எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, July 02, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கிராத மூர்த்தி!

கோபம் கொண்ட அர்ஜுனன், வேடனாகிய ஈசனைப் பார்த்து, இந்தப் பன்றியைத் தன்னுடைய வில்லில் இருந்து கிளம்பிய அம்பே கொன்றதாகவும், ஆகவே பன்றி தனக்குத் தான் சொந்தம் எனவும் கூறிவிட்டுக் குனிந்து செத்த பன்றியைத் தூக்க முனைந்தான். வேடுவன் அவனைத் தன் காலால் தடுத்தான். அதைக் கண்டு திகைப்புற்ற அர்ஜுனன் நிமிர்ந்து பார்க்க வேடன், “வா, நாம் இருவரும் போர் புரிவோம். உன்னால் இயன்றால் உன் பாணங்களால் என்னை அடித்துப் போட்டுவிட்டுப் பின்னர் அந்தப் பன்றியை எடுத்துச் செல்வாய்!” என்று கூறிய வண்ணம் போருக்கு ஆயத்தமானார். கோபம் கொண்ட அர்ஜுனனும் போருக்குத் தயாரானான். அந்த வேடன் மீது அம்பு மழை பொழிந்தான். ஆனால் என்ன ஆச்சரியம்! அர்ஜுனனின் அம்உகளோ, அஸ்திரங்களோ அந்த வேடனைப்பாதிக்கவே இல்லை. வேறு வழியில்லாமல் தனது காண்டீபத்தையே தூக்கி அதனால் வேடனை அடிக்க முனைந்தான் அர்ஜுனன். ஆனால் அந்த வேடனோ காண்டீபத்தைப் பறித்துக் கொன்டு அர்ஜுனனோடு மல்யுத்தம் செய்து அவனை அப்படியே மேலே தூக்கிக் கீழே அடிக்க, அர்ஜுனன் மூர்ச்சை அடைந்து விழுந்தான்.

சற்று நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்த அர்ஜுனன் தன்னருகே ஒரு சிவலிங்கத்தைக் கண்டான். உடனே பக்தியுடன் எழுந்து அதை வணங்கிக் காட்டுப் பூக்களைக் கொண்டு ஒரு மாலை கட்டி சிவலிங்கத்திற்குச் சாற்றி வழிபட்டான். பின்னர் அவனுக்குத் தான் கீழே விழுமுன்னர் நடந்தவை நினைவில் வர வேடனைத் தேடிக் கண்டு பிடித்தான். வேடன் போகும்போது காண்டீபத்தை வேறு கொண்டு போய்விட்டான். ஆகவே வேடனைக் கண்டதும் மீண்டும் போருக்கு ஆயத்தமான அர்ஜுனனுக்கு என்ன ஆச்சரியம்! சிவலிங்கத்தின் தலையில் தான் சாற்றிய மாலையை இந்த வேடன் தன் தலையில் அணிந்து கொண்டிருக்கிறானே. பதறிய அர்ஜுனன் ஓடோடியும் வந்து லிங்கம் இருந்த இடத்தைப் பார்த்தான். லிங்கத்தின் தலையில் அவன் சாற்றி வழிபட்ட மாலை அப்படியே இருந்தது. மீண்டும் ஓடிப் போய்ப் பார்த்தால் வேடன் தலையிலும் அதே. உண்மை விளங்க வேடன் காலடியில் விழுந்து வணங்கினான் அர்ஜுனன். மல்யுத்தம் செய்கையில் தழுவிக் கொண்டு சண்டை போட்ட அர்ஜுனனை இப்போது ஈசன் பாசத்தோடும், பரிவோடும் ஆரத் தழுவினார். அவனை மனமார ஆசீர்வதித்து, அவன் வீரத்தைப் பாராட்டி, சக்தி வாய்ந்த, ‘பிரம்ம சிரஸ்’ எனப்படும் பாசுபத அஸ்திரத்தையும் அவனுக்கு அளித்து, அதைப் பயன்படுத்தும் முறைகளையும் கற்றுக் கொடுத்தார். காண்டீபத்தையும் திரும்ப அளித்தார். விண்ணிலிருந்து தேவர்கள் பூமாரி பொழிய அவர்கள் பங்கிற்கு இந்திரன், அக்னி, எமன் போன்றவர்களும் அர்ஜுனனுக்கு ஆயுதங்களை அளித்து வாழ்த்த அர்ஜுனன் பெரும்பேறு பெற்றான்.

இது மஹாபாரதக் கதை, ஆரண்ய பர்வத்தில் வரும். இந்த பாசுபதம் பெற்ற திருத்தலமாகத் தமிழ்நாட்டின் திருவேட்களம் சொல்லப் படுகிறது. சிதம்பரத்திற்கு அருகேயே அமைந்துள்ளது. (இன்னும் பார்க்காத கோயில்களில் இதுவும்), ஈசனின் பெயரே பாசுபத நாதர் என்பதாகும். அம்பிகை சகல நற்குணங்களையும் கொண்டு சற்குணாம்பிகை என அழைக்கப் படுகிறாள். இந்தக் கோயிலில் இந்தத் தல புராணத்தை விளக்கும் சிற்பங்களைக் காணலாம் எனத் தெரிய வருகிறது. பாசுபத நாதர் இடக்கையில் வில்லை ஏந்தியும், வலக்கையில் அம்பை ஏந்தியும், ஜடாமகுடம் தரித்து, கழுத்தில் வேடுவர்களுக்கே உரிய கொம்பு மாலையுடனும், காலில் வீரக் கழலுடனும் காட்சி அளிப்பதாய் அறிகிறோம். இதைத் தவிர பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள திருவேட்டக்குடி என்னும் ஊரிலும் அர்ஜுனனுக்கு அருள் புரிந்த தலமாய்க் கருதப் படுகிறது.

இதைத் தவிரக் கிராதமூர்த்தியை நாம் காண்பது கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோயிலில் தான். ஆனால் அர்ஜுனனுக்கும் இங்கே காண்பவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மஹாபிரளயத்தின்போது படைப்பதற்குரிய மஹாவித்துக்களை வைத்த குடத்தை அமுதத்தால் நிறைத்து மிதக்க விட அது மிதந்து ,மிதந்து கும்பகோணம் இருக்குமிடத்தை அடைகிறது. மீண்டும் சிருஷ்டியைத் தொடங்க வேண்டி ஈசன் கிராதமூர்த்தியாக வந்து தன் அம்பால் அமுதக்குடத்தை உடைக்கிறார். உடைந்த குடத்து அமுதம் மணலில் கலக்க, அங்கே சிவலிங்கம் தோன்ற அதைப் பூஜிக்கிறார் பிரம்மா. சிருஷ்டி ஆரம்பம் ஆனது. கும்பகோணத்தில் குடம் வந்து சேர்ந்ததாலேயே இந்த ஊருக்குக் குடமூக்கு என்று பெயர் ஏற்பட்டதாகவும், குடம் வைக்கப் பட்டிருந்த இடம் குடவாயில் என அழைக்கப் படுவதாயும் தெரிந்து கொள்கிறோம். வேடுவனாகிய ஈசன் பாணங்களைத் தொடுத்த இடம் பாணாதுறை என இப்போதும் அழைக்கப் படுகிறது. இந்தத் தலத்தின் ஆதிமூர்த்தியாகக் கிராத மூர்த்தியே சொல்லப் படுகிறார்.

No comments: