எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, March 06, 2011

ஜெய ஜெய விட்டல, ஹர ஹர விட்டல!


தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயிலில் ஸ்ரீசக்கரத்தின் அதி தேவதைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கின்றனர். இந்த அதிதேவதைகள் அனைவரும் ஒரே வடிவில், "மஹா ஷோடசி"யாகக் காட்சி தருகின்றனர். கோயிலின் பின்புறம் ஞானானந்த சுவாமிகளின் மடம் உள்ளது. அங்கேயும் போய் பார்த்தோம். அங்கே ஸ்ரீ ஹரிதாஸ்கிரி அவர்களுக்கு என ஒரு பிருந்தாவனம் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் கோயிலில் ஸ்ரீ சக்ரத்தின் பிரிவுகளின் தெய்வங்களூக்கு விக்ரஹங்களும் உள்ளன. கோயிலினுள் நுழையும்போது காணப்படும் பதினாறு கால் மண்டபத்தில் கருடாழ்வார் காணப்படுகிறார். மஹாமண்டபம் சொர்க்கலோகமோ என்னும்படி அதி செளந்தரியத்துடன் காணப்படுகிறது. வட இந்தியப் பாணியில் அலங்கரிக்கப் பட்டு இருக்கிறது. இங்கு பெருமாளுக்கு சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இந்த திருக்கல்யாண உற்சவம் வைதீக சம்பிரதாயமும், பஜனை சம்பிரதாயமும் கலந்து நடத்தப் படுகிறது.

பாண்டுரங்கன் ஞாயிற்றுக் கிழமைகளில், மதுராபுரியை ஆளும் அரசனாக ராஜாங்க சேவையிலும், வியாழக்கிழமையில் அவன் பாத தரிசனம் கிட்ட வேண்டி எளிமையாகப் பாண்டுரங்க விட்டலனாகத் தன் திருவடிகளை அடியார்க்குக் காட்டிக்கொண்டும், வெள்ளிக்கிழமைகளில் முழுதும் வெள்ளியால் ஆன கவசத்தால் மூடிக்கொண்டு வெள்ளிக் கவச அலங்காரத்திலும், சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்திலும் அருள் பாலிக்கிறார். ஒவ்வொரு தமிழ் வருஷப் பிறப்பிலும் சித்திரை விஷுக்கனி உற்சவம் நடக்கிறது. அப்போது முழுதும் பழங்களாலேயே அலங்கரிக்கப் படுகிறார். கோகுலாஷ்டமி தினத்தன்று முத்தங்கி சேவையும் காணலாம். இதைத் தவிரவும் மக்கள் மனம் கவர்ந்த கோபாலன் ராஜகோபாலனாகவும், கோவரத்தனகிரியைத் தூக்கிப்பிடித்த வண்ணம் கிரிதாரியாக, கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்த வண்ணம் பார்த்த சாரதியாகவும் காணப்படுகிறார் என்றும் சொன்னார்கள். இது எல்லாம் பத்தாது என்னும்படி தன் நெஞ்சம் கலந்த ராதையோடு ராதா கிருஷ்ணனாகவும் அருள் பாலிக்கிறார். இக்கோயிலின் தல விருக்ஷம் தமால மரம் என்று சொல்லப் படுகிறது.

மரத்தைப் பற்றி விசேஷமாய்ச் சொல்ல அனைவரும் சென்று பார்த்தோம். மதுராவிலேயே அதிகம் காணக்கிடைக்கும் என்றும் கிருஷ்ணன் இம்மரத்தின் கீழ் நின்று புல்லாங்குழல் வாசிப்பான் எனவும், கோபிகைகள் மட்டுமின்றி ராதையும் அதைக் கேட்டு மயங்கியதாகவும் புராணங்கள் கூறுவதாய்த் தெரிய வருகிறது. வட மாநிலங்களிலேயே காணப்படும் இந்த விருக்ஷம் அதிசயமாக தென்னாட்டில் இந்தத் தலத்தில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர். இங்குள்ள துவாரபாலகர்கள் பஞ்சலோகத்தில் ஆனவர்கள்.

பாண்டுரங்கன் மிகவும் எளிமையானவன். என் அப்பா, அம்மாவுக்குப் பணிவிடை செய்துவிட்டு நான் வரும் வரைக்கும் காத்திரு என பக்தன் தூக்கிப் போட்ட அரைச் செங்கல்லில் கால் கடுக்க நின்று பக்தனுக்குக் காட்சி கொடுத்தவன். இன்றும் அதே அரைச்செங்கல்லில் நின்ற வண்ணமே பண்டரிபுரத்தில் காட்சி கொடுக்கிறான். அங்கே பண்டரிபுரத்தில் பாண்டுரங்கனைத் தொட்டுத் தடவிப் பார்க்க முடியும். இங்கே தள்ளி நின்று தான் பார்த்தோம். ஆனாலும் இங்கு ஆகிருதியோடு காட்சி அளிக்கிறான் என்பதால் தள்ளி நின்று பார்க்கச் சொல்கின்றார்களோ? தன் பக்தர்களுக்காகக் கால் நோக நடந்து தூது மட்டுமா போனான்?? எந்தவிதமான அஹங்காரமும் இல்லாமல்,"பாண்டுரங்கன் வந்திருக்கேன்." என்று தான் சொன்ன பிறகும், யாரானால் என்ன? நான் வர வரைக்கும் இதிலே நில் என்ற வண்ணம் அரைச் செங்கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டுத் தன் கடமைகளை முடித்துவிட்டு பக்தன் வரும்வரையில் காத்திருந்து தரிசனமும் கொடுத்தான் அல்லவா? இந்த எளிமை அவனை வழிபடுவதிலும் காட்டினாலே போதுமானது. பலரும் பலவிதங்களில் வழிபட்டாலும், தன் நாமத்தை ஒருவன் மனப்பூர்வமாய் உணர்ந்து ஓதினாலே வேண்டியதை அள்ளித்தரக் காத்திருக்கிறான் பாண்டுரங்கன்.

நம்மை மறந்து, நம் இருப்பை மறந்து, அவன் நாமம் ஒன்றே நினைந்து, ஜெய ஜெய விட்டல, பாண்டுரங்க விட்டல, பண்டரிபுர விட்டல, ஹர ஹர விட்டல என்று பாடித் துதித்தால் இதோ இருக்கேன் என்று ஓடி வருவான்.

2 comments:

MUTHU AIYER said...

தன்னை மறந்து தான் வணங்கும் தெய்வமே கதி என்ற ஒரே எண்ணத்துடன் வாழ்ந்தவர்கள் விட்டல். அதனால் ஜெய் ஜெய் விட்டல, ஹர ஹர விட்டல. பாண்டுரங்கா, பண்டரிநாதா, விட்டல், விட்டல். நன்றியுடன் முத்து

Geetha Sambasivam said...

வாங்க முத்து ஐயர், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.