எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, December 30, 2006

ஓம் நமச்சிவாயா -23

கைலை மலை பற்றிச் சிலத் தகவல்கள்

இந்த இடத்தில் கைலை மலை பற்றிச் சிலக் குறிப்புக்கள் கொடுக்க நினைக்கிறேன். முன்னாலேயே கொடுத்திருக்க வேண்டும். தொடரில் தொடர்பு விட்டுப் போகக் கூடாது என்று நினைத்ததால் எழுதவில்லை. இப்போ கைலைப் பயணம் முடிந்து திரும்பிக் கொண்டிருக்கிறோம். திரும்பும் வழியில் "அஷ்ட பத்" போய்க் கொண்டிருக்கிறோம். அது இருக்கட்டும் தனியாக.

ஏற்கெனவேயே கைலை மலையும் ஒரு சக்தி பீடமாய்க் கருதப் படுகிறது எனத் தெரிவித்திருக்கிறேன். தட்சனின் யாகத் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட அன்னையின் உயிரற்ற உடலைத் தோளில் போட்டுக் கொண்டு ஆடிய எம்பெருமான் தென்னாடுடைய சிவனின் கோபம் தணிய மஹாவிஷ்ணு தன் சுதர்ஸன சக்கரத்தால் அன்னையின் உடல் அங்கங்களைத் துண்டு துண்டாக அறுக்க அதிலே அன்னையின் உடல் கொழுப்புப் பூராவும் விழுந்து மூடிக் கொண்ட இடம் தான் திருக்கைலை ஆகும். அந்தக் கொழுப்புத் தான் உறைந்து காலப் போக்கில் பனியாக மாறியதாக சாக்தர்க்ளின் அபிப்பிராயம். திபெத்தின் மேற்குப் பகுதியில் (வடமேற்கு என்றும் சொல்லலாம்) ஒரு மூலையில் உள்ள திருக்கைலாய மலையின் உயரம் 22,028 அடிகளாகும். திபெத்திய பீடபூமியால் சூழப்பட்ட இந்த மலை இந்துக்கள், சமணர்கள், பெளத்தர்கள் எல்லாருக்குமே ஒரு புனித யாத்திரைத் தலமாய் விளங்குகிறது. மற்றச் சுற்று வட்டார மலைகளில் இருந்து பனி கோடை காலத்தில் உருகினாலும் திருக்கைலாய மலையில் மட்டும் பனி உருகுவதில்லை. இந்தப் பனி மூடிய மலையைச் சுற்றி வரும் தூரம் (பரிக்ரமா செய்யும் தூரம்) கிட்டத் தட்ட 52 கிலோ மீட்டர் ஆகும்.

"மஹா நிர்வாண தந்திரம்" என்ற பெளத்த மத நூலின் படி பெளத்தர்களுக்கும், திருக்கைலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர்களின் கோட்பாட்டின் படி பெளத்தர்கள் அதாவது பிட்சுக்கள் மலையின் உச்சியில் "டொம்சோக்" என்னும் சக்தி வாய்ந்த தெய்வத்தின் உருவம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. இந்தத் தெய்வம் மூன்று உலகங்களுக்குக் காவல். 12 கரங்கள் உள்ள இந்தத் தெய்வம், தன் கைகளில் அறிவைக் குறிக்கும் வண்ணம் கருவிகளைத் தாங்குகிறது. தேவியின் பெயர் "டோர்ஜி பாஸ்மோ" அல்லது "வஜ்ர வர்ஷி". செந்நிற அழகியான இந்தச் சக்தி வாய்ந்த தேவியான இவள் கையில் வைத்திருக்கும் அரிவாளினால் மனிதர்களின் ஆசைகளை வேரறுக்கிறாள். எல்லாத் திசைகளிலும் இந்த அரிவாள் தகாத ஆசை கொண்டவர்களை வேரறுக்கிறது. தன் இடக்கையால் "டொம்சேக்"கைத் தழுவிய நிலையில் காணப்படுகிறாள். ஆனால் இவள் காமத்தைக் கடந்தவள். "டொம்சேக்கும்" "வஜ்ரவர்ஷி"யான இந்தத் தேவியும் பிரிக்க முடியாதவர்கள். இது கிட்டத் தட்ட நம் அர்த்த நாரீஸ்வர தத்துவத்தை எடுத்துரைப்பதாய்த் தோன்றுகிறது.

திபெத்தின் புராணம் என்று அழைக்கப் படும், "காங்குரி கார்ச்சொக்" என்ற நூலில் கைலை மலையில் தான் கற்பக விருட்சம் இருப்பதாயும், மற்ற பகுதிகள் வைரம், வைடூரியம், மரகதம், பொன், வெள்ளி போன்ற நவரத்தினங்கள் நிறைந்ததாயும் கூறப்படுகிறது. இவர்கள் கடவுளும் டொம்சொக் எனப்படும் "தர்மபாலர்" 4 முகங்கள் கொண்டவர். ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள் கொண்டவர். அவை முக்காலங்களை உணர்த்துகிறது. புலித்தோல் அணிந்தவர், மண்டையோட்டு மாலை தரித்து, உடுக்கையைக் கையில் வைத்திருப்பவர், திரிசூலத்தைக் "காட்டம்" என்கிறார்கள். அதையும் குறிப்பிடும் இவர்கள் கடவுள் தோற்றத்தில் நம் சிவபெருமானின் வர்ணனையை ஒத்து இருக்கிறது.

ஜைனருக்கோ என்றால் அவர்கள் முதல் தீர்த்தங்கரர் "ரிஷபா நந்தா" இங்கே தான் முக்தி அடைந்ததாகவும் அவருடைய சமாதி மலை உச்சியில் இருப்பதாயும் நம்புகிறார்கள். கைலையை "அஷ்டபாதா" என்று அழைக்கும் அவர்களின் 24-வது தீர்த்தங்கரரான மஹாவீரர் இங்கே ஒரு முறை வருகை புரிந்ததாய்க் கூறுகிறார்கள். இந்துக்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தத்தாத்ரேயர் கைலையில் பரிக்ரமா செய்ததாகவும், இப்போதும் கூட அங்கே உள்ள காடுகளில் மறைந்து இருக்கும் தத்தாத்ரேயர் மிகச் சிலர் கண்களுக்குத் தென்படுவதாயும் சொல்கிறார்கள். மஹா சிரஞ்சீவியான ஆஞ்சநேயப் பிரபு தன் சுய உருவுடன் கைலை மலைப் பிராந்தியத்தில் உலவிக் கொண்டிருப்பதாயும் சொல்கிறார்கள். கேதார்நாத்தில் உள்ள ஈசான மூலை வழியாக (நான் சென்றதில்லை) ஆதிசங்கர பகவத்பாதர் இமயம் க்டந்து கைலை ஏறி அங்கேயே ஐக்கியமாகி விட்டதாயும் சொல்வார்கள். நான்கு அடுக்குகள் கொண்டதாய்க் கூறப்படும் இந்தக் கைலையின் முதல் மூன்று அடுக்குகளில் யக்ஷர்களும், நான்காம் அடுக்கில் தேவர்கள், கின்னரர்கள், அஸ்வினி தேவர்களும் இருப்பதாயும் கூறுகிறார்கள். பக்கத்தில் உள்ள "அஷ்டப்த்தில்" தான் குபேரன் தன் செல்வத்தோடு வசிப்பதாயும் கூறுவார்கள். எட்டுமலைகள் கொண்ட அந்த மலைத் தொடர்கள் "குபேர பண்டார்" என்று அழைக்கப் படுகிறது.

தமிழ் மணம் நண்பர்கள் எல்லாருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். கைலை பற்றிய தகவல்கள் தொடரும்.
முத்தமிழ்க் குழும நண்பர்கள் எல்லாருக்கும் எங்கள் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Tuesday, December 19, 2006

22. ஓம் நமச்சிவாயா

டாக்டர் நர்மதாவின் கணவரும் திரும்பி விட்டார். மனைவியின் உடல் நிலை கருதியோ என்னவோ அவரும் திரும்பி விட்டார். அவர்தான் மோட்டார் பைக்கில் எங்களைக் கடந்தார் என்று தெரிந்து கொண்டோம். திரு. சிவநாராயணனும் அவரும் மோட்டார் பைக்கில் வந்திருக்கிறார்கள். அதற்கு 500 யுவான் ஒருத்தருக்குக் கொடுத்திருக்கிறார்கள். கேம்பில் போய்ச் செய்தி சொல்லவும் கிட்டத்தட்ட 300 யுவான் வரை கொடுக்க வேண்டுமாம். நல்லவேளையாக எங்களுக்கு யாரும் போய்ச் செய்தி சொல்ல அனுப்பவில்லை என்று சந்தோஷப்பட்டோம். 500 யுவான் என்பது கிட்டத்தட்ட ரூ.3,500/-ஆகிறது. நாங்கள் சென்ற சமயம் ஒரு யுவானுக்கு இந்திய ரூபாய் 6-60 மதிப்பு. மறுநாள் நாங்கள் எல்லாரும் பரிக்ரமாவில் இருந்து திரும்பி வருபவர்களை எதிர்பார்த்து இருந்தோம். அவர்கள் வருவதை வரவேற்க இங்கிருந்து எல்லா வண்டிகளும் கிளம்பிப் போனது. திருமதி மீராவும் வருபவர்களை வரவேற்கப் போனார். இங்கே நாங்கள் தங்கி இருந்த அதே கேம்பில் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட குழு ஒன்றும் வந்து திரும்பிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 25, 30 பேர் இருக்கும். சமையல்காரர், மருத்துவர், மருத்துவ உபகரணங்கள் என்று எல்லாவிதமான ஏற்பாட்டோடும் வந்திருந்தார்கள். இங்கே உள்ள திபெத்தியர் கூட்டம் கூட்டமாக வந்து சீனப் பொருட்களையும், மற்றும் பவளம், முத்து, கிரிஸ்டல் போன்ற மாலைகள், மணிகள், விக்ரஹங்கள் என்று விற்க வருகிறார்கள். என்னைப் பொறுத்த வரை நான் எப்பவுமே ரொம்ப மோசமான shopper. எல்லாரும் பொருட்கள் வாங்க நான் வேடிக்கை மட்டும் பாரத்துக் கொண்டிருந்தேன். நான் போன இடங்களில் இருந்து எல்லாம் பொருட்கள் வாங்கி வந்து கொண்டிருந்தால் வீட்டில் இடம் இருக்காது. அதை வைத்துப் பராமரிக்கவும் போவதில்லை. ஆகையால் நான் எதுவுமே வாங்கவில்லை. என் கணவருக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தது. சிலபொருட்களைப் பார்த்தார். விலை சரிப்பட்டு வரவில்லை. நாங்கள் கொண்டு வந்திருந்த பணத்துக்குள் வரவில்லை. ட்ராவல்ஸ்காரர்கள் பணம் போதவில்லை என்றால் உதவி செய்கிறார்கள். ஆனால் அது அவசரம் என்றால் மட்டுமே பெறவேண்டும் என்று எங்கள் கொள்கை, ஆதலால் எதுவுமே வாங்காமல் இருந்து விட்டோம்.

சற்று நேரத்திற்கெல்லாம் பரிக்ரமா போனவர்கள் எல்லாம் திரும்ப ஆரம்பித்தார்கள். எல்லாரும் பார்க்கவே எதோ ரொம்பவே கஷ்டப்பட்ட மாதிரியும், ஏதோ சொல்ல முடியாத துக்கத்தில் இருப்பவர்கள் போலவும் தெரிந்தார்கள். என்னவென்று புரியவில்லை. அப்போது மத்தியானச் சாப்பாட்டு நேரம் ஆகிவிட்டதால் எல்லாரும் சாப்பிட ஆரம்பிக்கவும், சிலர் எங்கள் அறைக்கு வந்து என் உடல் நலத்தை விசாரித்து விட்டு அங்கேயே உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள். ஏதோ சொல்ல நினைத்து சொல்லலாமா வேண்டாமா எனத் தயங்குவது போல் இருந்தது. எனக்குள்ளும் சொல்ல முடியாத அளவு ஏதோ சங்கடமாய் இருந்தது. அப்போது திருமதி ராமச்சந்திரன் அங்கே வந்தவர் என்னைப் பார்த்துவிட்டு உடனேயே கண்ணில் நீர் வர ஆரம்பித்தது. என்னவென்று கேட்டால் பரிக்ரமாவில் 2-வது நாள் ரொம்பவே கஷ்டப்பட்டதாகவும், திடீர் என மழை, திடீர் எனக்காற்று, திடீர் எனப் பனிமழை என்று மாறி மாறி வந்ததாயும் நடக்கவே முடியாமல் ரொம்ப உயரத்தில் போகும்போது அதாவது அங்கே "டோல்மா பாஸ்" என்னும் இடத்தில் மூச்சு விடப் பிராணவாயு போதாத இடம். அங்கே high altitude cross in the world. ஆகவே அங்கே கடக்கும்போது ஐந்து நிமிஷத்திற்குள் கடக்கவேண்டும். இல்லாவிட்டால் ரொம்பக் கஷ்டமாகி விடும். அப்போது அவரால் முடியவில்லை என்றும் வீட்டில் விட்டு வந்திருந்த குழந்தைகள் நினைவு வந்து ரொம்பவே அழுது விட்டதாகவும் கூறினார். கீழே இறங்கும்போதும் செங்குத்தாக இறங்க வேண்டி இருந்ததால் இறங்கவே முடியவில்லை என்றும் அவருடைய உதவி ஆள் கிட்டத்தட்ட அவரை இழுத்துக் கொண்டு போனார் என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறினார்: டோல்மா பாஸைக் கடக்கும்போது ஸ்ரீலட்சுமிக்கு உடனடியாய்க் கடக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், உடனேயே அங்கே சற்றுக் கீழே வந்து அவசர டெண்ட் போட்டு அவருக்கு ஆக்ஸிஜன் கொடுத்து அங்கேயே வைத்திருந்தாகவும் சொன்னார். அவரால் மேற்கொண்டு 7 கி.மீ. கீழே இறங்கும் அளவு நடக்க முடியாது என்பதால் அவரை அங்கே தங்க வைத்து துணைக்கு 2 ஆளும் இருந்திருக்கிறார்கள். அவரால் சாப்பாடும் சாப்பிட முடியாமல் போய் விட்டது. அன்று பூராவும் கஷ்டப்பட்டு ராத்திரி கொஞ்சம் பரவாயில்லை, காலையில் போகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். திடீரென இரவு 2 அல்லது 3 மணி அளவில் அவர் உடல் நிலை ரொம்ப மோசமடைந்து அவர் ஆவி பிரிந்தது." இதைச் சொல்லி விட்டு திருமதி ராமச்சந்திரன் ரொம்பவே அழ ஆரம்பித்தார். எங்களுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. கைலையில் வந்து இறப்பது என்பது அவருக்குக் கொடுத்து வைத்திருக்கிறது என்று சமாதானப் படுத்திக் கொள்ளப் பார்த்தாலும் எங்களால் முடியவில்லை. அவரோட பாட்டும், பேச்சும் எங்கள் மனதை விட்டுப் போகவில்லை. வழியில் எவ்வளவு குறிப்புக்கள் எடுத்துக் கொண்டு வந்தார்? எவ்வளவு உற்சாகமாய் இருந்தார்? நாங்கள் சிலபேர் எதிர்பாராமல் பிரயாணம் மேற்கொண்டவர்கள். ஆனால் அவர் திட்டம் போட்டு நல்ல முன்னேற்பாடுகள் செய்து கொண்டு, "ட்ரெட் மில்" பயிற்சியிலிருந்து எல்லாம் மேற்கொண்டு தயாராகி வந்தார். இதைத் தான் விதி என்று சொல்வதா? புரியவில்லை. திருமதி தாரகராமனும் ரொம்பவே முடியாமல் ஆளே பாதியாகிச் சுருங்கி விட்டிருந்தார். அவரும் குதிரையில் இருந்து விழுந்து விட்டதாயும், அவருக்கும் ஆக்ஸிஜன் கொடுத்ததாயும், அவரால் நடக்க முடியாமல் போனதால் அவரோட குதிரைக்காரரும், உதவி ஆளும் அவரைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டதாயும் தெரிவித்தார்கள். எல்லாரும் ஒரு மனதாய்ச் சொன்னது, "நல்லவேளை, நீங்கள் வரவில்லை, வந்தால் நீங்களும் கஷ்டப்பட்டிருப்பீர்கள்" என்பது தான். எல்லாரும் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தோம். இதே யாத்திரைக் குழுவின் முதல் முதல் மே மாதம் வந்த குழுவிலும் இதே மாதிரி ஒரு பெண்மணி இறந்து விட்டதாயும் சொல்லிக் கொண்டார்கள். ஒருவேளை உயிர் காக்கும் மருந்துகளும், தேர்ந்த மருத்துவரும் இருந்திருந்தால் ஸ்ரீலட்சுமியைக் காப்பாற்றி இருக்கலாமோ என்னவோ?

அப்போது திரு கிருஷ்ணா வந்து எங்களை எல்லாம்,. "அஷ்டபத்" போகத் தயார் ஆகச் சொன்னார். எட்டு மலைகளுக்கிடையில் கைலையின் தரிசனம் மிக அருகில் கிடைக்கும். எதிரே நந்தி மலையும் இருக்கும். அதற்குப் போவதற்கு இங்கிருந்து சில கிலோ மீட்டர்கள் போய் அங்கிருந்து மலைகளின் உச்சியில் போய்த் தரிசிக்க வேண்டும். மலைப்பாதை ரொம்ப உயரம் என்பதால் நடக்கவேண்டாம் என்றும் இப்போது வண்டிகள் போகிறது, அதிலேயே போகலாம் என்றும் சொன்னார். 2004 வரை நடந்துதான் போய்ப் பார்த்திருக்கிறார்கள். "அஷ்டபத்தில்" நாங்கள் யாத்திரை முடிந்ததற்குப் பூஜையும், விநாயகருக்கு நன்றி தெரிவித்துப் பூஜையும் செய்வதாய் இருந்தது. தற்சமயம் இருந்த சூழ்நிலையால் அவை நிறுத்தி வைக்கப்பட்டது. ரொம்பவே வேதனையோடு எல்லாரும் "அஷ்ட பத்" தரிசனத்திற்குக் கிளம்பினோம். அங்கிருந்து திரும்பி இந்த கேம்ப் வர வேண்டாம் என்றும், மானசரோவரின் மற்றொரு கரையில் இரவு தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாயும், நேரே அங்கே போகவேண்டும் எனவும் திரு கிருஷ்ணா கூறினார். அவரும், திரு மனோஹரனும், எங்களில் ஒருவரான வரதராஜன் துணையுடன், இன்னும் எகோ ட்ராவல்ஸைச் சேர்ந்த 2 பேரும், ஸ்ரீலட்சுமியுடன் வந்தவர்களுடன் திருமதி ஸ்ரீலட்சுமியின் உடலை எடுத்துக் கொண்டு மலை இறங்குவதற்கு ஏற்பாடு செய்து விட்டுப் பின் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்வதாய்ச் சொன்னார். நாங்கள் கிளம்பினோம்.

Thursday, December 07, 2006

ஓம் நமச்சிவாயா-20

என்னிடம் கேட்ட மாதிரி ஸ்ரீலட்சுமிக்கும் முடியலைன்னதும் அவரிடமும் திரு கிருஷ்ணா கேட்டார்.

ஸ்ரீலட்சுமி தான் தொடரப் போவதாய் அறிவித்தார். அவருடைய சிநேகிதிகளின் துணையுடன் தான்

வருவதால் தனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை என்றும் தெரிவித்தார். மற்றபேர் எல்லாரும் தொடரப்

போவதாய்ச் சொல்ல, அதற்குள் நாங்கள் இருவரும் கலந்து பேசிக் கொண்டு பிரயாணத்தைத்

தொடருவதில்லை என முடிவு செய்து அதைத் திரு கிருஷ்ணாவிடம் தெரிவித்தோம். அவரும் என்

உடல்நிலையில் தொடருவது ரொம்பவே கஷ்டம் என்றும், நீங்கள் எடுத்தது சரியான முடிவுதான்,

அதனால் சோர்வு அடைய வேண்டாம் என்றும் இரண்டு முகம் தரிசனம் கிடைத்தது அல்லவா?

அதனால் நீங்கள் சந்தோஷமாய்த் திரும்பி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் ஆறுதல்

சொன்னார். நாங்கள் கேம்ப் இறங்கி இருக்கும் இடத்தில் எங்களுக்கு நேர்முகமாய்க் கைலையின் ஒரு

முக தரிசனம் கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த முக தரிசனம் ஐயன் தன் சடாமுடியை விரித்துக்

கொண்டு ஆடும் தோற்றம் போலக் காட்சி தந்தது. சுற்றிலும் நட்சத்திரங்கள் மாலை போல அணி

வகுக்க அந்த இருண்ட வானில் வெள்ளை வெளேர் என்ற பனி படர்ந்த கைலைமலைச் சிகரமானது

ஐயனின் இன்னொரு பக்க முகத் தரிசனத்தைக் காட்டி நின்றது. காலைச் சூரிய ஒளியில் அதன்

தரிசனம் வேறு மாதிரிக் காட்சி அளிக்கும் என்றும், "பொன்னார் மேனியனே!" என்று சுந்தரர்

விளித்ததற்கு ஏற்பக் காலைச் சூரியனின் பொற்கிரணங்கள் பட்டுத் தங்கம் போல் தகதகவென்று

ஜொலிக்கும் என்றும் சொன்னார்கள். பார்க்கப் பார்க்கத் திகட்டாத செளந்தரியமான காட்சி. ஆனால்

இரு முகம் தான் பார்க்க முடியும் என்பது சற்று வருத்தமாய்த் தான் இருந்தது. இது இப்படி நேரும்

என்றுதான் முன்னாலேயே பசுபதிநாதர் கோவிலில் கூட எங்களால் நின்று கூட மற்ற இரு முக

தரிசனம் காணப் பெற முடியவில்லை போலும். அப்போதே இறைவன் சூசகமாய்த் தெரிவித்தானோ

என்னவோ?

இரவு என் கணவர் அசந்து உறங்க, எங்களுடன் தங்கி இருந்த மற்றப் பெண்கள் உதவ நான்

என்னோட சிலத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டேன். என்னை எழுப்பி உட்கார்த்தி வைக்கத்

திரு ரமேஷ் ரொம்பவே உதவியாக இருந்தார். இரவு போய்ப் பொழுது புலர்ந்ததும் எல்லாரும் கிளம்ப

ஆயத்தமானார்கள். சிலருக்கு முதலில் 7 கி.மீ. நடக்கவேண்டும் என்று தெரியாமல் குதிரையைத்

தேட குதிரை எல்லாம் வேறு இறங்குமுகமாய் இறங்கிப் போக ஆரம்பிக்க எல்லாரும் நடைப்

பயணத்தைத் தொடர்ந்தார்கள். ஒவ்வொரு நாள் பரிக்ரமா ஆரம்பிக்கும் முன் காலை உணவுக்குப்

பின் சில ஜூஸ் வகைகள், அல்லது பெப்ஸி, கோலா போன்ற குளிர்பானவகைகள், பிஸ்கட் வகைகள்

முதலியன வழியில் சாப்பிடக் கொடுக்கிறார்கள். உணவு விஷயத்தில் தேவைக்கு மேல் அதிகமாய்த்

தான் கொடுக்கிறார்கள். நம்மால்தான் சாப்பிட முடிவதில்லை. நாங்கள் திரும்பத் தயாராய்

இருந்தோம். என்னால் நிற்க முடியவில்லை. இதிலேயே நதியில் கீழே இறங்கிச் சற்றுத் தூரம் நடந்து

போய் அக்கரையில் இருக்கும் குதிரையில் ஏறிக் கொண்டு போகவேண்டும். எப்படியும் நிற்காமல்

போவதால் 4 மணி நேரமாவது ஆகும். பரிக்ரமாவைத் தொடருகிறவர்கள் கிளம்பிப் போக என்

கணவரின் குதிரையைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிவந்தார்கள். நல்ல வயசான குதிரையாக

இருந்தது. மெதுவாகப் போகிறது. என்னோட குதிரை அதை வம்பிழுக்க, எனக்குப் பயம் வந்தது.

அப்புறம் என் கணவர் இம்முறை கூடவே வந்ததால் என்னோட உதவி ஆளிடம் கடிந்து கொண்டு

கூடவே வந்து எனக்குப் பாதுகாப்பாக இருக்குமாறு கூறினார். அதற்குள் என் கணவரின் உதவிக்கு

இருக்கும் பெண்மணி என்னை மிக ஜாக்கிரதையாகக் குதிரையில் ஏற்றி, உட்கார வசதி செய்து

கொடுத்துக் காலையும் சற்றும் அவிழாமல் இருக்கும்படி ,மாட்டி விட்டுத் தான் கூட வருவதாயும்,

பயம் வேண்டாம் என்றும் சைகை செய்தாள்.

எங்கள் பயணம் ஆரம்பித்தது. நதியில் போய்க் கொண்டிருந்த போது ஒரு மோட்டார் பைக்

எங்களைக் கடந்து சென்றது. திரு கிருஷ்ணா மோட்டார் பைக்கில் ஆளை அனுப்பி எங்களுக்குத்

திரும்பி தார்ச்சன் கேம்ப் போக மோட்டார் அனுப்ப உதவி செய்வதாய்க் கூறி இருந்ததால் அதான்

போகிறார்கள் என்று நினைத்தோம். அந்த மலைப்பாதையில் அந்த பைக்கில் ஓட்டுநரைத் தவிர

இன்னும் யாரோ இருந்தார்கள். தெரிந்தமுகமாய் இருந்தது. யாரெனத் தெரியவில்லை. ஒரு வழியாக

நாங்கள் 3,4 மணி நேரம் கழித்து முதல் நாள் நாங்கள் குதிரை ஏறின இடம் வந்து சேர்ந்து

குதிரையில் இருந்து நான் இறக்கி விடப்பட்டேன். என் கணவர் வந்து பிடித்துக் கொண்டு என்னை

இறங்க உதவி செய்ததால் சற்று சமாளித்துக் கொண்டேன். ஆனால் உட்கார இடமும் இல்லை.

எங்களுக்காக எந்த வண்டியும் வந்திருக்கவில்லை. மலைவாழ் மக்களுக்கு வேண்டிய சாமான்கள்

கொண்டு வந்த ட்ரக் ஒன்று தான் திரும்பிப் போக ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. யாரை என்ன

கேட்பது ஒன்றும் புரியவில்லை. ஒன்று சீன மொழியில் பேச வேண்டும், அல்லது திபெத்திய மொழி

தெரிந்திருக்க வேண்டும். விழித்துக் கொண்டு இருந்த போது காதில் தேன் பாய்ந்தது போல அந்த

ட்ரக்கில் வந்து பரிக்ரமாவிற்கு இறங்கிய ஒருத்தர் எங்களிடம் ஆங்கிலத்தில் பேசினார். என்னைப்

பார்த்துவிட்டு ஏன் இப்படி நிற்க முடியாமல் நிற்கிறார்கள்? என விசாரிக்க நாங்களும் சொன்னோம்.

உடனேயே எங்கே போகவேண்டும் என்று கேட்டுவிட்டு அந்த ட்ரக் ட்ரைவரிடம் எங்கள் தேவையைச்

சொன்னார். அவரும் சற்றுப் பொறுத்தால் எல்லா சாமான்களையும் இறக்கிவிட்டு எங்களை ஏற்றிக்

கொண்டு தார்ச்சன் கேம்பில் விடுவதாயும் அதற்குள் எங்கள் ட்ராவல்ஸ் வண்டியும் வந்துவிட்டால்

நல்லது என்றும் கூறினார். ட்ரக் ட்ரைவர் கொண்டு விட 50 யுவான்கள் கேட்க அப்போது வேறு

வழியும் இல்லை, வேறு எந்த உதவியும் வரவும் வழி இல்லை என்பதால் ஒத்துக் கொண்டோம்.

நிற்க முடியாம நின்ற 1/2 மணி நேரத்திற்குப் பின் அந்த ட்ரக் ட்ரைவர் என்னை மெதுவாய்த் தூக்கி

வண்டியில் உட்கார வைக்க என்கணவரும் உட்கார்ந்து கொள்ள எங்களை தார்ச்சன் கேம்பிற்கு

அழைத்துப் போனார். வழியில் எங்கள் ட்ராவல்ஸ் வண்டி வர, நாங்கள் நிறுத்தி விசாரித்ததற்கு

எங்களைப் பற்றி எந்தத் தகவலும் வரவில்லை எனவும் வேறு யாரோ 7 பேர் பாதியில்

திரும்புவதாகவும் அவங்களுக்காக வண்டி செல்வதாயும் கூற எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

வழியில் எங்கள் ஒருங்கிணைப்பாளர் இன்னொரு வண்டியுடன் எதிர்ப்பட எங்களை அடையாளம்

கண்டுகொண்டு அவர் விசாரிக்க, நாங்கள் கொடுத்த தகவல் அவருக்கும் புதிதாய் இருந்தது.

எங்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்றும் 7 பேர் திரும்புவதாயும் அவரும் உறுதிப்

படுத்தினார். நாங்கள் அந்த ட்ரக்கிலேயே மேற்கொண்டு பயணத்தைத் தொடர்ந்து தார்ச்சன் கேம்ப்

போய்ச் சேர்ந்து அங்கே உள்ள பெண்மணியிடம் சொல்லவே, எங்களுக்கு ஒரு அறையைத் திறந்து

கொடுத்தார் அந்தப் பெண்மணி. பெரிய ஃப்ளாஸ்க் நிறைய வெந்நீரும் கொடுத்துவிட்டு அவர் போக

என் கணவர் எங்கள் குழுவின் ஆட்களைத் தேடிப் போய் நாங்கள் திரும்பி விட்டதை

அறிவித்துவிட்டு சாப்பாடு வேண்டும் என்றும் சொல்லவே வெறும் சாதமும், தயிரும் மட்டும் வாங்கி

வந்து சாப்பிட்டுவிட்டுப் படுத்தோம். அதற்குள் டாக்டர் நர்மதாவைப் பார்த்த நான் அவங்க நிலைமை

ரொம்பவே மோசமாய் இருப்பதை அறிந்து கொண்டேன். அவங்களுக்கு infection ஏற்பட்டு

diarroheaநிற்காமல் போய்க் கொண்டிருந்தது. அவர் கணவர்தான் மோட்டார் பைக்கில் திரும்பி

இருக்கிறார். பிறகு அவர் என்னை மருந்து வேண்டுமா என்று கேட்க நான் வேண்டாம் இருக்கு என்று

சொல்லிவிட்டு மருந்துகளைச் சாப்பிட்டுவிட்டு, வலி குறையவும் மருந்துகள் சாப்பிட்டுவிட்டுப்

படுத்தோம். எங்களுக்குப் பின் சுமார் 2 மணி அளவில் குஜராத்தில் இருந்து வந்திருக்கும்

சிவநாராயணன், இன்னும் 2 பேர், பின் பங்களூரில் இருந்து வந்திருக்கும் மீராவும் அவர் கணவரும்

திரும்பினார்கள். திருமதி மீராவின் கணவருக்கு வீஸிங் ஜாஸ்தி ஆகவே அவர்கள் திரும்பி

இருக்கின்றனர். திரு சிவநாராயணன் குதிரையில் இருந்து விழுந்து அடிபட்டு ரத்தம் வந்து மயக்கம்

வரவே அவரும் மற்ற இருவரும் நடக்க முடியவில்லை என்பதாலும் திரும்பி விட்டனர்.

ஏற்கெனவே செந்திலும் குதிரையில் இருந்து விழுந்திருக்கிறார். ஆனாலும் சமாளித்துக் கொண்டு

போய்க் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்கள். திருமதி ஸ்ரீலட்சுமியும் குதிரையில்

உட்காரமுடியாமல் சரிந்து சரிந்து விழுவதாயும், திருமதி தாரகராமனும் உட்காரமுடியாமல் விழுந்து

விட்டதாயும் தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் எல்லாரும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். மறு

நாள் என்ன ஆனது? நாளை பார்ப்போமா?

இங்கே ஒரு முக்கியமான விஷயம் சொல்லவேண்டி இருக்கிறது. கர்நாடக அரசும், குஜராத் அரசும்

கைலைப் பயணம் மேற்கொள்கிற யாத்திரீகர்களுக்கு அவர்கள் எந்த வழியில் போனாலும் சரி,

இந்திய வழியானாலும் சரி, நேபாள வழியானாலும் சரி பண உதவி செய்கிறது. கர்நாடக அரசு நபர்

ஒருத்தருக்கு ரூ.25,000/-ம் கொடுக்கிறது. குஜராத் அரசு ரூ.50,000/- கொடுக்கிறது. இது எந்த அரசு

வந்தாலும், மாறினாலும் தொடர்ந்து கொடுத்து வருகிறது. அதனாலே எங்கள் குழுவிலே

கர்நாடகாவில் இருந்தும் சரி, குஜராத்தில் இருந்தும் சரி நிறையப் பேரைப் பார்க்க முடிந்தது.

பாண்டிச்சேரி முதல் மந்திரி தன் சார்பின் நிதி உதவி செய்து ஒருத்தரை அனுப்பி வைத்திருந்தார்.

ஆனால் யாத்திரீகர்களை வடிகட்டி அனுப்பும் இந்திய அரசு எந்த நிதி உதவியும் செய்வதில்லை.

என்ன ஒரு வசதி என்றால் கூடவே நல்ல தரமான வண்டிகளுடன் சமையல்காரர், மருத்துவர்,

மருத்துவ வசதியுடன் கூடிய உபகரணங்கள் என்று பாதுகாப்பான பயணத்திற்கு உத்திரவாதம் உண்டு.

செலவுகளை நாம் பங்கிட்டுக் கொண்டாலும் பாதுகாப்புக் கிடைக்கிறதே, அதுவே பெரிசு இல்லையா?