
இந்த இரட்டைத் திருப்பதியில் அடுத்தடுத்து இரண்டு கோயில்கள் இருக்கின்றன. அதனால் இவை இரட்டைத் திருப்பதி என அழைக்கப் படுகிறது. ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 மைல் தொலைவிலே தாமிரபரணியின் வடகரையிலே இவை உள்ளன. முதல் திருப்பதியிலே பெருமாள் திவ்ய நாமம் ஸ்ரீநிவாசன் என்ற தேவர்பிரான் ஆகும். நின்ற திருக்கோலத்தில் கிழக்கே பார்த்துக் கொண்டு இருக்கிறார். தாயார் ஸ்ரீதேவிதிருமார்பிலும் இருபக்கமும் உபய நாச்சியார்களும் உள்ளனர்.
அடுத்த கோயிலில் செந்தாமரைக் கண்ணன், அரவிந்தலோசனன் என்ற திருநாமங்களால் அழைக்கப் படும் பெருமாள். குமுத விமானத்திலே தாயார் கருத்தடங்கண்ணியோடு எழுந்தருளி இருக்கிறார். நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்த ஊர். இந்தக் கோயிலின் தலபுராணம் கீழ்க்கண்டவாறு சொல்லப் படுகிறது.
திருப்புளியங்குடிக்குத் தென் கிழக்கே நெல் வயல்களும், பூந்தோட்டங்களும் நிறைந்த கோதார நிலையம் என்னும் திருப்பதி ஒன்று இருந்தது. அதுவே தொலைவில்லி மங்கலம் என அழைக்கப் பட்டது. ஆத்ரேயகோத்திரத்தைச் சேர்ந்த சுப்ரபர் என்னும் முனிவர், இங்கே ஊரின் அழகையும், பொலிவையும் கண்டு யாகம் செய்யத் தகுந்த இடம் எனத் தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். யாகசாலை அமைக்கப் பூமியை உழுது சமன்படுத்தியபோது அங்கே ஒரு வில்லும், தராசும் கிடைக்கப் பெற்றார்.
இது யாருடையவை என எண்ணி எப்படி இங்கே வந்தது என்றும் யோசித்துக் கொண்டே அவற்றை எடுத்தார். தராசு ஒரு பெண்ணாகவும், வில் ஓர் ஆண்மகனாகவும் மாறிக் கணவன், மனைவியாகத் தோற்றம் தர, சுப்ரபரும் மற்றவரும் வியந்து, இது என்ன விந்தை என அந்தத் தம்பதிகளைக் கேட்டனர். தம்பதிகளில் கணவன் சொன்னான்:” முன்பிறவியில் வித்யாதரன் என்னும் தேவனாக இருந்த அவன் தன் மனைவியான இந்தப் பெண்ணுடன் மோகம் கொண்டு உடலில் ஆடையில்லாமல் இருந்த கோலத்தில் யாத்திரை சென்று கொண்டிருந்த குபேரன் கண்ணில் பட அவனும் இவ்விதம் பொதுஇடத்தில் அநாகரீகமாய் நடந்து கொண்டதற்கு அவர்களை வில்லாகவும், தராசாகவும் மாறும்படி சாபம் கொடுத்துவிட்டான். சாபவிமோசனம் கிடைக்காதா என எண்ணி ஏங்கிய அவர்களுக்கு, சுப்ரபாதர் என்னும் முனிவர் யாகசாலை அமைக்க நிலத்தை உழும்போது உங்களுக்குச் சுயவுருக் கிட்டும் என்று சொன்னதாகவும், இப்போது சுயவுருக்கிட்டியதால் அவரைப் பணிந்து ஏத்துவதாகவும் சொன்னார்கள். முனிவர்களும் அவர்களை அனுப்பிவிட்டு விஷ்ணுவை ஆராதித்துப் பணிந்து தேவர்பிரான் என்ற பெயரோடு அங்கே எழுந்தருளச் செய்தனர். வில்லுக்கும், தராசுக்கும் முக்தி கொடுத்த இடமாகையால் அந்தப் பெயரிலேயே இது தொலைவில்லி மங்கலம் என அழைக்கப் படவேண்டும் என்றும் பிரார்த்தித்தனர்.
சுப்ரபர் தினமும் அந்தக் கோயிலுக்கு வடக்கே உள்ள பொய்கைக்குச் சென்று அங்கே தாமரைப் பூக்களைப் பறித்து மாலை தொடுத்து பெருமானை அணியச் செய்து வந்தார். மாலையின் அழகைக் கண்டு உவந்த பெருமான் எங்கே இருந்து இத்தனை அழகான மலர்கள் கிடைக்கின்றன என்று கண்டறிய முனிவரோடு அங்கே வர, பொய்கையின் அழகையும், மலர்களின் வண்ணவிசித்திரங்களையும் கண்டு மனம் மகிழ்ந்து, தான் யாகசாலையில் தேவர்பிரானாகவும், இந்தப்பொய்கைக் கரையில் அரவிந்தலோசனனாகவும் இருக்கப் போவதாய்ச் சொல்கின்றார். தினந்தோறும் முதலில் தேவர்பிரானுக்கு இந்தத் தடாகக் கரையின் பூக்களால் வழிபாடுகள் நடத்திவிட்டு பின்னர் இந்த அரவிந்தலோசனனையும் தாமரை மலர்களால் அர்ச்சிக்கவேண்டும் என்றும் அருளிச் செய்தார்.
அச்வினி தேவர்கள் வைத்தியத்தில் தேர்ந்தவர்கள். அவர்களுக்குத் தேவர்களுக்குக் கிடைப்பதுபோல் யாகங்களிலும் யக்ஞங்களிலும் அவிர்பாகம் கிடைக்கவில்லை. ஆகவே பிரம்மாவிடம் சென்று தங்களுக்கும் அவிர்பாகம் கொடுக்கவேண்டுகின்றனர். பிரமன் அவர்களை தேவர்பிரானையும், அரவிந்தலோசனனையும் வணங்கித் தவம் இயற்றி வரம் வாங்கி வருமாறு கூறுகின்றான். அச்வினி தேவர்கள் அவ்விதமே தொலைவில்லிமங்கலம் பொய்கையில் நீராடி தேவர்பிரானையும், அரவிந்த லோசனனையும் வழிபாடுகள் செய்து தவம் இயற்றினார்கள். இறைவனும் அவர்கள் தவத்தை மெச்சி அவர்களுக்கும் அவிர்பாகம் கிடைக்குமாறு தேவர்களுக்குச் சொல்லிவிட்டு இந்தத் தீர்த்தமும் உங்கள் பெயரால் அச்வினி தீர்த்தம் என வழங்கப் படும் என்றும் அருளிச் செய்தார். இந்த அச்வினி தீர்த்தத்தில் நீராடினால் சகலவியாதிகளும் தீர்ந்துவிடும் என்றும் சொல்லுகின்றனர். கங்கைக்கரையில் உள்ள ஓர் அந்தணரான சத்தியசீலரின் இரண்டாவது மகன் ஆன விபீதகன் குஷ்டத்தால் பீடிக்கப் பட்டிருக்க, நாரதமுனி அவன் முற்பிறவியில் தன் குருவின் பசுவைத் திருடியதால் குருவின் சாபத்தால் இந்நிலைமை அடைந்திருப்பதாயும் தென்னாட்டிற்கு வந்து அச்வினி தீர்த்தத்தில் நீராடினால் ரோகம் நீங்கும் என்று சொல்லுகின்றார். அது போல் விபீதகனும் தாமிரபரணியின் வடகரையில் உள்ள தொலைவில்லிமங்கலம் வந்து அச்வினி தீர்த்ததில் நீராடி ரோகம் நீங்கப் பெற்றான் என்றும் சொல்லுவார்கள். அடுத்து நம்ம டோண்டு சாரின் இஷ்ட தெய்வமும், வலைஉலகப் பெருமக்களின் குலதெய்வமும் ஆன தென் திருப்பேரை மகரநெடுங்குழைக்காதன். அப்பா, எவ்வளவு பெரிய காது? எவ்வளவு பெரிய குழை???
2 comments:
Intha sthalaththukku manavala maa muni mangalasasanam enru ninaikkiren. Nammazhwar 11 paasuraththula paadi irukkar.
தெரியலை ஜெயஸ்ரீ, உங்களுக்குத் தெரிஞ்சதைச் சுட்டி கொடுங்களேன். நன்றி தவறாமல் வந்து பின்னூட்டம் போடுவதற்கு.
Post a Comment