எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, January 31, 2015

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஶ்ரீரங்கத்திற்கு ஒரு பொற்காலம் எனில் அது பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யம் ஏற்பட்ட போது என்று சொல்லலாம். பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் ஶ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகம் சீரமைக்கப்பட்டதோடு கோயிலும் பலமுறை சீரமைக்கப்பட்டது. இங்கே காணப்படும் சுமார் 70 கல்வெட்டுக்களில் பல கி.பி. 1225க்கும் கி.பி. 1344க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற கோயில் புனரமைப்பு வேலைகள் குறித்தும், பாண்டிய மன்னர்களால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட எண்ணற்ற விலை மதிக்க இயலாப் பரிசுகள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கின்றன. சோழநாட்டு அரசனாக இருந்த மூன்றாம் ராஜராஜனைத் தோற்கடித்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் தான் பாண்டியர்கள் சாம்ராஜ்யம் புத்துணர்வு பெற்று எழுந்தது. அப்போது தான் ஶ்ரீரங்கம் கோயிலிலும் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டன.

பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையில் அடிக்கடி நடந்த மோதல்களினால் கோயில் வளாகத்துக்குள்  நடைபெற்ற மோசமான நடத்தைகளை விசாரிக்க வேண்டி ஒரு பெரிய கூட்டம் அப்போது தான் கோயிலின் வரலாற்றிலேயே முதல் முதலில் நடைபெற்றது. இவர்களில் ஜீயர்கள், ஶ்ரீகார்யக்காரர்கள், பாகவதர்கள், பல்வேறு விதமான தொண்டுகளைச் செய்து வரும் நம்பிமார்கள், வாயில் காப்போர்கள், பட்டாசாரியார்கள், ஶ்ரீரங்கம் கோயிலின் அலுவலகத்தைச் சேர்ந்த பல்வேறு ஊழியர்கள், பதினெட்டு மண்டலங்களைச் சேர்ந்த ஶ்ரீவைணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ராஜமஹேந்திரன் தெருவின் மேற்குப் பகுதியில் கூடினார்கள். பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இறந்த காலத்தில் கோயிலுக்குப் பாதகம் செய்தவர்கள் நீக்கப்பட்டுப் புதியவர்கள் நியமிக்கப்பட்டனர்.  கோயிலின் நிர்வாகத்தைச் செம்மை செய்து முழு அர்ப்பணிப்பு உணர்வோடு தொண்டாற்றக் கூடியவர்கள் நிர்வாகத்தில் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் நிர்வாகச் சீரமைப்புச் செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் மாறவர்மனுக்குப் பின்னர் வந்த ஜடாவர்மன் சுந்தர பாண்டியனும்  திருக்கோயிலில் பொன்னால் திருப்பணி செய்ததால் "பொன்வேய்ந்த பெருமாள்" என அழைக்கப்பட்டான். இவன் காலத்தில் பொன்னாபரணங்கள் மட்டுமின்றி, பொற்கலசங்கள், விமானங்கள், மற்றும் விலைமதிக்க முடியாப் பல ரத்தினங்களால் ஆன ஆபரணங்கள் கோயிலுக்கு வழங்கப்பட்டது. பாண்டியனே துலாபாரம் மேற்கொண்டு தன்னுடைய எடைக்கு எடை பொன்னைக் கொடுத்ததாகவும் ஒரு கல்வெட்டு கூறுவதாகத் தெரிய வருகிறது.

பல்வேறு போர்களில் ஈடுபட்டு வென்று கிடைத்த பொருட்களை எல்லாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஶ்ரீரங்கம் கோயிலுக்குக் கொடுத்ததாகக் கேள்விப் படுகிறோம். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலே தான் நரசிம்மருக்கும், விஷ்வக்சேனருக்கும் தனித்தனி சந்நிதிகள் கட்டப்பட்டதாகவும் அறிகிறோம். சந்நிதிகள், விமானங்கள்  தங்கத் தகடுகள் வேயப்பட்டு கோபுரம் தங்கமுலாம் பூசப்பட்டன. மஹாவிஷ்ணுவின் அர்ச்சாவதாரம் ஒன்றும் தங்கத்தில் வைக்கப்பட்டது.


தகவல் உதவி: திரு கலைக்கோவன் "தி ஹிந்து" ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரை, Srirangam's Golden Era.

3 comments:

ரிஷபன் said...

ஸ்ரீரங்க நிதியைக் காப்பாற்றிக் கொடுத்தார்களா !

வல்லிசிம்ஹன் said...

அருமையான தகவல்கள் . மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் செய்யப் பட்ட பணிகள் என்றால் இன்னும் பெருமை. பகிர்ந்து கொண்டதற்கு மிக நன்றி கீதா.

ஸ்ரீராம். said...

இந்தக் காலத்தில் இளையராஜா ஒரு கோபுரம் (சீர்) அமைப்பதில் பங்காற்றினார் என்று படித்த நினைவு இருக்கிறது!