எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, October 21, 2009

தாமிர பரணிக்கரையில் சில நாட்கள்- நவ கைலாயம் 2

அடுத்து, சந்திரனுக்குரிய தலம். சேர்மாதேவி, சேரன்மஹாதேவி என்றெல்லாம் சொல்லப் படும் ஊர். திருநெல்வேலியில் இருந்து 25 அல்லது 30 கி.மீ தூரத்தில் உள்ளது. இப்போ சொல்லும் வரிசையிலே நாங்க போகலை. நாங்க போனது முதலில் கோடகநல்லூர் தான். அது செவ்வாய்க்கான தலம்னு குறிச்சு வச்சிருக்கேன். பாபநாசம் கடைசியிலே தான் போனோம். மேலே ஏறிச் செல்லவேண்டும், அங்கேயும் பார்க்கக் கோயில்கள், தீர்த்தம், அருவி இருக்குனு தெரியலை. அதனால் போயிட்டுக் கீழே இறங்க நேரம் இன்மையால் தவற விட்டோம். மீண்டும் ஒருமுறை போகணும். பார்ப்போம். சேர்மாதேவியில் சீக்கிரமாய்ப் போனால் தான் ஸ்வாமி தரிசனம் செய்யமுடியும். கோயிலைச் சீக்கிரமே சாத்திடறாங்க. நல்லவேளையா நாங்க சீக்கிரமே போனோம். ஒன்பது மணிக்குப் போயிருந்தால் கூடப் பார்க்கிறது சிரமம் தான்.

ஏற்கெனவே சொன்ன உரோமசர் தாமரைப் பூக்களை இட்ட கதையைத் தவிர இங்கே சொல்லும் மற்றொரு கதை இரு சகோதரிகளைப் பற்றியது. உரோமசருக்குப் பின்னர் கோயில் இருந்த இடம் தெரியாமல் லிங்கம் மட்டுமே ஒரு அரசமரத்தடியில் இருக்க, அங்கே வாழ்ந்து வந்த இரு சகோதரிகள், சிவ பக்தைகள். வீட்டிலேயே நெல் குத்தி, அரிசி வியாபாரம் செய்து வந்த அவர்கள், தினமும் இந்த லிங்கத்துக்கு வழிபாடுகள் செய்த பின்னரே தங்கள் வேலையைத் தொடங்குவார்கள். அவர்கள் லட்சியமே இந்த லிங்கம் மரத்தடியில் கவனிப்பாரின்றி இருக்கிறது. ஒரு அழகான கோயில் கட்டி அங்கே இவரைப் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று நினைத்தனர். தங்களது உழைப்பின் பயனில் வரும் லாபத்தைச் சிவன் கோயில் கட்டவெனச் சேர்த்து வைத்தனர். அவர்களைச் சோதிக்க எண்ணிய ஈசன் ஒரு சிவனடியார் உருவில் அவர்கள் வீடு வந்தார்.

வந்தவர் மிகுந்த பசியோடு இருப்பதாய்ச் சொல்ல, சகோதரிகள் அவரை வரவேற்று, பாதபூஜை செய்து, உணவு அருந்த வருமாறு அழைத்தனர். வீட்டில் விளக்கு எரியவில்லை. உடனேயே அதைச் சுட்டிக் காட்டிய சிவனடியார், வீட்டில் விளக்கு எரியவில்லை எனில் எவ்வாறு வெளிச்சம் இருக்கும்? அது போலவே மங்களமும், செல்வமும் தங்காது. எனவே இந்த வீட்டில் உணவருந்த மாட்டேன், என்று சொல்லிவிட்டு எழுந்துவிட்டார். பதறிய சகோதரிகள் விளக்கைத் தேடியும் கிடைக்காமல், ஒரு தேங்காயை எடுத்து உடைத்து, அதிலே நெய்யை ஊற்றி, விளக்கு ஏற்றி வைத்தனர். சிவனடியாரும் சாப்பிட்டுவிட்டுத் தன் சுயவுருவில் காட்சி அளித்தார். சிவனடியாரின் அருளால் செல்வமும் பெருகவே, சகோதரிகள் நினைத்த வண்ணமே கோயிலை எழுப்பினார்கள்.

ஈசன் பெயர் அம்மநாதர். தாமிரபரணியின் தென்கரையில் உள்ளது இந்தத் தலம், அம்மையப்பர் என்றும் சொல்லுகின்றனர். அம்மன் வலப்பக்கமாய்க் காட்சி கொடுக்கிறாள். அதாவது அம்மன் சந்நிதி அம்மநாதரின் சந்நதிக்கு வலப்புறமாய்க் காணப்படுகிறது. கோமதி அம்மன், ஆவுடைநாயகி என்ற பெயரில் அழைக்கப் படுகிறாள். இந்தக் கோயிலில் ஸ்வாமிக்கும், அம்மனுக்கு திருமணக் கோலத்தில் காட்சி கொடுக்கும் கோயில் என்று சொல்லுகின்றனர். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக சிதம்பரத்து நந்தனார் இந்தக் கோயிலுக்கு விஜயம் செய்திருக்கிறார் போலும். கொடிமரத்துக்குக் கீழே உள்ள பீடத்தில் நந்தனார்(??) சிற்பம் காட்சி கொடுக்கிறது. நந்தியாரும் சற்றே விலகி இருக்கிறார். அதனாலேயே நந்தனார் எனத் தோன்றுகிறது.

அரிசி வியாபாரிகள் அனைவருமே இந்தக் கோயிலில் தங்கள் வியாபாரம் செழிக்கப் பிரார்த்தனை செய்து கொள்வதுண்டு என்று சொல்கின்றனர். திருமண தோஷமும் நீக்கப் படும் பரிஹார தலமாய்ச் சொல்லுகின்றனர். அம்மன் சந்நிதியில் ஒரு தட்டில் அரிசியைப் பரப்பி, உடைத்த தேங்காயில் நெய் விட்டு விளக்கு ஏற்றி வைக்கின்றனர். அம்மனுக்கு மாதுளம்பழச் சாறினால் அபிஷேஹம். நவகிரஹங்கள் இங்கே காணப்படவில்லை. வழக்கம்போல் நடராஜர் இருக்கிறார். பைரவருக்கு இங்கே நாய் இல்லாமல் தனியாகக் காட்சி கொடுக்கிறார். தல விருக்ஷம் பலா. கோயிலைக் கட்டிய சகோதரிகள் சிற்பம் இருக்குனு சொன்னாங்க. தேடிப் பார்க்க முடியலை. பாண்டியர் காலத்துக் கல்வெட்டுக்களும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். படம் போடமுடியலை. மன்னிக்கவும்.

3 comments:

குப்பன்.யாஹூ said...

wow arumai nga.

துபாய் ராஜா said...

நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள்.

kalyana sundar said...

சமீபத்தில் நானும் இந்த கோவிலுக்கு சென்றிருந்தேன். கோவிலை காட்டிய சகோதரிகள் சிலை சுவாமி சன்னதிக்கு வெளிப்புறம் உள்ள மண்டபத்தில் உள்ள தூணில் உள்ளது. இரு சகோதரிகள் உரலில் உலக்கையால் இடிப்பது போல் சிற்பம் உள்ளது .இங்கு செல்லும் சாலை வசதி சரி செய்து , கோவிலும் எப்பொழுதும்
திறந்திருக்கும் படி செய்தால் நன்றாக இருக்கும்.