எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, April 27, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ப்ரணய கலஹம், இன்னும் முடியவில்லை!


ரங்கநாயகி அவ்வளவு எளிதில் உள்ளே விடுவாளா?  இன்னும் கேட்க வேண்டியவை எவ்வளவோ இருக்கிறது. இந்த மனிதன் ஒவ்வொரு முறையும் நம்மை ஏமாற்றி விடுகிறானே.  இம்முறை விடக் கூடாது.  ரங்கநாயகி தொடர்ந்தாள்.

"அழகிய மணவாளரே! முந்தாநாள் நடந்ததைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.  தாங்கள் வேட்டைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றிருந்தீர்கள். உண்மையாகவே வேட்டையாடி, வியர்த்து விடாய்த்து வந்தீர்கள்.  என் மனம் நெகிழ்ந்தது.  தங்களைக் கண்டதுமே உள்ள நிலைமை புரிந்தபடியால் தங்களை எதிர்கொண்டழைத்துக் கைலாகு கொடுத்து உள்ளே அழைத்துச் சென்றோம்.  தங்களை திவ்ய சிம்ஹாசனத்தில் எழுந்தருளப் பண்ணினோம்.  தங்கள் திருவடிகளைப் பாதபூஜை செய்து கழுவித் துடைத்து ஆசுவாசம் போக்கி தங்கள் திருவடிகளை ஒத்தியெடுக்கும் திருவொத்துவாடையால் ஒத்தி எடுத்து, திருவாலவட்டம் காட்டி அருளினோம்.  ஆனாலும் தாங்கள் அதிக ச்ரமத்தோடேயே காணப்பட்டீர்கள்.  ஆகவே தங்கள் உடலுக்குக் களைப்பினால் ஏற்பட்ட இளைப்போ என எண்ணிக் கொண்டு வெந்நீரால் தங்களுக்குத் திருமஞ்சனம் செய்விக்கச் செய்து சமர்ப்பித்தோம்.  ஆனாலும் தாங்கள் சரிவர நீராடவில்லை.  நீராடியது பாதியும், நீராடாதது பாதியுமாகவே இருந்தது.  நமக்கு அதன் காரணம் புரியவில்லை."

"தங்களுக்கு மேலும் சிரமத்தால் ஏற்பட்ட இளைப்போ எனக் கருதி, தங்கள் திருமேனிக்கு ஏற்ற திவ்ய பீதாம்பரத்தைத் தேடி எடுத்துச் சமர்பித்தோம்.  அதையும் சரிவர சாத்திக்கொள்ளவில்லை தாங்கள்.  ஏனோதானோ எனச் சாத்தியருளி இருந்தீர்கள்.  பின்னும் விடாமல் கஸ்தூரித் திருமண்காப்பு சேர்த்துச் சமர்ப்பித்துப் பார்த்தால், ஆஹா, என்னவாச்சு தங்களுக்கு.  தாங்கள் எப்போதும்போல் சார்த்திக்கொள்ளும் திருமண்காப்பைப் போல் அல்லாமல் திருவேங்கடமுடையான் காப்புப் போல் அல்லவோ சார்த்திக் கொண்டீர்?  கோணாமாணாவென இருந்தது.  பின்னரும் விடாமல் தங்கள் பசியாற வேண்டி, தங்கப் பள்ளயத்தில் அப்பம் கலந்த சிற்றுண்டு, அக்காரம் முதலானவற்றைப் பாலில் கலந்து, வர்க்க வகைகளையும் சமர்பித்தோம். ஆனாலும் தாங்கள் அவற்றை சரிவர அமுது செய்யவில்லை. அமுது செய்தது பாதியும், அமுது செய்யாதது பாதியுமாக வைத்துவிட்டீர்கள்.  எனினும் விடாமல் சுருளமுது திருத்தி சமர்ப்பித்தோம்.  அதையும் அமுது செய்யாதபடிதானே எழுந்தருளி இருந்தீர்?"

"தூக்கம் சரிவர இல்லை என நினைத்து அனந்தாழ்வானைக் கூப்பிட்டுத் தங்களுக்கேற்ற திருப்படுக்கையாக விரித்துக் கொள்ளச் சொல்லி அதன்மேலே தங்களைத் திருக்கண் வளரப் பண்ணி நாமே தங்கள் திருவடிகளை மிருதுவாகவும், தங்கள் உடல் நோவு தீரும் வண்ணமும் பிடித்துக் கொண்டிருந்தோம்.  ஆனால் ஐயா, தாங்கள் எத்தனை வஞ்சகர்!  தங்கள் வஞ்சகத்தால் எங்களுக்கெல்லாம் ஒரு மாயா நித்திரையை உருவாக்கி விட்டீர்கள்.  எங்கள் கருவூலம் திறந்தீர்கள்.  எங்கள் ஸ்த்ரீதனங்கள் ஆன அம்மானை, பந்து கழஞ்சு, பீதாம்பரங்கள் அனைத்தையும் கைக்கொண்டு விட்டீர்கள்.  எந்த இடத்துக்குச் செல்கிறோம் என எவரிடமும் கூறவே இல்லை. தாங்கள் சென்ற அடுத்த கணமே எங்கள் மாயா நித்திரை கலைந்தது.  திடுக்கிட்டு விழித்தோம்.  அனந்தாழ்வான் விரித்திருந்த படுக்கையில் பார்த்தால் தாங்கள் அங்கே இல்லை. என்ன செய்வது எனப் புரியவில்லை."



சரியென்று வாயில்காப்போனை அழைத்துக் கேட்டால் அவர்கள் வந்து அம்மானை, பத்து கழஞ்சு, பீதாம்பரமான ஸ்த்ரீதனங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு தாங்கள் இன்ன இடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று சொல்லாதபடி எழுந்தருளிவிட்டார் என்று சொல்கின்றனர்.  அந்த பதில் கிடைத்ததுமே எங்கள் அந்தரங்கத் திருச்சேவடிமார்களை அழைத்தோம்.  அவர்கள் வந்து தங்கள் அடி பிடித்து, தங்கள் திருவடித் தடம் கண்டு அந்த அடியில் மிதித்துக் கொண்டு சென்றால் அது உறையூரிலே கொண்டு போய்விட்டது. அங்கே மச்சினி என்ற ஒருத்திக்கு முறைமை சொல்லி அழைத்ததும், மற்றொருத்தியை மடியைப் பிடித்ததும், கச்சணிந்த முலைகளோடு கூடிய பெண்ணைக் கண்ணால் அழைத்ததும், கனிவாய் கொடுத்ததும், தங்கள் உடலெங்கும் அதனால் ஏற்பட்ட நகக்குறிகளும், தங்கள் கார்மேனியில் அதனால் ஏற்பட்ட  பசுமஞ்சள் நிறமும், தெரிய வந்தது,"

"ஐயா, தாங்கள் கரும்புத்தோட்டத்தில் சஞ்சரிக்கும் யானையைப் போல இந்தப் பெண்கள் கூட்டத்தின் நடுவே சஞ்சரிக்கிறீர்கள் என நாங்கள் உங்களைத் தேடும்படி அனுப்பி வைத்த தூதி ஓடோடியும் வந்து தங்கள் அங்க அடையாளங்களைச் சொல்லி உள்ளது உள்ளபடி அடையாளம் காட்டிவிட்டாள். உம்மாலே எம் மனது அனலில் இட்ட மெழுகாய், இல்லை இல்லை, கொல்லன் உலையில் இட்ட மெழுகாய்க் கொதிக்கிறது.  நீர் எதுவும் பேசவேண்டாம், போம், போம்.  இங்கிருந்து செல்லும்."

என்றாள் நாச்சியார்.

இது குறித்த ப்ரகாரம் நாளைக்கு வரும்.  கூடவே பெருமாளின் பதிலும்.


Wednesday, April 24, 2013

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ப்ரணய கலஹம்-மட்டையடித் திருவிழா


அவ்வளவில் ரங்கநாயகி நாச்சியாருக்குக் கோபம் அதிகமாகிவிட்டது. இவர் பொய் சொல்லிவிட்டு, உறையூருக்குச் சென்று ஊர் சுத்திவிட்டு இங்கே வந்து என்னமாக் கதை அளக்கிறார்!

இந்த நம்பெருமாளை உற்சவ அலங்காரத்தில் அது என்ன அலங்காரமாகவே இருக்கட்டுமே, சற்றே உற்றுக்கவனியுங்கள்.  அவன் உதடுகளில் ஒரு கள்ளச் சிரிப்பும், குறும்பும் இழையோடும்.  அதுவும் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் தன்னால் நாச்சியாரை மட்டுமல்ல இந்த ஜனங்களையும் எப்படியோ ஏமாத்திடலாம் என்ற நிச்சயம் தெரிவதையும் அவன் கண்களில் உணரமுடியும்.  நம்மை எப்படியும் உள்ளே விட்டுடுவாங்க.  நாம் சொல்வதை நம்பிடுவாங்க என்று நிச்சயமாகக் கொஞ்சம் ஆசுவாசமாகவே இருப்பான்.  கொஞ்சமும் கவலைப் பட்டுக்க மாட்டான். இப்படிப் பட்டவனை என்ன செய்யறது?  நாச்சியார் புலம்பறாப்போல் புலம்ப வேண்டியது தான்.  அதைக் கேட்டுக்கொண்டு மனதுக்குள்ளாகவே அவன் சிரித்துக் கொள்வது அந்த முகத்தில் அப்பட்டமாய்த் தெரியும். மேலும் மேலும் அடுத்தடுத்துக் கதை அளப்பான் பாருங்கள்.  அதென்னமோ இவன் என்ன சொன்னாலும் ஒரு பக்கம் மனம் அதை நம்பத் துடிக்கும்;  இன்னொருபக்கம் பொய் சொல்கிறான் என்றே தெரியும்.  ஆனாலும் அவன் லீலைகளை எல்லாம் ரசித்து மன்னித்து விடுவோம்.  இப்போ ரங்கநாயகி நாச்சியார் கேட்கப் போகிற கேள்விகளையும் அதுக்கு நம்பெருமாள் சொல்லப் போகிற பதிலையும் படியுங்கள்.

நாச்சியார் பண்டாரிகள் சொல்வது:

கணையாழி மோதிரம் காணாமல் போனதே மெய்யானால், விடியப்பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி உறையூரில் போய், மின்னிடை மடவார் சேரியெலாம் புகுந்து யதாமனோரதம் அனுபவித்து அவ்வனுபவத்தாலே உண்டாயிருக்கிற அடையாளங்கள் எல்லாம் திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்தேயும் அவ்வடையாளங்களையும் அந்யதாவாகக் கொண்டு நாங்கள் ஏழைகளானபடியினால் இப்படிப்பட்டிருக்கிற வஞ்சநோக்திகளையெல்லாம் நேற்றைக்கு எழுந்தருளினவிடத்திலே தானே சொல்லிக் கொண்டு இன்றைக்கும் அங்கே தானே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

"ஓஹோ, ஐயா, அப்படியா?  கணையாழி மோதிரம் நிஜம்மாகவே காணாமல் போனதா?  அது உண்மையா?  அப்படியெனில் விடிய பத்து நாழிகை இருக்கையிலேயே தாங்கள் எங்கே கிளம்பினீர்கள்?  உறையூருக்குச் சென்றதாகவல்லவோ கேள்வி!  அங்கே மின்னலைப் பழிக்கும் மெல்லிய இடையுடைய ஒரு பெண்ணின் நந்தவனத்திற்கு அருகே தாங்கள் உலாவியதாகவும் கேள்வி.  தங்களைக் கண்டு அந்தப் பெண் மயங்கினாள் என்றும் கேள்வி.  தாங்களும் அவளைக் கண்டு மோஹித்தீர்கள் எனக் கேள்விப் பட்டேன்.  இப்படியெல்லாம் செய்து தங்கள் இஷ்டம் போல், மனம்போல் அந்தப் பெண்ணுடன் கூடி இருந்து இன்பம் அனுபவித்துவிட்டு அந்த அனுபவத்தாலே உண்டாகி இருக்கும் இத்தகைய அடையாளங்களை அவற்றால் இல்லை என்கிறீரே! அந்த அடையாளங்களெல்லாம் சாட்சிப் பிரமாணமாக உள்ளனவே.  ஏன் இப்படி?  நானொரு ஏழைப் பெண் என்பதாலா? இப்படிப்பட்டதொரு வஞ்சகத்தை எனக்கு நீர் செய்யலாமா?  நேற்றைக்குத் தாம் எழுந்தருளி இருந்த இடத்திலே இத்தகைய சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு திரும்பிப் போய் அங்கேயே இன்றும் எழுந்தருளூவீராக!

அரையர்கள் மூலம் பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம்

நாமானால் உறையூரைக் கண்ணாலே கண்டதும் இல்லை;  காதாலே கேட்டதுமில்லை.  துஷ்டர்களாயிருக்கிறவர்களும் மனதுக்குச் சரிப்போனபடி சொன்னால் நீரும் அந்த வார்த்தைகளைத் தானே கேட்டுக்கொண்டு நம்மையும் ஒரு நாளும் பண்ணாத அவமானங்களெல்லாம் பண்ணலாமா?  நீங்கள் ஸ்த்ரீகளானபடியினாலே முன்பின் விசாரியாமல் பண்ணினீர்காளாமென்கிற அவமானம் உங்களுக்கே யொழிய நமக்குத் தேவையில்லை. ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக் கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்.

"ஆஹா, ரங்கநாயகி, அந்தோ!  உறையூரா?  அது எங்கே இருக்கிறதடி?  நான் அப்படி ஊரை இன்றுவரை காணவில்லையே!  அந்த ஊர்ப் பெயரையும் காதாலே கேட்டதும் இல்லையடி.  யாரோ, வழியோடு போகிற துஷ்டர்கள் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லிக் கொடுத்து உன் மனதைக் கெடுத்துக் குட்டிச் சுவர் பண்ணி இருக்கிறார்கள். அந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டுக் கொண்டு நீ இப்படி என்னை ஒருநாளும் இல்லாத திருநாளாக அவமானம் செய்யலாமா?  இதோ பார், ரங்கா, புத்தம்புதிய புஷ்பங்கள், உனக்காகவே வாங்கி வந்துள்ளேன்.  நீ ஒரு அழகிய பெண்மணி.  முன்பின் சரிவர விசாரிக்க வேண்டாமா?  விசாரிக்காமல் இவ்விதமெல்லாம் நீ சொன்னால் அதனால் விளையும் அவமானம் உனக்குத் தான் ரங்கா!  எனக்கில்லை.  மனதை சமாதானம் செய்து கொள்வாய்.  இதோ இந்த அழகிய புஷ்பங்களை ஏற்றுக் கொள்.  என்னை உள்ளே வரவிடு. என் அருமை ரங்கா, நான் உள்ளே வரலாமா?"

Monday, April 22, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம், ப்ரணய கலஹம், மட்டையடி உற்சவம்


"ஆனால் நான் ஏன் இவ்வளவு தாமதமாய் வந்தேன் என நினைக்கிறாயா?  அதற்குக் காரணம் உள்ளது!"


 என்ற நம்பெருமாள் மேலும் தொடர்ந்தார்.  "வேர்க்க விறுவிறுக்க வேட்டையாடிவிட்டு நான் திரும்பி வரும் வேளையில், "நீலன்" என்றொருவன்.  யாரோ திருமங்கையாழ்வானாம், சொல்கின்றனர். அவன் பெரிய திருடனாய் இருக்கிறான் ரங்கா, என் திருவாபரணங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போயே விட்டான் என்றால்!  பார்த்துக்கொள்! மெதுவாக அவனைப்பிடித்துக் காலைப் பிடிக்கச் சொல்லி, நல்ல வார்த்தைகளைச் சொல்லி சமாதானம் செய்வித்து, திருவாபரணங்களை மெல்ல வாங்கி கொண்டு போய்க் கருவூலத்தில் சேர்க்கும்போது கணக்குப் பார்த்தேனா!  கணையாழியைக் காணவே இல்லை.  ஆஹா, அது நம் ரங்கநாயகி கொடுத்த கணையாழியாச்சே எனக் கவலையோடு விடிய விடியப்பத்து நாழிகைக்கு மேல் புறப்பட்டுத் திருவீதிகளெல்லாம் தேடித் தேடிப் பார்த்துக் கடைசியில் ஒருவழியாகக் கண்டு பிடித்துவிட்டேன்.  அங்கிருந்து உன்னைக் காண வேண்டி நேரே கிளம்பும்போது இந்த தேவதைகள் ஒரு கூடை புஷ்பத்தை எடுத்துக் கொண்டு வர்ஷிக்க வந்துவிட்டார்கள்.  விடுவேனா!  என் ரங்கநாயகி அருகில் இல்லாமல் புஷ்பங்களை நான் ஏற்பதில்லை என மறுத்துவிட்டேன்.  ரங்கநாயகிக்கும் சேர்த்துத் தான் என்றார்களா, அவர்களை முன்னே போகச் செய்து நாம் பின்னே வந்தோம்.  ஆகையினாலே இந்தப் புஷ்பங்களை ஏற்றுக் கொண்டு நம்மையும் உள்ளே அழைத்து ஆசுவாசம் செய்விப்பாய்.

மேலே குறிப்பிட்டவை நான் எழுதியவை:

நம்பெருமாளுக்காக அரையர்கள் சொல்லும் ப்ரகாரம்:

திருக்கண் சிவந்திருப்பானேன் என்றால் நாம் செங்கோலுடைய திருவரங்கச் செல்வரானபடியினாலே கவுரி முடித்ஹ்டு, கலிக்கச்சைக் கட்டி, வல்லயமேந்தி, குதிரை நம்பிரான் மேலே ராத்ரி முழுதும் நித்ரையின்றி ஜகரக்ஷணார்த்தமாக ஜாகரூகனாய் இருந்தபடியினாலே திருக்கண் சிவந்து போச்சுது.  திருக்குழல் கற்றைகளெல்லாம் கலைந்திருப்பானேன் என்றால் காற்றடித்துக் கலைந்து போச்சுது.  கஸ்தூரித் திருமண் காப்புக் கரைந்திருப்பானேனென்றால் அதிகடோரமான ஸூர்ய கிரணத்தால் கரைந்து போச்சுது.  திருவதரம் வெளுத்திருப்பானேனென்றால் அஸுர நிரஸனார்த்தமாய் தேவதைகளுக்காக சங்கத்வானம் பண்ணினபடியினாலே வெளுத்துப் போச்சுது.  திருக்கழுத்தெல்லாம் நகச்சின்னமாயிருப்பானேனென்றால் அதிப்ரயாஸமான காடுகளிலே போகிறபோது பூமுள்ளு கிழித்தது.  திருமேனியெல்லாம் குங்குமப் பொடிகளாய் இருப்பானேனென்றால் தேவதைகள் புஷ்ப வர்ஷம் வர்ஷித்தபடியினாலே புஷ்ப ரேணு படிந்தது.  திருப்பரிவட்டங்களெல்லாம் மஞ்சள் வர்ணமாயிருப்பானேனென்றால் ஸந்த்யா ராகம் போலேயிருக்கிற திவ்ய பீதாம்பரமானபடியினாலே உங்கள் கண்ணுக்கு மஞ்சள் வர்ணமாய்த் தோன்றுகிறது.  திருவடிகளெல்லாம் செம்பஞ்சுக் குழம்பாயிருப்பானேனென்றால், குதிரை நம்பிரான் மேலேறி அங்கவடிமேல் திருவடிகளை வைத்துக்கொண்டு போனபடியினாலே திருவடிகள் சிவந்து போயின.  இப்படிப்பட்ட அடையாளமேயொழிய வேறில்லை.  ஆனால், போது கழிந்து வருவானேன் என்றால் வேட்டையாடி வேர்த்து விடாய்த்து வருகிற ஸமயத்திலே, திருமங்கையாழ்வானென்பவன் ஒருவன் வந்து ஸர்வஸ்வாபஹாரத்தையும் பண்ணிக் கொண்டு போனான்.  அவனைச் சில நல்ல வார்த்தைகள் சொல்லித் திருவாபரணங்களை மெள்ள வாங்கிக் கொண்டு போய், கருவூலத்தில் எண்ணிப் பார்க்குமிடத்தில் கணையாழி மோதிரம் காணாமல் போச்சுது.  அதற்காக விடியப் பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி, திருவீதிகளெல்லாம் வலம் வந்து கணையாழி மோதிரத்தைக் கண்டெ;டுத்துக் கொண்டு மீள வாரா நிற்கச் செய்தே அப்பொழுது தேவதைகள் பாரிஜாத புஷ்பங்கள் கொண்டு ஸேவிக்க வந்தார்கள்.  நாம் நம்முடைய பெண்டுகள் அன்றியிலே சூடுகிறதில்லையென்று தமக்கு முன்னமே வரக்காட்டி நாமும் பின்னே எழுந்தருளினோம்.  ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பங்களையும் வாங்கிக்கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்


அடுத்து நாச்சியார் ப்ரகாரம் தொடரும்.

Friday, April 19, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம், ப்ரணய கலஹம், மட்டையடி உற்சவம்


நாச்சியாருக்காக இப்போது பண்டாரிகள் பேசுவார்கள். முதல்லே என்னோட தமிழில்.  அப்புறமா நாச்சியாரின் ப்ரகாரம்.

"என்ன< எப்போதும் போல் தாம் எழுந்தருளியுள்ளீர்களா?  யார் சொன்னது? அது உண்மையெனில் தங்கள் திருக்கண்கள் ஏன் இப்படி சிவந்து காணப்படுகின்றன? இரவு முழுவதும் தூங்காதவர் போல் அல்லவோ காணப்படுகிறீர்கள்?  மேலும் தங்கள் குழல் கற்றைகள்?  அவை காற்றில் பிரிந்தனவாய்த் தெரியவில்லையே? ஏன் இப்படி கலைந்து பிரிந்து தொங்குகின்றன?  நெற்றியைப் பாருங்கள்!  கஸ்தூரித் திலகம், திருமண் காப்பு கரைந்து வழிந்திருப்பதைப் பார்க்க முடிகிறதே!  அதோடு மட்டுமா?  தங்கள் உதடுகள் ஏன் இப்படி வெளுத்துக் காண்கின்றன!  ஸ்வாமி, இதோ இங்கே தங்கள் கழுத்தில் நகச் சின்னங்களாய்க் காண்கின்றேனே! இவை பொய்யா?  உங்கள் திருமேனியில் எல்லாம் குங்குமமாய்க் காண முடிகிறது எங்கனம்? பரிவட்டங்கள் எப்போது மஞ்சள் வர்ணத்தைப் பெற்றன?"

"ஆஹா, இதென்ன ஆச்சரியம்?  பெண்கள் போட்டுக்கொள்ளும் செம்பஞ்சுக் குழம்பின் சுவடுகள் தங்கள் திருப்பாதங்களில்! ஐயா என் உள்ளம் மிகவும் கலங்கி நான் குழம்பிப் போயிருக்கிறேன். யாரங்கே?  திருச்சேவடிமார்களே, உள்ளே இருக்கிறவர்களை வெளியே விடவும் வேண்டாம்.  வெளியே இருந்து வருகின்றவர்களை உள்ளே விடவும் வேண்டாம்.  கட்டுப்பாடு செய்யுங்கள்.  விண்ணப்பம் செய்கிறவர்களை அநுமதிக்க வேண்டாம்.  வந்திருப்பது யாராய் இருந்தாலும் நம் பெருமாளாகவே இருந்தாலும், அழகிய மணவாளனாகவே இருந்தாலும் அவரை நேற்றைக்கு எழுந்தருளி இருந்த இடத்திலேயே இன்றைக்கும் எழுந்தருளச் சொல்லுங்கள்.  இது என் ஆணை!"

மேற்கண்டவாறு நாச்சியார் கூறியவுடனே மீண்டும் மலர்ப்பந்துகள், மாலைகள், வாழைப்பழங்கள் என நாச்சியார் சந்நதியிலிருந்து தூக்கி எறியப்பட நம்பெருமாளாகிய அழகிய மணவாளர் பயந்து பின் வாங்குவது போல் நடிப்பார்.  சற்றுத் தூரம் பல்லக்குப் பின்னோக்கிச் செல்லும்.  பின்னர் மீண்டும் முன் வந்து, தன் பதிலைச் சொல்லுவார்.  இப்போது நாச்சியாரின் ப்ரகாரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு நம்பெருமாளின் பதிலைப் பார்ப்போம்.

நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம் பண்டாரிகள் வாய்மொழியாக:

தாம் எப்போதும்போல் எழுந்தருளியது மெய்யானால் திருக்கண்களெல்லாம் சிவந்து இருப்பானேன்?  திருக்குழல் கற்றைகளெல்லாம் கலைந்திருப்பானேன்?  கஸ்தூரி திருமண்காப்பு கரைந்திருப்பானேன்? திருவதரம் வெளுத்திருப்பானேன்? திருக்கழுத்தெல்லாம் நகச்சின்னங்களாக இருப்பானேன்?  திருமேனியெல்லாம் குங்குமப் பொடியாக இருப்பானேன்? திருப்பரிவட்டங்களெல்லாம் மஞ்சள் வர்ணமாய் இருப்பானேன்?  திருவடிகளெல்லாம் செம்பஞ்சுக் குழம்பாயிருப்பானேன்?  இப்படிப்பட்ட அடையாளங்களைப் பார்த்து நாச்சியாரின் திருவுள்ளம் மிகவும் கலங்கி இருக்கிறது.  ஆகையினாலே உள்ளே இருக்கிறவர்களை வெளியே விடவேண்டாமென்றும், வெளியிலே இருக்கிறவர்களை உள்ளே விடவேண்டாமென்றும் இப்படிக் கட்டுப்பாடு பண்ணிக் கொண்டிருக்கிற சமயத்திலே உள்ளே விண்ணப்பஞ்ச்செய்யச் சமயமில்லை.  ஆனபடியினாலே நேற்றைக்கு எழுந்தருளினவிடத்திலே இன்றைக்கும் எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

இதற்கு பதில் கொடுக்கும் நம்பெருமாள் சாதாரணமானவரா!  மஹா கள்ளனாயிற்றே. ஒவ்வொன்றுக்கும் எப்படிப் பதில் கொடுக்கிறார் பாருங்கள்.

"ஆஹா, ரங்க நாயகி, நம்மை யாரென நினைத்தாய்?  நாம் செங்கோலுடைய  திருவரங்கச் செல்வர் அன்றோ!  கவரி முடிந்தோம்;  கலிக்கச்சை கட்டினோம்;  வல்லயம் ஏந்தினோம்.  நம் குதிரை நம்பிரான் மேலே இரவு முழுதும் உறக்கமின்றி இவ்வுலகைக் காக்கும் நிமித்தமாக விழித்திருந்தபடியாலே நம் கண்கள் சிவந்து போயின.  அங்கும் இங்கும் அலைந்து திரிந்த சமயத்திலே அடித்த காற்றிலே திருக்குழல் கற்றைகள் கலைந்து பிரிந்து போயிற்று.  கஸ்தூரித் திருமண் காப்புக் கலைவது ஒன்றும் புதிதல்லவே.  இந்த சூரியனின் அதி கொடூரமான கிரணங்கள் எனக்கு ஒத்துக்கொள்ளாது என்பதை நீ அறியாதவள் அல்லவே! அந்தக் கொடூரமான சூரிய கிரணங்களினால் என் திருமண் காப்புக் கரைந்துவிட்டது. "

"தேவதைகளின் வேண்டுகோளுக்காக வேண்டி சங்க வாத்தியத்தை எடுத்து ஊதிய காரணத்தால் அதரங்கள் வெளுத்தன. இந்த ஜகத்தை ரக்ஷகம் செய்யும் வேலை சாமானியமானதா ரங்கநாயகி?  காடு மேடுகளெல்லாம் சென்று பார்க்க வேண்டாமா?  அவ்விதம் காடுகளெல்லாம் சுற்றி அலைந்த காரணத்தால் ஆங்காங்கே இருந்த முட்செடிகள் கீறிவிட்டதால் கழுத்தெல்லாம் கீறல்களாய்த் தெரிகிறது.  தேவதைகள் மிகவும் சந்தோஷம் கொண்டு என்னைப் புஷ்பங்களால் வர்ஷித்தன.  அப்படி வர்ஷிக்கையிலே அந்தப் புஷ்பங்களின் மகரந்த வர்ணச் சேர்க்கையெல்லாம் என் மேல் விழுந்ததால் குங்குமப் பொடியாக உனக்குத் தெரிகிறது.  ஆஹா, என் பரிவட்டம் உன் கண்ணுக்குப் பீதாம்பரமாய்த் தெரிகிறது போலும்.  என் பீதாம்பரம் தானே மஞ்சள் வர்ணம்.  அதைப் பரிவட்டம் என நினைத்துவிட்டாயோ?  குதிரை மேல் ஏறி இரவு முழுதும் அலைந்த சமயம் குதிரையின் அங்கவடியின் மேலே கால்களை வைத்துக் கொண்டே செல்ல வேண்டுமே!  அப்போது திருவடிகள் சிவக்காதிருக்குமா?  இவைதான் ரங்கா, வேறெதுவுமே இல்லை."

"ஆனால் நான் ஏன் இவ்வளவு தாமதமாய் வந்தேன் என நினைக்கிறாயா?  அதற்குக் காரணம் உள்ளது!"

Thursday, April 11, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ப்ரணய கலஹம், நம்பெருமாள்-நாச்சியார் மட்டையடி!


ப்ரணய கலஹத்தில் ரங்கநாயகி, நம்பெருமாள் இருவருக்கும் வாக்குவாதம் உண்டாகிறது.  ரங்கநாயகியும், அரங்கனும் வாக்குவாதம் பண்ணிக் கொள்வதைப் புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள் அந்தப் புத்தகத்தை  அளிப்பது கே.பி.எஸ்.நாராயணன் செட்டியார், சேர்மன், போர்ட் ஆஃப் ட்ரஸ்டீஸ், ஸ்ரீரங்கநாத ஸ்வாமி தேவஸ்தானம், ஸ்ரீரங்கம். மேலும் உறுப்பினர், டி.ஆர்.யு.சி.சி. திருச்சி, 55, சின்ன செட்டி தெரு, திருச்சி.  இந்தப் புத்தகத்தை  ஸ்கான் செய்து அனுப்பியது பதிவர் மாதங்கி மாலி, அவர் தந்தை திரு மாலி.  இருவருக்கும் என் நன்றி.

முதல்லே பங்குனி மாதம் நடக்கும் இந்த பிரம்மோத்ஸவம் ஆதி பிரம்மோத்ஸவம் எனப்படும். இந்த ஆதி பிரம்மோத்ஸவம் விபீஷணனால் ஏற்படுத்தப் பட்டது.  பங்குனி மாதம் உத்திர நக்ஷத்திரத்தன்று கமலவல்லியைத் திருமணம் செய்து கொண்டு உறையூரிலிருந்து திரும்பி வந்த அரங்கன், ரங்கநாயகியைத் தரிசிக்க மிகுந்த பிரேமையுடன் சென்றபோது கோபத்துடன் கதவை அடைத்தாள் ரங்கநாயகி.  எல்லாம் தெரிந்த ஸ்ரீதேவிக்கே கோபமா? எனில் ஆம், கோபம் தான்.  நாம் இதைச் சாதாரணமான மானிடக் கண்களோடும், மானுட மனதோடும் பார்த்தால் தவறாகவே தெரியும். ஆனால் இவ்வுலகில் பரமபுருஷன் ஆன எம்பெருமான் ஒருவனே ஆண்மகன்.  மிகுதி உள்ள அனைவரும் ஸ்வரூபத்தால் எப்படித் தோன்றினாலும் அவர்களும் பெண்மக்களே.  இதைத் தான் மீராபாய் உணர்ந்து கூறினாள்.  கண்ணன் ஒருவனே ஆண்மகன்;  அவனுக்கு முன்னர் அனைவரும் பெண்களே என்று.  ஆகவே இதைப் பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் ஏற்படும் ஒரு விவாதமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.  இவ்வுலகிலுள்ள நம்மைப் போன்ற சாமானிய தம்பதிகளின் சண்டையைப் போல நினைக்க வேண்டாம்.  ஸ்ரீரங்கத்தைப் போலப் பல திவ்ய தேசங்களிலும் ப்ரணய கலஹம் என்னும் நிகழ்ச்ச்சி நடத்தப் படுகிறதெனினும் ஸ்ரீரங்கத்திலே தான் மிகவும் பிரசித்தமானது.

பெருமாளுக்கும், ரங்கநாயகிக்கும் ஏற்படும் இந்தப் ப்ரணய கலஹமானது கடைசியில் நம்மாழ்வாரால் தீர்த்து வைக்கப் படுவதாக ஐதீகம்.  பரமாத்மாவோடு ஜீவாத்மா சேர ஆசாரியனின் உதவி தேவை என்பதை இது சுட்டிக் காட்டுவதாய்ச் சொல்லுவார்கள்.  இனி ப்ரணய கலஹம் என்னும் மட்டையடி ஆரம்பம்.  பெருமாளுக்காக அரையர்களும் நாச்சியாருக்காக நாச்சியார் பண்டாரிகளும் வாதிடுவார்கள்.  அப்போது பூமாலைகள், பழங்கள், பூப்பந்துகள் போன்றவை நாச்சியாரால் பெருமாள் மீது தூக்கி எறியப் படும்.  பெருமாளோ மிகப் பயந்தவர் போலக் காட்டிக் கொண்டு பின்னே, பின்னே ஓட்டமாக ஓடுவார்.  அவர் பின்னே சென்றுவிட்டார் எனத் தெரிந்ததும் மீண்டும் கதவு திறக்கப் பெருமாள் உள்ளே நுழைய முயற்சிக்க மீண்டும் வாக்குவாதம் நடக்க, மட்டையடி நடக்கப் பெருமாள் மீண்டும் பின்னடைவார். இப்போது சம்வாதத்தைச் சற்றுப் பார்ப்போமா?

 அரங்கன் சொல்கிறார்:  "அடியே ரங்கநாயகி, நான் தான் போகும்போதே சொல்லிவிட்டுச் சென்றேன் அல்லவோ?  உற்சவங்கள் முடிந்து தானே நான் வர முடியும்?  நீயோ இந்தப் படியை விட்டுத் தாண்டமாட்டேன் என சபதம் போட்டிருக்கிறாய்!  உற்சவத்தில் எத்தனை கோலாஹலம், எத்தனை கொண்டாட்டம்  என்கிறாய்!  அடி அம்மா, பிராமணர்களெல்லாம் சூழ்ந்து கொண்டு ஸ்தோத்திரம் பண்ணுகின்றனர்.  புஷ்பங்களால் மக்கள் அனைவரும் வர்ஷிக்கின்றனர்.  அலங்காரப் பிரியனான எனக்கு உற்சாகத்துக்குக் கேட்க வேண்டுமா?  இப்படி எல்லாம் சந்தோஷத்தோடு உன்னைக் கண்டு சொல்ல வேண்டி ஓடோடியும் வந்தேனே!"

"நீயோ எப்போதும் என்னை எதிர்கொண்டு அழைப்பவள் இன்று வரவே இல்லை;  அதோடு விட்டதா!  கைலாகு கொடுத்து என்னை உள்ளே அழைத்துக் கொள்வாய்.  அருமையான சிம்மாசனத்தில் அமர்த்துவாய். என் திருவடியை விளக்குவாய்.  திருவொத்துவாடை சாற்றுவாய்,  திருவாலவட்டம் பரிமாறுவாய்; மங்கள ஆலத்தி எடுப்பாய்.  சுருளமுது திருத்தி சமர்ப்பிப்பாய்.  இத்தனை உபசாரங்களும் செய்வாயே, என் கண்ணே!  இன்றைக்கு என்ன திருக்காப்புச் சேர்த்துக் கொண்டாயோ?  என்னைக் கண்டதுமே உன் திருமுகமண்டலம் திரும்பியது திரும்பியபடி இருக்கிறதே,  உன் திருச்சேவடிமார்களாலே பந்துகள், பழங்களைக் கொண்டு என்னை அடிக்கிறாயே.  இப்படி எல்லாம் இன்று ஏன் என்னை அவமானம் செய்கிறாய் என் ரங்கநாயகியே!  இதற்கான காரணம் என்ன சொல்வாய்?"

இது நான் எழுதியவை ஆனால் புத்தகத்தில் பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம் எப்படி எனில்,


"நாம் உத்ஸ்வார்த்தமாகப் புறப்பட்டருளித் திருவீதிகளெல்லாம் வலம் வந்து தேவதைகள் புஷ்பம் வர்ஷிக்க, ப்ராம்மணர்களெல்லோரும் ஸ்தோத்ரம் பண்ண, இப்படி பெரிய மனோரதத்தோடே தங்களிடத்தில் வந்தால், தாங்கள் எப்போதும் எதிரே விடை கொண்டு, திருக்கை கொடுத்து உள்ளே எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போய் திவ்ய ஸிம்ஹாசனத்தில் ஏறியருளப் பண்ணி, திருவடி விளக்கி, திருவொத்துவாடை சாத்தி, திருவாலவட்டம் பரிமாரி, மங்காளலத்தி கண்டருளப்பண்ணி, சுருளமுது திருத்தி சமர்ப்பித்து--இப்படி அநேக உபசாரங்களெல்லாம் நடக்குமே. இன்றைக்கு நாமெழுந்தருளினவிடத்திலே திருக்காப்புச் சேர்த்துக் கொண்டு, திருமுக மண்டலத்தைத்திருப்பிக் கொண்டு, திருச்சேவடிமார்கள் கைகளாலே பந்துகளாலும் பழங்களாலும் விட்டெறிவித்து, இப்படி ஒருநாளும் பண்ணாத அவமானங்களையெல்லாம் இன்றைக்குப் பண்ண வந்த காரியம் ஏதென்று கேட்டுவரச் சொல்லிப் பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்

தொடரும்

Wednesday, April 10, 2013

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ரங்கநாயகியின் ஊடல்! அடுத்து மட்டையால் அடிதான்!


உறையூர் வந்துவிட்டார் அழகிய மணவாளன் என்னும் நம்பெருமாள்.  இது 108 திவ்ய தேசங்களில் இரண்டாமிடத்தைப் பெற்ற சிறப்பான க்ஷேத்திரம்.  பின்னே?  ஸ்ரீரங்கம் உற்சவரே இங்கும் உற்சவர் ஆயிற்றே.  இங்கு கமலவல்லி நாச்சியாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டி வந்திருக்கிறார்.  வந்தாச்சு;  வந்த வேலை முடிந்தது.  கமலவல்லியுடன் திருமணம் முடித்துக் கொண்டு சேர்த்தி சேவையும் முடிந்தது.  இனி திரும்பணுமே ஸ்ரீரங்கத்துக்கு. கமலவல்லியோ கண்ணும் கண்ணீருமாக நிற்கிறாள்.  அவளை சமாதானம் செய்த நம்பெருமாள் அவளுக்குப் பரிசாகத் தன் கணையாழியையே கொடுக்கிறார்.  ஆஹா, அதைக் கொடுக்கும் முன்னர் அது யாருடையது என்பது தெரியாதா அரங்கனாரே?  வம்பு வளர்க்கத் தானே கொடுக்கிறீர்கள்?  கொடுங்கள், கொடுங்கள்.  அதை வாங்கிக் கொண்டு கமலவல்லியும் அமைதி அடைகிறாள்.  பின்னர் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் கிளம்புகிறார்.  கிளம்பியவர் நேரே ரங்கநாயகியைப் பார்க்கப்போகவேண்டாமோ?

ஏதோ வேலை நெட்டி முறிக்கிறாப்போல் அறுவடை ஆகி வந்திருக்கும் நெல் அளவையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.  அதுக்கப்புறமாத் தான் தாயார் சந்நிதிக்கே போகிறார்.  அங்கே போனதும் இவ்வளவு நாழி வேலை செய்துவிட்டுக் களைத்துச் சோர்ந்து போன வந்த நம்பெருமாளுக்குத் திருமஞ்சனம் என்னும் அபிஷேஹம் நடைபெறுகிறது.  ரங்கநாயகி சந்தோஷமாய்ப் பார்க்கிறாள்.  அவள் கண்களிலே பட்டது அந்த விபரீதம்.

"எங்கே? கையைக் காட்டுங்கள்!"

"என்ன கையிலே ஒன்றுமில்லையே?"

"அதான் கேட்கிறேன்.  நான் உங்களுக்குக் கொடுத்த அந்த மோதிரம் எங்கே?"

"ம்ம்ம்ம்??? என்ன மோதிரம், எங்கே மோதிரம்?"

"சரிதான்!"

"ஓ அதுவா?  வரும்போது காவிரியைக் கடந்து நீரில் இறங்கி வந்தேனா?  ஆற்றில் விழுந்துவிட்டது போலிருக்கே!  இப்போ என்ன செய்வது?"

"ரங்கநாயகி, இரு, நீ இங்கேயே இரு.  நான் போய் ஆற்றில் நன்றாய்த் தேடிப் பார்த்துவிட்டு வருகிறேன்."

ரங்கநாயகிக்கு நம்பிக்கையே இல்லை.  என்றாலும் என்ன செய்யலாம்?  இந்த மனுஷன் தேடிவிட்டு வரட்டும். அதுக்கப்புறம் என்னனு விசாரிக்கலாம்.




கொள்ளிட ஆற்றங்கரைக்குத் தங்கக் குதிரையில் எழுந்தருளுவார் நம்பெருமாள்.  ஆற்றில் அங்கும் இங்கும் கணையாழியைத் தேடுவார்.  கீழே, மேலே, மணலில், ஆற்றங்கரையின் நட்டநடுத் தீவுகளிலே, மரங்களிலே, இண்டு இடுக்கு விடாமல் தேடுகிறாராம்.  பின்னர் சத்தம் போடாமல் திரும்புகிறார்.  சித்திரை வீதியில் வையாளி சேவை நடக்கும்.  வையாளி சேவைன்னா அது சேவை.  குதிரை நிஜமாகவே ஓடும். ஓடி ஓடித் தேடுகிறாராம்.  இங்கே இருந்தால் தானே கிடைக்க! எங்கே கொடுத்தோம்னு அவருக்கு நன்றாகவே தெரியும். இப்போ  வெறுங்கையோடு தான் திரும்பியாகணும்.  வேறே வழியே இல்லை.  ரங்கநாயகிக்கு ஏதோ விஷமம் என்று புரிந்து விட்டது.  கோபம் கொண்டாள்.  முகத்தைத் திருப்பிக் கொண்டதோடு கதவையும் அடைத்தாள்.  ஆயிற்று. ப்ரணய கலஹம் ஆரம்பமாயிற்று.  மேள, தாள அமர்க்களத்தோடு வருகிறாரா?  வரட்டும், வரட்டும்.  யார் உள்ளே விடப் போறாங்க?  கதவு படீரென்று சார்த்தப் பட்டது.

படம் உதவி: கூகிளார்

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ரங்கநாயகி பட்ட பாடு! மட்டையடித் திருவிழா!





ரங்க நாயகியின் சந்நிதி.  உள்ளே அவளுக்குள் ஒரே கவலை.  அரங்கனை இரண்டு நாட்களாய்க் காணோமே?  அவள்  படிதாண்டாப்பத்தினி தான். வில்வமரத்தடியில் குடி கொண்டிருக்கும் அந்த சந்நிதியைத் தாண்டி அவள் வரவே மாட்டாள்.  அதுக்காக அரங்கனைப் பத்தித் தெரியாமல் இருக்குமா?  அவள் மனம் அலை பாய்ந்தது.  பழைய நினைவுகள் அனைத்தும் குமுறிக் கொண்டு வந்தன.  ம்ம்ம்ம்ம்ம்

"எங்கேயோ ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள்னு ஒருத்தி வந்தாள்.  என்னவெல்லாமோ பாடல்களைப் பாடி அரங்கனை மயக்கிக் கடைசியில் திருமணமும் செய்து கொண்டாள்.  அப்புறமாத் துலுக்க நாச்சியாராம்.  யாரோ ஓர் சுல்தானுக்குப் பெண்ணாம்.  இளவரசியாம்.  அவளை இங்கே வரவைத்து அவளையும் தன்னோடு ஐக்கியப் படுத்திக் கொண்டதோடு அல்லாமல், அவங்க தேசத்து ராஜாக்கள் கொடுத்தாங்கனு தினம் தினம் லுங்கி கட்டல், சப்பாத்தி சாப்பிடல்னு ஆயிண்டிருக்கு.  இது போதாதா இந்த மனுஷனுக்கு! பெயரும் வைச்சாங்க பார்!  அழகிய மணவாளனாம்!  யாருக்கு?  எனக்குத் தான் மணவாளன்.  எவளோ ஒரு கிழவி கண்களுக்கு இவர் அழகிய மணவாளனாத் தெரிஞ்சிருக்கார்.  உடனே எல்லாருக்குமா அழகிய மணவாளர்?? "

"போறாததுக்கு இந்தப் பரதக் கண்டம் முழுசும் சுத்தினேன்னு பெருமை வேறே.  அங்கேருந்து இவர் திரும்பி வர வரைக்கும் என் பக்தன் வேதாந்த தேசிகன் புதைத்து வைத்திருந்த வில்வ மரத்தடியிலிருந்து நான் வெளியே தலையைக் காட்டி இருப்பேனா?  அரங்கனையே நினைத்துக்கொண்டு இப்போது எங்கே இருக்கிறாரோ, எப்போது இங்கே வருவாரோ அன்னிக்குத் தான் வெளியே தலையைக் காட்டணும், நாம் இருக்கும் இடத்தைக் காட்டித் தரணும் என அப்படி ஒரு ஒருமித்த சிந்தனையோடு அரங்கன் வந்தால் தான் வெளியே வரது;  நாம இருக்குமிடத்தைச் சொல்லுவது என்றிருந்தேன்.  இந்த மனிதனும் பலருடைய பிரயத்தனங்களின் பேரில் தான் ஒளிஞ்சிருந்த இடத்திலிருந்து ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.  அப்போவே எனக்குப் புரிஞ்சு போச்சு இவர் தான் அழகிய மணவாளர்;  என் அருமை மணவாளர்னு.  ஆனால் அறுபது வருடத்துக்கும் மேலே ஆனபடியாலே இந்த ஜனங்களுக்குப் புரியலை.  இவரோட இடத்திலே இருக்கிறவர் புது ஆள்னு சொல்லியும் தெரியலை.  அதுக்கப்புறமா இவரோட பரிமள கஸ்தூரி வாசனையைத் தெரிஞ்சவங்க இருக்காங்களானு கேட்டு, கடைசியிலே அரங்கனின் அபிஷேஹத் துணிகளைத் துவைத்து வந்த பரம்பரையில் இப்போது உயிரோடு இருக்கும் வயதான  ஒரே ஒரு “ஈரம் கொல்லி”யைக் கண்டு பிடிச்சு, அவனும் வந்து இவருக்கும் திருமஞ்சனம் செய்யச் சொல்லி, புதுசா ஊர்க்காரங்க பிரதிஷ்டை பண்ணி வைச்சாங்களே அரங்கன்னு அவருக்கும் திருமஞ்சனம் செய்யச் சொல்லி அந்த ஆடையைத் தன்னிடம் கொடுத்தால் கண்டுபிடித்துச் சொல்வதாய்ச் சொன்னான்.  அப்படியே செய்து இரண்டு ஈர ஆடைகளையும் அந்த ஈரம் கொல்லியிடம் கொடுத்தாங்க.

அந்த ஈரம் கொல்லியும் இரண்டு ஆடையையும் வாங்கிக் கொண்டு   முதலில் புது ஆளோட ஆடையின் அபிஷேஹ தீர்த்தம்.  பிழிந்து குடித்துப் பார்த்து முகத்தைச் சுளிச்சான்.  அடுத்துத் தான் நம்ம ஆளோட ஆடையின் அபிஷேஹ தீர்த்தம்.  அதை எடுத்துப்  பிழிஞ்சு குடிச்சான்.  குதிக்க ஆரம்பிச்சுட்டான்.  இவர் தான் நம் பெருமாள்;  நம்பெருமாள்னு சொல்லிக் கூத்தாடி ஆடிப் பாடினான்.  அன்னைக்கு வைச்ச பெயர் இவருக்கு நம்பெருமாள்னு. அந்தப் பெயர் நிலைச்சது.  சரி இனியாவது நம்மளோடயே இருப்பார்னு நினைச்சேன்.  ஆனால் ஒவ்வொரு உற்சவத்திலும் இந்த மனுஷன் ஆண்டாளை வெளியே சந்நிதி வைச்சுக் குடியேற்றி அங்கே மாலை மாற்றிக்கொண்டு வந்துடறார்.  சரி போனாப் போறதுனு அனுமதிச்சா இப்போ இரண்டு நாட்களா ஆளையே காணோமே!  எங்கேனு விசாரிச்சதிலே உறையூருக்குப் போயிருக்காராம்.  வரட்டும்;  வரட்டும் ஒரு கை பார்த்துடறேன்.  யாரோ கமலவல்லியாம்;  ராஜாவின் பெண்ணாம்.  அவள் என்னோட அம்சமாமே?  இருக்கட்டுமே!  அதுக்கு அவளைக் கல்யாணம் செய்துக்கறதா?  ம்ஹூம், இதை நான் அநுமதிக்க மாட்டேன்.  அந்த மநுஷன் வரட்டும்.  உள்ளேயே விடப்போறதில்லை.

திருட்டுத்தனமாக் கல்யாணம் செய்துட்டு அதை என்னிடமிருந்து மறைக்கப் பார்ப்பார்.  எப்படியாவது கண்டு பிடிச்சுடணும்.


படம் உதவி கூகிளார்.

Tuesday, April 09, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம், மட்டையடித் திருவிழா!




ஸ்ரீரங்கத்து அரங்கன் நம்பெருமாளாயிற்றே.  ஆனால் இவன் அழகிய மணவாளன் என்றே அழைக்கப் பட்டிருக்கிறான்.  நம்பெருமாள் என அழைக்கப்படும் காரணத்தை வரும் நாட்களில் தெரிந்து கொள்வோம்.  இப்போ இந்த அழகிய மணவாளன் செய்த ஒரு காரியத்தைச் சொல்லியே ஆகணும்.  இவனோ ஊர்சுத்தி.  ஆங்காங்கே இருக்கும் பெண்கள், ஆண்கள் அனைவரும் தன் பரிமள கஸ்தூரி வாசனையினாலேயே வசீகரிப்பவன்.  இப்படி இருந்த அரங்கன் ஒரு நாள் உலாப் போகையில் இளவரசி ஒருத்தி அவனைக் கண்டாள்.  கண்டது முதல் அவன் நினைவாகவே இருந்தாள்.  மணந்தால் அரங்கன்;  இல்லையேல் திருமணமே வேண்டாம் என்றிருந்தாள்.  அரங்கனுக்குத் தான் வியவஸ்தையே இல்லையே!  அவன் பாட்டுக்குத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தான்.  என்ன இது?  ஏற்கெனவே ரங்கநாயகி நாச்சியார் இருக்கையில் இன்னொரு திருமணமா?  ஆஹா!  ஆம், ஆம், இன்னொரு திருமணம் தான்,  அதுவும் ரங்கநாயகிக்குத் தெரியாமல்.  இது என்ன புதுக்கதை?

சோழர்களுக்கு உறையூர் தலைநகரமாக இருந்த காலம் அது.  நந்த சோழன் என்னும் மன்னன் நாட்டை ஆண்டு வந்தான்.  அவனுக்கு மக்கட்பேறே இல்லாமல் இருக்க ஸ்ரீரங்கத்து அரங்கனை வேண்டினான்.  அரங்கனோ இப்பிறவியில் அவனுக்கு மக்கட்பேறுக்கு வாய்ப்பில்லை;  எனினும் நம் பக்தன் அவன், ஆகையால் அவனுக்கு அருள் செய்ய வேண்டும் என எண்ணினான்.  திருமகளைக் கடைக்கண்ணால் நோக்க அவளும் புரிந்து கொண்டாள்.  தன் அம்சத்தை அவனுக்கு மகவாய்த் தரத் திருவுளம் கொண்டாள்.  ஓர் நாள் உத்தியானவனத்தில் சுற்றி வந்த மன்னன் கண்களில் தாமரை ஓடையில் ஒரு பெரிய அதிசயத் தாமரைப் பூவும், அதில் இருந்த ஒரு குழந்தையும் கண்களில் பட்டது.  மன்னனுக்கு ஆச்சரியம்.  குழந்தையைத் தன்னிரு கைகளிலும் தூக்கி எடுத்து மார்போடு சேர்த்து அணைத்தான்.  குழந்தை, “களுக்”எனச் சிரித்தது.  கமலப் பூவில் கண்டெடுத்த குழந்தைக்குக் கமலவல்லி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான்.  மன்னன் மனம் மகிழ்ந்தது.

விரைவில் மணப்பருவம் எய்திய கமலவல்லி தான் அரங்கனின் உலாவைக் கண்டாள்;  அவன் பால் அவள் மனம் சென்றது இயற்கை தானே!  திருமகளின் அம்சமான அவள் சேர வேண்டிய இடத்திற்கு அவள் மனம் சென்றது அதிசயம் அல்லவே.  ஆனால் இது எதுவும் அறியா மன்னன் மகளின் வருத்தம் கண்டு தானும் வருந்திக் காரணம் கேட்டறிந்தான்.  இது நடக்கக் கூடியதா என எண்ணி வியந்தான்.  கவலையில் ஆழ்ந்த மன்னன் கனவில் அரங்கன் தோன்றி, “உன் மகள் வேறு யாருமல்ல.  திருமகளே உனக்கு மகளாய் அவதரித்துள்ளாள்.  அவளை மணப்பெண்ணாக அலங்கரித்து ஸ்ரீரங்கம் அழைத்து வருவாய்.  நான் அவளை ஏற்றுக்கொள்வேன்.” என்றான்.  அரங்கன் சொல்படியே மன்னன் தன் மகளை அழகிய மணமகளாய் அலங்கரித்து திருவரங்கம் அழைத்து வர, அரங்கன் சந்நிதிக்கருகே மணமகள் மறைந்தாள்.  இதைத் தன் கண்களால் கண்ட மன்னன் வியந்தான்.  திருமகளையே தன் மகளாகத்  தான் வளர்த்து வந்ததையும், அரங்கனே தனக்கு மருமகனாக வாய்த்த பேறையும் எண்ணி மனம் சிலிர்த்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் பற்பல திருப்பணிகள் செய்தான்.  என்றாலும் அவன் மனம் அமைதியுறவில்லை.

பாசத்துடன் தான் வளர்த்த தன் மகளுக்கென ஒரு அழகிய கோயிலை உறையூரில் எடுப்பித்தான்.  பெருமாளை வேண்டிக்கொள்ள அவரும் அழகிய மணவாளராக அங்கே எழுந்தருளியதாகக் கோயில் வரலாறு.  இதன் பின்னர் உறையூர் மண்மாரியால் மூடிய பின்னர் மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப் பட்டபோது எழுப்பிய கோயிலே இப்போது நாச்சியார் கோயில் என்னும் பெயரில் உறையூரில் வழங்குவதாய்ச் சொல்கின்றனர்.  அரங்கன் அங்கே அழகிய மணவாளனாக எழுந்தருளி இருக்கின்றான்.  இந்த நாச்சியாரின் திருநக்ஷத்திரமான ஆயில்யத்தன்று பங்குனி மாதம் இவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி ஸ்ரீரங்கத்திலிருந்து நம்பெருமாள் என்னும் அழகிய மணவாளர் ஒவ்வொரு வருடமும் உறையூருக்குச் செல்கிறார்.  பங்குனி மாதம் ஆயில்ய நக்ஷத்திரத்தன்று அங்கே கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை நடைபெறும்.  இதை முடித்துக் கொண்டு அரங்கன் ஸ்ரீரங்கம் திரும்புகிறார்.  இதெல்லாம் ரங்கநாயகிக்குத் தெரியாது.  தெரிஞ்சதுனா அவ்வளவு தான். இனிமேத் தான் இருக்கு அவருக்கு!

படம் உதவி: கூகிளார்.