எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, August 27, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 7


சளுக்கிய சோழ வம்சத்தினர் ஹொய்சளர்களின் துணை கொண்டு கோயிலை மீண்டும் அவர்கள் வசம் கொண்டு வர நினைத்தாலும் அவர்களால் இயலவில்லை.  அப்போது தான் பாண்டியர்கள் வேறு தலை எடுத்துச் சோழர்களை நிமிர முடியாமல் செய்து வந்தனர்.  பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அரசனான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் அதாவது கி.பி. 1216---1238 ஆம் ஆண்டுக் கால கட்டத்தில் அவன் கர்நாடகம் என இப்போது அழைக்கப் படும் பிரதேசங்களைக் கைப்பற்றினான்.  அவனது ஒன்பதாம் ஆட்சியாண்டுக் காலத்தில் அவனுடைய படைகள் திருவரங்கம் கோயிலை கங்கர்களிடமிருந்து விடுவித்தது.  ஆனாலும் கோயிலின் திருப்பணிகளில் ஹொய்சளர்களின் ஈடுபாடு குறையவில்லை.  அவர்கள் பல திருப்பணிகளைச் செய்ததாகக் கலவெட்டுக்கள் பல குறிப்பிடுகின்றன.  கி.பி. 1240ஆம் ஆண்டுக் காலத்தில் ஹொய்சள மன்னன் சோமேசுவரன் என்பான் அவனது 16-ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் இக்கோயிலுக்கு ஒரு நந்தவனம் ஏற்படுத்தி மூன்றாம் பிரகாரத்தில் ஒரு சாலையையும் ஏற்படுத்தியுள்ளான்.  கி.பி.1262 வரை ஆட்சி புரிந்த சோமேசுவரனுக்குப் பின்னர் வந்த ஹொய்சள மன்னன் இராமநாதர் என்பார்(கி.பி.1263—1297) வரை ஆட்சி புரிந்தார்.  இவர் படைத்தலைவர்களாகிய இரு சகோதரர்கள் கோயிலுக்குப் பல வகையான தானங்கள் வழங்கியுள்ளனர் என்பதைக் கோயில் வரலாற்று நூல் கூறுவதாக அறிகிறோம்.  இந்தச் சமயம் தான் மிகவும் அழகு வாய்ந்த வேணுகோபால கிருஷ்ணரின் சந்நிதியும் கட்டப் பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

தங்களின் எழுச்சியால் பெருமையும், கர்வமும் கொண்ட பாண்டிய மன்னர்களோ, தங்கள் பக்தியிலும் அந்த ஆடம்பரத்தைக் காட்டினார்கள் எனக் கூறுகின்றனர்.  அதன் மூலம் இந்தக் கோயிலுக்குப் பலவகையான நன்மைகளே கிட்டின.  முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1251—1268) வரை ஆண்டு வந்தான்.  இவன் பல கட்டிடங்களை இந்தக் கோயிலில் எழுப்பியுள்ளான் என்பதோடு பல்வகையான அலங்காரங்களையும் செய்ததோடு தாராளமாக நன்கொடைகளையும் வழங்கினான்.  இதனால் அவன் புகழ் மிகவும் பெரிய அளவில் பேசப்படுகின்றது என்பதோடு அவன் காலத்துக் கல்வெட்டுக்களும் அவன் ஸ்ரீரங்கம் கோயிலைப் பொன்மயமாகச் செய்தான் என்று பாராட்டுகிறது.  திருவரங்கநாதர் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, விஷ்ணு நரசிம்மன் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளி ஆகியவை இவனால் கட்டப்பட்டதாக அறிகிறோம்.  இந்தக் கட்டிடங்களும், இரண்டாம் பிரகாரமும் பொன்னால் வேயப்பட்டதாகவும் அறிகிறோம்.  இத்தோடு நில்லாமல் ஆதிசேடன் திருவுருவம், பொன்னாலாகிய பிரபை, பொன்னாலான பீடம், பொன் மகர தோரணம், பொன் கருட வாகனம் ஆகியனவும் பொன்னாலேயே அவனால் வழங்கப் பட்டிருக்கிறது.  ஒரிசா எனப்படும் கலிங்க நாட்டரசனைப் போரில் எதிர்கொண்டு வெற்றி பெற்று அவனுடைய கருவூலத்தில் இருந்து கைப்பற்றிய பல பொருள்களைக் கொண்டு ஸ்ரீரங்கநாதருக்கு மரகத மாலை, பொன் கிரீடம், முத்தாரம், முத்து விதானம், பொன் பட்டாடை, பொன் தேர், பொன்னால் நிவேதனப் பாத்திரங்கள், குவளைகள் போன்றவற்றை வழங்கியுள்ளான்.  விலையுயர்ந்த பட்டாடைகளாலும், ஆபரணங்களாலும் திருவரங்கத் திருமேனியை அலங்கரித்து மகிழ்ந்திருக்கிறான்.

இவை அனைத்தையும் தூக்கி அடிக்கும்படி செய்த இன்னொரு நிகழ்வு தெப்போற்சவம் தான்.  அரங்கன் தெப்போற்சவம் காண வேண்டித் தங்கத்தினாலேயே படகு அமைத்தான்.  தனக்கும் சேர்த்து அப்படி ஒரு படகை அமைத்துக் கொண்டிருக்கிறான்.  காவிரியில்  இரு படகுகளையும் விட்டான்.  தனது பட்டத்து யானையை ஒரு படகில் ஏற்றி அதன் முதுகில் மன்னன் அமர்ந்தான்.  மற்றொரு படகில் ஏராளமான ஆபரணங்களும், அணிமணிகளும், பொற்காசுகளும் அவனால் நிரப்பப்பட்டுக் குவிந்து கிடந்தன.  தன்னுடைய படகினது நீர்மட்டத்திற்கு மற்றொரு படகும் வரும் வரையில் அந்தப் படகில் பொன்னைச் சொரிந்து கொண்டே இருந்தான்.  பின்னர் அப்பொன்னையும், அணிமணிகளையும் இக்கோயில் கருவூலத்திற்குத் தானமாக வழங்கினான்.  தன்னுடைய எடை அளவிற்குத் தங்கத்தினாலே திருவரங்கநாதரின் விக்ரஹம் செய்து அதையும் தன் பெயரால் வழங்க வைத்துக் கோயிலுக்கு அளித்தான்.  இவ்வாறு அவன் செய்த பல திருப்பணிகளை இக்கோயில் வரலாற்று நூல் கூறுகின்றது.

இவனை அடுத்து 25 ஆண்டுகள் வரை எந்தவிதக் குழப்பமும், தொந்திரவும் இன்றி அரங்கநாதர் நிம்மதியாக இருந்து வந்தார்.  ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் அதாவது கி.பி. 1268—1308 ஆம் ஆண்டுக் காலத்தில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டுக்கும், முக்கியமாய்த் தென்னகத்துக் கோயில்களுக்கும்  மாபெரும் பிரச்னைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.  முதன்முதல் வெளிநாட்டிலிருந்து, போர்ச்சுக்கீசிய யாத்திரீகனான மார்க்கோபோலோ வந்து இப்பகுதியின் சிறப்பையும் செல்வச் செழிப்பையும் வியந்து எழுதியுள்ளது நாம் அனைவரும் அறிவோம்.  பாண்டிய நாட்டு மக்க்களையும், மன்னனையும் பற்றி அவர் எழுதியுள்ளவை அக்காலத்தில் நாட்டின் பெரும் செல்வத்தை மட்டும் குறிப்பிடாமல் மக்களின் உயர்ந்த பண்பையும் குறிப்பிடுகின்றது அல்லவா!  தமிழ்நாட்டின் பெரும் செல்வ வளத்தையும் முத்துக்குளித்துறையின் வளத்தையும் பற்றிப் பெருமையாகப் பேசிய மார்க்கோபோலோ தமிழகத்து மக்கள் அனைவரும் இருமுறை குளித்துச் சுத்தமாக இருந்ததாகவும், குளிக்காதவர்களைத் தூய்மைக்குறைவுள்ளவர்களாகக் கருதியதையும், நீர் அருந்துகையில் உதட்டுக்கு மேல் வைத்துத் தூக்கிக் குடித்ததையும், மன்னனாகவே இருந்தாலும் தரையில் அமர்வதைக் கெளரவக் குறைவாய்க் கருதாததையும் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்.  அதான் திருஷ்டிப் பட்டதோ என்னமோ!  குலசேகர பாண்டியன் காலத்திலேயே பாண்டிய நாட்டில் பிரச்னைகள் ஆரம்பித்தன.  இவனுக்குப் பட்டமஹிஷி மூலம் ஒரு மகனும், ஆசை நாயகி மூலம் இன்னொரு மகனும் இருந்தனர்.  பட்டத்து இளவரசன்  சுந்தரபாண்டியன் என்னும் பெயருள்ளவன்.  நியாயமாய் இவனே பட்டத்திற்கு வந்திருக்க வேண்டும்.  ஆனால்  “எம்மண்டலமும் கொண்டருளிய”  என்னும் பட்டம் பெற்ற குலசேகரனோ, தன் ஆசை நாயகியின் மகனான வீரபாண்டியனுக்கே அரசு உரிமையை அளித்தான்.  இது இரு சகோதரர்களுக்குள் பகைமையை உண்டாக்கியது என்பதோடு அந்நியரைத் தென்னகத்தில் வரவும் வழி வகுத்தது.  இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது ஸ்ரீரங்கம் கோயிலும், சிதம்பரம் கோயிலும், மதுரை மீனாக்ஷி கோயிலும்.  ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் இதன் அரசியல் பின்னணியையும் வரும் நாட்களில் பார்ப்போம்.

பின் குறிப்பு:  மேற்கண்ட தகவல்கள் ஆதாரம்:  அறநிலையத் துறையால் வெளியிடப் பட்ட
திருவரங்கம் திருக்கோயில் புத்தகம், வைணவஸ்ரீ, மற்றும் பேராசிரியர்
நாகசாமி அவர்களின் ராமாநுஜர் பற்றிய புத்தகத்தின் விசேஷக் குறிப்புகள்
கொண்ட வலைத்தளம்.
http://adhipiran.com/ramanujar-tamil.html


4 comments:

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா
எத்தனை அரிய தகவல்கள்.
இதற்காக நீங்கள் எவ்வளவு உழைத்திருக்கவேண்டும்.
வெறுமனே போய்க் கும்பிட்டுத் திரும்பும் கண்களுக்கு அரங்கனது கோவில் வரலாறு அமுதாக இருக்கிறது. வாழ்த்துகள் மா

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

Geetha Sambasivam said...

வாங்க வல்லி, புதுப் புது விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் மனதுக்கு உற்சாகத்தைத் தருகிறது. :))))

Geetha Sambasivam said...

வாங்க திண்டுக்கல் தனபாலன், நன்றி.