குளிர் தன்னால் பொறுக்க முடியாது என்று அந்தக் கூத்தன் சொன்னதைக் கேட்டுக் கொண்ட திருக்குறிப்புத் தொண்டர், நீர்த்துறைக்கு வந்து துணியைத் துவைக்கத் தொடங்கினார். ஆரம்பம் ஆயிற்று ஈசனின் திருவிளையாடல். வருணனுக்குக் கட்டளை இட, திடீரென சூரிய ஒளியால் பிரகாசமாய் இருந்த வானம் கார்மேகங்களால் மூடிக் கொண்டது. கும்மிருட்டு சூழ்ந்தது அந்தப் பகல் வேளையிலேயே. தொண்டரின் மனமும் இருள் சூழ்ந்து கலங்கியது. எவ்வாறு துவைப்பது? எங்கே காய வைப்பது??? கலங்கும் வேளையிலேயே திடீரெனக் காற்று, இடி, மின்னல், பெருமழை! பேய்க் காற்று என்பது இதுதானோ??? ஊழிப் பெரும் மழையோ?? அண்டசராசரமும் குலுங்கும் வண்ணம் இடி இடிக்க, மின்னல் கண்ணைப் பறித்தது. மழையோ நிற்கக் காணோமே?? என்ன செய்வது? கலங்கினார் தொண்டர்.
ஆஹா, தவறு செய்துவிட்டோமே?? ஏற்கெனவே உடல் இளைத்து, மெலிந்து இருந்தாரே சிவனடியார்? இருந்த ஒரே மேல் துணியையும் வாங்கிக் கொண்டு துவைத்துக் காய வைக்க முடியாமல் இப்படி மழை பெய்கின்றதே? மழை ஆரம்பிக்கும்போதே வீட்டுக்குச் சென்றிருந்தால் ஒருவேளை இந்தக் காற்றிலே ஓரளவாவது உலர்ந்திருக்குமோ?? தவறு செய்துவிட்டோமோ? அடியாருக்கு, சிவனடியாருக்குத் துரோகம் புரிந்த நம் உயிர் உடலில் தங்கலாமா? இதோ உயிரைப் போக்கிக் கொள்ளலாம். என்று எண்ணிய வண்ணம் துவைக்கும் கல்லிலே தன் தலையைத் தானே மோதிக் கொள்ளத் துவங்கினார்.

125. கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத் தலையைச்
சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசைத்
தந்தலையைப் புடைத்து எற்ற அப்பாறை தன் மருங்கு
வந்து எழுந்து பிடித்தது அணி வளைத் தழும்பர் மலர்ச் செங்கை 1202-4
126. வான் நிறைந்த புனல் மழை போய் மலர் மழையாய் இட மருங்கு
தேன் நிறைந்த மலர் இதழித் திருமுடியார் பொருவிடையின்
மேல் நிறைந்த துணைவி யொடும் வெளி நின்றார் மெய்த் தொண்டர்
தான் நிறைந்த அன்பு உருகக் கை தொழுது தனி நின்றார் 1203-4
127. முன் அவரை நேர் நோக்கி முக் கண்ணர் மூவுலகும்
நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம்
மன்னுலகு பிரியாது வைகுவாய் என அருளி
அந் நிலையே எழுந்து அருளி அணி ஏகாம்பரம் அணைந்தார் 1204-4

மேலும் இந்த வண்ணார் மடம் பற்றிய தகவல்களை மீண்டும் சிதம்பரம் செல்லும்போது அறிந்து வரவேண்டும்.
3 comments:
முழுக்கதையையும் சொன்னதற்கு நன்றி அம்மா.
/அந் நிலையே எழுந்து அருளி அணி ஏகாம்பரம் அணைந்தார் //
இது கச்சி ஏகாம்பரம் அல்லவா!
பதிகத்தின் கடைசி மூன்று பாடல்களையும் தந்து முத்தாய்ப்பாய் முடித்தமைக்கு நன்றிகள்.
வாங்க குமரன், நன்றி வந்ததுக்கு!
ஆமாம் ஜீவா, கச்சி ஏகாம்பரரே தான். திருக்குறிப்புத் தொண்டர் புராணம் கச்சியைச் சேர்ந்ததே, அவர் வாழ்ந்ததும் அங்கே தான், இறைவன் திருவிளையாடலும் அங்கே தான், வண்ணார் பற்றிய குறிப்புக்காக எடுத்துக் கொண்டேன். :)))))))))))))))))
சிதம்பரம் வண்ணார் மடம் பற்றி இன்னும் தகவல்கள் கிடைக்கவேண்டும்.
Post a Comment