![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXk6WBocddsatInLV53XmiFqM6-RUMx8gOJgdsEYyim3MJ7RvKq-GXaeqGNUKzLei0R9Pu0BtavPbi1YtAk5l2gUHz0dAAAGu5ng7bivoxJPoYvX37ADDaz2AjYXQ5HD4WHwmYAQ/s320/images.jpg)
தாமிரபரணிக்கரையில் விஷ்ணுவின் மஹிமையை விளக்கும் நவ திருப்பதிகளும், சிவனின் மஹிமையை விளக்கும் நவ கைலாயங்களும் அமைந்துள்ளன. ஒரு சில சிவாலயங்கள் மேற்கே பார்த்த வண்ணம் அமைந்துள்ளதாய்க் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. தாமிரபரணிக்கரையில் உள்ள திருக்கோளூரில் சேர, சோழ, பாண்டீஸ்வரர் ஆலயம் என்னும் மூவேந்தரையும் சிறப்பித்துக் கூறும் ஆலயம் உள்ளது. இங்கே உள்ள முப்பந்தல் என்னும் ஊரில், வருஷம் 365 நாட்களும் காற்றுக்குப் பஞ்சம் இருக்காது என்றும், சேர, சோழ, பாண்டியர்கள் இந்த முப்பந்தலிலேயே முக்கியமான விஷயங்களைக் கூடி விவாதித்து முடிவெடுப்பனர் என்றும் தெரிய வருகின்றது.
புராணங்களின் கூற்றுப்படி பார்த்தால் குபேரன் இழந்த தன் செல்வத்தை இங்கே தான் அடைந்ததாகவும், தவிரவும் குபேரன் ராஜ ராஜ பதவி பெற்றதாயும், பிரும்மாவிற்கு சிருஷ்டி சாமர்த்தியம் இங்கே ஏற்பட்டதாயும், சிவனின் அம்சங்களில் ஒருவரான ருத்ரர் இங்கேயே சர்வக்ஞதா பிராப்தி அடைந்ததாகவும், வருணன் ஜலேசத்வ பதவி பெற்றதாயும், அஷ்டதிக்பாலர்கள் ஐஸ்வர்ய பதவி அடைந்ததாகவும், சோமன் என்னும் சந்திரனுக்கு ஏற்பட்டிருந்த க்ஷயரோகம் நாசம் அடைந்ததாயும், நந்திகேஸ்வரர் பிறப்பும், கபில ரிஷியின் பிறப்பும், சனகாதி முனிவர்களில் ஒருவரான சனகரின் பிறப்பும் தாமிரபரணியில் தவம் செய்தமையால் ஏற்பட்ட பெருமைகளாய்ச் சிறப்பித்துச் சொல்லப் படுகின்றன.
வேத வியாசர் வேதங்களைத் தொகுத்து கீதை, பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் ஆகியவற்றுக்கு உரை எழுதும் முன்னர் பிரம்மாவை வழிபட்டார். பிரம்மா நாதாம்புஜத்தில் தவம் செய்யச் சொல்லுகின்றார். அந்த நாதாம்புஜமே தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள சேர்மாதேவி எனப் படும் சேரன் மஹாதேவி. வியாசர் தாமிரபரணியை சாக்ஷாத் அந்த அம்பாளாகவே கருதி வழிபடுகின்றார். அன்னையே தாமிரபரணியாக உருவெடுத்து வந்ததாய் நினைத்து வழிபடும் அவருக்கு ஒருநாள் தாமிரபரணி நதியில் பிரகாசமான தாமரை தென்பட்டது. தாமரைக்கு மேலே அதன் நடுப்பாகத்தில் ஒரு அன்னப் பறவை காட்சி அளித்தது. அந்த அன்னப் பறவை வியாசருக்கு ஞானத்தை உபதேசம் செய்தது. வியாசர் ஞான உபதேசம் பெற்று ஞானோதயம் அடைந்தார். வேதங்கள் தொகுக்கப் பட்டு அனைத்துக்கும் உரையும் எழுதினார்.
தாமிரபரணி நதியைப் பூஜை செய்தால் ஸ்த்ரீஹத்தியும், மஹாபாதகங்களும், மாத்ரு ஹத்தி, பித்ரு சாபம் போன்றவை விலகவும் வழிசெய்கின்றது. இந்த நதியை வழிபட்டதின் மூலம் பகனுக்கு இழந்த கண்கள் திரும்பக் கிடைக்கின்றன. சுதர்சனச் சக்கரமும் விஸ்வே தேவர்களும் தங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டுள்ளனர். மானசாக்கள் தங்கள் நோயையும், பாணாதை பிசாசுத் தன்மையையும், துர்வாச முனிவர் சாபத்தையும், சரஸ்வதி தேவி தன்னுடைய சாபத்தையும் இங்கே தான் போக்கிக் கொண்டனர்.
நம் ஜாதகங்களில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் 12 ராசிகளும், பாரதத்தின் முக்கியப் பனிரண்டு நதிகளின் அடிப்படையிலே ஏற்படுத்தப் பட்டுள்ளதாய்க் கூறுகின்றனர். இந்தப் பனிரண்டு ராசிகளில் குருபகவான் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயருவார். அப்போது குருவின் பார்வை ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு நதியின் மேல் ஏற்படும். இதுவே புஷ்கரம் எனச் சொல்லுகின்றனர். இந்த அடிப்படையில் குருபகவான் பனிரண்டு வருஷத்திற்கு ஒருமுறை விருச்சிக ராசிக்கு வரும்போது தாமிரபரணி புஷ்கரம் ஏற்படுகின்றது.
11 comments:
மிக அறிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
பாரதி கூட சொல்லுவானாம் , தன புலமைக்கு தாமிரபரணி தண்ணீர் முக்கிய காரணம் என்று.
nadhiyai valipaduvom, peni kaappom, nanmai adaivom vaalvil.
இன்று கொடியவர்கள் மனை கொள்ளை அடிக்கிறார்கள், பூவராகவனும் கபிலனும் தான் தெளிவாக சொன்னார்களே திரைப்படத்தில்.
நீங்கள் குறிப்பிடுஉள்ள ஊர் திருக்களூரா (ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளதே அதுவா).
//நீங்கள் குறிப்பிடுஉள்ள ஊர் திருக்களூரா (ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளதே அதுவா).//
உள்ளூர் மொழியில் திருக்களூரோ??? எதுக்கும் உங்க ஊர்க்காரங்க மத்தவங்களையும் கேட்டுக்கிறேனே! :D
தாமிரபரணி தண்ணீரில் தாமிரம் இருப்பதாக வாசித்திருக்கிறேன்.தாமரையால் அது தாமிரபரணி ஆயிற்றா அல்லது தாமிரம்தான் பெயர்க் காரணமா?அறிந்து சொல்லுங்களேன்.
நானும் தாமிரபரணி ஆற்றில் குளித்து வந்தவள்தான் .10 நிமிட நடையில் பரணி ஆற்றின் படித்துறை.எங்கள் சிற்றூர் சிந்துபூந்துறை என்று சொல்லும் போதே தாமிரபரணியின் நதியோட்டம் இன்றும் காதில் விழுகிறது.
அட, கோமா??????? ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சரியமா இருக்கே??? நல்வரவு. தாமிரம் கலந்து இருப்பதாலேயே தாமிரபரணினு உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?? தாமிரம் கலந்திருப்பதாலேயே இந்தப் பெயர். தாமரை இருந்ததால்னு இல்லை. :))))))))))
தாமிரச் சத்து உள்ளதால் தான் தாமிர பரணி.
அதையும் கொள்ளை அடிக்க sterlite industries வந்து விட்டதே.
komaa its a Nellai side exclusive name (in fact my 1 athai's name is komaa @ gomathi)
குப்பன்_யாஹூ
அற்புதம் . தாமிரபரணியைப் பற்றி இத்தனை நாட்களுக்குப் பிறகுத் தெரிந்து கொள்ளணும்னு இருக்கிறதே.
இந்த அனுபவத்தை நான் மறக்க மாட்டேன் . கீதா ரொம்ப நன்றி.
ரொம்ப ஆச்சரியப்பட்டுப் போனீர்களா????!!!!!!
தாமிரம்தான் தாமிரபரணி என்று தெரியாதா நேக்கு தெரியாதா....ச்ச்ச்ச்ச்சும்ம்ம்ம்மா..ஆ ஆ ஆ
//பகவானின் கடைசி முக்கிய அவதாரம் ஆன கல்கி அவதாரம் தாமிரபரணிக்கரையில் தான் ஏற்படப் போவதாய்ச் சொல்லுகின்றது //
அப்போ, அது நா இல்லைங்கோ!
:-)
//.ச்ச்ச்ச்ச்சும்ம்ம்ம்மா..ஆ ஆ ஆ//
தெரியுமே ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மாஆஆஆஆனு! :P
//அப்போ, அது நா இல்லைங்கோ!
:-)//
@ஜீவா, காஞ்சிபுரத்திலே இல்லைனு நிச்சயமாத் தெரியுது! :D
நீண்ட நாட்களுக்குப் பின்னர் மறு வருகைக்கு நன்றி.
தாமிபரணி நெல்லை மாவட்ட மக்களின் ஜீவ நதி நான் பார்த்தகாலங்களில் அப்படி ஒரு மணல் மேடுகள் தண்ணீரை அள்ளி அள்ளி குடிக்கலாம் அத்தனை தித்திப்பா இருக்கும் ஆனால்
இன்றோ அதே இடத்தில் ஆற்றுக்குள் காலை வைக்க முடியலை சகதி சாக்கடையாக கிளம்பி வருகிறது கல்லிடை குறிச்சி எனும் ஊரில் இருக்கும் இரட்டை பாலத்தின் கீழ் துணி குப்பைகள் மது பாட்டில்களை வீசி செல்கிறார்கள் அப்படியே கிழக்கே சேரன்மஹாதேவி
எனும் ஊரில் சன் பேப்பர் மில் ஆசீட் கழிவுகள் ஆற்றில் கலக்கிறது மக்களாக திருந்தனும் தன் சந்ததிகளுக்கு ஒரு நல்ல நதியை விட்டு வச்சிட்டு போகலாமே
Post a Comment