எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, April 04, 2011

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! லிங்கோத்பவர் தொடர்ச்சி

பிரம்மா படைப்புக் கடவுள் ஆவார். அதோடு அறிவுக்கு அதிபதியும் ஆவார். கலைமகளைத் தன் நாவில் கொண்டவர் ஆயிற்றே. அத்தகைய அறிவு படைத்த பிரம்மா ஈசனின் முடியைத் தேடிச் சென்றார். அறிவு இருந்தால் பணிவும் இருக்கவேண்டும், விநயம் இருக்கவேண்டும், ஆனால் தனக்கு அறிவு இருப்பதால் அகந்தை கொண்டு பிரம்மா முடியைத் தேடிச் சென்றார் எனப் புராணங்கள் கூறுகின்றன. மஹாவிஷ்ணுவோ செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீயைத் தன் மார்பில் தாங்கியவர். அனைத்துச் செல்வங்களும் அவரிடம்,. எனினும் அவரும் செல்வத்தால் எதையும் சாதிக்க இயலாது என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை என்றாலும், ஈசனின் திருவடிகளையே நாடினார். காண முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ளவும் செய்தார். ஆனால் அறிவினால் செருக்குற்ற பிரம்மாவோ, தான் முடியைக் கண்டதாய்ப் பொய்யைச் சொன்னார். அறிவினாலோ, செல்வத்தாலோ பரம்பொருளை அடைய முடியாது என்பதன் தாத்பரியமே இந்தப் புராணக் கதை. தான் என்ற அகந்தை நிறைந்த பிரம்மாவால் முடியைக் காண முடியாமல் போனது மட்டுமல்லாமல் செருக்கில் பொய்யும் உரைத்தார். வெறும் அறிவு இருந்தால் மட்டும் அனைத்தையும் வெல்ல முடியாது, அதிலும் ஈசனை அடைய முடியாது. கூடவே பணிவும், விநயமும் இருக்கவேண்டும் என்பதே இந்தக் கதையின் தாத்பரியம்.

ஆனாலும் பெரியோர்கள் இந்தக் கதையைச் சொன்னதின் காரணமே நாம் நமக்கு மேம்பட்ட அறிவு இருக்கிறதென்றோ, நிறைந்தசெல்வம் இருக்கிறதென்றோ அகந்தை கொள்ளாமல் செல்வத்தின் மூலமோ, அறிவின் மூலமோ ஈசனின் உயர்ந்த தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும் என எண்ணாமல், ஒரு வரைமுறைக்கு உட்படாத ஈசனின் தத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த அறிவும், செல்வமும் போதும் என நினைப்பவர்களால் முடியாது என்பதே இந்த அடிமுடி தேடி பிரம்மாவும், விஷ்ணுவும் அலைந்ததின் உள்ளார்ந்த தத்துவம் ஆகும். அறிவு மட்டும் இருந்தாலோ, செல்வம் மட்டும் இருந்தாலோ இறைவனை அடையவே முடியாது. இவை இரண்டும் சேர்ந்து இருந்தாலோ மனிதனுக்குத் தான் என்னும் அகங்காரம் ஏற்பட்டு விடும். இந்தத் தான் ஒழிந்தால் தான் அந்தத் தானாக மாறமுடியும், ஒன்றிப் போக இயலும். கல்வியினால் ஏற்படும் செருக்கு அல்லது அகந்தை பணத்தினால் ஏற்படுவதை விடவும் ஒரு பங்கு அதிகம் தான். அதனால் தானோ என்னமோ பிரம்மா தன் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. விஷ்ணு மட்டும் ஒப்புக்கொண்டார். மேலும் அண்டத்தை எல்லாம் நிறைத்துக்கொண்டு பேரொளியாக நின்ற ஈசனின் தத்துவமானது அடி, முடி என ஒரு வரையறைக்கு உட்பட்டு இல்லாமல் எல்லை கடந்த ஒன்று என்பதே ஆகும். எல்லைகளே இல்லாப் பரம்பொருளைத் தியானிக்க அவனை ஒளிவடிவில் வணங்குவதும் ஒரு முறை ஆகும். நீள் வட்ட வடிவில் காணப்படும் இந்த லிங்க பாணம் பிளந்து நடுவில் இருந்து தலையில் பிறையைச் சூடிய சந்திரசேகரர் வெளிப்படுவதாய்ச் சில லிங்கோத்பவ மூர்த்தங்களில் காணமுடியும். என்றாலும் இந்தச் சிற்பங்களிலும் அடியோ, முடியோ காண இயலாது. சோழர்கள் காலத்தில் முதலாம் பராந்தகன் காலத்தில் எழுப்பிய சிவன் கோயில்களின் கருவறைக்குப் பின்னால் லிங்கோத்பவர் இடம் பெற்றிருந்ததாய்க் கேள்விப் படுகிறோம்.

லிங்கோத்பவரின் மூர்த்தங்களில் சிலவற்றைக் காஞ்சீபுரம் கைலாயநாதர் கோயிலில் அழகாய்ச் செதுக்கி இருப்பதைக் காணமுடியும். ஆனால் அழிய ஆரம்பித்திருக்கிறது மன வருத்தத்தைத் தரும் செய்தி. இதைத் தவிர குன்றக்குடி, சுசீந்திரம், தஞ்சைப் பெரிய கோயில் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் லிங்கோத்பவர் எழுந்தருளி இருப்பதாய்த் தெரிய வருகிறது. அடுத்து நாம் தரிசிக்கப் போவது அம்பிகைக்கு உபதேசம் செய்த ஈசனின் திருக்கோலம். ஆகமங்களை அம்பிகைக்கு ஈசன் உபதேசித்ததாய்க் கேள்விப் படுகிறோம். பர்வத ராஜகுமாரியாக அம்பிகை அவதரித்த அந்த நாட்களில் ஒருநாள் அம்பிகை ஈசனிடம் மந்திர தீக்ஷை அளிக்கச் சொல்லி விண்ணப்பிக்கிறாள். அப்போது பிரணவத்தின் பொருளும் உபதேசம் செய்யப் படுகிறது. அந்த உபதேசம் நடக்கும் நேரம் அம்பிகை ஈசனின் இடப்பாகத்தில் , அவரின் இடத்தொடையில் அமர்ந்த வண்ணம் காட்சி அளிப்பாள். காணக்கிடைக்காத அபூர்வமான இந்த மூர்த்தியின் வடிவமே சுகாசன மூர்த்தி ஆகும். அதைக் குறித்து வரும் நாட்களில் காணலாம்.

No comments: