எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, August 21, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! திருக்கோயிலின் வழிபாட்டு முறைகள்!

இப்போது சில நாட்களாக மின் தமிழ்க் குழுமத்தில் கோயில்களின் வழிபாட்டு முறைகள் பற்றிய விவாதம் நடைபெற்று வருகிறது.  அதில் அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் கருத்தை ஆதரித்துப் பலரும் பேசினார்கள்.  அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆவதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.  என்றாலும் ஶ்ரீரங்கம் பெருமாள் கோயில், மதுரை மீனாக்ஷி கோயில், திருஆனைக்கா அகிலாண்டேஸ்வரி கோயில், சிதம்பரம் நடராஜா கோயில் போன்ற ஆகம, வைதிக(சிதம்பரம் கோயிலில் வைதிக முறை) முறைப்படி பரம்பரை பரம்பரையாகக் கடவுளுக்கு சேவை செய்து வரும் குடும்பங்கள் இருக்கையில் இப்போது புதிதாக ஆகமங்கள், வழிபாட்டு நியமங்கள் கற்றவர் அங்கெல்லாம் கருவறை சென்று வழிபாடு நடத்த முடியாது என்பது என் கருத்தாக இருந்தது.  இதன் மூலம் புதிதாக அர்ச்சகர்களாக வருபவர்களை நான் எதிர்க்கிறேன் என்பது போல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது.


உண்மையில் ஶ்ரீராமாநுஜரால் ஏற்படுத்தப்பட்ட நியமங்களையே ஶ்ரீரங்கம் கோயிலில் இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.  ஆரம்பத்தில் வைகானச முறைப்படி வழிபாடுகள் நடைபெற்று வந்த கோயிலில் ஶ்ரீராமாநுஜர் காலத்தில் தான் பாஞ்சராத்திர ஆகம முறைப்படி மாற்றி அமைக்கப்பட்டது.  ஶ்ரீராமாநுஜர் காலத்திலே கோயிலை நிர்வகிக்கக் கோயில் பணிகளைப் பத்துத் தொகுதிகளாகப் பிரித்து அதற்குரிய தொண்டர்களை ஏற்படுத்தினதோடன்றி கோயிலின் நிர்வாகத்திலும், பெரிய பெருமாளிடத்திலும் ஈடுபாடும் பக்தியும் கொண்ட பொதுமக்களையும் பல விதங்களிலும் பங்கேற்கும்படி செய்து இருக்கிறார்.  ஶ்ரீவைஷ்ணவர்களின் தலைநகரமாகவே ஶ்ரீரங்கம் விளங்கி வந்தது.


கோயில் பல்வேறுவிதமான சமுதாயப் பணிகளையும் கொண்டிருந்தது. கோயில் அர்ச்ச்கர்கள், கருவூலர்கள், கணக்கர்கள், திவ்யப்ரபந்தம் ஓதுவோர், மற்றப் பணிகளைச் செய்யும் கோயில் அலுவலர்கள், இசைவாணர்கள், கூத்தர்கள், நடன மகளிர் போன்றோரும் கோயில் பணியாளர்களில் அடங்குவார்கள்.  இத்தொகுதியில் வடமொழியில் வேதம் ஓதுவோர், கோயில் நந்தவனங்களை நிர்வகித்துப் பூமாலைகள் கட்டுபவர்கள், வாத்தியங்களை வாசிப்பவர்கள். நாள் தோறும் நிவேதனங்களுக்குப் பயன்படுத்தும் மண்பாண்டங்களைச் செய்யும் குயவர்கள், செப்புப்பாத்திரங்களைச் செய்து தரும் கன்னார்கள், கடவுளின் ஆடைகளைத் தூய்மை செய்யும் வண்ணார்கள், தையற்காரர்கள், நாவிதர்கள், பொற்கொல்லர்கள், வாகனங்களும், தேரும் செய்யும் தச்சர்கள், கோயிலிலேயே இருந்து காவல்காக்கும் பணியாளர்கள், போன்றோரும் அடங்குவார்கள்.


இறைவன் திருவீதி உலாவருகையில் ஒவ்வொரு தரமும் எந்த, எந்த வீதியில் அரங்கன் உலா வருவானோ அங்கெல்லாம் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்பவர்கள், கூட கோயில் பணியாளர்களாகவே கருதப்பட்டனர். கோயிலைச் சார்ந்து ஒரு கல்லூரியும், மருத்துவப் பணியமைப்பும் கூட இருந்ததாகத் தெரியவருகிறது.  கோயிலைச் சார்ந்த கல்லூரிகளின் ஆசிரியர்கள் அங்கேயே தங்கி இருந்து பாடங்களைக் கற்பிக்கும் வண்ணம் கோயிலைச் சுற்றிய பிராகாரங்கள் எனப்படும் வீதிகளிலே தங்கி இருந்தனர்.  அவர்களுக்கும், கோயிலின் நித்திய வழிபாடுகள் செய்து வரும் அர்ச்சகர்களுக்கும் பயன்படும்படியாக மருத்துவமனை மருத்துவப் பொருட்களால் நிரப்பப்பட்டு  பயன்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. பெரும்பாலான இப்பதவிகள் பரம்பரையாகவே வந்தன. ஆனால் தண்ணீர் தெளிப்போர், திரு அலகிடுவோர், காவல் புரிவோர் போன்ற பணிகளுக்குத் திறமையோ தனிப்பயிற்சியோ தேவையில்லை என்பதால் மற்ற பதவிகளில் இருப்பவர்கள் தமக்கு உரிய துறைகளில் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டது.  வழிபாட்டுக் கிரியைகள் புரிவதற்கு நம்பிகள் என்போர் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்டனர்.  இவர்கள் பலகாலமாகத் தொன்று தொட்டு வரும் ஆகமங்களில் தேர்ச்சி பெற்றவராகவும், வைணவ சம்ஹிதைகள், தாந்திரிகத் திறன்கள் போன்றவற்றில் தேர்ச்சி உள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும்.


புதிதாக ஒரு வைணவக் கோயில் எழுப்பப்பட்டால் இந்தக் கோயிலின் திறமை வாய்ந்த நம்பி அங்கே அழைக்கப்படுவார்.  இதே போல் மற்றத் தொழில்களுக்கும் புதிய கோயில்களுக்கு இம்மாதிரிப் பழமையான கோயில்களின் தேர்ந்த தொழிலாளிகளே சென்று தங்கள் சேவையைத் தொடருவார்கள்.  இனி கோயில் அலுவலர்கள் எப்படிப் பத்துவகைப்பட்டனர் என்பதையும், அவரவர் அலுவல் முறைகளையும் தொடர்ந்து காணலாம். இது கோயிலொழுகு என்னும் ஶ்ரீரங்கம் திருக்கோயில் வரலாற்றைக் கூறும் நூலில் இருந்து எடுக்கப்பட்ட சிறு தொகுப்பு.  இது அரசின் அறநிலையத் துறையால் வெளியிடப்படும் நூலில் காணப்படுகிறது.


1. கோயில் அலுவலர்களுள் முதன்மையானவர்கள் "திருப்பதியார்".  இவர்களின் ஆன்மிக குரு ஶ்ரீராமாநுஜர். இவர்களே மூலஸ்தானம் எனப்படும் கருவறை ஊழியத்துக்குப் பொறுப்பானவர்கள்.  இவர்களின் தலைமை பட்டாசாரியார் கையில் தண்டு என்னும் முத்திரைக் கோல் ஏந்திச் செல்வார். கோயிலில் நடைபெறும் அன்றாட நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை  இவர்கள் கட்டாயமாய் அறிந்திருக்க வேண்டும். தினம் காலை முறைப்படி நீராடியபின்னர் வைகறையில் இருந்து இவர்கள் கடமைகள் தொடங்கும்.  கோயிலின் மூலஸ்தானக் கதவு திறந்ததுமே முகப்பு மண்டபம், பித்தளை பதித்தக் குலசேகரன் படிவாயில் ஆகிய இடங்களையும் பிரதக்ஷிணம் செய்யும் பிரகாரத்தையும் சுத்தம் செய்து தூய்மை செய்வார்கள்.  திருவிளக்குகள் அனைத்தும் இவர்களால் செய்வார்க்கப்பட்டுத் திரியைப் புதிதாகப் போட்டோ அல்லது பழைய திரி இருந்தால் அவற்றைத் துடைத்தும் சுத்தம் செய்து வழிபடத் தயாராக வைப்பதும் இவர்கள் பணி. இவர்களுடைய உதவியாளர்கள் ஏகாங்களிகள் என அழைக்கப்படுகின்றனர். வழிபாட்டுக்காலங்களில் இவர்கள் ஒவ்வொரு விளக்குகளையும் ஏற்றி வழிபாடு நடத்தும் அர்ச்சகர்களிடம் எடுத்துக் கொடுப்பதும், அவர்கள் ஹோமங்கள் செய்கையில் விளக்கு ஏந்துவதும் இவர்கள் பணி. தூபங்கள் போடுவது, பக்தர்களுக்குப் பிரசாதங்கள் தருதல் இவர்கள் பணியாகும்.


மாலிக்காஃபூர் படையெடுப்பிற்குப் பின்னர் இவர்கள் பணிகளில் மாறுதல்கள் ஏற்பட்டதாகக் கோயிலொழுகு கூறுகிறது.  இதன் பிற்பட்ட காலத்தில் வேதம் ஓதுதல், பிரபந்தம் பாடுதல் ஆகியனவும் இவர்கள் அன்றாடக் கடமைகளில் சேர்ந்தவையாயிற்று.  

2 comments:

வல்லிசிம்ஹன் said...

வெகு தாமதமாக வருவதற்கு மன்னிக்கணும் கீதா.இத்தனை ஒழுங்கு முறைகள் இருந்திருக்கிறது. அத்தனையும் அருமையாக வழி அமைக்கப் பட்டு நன்றாகவே நடந்திருக்கிறது. கேட்பதற்கெ இனிமை. நீங்கள் முயற்சி எடுத்து இவ்வளவு விளக்கங்கள் கொடுப்பது மகிழ்ச்சி.

Geetha Sambasivam said...

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ரேவதி.