எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, November 12, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

இந்தச் சம்பவங்கள் எல்லாம் கற்பனை அல்ல. உண்மையாகத் தமிழகத்தில் நிகழ்ந்தவை. ஒரு சில கதா பாத்திரங்கள் மட்டுமே கற்பனை. மற்றபடி பிள்ளை உலகாரியர், வேதாந்த தேசிகர் போன்றோர் கற்பனைக் கதாபாத்திரங்கள் அல்ல. அரங்கனைத் தூக்கிச் சென்றதும் ஊர் ஊராக ஊர்வலம் சென்று அரங்கனை மறைக்கப் பாடுபட்டதும் உண்மையே. இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தது பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் ஆகும். 1323 ஆம் ஆண்டில் நடந்தவை. பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே குறைந்து கொண்டு வந்த சோழ சாம்ராஜ்ஜியத்தின் அதிகாரம், இறுதிக் கட்டத்தை அடைந்தபோது பாண்டியர் பேரரசர்களாக ஆகி இருந்தனர். பாண்டியர்கள் தமிழ்நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து ஆண்டு கொண்டிருந்தனர். பல பாண்டிய மன்னர்களும் சிறப்பாகவே ஆட்சி புரிந்து வந்தாலும் இவர்களில் மிகத் திறமைசாலியான குலசேகரப் பாண்டிய மன்னர் 1310 ஆண்டில் கொல்லப்பட்டார். அவருக்கு நேரடி வாரிசுகள் என ஐந்து பேர் இளவரசர்கள் என்னும் பெயரில் கிளம்பி நாட்டை ஐந்து துண்டாக்கி ஆட்சி புரிந்து வந்தனர்.

இவர்களின் ஒற்றுமைக் குறைவால் ஏற்கெனவே கொங்கு நாட்டுப் பகுதியிலும் அருண சமுத்திரம் என அப்போது அழைக்கப்பட்டு வந்த திருவண்ணாமலைப் பகுதியிலும் ஹொய்சாளர்களின் ஆட்சி நடந்து வந்தது.  மதுரையைப் பராக்கிரம பாண்டியர் ஆட்சி புரிந்து வந்தார். அந்தச் சமயம் தான் ஆரம்பத்தில் கூறியவாறு உல்லுக்கானின் படையெடுப்பு நிகழ்ந்தது. மற்றப் பாண்டிய மன்னர்கள் அவரவர் தலைநகரை விட்டு ஓடி ஒளியப் பராக்கிரமப் பாண்டியர் மட்டும் தைரியமாக உல்லுக்கானை எதிர்த்துப் போராடினார். ஆனாலும் நாம் சொன்ன மாதிரி பராக்கிரமப் பாண்டியர் தோற்றுப் போய்ச் சிறைப்பட்டார். மதுரை உல்லுக்கானின் ஆட்சிக்கு உட்பட நேரிட்டது. ஆனால் உல்லுக்கானுக்குத் தொடர்ந்து அங்கே இருக்க முடியாமல் தில்லியிலிருந்து அழைப்பு வரவே அவன் தனக்குப் பிரதிநிதியாக ஓர் ஆளை நியமித்தான். மாலிக் நேமி என்னும் அந்தப் பிரதிநிதி ஆளத் தொடங்கியதன் மூலம் தென் தமிழகம் துருக்கர்களின் ஆட்சிக்கு உட்பட்டது.

இந்த மாலிக் நேமியின் ஆட்கள் தான் நாம் முந்திய அத்தியாயத்தில் பார்த்தவர்கள். அவர்கள் விடாமல் அரங்கன் ஊர்வலத்தாரைத் தொடர்ந்து சென்று எப்படியோ ஆறு பேர்களைப் பிடித்தார்கள். அவர்களில் வாசந்திகா என்னும் அரங்கனின் ஊழியத்துக்கு ஆட்பட்ட நாட்டியக்காரியும் ஒருத்தி. தப்பிச் செல்ல வழிவகை தெரியாமல் அகப்பட்டுக் கொண்டவள், எப்படியாவது குலசேகரன் வந்து தன்னைக் காப்பாற்றி அழைத்துச் செல்லுவான் என எதிர்பார்த்தாள். அரங்கனின் ராஜகிளியானது அவளுடனேயே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. சற்றைக்கொரு தரம் அது ரங்கா ரங்கா எனக் கூவிற்று. வாசந்திகாவுக்கு நேரம் ஆக ஆக குலசேகரன் வருவான் என்னும் அந்த நம்பிக்கை குறைந்தது. மதுரை நோக்கிச் செல்லும் ராஜபாட்டையில் ஓர் வண்டியில் அவளை ஏற்றி விட்டார்கள். மறுநாள் பொழுது இறங்கும் வேளையில் மதுரையை அடைந்தனர். அவளை அரண்மனைக்கு அப்போது ஆண்டு கொண்டிருந்த மாலிக் நேமியின் முன் அழைத்துச் சென்று நிறுத்தினார்கள்.

வாசந்திகாவின் அழகைப் பார்த்த மாலிக் நேமி அவளை ஓர் அரசகுமாரி என்றே நினைத்தான். இல்லை என்று அவள் சொன்னதை நம்பாமல் அவளைத் தன் அந்தப்புரத்திலேயே விடச் சொன்னான். அங்கே வாசந்திகா பல முறை சீரழிக்கப்பட்டாள். தப்பிக்கவும் முடியாமல் வாழவும் பிடிக்காமல் தவித்துக் கொண்டிருந்தாள் வாசந்திகா. ஒரு நாள் காலை தன் நிலையை எண்ணி எண்ணி அவள் வருந்தி அழுது கொண்டிருந்தாள். குலசேகரன் மட்டும் திரும்பி வந்து தன்னைக் காப்பாற்றி அழைத்துச் செல்லக் கூடாதா என்று எண்ணினாள். அவனையே நினைந்து வாழ்ந்து கொண்டிருந்த தனக்கு இத்தகைய கதி ஏற்பட்டதே என விம்மினாள். தன் கனவெல்லாம் பாழாகி விட்டதை எண்ணி எண்ணிக்கலங்கினாள். குலசேகரன் பெரும்படை திரட்டிக் கொண்டு வந்து தன்னை மீட்டுச் செல்லப் போவதாகக் கற்பனையில் கண்டு மகிழ்ந்தாள்.

ஆனால் அப்போது குலசேகரன் வேறு ஒரு காரியம் பண்ணிக் கொண்டிருந்தான்.

புரட்டாசி மாதம். மாலை வேளை. காவிரிக்குக் கிழக்கே இரு பிரயாணிகள் நதியைக் கடந்து அழகிய மணவாளம் என்னும் கிராமத்துக்குள் நுழைந்தனர். அந்தக் கிராமத்தில் இருந்த சிங்கப்பிரான் என்னும் பெரியவர் இல்லம் நோக்கிச் சென்றார்கள். அவர்களைக் குலசேகரன் என்றும் குறளன் என்றும் அடையாளம் கண்டு கொண்டார் சிங்கப்பிரான். அன்புடன் அவர்களை வரவேற்றார். சிங்கப்பிரான் ஆவலுடன் நடந்த விஷயங்களைக் கேட்டார். முக்கியமாக அரங்கன் இருக்குமிடம் தெரிய ஆவலுடன் காத்திருந்தார். முதலில் மௌனம் சாதித்தக் குலசேகரனும், குறளனும் பின்னர் சிங்கப்பிரானின் பதட்டத்தைக் கண்டு அரங்கன் அழகர்மலையில் ஒளிந்திருப்பதைக் கூறினார்கள்.

இதைக் கேட்ட சிங்கப்பிரான் மேலும் பதறினார். மதுரை துருக்கர் வசம் இருக்கும்போது மதுரைக்கு அருகே அழகர் மலையில் அரங்கனை வைத்திருப்பது சரியா எனக் கலங்கினார். ஆபத்து வந்துவிடுமே என்று அஞ்சினார். ஆனால் குலசேகரனோ மதுரைக்குத் தெற்கே துருக்கப்படைகள் இன்னமும் அதிகமாகவும் அடர்த்தியாகவும் பரவி இருப்பதாகக் கூறினான். தெற்கே கொண்டு செல்வது தான் ஆபத்து எனவும் அழகர் மலையில் ஓர் மறைவான தோப்பிற்குள் மறைவான இடத்தில் அரங்கனை மறைத்து வைத்திருப்பதாகக் கூறினார்கள். இங்கிருந்து சென்ற அனைத்து பரிசனங்களிலும் மற்றமக்களிலும் அனைவரும் ஆங்காங்கே சிதறிப் போயோ அல்லது இறந்தோ அல்லது காணாமலோ போய்விட்டதாகவும் இப்போது எஞ்சி இருப்பது பனிரண்டே நபர்கள் தான் எனவும் அவர்கள் பொறுப்பில் தான் அரங்கன் இருப்பதாகவும் கூறினார்கள். 

No comments: