எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, March 23, 2011

அங்காளம்மனின் மயானக் கொள்ளை

அங்காளம்மனை ஆதி பராசக்தி என்றே கூறுகின்றனர். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரத்தை அம்பிகை எடுத்ததாகவும் சக்தி உபாசகர்கள் கருத்து. இதைத் தான் முதல் சக்தி பீடம் எனவும் கூறுகின்றனர். சிருஷ்டியை அம்பிகை இங்கிருந்தே ஆரம்பித்ததாயும் ஐதீகம். கோயிலில் இருந்து சற்றுத் தூரத்தில் கர்ப்பிணிக் கோலத்தில் அம்பிகையைத் தரிசிக்கலாம் எனவும் கூறுகின்றனர். ஆனால் அங்கெல்லாம் போய்ப் பார்க்க முடியவில்லை. கோயிலின் நுழைவாயிலில் ஒரே கூட்டம். அங்கிருந்து நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப் பட்டோம். ஆனால் கோயிலின் சில ஊழியர்கள் தனியாகப் பணம் வாங்கிக்கொண்டு நேரே அழைத்துச் செல்கிறோம் என வற்புறுத்துவதையும் காண முடிந்தது. யாராயிருந்தாலும் உள்ளே போய்ப் புற்றுக்கருகே கூட்ட நெரிசலில் மாட்டிக்கொண்டே ஆகவேண்டும்.

இங்கே நாங்கள் நுழைவுச் சீட்டே வாங்கிக்கொண்டு, குழுவினர் அனைவரும் வரிசையில் நின்றோம். சிறிது தூரம் சம தரையில் சென்றதும் பின்னர் படிகள். மரப்படிகள். அதன் பின்னர் மேலே ஒரு பால்கனி போன்ற அமைப்பு, பின்னர் கூண்டு மாதிரியான இடத்தைக் கடந்து சென்றால் மேலேஏஏஏஏஏ உயரமான பாலம். அதைக் கடக்கையில் கோயிலின் கீழே நடப்பதை நன்கு காண முடிந்தது. அவ்வாறு கண்டபோது முன் மண்டபத்தில் ஒரு அம்மன் சிலையை வைத்து அலங்கார, அபிஷேஹங்கள் செய்து வழிபாடுகள் நடத்தப் பட்டுக்கொண்டிருந்தன. இது கோயிலைச் சேர்ந்ததே இல்லை என்றனர். கோயில் பரம்பரையாகப் பூசாரிகள் வசம் இருப்பதாயும், அவர்களில் சிலர் இம்மாதிரித் தனியாக வழிபாடுகள், பிரார்த்தனைகளை நடத்தித் தருவதாயும் கூறினார்கள். இன்னும் சற்று முன் மண்டபத்தைத் தாண்டிச் சென்றால் ஒரு பெரிய ஸ்ரீசக்கரம் போன்ற அமைப்புக் கல்லினால் செதுக்கப் பட்டிருந்தது. அதற்கு முன்னால் அங்கேயும் ஒரு அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டு ஒரு பெண்மணி அதற்கு வழிபாடுகள் நடத்திக்கொண்டு கோயிலுக்கு வரும் பெண்களை எல்லாம் அங்கேயும் வந்து வழிபட்டாலேயே வழிபாடு பூர்த்தி அடையும் எனச் சொல்லிப் பணம் பிடுங்கிக்கொண்டிருந்தார். ஸ்ரீசக்கர அமைப்பில் படுக்கத் தனியாகச் சீட்டுப் பணம் செலுத்தி வாங்க வேண்டும். அதை வாங்கிக்கொண்டு சிலர் ஒவ்வொரு இடத்தில் தங்கள் தலையை வைத்துப் படுத்துக்கொண்டு இருந்தனர். அதைச் சுற்றி ஒரு கூண்டு.

அதற்குள் நாங்கள் கீழே இறங்கிச் சந்நிதியின் பின் பக்கம் இருந்த பெரிய புற்றினருகே வந்துவிட்டோம். இங்கே சில கோயில் ஊழியர்கள், (இந்தக் கோயிலில் கவனிக்கத் தக்கவை அனைத்து ஊழியர்களும், பெண்களே, அவர்களுக்கு உதவிக்கு மட்டும் ஆண்கள், கூட்டத்தைச் சமாளிக்க, எதையாவது எடுத்து வர என) புற்றின் மேல் போடப் பட்டிருந்த மஞ்சள் பொடிக்கும், மஞ்சள் கயிற்றுக்கும் பணம் வாங்கிக்கொண்டு பக்தர்களுக்குக் கொடுக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். மக்களின் பக்தி அங்கே வியாபாரமாகிக்கொண்டிருந்தது. அதையும் வாங்கப் போட்டாபோட்டி. கயிற்றின் தரத்துக்கு ஏற்பப் பத்து ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் வரை வசூலிக்கப் பட்டது. அங்கே நுழைவிடம் வேறே குறுகல். ஆகவே நெரிசலில் மாட்டிக்கொள்ள நேரிடுமே எனக் கவலை வந்தது. நல்லவேளையாக முன்னாலிருந்தவர்களில் சிலர் எங்கள் குழுவினர் என்பதால் கொஞ்சம் ஆறுதலாயும் இருந்தது. ஒரு மாதிரியாக உள்ளே போய் அம்பாளைத் தரிசித்தால், ஒரே தள்ளு! போங்கம்மா, போங்கப்பா, பார்த்தது போதும், போங்க, போங்க, அடுத்தவங்க பார்க்க வேண்டாமா?

அடக் கடவுளே, ஒரு விநாடி கூடப் பார்க்க முடியலையே? ஏமாற்றம் மனதில் சூழ்ந்தது. என்றாலும் அவசரம் அவசரமாய்க் கன்னத்தில் போட்டுக்கொண்டு அம்பிகை நீயாவது என்னைப் பார்த்துக்கோ அம்மானு சொல்லிட்டு அங்கிருந்து திருவண்ணாமலைக்குக் கிளம்பினோம்.

கோயில் பற்றி விசாரித்ததில் கிடைத்த மேலதிகத் தகவல்கள். மாசி மாதம் சிவராத்திரி அன்று லிங்கோத்பவம் எனக்கொண்டாடினாலும் இந்தக் கோயிலில் மட்டும் அன்றிரவு ஈசன் அம்மனின் சூரையை எதிர்நோக்கி வருகிறார். மறு நாள் அமாவாசையன்று இரவே அம்மன் மயானத்தில் உள்ள பூதங்கள், ஆவிகள், பேய், பிசாசுகள் அனைத்துக்கும் உணவளிப்பதாயும், அவ்வாறு அளிக்கும் உணவை வாரி இறைப்பதையே சூரை எனவும் கூறுகின்றனர். இதைப் பத்து நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். அம்மன் வரலாற்றைக் கூறும் விழாவாக இங்கே மட்டுமே கொண்டாடப் படுவதாயும் கூறுகின்றனர்.

No comments: