எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, January 02, 2010

தாமிரபரணிக்கரையில் சில நாட்களில் சங்கரன் கோயில் 2

நாட்கள் கழிந்தன. கடகராசியில் சூரியன் பிரவேசித்தான். சந்திரன் பூரணமாய்ப் பொலிந்த ஆடி மாதம் பெளர்ணமியில் உத்திரட்டாதி நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் நள்ளிரவு வேளையில் அம்மைக்குக் காட்சி கொடுத்தார் ஈசன். எப்படி??? வலப் பக்கம் புலித்தோல் ஆடை, இடப்பக்கம் மஞ்சள் வண்ணப் பட்டுப் பீதாம்பரம். வலப்பக்கக் கழலில் பாம்பு ஆபரணம், வலப் பக்கம் பொன்வண்ணத் திருமேனி, இடப்பக்கமோ கார்வண்ணத் திருமேனி. வலப்பக்கம் கங்கை தரித்த சடாமகுடம், நாக குண்டலம், திருநீறணிந்த மேனி, இடப்பக்கம் ரத்தின கிரீடம், மகர குண்டலம், கஸ்தூரிப் பொட்டு, இட மேல்கையில் சக்கரமுமாக சங்கரநாராயணர் காட்சி கொடுத்தார். அன்னை புரிந்து கொள்கின்றாள். அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதோர் வாயிலே மண்ணு என்னும் அரும்பெரும் தத்துவத்தை. இதன் பின்னரும் அன்னையின் தவம் தொடர்ந்தது. இம்முறை ஈசனின் சுய உருவைக் காணவேண்டித் தவமிருந்தாள் அன்னை. அவள் தவத்தின் பலனாக ஈசன் அவளைத் திருமணம் செய்து கொண்டார். இதைத் தவிரவும் பல்வேறு புராண, சரித்திர சம்பவங்களையும் குறிப்பிடுகின்றனர்.

ஈசன் இங்கே சங்கரலிங்கமாகவும் லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். அதற்குச் சொல்லப் படும் கதை ஒன்று உக்கிரபாண்டியன் காலத்திலே இந்தக் கோயில் கட்டப்பட்டதாய்ச் சொல்கின்றது. இதற்கான கல்வெட்டுக் குறிப்பும் இருப்பதாய்க் கூறுகின்றனர். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயில் கட்டப் பட்டிருக்கவேண்டும் என அந்தக் கல்வெட்டுத் தகவல்களின்படி அறிகிறோம். முன் காலத்தில் புன்னைவனமாக இருந்த இந்த ஊரில் புன்னை வனத்திற்குக் காவல் காத்து வந்தவன் பெயர் காப்பரையன் என்பவன். இவன் தேவர்களுள் ஒருவன் எனவும் பார்வதி தேவியின் சாபத்தால் பூவுலகில் பிறந்தான் என்றும் சொல்கின்றனர். இந்தக் காப்பரையன் தோட்டத்தைப் பராமரித்து வந்த வேளையில் ஒருநாள் பாம்புப் புற்று ஒன்றை மிகப் பிரயத்தனத்துடன் அகற்ற முற்பட்டான். அப்போது அவன் கைக்கோடரி அந்தப் புற்றில் இருந்த பாம்பு ஒன்றின் மீது பட்டுக் கோடரி துண்டாகிவிட்டது. அதிர்ந்து போன காப்பரையன் மேலும் புற்று மண்ணை நீக்கிவிட்டுப் பார்த்தான், அடியிலே ஒரு லிங்கம் இருப்பதைக் கண்டான். மன்னரிடம் சென்று தெரிவித்தான்.

அப்போது பாண்டிய ஆண்டு வந்த மன்னன் உக்கிரபாண்டியன் மீனாக்ஷியின் பக்தன். இவன் மணலூரைத் தலைநகராய்க் கொண்டே ஆட்சி புரிந்து வந்தான். எனினும் அவ்வப்போது மீனாக்ஷியை தரிசிக்க மதுரை செல்வது உண்டு. அவ்வாறே மதுரை கிளம்பிச் சென்ற ஒருநாளில் அவனது பட்டத்து யானை வழியில் பெருங்கோட்டூர் என்னும் இடத்தை அடைந்ததும் நகராமல் நின்றுவிட்டது. அடம் பிடித்தது. யானைப்பாகனாலும் எதுவும் செய்யமுடியவில்லை. மன்னன் கீழே இறங்கி யானையைச் சமாதானம் செய்து பார்த்தான். தனது பெரிய தந்தங்களால் தரையைக் குத்தி மணலைப் பெயர்த்து எடுத்த யானை அப்படியே படுத்துக் கொண்டுவிட்டது. மன்னனுக்குள் கலவரம் மூண்டது. மன்னனைக் காண்பதற்கெனப் புன்னை வனத்தில் இருந்து வந்த காப்பரையனுக்கு மன்னன் பெருங்கோட்டுரில் இறங்கி இருக்கும் செய்தி கிடைக்கிறது. அங்கே ஓடோடி வந்தான். புன்னை வனத்தில் தனக்கு நேர்ந்த அநுபவத்தைக் கூறினான். அவனுடன் புன்னைவனம் சென்ற மன்னனும் புற்றையும் தாக்கப்பட்டுக் கிடந்த பாம்பையும், லிங்கத்தையும் பார்த்தான்.

மன்னனுக்கு அப்போது அசரீரி மூலம் அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டும்படிச் சொல்ல, மன்னனும் தனது பட்டத்து யானை மூலம் பிடி மண் எடுத்து பெருவிழாக் கொண்டாடிக் கோயில் கட்டினான். அங்கே இந்த லிங்கத்தைத் தவிரவும் சங்கரநாராயணரும், கோமதி அம்மனும் பிரதிஷ்டை செய்யப் பட்டனர். கோ என்றால் பசு என்று அர்த்தம். இங்கே பக்தர்களாகிய பசுக்கள் எனவும் சொல்லலாம். மதிக்கு அர்த்தம் சொல்லவேண்டாம். ஒளி பொருந்திய எனப் பொருள். பக்தர்களாகிய பசுக்களைக் காத்து அருளும் ஒளிபொருந்திய திவ்ய முகம் படைத்தவள் என்ற பொருளிலேயே “கோமதி” என்றும், தமிழில் “ஆ” என்றால் பசு என அர்த்தம் வரும். ஆவுடைநாயகி எனத் தமிழிலும் அழைக்கப் படுகிறாள் இந்த அன்னை. அது மட்டுமா? மதுரை மீனாக்ஷிக்கு சகோதரி எனவும் அன்பாக அழைக்கப் படும் இந்த அன்னை கிரியா சக்தியாகச் சித்திரிக்கப் பட்டிருப்பதாயும் கூறுவார்கள். யோகமுறைப்படி மதுரை மீனாக்ஷி இச்சா சக்தியாகவும், சங்கரன் கோயில் கோமதி அம்மன் கிரியா சக்தியாகவும், நெல்லை காந்திமதி அம்மன் ஞானசக்தியாகவும் சித்திரிக்கப் பட்டிருப்பதாய் ஆன்றோர் கருத்து. இந்த கோமதி அம்மன் முன்னால் உள்ள ஸ்ரீசக்கரம் மிகவும் சக்தியும் மகிமையும் வாய்ந்தது என்பார்கள். இதைப் பிரதிஷ்டை செய்தவர் திருவாவடுதுறை ஆதினத்தைச் சேர்ந்த ஸ்வாமிகள் ஒருவர்

முதன்முதல் நினைவு தெரிந்து பத்து வயசிலே நான் சங்கரன் கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். எனக்குச் செய்யவேண்டிய நேர்த்திக்கடனான மொட்டை போட்டு மாவிளக்குப் போடுதலை இங்கே நிறைவேற்றினார்கள். விபரம் தெரிந்த பருவமாதலால் இந்த ஸ்ரீசக்கரத்தில் பல பெண்கள் உட்கார்ந்து வழிபட்டதையும் பார்க்க நேர்ந்தது. அத்தோடு சில பெண்களும், ஆண்களும் மனநிலை சரியில்லாதவர்கள் இந்தச் சக்கரத்தின் பள்ளத்தில் அமர்ந்து தங்களை மறந்த நிலையில் ஆடுவதையும் கண்டேன். மதுரை மீனாக்ஷி கோயிலிலும் அறுபதுகளின் கடைசியில் இம்மாதிரியான ஒரு நிகழ்வைப் பார்க்க நேர்ந்திருக்கிறது. ஒரு விதத்தில் வெளி உலகின் கஷ்ட, நஷ்டங்கள் பற்றிய அறிவைப் பெற்றேன் என்றும் சொல்லலாம். குழந்தைப் பேறு வேண்டிப் பிரார்த்திப்பவர்களையும் பார்க்க முடியும். இம்முறை சென்றபோது தை மாசமாக இருந்தாலும் முன் சொன்ன அம்மாதிரியான பழக்கங்களை நிறைவேற்றுதல் தடை செய்திருப்பதாய்ச் சொன்னார்கள். ஆகவே ஸ்ரீசக்கரப் பள்ளத்தின் எதிரே அமர்ந்து அமைதியாக தியானம் செய்து வந்தவர்களையே பார்த்தோம். அப்பாடானு இருந்தது.


படங்கள் உதவி: கூகிளார் நன்றி.

No comments: