறங்கியே செல்லவேண்டும். இப்போது நீரின் ஓட்டம் கணுக்காலுக்கும் கீழே இருக்கிறது. ஆகையால் செல்லலாம், என்றாலும் வழுக்கும் பாறைகள். நதியைக் கடந்து மேலே ஏற வேண்டுமே! நதி பள்ள்ள்ள்ள்ளம், மேஏஏஏஏஏஏலே ஏறணும். ஒரு பக்கம் சுப்பராயுடு, இன்னொரு பக்கம் சுரேஷ், வேறொரு இடத்தில் கூட வந்தவர்களில் ஒரு இளைஞர் நின்று கொண்டு ஏற முடியாதவங்களை ஏற வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஓம் நமோ நாராயணாய! என்ற நாம ஜபத்தை இடைவிடாமல் அனைவரும் உரத்து ஒலித்து, ஜபிக்க ஒவ்வொருவராய் ஒரு வழியாய் மேலே ஏறுகின்றோம். சுப்பராயுடு, "யாரும் அவரவர் வலப்பக்கம் திரும்பவேண்டாம். நேரே பாதையைப் பாருங்க!" என எச்சரிக்கைக் குரல் கொடுக்கின்றார். ஆவல் மீதூற வலப்பக்கம் பார்த்தேன் நான். கடவுளே! கிடு கிடு பாதாளம். நல்லவேளையாய்த் தலை சுற்றவில்லை. மலைகள் ஏறி, ஏறி ஒரு மாதிரியாய்ப் பழக்கம் ஆகி விட்டிருக்கு போல! என்றாலும் சுப்பராயுடுவும், என் கணவரும் கொஞ்சம் பயப்பட, நான் சமாளித்துக் கொண்டு அடுத்த பாறையின் மேலே ஏறிக் கொஞ்சம் ஒத்தையடிப் பாதை எனப்படும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அப்போது தான் கைத்தடியின் உதவியும் புரிய வருகின்றது. என்றாலும் செங்குத்துப் பாறைகளில் ஏறும்போதெல்லாம் கைத்தடி உதவவில்லைதான். மேலே ஒருத்தர் நின்று கொண்டு நம்மை ஏற்றியே விடவேண்டி இருந்தது. பாறைகளின் உயரமும் அதிகம் இருப்பதால் கொஞ்சம் கஷ்டமாவே இருக்கு. ஆனால் "பொதிகை" தொலைக்காட்சியின் வேளுக்குடி கடந்த ஒரு வாரமாய் தினமும் இப்போ ரொம்ப செளகரியம் பண்ணி இருப்பதாய்ச் சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போ நம் முன்னோர்கள் போகும்போது எவ்வளவு கஷ்டமாய் இருந்திருக்கும்? நினைத்துப் பார்க்கவே முடியலை. மேலும் "நவ அஹோபிலம்" என்னும் ஊரும் ஒன்று புதியதாய் நிர்மாணிக்கப் படுவதாயும், ஸ்ரீமந்நாராயணனின் பனிரண்டு திருநாமங்களின் பெயரால் குடி இருப்புகள் கட்டப் படுவதாயும், குறைந்த பட்சமாய் 2,000/- நபர்களுக்குக் குறையாமல் அதில் தங்க முடியும் எனவும் தெரிவிக்கின்றார். அது முடிய அடுத்த வருஷம் ஆகலாம் என்றும் சொல்கின்றார். இது அவர் சொல்லியே ஒரு வருஷம் ஆயாச்சு. நிகழ்ச்சி மறு ஒளிப்பதிவு. ஆகையால் இன்னமும் நிறைவேறவில்லை என்றே நினைக்கின்றேன்.
இந்த ஜ்வாலா நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே பாதி தூரத்தில் தென்படுகின்றது உக்ர ஸ்தம்பம். நாங்கள் நின்று பார்த்த இடத்தில் இருந்து குறைந்தது ஐந்து கிமீட்டராவது மேலே ஏறவேண்டும். மிக மிகச் செங்குத்தான பாறைகள். ஒரு அடி எடுத்து வைப்பதே கஷ்டம். முட்புதர்கள். பாதம் படும்போதே பாறைக் கற்கள் உருளுகின்றன. கவனமாய் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கவேண்டும். கொஞ்சம் தப்பினாலும் அதோ கதிதான். வந்தவர்களில் பலரும் அங்கே போவதின் கஷ்டத்தை அறிந்து கொண்டு வேண்டாம், இங்கே இருந்தே பார்க்கின்றோம் என முடிவெடுக்க, மிகச் சிலருக்காகக் கூட்டிச் செல்ல பயண ஏற்பாட்டாளரும் யோசிக்கக் கொஞ்சம் கிட்டே போய் உக்ர ஸ்தம்பம் தரிசிக்கலாம் எனப் பயணம் மேலே தொடர்ந்தது.

Monday, March 16, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் -அஹோபிலம் 9


மறுநாள் காலை எழுந்து இன்று சீக்கிரமே எழுந்து மலை ஏறவேண்டும் என முன்னேற்பாடு செய்து கொண்டதால் விடிகாலை 4 மணிக்கே எழுப்பி வெந்நீர் கொடுத்துக் குளித்துத் தயாராகச் சொல்லி இருந்தனர். ஆகவே நாங்களும் சீக்கிரமே தயார் ஆனோம். எனினும் இன்று மேல் அஹோபிலம் வரையில் பேருந்திலேயே செல்ல ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதன் பின்னரே ஜ்வாலா நரசிம்மர், உக்ர ஸ்தம்பம், பார்கவ நரசிம்மர், கராஞ்ச நரசிம்மர் போன்றவர்களைத் தரிசனம் செய்து கொண்டு திரும்ப வேண்டும். மாலை கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு இரவு சரியாக எட்டு மணிக்குச் சென்னை திரும்பவேண்டும் எனப் பயணத் திட்டம் அறிவிக்கப் பட்டது. காலை ஆகாரம் சற்றே தாமதம் ஆனதால் கிளம்பும்போதே கொஞ்சம் தாமதமும் ஆனது. என்றாலும் அனைவரும் கிளம்பி சென்னையில் இருந்து வரும்போது எந்த இருக்கையில் அமர்ந்தோமே அதே இருக்கைகளில் அமர்ந்து வருமாறு அறிவுறுத்தப் பட்டோம். அவ்வாறே அனைவரும் அமர்ந்ததும், வழிகாட்டியான சுப்பராயுடு, ஒருங்கிணைப்பாளரும், அமைப்பாளரும் ஆன திரு சுரேஷ் ஆகியோரும் ஏறிக் கொண்டனர். வண்டி கிளம்பியது.

கருடாத்ரி, வேதாத்ரி இரு மலைகளுக்கிடையே அமைந்துள்ள பவநாசினிக் கரையில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் பவநாசினி நதிக்கரையில் கீழ் அஹோபிலத்தில் இருந்து எட்டு முதல் பத்து கிமீ தூரத்தில் அமைந்துள்ளது மேல் அஹோபிலம் கோயில். மலைப்பயணம் தான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,000 அடிக்கு மேல் உயரத்தில் இருப்பதாய்ச் சொல்கின்றனர். கீழ் அஹோபிலம் கோயிலையும், இந்த மேல் அஹோபிலம் கோயிலையும் தான் நவ நரசிம்மர்களிலேயே அதிகச் சிரமம் இல்லாமல் தரிசிக்க முடியும். ஆலயம் சம தளத்தில் அமையவில்லை. மலையில் இருப்பதால் குன்றுகளின் ஏற்ற இறக்கத்திற்கேற்றவகையிலேயே பரந்து அமைந்துள்ளது. மூலவர் சந்நிதி குகையின் அமைப்பில் உள்ளது. உக்ர நரசிம்மர். ஆனால் மூர்த்தி சிறியவர். மூர்த்தி சிறிதானாலும் இவரின் கீர்த்தி மட்டுமின்றி உக்ரமும் பெரியதாகவே உள்ளது. மூலவருக்கு அருகே உற்சவர் மஹாலட்சுமி சமேதராய் உள்ளார். மூலவரின் உக்கிரத்தைத் தணிக்கும் விதமாய் அருமைச் சீடன் பிரஹலாதன் நேரெதிரே கூப்பிய திருக்கரங்களுடன் காட்சி அளிக்கின்றான். இந்த உக்ர நரசிம்மரைச் சுயம்பு மூர்த்தி எனச் சொல்கின்றனர். ஹிரண்ய வதம் முடிந்ததும், இந்தக் குகையில் வந்து ஆக்ரோஷம் தணியாமல் இருக்கும்போதே அமர்ந்ததாயும், தேவாதி தேவர்களும், கருடனும் இங்கே வந்து தரிசித்ததாயும் சொல்கின்றனர். ஸ்ரீராமர் சீதையைத் தேடி அலைந்த போது இந்தச் சிங்கவேள் குன்றத்துக்கும் வந்ததாயும், நரசிம்மரை வழிபட்டதாயும் சொல்கின்றனர். மூலவர் இருக்கும் குகையிலேயே நாம் நுழையும் முன்னரே இடது பக்கமாய் ஒரு புறத்தில் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய் ஒரு சிவலிங்கம். பக்கத்திலேயே ஸ்ரீராமர்.

ஆதிசங்கரர் காபாலிகர்களிடம் தன் கரத்தை இழந்து கராவலம்ப ஸ்தோத்திரம் இயற்றிய இடம் இதுவே எனப் படுகின்றது. தன் இழந்த கரத்தை அவர் மீட்டுக் கொண்டதும் இவரின் அருளாலேயே எனச் சொல்கின்றனர். ஆதிசங்கரர் தான் இங்கே வந்ததின் அடையாளமாய் சிவலிங்கத்தையும், நரசிம்ம சுதர்சன சக்கரத்தையும் பிரதிஷ்டை செய்துள்ளதாயும் சொல்கின்றார்கள். தாயார் ஆன செஞ்சுலக்ஷ்மியின் சந்நிதி தனியாய் அமைந்துள்ளது. இந்தச் சந்நிதிக்கு வெளியே, உள்ளது ஒரு தடுப்புப் பகுதி. உள்ளே நுழையும் முன்னரே இந்தத் தடுப்புப் பகுதியைத் தாண்டிக் கொண்டே செல்ல வேண்டும். அந்தப் பகுதியில் யாரும் தங்கள் பாதங்களை வைக்க வேண்டாம் என்பதற்காகவே வட்டமான ஒரு தடுப்பு. முன்னர் குகை போன்ற அமைப்பில் இருந்திருக்க வேண்டும்.உள்ளே பாதாளத்தில் இதே போன்ற ஒரு கோயில் இருந்ததாயும் சொல்கின்றனர். பதினாறாம் நூற்றாண்டில் அஹோபிலம் மடத்தைச் சேர்ந்த ஆறாம் ஜீயர் ஸ்ரீசெஷ்ட பராங்குச யதீந்திர மஹா தேசிக ஸ்வாமிகள் வழிபாடு நடத்த இந்தக் குகைக்குள்ளே இறங்கிச் சென்றதாயும், அங்கே வைகுந்தனைத் தரிசித்துவிட்டுப் பின்னர் அவர் வெளியே வரவே இல்லை எனவும், குகை பின்னர் மூடப்பட்டு இப்போது அவரின் அதிஷ்டானம் போல் சந்நிதிக்கே நேர் எதிரே இருப்பதாயும், அனைவராலும் வழிபாடுகள் நடத்தப் படுவதாயும் சொல்கின்றார்கள்.ஆலயத்தின் உள்ளே மிகக் குளுமையாகவே இருக்கின்றது. அங்கே அமைந்துள்ள ஒரு மண்டபத்தின் மேல் தளத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு பதினாறு கால் மண்டபம். அந்த மண்டபத்தில் இருந்து சுற்றுப் புறக் காட்சிகளையும் மலைக்குன்றங்களையும் காண முடிகின்றது. கோபுர தரிசனமும் கிடைக்கின்றது. மனிதன் வந்து, வந்து போய்க் கொண்டிருந்தாலும் இயற்கையை இன்னும் இங்கே அழிக்கத் துணியவில்லை. இன்னமும் தனக்குள்ளே சில அதிசயங்களையும், ரகசியங்களையும் பொத்தி வைத்துள்ளது இந்த மலை. இதைப் பற்றி எங்களுக்குள் ஒரு சிறு விவாதம் நடந்தது.

மலை ஏறவும், நடந்து ஏறிச் செல்லவும் நல்ல பாதை போடவேண்டும் என ஒரு கட்சியினரும், கூடாது என எங்களில் சிலரும் சொல்லிக் கொண்டே இருந்தோம். நாங்க என்ன சொல்லி இருப்போம் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகின்றேன். அதுக்குள்ளே ஒருங்கிணைப்பாளர் வந்து மலை ஏற வேண்டும் எனவும், நடைப்பயணம் தான் எனவும் கிட்டத் தட்ட 10 முதல் 15 கிமீட்டருக்கு மேல் நடக்க வேண்டும் எனவும், கடினமான, செங்குத்தான மலைப்பாதை ஆகவே முடியாதவ்ர்கள் இங்கேயே தங்கி விடலாம் எனவும் அறிவுறுத்தினார். திரும்பிச் செல்லவோ, அங்கேயே தங்கவோ யாருக்கும் இஷ்டமில்லை. அனைவரும் மலை ஏறவே விரும்பினோம். குடி நீர் பாட்டில்கள் தவிர, கைப்பைகள், சாப்பிட ஏதானும் என்று எடை குறைவாய் வைத்துக் கொள்ளும்படியும், பெண்கள் கூடியவரையில் புடவையை மேலே தூக்கிச் செருகிக் கொண்டு நடக்குமாறும் அறிவுறுத்தினார்கள். மலை ஏற்றத்தின் போது புடவை தடுக்கிக் கீழே விழுந்தால் பாறைகளில் காயம் படுவதோடு அல்லாமல், உயிரிழப்பும் ஏற்படலாம் என்பதால் திரும்பத் திரும்ப அறிவுறுத்துகின்றனர். அங்கேயே தடிக் கம்புகள் கொடுக்கின்றனர். அவற்றை வாங்கி அனைவருக்கும் கொடுக்கின்றார் வழிகாட்டி. தடிக் கம்புகளை மலையில் இருந்து கீழே இறங்கியதும் திரும்பிக் கொடுக்க வேண்டும். மலை ஏற்றத்தின் போது அந்தத் தடிக்கம்பு எவ்வளவு வசதியாக இருக்கும் என்பதைச் சொல்லவே வேண்டாம். அடுத்து ஜ்வாலா நரசிம்மர்.

Thursday, March 12, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் 8

நான்காவதாய்த் தரிசித்த யோக நரசிம்மர் புதனால் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் வல்லமை கொண்டவராய் வேதாத்திரி மலையின் மேற்குப் பக்கத்தில் எழுந்தருளி இருக்கின்றார். அடுத்துத் தரிசித்த ஐந்தாவது நரசிம்மர் வாராஹ நரசிம்மர். இரு அவதாரங்களையும் ஒருசேரக் கண்டோம். வாராஹ அவதார மூர்த்தம் அருகேயே நரசிம்ஹரையும் காணமுடியும். படங்கள் என்ன காரணத்தாலோ அப்லோடே ஆக மாட்டேனென்கிறது. கூகிளாண்டவர் கொடுத்தால் அவர் தயவில் இன்னிக்குப் போட முயல்கின்றேன். வாராஹ நரசிம்மர் குருவால் ஏற்படும் சகல தோஷங்களையும் போக்குபவர். இயல், இசை, நாடகம் போன்ற சகல கலைகளையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும் வல்லமை பெற்றவர். நீதித்துறை, வேதங்கள் ஆகியவற்றில் உயர்ந்திருக்கும் நிலையை அருளுவார். அடுத்தவர் கீழ் அஹோபிலம் பிரஹலாத வரதர்.கோயில் வளாகத்தினுள் நுழையும் முன்னேயே முன் குறிப்பிட்ட ஜயஸ்தம்பத்தைக் காண முடிகின்றது. ஆலயத்தின் தென்பகுதியில் புஷ்கரணி சதுரவடிவில் அமைந்துள்ளது. பாறைப் படிகள். திருக்குளம் ஆழம் அதிகம் என்பதால் இறங்க வேண்டாம் எனவும், நீராட வேண்டாம் எனவும் யாத்ரீகர்கள் எச்சரிக்கப் படுகின்றனர். பிடிவாதம் பிடிக்கிறவங்க தக்க துணையுடன் நீராடுவதே பாதுகாப்பானது எனவும் எச்சரிக்கப் படுகின்றனர். உயரமான ராஜ கோபுரத்தைத் தாண்டி உள்ளே போனால் மூன்று பிரஹாரங்களோடு அமைந்த கோயில். முகப்பில் உள்ள மண்டபம் ரங்க மண்டபம் என அழைக்கப் படுகின்றது. கோயிலின் சிற்ப அமைப்புகள் மிகச் சமீப காலத்தியதாய்த் தென் படவே அங்கே உள்ளவர்களை விசாரித்தோம். சரியாய்ச் சொல்லத் தெரியலை. மொழிப் பிரச்னை அவ்வளவு இல்லை. தமிழ் நன்றாகவே புரிந்து கொள்கின்றனர். என்றாலும் விடாமல் தேடி விசாரித்ததில் ஒருவேளை 15, 16-ம் நூற்றாண்டாய் இருக்கலாம் எனத் தெரிய வந்தது.

ட்ராவல்ஸ் காரர் கொடுத்த கையேடும் அப்படியே குறிப்பிடுகின்றது. தூண்களில் சிற்ப, அற்புதங்களே நிறைந்துள்ளன. நரசிம்மரின் பல்வேறு விதத் தோற்றங்களோடு இசைக்கலைஞர்களும், நாட்டிய மங்கைகளும் வெவ்வேறுவிதமான நாட்டியக் கோலங்களில் காட்சி அளிக்கின்றனர். உடல் அசதியாலும், நேரக் குறைவாலும் சரிவரக் கவனிக்க முடியலை. உள்ளே நுழைந்ததும் இருக்கும் சிறு மண்டபத்தைத் தாண்டினால் உள்ளே மூலவர் சந்நிதி. மஹா சாந்தம். பக்கத்தில் மஹாலட்சுமித் தாயார். இடக்காலை மடக்கி, வலக்காலைத் தொங்க விட்டு சுகாசனத்தில் வீற்றிருக்கின்றார். சங்கு, சக்ரதாரியாய், வலக் கீழ்க்கரம் எப்போவும் போல் அபயம், நானிருக்கின்றேன், அஞ்சாதே, எனச் சொல்லுகின்றது. இடக் கீழ்க்கரம், அன்போடும், ஆசையோடும் தாயாரை அணைத்துக் கொண்டிருக்கின்றது.

திருப்பதியில் இருந்து வெங்கடாஜலபதி இங்கே வந்து நரசிம்மரைத் தரிசித்துத் தன் கல்யாணத்துக்கு ஆசிகள் பெற்றுச் சென்றாராம். வெங்கடாஜலபதிக்குத் தனி சந்நிதி இருக்கின்றது. மூலவர் சந்நிதியில் உற்சவர்கள் பிரஹலாத வரதர். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய்க் காட்சி அளிக்கின்றார். வெங்கடாசலபதிக்கு அருகே இருக்கும் மண்டபம் கல்யாண மண்டபம் எனவும், திருக்கல்யாண கோலத்தில் இறைவன் அங்கே எழுந்தருளுவார் எனவும் சொன்னார்கள். தனியாத் தாயார் சந்நிதியும் உள்ளது. ஆழ்வார்களுக்கும் சந்நிதிகள் உள்ளன. ஆண்டாளும் தனியே சந்நிதியில் குடி கொண்டிருக்கின்றாள். சந்நிதிக்கு நேர் வெளியே துவஜஸ்தம்பம். கீழ் அஹோபிலரைத் தரிசித்துக் கொண்டு ஓய்வெடுக்கச் செல்கின்றோம். இனி நாளைக்கு மேல் அஹோபிலம், ஜ்வாலா நரசிம்மர்,உக்ர ஸ்தம்பம், பார்கவ நரசிம்மர், கராஞ்ச நரசிம்மர், மேல் அஹோபிலம் தவிர மற்றவை நடைப்பயணமே. ஆகவே ஓய்வு தேவை.

Tuesday, March 10, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் -7

அஹோபிலம் மடம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய மடங்களிலே மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இது கிட்டத் தட்ட 600 வருடங்கள் முன்பு அஹோபிலத்தில் ஸ்ரீமத் ஆதிவண் சடகோபன் என்னும் ஜீயர் ஸ்வாமிகளால் ஆரம்பிக்கப் பட்டது. இவருடைய பூர்வாசிரமப் பெயர் கிடாம்பி ஸ்ரீநிவாஸாச்சார் என்பதாகும். காஞ்சியில் உள்ள கடிகாசதம் அம்மாளின் மாணாக்கர் ஆவார். ஒரு நாள் ஸ்ரீநிவாஸாச்சார் அவர்கள் கனவில், லக்ஷ்மி நரசிம்மர் தோன்றினார். அஹோபிலம் இருக்குமிடம் சொல்லி, அங்கே இருக்கும் திருமேனி வடிவிலேயே தோன்றி, ஸ்ரீநிவாஸாச்சாரை அங்கே வரச் சொல்கின்றார். தன்னுடைய ஆசாரியரைக் கேட்டுக் கொண்டு அவர் சம்மதத்துடன் ஸ்ரீநிவாஸாச்சார் அஹோபிலம் சென்றார்.

அஹோபிலத்தில் நரசிம்மரே ஸ்ரீநிவாஸாச்சாருக்கு சந்நியாசம் கொடுத்து, அவருக்கு "சடகோப ஜீயர்" என்ற பட்டப் பெயரும் சூட்டினார். ஆழ்வார் திருநகரி ஆதிபிரானால் வண் என்ற அடைமொழியும், நம்மாழ்வாரால் ஆதி என்ற அடைமொழியும் பின்னாட்களில் சேர்க்கப் பட்டது. அதற்குப் பின்னர் ஜீயர் அவர்கள் ஆதி வண் சடகோபஜீயர் என அழைக்கப் பட்டு வந்தார்.

ஒரு முறை நவநரசிம்மர்களில் ஒருவரான மாலோல நரசிம்மர் ஆதிவண் சடகோபர் கைகளில் வந்து குதித்தார். தன்னை எடுத்துக் கொண்டு நாடு பூராவும் பயணம் புரிந்து பிரசாரம் செய்யச் சொல்கின்றார். இதன் பின்னரே அஹோபிலம் மடம் உருவானது. மாலோல நரசிம்மர் சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்துக்கும் சென்றார், ஆதிவண் சடகோபருடன். செல்லும் இடங்களில் எல்லாம் பக்தர்களுக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்து பாரா ந்யாசமும் நிறைவேற்றினார்.

அறுநூறு வருடங்கள் முன்னால் ஆரம்பித்த இந்தப் பயணம் இன்று வரையில் அடுத்தடுத்து வரும் ஜீயர்களால் தொடரப் படுகின்றது. அஹோபிலம் வந்த ஸ்ரீநிவாஸாச்சாரை மலைக்குகையில் ஒரு வயதான யோகி சந்தித்து அவருக்கு வேதாந்தங்களைக் கற்பித்து, நரசிம்ம மந்திரத்தைக் கற்பித்து, த்ரிதண்டத்தை வழங்கி, சங்கு சக்கரங்களையும் வழங்கியதாகவும் சொல்கின்றனர். அந்த யோகி நரசிம்மரே அன்றி வேறு யாரும் இல்லை எனச் சொல்லப் படுகின்றது.

தமிழில் அழகிய சிங்கர் என அழைக்கப் படும் இந்த முதல் ஜீயரால் நம்மாழ்வாரின் மறைக்கப் பட்ட கோயில் ஆழ்வார் திருநகரியில் மறு ஸ்தாபிதம் செய்யப் பட்டது. இன்றைக்கும் மடத்தில் முதல் பொறுப்பேற்றுக் கொள்ளும் புதிய ஜீயர்கள் முதலில் ஆழ்வார் திருநகரி சென்று நம்மாழ்வாரைத் தரிசனம் செய்து வருவது வழக்கமாய் இருந்து வருகின்றது. ஏழாவது ஜீயரின் காலத்தில் கீழ் அஹோபிலம் கோயில் மாற்று மதத்தினரால் முற்றுகைக்கு உட்பட, விஜயநகர அரசன் ஆன ரங்க தேவ ராயர் போரிட்டு ஆலயத்தை மீட்டுக் கொடுத்தார். அதன் வெற்றிச் சின்னமாய் ஜயஸ்தம்பம் கீழ் அஹோபிலம் கோயில் முகப்பில் இன்றும் விளங்கி வருகின்றது.

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நான்கு நூற்றாண்டுகளாய்க் முழுமையடையாமல் இருந்த ராஜ கோபுரம் 1979-ல் அப்போதைய 44-வது ஜீயர் அவர்களால் கட்டி முடிக்கப் பட்டது. மாலோல நரசிம்மரின் விக்ரஹத்தைத் தினசரி வழிபாடு செய்வதுண்டு. தாங்கள் மேற்கொள்ளும் ஆன்மீகப் பயணங்களிலும் மாலோல நரசிம்மரின் விக்கிரஹத்தை எடுத்துச் சென்று பூஜைகள் செய்கின்றனர்.

Sunday, March 08, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் 6


அஹோபிலம் மடம் பற்றியும், ஜீயர் பற்றியும் மெளலி எழுதச் சொல்லி இருக்கின்றார். இது பற்றி இன்னும் தகவல்கள் திரட்டணும். இன்றைய தினசரி நாள் காட்டியில் அஹோபிலம் மடத்தின் 37வது பட்டம் அழகிய சிங்கரின் திரு நட்சத்திரம் எனச் சொல்லி இருக்கின்றது. அஹோபிலம் மடம் ஜீயர்களை வணங்கிவிட்டு, இப்போது நாம் யோக நரசிம்மரைக் காணப் போகலாம்.

எத்தனையோ யுகங்கள் மாறியும் பிரஹலாதன் இங்கே இருந்ததற்கான சான்றுகள் இருப்பதாயும், அவை மாறவில்லை எனவும் கூறுகின்றனர். வேதாத்திரி மலைத் தொடரின் மேற்கே தொலைவாய் மரங்கள் அடர்ந்த பகுதியில் அமைந்துள்ளது யோக நரசிம்மரின் ஆலயம். ஹிரண்ய வதம் முடிந்ததும், நரசிம்மரால் பிரஹலாதனுக்குச் சில யோக முத்திரைகள் கற்பிக்கப் பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. அதன் ஒரு நிலையே இங்கு எழுந்தருளி இருக்கும் கோலம். தென் திசை நோக்கி நரசிம்மர் வீற்றிருக்கின்றார். மேற்கரங்கள் இரண்டும் சங்கு, சக்கரங்களோடும், கீழ்க்கரங்கள் இரண்டிலும், இரு கால்களிலும் யோக முத்திரைகள் காட்டியும் அமர்ந்திருக்கும் திருக்கோலம்.

புதன் கிரஹத்தால் ஏற்படும் சகல பாவங்களையும் தோஷங்களையும் போக்கும் வல்லமை கொண்டவர். பக்தப்பிரஹலாதனுக்கு யோக குரு. இங்கே காசி ரெட்டி என்பவர் இவ்வாலயத்தின் அருகேயே இன்னொரு யோக நரசிம்மரை நிர்மாணித்திருக்கின்றார் எனச் சொல்கின்றனர். அவ்வாலயத்துக்கு நாங்கள் செல்லவில்லை. பசித்தவர்களுக்கு உணவு வழங்கி வரும் மாபெரும் அன்னதானத்தை இன்றளவும் இவரின் சந்ததிகள் தொடர்ந்து நடத்தி வருவதாயும் சொன்னார்கள். அஹோபிலத்துக்குப் பசியுடன் வரும் யாத்ரீகர்கள் இரவு, பகல் எந்நேரமாயினும் நள்ளிரவானாலும் முகம் சுளிக்காமல் இங்கே அன்னதானம் வழங்கப் படுகின்றது என்பது மிக மிக வியப்பான ஒரு செய்தி. அனைவருமாய்ச் சேர்ந்து பணம் திரட்டி ஒரு குறிப்பிட்ட அளவுத் தொகையை நாங்கள் நாற்பத்தி ஐந்து பேர் சார்பிலும் அளித்தோம். அடுத்து வராஹ நரசிம்மர்.

அஹோபிலம் பற்றிய தொலைக்காட்சித் தொகுப்பு பொதிகைத் தொலைக்காட்சியில் போன வாரம் முதல் மாலை 6-30 மணி அளவில் காட்டப் படுகின்றது. வாராஹ நரசிம்மர் அடுத்து நாம் காணப் போவது. வைகுந்தத்தின் துவாரபாலகர்கள் ஆன ஜயன், விஜயன் இருவருக்கும் கிடைத்த சாபத்தால் இருவரும் ஹிரண்யாட்சன், ஹிரண்யகசிபுவாய்ப் பிறப்பதும் ஹிரண்யாட்சன் பூமி தேவியைத் தூக்கிச் சென்று பாதாளத்தில் கொண்டு வைக்கின்றான். மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் எடுத்துச் சென்று தன் கொம்புகளால் பூமியைத் துளைத்துக் கீழே போய் பாதாளத்தில் இருந்து பூமா தேவியைத் தன் கூரிய மூக்கின் முனையில் வைத்துத் தூக்கி வருகின்றார். அதற்குப் பின்னரே ஹிரண்யாட்சனின் தம்பியான ஹிரண்ய கசிபுவைக் கொல்ல எடுத்த இந்த நரசிம்ம அவதாரம். இங்கே இரு அவதாரங்களும் பக்கத்தில் பக்கத்தில் காணக் கிடைக்காத தரிசனமாய் உள்ளது. சற்றே பெரிய வராஹ உருவத்தின் மேல் அமர்ந்திருக்கும் பூமாதேவியையும், அருகே நரசிம்மர் அவதாரத்தையும் ஒரு சேரக் காண முடியும்.

பிரஹலாதனின் குருகுலம் இங்கே தான் அமைந்திருந்ததாய்ச் சொல்கின்றனர். வேதாத்திரி மலையின் வழுக்கும் செங்குத்துப் பாறைகளில் கவனமாய் மெள்ள ஏறி, இறங்கினோமானால், திடீரென ஒரு பெரிய பாறை காணப்படுகின்றது. இதை பிரஹலாத மெட்டு அல்லது பிரஹலாத மேடு என்கின்றனர். பாறைகள் ஒன்றோடொன்று புரட்டிப் போடப் பட்டாற்போல் காட்சி அளிக்கின்றது. இயற்கையாகவே ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி வைத்தாற்போல் காட்சி அளிக்கின்றது. அவற்றில் காணப்படும் சிறு சிறு வட்டங்கள், கோடுகள், கோட்டுடன் கூடிய அமைப்புகள் ஒருவேளை பிரஹலாதன் எழுதிப் பார்த்த லிபியாய் இருக்கலாம் என ஊகிக்கின்றனர்.

படங்கள் அப்லோட் ஆகவில்லை, மன்னிக்கவும். நாளை மீண்டும் முயல்கின்றேன்.

Saturday, March 07, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்! அஹோபிலம் 5

இந்த மலைப் பகுதி கிழக்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்தது என்றாலும், இரு மலைகளாய் இருக்கின்றன. இவ்விரண்டு மலைப்பகுதிகளிலுமே நவ நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன. தெலுங்கில் நல்லமலை என அழைக்கப் பட்டிருக்கின்றது. நல்ல என்றால் கறுத்த என்ற பொருள் எனச் சொல்கின்றனர். மரங்களால் சூழ்ந்து அடர்ந்த காடாக இருள் அடர்ந்து கருங்கானகமாய் இருந்த காரணத்தால் இந்தப் பெயர் வந்தது எனச் சொல்கின்றனர். இப்போதும் மரங்கள் அடர்ந்தேதான் காணப் படுகின்றது. காட்டு மிருகங்களும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். மலையின் ஒரு பகுதி கருடாசலம் எனவும் மற்றொரு பகுதி வேதாசலம் எனவும் அழைக்கப் படுகின்றது.

ஹிரண்யனுக்காக நரசிம்ம அவதாரம் எடுக்கத் தன்னிடத்தை விட்டு ஸ்ரீமந்நாராயணன் வந்ததால் அவர் பிரிவைத் தாங்க முடியாமலும், அவருக்குச் சேவை சாதிக்க முடியாமலும் தவித்த கருடாழ்வார் அவர் இருக்குமிடம் தேடி வந்தார். நரசிம்மமோ? ஒளிந்து வேடிக்கை காட்டியது. தன் பக்தனுக்காக க்ஷண நேரம் கூடத் தாமதிக்காமல் தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்ட நரசிம்மத்தின் பெருமையை உணர்ந்த கருட பகவான், தானும் அவரைத் தரிசிக்க வேண்டிப் பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனை மட்டும் போதாது என உணர்ந்து தவம் இருக்க ஆரம்பித்தார். கருடன் தவம் இருந்த மலையே கருடாத்திரி எனவும் கருடாசலம் எனவும் அழைக்கப் படுகின்றது. வேதாத்திரி மலையின் ஒரு பக்கம் இருந்து எதிரே நோக்கினோமானால் கருடனின் மூக்கும், இருபக்கமும் விரிந்த சிறகுகள் போல மலைச் சிகரங்கள் இருப்பதையும் காணலாம்.ஹிரண்யனைக் கொன்ற அதே மடியின் மேலே சாட்சாத் ஸ்ரீ என்னும் அந்த மஹாலக்ஷ்மியை இருத்திய மலைக்குன்றமே வேதாத்திரி மலைத் தொடராகும். இவ்விரண்டு மலைத் தொடர்களும் சேர்ந்தே அஹோபிலம் என அழைக்கப் படுகின்றது. இவற்றின் நடுநாயகமான குன்றே ஸ்ரீஜ்வாலா நரசிம்மர் எனப் படும் உக்கிர நரசிம்மர் ஹிரண்யனை வதைத்த இடமாகும். அதற்கும் போவோம். கொஞ்சம் காத்திருக்கணும். இரு மலைகளின் உயரத்திலும், மாபெரும் குகையில் நரசிம்மமாய் அவதரித்த இறைவனைக் கண்டு கருடன் பரவசம் அடைந்து "அஹோபிலம், மஹாபலம்" எனத் துதித்து வணங்கியதாயும் அதனாலும் அஹோபிலம் எனப் பெயர் ஏற்பட்டதாயும் சொல்கின்றனர். தவிர நரசிம்ம அவதாரச் சிறப்பைப் போற்றித் தேவாதிதேவர்களும் வந்து அவர் திருவடி போற்றி வணங்கி, "அஹோ!! பலம்!!!, அஹோ!!! பலம்!!!!" என வியந்து பாராட்டியதாலும் அஹோபலம் என்பது நாளடைவில் திரிந்து அஹோபிலம் எனப்பட்டதாகவும் அறிகின்றோம். பிலம் என்றாலேயே குகை எனப் பொருள். குகைகளுக்குள்ளேயே இங்கே நரசிம்மரைக் காணமுடியும்.

இறைவன் தன் பக்தனுக்காக விரும்பி எடுத்த வடிவம் நரசிம்ம வடிவம். அதனாலேயே சிங்கவேள் எனத் தமிழில் சொல்லுகின்றனர். சிங்கமாய் விரும்பி வேட்கையுடன் வந்த குன்றம் இது என்பதாலும் சிங்கவேள் குன்றம் எனப் பெயர் ஏற்பட்டதாய்த் தெரிய வருகின்றது. மேலும் ருத்ர ரூபமாய் மட்டுமே அறிந்த நரசிம்மரின் வேறு பல தோற்றங்களையும் கொண்டது இந்த நவநரசிம்மர்களின் சந்நிதிகள். கீழ் அஹோபிலத்தில் பிரஹலாத வரதரின் ஆலயம். மேல் அஹோபிலத்தில் (இதற்குப் பேருந்து, கார், வேன்கள் செல்லும்) மலைச்சாரலில் ஆலயம் அஹோபில நரசிம்ம ஆலயமாகப் பிரதான ஆலயமாய் இருக்கின்றது. மலைச்சாரலில் அதன் மடிப்புகளில் ஒளிந்துள்ள மறைவான குகைப் பகுதிகளிலேயே மற்ற நரசிம்மர்களின் ஆட்சி நடந்து வருகின்றது. மேல் அஹோபிலம் வரையிலும் தனியார் வாகனங்கள் அல்லது பேருந்துகளில் செல்லமுடியும். அதன் பின்னர் நம்மை அந்த நரசிம்மரே அழைத்துச் செல்லவேண்டும்.

Friday, March 06, 2009

Wednesday, March 04, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் 4

திரு கேஆரெஸ் சிங்கவேள் குன்றத்தின் கதையை எழுதச் சொல்லி இருக்கிறார். கொஞ்சம் பொறுத்துக்குங்க. முதலில் அதை எழுதும் எண்ணம் இல்லை. அனைவரும் அறிந்த கதைதானேன்னு எழுதலை. என்றாலும் மீண்டும் எழுதறேன். இப்போ மாலோல நரசிம்மரைத் தரிசிக்கச் செல்வோமா? இரு மலைகள் ஆன கருடாத்திரி, வேதாத்திரி மலைகளில் அமைந்தவையே நவ நரசிம்மர் சந்நிதிகளும். அவற்றில் வேதாத்திரி மலையில் உள்ளது. இந்த மலைத் தொடர்களை லக்ஷ்மி க்ஷேத்திரம் எனவும் அழைக்கின்றனர். கனகபாயா என அழைக்கப் படும் நதிக்கரையில் உள்ளது இந்த ஆலயம்.
ஹிரண்யகசிபுவைக் கொன்ற கோபத்தில் இருந்து தணியாத நரசிம்மரின் கோபத்தை அடக்க முடியாமல் தவித்த தேவர்கள், பிரஹலாதனையே வேண்ட அவனும் நரசிம்மத்தின் கோபம் தணியப் பிரார்த்திக்கின்றான். அவனுக்காக எழுந்தருளிய கோலமே இது. கோபம் தணிந்து ஸ்ரீ எனப்படும் அன்னையுடன் எழுந்தருளி இருக்கின்றார் நரசிம்மர். மா= என்பது மஹாலக்ஷ்மியைக் குறிக்கும். லோலா=என்றால் காதலன், லோலம்=காதல். அன்னையைக் காதலுடன் தன் இடது தொடையில் இருத்தி செளம்ய ரூபமாய் இடக்காலை மடக்கி, வலக்காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தின் அமர்ந்திருக்கும் ரூபமே மாலோல நரசிம்மர்.

நவ நரசிம்மர்களில் இவருக்குள்ள மற்றொரு சிறப்பு, மடியில் திருமகளை இருத்திக் கொண்ட இவரின் இந்த மூர்த்தத்தையே அடிப்படையாக வைத்து உற்சவரை அஹோபிலம் மடம் ஜீயர்கள் அமைத்துள்ளனர். முதலாம் ஜீயரின் கனவில் சாட்சாத் அந்த ஸ்ரீமந்நாராயணனே, மாலோல நரசிம்மராய்க் காட்சி அளித்து இவ்விதம் உத்திரவிட்டதாயும் சொல்கின்றனர். இன்றைக்கும் அஹோபில மடத்தின் ஜீயர்கள் தாங்கள் ஆன்மீக யாத்திரைகள் செல்லும்போதெல்லாம் மாலோல நரசிம்மரின் இந்த உருவத்தை அடிப்படையாய்க் கொண்ட உற்சவ மூர்த்தத்தைத் தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். தினசரி உற்சவருக்குப் பூஜை, வழிபாடுகளும் உண்டு.

இன்னும் சிலர் மா= என்றால் பிரானையே குறிப்பதாகவும் லோலா என்பதே ஸ்ரீ என்னும் மஹா லக்ஷ்மியைக் குறிக்கும் எனவும் சொல்கின்றனர். எப்படி இருந்தாலும் ஸ்ரீயை அணைத்த கோலத்தில் சங்கு, சக்ரதாரியாய், அழகிய கோலத்தில் காட்சி அளிக்கின்றார். இங்கும் சடாரி, தீர்த்தப் பிரசாதம் வழங்கப் பட்டது. இவ்வளவு கடினமான இடங்களுக்குக் கூட வந்து வழிபாடுகள் நடத்தும் பட்டாசாரியார்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை. இந்த மாலோல நரசிம்மர் ஆனவர் செவ்வாயினால் ஏற்படும் அனைத்து தோஷங்களையும் போக்கி அருள்கின்றார். மனதில் ஏற்படும், சஞ்சலம், பயம் அனைத்தையும் போக்கி மனோ தைரியத்தை உண்டு பண்ணுகின்றார்.

ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
வாய்ந்தவாகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதனிடம்,
ஓய்ந்தமாவுமுடைந்தகுன்றும் அன்றியும் நின்றழலால்,
13தேய்ந்தவேயுமல்லதில்லாச் சிங்கவேள்குன்றமே. 1.7.3
1011
எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை
வவ்வி, ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்,
கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று,
தெய்வமல்லால்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே. 1.7.4


அடுத்து யோக நரசிம்மர். அதற்கு முன்னர் இந்த மலையைப் பற்றிய ஒரு சிறு குறிப்புத் தொடரும்.

Sunday, March 01, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்- அஹோபிலம் 3

இதோ தெரியுது பாருங்க, புழுதி பறக்கிறது. இது நாங்க எடுத்த படம் இல்லைனாலும் பாவன நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இப்படித் தான் புழுதி பறக்கும் வண்டியிலே போகும்போது. நடக்கவே முடியாத அடர்ந்த காட்டுப் பகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் இந்த சிங்கராஜா. ஏன் தெரியுமா? அவர் கல்யாண மாப்பிள்ளையாக்கும். மனைவியோடு தனிமையாகக் கொஞ்சிட்டு இருப்பார். தொந்திரவு வேண்டாம்னு தான். ஆனால் மனைவி வழி சொந்தங்கள் அங்கேயே இருக்கிறவங்களும் இருக்காங்க. கீழேயும் இருக்காங்க. அப்படி ஒருத்தர் தான் எங்களுக்கு வழிகாட்டியாக வந்த சுப்பராயுடு. மிக மிக அற்புதமான மனிதர். இவரைப் பற்றிக் கடைசியில் பார்க்கலாம். இப்போ பாவன நரசிம்மர் பற்றி.
வண்டியை விட்டுக் கீழே இறங்கச் சொன்னாங்கனு சொல்லி இருந்தேன் அல்லவா? இது வரை வந்த பாதைகளில் நம்ம எலும்புகள் கழன்று போச்சு என்றால், இங்கே அதை விடக் கொடுமை. வண்டி தன் நாலு சக்கரங்களிலும் செல்லாது. ஒன்று முன் சக்கரத்தில் ஒன்றாலோ அல்லது பின் சக்கரத்தில் ஒன்றாலோ மேலே ஏறிக் கீழேயும் இறங்கணும். பாதையோ என்றால் கேட்கவே வேண்டாம். நடந்தால் முட்டிகள் அன்றே தேய்ந்து போயிடும். அதுவும் முட்டி வலி என்றால் என்னனு தெரியாத என் கணவருக்கு இதுக்கு அப்புறம் முட்டியே தேய்ந்து போய் இன்னமும் வலி இருக்கு முட்டியில். அவ்வளவு கடினமான கரடு, முரடான பாதைகள்.
ஆனாலும் நாங்க ஐந்து வண்டியில் இருந்த மொத்தம் 45 பேரும் இறங்கி நடந்தோம். பக்கத்தில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஜீப்கள் தொடர்ந்தன சில அடி தூரத்தில். கிட்டத் தட்ட ஒரு ஃப்ர்லாங்காவது இப்படிப் போகவேண்டி இருக்கு. நமக்குத் தான் கஷ்டம், ஆனால் அக்கம்பக்கம் உள்ள மக்கள் முதல் நாளே புறப்பட்டு இந்தக் கடினமான பாதையில் கிட்டத் தட்ட ஏழு கிலோமீட்டர்கள், போகவரப் பதினான்கு கிலோ மீட்டர்கள் பயணம் செய்து, அங்கேயே மரத்தடியில் இரவைக் கழித்து நரசிம்மரை வழிபடுகின்றனர். நாமோ? என்னிக்கோ ஒருநாள் பயணமே முடியலை. கொஞ்சம் வெட்கமாகவே இருந்தது. ஆனால் என்ன அதிசயம்??? அங்கே மாமிச வாடை வருகின்றதே? ஏதேனும் நாட்டார் கோயில் இருக்கோ?? ம்ஹும் இல்லையே? அப்போ இந்த மாமிசம்?? அங்கே ஏறிச் சென்று பார்த்தால் தெரிகிறது.
இதோ ஏறிக் கொஞ்சம் சுமாரான பாதைக்கு வந்துட்டோமே. இனிக்கொஞ்ச தூரத்தில் கோயில் தான். கோயிலில் பட்டாசாரியார் இருப்பாரோ? இருப்பார் என உறுதி அளிக்கின்றார் நம் வழிகாட்டி. ஜீப்கள் கொஞ்ச தூரத்திலேயே நின்றுவிடுகின்றன. நடக்க மட்டுமே ஏற்படுத்தப் பட்ட பாதைகள். வழியெங்கும் சுற்றுப் புற மக்கள் கொண்டுவந்து பலி கொடுத்த ஆடு, கோழி, சேவல்களின் மிச்சங்கள். பலிகளை நரசிம்மர் ஏற்கின்றாரா என்ன?? ஆஹா! ஏற்பார், ஏற்பார், தாராளமாய் ஏற்பார். அதுவும் தன் அன்பு மனைவிக்காக ஏற்கின்றார். நரசிம்மர் இங்கே மாப்பிள்ளை ஆச்சே?
இந்த மேடு ஏறி மேலே சென்றால் கோயில் தான். கிருத யுகத்தில் இந்த மலைத் தொடர்களில் இருந்த வேடர்கள் செஞ்சு என அழைக்கப் பட்டனர். மலைவாழ் மக்கள் ஆன இவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். காட்டில் வேட்டை ஆடுவது மட்டுமே தொழில் இவர்களுக்கு. வெளி உலகுடன் அவ்வளவு தொடர்பு இல்லை. அந்தக் குடும்பங்களில் ஒன்றில் தோன்றியவள் தான் செஞ்சுலட்சுமி என்னும் இளம்பெண். இவளைத் திருமகளின் அவதாரம் என்றே கூறுகின்றனர். திருமகளின் அம்சங்கள் அனைத்தும் நிரம்பப் பெற்ற இவள் அழகைப் பார்த்து மயங்கி இவளைத் திருமணம் செய்யத் துடித்த ஆண்கள் அனைவரையும் இவள் மறுத்தாள். தன் இயல்புக்கு ஏற்ப அவள் மனம் அந்த நாராயணனையே மணக்க எண்ணியது. ஆனால் காட்டுவாசியும், வேடர் குலத்தில் பிறந்த இயல்புக்கும் ஏற்ப நரசிம்மத்தையே விரும்பியது இவள் மனம். பிரஹலாதனைக் கொன்று கோபத்துடன் அலைந்து கொண்டிருந்த நரசிம்மம் இவளைப் பார்க்க, அனைவரும் கண்டு பயந்த நரசிம்மம் இவள் மனத்தை ஈர்க்க, அங்கே தோன்றியது தெய்வீகக் காதல்.
தேவர்களும் கண்டு அஞ்சும் தன் நரசிம்மத் திருவுருவைக் கண்டு அஞ்சாத இவளே, தன் தக்க துணை எனத் தெளிந்த நரசிம்மமும், அவளை மணக்க இசைய, அந்த மலைவாழ் மக்களுக்குப் பெரும் அந்தஸ்தும், கெளரவமும் ஏற்பட்டது. தன் பிரியமான மனைவிக்காகவே மாமிச உணவை வேட்டையாடிக் கொண்டு வந்து கொடுத்து அவளைச் சாப்பிடச் செய்தாராம் இந்த நரசிம்மர். தங்களில் ஒருத்தியான செஞ்சுலட்சுமி, நரசிம்மரின் கரம் பற்றியதைக் குறித்துக் கர்வம் மிகக் கொண்ட அந்த செஞ்சு இன மக்கள் தங்கள் செஞ்சு லட்சுமிக்குப் பிரியமான உணவு என்ற காரணத்தாலே இன்றும் அவளுக்கு இதைப் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சனிக்கிழமைகளில் இங்கே அதிகம் பலி இருக்கும் என்று சொல்கின்றனர். நாங்கள் சென்றதும் சனியன்றே. ஆகவே மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. அநேகமாய் டிராக்டர்களிலேயே வருகின்றனர்.

பவன நதிக்கரையில் கை, கால்கள் சுத்தம் செய்து கொண்டு மேலே ஏறினோம். நரசிம்மர் ஆதிசேஷன் குடையின் கீழ், தன் மனைவியான செஞ்சு லட்சுமியை இடது தொடையில் இருத்திய வண்ணம் காட்சி அளிக்கின்றார். சங்கு, சக்ர,தாரியாய், சாந்த சொரூபத்தில் சுக ஆசனத்தில் வலது காலைத் தொங்க விட்டு, இடக்காலை மடித்துக் காட்சி அளிக்கின்றார். வலக்கீழ்க்கரம் நாடி வந்த நமக்கு அபயம் அளிக்க, இடக் கீழ்க் கையால் மனைவியைக் கட்டி அணைத்திருக்கின்றார். இந்தப் பாவன நரசிம்மரைத் தரிசித்தால் ராகுவால் ஏற்படும் தோஷங்கள் விலகுகின்றன. தேவையற்ற கற்பனைகள், கெட்டஎண்ணங்கள், கொடுங்கோலாட்சி மற்றும் இஷ்டத்துக்கு நடப்பது போன்ற கெட்ட குணங்களைப் போக்கும் வல்லமை கொண்டவர். அடுத்து நாம் தரிசிக்கப் போவது மாலோல நரசிம்மர்.

மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
பொன்றவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,
நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய,
சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே. 1

முனைத்தசீற்றம்விண்சுடப்போய் மூவுலகும்பிறவும்,
அனைத்துமஞ்சவாளரியாய் இருந்தவம்மானதிடம்,
கனைத்ததீயும்கல்லுமல்லா வில்லுடைவேடருமாய்,
தினைத்தனையும்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே.

வழக்கம்போலப் பாசுரங்கள் கிடைத்த வண்ணம் போட்டிருக்கேன். நன்றி.

கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள் இங்கே பார்க்கவும். சோம்நாத் பற்றிய கட்டுரை கொஞ்சம், கொஞ்சமாய்த் தயார் ஆகின்றது. போட ஆரம்பித்ததும் அறிவிப்பு வரும். நன்றி.