எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, March 27, 2022

அரங்கன் எங்கே?சீராமதாசரின் கவலை! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 பழசெல்லாம் நினைவுக்கு வந்ததும் சிங்கழகர் மனதிலே துக்கம் பொங்கியது. கண்களில் இருந்து பிரவாகம் எடுத்தது.  மனமே நைந்து விட்டாற்போல் இருந்தது. எதிரே அமர்ந்து கொண்டு அவருடைய முக மாற்றங்களைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கும் அவர் உள் மனதில் ஓடும் எண்ணங்கள் புரிய வரவே இருவரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். அரங்கனைக் காப்பாற்ற எத்தனை எத்தனை போராட்டங்கள்! எவ்வளவு பேரின் உயிரிழப்பு! அரங்கா! இது உனக்கே நியாயமாய் இருக்கா? என்றெல்லாம் மனதிற்குள் நினைத்துக் கொண்டு அடுத்துச் சிங்கழகர் பேச்சைத் தொடருவதற்காகக் காத்திருந்தனர்.  சின்னஞ்சிறு பெண்ணான மஞ்சரிக்கும் இவை எல்லாம் நடந்திருக்கிறது என்பதே நம்ப முடியாமல் இருந்தது. ஆச்சரியத்தினாலும் அச்சத்தினாலும் விரிந்த கண்களோடு சிங்கழகர் முகத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.  சிங்கழகர் கொஞ்சம் நீரைக் குடித்துத் தன்னுள் எரிந்து கொண்டிருந்த ஆக்ரோஷத்தைத் தணித்துக் கொண்டார்.  கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். 

"அரங்கன் என்ன ஆனான் என்பது தானே வேண்டும்? இதோ!" என ஆரம்பித்தார். தான் கண்டு கேட்டு உணர்ந்தவற்றை அவர் விவரிக்கலானார்.

அஞ்சனாத்ரி மலையின் அடிவாரத்தில் அரங்கனோடு சறுக்கி இறங்கிய திருக்குருகூர் தாசரும் அவர் மைத்துனரான வில்லிபுத்தூர் தாசரும் உயிர் இழந்ததைக் கண்ட சீராம தாசருக்கு மனம் கலங்கியது. அடுத்து என்ன செய்வது என்பதே புரியவில்லை. அப்படியே பாறை மீது படுத்துக் கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தார். திடீரென அவருக்கு அரங்கன் என்ன ஆனான் என்னும் எண்ணம் தோன்றவே திடுக்கிட்டு எழுந்தார். சுற்றும் , முற்றும் பார்த்தார். சங்குப் புஷ்பங்கள் பூத்துக்குலுங்கிக் கொண்டிருந்த அந்தப் புதர்க்காட்டில் உற்றுப் பார்த்த போது ஏதோ காட்டுக்கொடிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருப்பதைக் கண்டார். சட்டென அவர் மனதில் இது திருக்குருகூர் தாசர் அரங்கனைப் பிணைத்துக் கொண்டு கீழே இறங்குவதற்காகத் தாம் கட்டிய காட்டுக் கொடிக் கயிறல்லவோ?  எனக் கூர்ந்து பார்த்தார். அந்தக் கொடிகள் கன்னாபின்னாவெனச் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அங்கே ஓடோடிச் சென்றார்.

ஓடிச் சென்றவர் கொடிகளின் சிக்கலைப் பிரிக்கமுடியாமல் அவரும் சேர்ந்து சிக்கிக் கொண்டுவிட்டார். திகைத்துப் போனார் சீராமதாசர்.  இதென்னடா புதுக்குழப்பம்? காட்டுக்கொடிகளைப் பிணைத்து மிருகங்களைப் பிடிப்பார்கள். அது போல் இப்போது இந்தக் கொடி என்னைப் பிணைத்துவிட்டதே! இதை எப்படிப் பிரிப்பது என்று யோசித்தார். வேறு வழியில்லாமல் பாதுகாப்புக்காகத் தம் இடுப்பில் செருகி இருந்த கத்தியை எடுத்துக் கொடிகளை அறுத்து விட்டு உள்ளே சென்றார். அந்தக் கொடிகள் போகப் போகப் போய்க் கொண்டே இருந்தனவே அல்லாமல் முடிவே தெரியவில்லை. அரங்க விக்ரஹம் அந்தக் கொடியில் தான் பிணைக்கப்பட்டு திருக்குருகூர் தாசரோடு சேர்த்துக் கட்டி இருந்தது. இப்போதோ அரங்க விக்ரஹம் இருக்குமிடமே தெரியவில்லையே! இது என்ன கலக்கம்? என எண்ணிக் கொண்டு மனதில் பெருகிய துக்கத்துடன் அப்படியே கீழே அமர்ந்து விட்டார். 

"அரங்கா! இது என்ன சோதனை அப்பா! நீ இருக்கும் இடத்தை இப்போதே எனக்குக் காட்டிவிடு! இனி பொறுக்க இயலாது!: என்ற வண்ணம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விட்டார். சிறிது நேரத்தில் கண்களைத் திறந்தவருக்கு சூரியன் அந்தி வானில் சாய ஆரம்பித்துவிட்டான் என்பது அங்கே விழுந்திருக்கும் சூரிய கிரணங்களின் புதிய கோணத்தில் தெரிய வர அந்தக்கிரணங்களின் வீச்சு சங்கு மலர்ப் புஷ்பங்களின் செடிக்கூட்டத்தின் இன்னொரு பகுதியிலே அந்தக் கிரணம் பட்டுப் பளீரென ஒளி வீசிற்று. துள்ளி எழுந்த சீராம தாசர் அந்தப் புதர்களை எல்லாம் வெட்டி விலக்கிக் கொண்டு ஒளி தெரிந்த அந்த இடத்திற்கு முன்னேறிச் சென்றார். அங்கே  அரங்கனுக்கு என்றே ஏற்படுத்தி இருந்தாற்போல் பசுந்தழைகளாலும் ,கொடிகளாலும், மலர்களாலும் பின்னி இருந்த ஓர் படுகையில் எந்தவிதமான சேதாரமும் இன்றி யாரோ படுக்க வைக்கப்பட்டது போல் மல்லாந்து கிடந்தான் அரங்கன்.  தாய் தேடுகையில் வந்து ஒளிந்து கொண்ட குழந்தை போல் காணப்பட்டான் அவன்.

சீராமதாசருக்குப் புல்லரித்தது. "என் குட்டா! என் குட்டா!" என்று புலம்பிய வண்ணம் ஓடோடியும் வந்து அரங்க விக்ரஹத்தின் அருகே அமர்ந்தார். அரங்கனை எடுத்துத் தம் மடி மேல் ஓர் குழந்தையைப்போட்டுக் கொள்வது போல் போட்டுக் கொண்டார். அரங்கனைப் பார்த்து, "உமக்கென்ன! எந்தக் கவலையும் இல்லை. நல்லவேளையாக ஒரு குறையும் இல்லை/ ஆனால் எங்களைக் குறை உள்ளவன் ஆக்கிவிட்டீரே!" எனப் புலம்பிய வண்ணம் அரங்கனைத் தடவிக் கொடுத்தபடி பிரமை பிடித்தவர் போல் உட்கார்ந்திருந்தார்.

No comments: