எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, December 20, 2007

சிதம்பர ரகசியம் - ஒரு இடைவேளை!

சிதம்பரம் செல்ல இருந்ததால், தீட்சிதர்களிடமும், கோவிலிலும் சிலவற்றைக் கேட்டுத் தெளிந்து கொள்வதற்காய்ப் பதிவுகள் இடாமல் இருந்தேன். ஆனால் என்னோட உடல்நிலை காரணமாய் என்னால் சிதம்பரம் இன்று வரை செல்ல முடியவில்லை. எப்போது என்றும் நிச்சயம் ஆகவில்லை. ஆகவே மற்றவற்றைத் தொடர்ந்து எழுதிவிட்டு, இந்தத் தொடரை முடித்துவிட்டுப் பின்னர், நான் சிதம்பரம் போகும்போது கேட்டறியும் விஷயங்களை ஒரு தனிப்பதிவாய்ப் போட்டுச் சேர்க்கிறேன். பலரும் சொல்லும், திரும்பத் திரும்பச் சொல்லும் ஒரு விஷயம், சிதம்பரம் கோயிலில் தமிழ்த் தேவாரத் திருவாசகங்கள் பாடப் படவில்லை என. அவர்கள் தெரியாமல் சொல்லுகின்றார்கள் என்பதை நான் உறுதியாய்ச் சொல்லுவேன், பல வருஷங்களாய்ச் சிதம்பரம் கோயிலுக்குச் சென்று வருவதாலும், பல காலங்களிலும், கால பூஜை பார்த்திருப்பதாலும் எந்த, எந்தச் சமயங்களில் திருமுறை ஓதுகின்றார்கள் என்பது நன்றாகவே தெரியும். கடைசியாய்ப் போன வருஷம் தெற்குக் கோபுரம் கும்பாபிஷேஹத்துக்கு முதல்நாள் போனபோது, யாகம் நடக்க இருந்தது. அதற்கு முன்னால், ஓதுவார்கள் "திருமுறை" ஓதிய பின்னரே யாகம் ஆரம்பிக்கப் பட்டது. யாகம் நடக்கும் இடம் கருதியும், அதைப் புகைப்படம் எடுக்க முடியாது என்பதாலும் படங்கள் எடுக்க முடியவில்லை. மேலும் எங்களிடம் டிஜிட்டல் காமிராவும் கிடையாது. ஓதுவாரைத் தனியே கூப்பிட்டுப் படம் எடுத்துப் பேச வைத்து இணைப்பது என்றாலும். தீட்சிதர்களின் தனிப்பட்ட அவர்கள் வாழ்வைப் பற்றி நான் இங்கே எழுதவில்லை என்பதால் மற்றவற்றைத் தவிர்த்துக் கோயில் வழிபாட்டில், திருமுறை கட்டாயம் ஓதுகின்றார்கள் என்பதை மீண்டும் உறுதி கூறுகின்றேன்.
*************************************************************************************

மேலும் அனைவரும் கூறும் இன்னொரு விஷயம் சிதம்பரம் கோயிலின் வைதீக முறை பூஜை பற்றி. அது என்னமோ நடுவில் வந்ததாய்ச் சிலர் கூறுகின்றனர். சைவ ஆகம முறைப்படிதான் முன்னர் இருந்ததாயும், பின்னர் வந்த தீட்சிதர்கள் அதை மாற்றிவிட்டதாயும் சொல்கின்றனர். ஒருவேளை அவர்கள் சொல்வது சைவ ஆகமங்கள் கிரந்தத்தில் இருந்ததால் இருக்கலாம் என நினைக்கின்றேன். ஆனால் ஆகமமும், வேதத்தின் ஒரு பகுதியே எனவும், ஆகமத்தை ஐந்தாவது வேதம் எனச் சொல்லுவார்கள் எனவும், ஒருமுறை படிச்சேன். சில புத்தகங்கள் கிடைக்கவில்லை. முக்கியமாய் தருமபுர ஆதீனத்தில் போட்டிருக்கும் புத்தகம் கிடைக்கவேண்டும். சிலவற்றைக் கூகிளாண்டவர் மூலம் தேடி எடுத்துவிட்டேன். முக்கியமாய் ஆகமத்துக்கும், வைதீக முறைக்கும் உள்ள வித்தியாசம். ஆகமத்திலும் வடமொழி உண்டு. தென்னாட்டில் தான் ஆகமமுறைப் பூஜை என்பதால் அது தமிழ் மொழியில் இருந்தது எனச் சிலர் கூறுகின்றார்கள். அது பற்றியும் தகவல் திரட்டுகிறேன். திரு ஜீவா வெங்கட்ராமன் கொடுத்த சுட்டி "தென்றல்" புத்தகங்கள், எனக்குக் கிடைத்த அனைத்தையும் தேடிப் பார்த்தும் தீட்சிதர்கள் பற்றிய தகவல் அதில் எனக்குக் கிடைக்கவில்லை.

The worship services that follow at about 9:30, and then at noon, and at 5 in the evening and at 7 pm involve a combination of rituals involving ablutions to the Crystal Lingam and the ceremonial show of lamps to Nataraja and Sivakami amidst the chanting of Vedic and Tamil hymns. The Shiva Agama system of temple rituals followed in almost all of the Saivite temples in Tamilnadu, is not followed at Chidambaram. It is a unique worship protocol said to have been prescribed by Patanjali that is followed at this temple.

www.indiantemples.com/Tamilnadu/chidchid.html

மேலே குறிப்பிட்டிருக்கும் லிங்கில் போய்ப் பார்த்தால், தமிழிலும் திருமுறைகள் சொல்லுவதும், வைதீக முறைப்படிப் பூஜை செய்யப்படுவது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறதைப் பார்க்கலாம். மற்றவை நன்கு படித்துப் பார்த்துப் புரிந்து கொண்டு, உள்வாங்கிக் கொண்டு வருகிறேன். தாமதத்துக்கு மன்னிக்க வேண்டுகிறேன். அதிகம் யாரும் படிக்கிறதில்லை என்றாலும், படிக்கிற ஒருத்தர், இரண்டு பேருக்காவது தாமதத்துக்குக் காரணம் தெரியணும் இல்லையா? ஒருவேளை கூகிளிலேயே சிதம்பரம் பற்றிய அனைத்துத் தகவல்களும் கிடைப்பதால் யாருக்கும் அவ்வளவாய் இதில் ஆர்வம் இல்லையோ என்னமோ?

6 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

என்னுடைய பின்னூட்டங்களை விவரங்கள் சேகரிப்பதற்காகவே நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
ஆயினும்,உறுதிபட நான் சொல்லும் விதயம் பொன்னம்பல சபை எனும் மேடை இருக்கும் சன்னிதி வட்டாரத்தில் திருமுறைகள் பாடப்படுவதை தீட்சிதர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்(என்ன காரணம் என்பதுதான் புரியவில்லை???????)
திருமுறைகள் வெளிப்பட்டுவிடக் கூடாது எனக் கருதிய ஒரு கூட்டத்தவர்களின் ஆதார செயல்பாட்டு இடமாக ஒரு காலத்தில் சிதம்பரம் கோவில் இருந்திருக்கிறது என்பதும் ஆதாரபூர்வமான உண்மை.
எனினும் உண்மைகளைத் தேடி முன்வைக்க விழையும் எண்ணத்தை நான் வரவேற்கிறேன்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

//
சைவ ஆகம முறைப்படிதான் முன்னர் இருந்ததாயும், பின்னர் வந்த தீட்சிதர்கள் அதை மாற்றிவிட்டதாயும் சொல்கின்றனர். ஒருவேளை அவர்கள் சொல்வது சைவ ஆகமங்கள் கிரந்தத்தில் இருந்ததால் இருக்கலாம் என நினைக்கின்றேன். ஆனால் ஆகமமும், வேதத்தின் ஒரு பகுதியே எனவும், ஆகமத்தை ஐந்தாவது வேதம் எனச் சொல்லுவார்கள் எனவும், ஒருமுறை படிச்சேன்.
//
சைவ ஆகமங்கள் கிரந்தத்தில்-நீங்கள் வடமொழியைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன் - ஒரு நாளும் இல்லை;அவை தீந்தமிழ் மொழியிலேயே ஆதிமுதல் இருக்கின்றன;வேதங்கள் எனச் சொல்லப்படுகின்ற ரிக்,யஜுர்,சாம,அதர்வணம் தவிர ஏனைய கிரந்த,வேத,ஆகமக் கருத்துக்கள் கடத்தப்பட்ட கருத்துக்கள்,எனவேதான் தமிழ் நூல்கள் மறைக்கப்பட்டதும்,நான்கு வேதங்களின் content'ம் இவ்வகை பிற்கால ஆகமங்களின் content'ம் முற்றிலும் வேறுவேறாக இருப்பதின் காரணங்கள்-என்பதுதான் செய்தி..

திவாண்ணா said...

கீதா அக்கா,
எனக்கு தெரிந்தவரை-
கிரந்தம் என்பது நூல். ஒலி வடிவிலேயே இருந்த மந்திரங்களை நூல் வடிவம் ஆக்க முயன்ற போது காலத்தின் கட்டாயமாக வந்ததே இந்த எழுத்துருக்கள். இது ஒரு மொழி அல்ல. எழுத்து வடிவம் மட்டுமே. ஆகமங்கள் எனக்கு தெரிந்தவரை சுலோகங்களை அதிகம் பயன்படுத்துகின்றன. கூட பீஜாட்சரங்களையும் முக்கியமாக. வேத மந்திரங்களும் உண்டு என்றாலும் முதன்மை சுலோகங்களே. வேத பிரதிஷ்டை உள்ள இடங்களில் வேத மந்திரங்களும் ஏனைய பிரயோக நூல்களில் உள்ள மந்திரங்களுமே பயன்படும். சிதம்பரம் இரண்டுமே இல்லை என நினைக்கிறேன். அவர்கள் தனி பததி வைத்து உள்ளார்கள்.

குமரன் (Kumaran) said...

அம்மா. ஓதுவார்கள் திருமுறைகளைத் தில்லையில் ஓதுகிறார்கள் என்பதில் ஐயம் இருப்பதாகத் தெரியவில்லை. சிற்றம்பல மேடையில் திருமுறைகள் ஓதப்படுவதில்லை - யாராலும் - என்பது குற்றச்சாட்டு. 1. அது முழுக்க முழுக்க உண்மையில்லை. தீட்சிதர்கள் கால பூஜைகளில் சிற்றம்பல மேடையில் திருமுறைகளை ஓதுகிறார்கள். இது சொல்லப்பட்ட ஒரு செய்தி. 2. தீட்சிதர்கள் எதிர்ப்பதெல்லாம் மற்றவர்கள் சிற்றம்பல மேடையில் ஏறி திருமுறைகளையோ வேறு தோத்திரங்களையோ ஓதக்கூடாது என்பது தான். சிற்றம்பல மேடையின் கீழ் நின்று ஓதுங்கள் என்று சொல்கிறார்கள் என்பது அதனை ஒட்டிய செய்தி. இதனை சாதி வேறுபாடு என்று கூட சொல்ல இயலாது. பார்ப்பனர்களில் சாத்திரங்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர்களுக்கும் அந்த உரிமை மறுக்கப்படும் என்றே நினைக்கிறேன். இது தீட்சிதர்கள் தங்களுக்கு மட்டுமே இருக்கும் உரிமை என்று நினைக்கிறார்கள். ஆக இதில் மொழி வெறி என்று திரித்துச் சொல்வதற்கும் சாதி வெறி என்று சொல்வதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அவை தான் செய்யவும் சொல்லவும் படுகின்றன. நீங்கள் எத்தனை முறை திரும்பத் திரும்ப சொன்னாலும் திரித்துச் சொல்பவர்கள் ஏற்றுக் கொள்ளார்கள்.

வேத ஆகமங்களைப் பற்றி அதிகம் தெரியாது.

Baskaran said...

கடைசியில் மோட்சம் கிடைக்குமா..

Geetha Sambasivam said...

அவரவர் கர்மபலனுக்கு ஏற்ப மோட்சம் கிட்டும்/அல்லது கிட்டாது! :)