எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, July 26, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

அரங்கனைக் கவனித்துப் பல மாதங்கள் ஆகிவிட்டன.  கோயிலுக்குப் போயும் பல மாதங்கள் ஆகிவிட்டன. :( கடைசியாய்ப்போனது  மார்ச் மாதத்தில் என நினைக்கிறேன். ஆனாலும் அரங்கன் குறித்த சிறு குறிப்புக் கிடைத்தாலும் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.  சமீபத்தில் அப்படிக் கிடைத்த சில தகவல்களின் தொகுப்புக்களை இங்கே வழங்குகிறேன்.  அரங்கன் பயணமும் பாதியில் நிற்கிறது.  அரங்கன் செல்லும் வழியில் துளசிதளங்களைப் போட்டுச் சென்றார்கள் என்று படித்தோம்.  அதை விரைவில் தொடர்கிறேன். இப்போது சில ஶ்ரீரங்க அதிசயங்கள் குறித்துப் பார்க்கலாம்.  கோயிலில் ரங்கா கோபுரம் வழியாக நுழைபவர்கள் முதலில் காண்பது ஒரு பெரிய மண்டபம்.  அதை ரங்க விலாச மண்டபம் என்பார்கள்.  அதன் நடுவேயே ஒரு சின்ன மண்டபமும் உண்டு.  அதற்கு மேற்கே உள் ஆண்டாள் சந்நிதி உள்ளது.  இந்த உள் ஆண்டாள் மிகவும் சக்தி வாய்ந்தவள் என்றும், இவளிடம் வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்டால் கேட்டது கிடைக்கும் என்றும் சொல்கின்றனர்.

இதைத் தவிர வெளி ஆண்டாள் சந்நிதியும் உண்டு.  இது "தோப்பு ராமன் சந்நிதி" என்னும் பெயரில் முன்னர் இருந்ததாகச் சொல்கின்றனர். இந்த வெளி ஆண்டாள் சந்நிதியில் நம்பெருமாள் ஆடிப்பெருக்கன்று காவிரிக்குச் சீர் கொடுத்துத் திரும்பும்போதும், பங்குனி உற்சவத்தில் உறையூர் சோழகுலவல்லியை மணமுடித்துக் கோயிலுக்குத் திரும்புகையிலும் ஶ்ரீரங்கநாதர் மாலை மாற்றிக் கொண்டே உள்ளே செல்லுவார்.  உள் ஆண்டாள் சந்நிதியில் ஆடிப்பூரம் சமயம் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் முடிந்ததும். உள் ஆண்டாள் சந்நிதி முன் நின்று மாலை மாற்றிக் கொள்வார்.  இந்தச் சிறப்பு ஆடிப்புரத்தின் ஏழாம் திருநாளான திருக்கல்யாணம், யானை ஏற்றம் அன்றும் ஆறாம் உற்சவத்தின் முதல் நாட்களிலும் நடைபெற்று வருகிறது. வெளி ஆண்டாள் சந்நிதி  பல வருடங்கள் முன்னர் காவிரிக்கரைக்கு அருகே இருந்ததாகவும், (அல்லது காவிரி இதுவரை ஓடி இருக்கிறது.) காலப்போக்கில் திருட்டு பயம் காரணமாக இங்கிருந்த உற்சவ விக்ரஹம் மட்டும் ரங்கவிலாச மண்டபத்தில் இருக்கும் ராமர் சந்நிதிக்கு மாற்றப்பட்டு இப்போது உள் ஆண்டாள் சந்நிதி என அழைக்கப்படுகிறது.




இதைத் தவிர தாயார் சந்நிதிக்கு அருகே கோதண்டராமர் சந்நிதிக்குப் பக்கத்தில் கண்ணாடி அறை ஆண்டாள் சந்நிதி இருக்கிறது.  சில முக்கிய உற்சவங்களின் போது நம்பெருமாள் வீதிவலம் முடிந்தோ அல்லது சந்தனு மண்டபம் அல்லது அர்ஜுன மண்டபத்தில் காட்சி கொடுத்த பின்னரோ  இங்கே வந்து தங்குவார்.  இங்கே இருந்தே மறுநாள் உற்சவத்திற்குக் கிளம்புவார்.  திரு ஆடிப் பூரத்தின் போது தினமும் இங்கே ஒவ்வொரு அலங்காரமாகச் செய்திருப்பார்கள்.  பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.  ஒரே ஒரு முறை சென்று பார்த்தோம்.  மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவைக் காட்சிகளைக் காண முடியும்.



கிழக்கே வெள்ளைக்கோபுரம் என அழைக்கப்படும் கோபுரம் காணப்படுகிறது.  இதை வெள்ளைக் கோபுரம் என அழைப்பதாலோ என்னமோ இதிலே வெள்ளை மட்டும் அடித்திருப்பார்கள்.  ஆனால் உண்மைக்காரணம் என்னவெனில் கோயிலை ஆக்கிரமிக்க வந்த துலுக்கப் படைகளில் ஒரு தளபதி மிகவும் மோசமாக நடக்க ஆரம்பித்தான்.  கோயிலையே அழித்துவிடுவானோ என அனைவரும் அஞ்சி இருந்தனர்.  அப்போது வெள்ளையம்மாள் என்னும் நாட்டிய மங்கை அவனை மயக்கி அவனுடன் அன்பாக இருப்பது போல் நடித்து அவனை ஏமாற்றி கோபுரத்தின் மேல் பகுதிக்கு அழைத்துச் சென்றாள்.  அங்கிருந்து அவனைக் கீழே தள்ளிவிட்டுக் கொன்றாள்.  பின்னர் தானும் கீழே விழுந்து உயிர் நீத்தாள்.  இவள் நினைவாகவே வெள்ளைக்கோபுரம் என்று அழைக்கப்படுவதாகச் சொல்கின்றனர்.




முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் (கி.பி 1250) ஆம் ஆண்டு அவன் அரங்கனைச் சேவிக்க வந்தான்.  அரங்கனின் திருவாராதனம் கண்டு வணங்கிக் கொண்டிருந்த அவனுக்கு அரங்கனின் வழிபாட்டில் பயன்படுத்தப்படும் நீரைத் தனியாக ஒரு பாத்திரத்தில் பெய்து வைப்பதற்கான திருப்படிக்கத்தை பட்டாசாரியார்கள் கொண்டு வராமல் மறந்தது தெரிந்தது.  உடனே தன் ராஜக் கிரீடத்தைக் கழற்றி அந்தப் புண்ணிய நீரை ஏந்தினான் மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.  அனைத்து மக்களும் பட்டாசாரியார்களும் மிகவும் மனம் நெகிழ்ந்து அரசனின் பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காக இன்றளவும் அவ்வாறு திருப்படிக்கத்தில் வழிபாட்டு நீரை ஏந்தும்போது, "சுந்தரபாண்டியம் பிடித்தேல்" என்றே அருளப்பாடு நடைபெற்று வருகிறது. இன்னும் இந்த மன்னன் கோயிலில் பல கட்டிடங்களையும் எழுப்பி பல்வேறு விதமான அலங்காரங்களையும் செய்து கொடுத்திருக்கிறான்.  அரங்கன் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, நரசிம்மர் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளி ஆகியவற்றை இவன் தான் கட்டிக் கொடுத்தான்.  ஒரிசாவில் கடக் பிரதேசத்து மன்னனை எதிர்த்துப் போரில் வென்று கொண்டு வந்த பொருட்களை எல்லாம் அரங்கனுக்கு மரகதமாலையாகவும், பொற்கிரீடமாகவும், முத்தாரங்களாகவும், முத்து விதானமாகவும், பொற்பாத்திரங்களாகவும் வழங்கினான்.

எல்லாவற்றையும் விட மேலாக அரங்கனின் தெப்போற்சவத்திற்காகத் தங்கத்திலேயே படகு கட்டிக் கொடுத்தான்.  அதில் தனது பட்டத்து யானையை இறக்கித் தான் ஏறி அமர்ந்த வண்ணம் அருகே இன்னொரு படகை நிறுத்தி இரு படகும் சமமான நீர்மட்டத்துக்கு வரும் வரையில் பொற்காசுகளை நிரப்பிக் கோயிலுக்கு தானமாக வழங்கினான்.


படங்களுக்கு நன்றி கூகிளார்.

6 comments:

ஸ்ரீராம். said...

படகில் யானை நின்றால் என்ன ஆகும்? மூழ்கி விடாதோ?

Geetha Sambasivam said...

எனக்கும் அந்த சந்தேகம் படிக்கிறச்சேயே வந்தது. ஆனால் இது சரித்திரக் குறிப்பு. அதனால் உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளது. :)

இன்னம்பூரான் said...

நீங்கள் எல்லாம் எப்படி ரெங்கனை சேவித்தேள்? நாங்க போகச்சே படுத்துண்டுன்னு இருந்தாரு. எக்கச்ச்க்கக்கூட்டம் வேறே. கேலி கிடக்கட்டும். அந்த சுந்தர பாண்டியன் பற்றிய காரணப்பெயரும் ஆண்ஆள் சமாச்சாரங்களும் பிரமாதம். வெளி ஆண்டாள் புறம். உள் ஆண்டாள் அகம்.
எல்லாத்தையும் படிக்கச்ச ஆனந்தமே.

திண்டுக்கல் தனபாலன் said...

வெள்ளைக்கோபுர விளக்கம் அறிந்தேன் அம்மா....

Geetha Sambasivam said...

"இ" சார், நீங்க போனப்போ நம்பெருமாள் இல்லையா? எந்த மாசம் போனீங்க? நீங்க படுத்துண்டு இருந்ததாப் பார்த்தவர் பெரிய பெருமாள். :)))) யோக நித்திரையில் இருந்திருப்பார். அவருக்கு முன்னால் நம்பெருமாள் முகவாய்க்கட்டையில் சின்னஞ்சிறு குழியோடு புன்முறுவல் பூத்துக்கொண்டு, விஷமம் செய்துவிட்டு மாட்டிக் கொண்ட முகபாவத்துடன் இருப்பார். எனக்கு இவரைத் தான் ரொம்பப் பிடிக்கும். எப்போப் போனாலும் ஒரு குறும்புச் சிரிப்பு!

Geetha Sambasivam said...

வாங்க டிடி, நன்றி.