எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, December 07, 2013

காமதேனுவின் சரித்திரம் --பகுதி ஐந்து முடிவு

குலாவாம்பசுவே, நீ கன்றுடன் சேர்ந்து கலந்து கொஞ்ச நாள் இருந்துவிட்டு, நம்முடைய பதவியை அடைவாய் நற்பசுவே! எனப் பரமன் உரைக்கலுமே பக்தியுள்ள நற்பசுவும் அப்படியே ஆகும் என்று அரசனைத்தான் வணங்கி, பக்கியம், பாக்கியம் என்று பரமனைத் தான் வனங்கி, சிவனை வணங்கிச் சென்றது நற்பசுவும்.  கன்றை ஆதரித்துக் கருணையுடன் பால் கொடுத்து இன்பமுடனே பசுவும் இருக்கின்ற நாளையிலே, சிவனுடைய அருளாலே சிவலோகம் சென்றதப்பா!  பரமன் அருளாலே பரமபதம் சென்றதப்பா! மோக்ஷப் பதவியும்  முக்தியும் அடைந்ததப்பா. இப்பசுவின் சரித்திரத்தைப் பக்தியாய்க் கேட்டவர்கள் காமதேனுவின் சரித்திரத்தை பக்தியாய்க் கேட்டவர்கள், கோவின் சரித்திரத்தைக் கொண்டாடக் கேட்டவர்கள், எழுதிப் படித்தவர்கள் இன்னும் சொல் என்றவர்கள், மனம் உருகிக் கேட்டவர்கள் மங்கையர்கள் எல்லோரும் புத்திரரைப் பெற்றுப் பெருமையாய் வாழ்ந்திருப்பார்.

கோதானம் செய்த பலன் பெறுவார்.  கன்னிகாதானம் செய்த பலன் பெறுவார். பூமிதானம் செய்த பலன் பெறுவார்.  அன்னதானம் பண்ணின பலன் பெறுவார். பசுவின் சரித்திரத்தை அப்போது பிரஹலாதரும் மஹாபலிக்குச் சொல்லி மன மகிழ்ந்து தானிருந்தார்.  இப்புண்ணிய சரித்திரத்தைக் கேட்டு இருந்தவர்கள் உத்தமமான உன் குலத்தில் உதித்ததொரு எந்தனுக்குக் குறைகள் உண்டோ, குலக்கொழுந்தே! என்று சொல்லி பக்தி உள்ள புலியும் பாட்டனைத் தான் வணங்கி கேட்ட கதையினாலே, நான் கிருதார்த்தனாகிவிட்டேன்.  என் பந்தங்கள் விலகிப் பரமபதம் தான் பெறுவேன்.  என்று சொல்லி இருந்து அரசாண்டு வந்தான்.

பசுவின் சரித்திரம் முற்றும்

Friday, December 06, 2013

காமதேனுவின் சரித்திரம் --- பகுதி நான்கு

பசுவின் வாக்கியத்தைக் கேட்டும் அந்தப் புலியும் அப்போ பக்திகள் உண்டாகி, இப்பசுவின் உயிரை விட என்னுயிர் தான் பெரிதோ.  உத்தம குணமுள்ள உன்னை நான் புஜித்து உலகில் இருந்து உயிர் வாழ்வதை விட செத்து மடிந்திடுவேன். சிவலோகம் சேர்ந்திடுவேன்.  மாண்டு மடிந்திடுவேன்.  வைகுண்டம் சேர்ந்திடுவேன்.  பசுவின் சங்கத்தால் பரமபதம் நான் அடைவேன் என்று புலியும் தான் இறைவனைத் தான் தொழுது கொடிய புலியும் கோவிந்தனுடைய சங்கத்தால் பரம பதம் சேர்ந்தப்போ, புலியின் காக்ஷியைப் பார்த்து அந்த நற்பசுவும்,


இப்பாவியின் உடல் புலி பசிக்குத் தராமல் இந்த சரீரம் இருந்தென்ன, போய் என்ன! என்னத்தை எண்ணிப் புலி இறந்ததோ நான் அறியேன்.  நான் கொடிய பாவம் செய்ததினால் இக்கொலை பாதகத்தை நான் பார்த்தேன்.  நானும் மடிவேன். நாதனே அருள் புரிவாய் என்று பசுவும் அடர்ந்ததொரு காடு வந்து பாலைவனம் நடந்து பரமனைத் தான் பார்த்து பக்திப் பெருக்கத்தால் சுற்றி வலம் வந்து ஸ்தோத்திரங்கள் தான் செய்து, முக்தி அளிக்க வேண்டும் முகுந்தனே, சரணமையா, மாறி மாறி வருகின்ற மகிமையுள்ள பிறப்புக்களில் நான் எத்தனை கோடி ஜென்மம் எடுத்தாலும் எனக்கு உன் பக்தி மறவாமல் இருக்க பாக்கியங்கள் செய்ய வேண்டும் என்று பசுவும் ஈசனைத் தான் வணங்கி திரும்பி வரும்போது சிவலிங்கத்தைக் கண்டு லிங்கத்தின் வயிற்றிலே ரத்தம் பெருகியதைக் கண்டது பசுவும்.

அப்போ, கண்ணாலே ஜலம் விட்டு, இது என்ன அதிசயமோ ஈசனே நான் அறியேன். பரமனே, நான் அறியேன்.  எந்தப் பாவியால் நேர்ந்ததோ என்று பசுவும் திடீரென்று கீழே விழுந்து மண்ணிலே புரண்டு மஹாதேவா என்று அலறியது.  பசுவின் பக்தியைப் பரமனும் தான் பார்த்து ஆகாயத்தில் வந்து அசரீரி வாக்காக அறிவுள்ள நற்பசுவே, அந்தணராய் நான் வந்து வழியை மறைத்து வாக்குவாதமும் செய்யும்போது குறுக்காய் நின்றவனைக் கொம்பாலே தள்ளிவிட்டுச் சென்றாய், கொம்பு பட்ட புண் இது கோவே எழுந்திராய்.  உன் பக்தியை உகந்து கொண்டேன்.


 பசுவே, எழுந்திராய்.  பரமன் உரைத்ததைக் கேட்டு பக்தியுள்ள நற்பசுவும் ஈசனைக் குத்தி விட்டு இருப்பாளோ  பூமியிலே!  பரமனக் குத்திவிட்டுப் பாரில் இருப்பாளோ!.  நான் பக்தியாய் பூஜை செய்து பரமனுக்கு துரோகம் செய்தேன்.  முக்தி அளிக்கும் முகுந்தனுக்கு துரோகம் செய்தேன்.  இந்தப்பாவங்களைச் செய்து இப்பாரில் இருப்பாளோ. தற்கொலை செய்து கொண்டு தானாய் மடிந்திடுவேன்.  பசுவின் பக்திக்குப் பரமனும் தான் மகிழ்ந்து கைலாச நாதரும் பசுவிற்குக் காட்சி கொடுத்தார்.  ரிஷப வாகனத்தில் பசுவின் முன் வந்து நின்று காமதேனுவைக்  கடாக்ஷித்து எது சொல்வார்.  பக்தியில் சிறந்த நற்பசுவே எழுந்திராய்.  உன்னுடைய பக்தியைப் போல் ஒருவரையும் பார்த்ததில்லை.  முக்திஉண்டு.  மோக்ஷப் பதவியும் உண்டு.  நீ குத்தியதாலே எனக்குக் கொடுமைகள் ஒன்றுமில்லை.  குத்தல்கள் எண்ணவில்லை.


Wednesday, December 04, 2013

காமதேனுவின் சரித்திரம் -- பகுதி மூன்று

பசு உரைத்த வாக்கியத்தைக் கேட்டும் அந்த வியாகரமும், மூடத்தனமுள்ள ஹிருதயமும் குலை செய்ய நினைத்த கொடும்புலியும் மனமிரங்கி அதன் இருளடைந்த ஹிருதயமும் இரக்கம் கொண்டு ஏது சொல்லும்.

நான் தோஷத்தை எண்ணாமல் தும்சங்கள் செய்திடுவேன்.  நீ எந்த இடம் போனாலும் இழுத்து வந்து கொன்றிடுவேன்.  கானகத்தில் சென்றாலும் கண்டு வந்து சம்ஹரிப்பேன்.  சத்தியத்தை எண்ணித் தானாக வந்துவிடு.  புலி உரைத்திடவே, புத்தியுள்ள நற்பசுவும் பாக்கியம், பாக்கியம் என்று பசுவும் நடந்ததுவாம்.

நான் பரமனை பூஜிக்க பாக்கியங்கள் செய்தேனோ, லிங்கத்தை பூஜிக்க நான் என்ன தவம் செய்தேனோ! ஈசன் அருளாலே என் இடர்கள் தீர்த்து வைத்தான் என்று ஆனந்தத்தாலே, அங்கமெல்லாம் பூரித்து கானகத்தில் சென்று லிங்கத்தைத் தான் பார்த்து, சுற்றி வலம் வந்து ஸ்தோத்திரங்கள் தான் செய்து பக்கம் வலம் வந்து, பகவானை தியானித்து, புலியின் பசி தீரப் புண்ணியரே, நான் போறேன்.  உம்முடைய  பக்தி எனக்கு ஒரு நாளும் மறவாதே. சொல்லிய பசுவும் இருண்ட வனம் தான் தாண்டி, காடு கடந்து கரிமலை கடந்து, ஆறு கடந்து அடர்விகளைத் தாண்டி, தெரு கடந்து, தேர் ஓடும் வீதி வந்து கன்று இருக்கின்ற கட்டிடத்தே தான் புகுந்து கண்டதும்  அந்தக்கன்றும் காராம்பசு தன்னை அம்மா நீ இந்நேரம் வராமல் இருந்ததற்குக் காரணமேன்?  பாதகர்கள் கூடி உன்னைப் பட்டியில் அடித்தாளோ, துஷ்டர்கள் கூடி உன்னைத் துரத்தி அடித்தாளோ, மாட்டுடன் கலந்து மந்தையுடன் சேர்ந்தாயோ?  என்னைத் தனியாக விட்டு இருந்ததென்ன சொல்லம்மா!


கன்று சொல்லப் பசுவும் கண்ணாலே ஜலம் விட்டு, என் குஞ்சலமே, கண்மணியே, என் குறைகள் என்ன சொல்வேன், நான் கொடிய புலியால் கொலை நடுங்கி ஓடி வந்தேன்.  சத்தியங்கள் பண்ணி வந்தேன்.  தப்பாமல் போக வேண்டும்.  நான் உன்னை நினைத்து உறுதியாக இங்கே வந்தேன்.  நான் உனக்குப் பாலை ஊட்டி பாலகனே போக வேணும். இச்சொல்லைக் கேட்டு இளங்கன்னு ஏது உரைக்கும்.  அம்மா நீ ஆண்ட புலிக்கு நான் ஆண்டால் ஆகாதோ.  என் மாதாவே, நீ இருந்தால் வம்சங்கள் விருத்தி உண்டாகும்.  தாயாரே நீ இருந்தால் சந்ததிகள்  உண்டாகும்.  நான் இருந்து நீ போனால் இந்நாடு சகிக்குமோ?  பெற்றோர்கள் கஷ்டத்தை புத்திரனும் நீக்க வேண்டும்.  தாயைப் பறி கொடுத்துத் தரை மேல் இருப்பாரோ?  புலிக்கு இரையாக உன்னைப் போகவிட்டு நான் இருந்தால் பூமி சகிக்குமோ?  புதுமை வந்து நேராதோ?  கன்று சொல்லப் பசுவும் கன வருத்தம் தானாகிக் கண்ணாலே கண்ணீர் விட்டுக் கதறியே, ஏது சொல்லும்.  என் அழகுள்ள கண்ணே, அப்படிச் சொல்லாதே.  என் குஞ்சரத்தின் கண்ணே, அப்படிச் சொல்லாதே.  என் பரிதாபம் நீக்க வந்த பாக்கியமே அப்படிச் சொல்லாதே. என் குறை நீக்க வந்த குஞ்சலமே சொல்லாதே..

பேச்சுத் தவறின பேர் பூமியில் இருப்பாரோ!  சத்தியம் தப்பி தரணியில் இருப்பாரோ?  பொய் சொன்னவருக்குப் புண்ணிய லோகங்கள் உண்டோ?  நான் சொன்ன புத்தியை நலமுடனே நீ கேளு..  பாயிலிருந்து நெல்லை பதறிப் போய் தின்னாதே.  திறந்ததொரு வீடு தன்னில் தடதடவென்று போகாதே. பாவியர்கள் கூடி உன்னைப் பதற அடிப்பார்கள்.  நட்டிருக்கும் பயிரை நஷ்டப்படுத்தாதே.  துஷ்டர்கள் கூடி உன்னை தொந்திரவு செய்வார்கள்.  கொல்லையில் பூந்து கொடுமைகளைச் செய்யாதே.  பத்தினியால் இட்ட பயிரை அழிக்காதே.  இனத்துடன் சேர்ந்து இங்கும், அங்கும் திரியாதே.  பாழும் கிணத்துப் புல்லைப் பதறிப்போய்த் தின்னாதே.  பரமனைத் தான் நினைத்தால் பரமபதம் சேர்ந்திடலாம்.  சிவாயம் என்றவருக்கு ஒருநாளும் அபாயம் இல்லை.

இப்படிக்குச் சொல்லி ஏற்றமுள்ள நற்பசுவும் போகுது பார்.  பசுவும், புலியிருக்கும் இடம் தேடி வருகிற வழி தன்னில் மறையவர் போல் ஒருவர், சிவசிவா என்று சொல்லித் திருநீறைத் தான் அணிந்து அறிவுள்ள பசுவே, அவசரமாய்ச் செல்லுவதேன்!  காரியங்கள் ரொம்ப உண்டோ!  காராம்பசுவே என்றார்.  அந்தணர் உரைக்க அறிவுள்ள நற்பசுவும் வந்தனங்கள் செய்து மறையவரைத் தான் பார்த்து வேதம் கரைகண்ட விப்ரரே சொல்லுகிறேன்.  நான் ஈசனை பூஜிக்க நாடியே செல்லுகையில் கொடும்பசியால் புலியும், என்னைக் கொல்ல வந்தப்போ, சத்தியம் செய்து வந்தேன்.  தப்பாமல் போக வேணும்.  வியாகரமும் பசியோடு வழி பார்த்துத் தான் இருக்கும்.  வழியது விலகி நில்லும்.  மறையவரே!  சரணம் ஐயா.


பசுவின் வாக்கியத்தைப் பரமனும் தான் கேட்டு, பசுவினுடைய உறுதியைப் பரமசிவன் தான் அறிந்து, சித்தம் குளிர்ந்து தேகமெல்லாம் பூரித்து, பசுவின் பக்தியைப் பரமனும் தான் உகந்து இன்னும் பார்ப்போம்.  இதனுடைய உறுதிகளை என்று பரமனும் வந்து நின்று பசுவைத்தான் மறைத்துப் போக விட மாட்டேன்.  புத்தி கெட்ட பசுவே, திரும்பிப் போய்விடு சீக்கிரத்தில்.  நில்லாதே போ.  பரமனும் உரைக்கலுமே விவேகமுள்ள நற்பசுவும் என்ன பாவத்தினால் இப்பாப்பான் மறைத்தாரோ.  பரமன் உரைத்ததைப் பசுவும் தான் கேட்டு, வாக்குத் தவறி நடப்பானோ வையகத்தில்.  ஒரு புறாவுக்காக உயிரைக் கொடுத்த  கதை கேட்டும் இருக்கையிலே கிருபையுள்ள அந்தணரே பேய், கழுகுகள் கூடிப் பிச்சுண்ணும் தேகத்தைப் புலியின் பசியைத் தீர்த்தால் புண்யலோகமுண்டாம்.  சத்தியத்தை எண்ணாமல் தானிருக்க நியாயமுண்டோ என்று கோபத்துடனே குலாவாம் பசுவமப்போ குறுக்காய் நின்றவரைக் கொம்பாலே தள்ளிவிட்டு ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து உத்தமமான பசுவும் புலி இருக்கும் அக் கானகத்தை புத்தியுள்ள நற்பசுவும் காடுகளெல்லாம் திரிந்து கண்டது வியாகரத்தை. வழியில் நடந்த வைபோகத்தைச் சொல்லிப் பசியாற்றிக் கொள்ளுமையா, வியாகர ராஜாவே!



(தொடரும்)


குலை செய்ய நினைத்த=  கொலை செய்ய நினைத்த

தும்சங்கள் = துவம்சங்கள்

கொலை நடுங்க=  குலை நடுங்க

Monday, December 02, 2013

காமதேனுவின் சரித்திரம் --பகுதி இரண்டு.

பசுவின் முதுகிலே முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பார்.  வாலிலே வருணர் இருப்பார்.  கிடையிலே லக்ஷ்மிதேவி இருப்பாள்.  பசுவின் வயிற்றிலே சனத்குமாரர் இருப்பார்.  கோமூத்திரத்திலே கங்காதேவி இருப்பாள்.  கோமியத்திலே சரஸ்வதி இருப்பாள்.  பிடரியிலே அக்னி தேவன் இருப்பான்.  பசுவின் நெற்றிச் சுழியும், நிறைந்த வடிவழகும், பசுவின் கொம்பிலே க்ஷத்திரியன் இருப்பான்.  நெற்றியிலே நீலகண்டன் இருப்பார்.  காதிலே கருணர் இருப்பார்.  கண்ணிலே சந்திர, சூரியர் இருப்பார். உதட்டிலே உத்தமி தேவி இருப்பார்.  பல்லிலே பார்வதி தேவி இருப்பாள்.  பசுவின் நாலு காலிலேயும் பூமாதேவி இருப்பாள்.  முகத்திலே மூதேவி இருப்பாள். பசுவின் பிறப்பு பிறந்தது தான் இச்சொல்லு நீ சொன்னால் இனிய பக்தி உண்டாகும். 


இனிய பக்தி உண்டானால் இனிய பாவம் தான் துலையும். இப்படிப்பட்ட குணம் உள்ள பசுவைக் கொம்புக்குப் பொன் கட்டி, குவலைக்கு வெள்ளி கட்டி, ஊட்டி வரும் கன்னுக்கு உடம்பெல்லாம் பொன் பூட்டி, நடந்து வரும் கால்களுக்கு வெண்டயங்கள் தான் பூட்டி, வீசி வரும் வால்களுக்கு வெண் சாமரங்கள் கட்டி, பட்டு வஸ்திரத்தினால் பசுவை அலங்கரித்து, மல்லிகை புஷ்பத்தால் மாலையது தான் போட்டு, பசுவை வலமாகப்பிரதக்ஷணங்கள் தான் வந்து, கோவை பூஜித்து கோவிந்தனை நினைத்து, வேதப் பொருளாலே, வேதாந்தம் வந்தவனாய், காமதேனுவை கருத்திலே தான் நினைத்து, அந்தணர்களை அழைத்து அக்ஷதையால் அர்ச்சித்து, அக்ஷய த்ருதியையிலே அழகான நாளையிலே ஆசாரியரை நினைத்து அந்தணர்க்கு தானம் செய்தால் இறப்பு, பிறப்பு உண்டோ!  இந்திர சத்துருவே, திரும்பிப் பிறப்பில்லை, வைகுண்டம் சேர்ந்திடுவார்.  ஜனன, மரணத்தை சோதித்து எரித்துவிடும்.  நித்யாசிரியரோட நிலை பெற்று தானிருப்பார்.  பஞ்சமா பாதகங்கள் பஞ்சாய்ப் பறந்துவிடும்.  

கொலை, களவு, சூது கொடியவர்கள் செய்தாலும்  இந்தப் பசுதானத்திலே பரமபதம் பெறுவார்.  கோதான பலனை கொத்தவனே சொல்ல வந்தேன். பசுவின் சரித்திரத்தைப் பாங்குடனே சொல்லுகிறேன்.  உத்தம குலத்தில் உதித்தவொரு நற்பசுவாம்.  அது தன் இனத்துடன் சேராமல், அங்கும், இங்கும் ஓடாமல் கட்டிடத்தில் நில்லாமல், காடு தனில் திரிந்து, பக்தியுடனே, அதுவும் பரமனை பூஜை செய்யும். சுந்தரமான அடர்ந்த ஒரு காடு தன்னில் சிவலிங்கத்தைக் கண்டு, சிந்தை மிகக் குளிர்ந்து கெங்கையிலே நீராடி, கிலேசத்தினை ஒழித்து, சிவலிங்கம் பூஜை செய்ய சிந்தையிலே தான் நினைத்து அது வாய் கொண்ட நீரை மகிழ்ச்சியுடன் தான் கொணர்ந்து வில்வமரத்தை வேருடனே தான் பிடுங்கி, வருகிற வழிதன்னில் வியாகரத்தைத் தான் கண்டு திடுக்கிட்டு நின்றதாம். தேஷ்டமுள்ள நற்பசுவும், வியாகரமும் அப்போது வழி தன்னைத் தான் மறித்து என் கொடிய பசியை அறிந்து உன்னைப் பரமன் அனுப்பி வைத்தார்.

என் கொடிய பசியை கோவிந்தன் கண் பார்த்தார்.  ஐந்தாறு நாளாக ஆகாரம் இல்லாமல் காட்டிலே அலைந்து, களைத்தும் இருக்கையிலே நல்ல தருணத்திலே நீ வந்து உதவி செய்தாய்.  நற்பசுவே! கோவ குணமுள்ள கொடிய புலியும் அப்போது ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து வர பக்தியுள்ள நற்பசுவும் மேல் பயந்து, நடுநடுங்கி, பரமனைத் தான் நினைத்து சித்தம் கலங்கி, சிவனை மனதிலே எண்ணி, புலிராஜனே, கேளும், உமக்குப் புண்ணியங்கள் ரொம்ப உண்டு. .பரமனை பூஜிக்க பக்தியாய் நான் போறேன்.  சிவலிங்கம் பூஜை செய்து திரும்பியே வந்திடுவேன்.  விக்கினங்கள் செய்யாதே. வியாகரமே சத்தியமாய் உனக்குத் தப்பாமல் வந்திடுவேன்.  கன்னுக்குப் பால்கொடுத்து கட்டாயம் வந்திடுவேன்.  வியாகர ராஜாவே, மனமிரங்க வேணுமய்யா! 


பசுவின் வாக்கியத்தைக் கேட்டும் அந்த வியாகரமும் கிடுகிடுவென்று சிரித்துவிட்டு ஏது சொல்லும்! கைப்பொருளை விட்டுக் காத்திருக்கக் காரணம் ஏன்?  உன் சாமர்த்தியத்தாலே தப்ப வழி பார்த்தாய்.  உன்னைப் புஜிக்காமல் விடுவேனா?  புத்தி கெட்ட நற்பசுவே, அறிவில்லாத ஜந்துவிற்கு ஆணை, சத்தியம் எல்லாம் உண்டோ?  தெய்வ பக்தி உண்டோ?  ஜன்ம விருதம் ஆகையாலே உன்னை அரை க்ஷணத்தில் கொன்றுவிட்டு என் பசியைத் தீர்த்து விட்டால் பரலோகம் தான் அடைவார்.  


புலி சொல்லைக் கேட்டு புதுமையுள்ள நற்பசுவும் என் வார்த்தை தன்னைக் கேளும். வியாகர ராஜாவே!  நான் சொன்ன சொல்லைத் தவறி நடந்தேனேயாகில் சூரியன் உதித்த பிறகு சாணி தெளித்தவளும், புருஷனுக்கு துரோகம் செய்து பூமியில் இருந்தவளும், பெரியோர் சொல்லைக் கேளாது இருந்தவரும், ஆகிய அந்தப் பாவியர்கள் அடையும் கெதியை நான் அடைவேன்.  கூலி குறைத்தவரும், குறை மரக்கால் போட்டவரும் அங்காடிக் கூடையிலே அதிக விலை இட்டவரும், பட்டாடை நெல்லிலே பதரைக் கலந்தவரும், அக்கொடியவன் போகும் வழி அதிநரகம் நான் போறேன்.  பசுவை அடித்தவரும், பர்த்தாவை வைதவளும் கன்னுக்குப் பால் விடாமல் கறந்தவரும் வந்த விருந்துக்கு வழங்காதிருந்தவரும், அக்கொடியவர் போகும் வழி அதி நரகம் நான் போறேன்.

பெத்த தாய் சொல்லைக் கேளாது இருந்தவனும், பெண்டாட்டி, பிள்ளைக்குச் சோறு போட்டாமல் புஜித்தவனும், தெய்வத்தை ஒரு நாளும் நினையாது இருந்தவனும் பிச்சைக்கு வந்தவரைப் பின்னே வா என்றவனும், ஆண்டி பரதேசிகளை அடித்துத் துரத்தினவரும், தர்மத்தை ஒருநாளும் செய்யாது இருந்தவரும், அக்கொடியவன் போகும் வழி அதி நரகம் நான் போறேன்.  ஏகாதசி என்னும் விரதத்தைக் கெடுத்தவரும், பஞ்சமாபாதகங்கள் பண்ணிய பாவியரும், அப்பாவியர்கள் போகும் வழி அதி நரகம் நான் போறேன். 

அடைக்கலம் என்று வாய்த்த சொத்தை அபகரித்தவரும், வீட்டில் நெருப்பிட்டு வேடிக்கை பார்த்தவனும், குருவை நிந்தித்துக் கொடும்பாவம் செய்தவனும், கூடப் பிறந்தவரைக் கொடும் தோஷம் சொன்னவனும், ஏழைகளை எதிரிட்டுக்கொன்னவனும் ஆற்றிலே இறங்கி அம்மணத்தோடு நின்றவனும், மாமி, மாமனுக்கு மரியாதை செய்யாதவனும் கர்ப்பத்தில் இருக்கும் கருவை அழித்தவனும் இக்கொடியவன் போகும் வழி அதிநரகம் நான் போறேன். குடியைக் கெடுத்தவன், குல துரோகம் செய்தவன், குல தர்மத்தை விட்டவன் கொடும்பாவம் செய்தவன், ஊரார் உடைமைக்கு உலை வைத்திருப்பவன், உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பவன், இக்கொடியவன் போகும் வழி நான் போறேன்.

(தொடரும்)


புஜித்தல்=புசித்தல்

கெங்கை=கங்கை

விருதம்= விரதம்

துலையும்=தொலையும்

குவலைக்கு வெள்ளி கட்டி= குளம்பைக் குவலைனு சொல்லி இருப்பதாக நினைக்கிறேன்.

வெண்டயங்கள் = தோளில் அணியும் ஒரு ஆபரணம்.

தெரிந்தவரை பொருள் சொல்லி இருக்கேன்.  தெரியாத இடத்தைச் சுட்டிக் காட்டவும். எனக்குத் தெரியலைனாலும் கேட்டுச் சொல்றேன்.

காமதேனுவின் சரித்திரம்! பகுதி ஒன்று

அரங்கனை வெகுநாட்களாகக் கவனிக்கலை. :( அரங்கன் கதையைத் தொடரணும்.  அவன் ஊர் சுற்றியது குறித்துக் கொஞ்சம் போல் எழுதியதை மீண்டும் தொடரணும்.  நேரம் வாய்க்கலை. அதிலே உட்கார்ந்தால் விஷயங்கள் தேடுவதிலும், குறிப்புகள் எடுப்பதிலும் நேரம் போயிடும்.  ஆகவே தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கேன்.  நடுவிலே கிடைத்ததைப் போடுகிறேன்.  நேத்தெல்லாம் போஸ்டே போடலை.  ஆனால் வந்தவங்க நிறையப் பேர்.   ஹிட் லிஸ்ட் எகிறி இருக்கு. புதுசா ஏதும் இருக்கானு பார்த்திருப்பாங்க போல! :)

நம்ம மாதங்கிக்கும், அவங்க அப்பா மாலி என்ற மஹாலிங்கம் அவர்களுக்கும் பக்தி, ஆன்மிகம் சம்பந்தமா எந்தச் செய்தி கிடைச்சாலும் அதை உடனே என்னுடன் பகிர்ந்து கொண்டுவிடுவாங்க.  அப்படிப் பகிர்ந்தது தான் பிரணய கலஹம்.  பதிவுகள் வந்தன. அதைத் தபாலில் அனுப்பி இருந்தாங்க.  தபாலை வாங்கி எங்கேயோ வைச்சுட்டு அதைக்காணாமல் மாதங்கிக்குத் தொலைபேசி அப்புறமாக் கண்டு பிடிச்சு எழுதினேன். :)))  இம்முறை மாதங்கி அப்பா நேரிலேயே எடுத்து வந்துட்டார்.  இம்முறை அவர் கொடுத்திருப்பது காமதேனுவின் சரித்திரம். இதை ஒரு தோத்திரமாக, இசைப்பாடலாக வேலை செய்து கொண்டே அவங்க வீட்டுப் பெரியவங்க பாடுவாங்களாம்.  தற்செயலாகக் கிடைத்ததை ஸ்கான் செய்து எடுத்து வந்துட்டார்.  என்னிடம் கொடுத்துட்டுப் போய்ப் பத்து நாட்கள் ஆயிடுச்சு. கொஞ்சம் கொஞ்சமாக அதைத் தட்டச்சிட்டு இருக்கேன்.  தட்டச்சியவரை இங்கே பகிர்கிறேன்.



காமதேனுவின் சரித்திரம்

1தெப்பக் கணபதியே, தொந்தி வயத்தானே, கருத்தரிக்கு முன் பிறந்த கணபதியே, முன்னிடுவாய், பேழை வயத்தோனே, பெருச்சாளி வாகனனே, பசுவின் சரித்திரத்தை பக்தியாய் நான் எழுத விக்கினங்கள் வராமல் வினாயகரே, முன்னிடவும்.  முப்பழமும், தேங்காயும், மோதகமும் நான் படைப்பேன். 

சரித்திரத்தின் வரலாறு

மஹாபலியின் வேள்வியிலே மாதவனும், வாமனனும் மூன்றடி மண் அளந்து முக்திபதம் தான் அளித்தார்.  அந்த சமயத்தில் அசுரர் குலத்துதித்த, இந்திர சத்துருவும் பயம் கொண்டு தானிருக்க தானே அசுரன் தளர்ந்த மனதுடனே சிந்தை கலங்கி செய்வதொன்றும் தோன்றாமல், கண்ணனுடைய கபடத்தைத் தான் நினைத்து மாதவன் செய்த வஞ்சனையைத் தான் நினைத்து மாயவனார் செய்த வஞ்சனையால் வாழ்வைப் பறித்துவிட்டார்.

ஶ்ரீமதியின் கபடத்தால் செல்வம் இழந்துவிட்டேன் என்று கலங்கிய மனதுடனே கருத்திழந்தே தான் இருந்தார்.

பரம பாகவதரான பிரஹலாத ஆழ்வாரும், தைத்திய ராஜனுக்கு தருமத்தை எடுத்துரைத்தார்.  பக்தியில் சிறந்த பலி சக்கரவர்த்தியும் பாட்டனைத் தான் வணங்கி பக்தி பரவசத்தால் என் குலதெய்வமே என்னுடைய தாத்தாவே, 

ஐந்து வயதில் ஹரியை அறிந்து கொண்டீர்.
குஷியில் இருக்கும்போது குரு உபதேசம் பெற்றீர்
கர்ப்பத்தில் இருக்கும்போது கேசவனைத் தான் அறிந்தீர்
வயிற்றில் இருந்து வாசுதேவனை அறிந்தீர்.
கேசவப்ரியே கிருபையுள்ள உத்தமரே
பணத்தின் பெருமையால் பரமனை நான் மறவேன்
ஐஸ்வர்யத்தினால் அகங்கொண்டு தான் இருந்தேன்.
தானவகை அறியேன்
தருமத்தின் பெயர் அறியேன்
முக்திவழி அளிக்கும் முகுந்தனைத் தானறியேன்


பேரன் உரைக்கலுமே, பிரஹலாதன் தான் மகிழ்ந்து, தான மகிமையை தானவேந்திரர் சொல்லுகிறேன்.  
பக்தியினாலே பரமபதம் தான் அடைவாய்.  நாமங்களாலே நல்ல கெதி பெறலாம். 
கிருஷ்ணா என்று சொன்னால் கேட்ட செவி திறக்கும். அச்சுதா என்று சொன்னால் அங்கம் மிகக் குளிரும்.
கேசவா என்று சொன்னால் க்லேசம் பறந்தோடும். நாராயணா என்று சொன்னால் நல்ல கெதி பெறலாம்.
ஹரி என்னும் பக்தி அமிர்தகல சிந்தையிலே எப்போதும் சிந்தை எங்கும், அங்கும் தோன்றாமல் பல சிந்தை ஓடாதே, பாவம் வந்து தீண்டாதே.

பரமபத நாதனை பக்தியால் பூஜை செய்து, ஜனன, மரணமெனும் ஜென்மம் எடுக்காமல் சம்சார சாகரத்தில் தலையிட்டுக் கொள்ளாமல், காலமே எழுந்திருந்து கடவுளைத் தான் நினைத்து, காலனை நினைத்து, கணவனைத் தான் நினைத்து, நீலனை எண்ணி நிலையான பாதத்தை எண்ணி, குஞ்சலத்தை எண்ணி, குலாவாம் பசுவை எண்ணி, பஞ்ச கன்னிகைகளை, பக்தியாய்த் தான் நினைத்து, பசுவின் புராணத்தை பக்தியுள்ள நற்கதையை, கோவின் சரித்திரத்தை கொத்தவனே சொல்லுகின்றேன். 

காமதேனு என்னும் காக்ஷியுள்ள சரித்திரத்தைக் அசடர்கள் கேளாதே, கருமிகள் கேளாதே. எச்சில் கலக்கும் இரண்யாத்மா கேளாதே. 
தூரம் கலக்கும் துர் ஆத்மா கேளாதே. 
கூலி நிறைக்கும்கொடும்பாவி கேளாதே. 
தாய் சொல் கேளாத சண்டாளி கேளாதே.  
ஒத்த கணவன் சொல் ஊர் சொல் கேளாத, பக்தி இல்லாத பாவியர்கள் கேளாதே. 
அன்னம் இடாத அரும்பாவி கேளாதே.  
மாமி சொல் கேளாத மஹாபாவி கேளாதே. 
கற்பை அழித்த ஆரும்பாவி கேளாதே. 
சிசு ஹத்தி செய்த தீயர்கள் கேளாதே. 
பசுவை அடித்த பாவியர்கள் கேளாதே.

பூமாதேவி கேட்டால் பொன்னாலே நெல் விளையும்.  
வருண பகவான் கேட்டால் வருஷம் மழைபொழியும்.  
மலடிகள் கேட்டால் மைந்தர்களைப் பெத்திடுவாள். 
கன்னியாப் பெண்கள் கேட்டால் நல்ல கணவனைத் தேடி அடைவாள். அந்தப்பரிசுத்தமான பசுவின் நற்கதையை பாக்கியவானே உனக்கு நீதியாய் நான் உரைப்பேன்.

(தொடரும்)