எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, April 24, 2013

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ப்ரணய கலஹம்-மட்டையடித் திருவிழா


அவ்வளவில் ரங்கநாயகி நாச்சியாருக்குக் கோபம் அதிகமாகிவிட்டது. இவர் பொய் சொல்லிவிட்டு, உறையூருக்குச் சென்று ஊர் சுத்திவிட்டு இங்கே வந்து என்னமாக் கதை அளக்கிறார்!

இந்த நம்பெருமாளை உற்சவ அலங்காரத்தில் அது என்ன அலங்காரமாகவே இருக்கட்டுமே, சற்றே உற்றுக்கவனியுங்கள்.  அவன் உதடுகளில் ஒரு கள்ளச் சிரிப்பும், குறும்பும் இழையோடும்.  அதுவும் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் தன்னால் நாச்சியாரை மட்டுமல்ல இந்த ஜனங்களையும் எப்படியோ ஏமாத்திடலாம் என்ற நிச்சயம் தெரிவதையும் அவன் கண்களில் உணரமுடியும்.  நம்மை எப்படியும் உள்ளே விட்டுடுவாங்க.  நாம் சொல்வதை நம்பிடுவாங்க என்று நிச்சயமாகக் கொஞ்சம் ஆசுவாசமாகவே இருப்பான்.  கொஞ்சமும் கவலைப் பட்டுக்க மாட்டான். இப்படிப் பட்டவனை என்ன செய்யறது?  நாச்சியார் புலம்பறாப்போல் புலம்ப வேண்டியது தான்.  அதைக் கேட்டுக்கொண்டு மனதுக்குள்ளாகவே அவன் சிரித்துக் கொள்வது அந்த முகத்தில் அப்பட்டமாய்த் தெரியும். மேலும் மேலும் அடுத்தடுத்துக் கதை அளப்பான் பாருங்கள்.  அதென்னமோ இவன் என்ன சொன்னாலும் ஒரு பக்கம் மனம் அதை நம்பத் துடிக்கும்;  இன்னொருபக்கம் பொய் சொல்கிறான் என்றே தெரியும்.  ஆனாலும் அவன் லீலைகளை எல்லாம் ரசித்து மன்னித்து விடுவோம்.  இப்போ ரங்கநாயகி நாச்சியார் கேட்கப் போகிற கேள்விகளையும் அதுக்கு நம்பெருமாள் சொல்லப் போகிற பதிலையும் படியுங்கள்.

நாச்சியார் பண்டாரிகள் சொல்வது:

கணையாழி மோதிரம் காணாமல் போனதே மெய்யானால், விடியப்பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி உறையூரில் போய், மின்னிடை மடவார் சேரியெலாம் புகுந்து யதாமனோரதம் அனுபவித்து அவ்வனுபவத்தாலே உண்டாயிருக்கிற அடையாளங்கள் எல்லாம் திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்தேயும் அவ்வடையாளங்களையும் அந்யதாவாகக் கொண்டு நாங்கள் ஏழைகளானபடியினால் இப்படிப்பட்டிருக்கிற வஞ்சநோக்திகளையெல்லாம் நேற்றைக்கு எழுந்தருளினவிடத்திலே தானே சொல்லிக் கொண்டு இன்றைக்கும் அங்கே தானே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

"ஓஹோ, ஐயா, அப்படியா?  கணையாழி மோதிரம் நிஜம்மாகவே காணாமல் போனதா?  அது உண்மையா?  அப்படியெனில் விடிய பத்து நாழிகை இருக்கையிலேயே தாங்கள் எங்கே கிளம்பினீர்கள்?  உறையூருக்குச் சென்றதாகவல்லவோ கேள்வி!  அங்கே மின்னலைப் பழிக்கும் மெல்லிய இடையுடைய ஒரு பெண்ணின் நந்தவனத்திற்கு அருகே தாங்கள் உலாவியதாகவும் கேள்வி.  தங்களைக் கண்டு அந்தப் பெண் மயங்கினாள் என்றும் கேள்வி.  தாங்களும் அவளைக் கண்டு மோஹித்தீர்கள் எனக் கேள்விப் பட்டேன்.  இப்படியெல்லாம் செய்து தங்கள் இஷ்டம் போல், மனம்போல் அந்தப் பெண்ணுடன் கூடி இருந்து இன்பம் அனுபவித்துவிட்டு அந்த அனுபவத்தாலே உண்டாகி இருக்கும் இத்தகைய அடையாளங்களை அவற்றால் இல்லை என்கிறீரே! அந்த அடையாளங்களெல்லாம் சாட்சிப் பிரமாணமாக உள்ளனவே.  ஏன் இப்படி?  நானொரு ஏழைப் பெண் என்பதாலா? இப்படிப்பட்டதொரு வஞ்சகத்தை எனக்கு நீர் செய்யலாமா?  நேற்றைக்குத் தாம் எழுந்தருளி இருந்த இடத்திலே இத்தகைய சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு திரும்பிப் போய் அங்கேயே இன்றும் எழுந்தருளூவீராக!

அரையர்கள் மூலம் பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம்

நாமானால் உறையூரைக் கண்ணாலே கண்டதும் இல்லை;  காதாலே கேட்டதுமில்லை.  துஷ்டர்களாயிருக்கிறவர்களும் மனதுக்குச் சரிப்போனபடி சொன்னால் நீரும் அந்த வார்த்தைகளைத் தானே கேட்டுக்கொண்டு நம்மையும் ஒரு நாளும் பண்ணாத அவமானங்களெல்லாம் பண்ணலாமா?  நீங்கள் ஸ்த்ரீகளானபடியினாலே முன்பின் விசாரியாமல் பண்ணினீர்காளாமென்கிற அவமானம் உங்களுக்கே யொழிய நமக்குத் தேவையில்லை. ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக் கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்.

"ஆஹா, ரங்கநாயகி, அந்தோ!  உறையூரா?  அது எங்கே இருக்கிறதடி?  நான் அப்படி ஊரை இன்றுவரை காணவில்லையே!  அந்த ஊர்ப் பெயரையும் காதாலே கேட்டதும் இல்லையடி.  யாரோ, வழியோடு போகிற துஷ்டர்கள் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லிக் கொடுத்து உன் மனதைக் கெடுத்துக் குட்டிச் சுவர் பண்ணி இருக்கிறார்கள். அந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டுக் கொண்டு நீ இப்படி என்னை ஒருநாளும் இல்லாத திருநாளாக அவமானம் செய்யலாமா?  இதோ பார், ரங்கா, புத்தம்புதிய புஷ்பங்கள், உனக்காகவே வாங்கி வந்துள்ளேன்.  நீ ஒரு அழகிய பெண்மணி.  முன்பின் சரிவர விசாரிக்க வேண்டாமா?  விசாரிக்காமல் இவ்விதமெல்லாம் நீ சொன்னால் அதனால் விளையும் அவமானம் உனக்குத் தான் ரங்கா!  எனக்கில்லை.  மனதை சமாதானம் செய்து கொள்வாய்.  இதோ இந்த அழகிய புஷ்பங்களை ஏற்றுக் கொள்.  என்னை உள்ளே வரவிடு. என் அருமை ரங்கா, நான் உள்ளே வரலாமா?"

8 comments:

வல்லிசிம்ஹன் said...

என்ன ஒரு அநியாயம் செய்கிறார் இந்த ரங்கன்.!!! என்ன வாக்ஜாலம்.! பாவம் பிராட்டியார்.
இத்ற்கு மேல புஷ்பங்கள் வேறயா.
கள்ளனுக்கு மேலே கள்ளனா இருக்கிறாரே.அருமையான நடை கீதா. மனம் நிறைந்த பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

"அழகிய புஷ்பங்கள் கொண்டு வந்தால் ஏமாந்திறோவோமா நாங்க...!

உனக்கிருக்குதடி வேட்டு...!!"

ADHI VENKAT said...

சிறப்பான நடை. தொடர்கிறேன்.

ஸ்ரீராம். said...

மிகவும் சுவாரஸ்யமான பகுதிகள்.

Geetha Sambasivam said...

வாங்க வல்லி,
அநியாயம் தான் செய்கிறான். திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டுகிறானே! ரங்கநாயகிக்கு மட்டும் இருக்காதா?

Geetha Sambasivam said...

வாங்க டிடி, ஹிஹிஹிஹி

Geetha Sambasivam said...

வாங்க கோவை2தில்லி நன்றிம்மா.

Geetha Sambasivam said...

வாங்க ஸ்ரீராம், நன்றி.