எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, July 03, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கங்காதரர்!

அடுத்து நாம் காணப் போவது கங்காதரரை. கங்கையை ஈசன் தலையில் சுமந்த காரணத்தையே இப்போது நாம் அறியப்போகிறோம். இக்ஷ்வாகு குலத்து அரசன் ஆன சகரனுக்கு முதல் மனைவி மூலம் இரு மகன்களும், இரண்டாம் மனைவி மூலம் அறுபதினாயிரம் புதல்வர்களும் இருந்தனராம். சகரன் அஸ்வமேத யாகம் செய்ய உத்தேசித்து, அஸ்வமேதக் குதிரையை நன்கு அலங்கரித்து மூவுலகையும் சுற்றிவர அனுப்பி வைத்தான். அந்தக் குதிரையை தேவேந்திரன் கவர்ந்து கொண்டு சென்று பாதாளத்தில் ஒளித்து வைக்கிறான். ஒளித்து வைத்த இடம் கபில முனிவரது ஆசிரமம். இந்த விஷயம் சகரனுக்குத் தெரியாது. குதிரையைக் காணோமே என்று தேடுகிறான். யாகத்திற்கு எனக் காப்புக் கட்டிக் கொண்டுவிட்டான். ஆகவே யாகசாலை எல்லையைத் தாண்டி அவன் செல்ல முடியாது. ஆகவே தன் அறுபதினாயிரம் புதல்வர்களையும் குதிரையைத் தேடி வரும்படி அனுப்பி வைக்கிறான்.

தேவலோகத்திலும், பூலோகத்திலும் குதிரையைத் தேடிக் காணாமல் ஏமாற்றம் அடைந்த சகரனின் புதல்வர்கள், கடைசியில் பாதாளத்திற்கு வருகின்றனர். அங்கே கபில முனிவரது ஆசிரமத்திற்கு அருகே குதிரை இருப்பதைக் கண்டு அங்கே சென்றனர். குதிரையைக் கபிலர் தான் பிடித்து வைத்திருப்பாரோ எனச் சந்தேகமும் கொண்டனர். இவர்களின் தேடுதலாலும் அத்து மீறி நுழைந்ததாலும் கோபம் கொண்ட கபிலர் அவர்களைச் சாம்பலாகும்படி சபிக்க, அவர்களும் அப்படியே எரிந்து சாம்பலாயினர். தன் புதல்வர்கள் திரும்பி வராததைக் கண்ட சகரன், அடுத்துத் தன் பேரன் ஆன அம்சுமான் என்பவனை அனுப்பி வைக்கிறான். அனைவரையும் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வரும்படி சொல்லி அனுப்பி வைத்தான். அம்சுமானும் கிளம்பி விண்ணிலும், மண்ணிலும் குதிரையைத் தேடிவிட்டுப் பின்னர் பூமிக்கு அடியில் பாதாளத்தில் செல்ல வேண்டி அஷ்ட நாகங்களையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு அவற்றின் உதவியோடு பாதாளத்தை அடைந்தான். அங்கே கபிலரின் ஆசிரமத்தையும் அடைந்தான். அங்கே சென்று கபிலரை வணங்கிப் பணிந்து தான் வந்த காரியத்தைக் கூற மனம் வருந்திய கபிலர் தாம் அவர்களை எரிந்து சாம்பலாகும்படி சபித்ததைக் கூறி வருந்தினார். யாகக் குதிரையையும் அம்சுமானிடம் திரும்பக் கொடுத்தார். முனிவரின் செய்தியோடு ஆசிகளையும் பெற்றுக்கொண்ட அம்சுமான் குதிரையை ஓட்டிக்கொண்டு வந்து தன் பாட்டன் சகரனிடம் ஒப்படைத்தான். மனம் வருந்திய சகரன் தன் பிள்ளைகளின் நிலையைக் குறித்தும் அவர்களின் கதியை நினைத்தும் மனம் வருந்தினாலும் யாகத்தை நிறுத்தாமல் முடித்துவிட்டுப் பின்னர் பிள்ளைகளின் நற்கதிக்குத் தவம் இருந்தான், அவன் கோரிக்கை நிறைவேறாமலேயே இறந்தும் போனான்.

அதன் பின்னர் பேரன் அம்சுமான் பல காலம் ஆண்டு விட்டுத் தன் குமாரன் திலீபனுக்கு அரசாட்சியை அளித்தான். இறந்த முன்னோர்களுக்கு நற்கதி கிடைக்கத் தவம் மேற்கொண்டும் இருவராலும் அது நிறைவேறவே இல்லை. திலீபன் தன் மகன் பகீரதனுக்கு அரசுரிமையை அளித்துவிட்டு இறந்தான். பகீரதன் வழிவழியாகச் சொல்லி வந்த தன் குலத்து முன்னோர்களின் கதையைக் கேட்டிருந்தான். ஆகவே அவன் தன் முன்னோர்களுக்காகத் திருக்கோகர்ணத்தில் தவமிருந்து பிரம்மனை வேண்டினா. அவன் தவம் மிகக் கடுமையாக இருக்கக் கடைசியில் பிரம்மா தோன்றி அவனை வாழ்த்தினார். பின்னர் அவனிடம் அவன் குலத்து முன்னோர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் விண்ணில் ஓடும் கங்கையை பாதாளத்திற்குக் கொண்டு வந்து அந்தப் புனித நீரால் சாம்பலைக் கரைத்து எலும்புகளை நனைத்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும் என்று ஆலோசனையும் கூறுகிறார்.

No comments: