எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, May 30, 2010

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! நடராஜா, நடராஜா

ஆனந்த தாண்டவம் என்பது சிதம்பரத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி என்றும், தன்னுடைய பக்தர்களான பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் மற்ற பக்தர்களுக்காகவும் வேண்டி இறைவனால் ஆடப்பட்டது. இதைத் தேவாதி தேவர்களும் கண்டார்கள். இந்த நாட்டியத்தைக் காணத் தேவர்கள் மட்டுமில்லாமல் அந்த ஸ்ரீமந்நாராயணனே தன்னுடைய பைந்நாகப் பாயைச் சுருட்டி எடுத்துக் கொண்டு, கோவிந்த ராஜனாக இங்கே வந்து அமர்ந்து கொண்டு தினந்தோறும் கண்டு களிக்கிறான் என்றால் அந்த ஆட்டத்தை என்னவென்று சொல்லுவது?

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

பொன்னிலே சிறந்தது அம்பொன் எனக் கூறுகின்றனர். அத்தகைய அம்பொன்னினால் ஆன தில்லைப் பதியின் ஐந்து ஆவரணங்கள் எனப்படும் ஐந்து சபைகளிலும் முதல் ஆவரணமான பொன்னம்பலத்திலே ஐந்தொழிலையும் செய்யும் வண்ணம் சக்தியாகவும் நின்று, பேரானந்தப் பெருவெளியில் நடனம் ஆடுகின்றான் எனத் திருமூலர் குறிப்பிடுகிறார்.


ஆதி பரன்ஆட அங்கை அனலாட
ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப்
பாதி மதியாடப் பாராண்டம் மீதாட
நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.

அந்த ஈசன் ஆடும்போது அவன் மட்டுமா ஆடுகிறான்? அவனோடு சேர்ந்து நாம் அனைவரும் அல்லவோ அவன் ஆட்டி வைக்கிறபடி ஆடுகின்றோம்? ஆதி, அந்தங்களைக் கடந்து செய்யும் இந்த ஆட்டம் ஓங்காரமான பிரணவ நாதமோடு ஆடப் படுகிறதன்றோ? என்பது திருமூலர் வாக்கு.


அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி
உம்பர மாம் நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே

தில்லைச் சிற்றம்பலத்திலே ஓயாது ஆடும் கூத்தன் ஆடும் ஆட்டத்தின் போது அவனுடைய இரு திருவடிகளில் இருந்து எழும் சிலம்பின் ஓசையானது நாதமாகவும், விந்தாகவும் மாறி நிற்க, அவற்றினின்று தோன்றும் ஐந்து தத்துவங்களையும் உயிர்களுக்குப் பொருத்தி அவற்றிற்கு அறிவைத் தருகிறான் ஈசன். ஐந்து தத்துவங்களாகத் திருமூலர் குறிப்பிடுவது:

அபர நாதம், அபர விந்து, சாதாக்கீயம், ஈசுரம், சுத்தை வித்தை ஆகியன வாகும்.

Thursday, May 27, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நடராஜா, நடராஜா!


இந்த உலகும் சரி, பஞ்ச பூதங்களும் சரி, சதா காலமும் ஆடிக் கொண்டே இருக்கிறது. பாடிக் கொண்டே இருக்கிறது. இந்த மண்ணில் இருந்தே அனைத்து வகைச் செடி, கொடிகள், மரங்கள், நதிகள் தோன்றி இருக்கின்றன. இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் அசைவுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. பூமிக்குள் இருந்து கிடைக்கும் நவரத்தினங்கள் ஒளி வீசிப் பிரகாசிக்கின்றன என்றால், மரங்கள் இலைகளை ஆட்டி அசைக்கின்றது, சர, சர வென்ற சப்தத்துடனேயே. செடி, கொடிகளும் அவ்வாறே தம் இலைகளை ஆட்டுகின்றன. அதே போல் நதிகளும் அலைகளுடனேயே ஓடுகின்றது. சுழித்துக் கொண்டு ஓடுகின்றது. பிரவாகம் எடுத்துப் பேரொலி கொடுத்துக் கொண்டு ஓடுகின்றது. அருவியாக ஓசையோடு கொட்டுகின்றது.

விண்ணிலோ என்றால் இடி, இடிக்கின்றது, மின்னல் மின்னுகின்றது. மழை கொட்டுகின்றது. இப்படி அனைத்திலும் ஓர் அசைவு ஏற்பட்டு அசைவுகளே இல்லாத உலகே இல்லை எனும்படி இருக்கின்றது. காற்று தென்றலாய் வருடுகின்றது, புயலாய் வீசுகின்றது. அக்னியோ ஊழித் தீ போல் எரிகின்றது, அல்லது சிறு நெருப்பாகக் கண கண வெனப் பிரகாசிக்கின்றது. பஞ்ச பூதங்களும் நடனம் ஆடுகின்றன. அசைவின்றி எதுவும் இல்லை. அறிவியலில் அணு கூட அசைவதாகவே சொல்கின்றனர். இந்த மாபெரும் அறிவியல் தத்துவத்தின் வடிவமே நடராஜர் ஆவார்.

இந்த நடராஜர் ஆடிய ஏழுவகைத் தாண்டவங்கள் பற்றியும், அவற்றில் முதன்மையாக விளங்கும் நடராஜ அமைப்பைப் பற்றியும் இனி காண்போம். இப்போது நடராஜரின் நாட்டியத்தைப் பற்றிச் சற்று பார்ப்போம். இந்த உலகம் இயங்குவதற்கே காரணம் நடராஜர் தான். ஒவ்வொரு அணுவின் இயக்கத்திலும், புல், பூண்டு, செடி, கொடிகள், மரங்கள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், அருவிகள்,குன்றுகள், தடாகங்கள்,மிருகங்கள், மனிதர்கள், பூக்கள், காய்கள், பழங்கள், பறவைகள், பறக்கின்றன, ஊர்கின்றன இவற்றின் அசைவுகள், வண்ணச் சேர்க்கை எல்லாவற்றையுமே இயற்கை என்று சொல்லிவிட்டுப் போகலாம்தான். ஆனால் இயற்கை இந்த வண்ணக்கலவையைக் கொண்டு வந்தது எப்படி? பூவில் மகரந்தச் சேர்க்கை எந்த நியதிப்படி ஏற்படுகிறது? அனைத்துக்கும் காரணம் இந்த இடைவிடாத, நிற்கவே நிற்காத பரம்பொருளின் ஆட்டம் தான். ஆனந்த நடராஜன், ஆனந்த தாண்டவம் ஆடும் வேளையில், வசந்தம் வந்து மெல்லக் கதவைத் தட்டுகிறது, பூக்கள் மலர்கின்றன, வண்டுகள் ரீங்காரமிடுகின்றன. புள்ளினங்கள் ஆர்க்கின்றன, மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. அவனின் தாண்டவம் ருத்ர தாண்டவம் என்றால் அதற்குத் தகுந்தாற்போல் புயல் அடிக்கிறது, பெருமழை பொழிகிறது, இடி இடிக்கின்றது, மின்னல் கண்ணைப் பறிக்கிறது, கோபம் எல்லை மீறினால் சுனாமியும் வந்து விடுகிறது. விஞ்ஞான பூர்வமாக பூகம்பம் ஏற்படுவதால் நிகழும் நிகழ்வுகள் இவை என்று சொன்னாலும், இந்த நிகழ்வுகள் ஏற்பட்க் காரணம் என்ன?

எல்லை அற்றப் பரம்பொருளின் இடைவிடாத ஆட்டத்தை"சதாதாண்டவம்" என்று சொல்கின்றனர். அதனாலேயே அந்த ஆடுபவனுக்கும் "சபாபதி" "சபாநாயகன்" "நடராஜராஜா" என்றெல்லாம பெயர்கள் உண்டு. இதை "நடாந்த தாண்டவம்" எனவும் சொல்கின்றனர். முடிவில்லாமல் ஆடிக் கொண்டே இருக்கும் ஆட்டம் என அர்த்தம் இதற்கு. சிவனின் நாட்டியக் கோலங்கள் பலவகைப் பட்டது. அதில் இந்த ஆனந்தத் தாண்டவம் முதல் வகையாக்வும், சிதம்பரத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சியாகவும் உள்ளது.

பரத முனிவர் எழுதிய பரத நாட்டிய சாஸ்திரத்தின் படி சிவனின் நாட்டிய வகைகள் 7 முக்கியமான பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டுள்லது. அவை :

1.ஆனந்த தாண்டவம் - சிதம்பரம் , பொன்னம்பலம்
2.சந்தியா தாண்டவம் - மதுரை, வெள்ளி அம்பலம்
3.உமா தாண்டவம் -
4.கெளரி தாண்டவம் - மயூர நாதர் கோவில், மாயூரம், திருப்பத்தூர்,
5.காளிகா தாண்டவம் - ரத்தின சபை - திருவாலங்காடு
6.திரிபுர தாண்டவம் - சித்திர சபை - திருக்குற்றாலம்
7.ஊர்த்துவ தாண்டவம்- சிதம்பரம், திருவாலங்காடு, காஞ்சி, திருசெங்காட்டாங்குடி, தென்காசி, தாராமங்கலம்.

இது தவிர, பிரளய காலத்தில் ஆடப் படும் சம்ஹார தாண்டவமும் சொல்லப் படுகிறது. முடிந்த வரை ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம், சதாசிவ மூர்த்தியின் படம் திரு நடராஜ தீக்ஷிதர் அனுப்பி வைத்துள்ளார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் படத்தையும் இங்கே போடுகிறேன்.

Wednesday, May 26, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சோமாஸ்கந்தர்!

அடுத்து நாம் காணப் போவது சோமாஸ்கந்த மூர்த்தி ஆகும். உமையோடும், கந்தனோடும் இறைவன் குடும்ப சமேதராய்க் காட்சி அளிக்கும் திருவுருவே சோமாஸ்கந்த மூர்த்தி என அழைக்கப் படுகின்றது. இந்தத் திருமேனியைத் தரிசிப்பது மிகவும் சிறப்பு எனக் கூறப் படுகின்றது. இறைவன் ஒரு இனிய அன்பான கணவனாய், பாசமிக்க தந்தையாய்க் காட்சி அளிக்கும் இந்த மூர்த்தம் திருவாரூரில் மிகச் சிறப்பு வாய்ந்து விளங்குகின்றது. சச்சிதானந்தம் ஆன இறைவனை சத்= இறைவன், சித்=இறைவி என்றும் இருவரும் சேர்ந்தே ஆனந்தம்=கந்தன் என்றும் விளங்குவதாயும் சொல்லுவார்கள். உண்மையான இறைவனும், நன்மையான இறைவியும் சேர்ந்து படைத்த அழகே வடிவான கந்தன் எனவும் சொல்லலாம்.

நமது பாரதத்தின் திரிவேணி சங்கமத்தில் இணையும் வெண்மை நிறக் கங்கையைப் போல் உடல் முழுதும் அணிந்த வெண்ணிறத் திருநீறோடு இறைவனும், கருநிஆஅ யமுனை போன்ற உமை அம்மையும், சிவந்த நிற சரஸ்வதி போன்ற செக்கச் சிவந்த சிவகுமாரன் ஆன ஸ்கந்தனும் சேர்ந்தே சோமாஸ்கந்த மூர்த்தி ஆனார்கள் என்பது வழக்கு. பொதுவாகக் கர்ப்பகிரகங்களின் வலப்பக்கங்களில் காணப் படும் சோமாஸ்கந்த விக்ரகம் பல்லவர் காலத்தில் பிரபலம் ஆகி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் காலங்களில் கருவறைக்குப் பின்புறம் கருவறைச் சுவரில் இந்த மூர்த்தம் வைக்கப் பட்டு வழிபட்டு வந்ததாயும் தெரிய வருகின்றது.

ஈசன் அமர்ந்த திருக்கோலத்தில் இடக்காலை மடித்துக் கொண்டும், வலக்காலைத் தொங்க விட்டுக் கொண்டும், புலித் தோலோ அல்லது பட்டாடையோ அணிந்து கொண்டும் இருப்பார். நான்கு திருக்கரங்களில் பின்னால் உள்ள இரு கரங்களிலும் முறையே மானும், மழுவும் இருக்கும். முன்னால் உள்ள இருகரங்களும் முறையே அபய முத்திரையும், வரத முத்திரையும் காட்டிக் கொண்டிருக்கும். அம்பிகை நேர்மாறாக வலக்காலை மடித்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டுக் கொண்டிருப்பார். வலக்கரம் தாமரையுடனும், இடக்கரம் மேனியில் அமர்த்தியும் காணப்படும். அம்பிகையின் மடியிலோ அல்லது இருவருக்கும் நடுவே ஆடிக் கொண்டோ குழந்தை கந்தன் ஆனந்தமாய்க் காட்சி தருவான்.

ஆடிய கோலத்தில் இருக்கும் கந்தனின் இடக்கரம் பழத்தையும், வலக்கரம் ஆள்காட்டி விரலைக் காட்டியபடியும் காணப்படும். நம்மைச்சுட்டிக் காட்டுவதாயும் அமைந்திருக்கும் இந்தக் கோலம் காணக் கிடைக்காத அரிய காட்சி. பல அருங்காட்சியகங்களில் காணப் படும் இந்த சோமாஸ்கந்த வடிவம் திருக்கருகாவூர், திருக்கள்ளில் போன்ற இடங்களிலும், சப்த விடங்கத் தலங்களில் முதன்மையான திருவாரூரிலும் காணப்படுகின்றது.திருவாரூரில் தியாகராஜா என்ற பெயரில் வழங்கப்படுபவர் இந்த ஸோமாஸ்கந்தரே ஆவார். இந்த மூர்த்தத்தையே மஹாவிஷ்ணு புத்திரப் பேறு வேண்டி தன் இதயத்தில் இருத்தி வழிபட்டதாய்ச் சொல்வார்கள். இந்த சோமாஸ்கந்தரைத் தான் தியாக ராஜராகப் போற்றி வழிபடுகின்றோம். குமரகுருபரர் தம் திருவாரூர் நான்மணி மாலையில் இவரைப் போற்றிப் பல பாடல்கள் பாடி இருக்கின்றார்.

என்பணிந்த தென்கமலை யீசனார் பூங்கோயில்
முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் - அன்பென்னாம்
புண்சுமந்தோ நந்தி புடைத்தென்னார் புண்ணியனார்
மண்சுமந்தா ரென்றுருகு வர்.

வரந்தந் தருள வரதம்வைத் தாலென் வரதமிடக்
கரந்தந்த தாலிவர் கையதன் றேபலி காதலித்துச்
சிரந்தந்த செங்கைக் கமலேசர் நாமந் தியாகரென்ப
தரந்தந்த வாள்விழி யாடந்த தாங்கொ லறம்வளர்த்தே


மல்லல்வளங் கனிந்தபுகழ்க் கமலேசர் திருவுருவும் வாம பாகத்
தல்லமர்பைங் குழலுமையா டிருவுருவு மிருவருக்கும் அமுத மான
கொல்லயில்வேற் பசுங்குழவி திருவுருவு மருவுருவாம் குணங்கண் மூன்றின்
நல்லுருவா தலினன்றோ விவரகில காரணராய் நவில்கின் றாரே. 32


குமரகுருபரரின் திருவாரூர் நான்மணி மாலையில் இருந்து.

சோமாஸ்கந்தர், இல்லற வாழ்வின் இன்பத்தினையும், நன் மக்கட் பேறு, போன்றவற்றை வலியுறுத்தும் வண்ணம் இறைவனே தன் குடும்ப சமேதராய் பக்தர்களைக் காப்பதற்கு என ஏற்பட்டது. இவரைத் துதித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் எனவும், சோமாஸ்கந்தருடன் இருக்கும் உமையம்மையை, "புத்திர செளபாக்கிய ப்ரதாயினி" என்றும் சொல்லப் படுகின்றது. அடுத்து வருபவர் சிவ வடிவங்களிலேயே அனைவர் மனதையும் கவர்ந்த நடராஜர் ஆவார்.

Saturday, May 22, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! மஹேஸ்வர மூர்த்தி

சதாசிவ மூர்த்தியின் ஆயிரத்தில் ஒரு கூறிலிருந்து தோன்றியவரே மகேசர் என்பதைக் குறிப்பிட மறந்துள்ளேன். மகேச மூர்த்தி மகேச வடிவங்கள் என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறார். இவரே படைத்தல், காத்தல், ஒடுக்கல் ஆகியவற்றை நேரடியாக இயற்றுவதாய்ச் சொல்வார்கள். உருவத் திருமேனியுடன் காட்சி அளிக்கும் இவரின் வடிவங்களே இனி நாம் காணப் போவது. இந்த மகேச மூர்த்தி அடியவர்களைத் தண்டிக்கவும், அடியவர்களுக்கு உதவிகள் செய்து காக்கவும் பல வடிவங்களில் எடுத்துப் பல திருவிளையாடல்களைப் புரிகின்றார். இவரை நின்ற கோலம், அமர்ந்த கோலம், நாட்டியம் ஆடும் கூத்துக்கோலம், வாகங்களில் ஏறி வரும் கோலம், உக்கிரமாய் இருத்தல், சாந்த ஸ்வரூபியாய்க் காட்சி அளித்தல் எனப் பல்வேறு நிலைகளிலும் காண்போம்.

மகேச மூர்த்திக்கு ஒரு முகம், மூன்று கண்கள், ஜடா மகுடம், நான்கு கரங்கள், ஆகியவற்றுடன் காட்சி அளிக்கின்றார். பின்னிரு கரங்களில் மானும், மழுவும் காணப்படும். முன்னிரு கரங்கள் அபயஹஸ்தமாகக் காண்கின்றது. மகேச்வர வடிவங்களைச் சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களுக்கும் பொருந்துமாறு 25 விதங்களில் குறிப்பிடுவார்கள். அதாவது சதாசிவ மூர்த்தியின் தத் புருஷம் என்னும் முகத்தில் இருந்து தோன்றியவர்கள்

1.பிட்சாடன மூர்த்தி
2.காமதகனர்
3.கால சம்ஹாரர்
4.ஜலந்தரவதர்
5.திரிபுராந்தகர்

அடுத்து ஈசான முகத்தில் இருந்து தோன்றியவர்கள்

1.சோமாஸ்கந்தர்
2.நடராஜர்
3.ரிஷபாரூடர்
4.கல்யாண சுந்தரர்
5. சந்திர சேகரர்

அடுத்து அகோர முகத்தில் இருந்து

1.கஜ சம்ஹார மூர்த்தி
2.வீரபத்ரர்
3.தட்சினா மூர்த்தி
4,கிராத மூர்த்தி
5.நீலகண்டர்

அடுத்து வாமதேவ முகத்தில் இருந்து

1.கங்காளர்
2.சக்ரதானர்
3.கஜமுக அனுக்ரஹர்
4,.சண்டோ அனுக்ரஹர்
5.ஏக பாதர்

அடுத்து சத்யோஜாத முகத்தில் இருந்து

1.லிங்கோத்பவர்
2.சுகாசனர்
3.உமா மகேசுவரர்
4.சங்கர நாராயணர்
5. அர்த்த நாரீசுவரர்.

உலகத்தார் உய்யும் பொருட்டும், உலகைக் காக்கவும் ஈசன் பல வடிவங்களை எடுப்பதாய்ச் சிவனடியார்கள் கூற்று. அவை மூன்று வகைப் படும். அவை போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம். இதில் போகம் இன்பத்தையும், யோகம், அமைதியையும், வேகம், கோபத்தையும் குறிக்கின்றன. பொதுவாக மகேச வடிவத்தை இல்லறத்தாரே பெரிதும் பூசை செய்வர் என்பது வழக்கு. அதற்கேற்பத் திருமூலரின் திருமந்திரத்திலும்,ஏழாம் தந்திரம் பாடல் எண் மூன்று, அத்தியாயம் 13. மாகேசுர பூஜையில் இவ்வாறு கூறுகின்றார்:

பாடல் எண் : 3

மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
ஆத்தனுக் கீந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.

சிவனடியார்களை "மாகேசுரன்" என்று சொல்லும் திருமூலர் அந்த மகேசனுக்குள் அடங்கியவர்களே மாகேசுவரர் என்றும் கூறுகின்றார். சிவனைத் துதிக்கும் இல்லறத்தார் விருந்தோம்பலிலே சிவனடியார்களான மாகேசுவரனையும் துதிக்கலாம் என்று கூறுகின்றார். இறைவன் திரு உருவம் எப்படி இருக்கும் என நாம் அறியும்படிக்கு இந்த மகேசுவரனின் 25 வடிவங்களையும், சைவத் திருமுறைப் பாடல்களிலும், சாத்திரங்களிலும் குறிப்பிடப் படுகின்றது. சில கோயில்களில் சில வடிவங்களைத் தேர்ந்த சிற்பிகள் கல்லால் ஆன சிலைகளாகவும், பஞ்ச லோகப் படிமங்களாகவும் செய்து வைத்துச் சென்றிருக்கின்றார்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே!


டிஸ்கி: முதல் பத்தி விடுபட்டுப் போனதை இன்று தான் சரி செய்திருக்கிறேன். நன்றி.

Sunday, May 16, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சதாசிவ மூர்த்தி!


பஞ்ச முக லிங்கங்கள் தவிர்த்து, ஈசனின் ஆறாவது முகமும் உள்ளது. இந்த ஆறாவது முகம் கீழ்நோக்கியே காணப் படுகிறது. இது "அதோ முகம்" என அழைக்கப் படுகிறது. ஈசனின் ஐந்தாவது முகம் மேல் நோக்கி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டும், ஆறாவது முகம் கீழ் நோக்கி பாதாளத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கும். இந்த ஆறாவது முகம் நம் கண்களுக்குப் புலப்படாத ஒன்றாகும். இந்த ஆறு முகங்களில் இருந்தும், அவற்றின் நெற்றிக் கண்களில் இருந்து விளைந்த நெருப்புப் பொறிகளில் தோன்றியவரே முருகப் பெருமான் ஆவார். பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் பொங்கி வந்த போது, அதை விழுங்கியது இந்த ஆறாவது முகமே எனவும் சொல்லப் படுகிறது.

ஆகவே ஈசனின் நீலகண்டமே ஆறாவது முகமாய்க் கருதுவோர்களும் உண்டு. ஆறுமுகங்களுடன் கூடிய லிங்கங்கள் எங்கும் வழிபாட்டுக்குக் காணக் கிடைக்கவில்லை. ஏனெனில் முருகப் பெருமானே சிவ ஸ்வரூபம் என்பதால் அவரே ஆறுமுக, சிவனாய்க் கருதி வழிபடுவோரும் உண்டு. திருவானைக் காவில் உள்ள தென் பிரகாரத்தில் உள்ள 108 லிங்கங்களில் ஒரு லிங்கத்தில் விநாயகரும், மற்றொரு லிங்கத்தில் முருகப் பெருமானும் காணப் படுவதாய்ச் சொல்கின்றனர். காஞ்சியில் உள்ள ஆதி காமாட்சி அம்மன் கோயிலிலும், முன் மண்டபத்தின் லிங்கத் திருமேனியில் பிடாரியின் உருவம் அமைக்கப் பட்டு, சக்தி லிங்கம் என அழைக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர். அடுத்து சதாசிவ மூர்த்தி பற்றிப் பார்ப்போமா?

திருமூலர் திருமந்திரத்தில் சதாசிவ மூர்த்தியைப் பற்றித் துதிக்கையில் இவ்வாறு கூறுகிறார்:
"கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்தெழும்
தேடு முகம் ஐந்து செங்கண் மூவைந்து
நாடும் சதாசிவ நல் ஒளி முத்தே!" (ஏழாம் தந்திரம் பாடல் ஒன்று)
எனக் கூறுகின்றார்.
சதாசிவ வடிவத்துக்கு முகம் ஐந்து, திருப்பாதங்கள் இரண்டு, பத்துக் கைகள், ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களாக மொத்தம் பதினைந்து கண்கள் இவற்றோடு தாமரைப் பீடத்தில் நிற்பதாய்க் கூறுகின்றார்.


சதாசிவ மூர்த்திக்கு ஐந்து முகங்கள் இருப்பதாய் அறிகின்றோம். சிவ ஆகமங்களை அந்த ஐந்து முகங்களில் இருந்தும் உபதேசிக்கும் பொருட்டு ஐந்து முகங்களுடன் காட்சி அளிப்பதாயும் ஆன்றோர் கூறுகின்றனர். ஒவ்வொரு திருமுகமும் ஒவ்வொருவருக்கு உரியது எனவும் சொல்லப் படுகின்றது. கிழக்குப் பார்த்த திருமுகம் ஈஸ்வரனுக்கு உரியது எனவும், அதைத்
"தத்புருஷம்" என அழைப்பதாயும், மேற்கே பார்க்கும் முகம் பிரம்மனுக்கு உரியது எனவும், "சத்யோ ஜாதம்" என அழைக்கப் படுவதாயும், தெற்கே பார்க்கும் முகம் ருத்ரனுக்கு உரியது எனவும், "அகோர முகம்" என அழைக்கப் படுவதாயும், வடக்கே பார்க்கும் திருமுகம், விஷ்ணுவுக்கு உரியது எனவும், "வாமதேவம்" என அழைக்கப் படுவதாயும், உச்சியில் விளங்கும் சதாசிவனின் முகம் "ஈசானம்" எனவும் அழைக்கப் படுவதாய் அறிகின்றோம். ஈசனின் ஐந்தொழில்களையும் குறிக்கும் இவை எனவும் சொல்லப் படுகின்றது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளுதல் என்னும் ஐந்தொழில்களயும் ஐந்து முகங்களும் குறிக்கின்றன என்றும் தெரிந்து கொள்கின்றோம்.




நான்கு திக்குகளிலும் உள்ள நான்கு முகங்களாலும் முறையே ஐந்து வீதம் 20 ஆகமங்களும், உச்சியில் உள்ள ஈசான முகம் 8 ஆகமங்களையும் அருளியதாய்ச் சொல்லப் படுகின்றது. மேலும் இந்த மேற்கண்ட ஐந்து மந்திரங்களாலேயே ஈசனின் உடல் ஆனது என்றும் அறிகின்றோம். சாமானியமான நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வடிவம் கொண்ட இந்த உடலில் உள்ள ஐந்து வித சக்திகளே, ஈசனின் ஐந்தொழில்களுக்கும் காரணமாகவும், காரியமாகவும் ஆகின்றது. உலகுக்கு எல்லாம் ஈசனாய் இருந்து ஞானத்தை அந்த ஞான வடிவான ஈசன் அருளுவதால் இவரை ஈசான மூர்த்தி, அகோர மூர்த்தி, வாமதேவர், சத்யோஜாதர், சதாசிவம் என்று எல்லாம் அழைக்கின்றோம். இவரை ஐந்து மட்டுமில்லாமல் 25 முகங்கள் வரையும் கொண்டவராயும் சித்திரிக்கப் படுகின்றார். ராஜ ராஜ சோழன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலும், மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலிலும் சதாசிவ மூர்த்தியின் வடிவங்கள் காணப் படுகின்றது. சென்னை ம்யூசியத்தில் இவரின் செம்புத் திருமேனி காட்சிப் பொருளாக வைக்கப் பட்டுள்ளதாயும் அறிய வருகிறது.

இந்த சதாசிவ மூர்த்தியில் இருந்து தோன்றியவராய்ச் சொல்லப் படும் மகேச மூர்த்தியைப் பற்றி அடுத்துக் காணலாம்.

டிஸ்கி: சதாசிவ மூர்த்தி படத்தை மறந்து போய்ப் போன பதிவிலே போட்டுட்டேன்.மன்னிக்கவும்.

Friday, May 14, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! முகலிங்கங்கள் வகை!

இது இருமுக லிங்கம் அல்ல. சதுர்முக லிங்கத்தில் இரு முகங்கள் மட்டுமே காண முடிகிற அமைப்பில் உள்ள படம். இரு முகலிங்கங்கள் படம் கிடைக்கலை. :(

இப்போது இரு முக லிங்கம் பத்திப் பார்ப்போம்.

இரு முக லிங்கங்களில் ஒரு முகம் கிழக்கு நோக்கியும் (தத்புருஷம்) மற்றொரு முகம் மேற்கு நோக்கியும் காணப்படும். இவை "ம்ந்திரலிங்கங்கள்" எனச் சொல்லப் படுகின்றன. இவற்றை அதிகம் வழிபடுவது கர்நாடகாவில் உள்ள லிங்காயத்தார் என அழைக்கப் படும் வீர சைவர்கள் ஆவார்கள். சிவத் தொண்டு செய்பவர்களும் இந்த லிங்கங்களை வழிபடலாம் எனச் சொல்லப் படுகிறது. இந்த லிங்கங்களைப் பூஜிக்க தற்காலத்தில் "விருட்சி" என அழைக்கப் படும் இருவாட்சி மலர்கள் நல்லது. இரு முகம் கொண்ட ருத்திராட்சத்தால் அலங்கரிக்கலாம்.

அடுத்து மூன்று முக லிங்கங்கள். இவை கிழக்கு, தெற்கு, வடக்கு மூன்று திசைகளை நோக்கிக் காணப் படும். தத் புருஷம், அகோரம், வாமதேவம் என மூவகைப் பட்ட முகங்கள் கொண்ட இந்த லிங்கங்கள் முத்தொழிலையும் குறிப்பவை எனச் சொல்லப் படுகிறது. கிழக்கு முகம் ஆண்மையின் கம்பீரத்துடன் காணப்படுவதால் படைத்தலையும், தெற்கு முகம் கோபத்துடன் காணப் படுவதால், அழித்தலையும், வடக்கு முகம் பெண்மையின் ஜாடையுடனே சிரிப்புடனேயும் காணப் படுவதால் காத்தலையும் குறிக்கும். திரிமூர்த்தி லிங்கம் என அழைக்கப் படும் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரை கோயிலிலும், நாசிக்கில் உள்ள திரியம்பகேஸ்வரரும் திரி மூர்த்தி லிங்கங்கள் என அழைக்கப் படுகின்றன. இது தவிர, எலிபெண்டா குகையிலும் மும்முக லிங்கம் காணப் படுவதாய்ச் சொல்கிறார்கள். இந்த மும்முக லிங்கங்களுக்கு மும்முக ருத்ராட்ச மாலை அணிவித்து, மூன்று தளங்கள் உள்ள வில்வத்தால் வழிபடலாம்.

இனி சதுர்முக லிங்கங்கள் பத்திப் பார்க்கலாம். சதுர்முக லிங்கம் என்னும் நான்கு முக லிங்கம் "வேத லிங்கம்" என அழைக்கப் படுகிறது. இவற்றின் முகங்கள் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளை நோக்கி இருக்கும். இவை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைக் குறிப்பவை என்று சொல்வார்கள். நேபாளத்தின் பசுபதி நாதர் கோயிலில் நம் கண்ணுக்குத் தெரிவது சதுர்முக லிங்கம் தான் என்றாலும், அவற்றுக்கும் மேல் நோக்கிய ஒரு முகமும், கீழ் நோக்கிய ஒரு முகமும் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளதாய்ச் சொல்லப் படுகிறது. ஆனால் நேபாள சதுர்முக லிங்கம் மார்பு வரையிலும், இரு கரங்களுடனும் காட்சி தருகிறது. நான்கு முகம் இருப்பதால் அங்கே நான்கு வாசல்களும் உண்டு. ஒவ்வொரு வாசலிலும் போய்த் தனித் தனியாகத் தரிசனம் செய்யும் வசதியும் உண்டு.

இது தவிர, காஞ்சியில் கச்சபேஸ்வரர் கோயிலிலும், திருவதிகை, திருவண்ணாமலை, திருவானைக்கா ஆகிய தலங்களிலும் காளஹஸ்திக்கு அருகே உள்ள மலை மண்டபத்திலும் சதுர்முக லிங்கங்கள் உள்ளதாய்த் தெரிய வருகிறது. இந்த லிங்கங்களுக்கு நான்கு முக ருத்திராட்சம் அணிவித்து நான்கு வில்வதளங்களால் வழிபடுவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. வழிபடுவோருக்குப் பிரம்ம ஞானம் கைவரப் பெற்று எட்டுத் திக்கிலும் புகழ் வாய்ந்தவராய்ச் சொல்லப் படுவார்கள்.

ஐந்து முக லிங்கங்களில் திசைக்கு ஒன்றாக ஐந்து முகங்கள் தவிர, உச்சியில் வடகிழக்கு திசை நோக்கி ஒரு முகமும் காணப்படும். திருச்சியில் திருவானைக்காவல் கோவில் அருகே "பஞ்சமுகேஸ்வரர் கோயில்" என்று தனியாக உள்ளது. சஷ்டி அப்த பூர்த்தியை அந்தக் கோயிலில் வைத்துச் செய்யப் படுவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. வட இந்தியாவில் சில தலங்களிலும் பஞ்சமுக லிங்கங்கள் காணப் படுகின்றன. திருக்கைலையில் இறைவனின் தரிசனம் பஞ்சமுக லிங்க தரிசனம் என்றே சொல்லப் படுகிறது. இந்தப் பஞ்ச முகங்களில் இருந்தே கங்கை ஐந்து உருவங்களில் பொங்கி வருவதாயும் சொல்லப் படுகிறது. திருக்கோயில்களில் கடைப் பிடிக்கப் படும் "ஆகமம்" இந்த ஐந்து முகங்களில் இருந்தே வந்ததாயும் சொல்லப் படுகிறது. அதனால் பஞ்சமுக லிங்கத்தைச் சிலர் "சிவாகம லிங்கம்' எனவும் சொல்வார்கள்.

ஐந்து முக ருத்திராட்சத்தினால் மண்டபம் கட்டி, ஐந்து பொருட்களால், குறிப்பாய் பஞ்சகவ்யம் எனப்படும் பசும்பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவற்றால் அபிஷேஹம் செய்து, ஐந்து மலர்களால் மாலை அணிவித்து, ஐந்து வில்வங்களால் அர்ச்சித்து, ஐவகை நைவேத்தியம் செய்வித்து, வழிபடுதல் விசேஷம் எனச் சொல்கின்றனர்.

Sunday, May 09, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! முகலிங்கம்!

முக லிங்கம் என்பது ஒரு முக லிங்கத்தில் இருந்து ஐந்து முக லிங்கங்கள் வரை உடையவை ஆகும். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு இருக்கும். ஆறாவது முகம் அதோ முகம் என்று சொல்லப் படும். அது அநேகமாய் மறைந்தே இருக்கும். அது பாதாளத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும், எனவும், சக்திகள் அதில் இருந்தே ஆரம்பம் எனவும் சொல்லப் படுகிறது. இந்த ஆறாவது முகத்தில் இருந்து தான் சிவஸ்வரூபம் ஆன சுப்ரமண்யர், நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதாகவும் சொல்லப் படுகிறது. பரம்பொருள் ஆன அந்த ஈசனுக்கு ஆறுமுகங்கள் என்பது சிவனடியார்களின் வழக்கு என்றாலும் நம்மால் அறியும் வகையில் இருப்பவை ஐந்து முகங்களே ஆகும். அதனால் தான் சுப்ரமணியருக்கு இறைவனின் சொரூபம் என உணர்த்தும் வகையில் ஆறுமுகங்கள் அமைந்தது எனவும் சொல்லப் படுகிறது.

இப்போது ஒவ்வொரு முகமும் நோக்கும் திசையையும், தன் முகங்களின் நிறங்களையும் பார்க்கலாம். கிழக்கே பார்த்து இருக்கும் முகம் "தத் புருஷம்" என அழைக்கப் படுகிறது. இது பள பளவென்ற பொன் நிறத்தில் காணப்படும். தென் திசையை நோக்கிக் கொண்டிருக்கும் முகம் ஆனது "அகோரம்" என்று அழைக்கப் படும், இது கரு நிறத்தில் காணப்படுகிறது. மேற்கே பார்த்துக் கொண்டிருக்கும் முகம் "சத்யஜோதம்" என அழைக்கப் படும். இது தூய வெண்மை நிறத்தில் காணப்படும். வடக்கே பார்க்கும் முகம் "வாமதேவம்" எனப் படும், இது சிவந்த நிறத்தில் காணப் படும். ஈசான்ய திசை என்று அழைக்கப் படும் வட கிழக்குத் திசையில் காணப் படுவதோ, "ஈசான்ய முகம்" என்றே அழைக்கப் படும். இது பளிங்கு நிறத்தில் ஒளிர்கிறது.

முதலில் ஒரு முகம் கொண்ட லிங்கத்தைப் பற்றிப் பார்க்கலாம். தத்புருஷ லிங்கம் என அழைக்கப் படும் இந்த லிங்கத்தை வணங்கினால் சகல செல்வங்களுடன் கூடிய ராஜ யோகத்தை அடைவார்கள். சில கோயில்களில் இவ்வகை லிங்கங்கள் தென் மேற்கு மூலையில் காணப் படுகின்றது எனச் சொல்கின்றார்கள். தென்மேற்கு மூலையை "நிருதி" என அழைக்கிறார்கள். இந்த நிருதி தேவனால் இந்த லிங்கங்கள் வழிபடப் பட்டதால் இவை நிருதி லிங்கம் எனவும் அழைக்கப் பட்டு, கோயில்களின் தென் மேற்கு மூலைகளிலும் வைக்கப் படுகின்றன. சிதம்பரம், திருவண்ணாமலை, சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமி கோயில், காளஹஸ்தி போன்ற இடங்களில் ஒரு முகத்துடன் கூடிய லிங்கங்கள் காணப்படுவதாயும் சொல்கின்றார்கள். வேதத்தின் சாரமான அக்னி மற்றும் ருத்ரன் இருவரின் இணைப்பே இந்த லிங்க வடிவம் என ஆய்வாளர்கள் சொல்வதாயும் தெரிகின்றது. ஆந்திராவில் உள்ள குடிமல்லம் என்னும் பகுதியிலும் சிவனின் முழுவடிவமும், லிங்கமாய் ஆன வரலாறும் காணப் படுவதாய்ச் சொல்கின்றார்கள். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும் தெரிகிறது.

முகலிங்கங்கள் என்று தேடினால் அதிகமாய்க் கிடைக்கவில்லை. ஒரு சில கிடைத்தவற்றைப் போடுகிறேன். தொடருக்கும், படத்துக்கும் சம்மந்தம் இருப்பது கொஞ்சம் கஷ்டம் தான். :((

Thursday, May 06, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! லிங்க ஸ்வரூபம்!

பொதுவாக லிங்கங்களுக்கு மூன்று பகுதி உண்டு. அவை பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் பொதுவாய்க் குறித்தாலும், பஞ்ச பூதங்களில் முக்கியமான பூமி-பிரம்மா, நீர்-விஷ்ணு, அக்னி-சிவன், ஆகிய மூன்றையுமே சுட்டிக் காட்டுகிறது, என ஆன்றோர் கூற்று. இயற்கையிலும், இறை சக்தியே நிரம்பி உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டவே இவ்வாறு சொல்கின்றார்கள், இந்த லிங்க வடிவிலே அடிப்பகுதியான பிரம்ம பாகம் பூமியிலே மறைந்து இருக்கும் வண்ணமும், ஆவுடை என்று சொல்லப் படும் நடுப்பகுதியான விஷ்ணு பாகம், அபிஷேகங்களை ஏற்கும் இடமாகவும், பாணமாகிய மேல் பகுதிதான் மேலோங்கி நின்று ஜோதி போலவும் காட்சி அளிக்கின்றது. இந்த லிங்கங்களுக்கு உருவமும் உண்டு, அருவலிங்கம் என வெறும் பாணம் மட்டுமே உள்ள லிங்கங்களும் உண்டு. முகலிங்கங்கள் உருவம், அருவம் இரண்டும் அமையப் பெற்றிருக்கும். அடிப்பகுதியான பிரம்ம பாகமும், ஆவுடையும் இருக்கும், நடுவில் உள்ள பாணப் பகுதியில் முகம் இருக்கும். இப்படிப் பட்ட லிங்கங்கள் நம் நாட்டை விட நேபாளத்திலேயே அதிகம் காணப் படுகின்றது.

தமிழ்நாட்டில் சிதம்பரம், திருவண்ணாமலை, போன்ற ஊர்களில் முகலிங்கங்களும், சுசீந்திரம் தாணுமாலயர் கோவிலில் கண், காது, மூக்கு வைத்து அலங்கரிக்கப் பட்ட முகலிங்கமும், காளஹஸ்தி கோயிலிலும் மேற்கூறியவாறு அலங்கரிக்கப் பட்ட லிங்கமும், ஊட்டியிலும் இவ்வாறான லிங்கங்களும் காணப் படுகின்றன. லிங்கங்கள் பலவகைப் பட்டாலும், வழிபாட்டுக்கு உரியவையில் சிறப்பானவை சுயம்புலிங்கங்களே ஆகும். இந்தச் சுயம்பு லிங்கங்கள் தானாக உண்டானதும், கரடுமுரடாகவும் இருக்கும், மற்ற ரேகைகள் எதுவும் இருக்காது என்றும் சொல்கின்றனர். இது தவிர, குருவின் அனுமதி மற்றும் உபதேசத்துடன் பெறும் இஷ்டலிங்கங்கள் உண்டு. இவை தனிப்பட்ட வழிபாடுகளிலேயே பெரும்பாலும் இடம் பெறுகின்றன. பாமர மக்களுக்கு அருளும் வண்ணம் ஏற்பட்டவையே தேவர்கள், முனிவர்கள், மற்றும் மனிதர்களால் ஸ்தாபிக்கப் பட்ட பரார்த்தலிங்கம். இவையே பெரும்பாலும் கோயில்களில் வழிபாட்டுக்கு என அமைந்துள்ளவை.

அம்பிகை தன் தவங்களின் போது, தன் வழிபாடலுக்கு என ஸ்தாபித்தவை "தேவிக லிங்கம்" என்று சொல்லப் படும். இதிலே தேவர்கள் பூஜித்த லிங்கம், "திவ்யலிங்கம்" அல்லது "தெய்வ லிங்கம்" எனச் சொல்லப் படுகின்றது. இந்திரன் பூஜித்தது இந்திரலிங்கம், வருணன் பூஜித்தது, வருணலிங்கம், வாயு பூஜித்தது வாயுலிங்கம் என வகைப் படுத்தப் படுகின்றது. மனிதனாக ராமன் வாழ்ந்தபோது ஸ்தாபிதம் செய்தது, பின்னர் பூஜித்ததும், இன்றளவும் அனைவரும் வழிபட்டு வருவதும் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத ஸ்வாமியான "மானுட லிங்கம்" ஆகும். முனிவர்களால் பூஜிக்கப் பட்டது "ஆர்ஷிக லிங்கம்" எனவும், அசுரர்களால் பூஜிக்கப் பட்டது, "ராட்சச லிங்கம்" எனவும் சொல்லப் படுகின்றது.

முகலிங்கங்கள் பற்றிய விளக்கத்துக்கு முன்னர் லிங்கம் பற்றிய விளக்கம் சரியாக் கொடுக்கலைனு தோணியதாலே இந்த விளக்கம். முக லிங்கங்கள் பற்றிப் படங்கள் கிடைத்ததும் ஞாயிறு அன்றோ அல்லது திங்கள் அன்றோ பதிவு எழுதுகிறேன்.

Wednesday, May 05, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

இப்போக் கொஞ்ச நாட்களா எங்கேயும் பக்திச் சுற்றுலா போக முடியலை. அடுத்து இந்தப் பக்கத்திலே என்ன எழுதறதுனு கொஞ்சம் யோசனை. திருவாரூரே முற்றுப் பெற வில்லை. ஏனென்றால் கோயிலை முழுமையாகப் பார்க்கமுடியலை. சாயந்திரம் வரைக்கும் இருந்து பார்க்கலாம் என்றால் இவர் கீழே விழுந்து அது வேறே வேதனை. ஆகையால் உடனடியாகத் திரும்பிட்டோம். பின்னால் வாய்ப்புக் கிடைத்தால் கமலாம்பிகை அருளினால் திருவாரூர் பற்றிய தொகுப்பை இன்னும் விரிவாக எழுத எண்ணம். சித்தர்கள் பற்றி எழுதச் சொல்லி ஒரு ந்ண்பர் கேட்டிருக்கிறார். இன்னும் சிலரும் அதை ஆமோதித்திருக்கிறார்கள். முதல்லே நான் சித்தர்கள் பற்றி நல்லாப் படிச்சுத் தெரிஞ்சுக்கறேன். அப்புறமா எழுதறேன். ஆகவே இப்போ நாம் அனைவரும் அறிந்த ஒன்றைத் தெரிந்து கொள்வோமா? இவை ஏற்கெனவே ஒரு குழுமத்துக்கு எழுதி அனுப்பிச்சது. அதோட வேறொரு நண்பரின் இணைய தளத்திலும் சில பகுதிகள் வந்திருக்கின்றன. ஆகையால் அங்கே படிச்சவங்க பொறுத்துக்கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஈசனின் வடிவம் அறுபத்து நான்கு என்று சொல்கின்றனர். அவற்றில் சில வடிவங்கள் பற்றித் தெரிந்து கொள்வோமா???
************************************************************************************


அண்டமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் எம்பெருமானுக்கு உருவம் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சி எல்லாம் இல்லை. இடைவிடாது, எப்போதும் அவன் ஆடிக்கொண்டே இருப்பதாலேயே நம் இயக்கம் நடைபெறுகிறது. அத்தகைய இறைவனுக்கு, அடி,முடி காணுவதும் நம்மால் இயலாத ஒன்று. என்றாலும் இந்த ஈசனை நாம் "சிவன்" என்கிறோம். சிவன் என்றாலே மங்களத்தைக் குறிக்கக் கூடிய ஒரு சொல். இந்தச் சிவ வழிபாடு தொன்றுதொட்டே, அதாவது மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நாகரீகங்கள் இருந்த காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. நாம் வழிபட ஒரு உருவம் யார் தந்தது என்ற ஆராய்ச்சியிலும் புக வில்லை. வடிவம் எப்படி ஏற்பட்டாலும் இன்றைக்கு முழுமுதல் வழிபாட்டில், சிவலிங்க வழிபாடும், நடராஜர் வழிபாடும், சோமாஸ்கந்தர் வழிபாடும் சிறப்பாகப் பேசப் படுகிறது.

இறைவனைக் கண்ணார, மனதாரக் கண்ட ஞானியர்கள் கூற்றுப் படி இறைவனின் வடிவங்களை உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இதில் உருவம் ஆன கருத்தின் படி பிரம்மா என்னும் நான்முகனும், திருமால் என்னும் காக்கும் கடவுள் ஆன விஷ்ணுவும், ருத்ரன், மகேசன் என்னும் அழித்து அருளும் வடிவங்களும் அடங்கும். அருவம் என்பது வடிவே இல்லாதது. இதில் அடங்குபவை சிவம், சக்தி,நாதம், பிந்து ஆகியவை. இந்த நான்கையும் வைத்து இறைவனை யோக முறையில் பூசித்தவர்களே சித்தர்கள் எனப் படுவார்கள். என்றாலும் சாதாரண மானிடர் ஆன நமக்கு ஒரு உருவம் வேண்டும் இல்லையா?
அப்படி உருவமும் இல்லாமல், அருவமும் இல்லாமல் இறைவனைப் பூசிக்கும் ஒரு வடிவமே சிவலிங்க வழிபாடு. இந்தச் சிவலிங்க வழிபாட்டிலே முக லிங்கங்களும் உண்டு. சில சிவன் கோயில்களிலே லிங்கத்தில் முகம் இருக்கும். சிலவற்றில் முகம் இருக்காது. இந்த முகலிங்கங்கள், மற்றும் லிங்கங்கள் பற்றி வரும் நாட்களில் பார்ப்போம்.