எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, July 17, 2012

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 2


திருவரங்கம் குறித்து அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் ,திவ்யப்ரபந்தம் போன்றவற்றில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அகம் 137. பாலை - உறையூர் முதுகூத்தனார்

ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்டசிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம் சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர் இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள், வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன் நல் எழில் நெடு வேய் புரையும்
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.

சிலப்பதிகாரத்தில் மதுரைக்காண்டம் காடுகாண் காதையில்

நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்பால்விரிந் தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்


பொய்கையாழ்வார் முதலாம் திருவந்தாதியில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்திருவரங்க மேயான் திசை(2087)


பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில்,
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும் நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள் மாவாய் பிளந்த மகன்(2209)


பூதத்தாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியில்
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு(2343)


உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் திருவரங்கம் இருக்கும் திசை நோக்கித் தொழுதாலே போதும் என்று ஆன்றோர் வாக்கு.  இந்தத் தலத்தின் சந்திர புஷ்கரிணியில் நீராடி திருவரங்கனை தரிசிப்பதற்கு ஈடு, இணை இல்லை என்று சொல்லப்பட்டாலும் இந்தத் திருவரங்கம் இருக்கும் திசையை வணங்கினாலே மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப் படுகிறது.   இங்குள்ள சந்திர புஷ்கரிணி, பள்ளிகொண்ட ரங்கநாதர் தோன்றும் போதே அனந்த பீடத்தோடு தோன்றியதாகவும் கூறப்படும்.  அதன் வரலாறு வருமாறு:


ஒருமுறை கங்கை, காவிரி, யமுனை போன்ற புண்ணிய நதிகள் தங்கள் கன்யாரூபத்தோடு இமயமலை அடிவாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.  அப்போது வெண்ணில் சென்ற கந்தர்வன் ஒருவன் அத்தனை நதிகளையும் கன்யாரூபத்தில் பார்க்கவே அவர்களை வணங்கினான்.  அங்கிருந்த ஒவ்வொரு நதிப் பெண்ணும் அந்த கந்தர்வன் வணங்கியது தன்னையே எனக் கூற அவர்களுக்குள் வாக்குவாதம் ஆரம்பமாயிற்று.  மற்ற நதிப் பெண்கள் விலகிக் கொள்ள, கங்கையும், காவிரியும் மட்டும் விவாதத்தைத் தொடர்ந்தனர்.  இதற்கு ஒரு முடிவில்லாமல் போகவே இருவரும் விஷ்ணுவை நாடினார்கள்.  அவர் கங்கை தன் பாதத்தில் தோன்றியதால் கங்கையே பெரியவள்.  கந்தர்வனின் வணக்கமும் கங்கையையே சாரும் என்று சொல்லிவிடுகிறார்.  காவிரி துக்கத்தில் ஆழ்ந்து போகிறாள்.  கங்கையை விடவும் தான் பெரியவள் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தவம் இருக்கிறாள்.  அவள் தவத்தில் மகிழ்ந்த மஹாவிஷ்ணு, வரும் காலத்தில் அவள் மடியில் சயனிப்பதாகவும், அதற்கான காலம் வந்துவிட்டதாகவும், அந்தச் சமயம் அவள் கங்கையை விடவும் மகிமை பொருந்தியவளாக ஆவாள் எனவும் வரமும், வாக்கும் கொடுக்கிறார்.


அதே போன்ற சமயம் வந்து விட்டதாலும், பாரதத்தை விட்டுப் போக மனமில்லாமலும், சூரிய குலத்தைச் சேர்ந்த சோழன் தர்ம வர்மாவின் பக்திக்காகவும், ஸ்ரீரங்கநாதர் இங்கேயே இருக்கவேண்டும் என தவமிருந்த சோழநாட்டு மக்களின் பக்திக்காகவும்,  இப்படி எல்லாத்துக்காகவும் அரங்கன் இங்கேயே இருந்துவிடுகிறார்.  அவர் இருந்த இடத்தைச் சுற்றுக் காவிரியின் மத்தியில் ஒரு தீவும், அனந்த பீடமும், சந்திர புஷ்கரிணியும் ஏற்படுகிறது.  ஆற்று நீர் எல்லாப் பக்கமும் சூழ மத்தியில் அமைந்துள்ள பகுதியை அரங்கம் என்று கூறுவார்கள்.  அதன்படி இந்தத் தீவானது இரு ஆறுகளின் மத்தியில் இருப்பதாலும், மஹாவிஷ்ணு பள்ளி கொண்டிருப்பதாலும், எப்போதும் ஸ்ரீ எனும் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் நிறைந்து காணப்படுவதாலும், ரங்கநாதர் பெயரான ரங்கத்தோடு ஸ்ரீயும் சேர்ந்து ஸ்ரீரங்கம் அல்லது திருவரங்கம் எனப் பெயர் பெற்றது.  இங்கே ஸ்ரீரங்கத்தின் தெற்குப்பக்கம் ஓடும் காவிரி நதியானது பரமபதமான ஸ்ரீ வைகுண்டத்துக்கு வெளியே ஓடும் விரஜா நதிக்கு ஒப்பானது ஆகும்.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு... நல்ல விளக்கத்துடன் அருமையான பதிவு...

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

ஸ்ரீராம். said...

இப்போதுதான் பார்த்தேன். படித்து விட்டேன். பாடல் வரிகள் நினைவிலிருந்து எடுத்தீர்களா?

Geetha Sambasivam said...

வாங்க தனபாலன், உங்க பதிவுக்கும் வரேன். நன்றிங்க.

Geetha Sambasivam said...

வாங்க ஶ்ரீராம், கூகிளார் துணையுடன் தான் எடுத்தேன். சிலப்பதிகாரத்தில் இருக்குனு மட்டும் தெரியும், ஆனால் நினைவெல்லாம் வரலை! :)))))

வல்லிசிம்ஹன் said...

உங்க்கள் உழைப்பு அசத்துகிறது கீதா.
ஆடிப்பெருக்கு நல் நாள் வாழ்த்துகள்.
காவிரியில் அன்று நீர் வரத்து எப்படி என்றும் எழுதுங்கள்.