எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, October 29, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

பிள்ளை உலகாரியரைக் கண்ட குலசேகரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அந்தத் தோப்பின் ஓர் ஓரமாகத் திரை போட்டு மேலே விதானத்தால் மூடி நடுவில் ஓர் படுக்கையை விரித்துப் படுத்திருந்தார் பிள்ளை உலகாரியர். அவரை வணங்கித் தன் கவலையையும் தெரிவித்தான் குலசேகரன். அதற்குப் பிள்ளை உலகாரியர் அவர்களை ஆசுவாசம் செய்தார். பின்னர் அவர்களை ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருக்கும்படி வற்புறுத்தினார். அப்போது தான் அரங்கனைக் காப்பாற்றி எடுத்துச் செல்ல முடியும் என்றும் எடுத்துச் சொன்னார்.  அதைக் கேட்ட குறளன் என்பவனும் குலசேகரனும் அதற்கு ஒத்துக் கொண்டார்கள்.

சிறிது நேரத்தில் அரங்கனின் ஊர்வலத்தில் வந்த சாதாரண மக்களும் அரங்கனின் பரிசனங்களும் ஒன்று கூடி மச்சக்காரனின் உடலைத் தகுந்த மரியாதைகளுடன் புதைத்தார்கள்.  அவர்களுடன் வந்த ஶ்ரீபாதம் தாங்கி ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அவரை வேட்டுவர் குடியிருப்பில் தங்கிச் சிகிச்சை எடுக்கும்படி ஏற்பாடுகள் செய்து பின்னர் சுத்திகள் எல்லாம் செய்து முடித்து நிலவு மேலே எழும்பினதும் அரங்கனது பயணத்தைத் துவக்கினார்கள். காற்று தென்றலாக வீசியது. நிலவோ வெள்ளியை உருக்கி ஊற்றினாற்போல் ஒளியைப் பொழிந்தது. குலசேகரனுக்கு அந்தப் பயணத்தின் இடையே மச்சக்காரனின் நினைவு வந்தபோதெல்லாம் தேம்பி அழுதான். கடைசியில் அவர்கள் பாதி இரவில் ஓர் காட்டாற்றின் கரையில் வந்து பயணத்தை நிறுத்திக் கொண்டார்கள்.

அங்கேயே வேட்டுவர் தந்த தானியங்களை அடுப்பிலிட்டு வேக வைத்துக் கஞ்சி போல் காய்ச்சி அரங்கனுக்கு நிவேதனம் செய்து அவர்களும் உண்டார்கள்.  பின்னர் அனைவரும் படுக்க ஆயத்தம் செய்தனர். குலசேகரனுக்கு உணவு இறங்கவில்லை. படுக்கவும் பிடிக்கவில்லை. மிகக் கவலையுடன் அவன் காட்டாற்றில் இறங்கினான். கரையிலிருந்து கீழிறங்கி ஆற்றின் மணல்வெளிக்குச் சென்று அங்கே படுத்தான். மனம் புழுங்கியது.  அடுத்தடுத்து நேர்ந்த தாயின் மரணம், தான் அன்புடன் பழகிய மச்சக்காரனின் மரணம் இரண்டும் அவனை வாட்டியது. குறுகிய நேரமே பழகினாலும் மச்சக்காரன் மிகவும் நல்லவன் என்றும் வெள்ளை மனம் கொண்டவன் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. 

அவன் மனதில் அரங்கன் பால் கொண்டிருந்த மாசு மருவற்ற தூய பக்தியை எண்ணி எண்ணிக் குலசேகரன் மனம் விம்மினான். அந்த பக்தியினால் அன்றோ அவன் அவ்வளவு அடிகளைத் தாங்கி இருக்கிறான்.  அதனால் அன்றோ அவன் இறக்கவும் நேரிட்டது! தன்னையும் அறியாமல் தூங்கிய குலசேகரனுக்குக் கொடிய கனவுகள் மாறி மாறி வந்தன. மச்சக்காரனின் இறந்த உடலைக் கூடையில் வைத்துத் தூக்கிக் கொண்டு தான் அந்தக் காட்டாற்றின் கரைக்கு வந்ததாக அவனுக்குள் ஓர் எண்ணம். அதுவே கனவாகவும் வந்தது. உடலை தகனம் செய்ய நினைக்கையில் அவனை யாரோ மதுரமான குரலில், "ஆர்ய!" என்று அழைத்தனர்.

குலசேகரன் முன்னால் அப்போது நின்று கொண்டிருந்தது ஹேமலேகா! அவனுக்கு அது கனவா, நனவா என்றே புரியவில்லை. ஹேமலேகா, ஹேமலேகா என்றழைத்த வண்ணம் தன்னை உலுக்கிக் கொண்டு எழுந்தவன் எதிரே உண்மையாகவே அவள் அமர்ந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டான்.  மீண்டும் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்க்க அது ஹேமலேகா இல்லை, வாசந்திகா என்பதும் புரிந்தது. எப்படியோ அவன் உண்ணாமல் வந்து விட்டதைக் கவனித்திருந்த வாசந்திகா ஓர் தொன்னை நிறையக் கூழை நிறைத்துக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள். ஹேமலேகாவின் நினைவிலேயே இருந்த குலசேகரனுக்கு அது அவளே கொடுப்பது போலிருக்க மறுப்புச் சொல்லாமல் வாங்கி அருந்தினான். 

No comments: