எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, May 29, 2012

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! எல்லாம் வல்ல சித்தர்!


பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தின் கல்யானைக்குக் கரும்பு அருந்துவித்த படலத்தில் இருந்து சில பாடல்களைக் கீழே காணலாம்:

ஈண்டு உள்ளவர்க்கு எம் விளை யாடலைக் காட்டி இச்சை
வேண்டும் பலசித்தியும் நல்குவம் வேதம் ஆதி
மாண்டு அங்கு எண் எண் கலை ஞானமும் வல்லம் அல்லால்
சேண் தங்கு எல்லாப் பொருளும் வல்ல சித்தரேம் யாம்.

உன்னால் நமக்குப் பெறல் வேண்டுவது ஒன்றும் இல்லை
தென்னா என உள் நகை செய்தனர் சித்தயோகர்
மன்னா இவர் தம் இறுமாப்பும் செருக்கும் வீறும்
என்னால் அளவிட்டு அறிவேன் என எண்ணித் தேர்வான்.
வல்லாரில் வல்லேம் என உம்மை மதித்த நீர் இக்
கல் ஆனைக்கு இந்த கரும்பை அருத்தின் எல்லாம்
வல்லாரும் நீரே மதுரைப் பெருமானும் நீரே
அல்லால் எவர் நும் மனம் வேட்டது அளிப்பன் என்றான்.


மன்னன் சித்தரைக் காண வருவதை அறிந்த குடிமக்களும் அங்கே கூடி இருந்தனர். அவர்களில் ஒரு குடியானவன் கையில் கரும்புக் கட்டை வைத்திருந்தான்.  சித்தர் அந்தக் கட்டுக் கரும்பையும் அப்படியே அவனிடமிருந்து வாங்கினார்.  அருகே இருந்த கல் யானையிடம் நீட்டினார். தம் கடைக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தார்.  அவ்வளவே!  என்ன ஆச்சரியம்?
செல்லா உலகத்தினும் சென்று ஒரு விஞ்ஞை கற்றோர்
பல்லாரும் நன்கு மதிக்கப் பயன் எய்துவார்கள்
எல்லாம் அறிந்த எமக்கு ஒன்றிலும் ஆசை இல்லை
கல் ஆனை கன்னல் கறிக்கின்றது காண்டி என்றார்.
1371
கடைக்கண் சிறிதே குறித்தார் முன் கடாக் கல் யானை
மடைக் கண் திறந்து மதம் மூன்றும் வழிய விண் வாய்
அடைக்கும் படிவாய் திறந்து ஆர்த்துப் புழைக்கை நீட்டித்
தொடைக் குன்று அனான் கைச் சுவைத் தண்டைப்  பறித்தது அன்றே.
1372
பறித்துக் கடைவாய் வழிசாறு அளி பாய்ந்து நக்கக்
கறித்துக் குதட்டிப் பருகிக் கரம் ஊசல் ஆட
நெறித்துத் தருக்கி நிழல் சீறி நிமிர்ந்து நிற்ப
மறித்துக் கடைக்கண் குறித்தார் பினும் மாயம் வல்லார்.
1373
மட்டு உற்ற தாரான் கழுத்தில் கண்ட மாலை தன்னை
எட்டிப் பறித்த இகல் காஞ்சுகி மாக்கள் சீறிக்
கிட்டிக் களிற்றைப் புடைப்பான் கிளர் கோல் கொண்டு ஓச்சச்
சிட்டத்தவர் கண் சிவந்து ஆனையைச் சீறி நோக்க.

கல்யானை கரும்புகளை வாங்கி கொண்டு அதன் சாறு வாயிலிருந்து ஒழுகும் வண்ணம் கடித்துத் தின்ன ஆரம்பித்தது.  அனைவரும் அதிர்ந்து நிற்க, சித்தரோ மீண்டும் கடைக்கண் பார்வையைச் செலுத்த வந்தது வினை மன்னனின் அரிய முத்துமாலைக்கு.  முத்துமாலையைப் பிடுங்கித் தன் வாய்க்குள் போட்டுக் கொண்டது கல்யானை.  மன்னன் சினத்தோடு சித்தரையும் யானையையும் அடிப்பதற்காகத் தன் வீரர்களை ஏவ அவர்களும் அடிக்கப் போனார்கள்.  சித்தரோ சிறிதும் கலங்காமல், “நில்லுங்கள் அங்கேயே!” என்றார். ஓங்கிய கைகள் ஓங்கிய வண்ணம் அப்படியே சிலையைப் போல் நின்றனர் வீரர்கள்.  மன்னன் கலங்கிப் போய் சித்தரின் கால்களில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்க, மன்னனை மன்னித்தார் சித்தர்.  அவனுக்குக் குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு குழந்தை பாக்கியமும் அளித்தார். பின்னர் கல்யானையிடம் கேட்டு மன்னனின் முத்து மாலையை வாங்கிக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட மன்னன் கழுத்தில் அணிந்து கொண்டு திரும்பிப் பார்க்க,சித்தரையும் காணோம், யானையும் மீண்டும் கல்லாகி நின்றது.  சித்தராக வந்தது சாக்ஷாத் ஈசனே என்பதை உணர்ந்தான் மன்னன். சித்தரின் அருள் மூலம் பிறந்த குழந்தைக்கு விக்ரமன் எனப் பெயர் வைத்து அருமையும், பெருமையுமாய் வளர்த்து விக்ரம பாண்டியன் என்ற பெயரோடு முடி சூட்டினான்.

மதுரைக் கோயிலில் ஈசனின் சந்நிதிக்கு வடமேற்கு மூலையில் எல்லாம் வல்ல சித்தர் சந்நிதி உள்ளது.  அருகேயே துர்க்கையும் இருப்பாள்.  சித்தரைச் சுற்றினாலோ, சித்தருக்குப் பிரார்த்தனைகள் செய்து கொண்டாலோ நினைத்த காரியம் சித்தியடையும் என்பார்கள்.  சித்தருக்குப் பஞ்சலோக விக்ரஹமும் உள்ளது.  அது மஹா மண்டபத்தில் வைக்கப் பட்டிருக்கும்.  ஒவ்வொரு தைப் பொங்கலன்றும் கல் யானைக்குக் கரும்பு தந்த படலம் திருவிளையாடல் ஐதீகவிழாவாய்க் கொண்டாடப் படும்.

Saturday, May 26, 2012

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! எல்லாம் வல்ல சித்தர்


அடுத்தவராய் நாம் காணப் போவது சித்தர்களில் முதல்வரான ஈசனே சித்தனாக வந்து திருவிளையாடல் புரிந்த கதை.  இது திருவிளையாடல் புராணத்திலும் வரும்.  அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும்.  எனினும் சுருக்கமாய் இங்கே பார்ப்போம்.  மதுரையை அப்போது அபிஷேஹ பாண்டியன் ஆண்டு வந்த காலம். ஒரு நாள் மதுரையின் வீதிகளில் நீண்ட சடாமுடியோடும், நெற்றியில் திருநீறும், நட்ட நடுவே குங்குமத் திலகமும், காதில் குண்டலங்களை அணிந்து கொண்டு, கழுத்தில் ஸ்படிக மாலையையும், மார்பில் பூணூலையும் தரித்துக் கொண்டு, புலித்தோலால் ஆன ஆடையை அணிந்த வண்ணம் யோகப் பட்டயத்தைக் கையில் ஏந்திய வண்ணம் வலத் தோளில் விபூதிப் பையையும் மாட்டிய வண்ணம் பொற்பிரமைக் கையில் எடுத்துக்கொண்டு ஒருவர் நடமாடினார்.  குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டினார்.  ஒரு நிமிடம் தெருவில் நிற்பார்.  அடுத்த நிமிடம் அங்கிருந்து மறைந்து தெருக்கோடியிலோ அல்லது கோபுர வாயிலிலோ காணப்படுவார்.  சில சமயம் அந்தரத்திலும் காணப்படுவார்.  சில சமயம் பூமிக்குக் கீழே இருக்கிறாரோ என்னும்படி காண்பார்.  அவரை மதுரையின் எல்லா வீதிகளிலும் ஒரே சமயத்தில் காண முடிந்தது.  இதோ இங்கே பார்த்தேன் என்பார்கள்.  பார்த்தால் அங்கேயும் இருப்பார்; இங்கேயும் இருப்பார்; எங்கேயும் இருப்பார்.

குழந்தை அழுதால் தூரே தெரியும் மலையை அருகே வரவழைப்பார். அருகிலுள்ள பொருளை தூரத்தே கொண்டுபோனார்.  குழந்தைகள் திடீரென வயது முதிர்ந்தவர்களாக, முதிர்ந்தவர்களோ குழந்தைகளானார்கள்.  மலடிக்குக் குழந்தை பிறக்கச் செய்தார். சிலர் வீட்டில் வலியப் போய் உலோகங்களைப் பொன்னாக்கிக் காட்டினார். பட்டப் பகலில் திடீரெனச் சூரியன் மறைந்து சந்திரன் தோன்றினான்.  இவ்விதம் திருவிளையாடல்களைப் புரிந்த வண்ணம் மதுரையின் தெருக்களில் அலைந்து திரிந்த மனிதரைப் பற்றிய தகவல் அபிஷேஹ பாண்டியனின் செவிகளில் போய் விழுந்தது.  அவரை அழைத்து வரச் சொல்லிக் காவலரை அனுப்ப, சித்தரின் திருவிளையாடல்களில் தாங்கள் வந்த காரியத்தையே மறந்து போய் நின்றனர் காவலாளிகள்.  மன்னன் பார்த்தான்.  அமைச்சர்களை அனுப்ப, அவர்களும் சித்தரைக் கண்டு வணங்கி மன்னனின் சபைக்கு எழுந்தருளுமாறு வேண்டினார்கள்.  சித்தரோ மன்னனால் தனக்கு ஆக வேண்டியது ஏதும் இல்லை எனக் கூறி அவைக்குச் செல்ல மறுத்தார்.  அமைச்சர்கள் தயங்கிய வண்ணம் மன்னனிடம் சென்று இதைக் கூற மன்னன் ஒரு கணம் யோசித்தான்.

வந்திருப்பவர் சாமானியரன்று என்ற உண்மை அவனுக்குப் புரிந்தது.  தானே நேரில் செல்ல எண்ணித் தன் பரிவாரங்களோடு கோயிலுக்கு வந்தான்.  சித்தருக்கு மன்னன் வரப் போகும் செய்தி தெரியாமலா இருக்கும்.  கோயிலில் சென்று சொக்கேசரின் கருவறைக்கு வடமேற்கு மூலையில் போய் அமர்ந்தார்.  அன்றைய தினம் பொங்கல் திருநாளாகவும் அமைந்திருந்தது.

கோயிலில் சித்தரை எங்கும் காணாமல் மன்னன் பிரகாரத்தை வலம் வந்தான்.  அப்போது வழியில் சித்தர் அமர்ந்திருப்பதைக் கண்டனர் மன்னனின் பரிவாரங்கள்.  மன்னர் வருவதால் வழியில் அமரக் கூடாது எனக் கூறி அவரை நகரச் சொல்ல அவரோ நகர மறுத்தார்.  அபிஷேஹ பாண்டியன் இவர் தாம் அந்தப் பெரியாராக இருத்தல் வேண்டும் எனப் புரிந்து கொண்டு, “தாங்கள் யார்?” என அவரை விசாரித்தான்.  அவரும் தம் நகர் காசியம்பதி என்றாலும் எல்லா ஊரும் அவர் ஊரே என்றும் எல்லா ஊரிலும் அவர் இருப்பதாயும் கூறிவிட்டுப் பற்றுதல்களே இல்லாத சிவனடியார்களே தமது சுற்றம் என்றும் கூறினார்.  தாம் சித்துகள் செய்வதில் “எல்லாம் வல்ல சித்தன்” எனவும் பெருமையோடு கூறிக் கொண்டார்.  மன்னனால் தமக்கு எந்தக் காரியமும் ஆகவேண்டியதில்லை எனவும் கூறினார்.  மன்னனுக்கு மனதில் அச்சமும், மரியாதையும் ஒருங்கே தோன்றியது.

எனினும் அவரைச் சோதிக்க எண்ணி அங்கே இருந்தவர்களில் ஒருவனின் கையில் இருந்த கரும்பை வாங்கிக்கொண்டு சித்தரை நெருங்கி அவரிடம் கொடுத்து, அங்கே இருந்த கல்யானையை அந்தக் கரும்பைச் சுவைத்துக் கடித்துச் சாப்பிட வைக்க வேண்டும் என்று கூறினான்.  அப்போது தான் அவரைத் தாம் சித்தராகவும், மதுரையம்பதியை ஆளும் சொக்கநாதராகவும் ஏற்க முடியும் என்றும் கூறினான்.  சித்தர் கலகலவெனச் சிரித்தார்.