எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, August 24, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!


கொஞ்சம் அவசரமாவே திருக்கோளூரில் தரிசனம் பண்ணினோம்னு நினைக்கிறேன். பெருமாளோட பெயர் மட்டும் நல்லா நினைவில் இருக்கு. என்ன பெயர் தெரியுமா? வைத்தமாநிதி! பெருமாளே ஒரு மாநிதிதான். அதிலும் இந்தத் தலத்துக்கு வந்து தரிசனம் செய்தால் குபேரன் வைத்த மாநிதிகள் அத்தனையும் கிடைக்கும். கேட்பானேன்! பெருமாளின் அருளே வைத்தமாநிதிதானே. நாம் கொடுத்து வைத்திருந்தால் தவிர இத்தகையதொரு மாநிதியான இறை தரிசனம் கிடைக்குமா? இந்தக் கோயிலின் தலவரலாறு பின்வருமாறு:

ஈசனின் நண்பன் ஆன குபேரன் ஈசனின் அருளால் அலகாபுரியில் தனக்கென ஒரு நகரை நிர்மாணித்துக் கொண்டு வடதிசைக்கு அதிபதியாக இருந்து வந்தான். இறைவனின் அருள் பரிபூரணமாய்க் கைவரப் பெற்ற அவனுக்கு நவநிதிகளும் வசமாகி இருந்தது. அவனுக்கு இறைவனிடம் இருந்த செல்வாக்கினாலும், அதீத உரிமையினாலும் எப்போது வேண்டுமானாலும் கைலையங்கிரிக்குச் சென்று ஈசனைத் தரிசிக்கும் உரிமையைப் பெற்றிருந்தான். அவ்வாறே ஒருநாள் அவன் சென்றிருந்த சமயம் இறைவனும், இறைவியும் தனித்திருந்த நேரம். அம்பாள் அதீத அழகுடன் சுடர்விட்டுப் பிரகாசித்தாள். இவர்கள் தனியாய் இருப்பதை உணராமல் சென்ற குபேரன் ஒளிவீசிப் பிரகாசிக்கும் காந்தியுடன் விளங்கிய அம்மையைக் கண்டு ஒரு கணம் மனம் தடுமாறினான். அவளையே உற்று நோக்கினான். உலக நாயகியாம் அம்மாவுக்குத் தன் மகனில் ஒருவன் இம்மாதிரி நடப்பது பொறுக்குமா? மகன் தான் என்றாலும் இதே தவறை மற்றவரும் செய்யாவண்ணம் காக்கவேண்டுமே? தக்க தண்டனை ஒன்றை இவனுக்கு அளிக்கவேண்டும். அதன் மூலம் பாடமும் கற்கவேண்டும் எனத் தீர்மானித்தவளாய்,” தீய எண்ணத்தோடு உன் தாய் போன்ற என்னைப் பார்த்ததால் உன் உருவம் விகாரமடைந்து, உனக்கு ஒரு கண்ணும் போகும். உன்னை விட்டு நவநிதிகளும் விலகும்.” என்று சொல்லுகின்றாள்.

உடனேயே தன் தவற்றை உணர்ந்த குபேரனும் ஈசனை வணங்கித் தன்னை மன்னிக்குமாறு கேட்க, இதற்கேற்ற பரிகாரத்தை மலை மகளே சொல்லுவாள், அவளையே போய்ப் பணிந்து கேள் என அனுப்புகின்றார் ஈசன். பூலோக வாசமும் செய்யுமாறு அவனைப்பணித்து, பொருநையாற்றின் கரையில் இந்த நிதி தீர்த்தத்தில் நீராடி புருஷோத்தமனைப் பணிந்து வா. ஒருநாள் நீ வேண்டியது நடக்கும் எனச் சொல்லிவிடுகின்றாள் உமை அம்மை. அதன்படி குபேரனும் இங்கே வந்து நிதி தீர்த்தத்தில் நீராடி புருஷோத்தமனாகிய பெருமாளைக் குறித்துத் தவம் இயற்றப் பெருமாளும் மனமிரங்கி, இந்த க்ஷேத்திரத்தின் மகிமை அளவிடமுடியாதது. தர்மம் இங்கே நிலைத்து நிற்கிறது. அதர்மம் இந்த க்ஷேத்திரத்தை அணுகாது. நீ உமையை கெட்ட நோக்குடன் பார்த்த பாவம் மெதுவாய்த் தான் போகும். உன்னுடைய நவநிதிகளையும் தற்சமயம் தரமுடியாது. கொஞ்சம் தருகிறேன் கொண்டுபோ! என்று சொல்லிவிட்டுத் தான் படுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு அடியில் இருந்து நிதியை எடுத்து ஒரு மரக்காலால் அளந்து குபேரனுக்குக் கொடுக்கிறார். நவநிதிகளில் அனைத்தும் குபேரனைச் சென்றடையவில்லை என்பதாலும், இங்கே உள்ள நவநிதிகளையும் காத்துக் கொண்டு அதன்மேலேயே பெருமாள் சயனத்திருக்கோலத்தில் காட்சி கொடுப்பதாலும் வைத்தமாநிதிப் பெருமாள் என்ற பெயர் பெற்றார். கிழக்கே பார்த்துக் கொண்டு புஜங்க சயனத்தில் படுத்துக் கொண்டு நிதியைப் பத்திரமாய்க் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்.

தாயார் கோளூர் வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார். மதுரகவி ஆழ்வார் இங்கேதான் அவதாரம் செய்ததாய்ச் சொல்லுகின்றனர். நம்மாழ்வார் இந்தத் தலத்திற்கும் மங்களாசாஸனம் செய்திருக்கிறார். கோயில் விமானத்தை ஸ்ரீகரவிமானம் என அழைக்கின்றனர். செல்வம் வேண்டிப் பிரார்த்திப்போர் இந்தக் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து பெருமாளுக்குப் பிரார்த்தித்துக் கொண்டால் செல்வம் கிட்டும் என்றும் சொல்லுகின்றனர். குபேரன் செல்வம் பெற்றது மாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில். அப்போது இங்கே சிறப்பான வழிபாடுகள் நடக்கும்.

அடுத்து நாம் காணப்போவது மிக முக்கியமான தலம். திருக்குருகூர். நம்மாழ்வாரின் அவதார ஸ்தலம். மதுரகவி ஆழ்வார் வடக்கே சென்றிருந்தவர் நம்மாழ்வாரைத் தேடிக் கண்டுபிடித்தது, மணவாள மாமுனிகள் அவதார க்ஷேத்திரம், நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் பிரபந்தங்களை அருளிச் செய்தது போன்றவற்றை அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.

6 comments:

venkat said...

nanraaka ulathu

குப்பன்.யாஹூ said...

arumai, thanks for sharing.

Jayashree said...

Romba nanna vandhirukku. Intha perumalukku Nishopavithan num peru undu. Nammazhwar paasuram 13. padiyirukkar 3293-3303 , 3473
NAVA NIDHI:- Parakaya pravesam,Haadi vidhya, Kaadi vidya, Vaayu gamana siddhi, Madalasa vidhya, Kanagadhara siddhi,Prakaya Sadhana, Soorya Vigyan , Mrit sanjeevini vidhya ( Sukrachariyar pon devayani kadhai)IDHULA KANAGA DHARA VAI THAN GUBERANUKKU KDUTHTHUTU MEETHIYAI VAITHKKONDU IRUKKAR POLA IRUKKU VAITHAMANIDHI- THE ONE WHO IS THE VERY SOURCE OF UNFATHOMABLE WISDOM AND SIDDHIS -SRI KRISHNAN. HANUMAN CHAALISA LA KOODA "ASHTA SIDDHI NAVANIDHI KE DHATHA NU VARUM.
ADUTHATHU ENGE ? ENNIKKU?

Geetha Sambasivam said...

வாங்க வெங்கட், முதல் வரவு?? பாராட்டுக்கு நன்றிப்பா!

Geetha Sambasivam said...

ராம்ஜி, உங்களுக்கும் நன்றி.

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, ஜெயஸ்ரீ, ரொம்பப் பெரிசா எழுதறேன் அப்படினு ஒரு புகார் இருக்கிறதாலே இந்த விஷயங்களைக் குறிப்பிடலை! நீங்க சொல்லிட்டீங்க! :P அடுத்தது வரும் நாளைக்கோ, நாளன்னிக்கோ. நண்பர் ஒருவர் மூலமா தென் திருப்பேரை பாடல்கள் கிடைச்சது. அதையும் போடறேன். நன்றிங்க. தொடர்ந்து வருவதற்கு