எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, March 23, 2008

சிதம்பர ரகசியம் - சில சரித்திரக் குறிப்புகள்


//கூற்றிருக்கு மடலாழிக் குரிசின்முத லோரிறைஞ்சக் கொழுந்தேன் பில்கி
ஊற்றிருக்குந் தில்லைவனத் தசும்பிருக்கும் பசும்பொன்மன்றத் தொருதா ளூன்றி
வண்டுபா டச்சுடர் மகுடமா டப்பிறைத்
துண்டமா டப்புலித் தோலுமா டப்பகி
ரண்டமா டக்குலைந் தகிலமா டக்கருங்
கொண்டலோ டுங்குழற் கோதையோ டுங்கறைக்
கண்டனா டுந்திறங் கான்மினோ காண்மினோ. //

மேற்கண்ட குமரகுருபரரின் பாடலுக்கு விளக்கம் கீழே காணலாம். இனி,

இறைவனுக்கு அபிஷேகமும், ஆராதனைகளும் நடத்தப் படுவது எதற்கு எனப் பலரும் நினைக்கின்றனர். சொல்லவும் சொல்கின்றனர். ஆனால் அந்த ஆராதனைகளுக்கும் ஒரு மகத்துவம் இருக்கிறது.

ஈசனை அவர் அமர்ந்திருக்கும் பீடத்தில் இருந்து எழுப்பி, பின்னர் ஆராதனைக்குரிய இடத்தில் எழுந்தருளச் செய்வது தோற்றம் என்னும் சிருஷ்டியையும், இறைவனின் திருமேனியைப் பாலாலும், தேனாலும், சந்தனம் போன்ற வாசனாதித் திரவியங்களாலும், அபிஷேகம் செய்விப்பது, திருமஞ்சன நீராட்டுவது காத்தல் என்னும் திதியையும், இறைவனுக்குக் கறுப்புச் சாந்து அணிவிப்பது, அழித்தல், சம்ஹாரம் என்னும் தொழிலையும், வெண்ணிற ஆடையை ஈசனுக்கு அணிவிப்பது, மறைப்பு அல்லது திரோபாவம் என்னும் தொழிலையும், இறைவனின் திருமேனியை ஊர்வலமாய்த் திருவீதிகளில் பவனி வரச் செய்தலை, அருளல், என்னும் அனுக்கிரகத் தொழிலாகவும், கருதப் படுகிறது. இனி, சிதம்பரம் கோயிலில் சில சரித்திர நாயகர்கள் செய்த திருப்பணிகள் பற்றிய குறிப்புக்கள்.

காலத்தால் முற்பட்டது என்று சொல்லப் படும் சிதம்பரம் கோயிலில் எப்போது கட்டப் பட்டது என்று சொல்ல முடியவில்லை என்ற பொதுவான கருத்து இருந்து வந்தாலும், முதல் முதல் கோயிலில் திருப்பணிகள் செய்து, கோவிலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த மன்னன் ஹிரண்யவர்மன் ஆவான். இந்த அரசன், கெளட தேசத்தை ஆண்டு வந்ததாயும் இவன் பெயர் சிம்ஹவர்மன் எனவும், பின்னர் இவன் பெயரை ஹிரண்யவர்மன் என மாற்றிக் கொண்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த அரசன் தன்னுடைய உடல் நலத்துக்காக தல யாத்திரை செய்து வந்த காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவன் உடல் நலத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்துக்கு நன்றி செலுத்தும் விதமாய் நடராஜ ராஜாவின் சன்னதியைச் சுற்றிப் பல மண்டபங்கள் ஏற்படுத்தியதாய்ச் சொல்லப் படுகிறது.

இந்த அரசன் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லப் பட்டாலும் அதற்கான உரிய சான்றுகள் கிட்டவில்லை. ஆனால் உமாபதி சிவாச்சாரியாரின் கோயில் புராணத்தில் இந்த அரசனைப் பற்றிய குறிப்புக்கள் இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இவன் காஞ்சியை ஆண்டு வந்ததாயும் சொல்கிறார்கள். இவனுடைய காலம் கி.பி. 5 அல்லது 6-ம் நூற்றாண்டு என்றும் சொல்லப் படுகிறது. என்றாலும் கி.மு. 2-ம் நூற்றாண்டிலேயே தில்லைத் தலத்தைப் பற்றிய குறிப்புக்கள் பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் போன்றவர்களின் குறிப்புக்களில் இருந்து தெரிய வருவதாய்ச் சொல்கின்றனர். பதஞ்சலி முனிவர் என்று ஒருத்தர் மட்டும் இல்லை எனவும், பலர் இருந்ததாயும் சரித்திர ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆன்மீகவாதிகளோ எனில் காலத்தால் முற்பட்டது எனச் சொல்லுகின்றனர். இந்த நடராஜரின் ஆட்டத்தைப்பற்றிய பல பாடல்கள் பலராலும் பாடப் பட்டிருக்கிறது என்றாலும், குமர குருபரரின் ஒரு பாடலை இங்கே காண்போம்.



கூற்று இருக்கும் அடல் ஆழிக் குரிசின் முதலோர் இறைஞ்சக் கொழுந்து என்பில்கி
ஊற்று இருக்கும் தில்லை வனத்து அசும்பு இருக்கும் பசும் பொன் மன்றத்து ஒரு தாள் ஊன்றி
வண்டு பாடச் சுடர் மகுடம் ஆடப் பிறைத்
துண்டம் ஆடப் புலித் தோலும் ஆடப் பகிரண்டம் ஆடக்
குலைந்து அகிலம் ஆடக் கருங் கொண்டலோடும் குழற் கோதையோடும் கறைக்
கண்டன் ஆடும் திறம் காண்மினோ! காண்மினோ!"

இறைவனின் ஆட்டத்தை வர்ணிக்கும் குமரகுருபரரின் இந்தச் செய்யுள் "சிதம்பரச் செய்யுட் கோவை"யில் இடம் பெற்ற பாடல் ஆகும். இது தவிர, குமரகுருபரர் சிதம்பர மும்மணிக் கோவை, சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை ஆகியவையும் பாடியுள்ளார். இப்பாடலில் இறைவன் தன் ஒரு காலை ஊன்றித் தன் மகுடமும், தன் சடாமுடியில் சூடி இருக்கும் பிறை நிலாவும், புலித் தோலும் ஆடுவதோடு மட்டுமில்லாமல் தன் ஆட்டத்தால் அண்ட பகிரண்டத்தையும் ஆட்டுவிப்பதையும் குறிக்கிறார்.

Saturday, March 15, 2008

சிதம்பர ரகசியம் -ஆனித் திருமஞ்சனம்!



ஆதிரையைத் தவிர நடராஜர் வீதி உலா தேரில் வரும் இன்னொரு நிகழ்ச்சி "ஆனித் திருமஞ்சனம்" ஆகும். இது ஒவ்வொரு வருஷத்திலும் தமிழ் மாதம் ஆன ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடை பெறுகிறது. உத்தர பால்குனி என்றே தீட்சிதர்கள் இதைக் குறிப்பிடுகின்றனர். நடராஜருக்கு அப்போது அபிஷேகம் நடைபெறுகிறது. ஆங்கில மாதம் ஆன ஜூன் நடுவில் இருந்து ஜூலை நடுவரை உள்ள ஒரு நாளில் உத்திர நட்சத்திரம் வரும்போது இந்தத் திருவிழா நடைபெறும். கோடைக் காலத்தின் நடுவே நடைபெறும் இந்த உற்சவமும், வானமும், நட்சத்திரங்களும் சார்ந்தே இருக்கிறது. ஆகாயத் தலம் ஆன சிதம்பரத்தின் அனைத்து நிகழ்வுகளுமே ஆகாயம் சார்ந்து இருப்பதில் வியப்பு என்ன?

இந்த உத்திர நட்சத்திரம் "துருவ" நட்சத்திரம் என்று இந்தியர்களாலும், "pole star" என மற்றவர்களாலும் குறிப்பிடப்படும் நட்சத்திரத்துக்குச் சமானம் என்று சிலப் பழைய நூல்கள் தெரிவிப்பதாய்ச் சொல்கின்றார்கள். ஆனிமாதம் உத்திர நட்சத்திர நன்னாளில், ஆகாயத்தின் வடதிசையில், இந்தத் துருவ நட்சத்திரம் என்றழைக்கப் படும் நட்சத்திரம், தன் நட்சத்திரக் குடும்பத்து மற்ற நட்சத்திரங்களுடன், "ராஜ சபை" என அழைக்கப் படும், ஆயிரங்கால் மண்டபத்திற்கு மேல் தெரிவதாயும் சொல்லுகிறார்கள். இதைத் தவிர, மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்திலும், தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்திலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதில் தை மாதப் பூச நட்சத்திரத்தில் வரும் உற்சவம் மிக முக்கியமாய்க் கருதப் படுகிறது. ஆடல்வல்லான் தன் ஆனந்தத் தாண்டவத்தைச் சித் சபையில் இந்த குரு பூசத்தில் நடத்தியதாய்ச் சொல்லப் படுகிறது. இந்த குரு பூசம் என்பது 5 வருஷங் (அல்லது அதற்கு மேலும் சில சமயம் ஆகிறது,)களுக்கு ஒருமுறை,மட்டுமே வரும் இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவருக்கும் இறைவன் தன் நாட்டியத்தைக் காட்டி முக்தி கொடுத்ததாய்க் கூறப்படுகிறது. முதன் முதல் தில்லைப் பதியில் "கனகசபை" அமைத்து இறைவன் ஆனந்தத் தாண்டவம் ஆடியதும் தைப்பூச நன்னாளில் தான் என்று சொல்லப் படுகிறது. சிவனுக்கே உரிய "சூல விரதம்" அன்று சிறப்பித்துச் சொல்லப் பட்டாலும், அது தற்சமயம் அவர்தம் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சிவனின் அம்சம் ஆன சுப்ரமணியருக்கு உரிய நாளாக மாறி இருக்கிறது. அன்று இறைஅவனுக்கு அன்னப் பாவாடை சார்த்திப் பின்னர் அது பக்தர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப் படும்.

இனி வரும் நாட்களில், சில சரித்திரச் சான்றுகளைப் பார்க்கலாம்.

Friday, March 14, 2008

சிதம்பர ரகசியம் -உமாபதி சிவாசாரியாரின் கொடிக்கவி!


கண்ணபிரான் கேட்டதுக்கு இணங்க முதலில் உமாபதி சிவாசாரியார் பற்றிய ஒரு முன்னுரையுடன் இன்றைய சிதம்பர ரகசியம் தொடங்குகிறது.

தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவரில் ஒருவர் ஆன உமாபதி சிவாசாரியார் அவர்கள், நாயன்மார்களுக்குப் பின்னர் வந்த சைவ சித்தாந்தத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராய்க் கருதப் படுகின்றார். 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த இவர், தில்லை வாழ் அந்தணர் அல்லாத ஒருவரைத் தம் குருவாய்க் கொண்டார். மறைஞான சம்மந்தர் என்னும் இவரின் குருவிடம் சைவ நூல்களைப் பயின்ற இவர், இயற்றிய பல நூல்களுள் "உண்மை நெறி விளக்கம், வினா-வெண்பா, கொடிக்கவி" ஆகியன மிக மிக முக்கியமானவை. "கோயிற்புராணம்" என்ற பெயரில் சிதம்பரத்தின் தல வரலாற்றையும் எழுதி இருக்கின்றார் இவர். சேக்கிழாரின் வரலாற்றையும் "சேக்கிழார் புராணம்" என்ற பெயரில் இவர் எழுதி இருக்கின்றார். தமிழைப் போலவே வடமொழியிலும் புலமை பெற்றிருந்த இவர், "பெளஷ்கர ஆகமம்" என்னும் நூலுக்கு பாஷ்யமும் எழுதி இருக்கின்றார்.

தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரைக் குருவாய்க் கொள்ளாத காரணத்தால் மற்ற தீட்சிதர்கள் இவரைக் கோயிலில் பூஜை, வழிபாட்டுக்கு அனுமதிக்கவில்லை. ஆகவே இவர் சிதம்பரத்துக்கு வெளியே வாழ்ந்து வந்தார். ஒரு முறை கோயிலின் உற்சவத்தில் கொடியேற்றும் உரிமை இவருடையதாய் இருந்த போதிலும் இவரை விடுத்து இன்னொரு தீட்சிதருக்கு அந்த உரிமை அளிக்கப் பட்டது, ஆனால் கொடி மேலே ஏறவே இல்லை. பின்னர் உமாபதி சிவாசாரியாரின் பக்தியின் பெருமையை உணர்ந்த மற்ற சில தீட்சிதர்களால் அவர் வரவழைக்கப் பட்டார். உமாபதி சிவாசாரியார் ஒவ்வொரு பாடலாகப் பாடப் பாடக் கொடியும் மேலே ஏறி, ஐந்தாவது பாடலில் முழுதும் மேலே ஏறியதாம். இவ்வாறு இறைவன் தன் அடியார்க்குச் செய்த அருளையும் இங்கு நினைவு கூருவோம்.

கீழே அந்தக் கொடிக்கவிப் பாடல்களைக் கொடுத்துள்ளேன்.




கொடிக்கவி
1.
ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே.

2.
பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே - தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.

3.
வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா துணர்வரிய தன்மையனை - நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே
குறிக்குமரு ணல்கக் கொடி.

4.
அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்
கூசாமற் காட்டாக் கொடி.

5.
அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்
கந்த அறிவை அறிவித்தங் - கிந்தறிவை
மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்
கூறாமல் கூறக் கொடி.

முற்றும்

Tuesday, March 04, 2008

சிதம்பர ரகசியம் - ஒண்ணும் ரகசியமே இல்லை! திவாகர் சொல்லுவது!

அருளே வடிவான ஆனந்தக் கூத்தனே!

ஏன் இந்தக் கூத்து?

நான் உன்னைக் காண எப்போது சபையேறி வந்தாலும் பாடுவது திருவாசகமும் தேவாரமும்தானே! உன் ஒளிமிகுந்த முகம் பார்த்து நான் மெல்லமாய் உதடசைத்து பாடும்போதெல்லாம் எனக்குள் இனம் புரியாத மகிழ்ச்சி.. அதை நீ கேட்கும்போது உன் கருணை முகத்தில் எனக்கு மட்டுமே தெரியும் உற்சாகம், 'வாதவூரான் சொல்ல சிற்றம்பலத்தான் எழுதியது' என்று உன்னால் அம்பல மேடையிலேயே ஆசிர்வதிக்கப்பட்ட தமிழ்ச் செல்வங்களை மனதுக்கினிய பக்தர்களால் பாடப்படும்போது உனக்கு ஏற்படும் உற்சாகத்தை அந்த பக்தர்களுக்கு எப்படியோ உணர்த்திவிடுவாய்..ஒவ்வொரு கால பூசைக்கும் தேவாரத்தைக் கணீரெனப் பாடும்போது ஏற்படும் பக்தி பரவசம் அனவரையும் அள்ளிக்கொள்ளும்படி செய்வதிலும் நீ வல்லவன்தான்! நிற்க!
(நீதான் எப்போதுமே கால்கடுக்க, அதுவும் ஒரு காலில் முயலகன் மீது நிற்கிறாயே.. நான் 'நிற்க' என்று எழுதியது பழைமையான கடிதம் எழுதும் வழக்குமுறையில்...)

பழைமை என்றதும் நினைவுக்கு வருகிறது. வேதம் பழைமையானதுதானே.. வேத மொழி எனக்கு வேறுபட்டாலும் பழைமையான வேதத்தில் உள்ள பெருமையும், அதன் பொருளும், அதன் உள்ளார்ந்த கருத்துகளும் மிக உயர்ந்தவை என்றே எடுத்துக்கொள்கிறேன். அப்படித்தான் எங்கள் முன்னோர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மணிவாசகர், நம்மாழ்வார், மற்றும் பெரியோர்கள் பலரும் சொல்லிச் சென்றார்கள். தேவாரம் முழுதுமே வேதத்தின் சாரம் என்று சைவர்களும், நம்மாழ்வாரின் திருவாய்மொழி தமிழ் வேதம் என்றும் பலர் எழுதியுள்ளார்கள். எழுதியும் வருகிறார்கள். ஆகையினால் பழைமை போற்றப்படவேண்டும் என்பது கூட அவர்கள் வாய்மூலம் நீ சொல்வது போலத்தான். ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.

அம்பலத்துள்ளே நின்று உலகையே ஆட்டிப் படைப்பவனே! ஒரு கேள்வி!

என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வேதபாஷை புரிவதில்லை என்றுதானே முனிவர்கள் மூலம் தெய்வத் தமிழையும் எங்களுக்குப் பரிசாக அளித்தாய்... முத்தமிழின் முதல்சங்கத்தின் முதல்வனாய் இருந்து 'இறையனார்' என்று பெயர் கொண்டு முதற்கவிதை படித்தவனும் நீதானே..தமிழுக்கு சொல் கொடுத்தவனே.. ஏன் இந்தக் கூத்து? இன்றைய கூத்து?

யோசிக்க வைக்கிறாய்.. புரிகின்றது கொஞ்சம். 'தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என நம்பிகளை வைத்து பாடவைத்தது நீதான்!. உமாபதி சிவம் தன் ஆச்சாரியனைப் பின் பற்றி நட்ட நடுப் பகலில் கோயிலை விட்டு ஓடியபோது அவருக்குப் பக்கபலம் போல அவர்கூடவே ஓடிப்போய், அதே தில்லைவாழ் அந்தணர்தம் பூசையையும் மறுத்தவன்தான் நீ! உமாபதி சிவனார் பூசித்த சின்ன ஆனந்த நடராசனுக்குத்தான் முதல் மரியாதை என்று கோயில் கொடிக்கம்பம் மூலம் அந்தணர்களுக்குப் புரியவைத்தவனும் நீதான்!.

ராசராசசோழன் மூவர் பதிகங்களைக் கேட்டபோது, அந்த மூவர் வந்தால் மட்டுமே பெறக்கூடியது அவை என்ற அந்தணர்களுக்குப் புரியும் விதத்தில் அந்த அரசன் மூலம் மூவர் விக்கிரகங்களை செய்வித்து, பிராணாதிஷ்டையும் செய்வித்து, அவர்களையும் தெய்வமாக்கியதோடு, தமிழ்ச் செல்வங்களையும் கொடுத்து அருளினாய்! பின்னால் அச்சுதராயன் காலத்தில் சில அந்தணர்கள் கோயில் கோபுரம் ஏறி உயிர்த்தியாகம் செய்தபோது, காக்க வேண்டிய நீயோ அலட்சியம் செய்தாய்.. 'பிடிவாதம் பிடிப்போர்க்கு தெய்வம் துணை போகாது' என்று நீ சொல்வது போலத்தான் பட்டது.

ஆனால் அதே சமயத்தில் அந்த பழைமை மாறாத அந்தணர் குடும்பங்களை இதுநாள் வரை (ஏன், இனியும்!) ஆதரித்து, அரவணைத்து அவர்களின் ஒழுங்கான, இதுவரை தவறாத, ஆறுகால பூசையையும் ஏற்று வருகின்றாய். அவர்களின் அன்புக்கு என்றென்றும் கட்டுப்படுவது போல நடந்து வருகின்றாய்..

மேலும் யோசித்தேன்! அந்தணர்கள் உன் மீது கொண்ட அன்பு அலாதியானது. தன் வீட்டுச் செல்லக் குழந்தையாக, வாராது வந்த மாமணி போல, அவர்கள் உன்னை பாவிக்கிறார்கள். தன் அன்புக் குழந்தையை ஊட்டி வளர்ப்பது போல உன்னைப் பேணி பாதுகாக்கிறார்கள். பழைமையும் தொன்மையுமான வடமொழியில் பூசிப்பது உனக்கு பிடிக்கிறதா என்பதை விட அன்பாக அவர்கள் உன்னை ஆராதிப்பது உனக்கு மிகவும் பிடிக்கிறதாக எனக்குப் படுகிறது. கண்ணனுக்கு கோபியர்கள் போல உனக்கு தில்லைவாழ் அந்தணர்கள் போலும்.. அவர்கள் உரிமை எடுப்பது நியாயம் எனக் கூட உணர்த்தத் தயங்கமாட்டாயோ என்னவோ.. அவர்கள் பூசிக்கும் வேத மொழி கூட நீ தந்ததுதானே..'தென்னாடுடைய சிவனே , எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று வாதவூரார் சொல்ல நீ எழுத, அவர் கையாலேயே தமிழும் வடமொழியுமானாய் என்று கூட எழுத வைத்தவனும் நீதான்.

சரி.. போகட்டும்! எதற்காக இதையெல்லாம் நினைவுபடுத்துகிறாய்? நீ எதைக் கேட்கவேண்டுமோ அதைக் கேட்டுவிட்டுப் போயேன்.. என்று நீ சொல்வது போல படுவதால், என் சிந்தையில் உன் மூலம் வந்த கோரிக்கையை உன்னிடமே கேட்டுவிடுகிறேன்.

எனக்கு, எனக்கென்றில்லை, எல்லோருக்கும் உன் அருள் வேண்டும்..
உன் புகழை உனக்கும் எனக்கும் புரியும் விதத்தில் உன் எதிரே பாடும் அருள் வேண்டும்
உன் திருக்கோயிலின் பழைமையான புனிதம் என்றுமே காக்கப்பட வேண்டும்
உன் பக்தர்களிடத்தே, அவர்கள் அந்தணர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் போக்கினை எதிர்ப்பவர்களாக இருந்தாலும் சரி, ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் வேண்டும்
பழமை பாதுகாக்கப்படவேண்டும்
செந்தமிழ் சிறந்து ஓங்க வேண்டும்

உனக்குப் பிடித்த 'சிவபோகசாகரம்' பாடலிலிருந்து ஒரு வெண்பா பாடல்

'ஈசன் பலகீனன் என்றக்கால் ஆலயத்தில்
மோசம் வந்ததென்று மொழியலாம் - ஈசனே
ஆக்குவதும் ஆக்கி அழிப்பதுவும் தானானால்
நோக்குவெதென் யாம்பிறரை நொந்து'

ஆக்கி அழித்து அருளும் ஆண்டவனே.. இப்போது அரங்கேறும் கூத்துக்கும் விடை வேண்டும்
அதுவும் அனைவருக்கும் பயனுற வேண்டும்!!!

உன் பக்தன்
திவாகர்

சிதம்பர ரகசியம் -அங்கே ஒண்ணும் ரகசியமே இல்லை! :(

வேந்தரே,

தேவாரம் சிதம்பரம் கோயிலில் ஒவ்வொரு காலபூஜையின் போதும் தமிழில் கோயிலின் குறிப்பிட்ட ஓதுவார்களால் பாடப் படுகின்றது. இன்னும் சொல்லப் போனால் தீட்சிதர்களே, நன்கு தேவாரப் பாடல்களை இசையுடன் பாடுவார்கள். பிரச்னை என்னவென்றால் நடராஜரின் பொன்னம்பலத்துக்கு அருகே உள்ள மேடை போன்ற "கனகசபை"யில் போய்ப் பாடவேண்டும் என்பதே திரு ஆறுமுகம் அவர்களின் கோரிக்கை. ஆனால் அந்த இடத்திலும் வழிபாடுகள் நடைபெறுவதாலும், குஞ்சிதபாதம் அபிஷேகங்கள் அங்கே தான் நடக்கும், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் அபிஷேகம், வழிபாடு நடக்கும், என்பதால் ஓதுவார்கள் கூடக் கீழே நின்றுதான் பாடுவார்கள், ஆகவே நீங்களும், அங்கேயே நின்று பாடுங்கள் என்பது தான் தீட்சிதர்கள் தரப்பில் சொல்லப் படுகிறது, திரும்பத் திரும்ப. ஆனால் தமிழில் பாடுவதையே தீட்சிதர்கள் அனுமதிக்காதது போல் ஒரு தோற்றம் மீண்டும், மீண்டும் உருவாக்கப் படுவது வருத்தத்துக்கு உரியது. பல வருடங்கள் சிதம்பரம் கோயில் சென்று வருகிற முறையில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், அங்கு தேவாரம் பாட எந்தத் தடையும் இல்லை என்று.

நம் தமிழ்நாட்டு அசெம்பிளியிலும் சரி, லோக்சபா, ராஜ்யசபாவிலும் சரி, சபாநாயகருக்கு என்று ஒரு தனி மரியாதை கொடுப்பதோடு அல்லாமல், சபாநாயகர் இருக்கையில் பிரதம மந்திரி கூடவோ, அல்லது அசெம்பிளியில் முதல் மந்திரியோ கூட அமருவது மரபை மீறியது என்பதை அனைவரும் அறிந்திருக்கலாம். ஒருமுறை முன்னாள் முதல்வரின் தோழி அந்த மரபை மீறியதற்கு விமரிசிக்கப் பட்டதையும் நினைவில் கொண்டு, அப்படியே இந்த விஷயத்தையும் பாருங்கள், பிரச்னையில் தீவிரம் எதுவும் இல்லை என்பதும் புரியும், நேற்றுக் கூட எங்கள் குருவும், நான் யாருடைய குறிப்புக்களின் வழிகாட்டுதலில் "சிதம்பர ரகசியம்" தொடரை எழுதுகிறேனோ, அந்த ராமலிங்க தீட்சிதர் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அவரும் இதையே உறுதி செய்தார். மேலும் யாருக்கேனும் மேலதிகத் தகவல்கள் தேவைப் பட்டால் அவரின் முகவரியைக் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். தற்சமயம் நான் வெளியில் இருந்து தட்டச்சுகிறேன். ஆகவே சீக்கிரம் அவரின் முகவரியும் மின்னஞ்சல் முகவரியும் தருகிறேன்.






காமேஷின் கேள்வி.
ஆனா எல்லா பிரஸ்ஸும் ஏன் ஒரே மாதிரி தகவலைப்
பரப்ப வேண்டும்.. ?
ஏதாவது ஒரு தினசரி உண்மையை சொல்லாமே.. ?

காமேஷ், எனக்குத் தெரிந்து எல்லாத் தினசரிகளிலும் ஆறுமுகம் அவர்கள் "கனகசபை"யில் தேவாரம் ஓதினார், தீட்சிதர்களின் எதிர்ப்பையும் மீறி என்றே சொல்லி இருக்கிறது. ஆனால் அதே தீனசரிகளில் அதே ஆறுமுகம் அவர்கள், தான் தேவாரம் ஓதவில்லை எனவும் சொல்லி இருக்கிறார். ஆகவே உண்மை என்ன என்று யாருக்குத் தெரியும்? தற்சமயம் எந்தப் பத்திரிகை உண்மை சொல்லுகிறது? எல்லாருக்குமே பரபரப்புச் செய்திகளினால் தங்கள் பத்திரிகை விற்கவேண்டும் என்ற வியாபார நோக்கே உள்ளது.

ஆசீப் மீரான் சொல்லுவது:

//கீதாம்மா ரொம்ப நல்லவங்கன்னு மட்டும் தெரியுது
கீதாம்மா சொல்வது மட்டும் உண்மையென்றால் 'சோ'வென்று
கொட்டித் தீர்த்திருப்பார்கள் பத்திரிகையாளர்கள்

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் அபிஷேகம்
பிரச்னையில் தீவிரம் எதுவும் இல்லை என்பத//

ஆசீப், உண்மை எது, பொய் எது, நடப்பது எதுவெனத் தெரியாமல் பிறர் சொல்லுவதை நம்பும் அளவுக்கு நான் நல்லவளே இல்லை என்பது தான் நிஜம், தவிர, என் கணவர் பள்ளிப்படிப்பே சிதம்பரம் நாவலர் பள்ளியில் தான். பல வருஷங்களாய்ச் சிதம்பரத்துடனும் கோயிலுடனும் தொடர்புகள் உண்டு. எனக்கும் கல்யாணம் ஆனதில் இருந்து அந்தக் கோயிலின் வழிபாட்டு முறைகள் பழக்கமே.
நீங்கள் சொல்லும் "சோ"வென்று கொட்டித் தீர்ப்பவர்களுக்கு அந்தக் கோயிலின் வழிபாட்டு முறைகள் தெரியாமல் இருந்திருக்கலாம், அதனாலேயே தலையிட்டிருக்காமல் இருக்கலாம் இல்லையா? இனி மேலதிகத் தகவல் வேண்டுவோர் அணுகவேண்டிய முகவரி,

T.Ramalinga Diksthithar, M.A.Litt.,
Research Schollar, "PRATHIBA"
136/55, East Car Street,
Chidambaram-608001.
Tamilnadu. India.
Phone 04144-223507
prathiba2k2005@yahoo.co.in
*************************************************************************************

உண்மையில் நான் இம்மாதிரி ஒரு விளக்கம் கொடுக்கணும்னு நினைக்கலை, ஆனால் முத்தமிழ்க் குழும நண்பர்களுக்குக் கொடுத்த விளக்கம் இது. ஆகவே ரொம்ப மன வருத்தத்துடனேயே இதை இங்கேயும் பதிகிறேன். உண்மை நிலை ஒன்றாக இருக்க யாரோ சிலரால் வேறுமாதிரியாகச் சித்திரிக்கப் படுகிறது. மற்றபடி இதைப் பற்றிய விவாதத்தை இங்கே அனுமதிக்கப் போவதில்லை. ஒரு விளக்கத்துக்காகவே பதியப் பட்டது. கீழ்க்கண்டவைகள் திரு முகமூடி ஒரு வருஷத்துக்கு முன்னர் எழுதிய பதிவில் இருந்து எடுக்கப் பட்டது. திரு வெங்கட்ராம் திவாகரும் எழுதி இருக்கிறார். அவர் அனுமதி கிடைத்தால் அதுவும் இங்கே பதியப்படும். நன்றி.

"முகமூடி"யின் பதிவில் இருந்து!


//சிதம்பரம் கோயிலில் ஆறு கால (வேளை) பூஜைகள் நடக்கும். அதில் மாலை ஆறு மணிவாக்கில் ஆதிசங்கரர் தந்ததாக நம்பப்படும் ஸ்படிக லிங்கத்துக்கும் நடராஜருக்கும் நடக்கும் பூஜையை பல முறை நான் கண்டிருக்கிறேன். அரை மணி நேரத்துக்கும் மேலாக அந்த பூஜை நடக்கும்.. மைல் கணக்கில் கேட்கும் பெரிய இரு காண்டா மணிகள் 'டாண் டாண்' என்று விடாமல் ஒலிக்க, வரிசையாக கட்டப்பட்டிருக்கும் பத்துக்கும் மேற்பட்ட சிறு மணிகள் 'கிலுகிலு' என்று விடாது சப்தமெழுப்ப, இந்த சத்தத்தில் சித்சபையில் நம் காதில் கூட விழாத வேத முழக்கத்தின் இடையில் பூஜை நடக்கும்... திடீரென அனைத்து மணிகளும் வேதங்களும் நின்றுவிடும்... அந்த அமைதியை கிழித்துக்கொண்டு ஓதுவார் என்பவர் கணீரென்ற குரலில் தமிழ் பதிகங்கள் பாடுவார்... பிறகு மீண்டும் மணிச்சத்தம் பலமாக ஒலிக்க பூஜை நடக்கும். பிறகு மீண்டும் அனைத்தும் நின்று அமைதியை கிழித்துக்கொண்டு கணீரென தமிழ் பதிகங்கள்... இந்த பதிகங்கள் சத்தியமாக தமிழ்தான்... தேவாரமோ, திருவாசகமோ, சிவபுராணமோ தெரியாது... ஆனால் தமிழ்... ஒரு தேர்ந்த ஆர்க்கெஸ்ட்ராவின் இசையில் முகிழ்ந்தால் கிடைக்கும் பரவசம் கிடைக்கும் அந்த அனுபவத்திற்காகவே நாத்திகனாக அலைந்த காலங்களிலும் இந்த பூஜைக்கு செல்வேன் (அப்படியே பெருமாள் மடப்பள்ளி புளியோதரை, சர்க்கரை பொங்கலுக்கும்)...
ஆகவே தமிழ் பதிகங்களை பாட முற்படுவதா



மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் தங்கியிருந்துதான் திருவாசகத்தை எழுதினார். மேலும் நடராஜர் கேட்டுக்கொண்டபடி திருக்கோவையார் பதிகங்களையும் இயற்றினார். நடராஜரே இந்த பதிகங்களை எழுதி அதை கோயில் குளத்தில் வைத்துவிட்டார் என்பது புராணம். குளத்தில் பதிகங்களை கண்ட கூட்டம், மாணிக்கவாசகரை அணுகி அதன் அர்த்தம் என்னவென கேட்க அவர் கூட்டத்தை கோவிலுக்கு அழைத்து சென்று நடராஜ்ரை காண்பித்து அந்த பதிகங்களுக்கு அர்த்தம் சிவபெருமானே என்று சொல்லி கோவில் குளத்தில் நடந்து சென்று மறைந்துவிட்டார் என்று சொல்வார்கள். மாணிக்கவாசகருக்கும் தில்லைக்கும் உள்ள நெருக்கம் காரணமாக தேர் தரிசன உற்சவத்தின் போது பத்து நாட்களும் மாணிக்கவாசகர் சிலை கனகசபையில் முன்பு கொண்டுவரப்பட்டு அனைத்து பக்தர்களும் ஓதுவாருடன் சேர்ந்து திருவெம்பாவை பதிகங்களை சத்தமாக பாடுவார்கள்... திருவெம்பாவை தமிழ்தான்... தேர் திருவிழாவின் போது தேர் நிலைக்கு வந்ததும் நடராஜரை கோவிலுக்குள் கொண்டு செல்வதற்கு முன் தமிழ் பதிகங்களை பாடித்தான் தீப ஆராதனை நடக்கும்... இது சிதம்பர ரகசியம் அல்ல... வெளிப்படையாக நடக்கும் நிகழ்வு... தேர் தரிசன கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட எல்லாருக்கும் இது தெரியும்... ஆகவே கேட்டதை வைத்து விரும்பிய மாதிரி உருவகித்து நடராஜர் தமிழை மிதிக்கிறார் என்று படம் போடும் நாத்திகர்களின் நோக்கம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை...//

மேற்கண்டவை "முகமூடி" என்பவர் ஒரு வருஷத்துக்கு முன்னர் எழுதிய பதிவில் இருந்து எடுக்கப் பட்டது. திரு வெங்கட்ராம் திவாகரும் தேவாரங்கள் பாடப்படுவதாயே கூறி இருக்கிறார். அவரின் அனுமதி கிடைத்தால் அவர் பதிவும் இங்கே போடுவேன். விவாதத்துக்கு அல்ல.