எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, November 16, 2011

மாரியம்மா, மாரியம்மா!


மேலே காண்பது எங்கள் பூர்வீக ஊரான பரவாக்கரையில் உள்ள எங்கள் குலதெய்வமான மாரியம்மன். இவளுக்குத் துணையாகப் பேச்சியம்மன் இருக்கிறாள். அவளைப் பற்றிப் பின்னால் பார்க்கலாம்.


மஹாமாரியம்மனைப் பற்றி இப்போது பார்க்கலாமா?? கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன்
கோயிலில் அம்மன் வரலாற்றைப் பற்றிக் கேட்டேன். யாருக்கும் சரியாய்த்
தெரியவில்லை. படங்கள் எடுக்கவும் அநுமதி கொடுக்கவில்லை. திருவிழா வேறு நடந்து
கொண்டிருந்தது. அங்கே தான் பச்சைக்காளி, பவளக்காளியாக படைவெட்டி மாரியம்மனின்
தோழிகளாக இருவரும் வீற்றிருக்கின்றனர். பச்சைக்காளிக்கும், பவளக்காளிக்கும்
காளியாட்டத்தின் போது போட்டியும் வருமாம். கூட்டம் தாங்காது என்றார்கள். அங்கே
தெரிந்தவர்கள் எவரும் இல்லை. மேலும் மறுநாள் எங்க ஊர்க் கோயிலில்
கும்பாபிஷேஹத்தின் யாகம் ஆரம்பம். ஆகவே அதற்குப்போயாக வேண்டும். மாரியம்மன்
வரலாற்றைத் தேட ஆரம்பித்தேன். கடைசியில் இரு விதங்களில் கிடைத்தன.


ஒன்று மஹாமாறன் என்னும் அசுரன் தான் பெற்ற தவங்களால் உலகத்து மக்களை எல்லாம்
பல வகையிலும் துன்புறுத்தி வந்தான். பல்வேறு விதமான நோய்களையும்
உண்டாக்கினான். அதில் ஒன்றே வைசூரி என்னும் அம்மை நோய். இந்த நோய் வந்தவர்களை
எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியவில்லை. உடல் முழுதும் கொப்புளங்கள்
உண்டாகிக் கண்பார்வையும் மறைக்கப் பட்டுத் துடிதுடித்த மக்களைக் காக்கவேண்டி
அம்பிகை தன்னிலிருந்து உருவாக்கியவளே மஹாமாரி ஆவாள். இந்த மஹாமாரி
அவதரித்ததுமே மஹாமாறனைக் கொன்றாள். அவனால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை
எல்லாம் தன்னருகில் அம்பிகை அனுப்பி வைத்த கண்டா கர்ணன் என்னும் தேவதையின்
உதவியோடு தீர்த்து வைத்தாள். அன்று முதல் மக்களின் ஆரோக்கியத்திற்கு அன்னையாக
விளங்கி வருகிறாள்.


இன்னொரு விதத்தில் கூறுவது என்ன வெனில் தேவாசுர யுத்தத்தில் ஜெயித்த
தேவர்களைப் பழிவாங்க எண்ணிய அசுரர்கள் குல குருவான சுக்கிராசாரியார் மூலம்
அவர்கள் உடலில் அம்மைக் கொப்புளங்களை உருவாக்கினார்கள். தாங்க முடியாத
வலியாலும், துன்பத்தாலும் துடித்த தேவர்கள் ஈசனை நாடி அவன் பாதங்களைப் பணிந்து
வேண்ட, ஈசன் தன் ஜடாமுடியிலிருந்து அன்னை மாரியைத் தோற்றுவித்தார். தலையின்
கங்கை இருக்கும் இடத்திலிருந்து தோன்றிய இவளை சீதளா என அழைத்தனர். அல்லல்
பட்டுத் துன்புற்ற மக்களைத் தன் தண்மையான பார்வையாலும், கருணையாலும் காப்பாற்றி
நோயை நீக்கிப் பூரண ஆரோக்கியத்தை அளித்தாள் மஹாமாரி. உடனே தேவர்கள் அனைவரும் தங்களைக் கடுந்துயரிலிருந்து காத்த அன்னை இதே கோலத்தில் அனைத்து எல்லைகளிலும் குடி கொண்டு மக்களைக் கொடும் நோயிலிருந்து காத்தருள வேண்டும் என வேண்ட அவ்விதமே ஆகட்டும் என ஆசியளித்த அன்னை அவ்விதமே இன்றளவும் காத்து வருகிறாள்.


மூன்று கண்களுடனும், நான்கு கைகளுடனும், தீ ஜ்வாலை போல் மேல் நோக்கிய
கூந்தலுடனும், காட்சி அளிக்கும் அன்னை, கறுப்பு ஆடையில் தோளில் கால சர்ப்பங்களை
ஆபரணமாகப் பூண்டு, வலக்காதில் ஸ்ரீசக்ர வடிவான தாடங்கமும், இடக்காதில் தோடும்
அணிந்து திருமேனியிலும் ஆபரணங்களைத் தரித்துக்கொண்டு, ஒரு காலை
மடித்துக்கொண்டும், மறுகாலைத் தொங்க விட்டுக்கொண்டும், வட்ட வடிவான ஜோதியின்
நடுவே தோன்றினாள். இந்தக் கோலத்திலேயே இவள் எல்லாக் கோயில்களிலும் பிரதிஷ்டை
செய்யப் படுகிறாள்.

2 comments:

மாதேவி said...

மாரியம்மன் தர்சித்தோம்.

விச்சு said...

வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன். நேரமிருப்பின் வந்து பாருங்கள். தங்களின் கருத்துக்களையும் தமிழ்மணத்தில் வாக்கினையும் பதிவு செய்யுங்கள்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.html