எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, September 01, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! நம்மாழ்வார் தொடர்ச்சி!

நம்மாழ்வாரும் , மதுரகவியாழ்வாரும்
நாம போன பதிவிலே பார்த்த திருக்கோளூரில் ஒரு அந்தண குலத்தில் பிறந்த ஒரு குழந்தை இளமை முதலே அருமையான கவி பாடும் ஆற்றலைப் பெற்றிருந்தது. அதனால் குழந்தை மதுரமான கவிகள் பாடுவதால் மதுரகவி எனப் பெயரும் பெற்றது. அந்தக் குழந்தை வளர்ந்து வேத, சாத்திரங்களை நன்கு பயின்று மேலும் பயிலவும் வடநாடு சென்றார். நாட்கள் செல்லச் செல்ல உலக வாழ்க்கையில் பற்று நீங்கியது. அயோத்தி, மதுரா போன்ற திவ்ய தேசங்களைத் தரிசித்தார். ஒருநாள் அவர் அயோத்தியில் தங்கி இருந்தார். மாலை மங்கி இரவுப் போதில் தங்கியிருந்த இடத்தைவிட்டு வெளியே வந்தபோது விண்ணில் ஒரு பேரொளியைக் கண்டார். அந்தப் பேரொளி தென் திசை முழுதும் வியாபித்திருந்ததையும் கண்டார். என்னவெனப் புரியாமல் அன்றைய இரவைக் கழித்தார். மறுநாள் இரவு மீண்டும் அதே மாதிரி அதிசயம். தென் திசை சுடர் விட்டுப் பிரகாசித்தது. அத்தோடு மட்டுமா? அந்த ஒளி அவரை அழைப்பது போலவும் தோன்றியது அவருக்கு.

தெற்கே ஏதோ ஓர் அதிசயம் நடந்துள்ளது என்பதையும், அந்த ஒளியைத் தான் பின்பற்றிச் செல்லவேண்டும் என்பதையும் மதுரகவியாழ்வார் உணர்ந்தார். தென் திசை நோக்கிப் பயணப் பட்டுத் திருக்குருகூர் வந்தடைந்தார். அங்கே ஓர் புளியமரத்தடியில் அந்தப் பேரொளி நிலை பெற்றிருப்பதைக் கண்டார். புளியமரத்தடியில் ஒரு பாலகன் மோன தவத்தில் இருந்ததையும் கண்டார். மோனத் தவத்தில் இருந்த சிறுவனை எழுப்ப முயன்றுவிட்டுப் பின்னர் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டு முதலில் சிறுவனின் சமாதியைக் கலைத்தார். பின்னர் அந்தச் சிறுவனிடம், “செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார். பிறந்ததில் இருந்து அதுவரையிலும் பேசாமல், அசையாமல் இருந்த அந்தச் சிறுவன் அப்போது, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்.” என்று பதில் சொன்னான். இந்தக் கேள்வியும், இதற்கான பதிலும் மேலோட்டமாய்ப் பார்க்க சாமானியமாயும், அர்த்தம் இல்லாமலும் தோன்றினாலும் இதன் உள் அர்த்தமானது மானுட வாழ்வின் தத்துவத்தையே உணரத்துவதாய்ப் பெரியோர் சொல்லுவார்கள்.

“ஜீவன் சூக்ஷ்மம் ஆனது. அது கண்ணுக்கே தெரியாத ஒன்று. அந்த ஜீவன் சூக்ஷ்மம் ஓர் மனித உடலில் புகுந்து பிறவி எடுக்கிறது. அப்படி சூக்ஷ்மம் ஆன ஜீவன் பிறவி எடுத்தால் அப்போது அந்தப் பிறவியின் வாழ்க்கை எப்படி அமையும்?” இதுவே மதுரகவி ஆழ்வாரின் கேள்வி. இதற்கு நம்மாழ்வார் கொடுத்த பதிலானது, "தன் பூர்வ ஜென்மத்தின் புண்ணிய, பாவங்களை, அவற்றின் பலாபலன்களை நுகர்வதே இந்த ஜென்மத்தின் வாழ்க்கையாய் இருக்கும்" என்பதே ஆகும். இவரின் இந்த நுண்ணிய அறிவையும், பிறக்கும்போதே சகல ஞானமும் அறிந்தே பிறந்திருப்பதையும் உணர்ந்து கொண்ட மதுரகவி ஆழ்வார் அக்கணமே அவரைத் தன் குருவாக வரித்துக் கொண்டார். மதுரகவி ஆழ்வார் இவரைப் போற்றியே பாடல்கள் புனைந்துள்ளார். அவை பதினொரு பாடல்களாக இருக்கின்றன. அவற்றுள் ஒன்று
"நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்,
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே;
தேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித்திரிவனே."

நம்மாழ்வாருக்குப் பிறக்கும்போது இட்ட பெயராக "மாறன்" என்று தெரிய வருகிறது. இதைத் தவிர பராங்குசன் என்ற பெயராலும் அழைக்கப் படுகின்றார். பக்தி என்ற அங்குசத்தைக் கொண்டு பெருமாளை வசப் படுத்தியதால் பராங்குசன் என்று சொல்லுவார்கள். மற்ற ஆழ்வார்கள் சரீரம் என்றால் அந்த சரீரத்தின் ஆன்மா நம்மாழ்வார் என்று சொல்லுவது வைணவ சம்பிரதாயத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. நம்மாழ்வார் எழுதிய பாடல்களை எல்லாம் "திருவாய்மொழி" என்னும் சிறப்புப் பெயராலும், "திராவிட வேதம்" என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப் படுகின்றது. இந்தப் பாடல்கள் நான்கு பகுதிகளாய்ப் பிரிக்கப் பட்டுள்ளது.
திருவாசிரியம் - யஜுர் வேதம்
திருவிருத்தம் - ரிக்வேதம்
பெரிய திருவந்தாதி- அதர்வ வேதம்
திருவாய்மொழி- சாமவேதம்
என்று சொல்லப் படுகின்றது. கிட்டத்தட்ட நாலரை ஆண்டுகள் நம்மாழ்வார் சொல்லச் சொல்ல பட்டோலையில் மதுரகவி ஆழ்வார் எழுதியதாகவும் சொல்லப் படுகிறது. ஆழ்வார்கள் அத்தனை பேரிலும் இவரை மட்டுமே "நம்" என்று சிறப்பித்து நம்மாழ்வார் எனவும் கொண்டாடப் படுகின்றார். பெரிய திருவந்தாதியில் இருந்து ஒரு பாடல்

பூவையும் காயவும் நீலமும் பூக்கின்ற
காவிமலர் என்றும் காண்தோறும்_பாவியேன்
மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று

காயாம்பூ, கரு நெய்தல், செங்கழுநீர் போன்ற பூக்களைப் பார்க்கும்போதெல்லாம் மனம் மகிழ்ந்து பூரித்து திருமாலின் வடிவங்களாய்த் தோன்றுவதாய்ப் பாடல் சொல்லுகின்றது.

3 comments:

Jayashree said...

Padikka romba nanna irukku Mrs Sambashivam. It brought back my childhood days in Peryakulam listening to the stories of azhwars read by my grandma and periya paati .Appovellam Baktha vijayam, Shankara krupa nu books varum. pAATTI mADHURA KAVI AZHWARODA "kANNI NUN SIRUTHAMBU " paaduva. Enkitta periya paati solva "Krishnanna avanoda ammaa kayithala katti potta mathiri namba manasa devotiongara mani mudi potta kayithala samiyodayum, aacharyarhal odayum katti vachchukkanum nu solva.Appadi than Nammazhwar samiyodayum, Madurakavi than guruvodayum panninanu solva. "nishtai" I think kayaru is symbolic (Devotion? is it?) What I understood from Madhrakavi azhwar's this paasuram is "Devotion to lord's devotee is so dear to lord himself as he is adiyarku adiyan.If I remember correctly in this Kanni nun thambu I thought he sees his guru as the very embodiment and personification of divine mercy and compassion. Unsullied love. Guru sishyan rendu perukkum illaiya?
Antha paasuram album link kidaikkuma.Kekkanum pola irukku. Thank you for this sevice.May GOD bless.

Geetha Sambasivam said...

வாங்க ஜெயஸ்ரீ, உங்களோட மலரும் நினைவுகள் நல்லா இருக்கு. பெரியகுளமா உங்களுக்கு?? சரிதான், பக்கத்திலெ மேல்மங்கலம் எங்க அப்பாவின் பூர்வீகம். மதுரையிலே தான் இருந்தது எல்லாம். உங்க பாட்டியும், பெரிய பாட்டியும் சொல்லி இருக்கிறாப்போலவே வேளுக்குடியும்,முக்கூராரும் சொல்லுவாங்க. கேட்டிருக்கேன், படிச்சிருக்கேன். ரொம்ப நன்றி பகிர்வுக்கு.

இந்தப் பாசுரங்கள் எல்லாம் மதுரைத் திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. இணையத்திலே இருந்து தான் எடுக்கிறேன். Madurai Project அப்படினு கூகிளில் தேடினால் வரும் சுட்டியில் போய்ப் பார்க்கலாம். வரலைனா சொல்லுங்க லிங்க் எடுத்து அனுப்பறேன். நன்றிங்க.

Jayashree said...

En maternal family muzhukka peryakulam , chozhavandhaan, melmangalam, mannadi mangalam than. Yellarum padichu practice pannaradhoda, nilachchuvandharkal. Innum en first second cousins ammavoda cousins lam melmangalaththula irukka.Varusham oruthadavai melmangalathu kaara, mannadimangalathu kara naanga ellarum kumbakkarai povome. Paththu35 varushathukkumela aauiduthu. I miss a lot.