எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, October 15, 2012

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! பவித்ரோத்சவம்! 12

ஸ்ரீரங்கம் கோயிலில் பவித்ரோத்சவம் எனச் சொல்லி இருக்கேன்.  பார்க்கப் போனால் இது எல்லாக் கோயில்களிலும் உண்டு.   ஆகம முறைப்படியான அனைத்துக் கோயில்களிலும் பவித்ரோத்ஸவம் கட்டாயம் உண்டு.  இது சிராவண மாதத்திலேயே செய்யப்படும். சில சமயங்களில் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலும் செய்யப்படும்.  பவித்ரோத்ஸவம் என்பது புனிதப் படுத்துதல் என்ற பொருளில் வரும்  பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள்.  கோயிலுக்குப் பலதரப்பட்ட மக்களும் வருவார்கள்.  தடுக்க இயலாது.  அதே போல் பூஜை செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நடைபெறலாம்  மந்திர உச்சரிப்புக்களிலும் தவறுகள் நேரிடலாம். இவைகளினால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப்படுவதே பவித்ரோத்ஸவம் ஆகும்.  ஆலயங்கள் தொடர்பான பிராயச்சித்தம் என்றும் சொல்லலாம்.  இந்த உற்சவத்தில் உற்சவ விக்கிரகங்கள் மட்டுமில்லாமல் மூலவருக்கும் சேர்த்தே விசேஷமான பவித்ர மாலைகள் அணிவிக்கப்படும்.

மேலே சொல்லப்பட்ட மாதங்கள் ஏதேனும் ஒன்றில் சுக்லபக்ஷத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து இந்த உற்சவத்தின் முக்கிய அம்சம் ஆன பவித்ரம் சமர்ப்பித்தல் நடைபெறும்.  இது அநேகமாகப் பெரிய கோயில்களில் ஏழு தினங்கள் நடைபெறும்.  கோயிலுக்கு வரும் மகான்கள் துதிக்கும் துதிகளால் இறை சக்தி, புனிதம் ஆகியவை பெருகும். அதே சமயம் அங்கே வரும் பக்தர்களின் குணங்கள், மாறுபட்ட நடத்தைகள், அவர்களால் ஏற்படும் தீட்டுக்கள் போன்றவைகளால் மூர்த்திகளின் இறை அம்சங்களில் மாறுபாடு ஏற்படும். ஆகவே பவித்ரோத்சவம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

பொதுவாக கோயில்களில் நடைபெறும் உற்சவங்களில் ரக்ஷாபந்தனம் என்பது உற்சவருக்கு மட்டுமே இருக்கும்.  உற்சவ மூர்த்திகளுக்கு மட்டுமே கங்கணம் கட்டுவார்கள்.  ஆனால் பவித்ரோத்சவத்தில் மூல விக்கிரகங்களுக்கும் ரக்ஷாபந்தனம் நடைபெறும்.  இதைக் கடவுளே மேற்கொள்ளும் யக்ஞமாகப் பாவிப்பவர்களும் உண்டு.  கோயில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களில் ஒருவர் இந்த உற்சவத்தை ஏற்று நடத்தும் தலைமப் பதவியை மேற்கொள்ளுவார்.  அவர் பெருமாளின் பிரதிநிதியாகக் கருதப் படுவார்.  உற்சவம் முடியும்வரை ஆசாரியர் எனவும் அழைக்கப்படுவார்.

 மற்றவர்களை ரித்விக்குகள் என அழைப்பார்கள்.  நல்ல முகூர்த்தம் பார்த்து உற்சவம் நடத்தக் கடவுளின் அனுமதி கோரப்படும். பின்னர் ரக்ஷாபந்தனம் என்ற காப்பு மூலவருக்கும், உற்சவருக்கும் அணிவிக்கப்படும்.  ஆசாரியரும் கட்டிக்கொள்ளுவார்.  மூலவரின் இறை சக்தியை உற்சவரிடம் மாற்றுவார்கள்.  பின்னர் யாகசாலைக்கு உற்சவரை எழுந்தருளப்பண்ணுவார்கள். அங்கே உற்சவருக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும்.  இந்த ஆராதனைகள் கடந்த வருஷத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒன்று என்ற மாதிரி கணக்கிடப்படும்.  வருடத்தின் 365 நாளுக்கும் ஒவ்வொரு நாளுக்கு ஒன்று என்ற கணக்கில் 365 முறை நிகழ்த்தப்படும்.  இது பெரிய கோயில்களுக்கும் பழைமை வாய்ந்த கோயில்களுக்கும் பொருந்தலாம்.  சில கோயில்கள் ஆகம முறைப்படி நடந்தாலும் அங்கே 90 நாட்கள், 180 நாட்கள் எனக் கணக்கிட்டிக் கொண்டு அபிஷேகங்கள் செய்கின்றனர். என்றாலும் குறைந்த பக்ஷமாக 12 முறை வழிபாடுகள் நடத்த வேண்டும்.

 பின்னர் கும்பஸ்தாபனம், மண்டபஸ்தாபனம் நடத்துவார்கள்.  பிரதானமான குண்டத்திலே அக்னி பிரதிஷ்டை செய்யப்படும். வேட ஆரம்பங்கள் செய்யப்பட்டு, பராயணங்களும் நடைபெறும்.  கோமம் முடிந்தபின்னர் பவித்ரம் சமர்ப்பிக்கப்படும்.  பெருமாள் கோயில்களில், முக்கியமாக ஸ்ரீரஙத்தில் அதிவாஸ பவித்ரம் என்ற ஒரு பவித்திரம் முதல் நாள் மந்திர புரஸ்ஸரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுப் பெருமாளுக்குச் சாற்றுவார்கள். பின்னர் மறுநாள் காலையில் முதலில் மேற்கே இருக்கும் குண்டத்தில் அக்னிப் பிரதிஷ்டை செய்யப்பட்டுப் பின்னர் மற்ற குண்டங்களுக்கும் சேர்க்கப்பட்டுப் பிரதிஷ்டை செய்யப்படும்.  நான்கு குண்டங்களிலும் பின்னர் பெருமாளை ஆவாகனம் செய்வார்கள். பின்னர் மீண்டும் முறைப்படியான கோமம் நடக்கும்.  ஏழாம் நாளில் யாகம் முடிவடையும் நாளன்று பூர்ணாகூதி செய்வார்கள்.  அதில் பட்டு வஸ்திரம், புஷ்பங்கள், மாலைகள், தேங்காய்கள், நெய் சேர்க்கப்பட்டு ஆகூதி செய்வார்கள்.  பின்னர் த்வார தேவதைகளுக்கு விசற்ஜனங்கள். மண்டல விஸர்ஜனம் நடக்கும்.  மண்டலம் கலைக்கப்பெற்று நடுவில் உள்ள சூர்ணத்தை உற்சவரின் திருவடிகளில் சமர்ப்பிப்பார்கள்.

 பின்னர் பவித்திரங்கள் களையப்பட்டு சகல புண்ணிய ஸ்தலங்களில் இருந்தும் மானசீகமாய்க் கொண்டுவந்ததாயக் கருதப்படும் புண்ணிய தீர்த்தங்களினால் உற்சவருக்கு அபிஷேகங்கள் நடைபெறும்.  பரிவட்டங்கள் சாத்தப்பட்டு, புஷ்பமாலைகள் சாத்தப்பட்டு சர்வ அலங்காரங்களோடு உற்சவர் மீண்டும் கர்பகிரகத்துக்குள் எழுந்தருளுவார்.  பின்னர் மகா கும்பத்தை சகல மரியாதைகளோடும் எடுத்துச் சென்று எல்லா மூர்த்திகளுக்கும் அந்தக் கும்ப ஜலத்தால் புரோக்ஷணம் செய்வார்கள்.  பின்னர் விசேஷ ஆராதனைகள் செய்யப்பட்டு நிவேதனங்கள் சாற்றி உற்சவம் நிறைவு பெறும்.  இது உலக க்ஷேமத்துக்காகவே நடத்தப்படும் ஒரு உற்சவம்.

4 comments:

ஸ்ரீராம். said...

தெரிந்து கொண்டேன்.

வல்லிசிம்ஹன் said...

வெகு அருமையாக விளக்கி இருக்கிறீர்கள் கீதா. அந்தப் பவித்ரோசவ மாலைகள் இங்கு பாட்டி இருக்கும்போது நிறையவரும். அதைத் தனியாக் மரப் பெட்டியில் வைப்பார்கள்.ஒன்றே ஒன்றே இருக்கிறது.எத்தனை நடக்கிறது கோவில்களில் . உங்கள் மூலம் அறியக் கிடைப்பதற்குப் பெருமையாக இருக்கிறது.மிக மிக நன்றி.

Geetha Sambasivam said...

நன்றி ஸ்ரீராம்.

Geetha Sambasivam said...

வாங்க வல்லி. பாராட்டுக்கு நன்றி. விரைவில் ஸ்ரீரங்கம் வாங்க.