எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, December 24, 2012

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி!


வைகுண்ட ஏகாதசி குறித்து அனைவரும் அறிவோம். என்றாலும் தெரியாதவர்களுக்காக ஒரு சின்னக் குறிப்பு. நமக்கு ஒரு வருஷம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த நாளின் துவக்கம் தான் மார்கழி மாதம். அந்த மாதம் தேவர்களின் பிரம்ம முஹூர்த்த நேரம் ஆகும். ஆகவே மார்கழி மாதம் அதிகாலையில் நாம் இறைவனைத் துதிக்கிறோம். அது போலவே தென்பாகத்திலுள்ள பாற்கடலில் யோக நித்திரையில் இருக்கும் மஹாவிஷ்ணுவைத் தேவர்களும் துதிக்கின்றனர். அவர்கள் துதித்த நாளே வைகுண்ட ஏகாதசி நாள் எனச் சொல்லப் படுகிறது. அவர்களின் துதியால் மகிழ்ந்த மஹாவிஷ்ணு தம் யோக நித்திரையிலிருந்து எழுந்து வந்து அவர்களுக்குத் தரிசனம் கொடுத்தாராம். அந்த வாசல் வடக்கே அமைந்திருக்கும். அதுவே வைகுண்ட வாசல் திறந்து மஹாவிஷ்ணு வெளிவந்ததைக் குறிப்பிடும் வண்ணமே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் அன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்கிறது. இந்த ஏகாதசி வந்த விதத்தை அறிவோமா?

முரன் என்னும் அசுரன் தேவர்களுக்கு மிகவும் தொந்திரவு கொடுக்க யோக நித்திரையில் இருந்த மஹாவிஷ்ணுவின் மஹாசக்தியான ஏகாதசி என்பாள் வெளிவந்து அந்த முரனைக் கொன்றாள். கண் விழித்துப் பார்த்து அதிசயித்த மஹாவிஷ்ணு, தன் சக்தியான ஏகாதசியைக் கெளரவிக்கும் விதத்தில் இந்நாளில் விரதம் இருந்து ஏகாதசியைப் போற்றுவோருக்குச் சகல நன்மைகளும் கிடைக்கும் என வரமளித்தார். சக்தி விழிப்புடன் இருந்து சரியான நேரத்தில் செயலாற்றியதால் நாமும் நம் சக்தியைப் பயன்படுத்தி விழிப்புடன் (உடல் மட்டுமில்லாமல் ஆன்மிக விழிப்புடனும்) இருந்து விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஏகாதசிகள் ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும் வரும், தேய்பிறையிலும் வரும். வளர்பிறை ஏகாதசி 12, தேய்பிறை ஏகாதசி 12 மொத்தம் 24 என்றாலும் நாழிகைக்கணக்குகளினால் கூடுதலாக ஒரு ஏகாதசி நாள் வரும். ஆக வருஷத்துக்கு 25 ஏகாதசிகள்.

எட்டு வயதில் இருந்து எண்பது வயது வரஇ கடைப்பிடிக்கலாம் எனச்ச் சொல்லப் படும் இந்த ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்றே ஒரே வேளை உணவு உட்கொண்டு, அன்றிரவு பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் ஆரம்பிக்க வேண்டும். நாம் இருக்கும் விரதம் வைகுண்ட ஏகாதசி என அழைக்கப்படும் மார்கழி மாத சுக்ல பக்ஷ ஏகாதசி எனில் அன்று காலை சீக்கிரம் எழுந்து குளித்துக் கோயிலுக்குச் சென்று சொர்க்கவாசல் திறப்பையும், மஹாவிஷ்ணு சொர்க்க வாசல் வழியாக வெளிவருவதையும் பார்த்து வரலாம். அன்று முழுதும் பழங்கள், இளநீர் என்றே சாப்பிட வேண்டும். அரிசி, கோதுமை போன்றவற்றினால் ஆன உணவுகளை உட்கொள்ளக் கூடாது. இரவு முழுதும் கண் விழித்து ஹரி நாமம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று காலை சீக்கிரமாய் எழுந்து குளித்து, ஹரி நாமத்தைச் சொல்லிக் கொண்டே, சுண்டைக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றைப் பல்லில் படாமல் உட்கொண்டு பாரணை பண்ணி விரதத்தை முடிக்க வேண்டும். துவாதசி அன்று சீக்கிரம் உணவு உட்கொள்ள வேண்டும். இந்த உணவில் சுண்டைக்காய், அகத்திக்கீரை, நெல்லிக்காய் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும். விரதம் இருந்ததால் சூடான வயிறும் உடலும் குளுமை பெறுவதற்கும் ஜீரண சக்தியைச் சரியாக்குவதற்கும் இவை உதவும்.

மது, கைடபர்களை அழிக்கப் போரிட்ட விஷ்ணுவிடம் அவர்கள் பணிந்து வணங்கித் தங்களை வைகுண்டத்திலேயே இருக்கும் பாக்கியத்தைக் கேட்டதாகவும், அவ்வண்ணமே அவர்களுக்கு விஷ்ணு அருள் செய்ததாகவும், அப்போது அவர்கள் தங்களுக்குக் கிடைத்த இம்மாதிரியான கருணையை பூலோக வாசிகளுக்கும் காட்டுமாறும், வைகுண்டத்தில் எப்படி வடக்கு வாசல் வழியாக விஷ்ணு வெளி வந்து தேவர்களுக்குக் காட்சி கொடுத்தாரோ, அவ்வண்ணம் பூலோகத்தின் பெருமாள் கோயில்களில் அர்ச்சாவதாரமாக விஷ்ணு வெளி வந்து பக்தர்களுக்குத் தரிசனம் தர வேண்டும் என்றும், அவரை வடக்கு வாசல் வழியே வெளி வருகையில் தரிசிக்கும் பக்தர்களுக்கும், அவரோடு தொடர்ந்து வரும் பக்தர்களுக்கும், தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை நீக்கி அவர்களுக்கு முக்தியை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகவும் பூலோகத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்புக்கான காரணத்தைத் தெரிந்து கொள்கிறோம்.  இனி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி குறித்துப் பார்ப்போம். 

6 comments:

சே.வேங்கடசுப்ரமணியன் said...

ஏற்பாடுகள் ரொம்ப மோசம்.கியூவில் நிற்பவர்களுக்கு கீற்றுக் கொட்டகை கூட போடவில்லை.மூலவர் சேவை...பரமபதவாசல்வழி என பிரித்தறிய முடியாமல் வெளியூர் காரர்கள் திணறினார்கள்.ஆயிரம் கால்மண்டபத்தில் மட்டும் நம்பெருமாள் சேவிக்க நன்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

வல்லிசிம்ஹன் said...

சுகமாகப் பரம்பத வாசலையும் பரந்தாமனையும் தரிசனம் செய்தோம்.
ஏகாதசி பற்றிய விவரங்களுக்கு மிகவும்நன்றி கீதா.

ஸ்ரீராம். said...


எவ்வளவு விளக்கமாக, அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்? நன்றி.

Geetha Sambasivam said...

வாங்க வேங்கட சுப்ரமணியன், முன்னே ஒருதரம் வந்திருக்கீங்க இல்லை? என் அண்ணா பெயர்னு கூடச் சொல்லி இருக்கேன் போல! :))

ஆமாம், ஏற்பாடுகள் மிக மிக மிக மோசம். அனைவருக்கும் கஷ்டமாகத் தான் இருந்தது. கம்பித்தடுப்புப் போட்டால் போதுமா? அதிலே செல்லும் வழி சரியாய் இருக்க வேண்டாமா? எத்தனை இடத்தில் வழி இல்லாமல் தாண்டிக் கொண்டும், தவழ்ந்து கொண்டும் போக வேண்டியதாப் போச்சு! :((((

Geetha Sambasivam said...

வாங்க வல்லி, வீட்டிலே இருந்திருந்தால் நாங்களும் சுகமாகவே தரிசித்திருப்போம். :))))

Geetha Sambasivam said...

வாங்க ஸ்ரீராம், பாராட்டுக்கு நன்றி.