எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 20, 2011

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள்வாழ்க! ஸ்ரீசரப மூர்த்தி


சரபர் நரசிம்ம மூர்த்தியோடு சம்பந்தப்பட்டவர். ஹிரண்யாக்ஷன் இறந்ததும், ஹிரண்யகசிபுவுக்கு விஷ்ணுவின் மீதும் அவர் பக்தர்கள் மேலும் அடங்காத கோபம் வந்தது. அந்தக் கோபம் நாளாவட்டத்தில் வன்மமாக மாறுகிறது. ஆகவே விஷ்ணுவின் பெயரையே குடிமக்கள் சொல்லக் கூடாது; ஆசிரியர்கள் கற்றுத்தரக் கூடாது; என்றெல்லாம் அவன் போட்ட சட்டங்களும், அதை மீறிய அவன் குமாரன் பிரஹலாதன் பற்றியும் நாம் நன்கறிவோம். பிரஹலாதனைக் கொல்ல முயற்சி செய்த ஹிரண்யகசிபுவிடமிருந்து அவனைக்காக்க வேண்டி தோன்றிய நரசிம்மம் ஆனது ஹிரண்யகசிபுவைக் கொன்று அவன் ரத்தத்தைக் குடித்த பின்னரும் கோபம் தணியாமல் இருக்கவே ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி சாந்தப் படுத்தச் சென்றாள். ஆனால் அவளாலும் இயலாமல் போகவே தேவர்கள் கவலை கொண்டனர். இதற்குச் சரியான ஆலோசனையை ஈசனாலேயே தர இயலும் என்பதால் ஈசனை நாடுகின்றனர். தன்னால் தான் நரசிம்மத்தின் கோபத்தை அடக்க இயலும் என்று ஈசன் எடுத்த வடிவமே ஸ்ரீசரபமூர்த்தி என்பார்கள். ஒரு சிலர் ஈசன் வீரபத்திரரைப்பணித்ததாகவும், வீரபத்திரரே ஸ்ரீசரபராக மாறினார் எனவும் கூறுகின்றனர். லிங்க புராணத்தில் வீரபத்திரர் சரபராக வந்ததாய்க் குறிக்கப் பட்டிருக்கும் என்றும் தெரிய வருகிறது.

எட்டுக் கால்களோடும், இரண்டு முகங்களோடும், (இரண்டும் சிங்க முகங்கள்) ஆனால் மனித உடலில் பொன்னிறமான இரு இறக்கைகள் பறவைகளைப் போலவும், சிங்கத்தைப் போன்ற கூரிய நகங்களுடன் கூடிய நான்கு கால்கள், வால் நீண்டு விலங்கைப் போலவும் காட்சி கொடுத்த இந்த அதிசய வடிவம் ஸ்ரீசரப மூர்த்தி ஆவார். இவர் பகைவர்களுக்கெல்லாம் பகைவர். நரசிம்மரையே அடக்கியதால் நரசிம்ம சம்ஹாரி என அழைக்கப் படுகிறர். ஸ்ரீ சரபரை வழிபட்டால் இவரின் அளவற்ற சக்தியால் இயற்கைச் சீற்றங்கள், பேராபத்துக்களிலிருந்து தப்பலாம் எனவும், வைத்தியர்களாலும் தீர்க்க முடியாத நோய் அகலும் எனவும் கூறுகின்றனர். மேலும் பரிகாரம் செய்ய முடியாத எந்தக் கஷ்டமானாலும் சரியாகிவிடும் எனவும், மரண பயம் ஏற்படாது எனவும் கூறுகின்றனர்.

இந்த அதி உக்ரமூர்த்தியை ஆகாச பைரவர் எனவும் கூறுகின்றனர். இவருக்கும் ஈசனைப் போல் மூன்று கண்கள் உண்டு. சூரியன், சந்திரன் ஆகிய இருகண்களைத் தவிர அக்னி நெற்றிக்கண்ணாக விளங்குகிறது. இரண்டு இறக்கைகளையும் முறையே காளியாகவும், துர்க்கையாகவும் கூறுவார்கள். நாக்கை பூமியின் பாத வலையம் எனவும், கால் நகங்களில் இந்திரன் இருப்பதாகவும், வயிற்றில் காலாக்னியும், இரு தொடைகளும் முறையே காலன், ம்ருத்யுவாகவும் திகழ்கின்றதாய்ச் சொல்வார்கள். வலிமை வாய்ந்த சரபரைத் துதிப்பதால் கொடிய பகைவனையும் வெல்ல முடியும் என்றும், போர்களில் வெற்றி கிடைக்கும் எனவும் சொல்லப் படுகிறது. பெரும்பாலும் தெலுங்கு பேசும் ஆந்திர மாநிலத்தை ஆண்ட சாளுக்கிய மன்னர்களாலேயே ஸ்ரீ சரபர் வழிபடப் பட்டதாய்த் தெரிய வருகிறது. தமிழ்நாட்டில் பிற்காலச் சோழர் காலத்திலேயே சரபர் வழிபாடு பிரபலம் அடைந்ததாயும் தெரிய வருகிறது. சிதம்பரம் கோயிலில் சரபருக்கு எனத் தனி சந்நிதி இருப்பதை ஏற்கெனவே சிதம்பர ரகசியம் தொடரில் பார்த்தோம்.

இதைத் தவிர மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்ட கும்பகோணத்தை அடுத்த திரிபுவனத்தில் சரபருக்குத் தனி சந்நிதி உண்டு. ஆனால் முதன் முதல் கும்பகோணத்தை அடுத்த வீர சோழீச்சுரம் கோயிலில் தான் சரபருக்கு முதல் சிற்பம் அமைக்கப்பட்டதாய் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் கோயிலில் ஐராவதேஸ்வரர் கோயிலின் ராஜகம்பீர மண்டபம் எனப்படும் வெளி மண்டபத்தில் ஸ்ரீ சரபரை வணங்கிய வண்ணம் நரசிம்மர் காட்சி கொடுப்பதைக் காணலாம். புகைப்படம் எடுக்க முடியவில்லை. ப்ரத்யங்கிரா எனப்படும் காளியும், சூலினி எனப்படும் துர்கையும் இவரின் சக்திகளாய்ச் சொல்லப் படுகிறது.


No comments: