எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, September 08, 2015

ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கன் பட்டினி கிடக்கிறான்!

அரங்கனோடு சேர்ந்து கொள்ள மேலும் அரங்கமாநகரிலிருந்து வந்தவர்களில் சில நாட்டியப் பெண்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் துருக்க வீரர்களிடம் மாட்டிக்கொள்ள ஒருத்தி மட்டும் எப்படியோ தப்பி அரங்கனைத் தேடிச் செல்லும் இருவருடன் சேர்ந்து கொண்டாள். இருவருமே இளைஞர்கள். தங்களுடன் ஓர் இளம்பெண் சேர்ந்து கொண்டது உள்ளூரப் பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் அவளையும் அழைத்துக் கொண்டு நடந்தனர். வழியில் சத்திரம் ஒன்றில் தங்கியபோது அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டு வந்த துருக்க வீரர்களிடமிருந்து அவளைக் காக்கவேண்டி நெற்குதிருக்குள் அவளை மறைத்தனர். பின்னர் துருக்க வீரர்கள் திரும்பியதும் அங்கிருந்து தப்பியவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஆண் வேடம் போட்டு அழைத்துச் சென்றனர். இருந்தும்  மீண்டும் டில்லி சுல்தானின் வீரர்களின் தலைவன் ஒருவனிடம் மாட்டிக் கொள்ள விரர் தலைவன் அவளைப் பெண் என அடையாளம் கண்டு பிடித்தாலும் என்ன காரணத்தாலோ விட்டு விடுகிறான். 

மூவரும் உள்ளூரக்கலக்கத்துடன் மேலே நடக்க பாண்டியனுக்கு உட்பட்ட வாணாதிராயர் பரம்பரையார் அவர்கள் திருவரங்கத்திலிருந்து வருவதைக் கேள்விப் பட்டு எதிர்கொண்டு அழைத்தனர். இரு இளைஞர்களையும் ஓர் இளம்பெண்ணையும் பார்த்துத் திகைக்க இளம்பெண் தன்னுடைய மனைவி என அவர்களில் தலைவன் ஆன இளைஞன் கூற விட்டு விடுகின்றனர். ஒரு வாரம் அங்குமிங்கும் அலைந்தவர்கள் ஒரு வழியாக அரங்கன் போன பாதையைக் கண்டுபிடித்தனர். விரைவில் அரங்கன் ஊர்வலத்தையும் கண்டனர். பல்லக்கில் எவ்வித நகைகளும் இல்லாமல் தன் பரிமள கஸ்தூரி மணம் மட்டும் சுற்று வட்டாரம் முழுதும் மணக்கக் காட்சி அளித்த அரங்கனைப் பார்த்துக் கண்ணீர் விட்டனர். அதோடு ஆரம்பத்தில் அரங்கனோடு சேர்ந்து வந்திருந்த கூட்டமும் குறைந்து போயிருந்தது. பெட்டகங்கள் கொள்ளை அடிக்கப்பட்ட விபரமும் அதிலிருந்து உடல் நலம் சரியில்லாமல் மனம் கலங்கிப் படுத்திருந்த பிள்ளை உலகாரியரையும் கண்டு விசனப்பட்டார்கள். 

அவர்கள் திருவரங்கத்திலிருந்து வருவதைக் கேள்விப் பட்ட பிள்ளை உலகாரியர் டில்லி வீரர்கள் அரங்கமாநகரை விட்டுச் சென்றுவிட்டனரா என விசாரித்தார். அவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி இருப்பதை இளைஞன் கூறக் கேட்ட பிள்ளை உலகாரியர் அரங்கனுக்கு இப்படி ஒரு சோதனையா என மனம் வேதனைப்பட்டார்.  வந்தவர்கள் பல்லக்கின் அருகே சென்று பார்க்க, பல்லக்கு இருந்த கோலம் அவர்கள் மனதைப் பதற அடித்தது. ராஜகிளி, "அரங்கா! அரங்கா!" என்று சோகமாகக் கூறித் தன் இறக்கைகளைப் படபடவென அடித்துக் கொண்டது. பல்லக்கைச் சுற்றி இருந்த சித்திரத் துணிகள் கிழிந்து போய் இருந்தன. விதானங்கள் உடைபட்டு ஆங்காங்கே தூசியும் மண்ணும் கலந்து பல்லக்கின் ஒளியே குறைந்து காணப்பட்டது. அப்போது வந்தவர்கள், பெருமாளுக்கு விளக்காவது வைக்கக் கூடாதா எனக் கேட்க, எண்ணெய் இல்லாக் கொடுமையைச் சொல்லி அரற்றினார்கள் அரங்கனின் பரிசனங்கள். அதற்குள்ளாக இன்னொருவர் பல்லக்கின் திரையைத் திறந்து அழகிய மணவாளரின் தரிசனத்தைக் காட்ட அதைக் கண்ட மூவரும் திகைத்து உறைந்து போனார்கள்.

தங்கக்கீரீடம் தாங்கி, அதுவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கிரீடமாக இருக்கும். நெற்றியில் நீலக்கல், வைரக்கல்லினால் ஆன திருநாமம், காதுகளில் கர்ணப்பூக்கள், மார்பில் பொன்னாபரணங்களும், ரத்தின ஆபரணங்களும் புரள, தங்கப்பூணூல் ஒளி வீச, கை,கால் இடைகளிலும் பொன் ஆபரணங்களைப் பூண்டு சர்வாபரண பூஷிதராய்க் காட்சி அளிக்கும் அரங்கன் இன்று படு ஏழையாகக் காட்சி அளித்தார். அரையில் சின்னப் பருத்தி வேட்டி. கையால் நெய்யப்பட்ட நூலினால் ஆன பூணூல், தலையில் கிரீடம் இல்லை! காதுகளில் ஆபரணங்களோ, திருமார்பில் ஆபரணங்களோ கிடையாது! கைகள், கால்கள், இடை எங்கும் ஆபரணம் எதுவும் இல்லாமல் வெறுமையாகக் காட்சி அளித்தார். அரங்கனின் நிலைமை பரிதாபகரமாக இருந்ததோடு அல்லாமல் மேலும் வருத்தத்தை அளிக்கும் சொல்லைக் கூறினார் அங்கிருந்த ஒருவர். காலையிலிருந்து பெருமாளுக்கு அமுது செய்யவே இல்லை என்றும் அமுது செய்ய வேண்டிய பொருட்கள் எதுவும் இல்லை என்றும் கூற வந்தவர்கள் கண்களில் கண்ணீர் மழையெனப் பெயதது. 

அனைவரையும் காத்து ரக்ஷிக்கும் அரங்கனுக்கா இந்நிலைமை? இது என்ன கொடுமை! அரங்கனின் பொருட்களைக் கூடக் களவாடும் மனிதர்கள் இருக்கிறார்களா? மனிதர்கள் செய்யும் இந்தக் கொடுமையை அரங்கன் ஏன் கண்டிக்கவில்லை? தண்டிக்கவில்லை? ஏனெனில் இது அவன் செயல் அன்று! மனிதர்கள் செய்யும் கொடுமை! அவர்களின் விதியால் விளைந்த இந்தக் கர்ம பலனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். அரங்கனுக்கு அதனால் எவ்விதக் குறையும் இல்லை. அவன் இதற்கு எதுவும் செய்ய இயலாது. அவர்களாகத் திருந்தி வந்தால் தான் உண்டு. அதற்கும் காலம் கனிய வேண்டும். அவன் விதியை மீறி எதுவும் செய்யும் அதிகாரமோ, எண்ணமோ அரங்கனுக்குக் கிடையாது. ஆகையால் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருக்கிறான்.  

திருவரங்க ஊரை மட்டுமின்றிச் சுற்று வட்டாரம் முழுதையும் அரங்கன் தான்பரிபாலிப்பாதாக அங்குள்ள மக்கள் நம்பிக்கை. அவருக்கில்லாத சொத்தா? ஆனால் அனைத்தையும் துறந்து இதோ ஒரு துறவி போல் ஒரு காலம் அமுது செய்விக்கக் கூட வழியில்லாமல் அரங்கன் நிற்கையில் மனிதர்களான நாமெல்லாம் எம்மாத்திரம்!

2 comments:

ஸ்ரீராம். said...

பாவம் பெருமாள்.

வல்லிசிம்ஹன் said...

பெருமாளுக்கு நகை போட்டால் அதற்கும் கேலி சொல்பவர்கள் தான் அதிகம். எளியவருக்கும் எளியவனான
அரங்கனுக்குக் குறை ஏது.

மனம் பதறினாலும் இது ரங்கனுக்கு வந்த கொடுமை இல்லை. நமக்கு நேர்ந்த வறுமை. அருளிண்மை.
என்கிற சமாதானம் தான்.